புலனத்தில் வருணின் பக்கத்தில் அவன் அனுப்பியிருந்த பெயரையே விரிந்த புன்னகையுடன் பார்த்திருந்தான் வி.ஆர்.
“என் பாட்டியோட நேம் எனக்கு ரொம்ப பிடிக்கும். சுடர்கொடி. அவங்க நேம் மாதிரியே ஒளிர்ந்த முகமா பார்க்க அவ்வளவு க்யூட்டா இருப்பாங்க. பாட்டியை ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதனால் சுடர் அப்படிங்கிற அவங்க பேரும் ரொம்ப பிடிக்கும். சுடர் தன்னம்பிக்கையான வார்த்தை இல்லையா?”
என்றோ அவன் சொல்லி… கேட்டதற்கு ஆமென்று தலையசைத்த சம்ருவின் முகம் அவன் கண்ணில் காட்சியாய்.
அவள் அப்படித்தான். அவன் எது பேசினாலும் அதனை ஏற்கும் முகபாவம் தான் அவளிடம்.
அவன் என்ன சொன்னாலும் செய்திடுவாள்.
அதனால் தான் என்னவோ,
“இனிமேல் என்கிட்ட பேசாத சம்ரு” என்று பதினாறு வயது விஷ்வா சொல்லவும் அப்படியே கேட்டுக்கொண்டாள்.
அவன் சொல்வதை கேட்டே பழக்கம் கொண்டவளுக்கு, அவன் பேசாத என்று சொல்லிய பின்னர் அதனை மீறி அவனிடம் உரிமையாய் பேசிட முடியாது போனது.
“நான் தான் பேசதன்னு சொன்னேன். அதுக்காக பேசாமல் இருப்பாளா இவள்?” என்று அதற்கும் கோபம் கொள்ளத்தான் செய்தான்.
அன்றைய முதிர்ச்சியற்ற செயல் இன்று நினைக்கையில் சிரிப்பாக வந்தது.
மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் இன்று தான், நீண்ட நேரமாக புன்னகை முகமாக இருக்கின்றான்.
அதற்கான காரணம், அவனின் மனதில் நிறைந்தரமாய் வாசம் செய்பவளை பற்றி நினைக்கவும், பேசிடவும் அவனுக்கு இருந்த தடை மொத்தமாக நீங்கியதாகக் கூட இருக்கலாம்.
அஞ்சலியுடன் வாழ்ந்த காலங்களில் அவளுக்கு உண்மையாக இருக்க வேண்டுமென்தற்காகவே, இதயத்தில் முண்டி அடிக்கும் தன் உயிரானவளின் நினைவுகளை இதயத்தின் ஆழ் கதவிற்கு அப்பால் மூட்டைகட்டி வைத்து பூட்டிட்டு சாவியை எங்கோ எறிந்திருந்தான்.
இன்று திறவுகோலின்றியே அவனது மனப்பெட்டகம் அவனின் சந்தோஷத்துக்காக திறந்து கொண்டது. அதற்கு காரணம் அவனது வாழ்வு சுதந்திரமானது தான்.
அஞ்சலி ஒன்றும் மோசமான பெண்ணல்ல. அவளின் சூழல் அவளது செயல்களுக்கு காரணியாகிப்போனது.
சுகமாய் தன்னவளுடன் பேசி சிரித்த நினைவுகளில் மூழ்கியிருந்தவனின் சிந்தையை மேசையின் மீது வீற்றிருந்த தொலைபேசி தொல்லையாய் இம்சித்தது.
“வி.ஆர் ஸ்பீக்கிங்.” வெளி ஆட்களுக்கு அவன் வீ.ஆர் தான். தொழில் துறையில் சிம்மசொப்பனம்.
இந்த வீ.ஆர் என்பதைக்கூட அவனுக்கு அடையாளப்படுத்தியது அவனவள் தான்.
எதிர்பக்கமிருந்து வந்த தகவலை கேட்டுக்கொண்டவன், அடுத்து தன்னுடைய சகோதரன் மித்ரனுக்கு அழைத்திருந்தான்.
“எங்க இருக்க மித்ரா?”
“ஆபீஸ் போயிட்டு இருக்கேண்டா!”
“வீட்டுக்கு எப்போ வந்த?”
“ஏர்போர்டிலிருந்து நேரா ஆபிஸ் தான் போறேன். பாரின் டெலிகேட்ஸ் மீட்டிங் இருக்கு. முடிச்சிட்டுதான் வீட்டுக்கு போகணும்” என்றான்.
“எஸ். ட்ரஸ்டபுல்” என்றவன், “எல்லாம் அந்த புரமோத் வேலை தான். பார்த்துக்கலாம் விடு. நீ டென்சன் ஆகிடக்கூடாதுன்னு தான் கால் பண்ணேன்” என்றான்.
“அவன் தான் ரீஸன் அப்படின்னா…” என்று இழுத்த மித்ரன், “வர்வங்களை ஜஸ்ட் கொஞ்ச நேரம் ஹோல்ட் பண்ண முடியுமா விஷ்வா?” எனக் கேட்டிருந்தான்.
“நான் எல்லாம் செக் பண்ணிட்டேன். உன்னோட பெர்சனல் லாக்கரில் ரெண்டு போலி டாக்குமெண்ட்ஸ் வச்சிருக்கான். க்ளியர் பண்ணிட்டேன்” என்ற தம்பிக்கு ஆயிரம் நன்றிகள் கூறினான் மித்ரன்.
மித்ரனின் மொத்தமும் அந்த அலுவலகம் தான். அவனது விடா முயற்சியின் வெற்றி. அதனை எளிதில் விட்டுக்கொடுத்திடுவானா, அவனுக்கு அரணாய் காவலனாய் இருக்கும் விஷ்வரூபன்.
“தம்பி உடையான் படைக்கு அஞ்சான்” என்று புன்னகையுடன் கூறிய மித்ரன் இணைப்பை வைத்திருந்தான்.
வந்திருந்த வருமான வரித்துறையினர்…
“சட்டத்திற்கு புறம்பான கருப்பு பணங்களை உங்களது தொழில் ரொட்டேஷனில் உட்புகுத்தி, யாருக்கும் தெரியாது வெளிநாட்டு வங்கியில் சேமிப்பதாக தகவல் வந்திருக்கிறது. அதற்காகத்தான் இந்த திடீர் சோதனை” என்றனர்.
மித்ரன் அலட்டிக்கொள்ளவில்லை, தன்னுடைய மேனஜரை அழைத்தவன், அந்த கம்பெனி துவங்கியது முதல் இப்போது வரையிலான அனைத்து கணக்குகளையும் அவர்களிடம் காட்டி, ஏதேனும் சந்தேகம் இருப்பின் தீர்த்து வைக்குமாறு கூறி அன்றைக்கு மீட்டிங் இருப்பதாக கூட்டம் நடைபெறும் நீண்ட அறைக்குள் சென்று மறைந்தான்.
வந்திருந்தவர்களில் ஒருவர்,
“கண்டிப்பா சோதனை போடணுமா?” எனக் கேட்டார்.
“அவர் போகின்ற தோரணையே இங்கு எல்லாம் சரியாக இருக்குன்னு சொல்லாமல் சொல்றது உனக்கு புரியலையா?” என்றார்.
“இது பொய் நியூஸ் அப்படின்னு நமக்கே தெரியும். அப்புறம் எதுக்கு டைம் வேஸ்ட் பண்ணனும்?” மற்றொருவர் கேட்க, வந்ததற்காக இரண்டு மணி நேரம் பெயருக்கு மேனஜர் காட்டிய கணக்குகளை பார்த்தவர்கள்…
எல்லாம் சுத்தமாக இருப்பதாகக் கூறி சென்றுவிட்டனர்.
உண்மையில் அத்துறையின் மேலதிகாரி புரமோத்தின் தாய் மாமன். புரமோத்திற்கும் விஷ்வாவுக்கும் சிறு வயது முதலே ஆகாது.
புரமோத் சுஜாதாவின் அண்ணன் புருஷோத்தமனின் மகன். அவரின் மகள் அஞ்சலியை தான் விஷ்வாவுக்கு மணம் முடித்து வைத்திருந்தனர். அதுவும் திடீர் திருமணம். தாலிகட்டும் நொடியில் தான் விஷ்வாவே தன்னுடைய திருமணத்தை அறிந்தான்.
விஷ்வா புரமோத்துடன் வளரவில்லை என்றாலும், ஏனோ விஷ்வாவை அவனுக்கு பிடிக்காது. தங்கையின் கணவன் என்கிற முறையில் சில வருடங்கள் அவனை சீண்டாமல் இருந்தான். இப்போது விஷ்வா குடும்பத்துடன் உறவே இல்லையென்று ஆனதும் மீண்டும் தன்னுடைய சீண்டல்களை தொடங்கியிருக்கிறான்.
என்ன தான் புரமோத் சீண்டிக்கொண்டே இருந்தாலும் தன்னுடைய அன்னைக்காக விஷ்வா எப்போதும் அமைதியாகத்தான் செல்வான். அன்னைக்கென்று இருக்கும் பிறந்த வீட்டு சொந்தம் புருஷோத்தமன் மட்டுமே. அதற்காக மட்டும் தான் விஷ்வாவின் அமைதியெல்லாம்.
ஆனால் இம்முறை ஏனோ அவனை அப்படியே விட்டுவிட வி.ஆர்’ஆல் முடியவில்லை. எப்போதுமே நதியாய் கடந்து ஓடிக்கொண்டே இருக்க அவன் விஷ்வா இல்லையே. வி.ஆர். அவனின் முகம் முழுதாய் யாருமே கண்டிடாதது. புரமோத்திற்கு காட்டிட முடிவெடுத்துவிட்டான்.
புரமோத்தின் குறி விஷ்வா தான். அவனுக்கே அடி கொடுத்தால் அவனுக்கு வலிக்காதே! விஷ்வாவின் உயிர் அவனது குடும்பம். அதற்காக முதலில் அவன் அடிக்க நினைத்து மித்ரன் மீது தன் அம்பை எய்திட, பாதியிலேயே அம்பினை உடைத்துவிட்டான் வி.ஆர்.
எப்போது தன்னை நிலைகுலைய செய்திட தன் உறவுகளை காயப்படுத்த நினைக்கிறான் என்று புரமோத்தின் எண்ணம் புரிந்ததோ அந்நொடி, தன்னை நோக்கி வந்த பந்தினை சிக்ஸர் அடித்து புரமோத்தின் பக்கமே திருப்பி அனுப்பியிருந்தான்.
அவனுக்கும் மேலான பல பெரும்புள்ளிகள் வி.ஆர்’ன் கைகளில் அடங்கியிருக்கின்றனர். அவன் கையசைத்தால் ஆட்சியே மாற்றம் பெறும். அத்தனை பலம் வாய்ந்தவன் வீ.ஆர். இத்தகைய பலத்திற்கு விதை ஊன்றியது அவனின் தாத்தா விஸ்வேஸ்வரன். மனைவியின் பெயரில் சிறிதாக பள்ளி ஒன்றை துவங்கி மெல்ல மெல்ல அதில் வளர்ச்சியடைய. அடுத்த அடுத்த தலைமுறைகளில் பெயர் சொல்லும் அளவிற்கு புகழ்வாய்ந்து உயர்ந்து நிற்கிறது. பள்ளி, கல்லூரி, காப்பகம், மருத்துவமனை, என்று பல்வேறு வகையில் தனித்தனியாக இயங்கிக்கொண்டிருந்த தங்களின் தொழில்களை ஒரே குழுமமாக சுடர் அறக்கட்டளையின் கீழ் கொண்டு வந்தது விஷ்வாவின் யோசனையில் தான். சுடர் என்றாலே மாநிலம் முழுவதும் ஆகப்பெரும் சக்தி. அதன் பலம் அரசாங்கம் வரை நீண்டது. முக்கிய கட்சிகளுக்கு அதிகப்படியான நிதி இங்கிருந்து தான் செல்லும். அதனால் அரசியல் பலமும் விஷ்வாவுக்கு இருந்தது.
ஆனால் தன்னுடைய பலத்தை எப்போதுமே சொந்த விடயங்களுக்கு பயன்படுத்தியதில்லை அவன். எதுவாக இருந்தாலும் நேர்வழி தான். சொல், செயல், பார்வை என அனைத்திலும் நேர்கொண்ட நிமிர்ந்த நன்னடத்தை தான் விஷ்வாவுடையது.
ஆனால் இப்போது ஒருமுறை கூட தனக்காக இதனை செய்யுங்கள் என்று யாரிடமும் கேட்டு பழக்கமில்லாத விஷ்வா புரமோத்தினை முடிக்க… முதல் முறையாக அரசியல் செல்வாக்கை நாடினான். அங்கும் கட்டளையாகத்தான் ஒலித்தது அவனது குரல்.
வரப்போகின்ற தேர்தலில் விஷ்வாவின் ஆதரவு அவர்களுக்கு வேண்டும். ஆதலால் விஷ்வா சொல்லியதற்கு செயல் வடிவம் கொடுத்திருந்தனர்.
புரமோத் எப்படி மித்ரனின் அலுவலகத்தில் அவனது ஆள் வைத்திருந்தானோ… அந்த மாதிரி குறுக்கு எண்ணமில்லாத விஷ்வா, இதுநாள் வரை அவனை கண்காணிக்க ஆள் வைத்தது கிடையாது. ஆனால் இன்று நொடியில் புரமோத்தின் நம்பிக்கைக்குரிய ஆளையே விலைக்கு வழங்கியிருந்தான்.
அவன் மூலமாக புரமோத் மித்ரனின் அலுவலகத்தில் வைத்த முறையற்ற கணக்குகள் கொண்ட டாக்குமெண்ட்களை புரமோத்தின் மேசை மீதே அவனுக்கு சந்தேகம் வராத வகையில் வைத்தான்.
மித்ரனிடமிருந்து ஐடி துறையினர் ஒன்றுமில்லையென கிளம்பிவிட்டனர் என்ற தகவல் வந்ததும்… விஷ்வா, புரமோத்திற்கு கால் செய்தான்.
“வி.ஆர்… கால் மீ வி.ஆர். எனக்கு நெருக்கமானவங்களுக்கு மட்டும் தான் என் பெயர் சொல்ல உரிமை இருக்கு.” சிங்கமென கர்ஜித்தவன், நீ யாரோவென்று எட்ட நிறுத்தியிருந்தான்.
“நீ என்னை தொட நினைச்சாலே நான் உன் கதையை முடிச்சிடுவேன். இத்தனை நாள் அமைதியா போன விஷ்வா இல்லை நான். இனி என்னை சீண்டாத. நீ செய்த காரியம் என் அம்மாவுக்கு தெரிந்தால், அவங்களே உன்னை நாலு போடுவாங்க. இதுக்கு அப்புறம் அத்தைன்னு சொல்லிக்கிட்டு எங்க அம்மாவுக்கு கால் பண்ற வேலை வச்சிக்கிட்ட…” என்றவன்,
“சொல்லமாட்டேன். செய்வேன்…” என்றதோடு,
“இப்போ ஒண்ணு செஞ்சிருக்கேன். அப்படியே உனக்கு ஜிவ்வுன்னு ஏறும். கொஞ்சம் கண்ணாடி வழியா வெளியே எட்டி பாரு” என்றான்.
ஏனென்று தெரியாத போதும் விஷ்வா சொல்லியதை புரமோத் செய்திருந்தான்.
அவன் அனுப்பிய ஐடி துறை ஆட்களுடன் இன்னும் பிற மேலதிகாரிகளும் அவனது அலுவலக வளாகத்திற்குள் நுழைந்திருந்தனர்.
“என்ன வாலு போய் கத்தி வந்திருக்கா… உன்னால் சின்ன மூவ் கூட பண்ண முடியாது. செக்மெட்” என்ற விஷ்வா இணைப்பைத் துண்டித்திருந்தான்.
அதே நேரம் புரமோத்தின் வீட்டிலும் ரெய்டு நடத்த ஆட்கள் சென்றிருந்தனர். ஒரே நேரத்தில் வீடு, அலுவலகம், புருஷோத்தமனின் கற்குவாரி, சிமெண்ட் ஆலை, மணல் ஏற்றுமதி என அனைத்து இடங்களிலும் ரெய்டுக்கு ஏற்பாடு செய்திருந்தான் விஷ்வா.
ஆட்கள் தீவிரமாக அனைத்தையும் சரி பார்த்துக் கொண்டிருந்தனர்.
அமைதி அமைதி மட்டுமே. கணக்கில் வராத, ஒழுங்காக வரி கட்டாதவை என பட்டியல் நீண்டு கொண்டே சென்றது.
வரி ஏய்ப்பு செய்ததற்காக புரமோத் கைது செய்யப்பட்டான்.
முறையான கணக்குகள் முடித்து, சரியான காரணம் கூறும் பட்சத்தில் விடுக்கப்படுவான் என்று கூறிச்செல்ல, அனைத்தையும் மகன் பெயரில் வாங்கி குவித்ததற்கு புருஷோத்தமன் வருத்தம் கொண்டார்.
இதற்கெல்லாம் காரணம் விஷ்வா என்று அறிந்தவர், அவனுக்கு அழைக்க…
அழைப்பை விஷ்வா ஏற்கவே இல்லை.
அவரின் அழைப்புகளின் எண்ணிக்கை நீண்டுகொண்டே போனது.
விஷ்வாவுக்கு அவர் மீதிருக்கும் கோபத்திற்கு முற்றிலும் அவர் உறவையே தவிர்த்தான்.