°என் நிம்மதிக்காக…
உன் சந்தோஷத்தை மட்டும்,
நானறிந்தால் போதும்.°
– விஷ்வரூபன்
– சம்ருதி
******
காப்பகத்தின் உள்ளே அடி வைத்த சம்ருவிடம் பதட்டம். பார்வையில் தேடல்.
மெல்ல முன்னேறியவள் காப்பாளரின் அறைக்கு செல்ல… அங்கு சாந்தத்தின் மறு உருவமாய் அமர்ந்திருந்தார், அக்காப்பாகத்தை தன்னுடைய கருணையால் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சரோஜா. பின் நாற்பதில் இருப்பார்.
சம்ருவை பார்த்ததும் இதழ் விரித்து அளவாய் புன்னகைத்தவர் தனக்கு முன்னிருக்கும் மேசையில் உட்கார கூறினார்.
அவருக்கும் வணக்கம் வைத்து இருக்கையில் அமர்ந்த சம்ருவின் விழிகள் அலைப்பாய்ந்தன. கண்டுவிட துடித்தாள்.
அவளின் துடிப்பு, அவளது பரிதவித்த முகத்தை வைத்தே சரோஜாவால் உணர முடிந்தது.
யுக்தாவையும், தருணையும் அங்கிருந்த நீள்விருக்கையில் அமர வைத்தார்.
“ஃபார்மாலிட்டிஸ் முடிச்சிட்டு போய் பார்க்கலாம்” என்றவர்,
“அந்த குழந்தை தான் வேணுமா? இன்னும் நிறைய பிள்ளைகள் இருக்கின்றனர். பார்த்துட்டு முடிவு பண்றீங்களா?” எனக் கேட்டார்.
“இல்லை… இல்லை மேம். எனக்கு நான் அன்னைக்கு வந்து கேட்டுட்டு போன குழந்தை தான் வேண்டும்” என தேதி, நேரமென எல்லாம் கூறினாள் சம்ரு. ஒருவித பதட்டத்துடன்.
“பொதுவா கல்யாணம் ஆகாதவங்களுக்கு குழந்தையை தத்து கொடுக்கிறது இல்லை” என்றவர், பதிவேடு ஒன்றை எடுத்து திறந்தார்.
அவர் அவ்வாறு சொல்லியதும் யுகிக்கு ஏனென்றே தெரியாத நிம்மதி. என்னதான் தங்கையின் பிடிவாதத்துக்காக குழந்தையை தத்தெடுக்க வந்துவிட்டாலும், இந்த குழந்தையை காரணம் வைத்தே அவள் வாழ்வில் திருமணம் என்பது நடக்காமல் போய்விடுமோ என்கிற பயம் இருக்கத்தான் செய்தது. இப்போது சரோஜா அவ்வாறு கூறியதும், நிச்சயம் உண்மை தெரிந்தால் குழந்தையை கொடுக்க மாட்டார்கள் என்றே எண்ணினாள்.
ஆனால் யுகி பாவம். அவளுக்கு அவளது தங்கையின் தீவிரம் புரியவில்லை. அனைத்திற்கும் அவள் ஏற்பாடாய் வந்திருக்கிறாள் என்பதும் தெரியவில்லை.
அதனால் அதுவரை இருந்த வருத்தம் நீங்கி சற்று நிம்மதியாகவே மற்ற இருவரையும் கவனித்தாள்.
யுகிக்கு குழந்தையை தத்தெடுப்பதில் விருப்பமின்மை இல்லை. தங்கை திருமணம் செய்துகொள்ளாது இப்படி ஒன்றை செய்கின்றாளே என்கிற வருத்தம் தான்.
‘இவர் எங்கு ஆளை காணோம்!’ என நினைத்த யுகி, சன்னல் வழி பார்க்க வருண் யாரிடமோ அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தான். ஏதேனும் முக்கியமான காலாக இருக்குமென்று நினைத்தவள், தருணை அனுப்பி வைத்தாள். வருணை சீக்கிரம் வருமாறு சொல்லி.
பதிவேட்டில் குழந்தையின் விவரங்களை குறித்து வைத்திருந்த பக்கத்தை திறந்த சரோஜா…
“நீங்க மேரிட் தானே?” எனக் கேட்டார். சம்ருவிடம்.
‘இல்லைன்னு சொல்லப்போறா… அவங்க முடியாதுங்கப்போறாங்க…’ என மனதிற்குள் சொல்லிக்கொண்ட யுகிக்கு சம்ரு சொல்லிய “எஸ்” என்கிற பதில் தலையில் இடியாய் இறங்கியது.
“சம்ரு…” இருக்கையிலிருந்து எழுந்தே விட்டாள்.
“கொஞ்ச நேரம்’க்கா பேபியை வாங்கிட்டு கிளம்பிடலாம்” என்றாள். தன்னுடைய தமக்கையின் அதிர்வு எதனால் என்று அறிந்தும், வேறு பேசி அவளை அப்போதைக்கு மீண்டும் அமர வைத்தாள்.
“உங்க கணவர் வரவில்லையா?”
“அவங்க வேலை விடயமா வெளியூர் போயிருக்காங்க மேம்” என்றவள் “மேரேஜ் சர்டிஃபிகேட் அண்ட் போட்டோஸ் இருக்கு” என்று இரு உரைகளை அவர் முன் மேசையில் வைத்தாள்.
ஒன்றில் திருமண பதிவு சான்றிதழ். மற்றொன்றில் அவளது திருமண புகைப்படம்.
படத்தை பார்த்தவர், சம்ருவை ஆராய்வாக சில கணங்கள் ஆழ்ந்து பார்த்தார்.
“இவர்..?” சரோஜா கேள்வியாக இழுத்தார்.
“ஹீ இஸ் மை ஹஸ்பெண்ட். விஷ்வா… விஷ்வரூபன்” என்றவள், “சுடர் குழுமம் தாளாளர்” என்றாள். சற்றும் தடுமாறாத பதில்.
“இந்த காப்பகம் கூட அவர் கட்டுப்பாட்டில் தான் இருக்கு. உங்களுக்கு தெரியாதா?” அவள் கேட்டதில் அவர் சன்னமாக சிரித்துக்கொண்டார். அவளுக்கு காட்டாது.
சம்ரு பேசுவது, செய்வது அனைத்தும் யுகிக்கு உலகம் தட்டாமாலை சுற்றுவது போலிருந்தது.
என்னதான் இந்த விடயம் விஷ்வாவுக்கு தெரியக்கூடாதென்று சம்ரு நினைத்தாலும், சில விடயங்களில் அவனைத்தவிர வேறு யாரையும் தன்னுடன் அவளால் பொறுத்தி பார்க்க முடியவில்லை.
சம்ருவுக்கு நன்கு தெரியும்… தான் இங்கிருந்து கிளம்பிய அடுத்த நொடி விஷ்வாவுக்கு தகவல் சென்றிடுமென்று. அதற்கெல்லாம் அவள் பயப்படவில்லை.
இப்போது இந்த செய்தியை விஷ்வா அறிந்தாலும் கூட, தன்னவளிடம் தானே தனது மகவு இருக்கிறது என்று அமைதியாகத்தான் இருப்பான். ஒருவித சந்தோஷத்துடன். தன்னிடம் வந்து திருப்பிக்கொடு என்று கேட்கப்போவதில்லை. அதில் அவளுக்கு அத்தனை திண்ணம். அது அவளது விஷ்வா மீது அவள் கொண்ட நம்பிக்கை. எந்த காலத்திலும் அவளால் இந்த நம்பிக்கையை குறைத்துக்கொள்ள முடியாது. அதனாலேயே பயந்து பயந்து அங்கு வந்திருந்தாலும், நடப்பது நடக்கட்டுமென்று தன்னவன் மீதே மொத்த பாரத்தையும் போட்டுவிட்டாள்.
அதன் பிறகு சரோஜா சம்ருவிடம் எதுவும் கேட்கவில்லை.
சம்ரு திருமணம் ஆகவில்லை என்று சொல்லியிருந்தாலுமே அவர் குழந்தையை அவளுக்கு கொடுத்திருப்பார். அது விஷ்வாவின் ஆணை.
முதல் முறை அவள் வந்து குழந்தையை கேட்ட விடயம் அறிந்தவன், அன்றே ஏன் கொடுக்கவில்லையென்று சரோஜாவிடம் அவள் தனக்கு யார் என்பதை விளக்கியிருந்தான். அவனுக்கு சரோஜா மீது சுஜாதா அளவிற்கு மதிப்பு இருக்கிறது. அவனுக்கு அவர் வழிகாட்டியும் கூட. ஆதலால் அவரிடம் மறைக்க ஒன்றுமில்லையென அனைத்தும் கூறியிருந்தான்.
விஷ்வா சொல்லியதை பார்க்கும்போது சம்ரு திருமணம் ஆகாதவள் என்றே கூறுவாளென்று தான் அவர் எதிர்பார்த்தார். ஆனால், அவளோ விஷ்வா அவளுக்கு மோதிரம் அணிவிக்கும் புகைப்படத்தை காட்டியதோடு, திருமண சான்றிதழை நீட்டியிருந்தாள்.
சான்றிதழில் இருப்பது விஷ்வாவின் கையெழுத்து தான். அச்சு அசல் அவனிட்டது போலவே இருந்தது. அதில் அவருமே கூட சற்று குழம்பித்தான் போனார்.
பதிவு சான்றிதழை சுட்டிக்காட்டியவர் அதன் நகல் உள்ளதா எனக்கேட்டு வாங்கிக்கொண்டார். பின்னர் பதிவேட்டில் சம்ருவிடம் கையெழுத்து வாங்கியவர், குழந்தை இருக்கும் பிரிவுக்கு அழைத்துச் சென்றார்.
போகும் வழியில் தருணுடன் வருண் அவர்களுடன் இணைந்து கொண்டான். யுகியின் மனம் இன்னும் தெளியவில்லை. பேயறைந்தது போலவே வந்து கொண்டிருந்தாள்.
செல்லும் வழியில் ஆங்காங்கே சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருக்க, பெரியவர்கள் பேசியபடி, கைத்தொழில் செய்தபடி இருந்தனர்.
‘ஒரு இல்லத்திலேயே அதரவற்று இத்தனை பேர் இருக்கின்றார்களா?’ சம்ருவுக்கு உள்ளம் கனத்து போனது. முதல்முறை இங்கு வந்தபோது அவளின் சிந்தை முழுவதும் குழந்தையே ஆக்கிரமித்திருந்ததால், அவளின் கருத்தில் இவை படவில்லை. இப்போது பட்டு மனிதாபிமான அடிப்படையில் வருத்தம் கொண்டாள்.
தொட்டிலில் குழந்தை நல்ல உறக்கத்தில் இருந்தது.
குழந்தை பக்கத்தில் சிறுமி ஒருத்தி அமர்ந்து காகிதத்தில் படம் வரைந்து கொண்டிருந்தாள்.
“செல்வி அம்மா இப்போதான் குழந்தைக்கு பால் கொண்டுவரேன்னு போனாங்க சரோஜாம்மா” என்று சரோஜாவை பார்த்ததும் அச்சிறுமி எழுந்து நின்று பதில் வழங்கினாள்.
“சரி” என்றவர், “இனி நான் பார்த்துக்கிறேன். நீ கிளாஸுக்கு போ” என்று அனுப்பி வைத்தார்.
“இங்கு இவங்களுக்கு பள்ளிக்கூடமும் இருக்கா?” வருண் தான் கேட்டிருந்தான்.
“ஹ்ம்ம்… எல்லாம் வி.ஆர் சாரோட ஏற்பாடு” என்ற சரோஜா குழந்தை இருக்கும் தொட்டிலை சம்ருவிடம் நகர்த்திச் சென்றார்.
‘எல்லாருக்கும் நல்லது பன்றான். அவனுக்கு ஒரு நல்லது நடக்க மாட்டேங்குது.’ வருண் மனதோடு புலம்பினான்.
அப்போதுதான் யுகியை கவனித்தவன்…
“நீயேன் யுக்தா எதையோ பார்த்து ஷாக் ஆன மாதிரி இருக்க?” என்று வினவினான்.
“வீட்டுக்கு போய் பேசிக்கலாம் மாமா.” அவளின் குரலிலிருந்த அழுத்தம் அவனுக்கு என்னவோ செய்தது. சம்ருவை பார்த்தவன், ‘இவள் தான் எதாவது செஞ்சிருக்கணும்’ என்று சரியாக யூகித்தான்.
தொட்டிலில் கிடந்த குழந்தையை பார்த்ததும் சம்ருவின் கண்களுக்கு குட்டி விஷ்வாவாகத்தான் தெரிந்தாள் அந்த சிறு பிஞ்சு. அவனையே அச்சில் வார்த்தது போல் முக அமைப்பு. அவனுக்கு இருப்பதைபோல், வலது கண்ணின் கீழ் இமை தொடுமிடத்தில் புள்ளியாய் மச்சம். சம்ருவின் பார்வையில் முதலில் பட்டது அந்த மச்சம் தான்.
“இந்த மச்சம் உன்னை இன்னும் அழகா காட்டுதுடா! அதான் அந்த பக்கத்து கிளாஸ் பொண்ணு உன்கிட்ட பேச ஆசைப்படுறாள்.”
“ஆஹான்…”
என்றோ சிறு வயதில் அவர்களுக்குள் நடந்த உரையாடல் இன்றும் பசுமையாய் அவளின் நெஞ்சத்தில் நினைவில் நின்றது.
மெல்ல சுட்டு விரலை நீட்டி கரும் புள்ளியை பட்டும் படாது பரிசித்தவளின் கண்களில் நீர் நிறைந்து கன்னம் வழிந்தது. உதட்டில் புன்னகை உறைந்து இருந்தது.
“நான் தூக்கட்டுமா?”
சரோஜாவிடம் கேட்டவளின் விழிகளில் கண்ணீரையும் மீறி அத்தனை ஆசை தெரிந்தது. அது அவள் விஷ்வாவின் மீது கொண்ட காதலின் ஆழமாகத்தான் குழந்தை யாருடையதென்று அறிந்திருந்த சரோஜா மற்றும் வருணுக்கு தெரிந்தது.
விஷ்வா, சம்ரு தத்தெடுக்க ஆசைப்படுவது என்னுடைய குழந்தைதானென்று வருணிடம் அவனுக்கு சம்ரு சொல்லும்வரை சொல்லவில்லை.
அன்று மழைநாள் இரவில்…
சம்ருவின் பிடிவாதத்தில் இறங்கி வந்த வருண்,
“ஐ நீட்… ஒன் வேலிட் ரீஸன்” என்று கேட்டபோது, சம்ரு சொல்லிய…
“விஷ்வாவுடைய குழந்தை அது” என்ற பதிலில் தான் அவனுமே தத்தெடுப்பதற்கு ஒப்புக்கொண்டான்.
அக்கணம்,
‘சம்ரு குழந்தை ஒன்றை தத்தெடுக்க பிரியப்படுறாள் என்று விஷ்வாவிடம் தான் புலம்பிய போதும் அவன் உண்மையை சொல்லவில்லையே’ என நினைத்தவன் அப்போதே விஷ்வாவுக்கு அழைத்து, “நான் ஓகே சொல்லிட்டேன். என் தம்பி பிள்ளையை வளர்க்க எனக்கும் உரிமை இருக்கு” என்று கோபமாகவே பேசி வைத்திருந்தான்.
வருணின் கோபத்தில் விஷ்வாவுக்கு புன்னகை விரிந்தது. வருண் அவனுக்கு இன்னொரு மித்ரனாயிற்றே!
தருணை தூக்கி பழக்கமிருந்ததால் குழந்தையை பூப்போல் கையில் ஏந்தி மார்போடு அணைத்துக்கொண்டாள். நெற்றியில் மென்மையாய் இதழ் ஒற்றினாள். அவளின் ஒருதுளி கண்ணீர் மகவின் நெற்றியில் பட்டு தெறித்தது.
சம்ரு குழந்தையை கையில் ஏந்தியது முதல் சிறு அசைவையும் விட்டுவிடாது வருண் புகைப்படம் எடுத்தான். அதனைத்தான் உடனுக்குடன் விஷ்வாவுக்கு அனுப்பி வைத்தான்.
“நேம் வச்சிட்டிங்கலாம்மா?” தன்னுடைய பிள்ளையை பார்த்துக்கொண்டே சரோஜாவிடம் வினவினாள்.
வருண் சரியென்க, யுகி தங்கையையே தான் பார்த்திருந்தாள். இத்தனை நாள் இந்த சந்தோஷங்களையெல்லாம் எங்கு மறைத்து வைத்திருந்தாளென்று. அத்தனை பூரிப்பாய் ஒளியாய் சம்ருவின் முகம் மின்னியது.
“நேம் டிசைட் பண்ணிட்டியா சம்ரு?”
கேட்ட வருணிடம் ஆம் என்று தலையசைத்தாள்.
தருணை அருகில் அழைத்தவள், குழந்தையை கையில் வைத்துக்கொண்டே, அவன் உயரத்துக்கு மண்டியிட்டு அவனது காதில் மெல்ல பெயரை மெல்லொளியில் கூறி, அவனது தங்கையின் காதில் கூறச் சொன்னாள்.
“சுடர்… யாழ் சுடர்.”
தருண் தன் மழலையில் குழந்தையின் செவியில் உரைத்திட,
சரோஜாவின் மனம் ‘விஷ்வாவுக்கு அவனது காதல் கை கூடியிருக்கலாம்’ என்று வருந்தியது.