விஷ்வாவின் மனம் முழுக்க ரணமாய். இந்த காதல் இத்தனை வலி கொடுக்கும் என்பதையே அப்போதுதான் தெரிந்துகொள்கிறான். உணர்வுபூர்வமாய்.
சாலையில் கவனமாக இருந்தாலும், பக்கத்து இருக்கையில் அடிக்கடி தொட்டு மீண்டது விஷ்வாவின் கண்கள்.
அவனின் ம்ருதிக்காக அவன் முதல் முறையாக கொண்டு வந்தது. பல வர்ண ரோஜாக்கள் ஒரே கொத்தில் அடக்கி.
எப்போதும் ரோஜாவை கொடுப்பது அவளாகத்தான் இருக்கும். எடுப்பது இவனாக இருக்கும்.
இன்று அவனுக்கு கொடுக்க வேண்டும் போலிருந்தது. பார்த்து பார்த்து அவனே தேர்வு செய்த ரோஜாக்களை வைத்து செய்திருந்தது அந்த அழகிய பூங்கொத்து.
பார்க்கவே பல வண்ணங்களில் வானவில்லாகக் காட்சியளித்தது.
சம்ருதி காதலை மட்டுமே காட்டிடின் பூங்கொத்தை கொடுக்க நினைத்திருந்தான். அதற்கு தான் அவள் வாய்ப்பளிக்கவில்லையே!
இப்போது அம்மலர்கள் அவனை பார்த்து கேலியாய் நகைப்பது போல் உணர்ந்தான்.
அவள் கேட்டாள் என்பதற்காக தன்னுடைய காதலையே திருப்பி கொடுத்திட்டான். அவனின் காதலின் உயர்வுக்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா என்ன?
அடுத்து விஷ்வா சென்றது வருண் வேலை பார்க்கும் அரசு மருத்துவமனை.
வரவேற்பில் சென்று விசாரிக்க, வருணுக்கு இரவு பணி என்பதால், அவன் வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரமாகும் என்க, அவனை பார்க்க நோயாளி போல் முன்பதிவு செய்துவிட்டு காத்திருக்கலானான்.
முதல் டோக்கன் அவனுடையது தான்.
காத்திருப்போருக்கான இடத்தை கடந்து வருண் செல்லும்போதே விஷ்வா பார்த்துவிட்டான்.
சில நிமிடங்களில் செவிலி விஷ்வாவை உள்ளே அனுமதித்திட, அனுமதி கேட்டு உள்ளே நுழைந்த விஷ்வாவை கண்டு வருண் உறைந்து அமர்ந்திருந்தான்.
அவனுக்கு எதிரிலிருந்த இருக்கையில் அமர்ந்துகொண்ட விஷ்வா எதுவும் பேசவில்லை.
முதல் முறையாக வருணுக்கு விஷ்வாவிடம் பேசிட தயக்கம். என்ன பேசுவதென்றே தெரியவில்லை.
உள்ளே வந்த விஷ்வா வழக்கம்போல் வருண்ணா என்ற அழைப்போடு வந்திருந்தால் வருணும் சாதாரணமாக ஏதேனும் பேசியிருப்பானோ?
நிமிடங்கள் நீண்டது.
விஷ்வா பார்த்தது பார்த்தபடி இருந்தான்.
அவன் முன் வருணுக்குத்தான் தடுமாற்றமாக இருந்தது.
நேரம் நீள்வதை உணர்ந்த விஷ்வா நோயாளிகள் காத்திருப்பதால், எதுவும் பேசாது எழுந்து கொண்டான்.
வருகிறேன் என்றும் சொல்லவில்லை.
விஷ்வா வெளியேறிட கதவில் கை வைத்ததும்,
தன்னுடைய தடுமாற்றம், தயக்கம் துறந்து…
“விஷ்வா” என்றழைத்திருந்தான் தழுதழுக்க.
“என்கிட்ட பேசாமல் உங்களால் இருக்க முடிஞ்சுதுதான… இனியும் அப்படியே இருங்க” என்றவன், “நீங்கக்கூட என்னை மொத்தமா மறந்திருப்பீங்கன்னு நான் நினைக்கல” என்றவனாக வேகமாக வெளியேறியிருந்தான்.
வருண் விக்கித்து நின்றான்.
விஷ்வாவின் வருண்ணா இன்றிய பேச்சு அவனை கொன்றது என்றுதான் சொல்ல வேண்டும்.
‘என்ன வார்த்தை சொல்லிவிட்டான். இவனை நான் மறப்பதா?’ அரற்றியவன் மனதில் புலம்பிக்கொண்டே இருந்தான். பெரும் முயற்சி எடுத்து, வந்திருக்கும் நோயாளிகளை கவனித்து முடித்தவன், அதற்குமேல் அங்கு தாக்குப்பிடிக்க முடியாதென விடுப்பு போட்டுவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டான்.
பத்து மணியளவில் வீட்டிற்கு வந்துவிட்ட வருணிடம், வீரய்யன் தான் கேட்டார்.
“என்னப்பா இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட? வழக்கமா நைட் வேலைக்கு போனால் காலையில தான வருவ?”
“தலை வலியா இருக்கு மாமா. அதான் வந்துட்டேன்” என்றவன் அறைக்குள் நுழைய, தருணும் யுகியும் நல்ல உறக்கத்தில் இருந்தனர்.
சத்தமிடாது ஆடை மாற்றி வெளியில் வந்தவன், கூடத்து கட்டிலில் வீரய்யன் படுத்திருப்பதை பார்த்துவிட்டு மாடிக்கு சென்றுவிட்டான்.
வீரய்யனிடன் அத்தனை களைப்பு. பண்ணையில் சிறு ஓய்வுமின்றி நாள் முழுக்க வேலை பார்த்தாலும் அவர் இப்படி சோர்ந்து அமர்ந்தது கிடையாது.
கேட்டக்கூடாத வார்த்தைகள் கேட்டு மனதால் மிகவும் சோர்ந்திருந்தார். அதனால் உடல் தன் அசதியை வெளிக்காட்டியது.
நேற்று புருஷோத்தமன் சம்ருவை இறுதியாக பார்த்துக்கேட்ட கேள்வியில் வீரய்யனின் நெஞ்சில் சுருக்கென்ற வலி. சில நொடிகளில் சரியான வலி விட்டு விட்டு இப்போது வரை தைத்துக் கொண்டுதான் இருக்கிறது.
அறைக்குள் சென்ற சம்ருவின் அழுகையின் கத்தல் அவரை மொத்தமாக செயலிழக்க செய்தது.
மொட்டை மாடிக்கு வருண் செல்ல… அங்கு அவனுக்கு முன்பே சம்ருதி நின்றிருந்தாள்.
கல்லூரிக்கு சென்று வந்த உடையிலேயே தான் இருந்தாள். துப்பட்டாவை தோளைச்சுற்றி உடல் முழுக்க போர்த்தியவாறு இருள் வானில் இருளாகிப்போன தன் காதலின் பிம்பத்தை தேடிக்கொண்டிருந்தாள்.
எவ்வளவு நேரம் நிற்கின்றாளோ அவளின் உடலின் மரத்த நிலை வெளிப்படையாகத் தெரிந்தது.
‘இவள் ஏன் இங்கு இப்படி நின்னுட்டு இருக்காள்?’ நினைத்த வருண், சம்ருவை நெருங்கியவனாக,
‘என்னை பார்க்கவே வந்தவன், இவளை பார்க்காமலா இருந்திருப்பான்?’ என மனதில் நினைத்தான்.
“குளிரா இருந்தால் கீழ போக வேண்டியது தானே! எதுக்கு இந்த இருட்டில் நின்னுட்டு இருக்க?”
“உங்க தம்பியை பார்த்ததும் வேலையில் கவனம் வைக்க முடியலையா மாமா? அதுக்குள்ள வந்துட்டீங்க?”
வருணை பார்க்கவில்லை. ஆனால் சரியாகக் கணித்துக் கேட்டிருந்தாள்.
“அவனை ரொம்ப கஷ்டப்படுத்திட்டமோன்னு தோணுது அம்மு!”
அதே வருத்தம் தானே அவளுக்கும். அதை நினைத்து தானே தனியாக குமுறிக்கொண்டிருக்கிறாள். வருணும் அதையே சொல்லிட, சத்தமிட்டே அழுத்துவிட்டாள்.
தான் வேண்டாமென்றால் வாதம் செய்வான். முடியாதென்பான். மறுப்பான். அடாவடியாக ஏதும் செய்வான். சண்டையிடுவான். இப்படி பல காரணங்கள் கொண்டிருந்த சம்ருவுக்கு அமைதியாக சென்ற விஷ்வாவை நினைக்க நினைக்க தன்மீதே அத்தனை ஆத்திரமாக இருந்தது.
இந்த நாளுக்காக… அதாவது இருவரும் படிப்பினை முடிக்கும் நாளுக்காக எத்தனை வருடங்கள் விஷ்வா காத்திருக்கிறான் என்பது அவன் சொல்லாவிட்டாலும், அவள் அறிந்திருந்தாளே.
எத்தனை கனவோடு, ஆசையோடு தன்னிடம் காதலை சொல்ல வந்திருப்பான். இனி அவன் சொல்லி கேட்கும் வாய்ப்பே அவளுக்கு இல்லாமல் போனதே. அதை நினைத்து நினைத்தே மருகிக் கொண்டிருக்கிறாள்.
“விஷ்வா என்னை காதலிக்காமலே இருந்திருக்கலாம் மாமா. அவன் கண்ணுல எனக்கான காதலை பார்த்துதான் எனக்கு அவன் மேல காதல் வந்துச்சு. உணர்ந்திருந்தாலும், ஒருமுறைகூட சொல்லிகிட்டதில்லை. இனி எப்பவும் சொல்லிக்க முடியாதுல மாமா” என்றவள்,
“என் விஷ்வா… வி.ஆர் எனக்கில்லையா மாமா? இனி என்னைத்தேடி வரமாட்டேன் சொல்லிட்டு போயிட்டான் மாமா. வரவே மாட்டானா மாமா? அவன் இல்லாமல் எப்படி மாமா?” என்று விரல்கள் விரித்து உதடு பிதுக்கி கேட்டவளின் அழுகை மட்டும் ஓயவில்லை.
வருணுக்கும் அவளை எப்படித் தேற்றவென்றே தெரியவில்லை.
கல்லூரியிலிருந்து வந்ததிலிருந்தே சம்ருவின் முகம் சரியில்லை. இப்போது வந்த வருணின் முகத்திலும் வருத்தம். கவனித்திருந்த வீரய்யன், சொன்னதற்காக சாப்பிட்டேனென்று உண்டுவிட்டு மாடிக்கு சென்ற சம்ரு இன்னமும் வராத நிலையில் வருணும் மாடிக்கு செல்ல என்னவென்று மேலேறி வந்த வீரய்யன் சம்ருவின் பேச்சையும், கதறலையும் கேட்டு மனம் தாங்காது கீழே வந்துவிட்டவர்… மொத்தமாக உடைந்துவிட்டார்.
நேற்றே புருஷோத்தமன் வந்து பேசிச்சென்றதில் ஏற்பட்ட நெஞ்சுவலியை, பிள்ளைகள் பயந்து விடுவார்களென்று சொல்லாது மாத்திரை மருந்தை போட்டுக்கொண்டு ஏதோ நடமாடினார்.
இன்றும் அதே வலி தோள்பட்டையில் துவங்கி நெஞ்சு முழுவதும் பரவுவதை உணர்ந்தவர் மாத்திரையை விழுங்கிவிட்டு அமைதியாக படுத்துக்கொண்டார்.
மகளின் அழுகையும் வருத்தமுமே அவரை நிலையில்லாது தவிக்க வைத்தது.
ஏற்கனவே புருஷோத்தமனின் நரம்பில்லா பேச்சில் மனம் அழுத்தம் கொண்டிருந்தவரின் நலிந்த இதயத்தால் மீண்டும் மீண்டும் மகளின் கண்ணீரை காண முடியாது, அவளது ஆசையை நிராசையாக்கிவிட்டோமே… அதற்கு தானும் ஒரு காரணமாகிவிட்டோமே… என்று உள்ளுக்குள் மருகி மருகியே தன் உயிரை பிரிந்திருந்தார்.
வலி வந்ததும் அலட்சியம் செய்யாது வருணிடமாவது சொல்லியிருந்தால், பிழைத்திருப்பாரோ?
அந்த சிறு இதயமும் எத்தனை வலி வேதனையை தாங்கிக்கொண்டு எவ்வளவு நேரம் தான் துடித்துக் கொண்டிருக்கும்.
மகளின் ஆசையைக்கூட நிறைவேற்ற முடியாது… எதற்கு அப்பாவென்று உயிருடன் இருக்கவேண்டுமென நினைத்துவிட்டாரோ?
தன் இதயத் துடிப்பை நிறுத்திக்கொண்டார்.
மகளின் துக்கம் அவரை வதைத்தது என்றால்… அவரை கொன்றது புருஷோத்தமனின் பேச்சு தான்.
ஒரு சொல் வெல்லும். ஒரு சொல் கொல்லும்.
இங்கு புருஷோத்தமன் பேசிய பல சொற்கள் பிள்ளைகள் மட்டுமே தன்னுடைய உலகமென்று வாழ்ந்து வந்த ஒரு உன்னதமான மனிதரின் உயிரை கொன்றிருந்தது.
மனதோடு போராடி உயிர் பிரியும் இறப்பு மிக மிகக் கொடுமையானது. அதனை வீரய்யனுக்கு அளித்திட்ட புருஷோத்தமன் நன்றாக இருந்திடுவாரா என்ன?
மொத்தமாக தான் செய்த வினைக்கெல்லாம் பலனருக்க ஒரு நாள் வரத்தானே செய்யும்.
“அப்பா முகத்தில் பழைய கலையை பார்த்திடணும் மாமா” என்றாள்.
“நீ நார்மல் ஆகிட்டாலே மாமா சரியாகிடுவார்” என்ற வருண், “வா கீழ போகலாம். மேல வந்த நாம் இன்னும் போகாமலிருப்பதாலேயே மாமா தூங்காமலிருப்பார்” என்றவனாக சம்ருவை அழைத்துக்கொண்டு கீழே சென்றான்.
ஏதோ உந்துதலில் வீரய்யனின் கட்டிலிற்கு அருகே சென்ற வருண், அவரை ஆழ்ந்து நோக்கிட…
“என்னாச்சு மாமா?” என்று அருகில் சென்றாள் சம்ரு.
வீரய்யனின் நெஞ்சுக்கூடு ஏற்ற இறக்கமின்றி காணப்பட…
“கொஞ்சம் தள்ளி நில்லு அம்மு” என்றவனாக, வீரய்யனின் மூக்கில் கை வைத்து பார்த்தவன், அவரின் நாடி பிடிக்க… அவனுள் பயப்பந்து உருண்டது.
சம்ருவுக்கு உடலில் நடுக்கம் பரவியது.
“என்ன மாமா? அப்பா… அப்பாக்கு… மாமா.”
அரற்றியவளை கண்டுகொள்ளாது, அவரின் இதயத்தில் கை வைத்து அழுத்தம் கொடுத்தவன், தன் மூச்சுக்காற்றினை அவருக்கு செலுத்தி முயற்சிக்க… கொஞ்சமும் பலனில்லை.
அவரின் உயிர் ஏற்கனவே விண்ணைத் தொட்டிருந்ததே!
வீரய்யன் இறந்துவிட்டார் என்று மூளை அறிவுறுத்தியும்… தன்னால் முடிந்த அனைத்தையும் கண்ணீரோடு செய்து பார்த்தான் வருண்.
ஒன்றும் பலனில்லை.
தொய்ந்து தரையில் சரிந்தான்.
“மாமா…” அவனின் குரல் வீட்டையே நடுங்க வைத்தது.
மருத்தவனான அவனுக்கு சிவியர் கார்டியாக் அரெஸ்ட்டால் தான் அவருடைய மரணம் நிகழ்ந்திருக்கிறது என்பது புரிந்தது.
‘அவரை கவனித்திருக்க வேண்டுமோ?’ தன்னையே நிந்தித்தவனாக தலையில் அடித்துக்கொண்டு அழுதான்.
வருணின் ஓலமே வீரய்யனின் நிலையை சொல்லிவிட…
“அய்யோ அப்பா” என்று வீறிட்டு கத்திய சம்ரு… “நானே கொன்னுட்டனே. என்னை நினைச்சுதானே இப்படியாகிட்டிங்கப்பா?” என்று இல்லாதவரிடம் கேள்வி கேட்டு கதறினாள்.
இருவரின் சத்தத்திலும் தூக்கம் கலைந்து வெளிவந்த யுகி, நடந்திருக்கும் அனர்த்தத்தை ஏற்க முடியாது துடித்து வெடித்தாள்.
வீடு முழுவதும் அழுகையின் எதிரொலி.
மெல்ல இருள் பிரிய, வீரய்யனின் மரணம் ஊரில் பரவத் தொடங்கியது.
மூவரும் அவரவர் நிலையில் அப்படியே கதறியபடி இருந்தனர்.
சம்ரு வீரய்யனின் காலிலேயே தலை வைத்தவளாக மூச்சின்றி கிடக்க… யுகி தலைமாட்டில் அந்நிலையில் தான் இருந்தாள்.
வருண் அவரின் கட்டிலிற்கு அருகே எப்படி சரிந்தானோ அதே நிலையில் தான் இன்னமும் காணப்பட்டான்.
நடப்பது என்னவென்று புரியாது அழுது கொண்டிருந்த தருணை செண்பகம் பாட்டி தான் உணவு கொடுத்து தன்னுடனே வைத்துக்கொண்டார்.
செண்பகம் பாட்டியின் மூலம் விடயமறிந்து அம்மையப்பனும், விஷ்வாவும் விரைந்து வந்திருந்தனர். உடன் ராஜா, தினேஷ், அஞ்சலி, சுசி, மித்ரன் ஆகியோரும்.
யாரையும் உணரும் நிலையில் மூவரும் இல்லை.
அதனை உணர்ந்த விஷ்வா, அம்மையப்பனிடம் கேட்டு அடுத்தடுத்து நடக்க வேண்டிய காரியங்கள் அனைத்தையும் தானே ஏற்பாடு செய்து நடத்தினான்.
வீரய்யனின் உடலை கட்டிலிலிருந்து தூக்கும்போது தான்… மூவருக்கும் உணர்வு வந்தது.
வருண் விஷ்வாவை கட்டிக்கொண்டு கதற, சகோதரி இருவரும் ஒருவரையொருவர் அணைத்து துடித்தனர்.
அங்கு நிற்கும் எல்லோருக்கும் அவர்களின் அழுகை நெஞ்சை கனக்க செய்தது.
ஒருவாறு விஷ்வா தன் அணைப்பில் வருணை நிறுத்திக்கொண்டே அனைத்தையும் செய்து முடித்தான்.
இறுதியாக வீரய்யனை தூக்கும்போது பெண்கள் இருவரும் விட்ட கண்ணீரின் ஓலம் பார்ப்போரை பதைப்பதைக்க வைத்தது.
வீரய்யனுக்கு காட்டில் செய்ய வேண்டிய அனைத்து மரியாதைகளையும் மூத்த மகனாக முன்னின்று வருண் தான் செய்தான்.
வீரய்யனின் மூச்சு தன் பிள்ளைகளுக்கு பின்னர் அவரது வயலும், பண்ணையும் தான். அதனால் அங்கேயே அவரது உடலை அடக்கம் செய்தனர்.
இறுதி கிரியை யாவும் முடித்து அவர்கள் வீட்டிற்கு வரும் வரையிலும் கூட, தரையில் எப்படி விழுந்து அனத்திக் கொண்டிருந்தனரோ பெண்கள் இருவரும் அந்நிலையிலேயே இருந்தனர்.