கல்லூரியில் விஷ்வா சம்ருதியிடம் பேசியதும் வீட்டிற்கு வந்த அம்மையப்பன், அனைவரும் ஒன்றாக கூடும் நேரமான இரவு உணவு நேரத்திற்காகக் காத்திருந்தார்.
அம்மையப்பன் விடயத்தை சொல்லியதும் மித்ரன் மற்றும் அனுவிடம் மகிழ்ச்சியின் வெளிப்பாடு. மித்ரன் தன் சகோதரனின் தோள் தட்டி…
“ரொம்ப சந்தோஷமா இருக்கு விஷ்வா” என்றதோடு, “சம்ருவுக்கு விருப்பம் தானே?” எனக் கேட்டான்.
“சம்ரு இங்கு வந்ததே அவனுக்காகத்தான்.”
அம்மையப்பன் சொல்லிட சுசிக்கு தலையும் வாலும் புரியாத நிலை.
“அவளுக்கு கல்யாணமாகி குழந்தை இருக்கே! அவளோட ஹஸ்?” அதிர்வோடு தான் இழுவையாகக் கேட்டாள்.
‘இவள் இப்படி நினைச்சிட்டு இருக்காளா?’ மூன்று ஆண்களின் மனதிலும் ஒரே எண்ணம் தான்.
அவளுக்கு பதில் சொல்லாது,
“நீயென்ன சொல்ற சுஜா? விஷ்வாவோட காதல் அவனுக்கு திரும்ப கிடைக்க ஒரு வாய்ப்பு” என்றார் மனைவியிடம்.
சுஜாவுக்கும் மகனது வாழ்வு முந்தைய திருமணத்தோடு முடிவடையாது, மீண்டும் மலர ஒரு வழி அமையும் போது சந்தோஷம் தான். ஆனால் சுசி திருமணமானப்பெண் என்று சொல்லியது அவருள் நெருடியது.
“கல்யாணமாகி ஒரு குழந்தையிருக்க பெண் எப்படிங்க…?” என்று தயங்கினார்.
“எனக்கும் கல்யாணமாகி குழந்தை இருக்கேம்மா!” விஷ்வாவிடம் இப்படியொரு பதில் வருமென்று சுஜா எதிர்பார்க்கவில்லை.
“அப்போ சம்ருவுக்கு டிவோர்ஸ் ஆகிருச்சா? அவள் ஹஸ் ஏதோ ஃபாரினில் இருக்கிறாருன்னு நினைச்சிட்டு இருந்தேன்.” தன் சந்தேகம் தீர்வதில் மட்டுமே சுசி கண்ணாக இருந்தால்.
“நீ யாரை சொல்ற சுசி?”
விஷ்வாவின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாத சுஜா, தன் பேச்சை சுசியிடம் மாற்றிக்கொண்டார்.
“எதிர்வீட்டிலிருக்க யுகியோட தங்கை சுசி தான் அத்தை” என்றாள்.
“அந்தப்பொண்ணா… அவளா விஷ்வா காதலித்த பெண்?” என்று ஆச்சரியமாகக் கேட்டார்.
சுசி ஆமென்க…
“காதலித்த இல்லை… இப்பவும் ஐ லவ் ஹெர்” என்று அழுத்தமாகக் கூறினான் விஷ்வா.
அவனின் அழுத்தத்தில் சுஜா திகைத்தார்.
அஞ்சலி விட்டு சென்று விவாகரத்து கேட்டபோதுகூட உணராத அவரின் தவறு, விஷ்வா இன்னமும் தான் சம்ருவை காதலித்துக் கொண்டிருக்கிறேன் என்ற வார்த்தையில் உணர்ந்தார்.
‘அன்று தப்பு செய்துவிட்டோமோ?’ காலம் கடந்து வருந்தி பலனில்லை.
“விஷ்வா…!”
“இப்பவும் நான் ஆசைப்பட்டது கிடைக்கக்கூடாதுன்னு நினைக்கிறீங்களாம்மா?” எனக் கேட்டான்.
“அய்யோ… அப்படியில்லை விஷ்வா” என்று பதறிய சுஜா, “அவளுக்கு கல்யாணமாகிடுச்சே?” என்றார் மீண்டும்.
“அதெப்படிம்மா உன் பையனுக்கு ஏற்கனவே கல்யாணமாகியிருந்தாலும் இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்க ஆசைப்படுவ. ஆனால் அந்த பொண்ணுக்கு விஷ்வா தான் முதலாவதா இருக்கணும் நினைப்ப, இது நியாயமில்லையேம்மா?” என்ற மித்ரனின் பேச்சு சுஜாவுக்கு சவுக்கடியாய் இறங்கியது.
அம்மையப்பன் தன் மூத்த மகனுக்கு மனதில் சபாஷ் போட்டுக்கொண்டார்.
உண்மை சுட, தன் அதிர்வை சீராக்கிய சுஜா…
“என்னயிருந்தாலும் சம்ரு விஷ்வா ஆசைப்பட்ட பொண்ணு. அதுக்காக நான் சம்மதிக்கிறேன். இனியாவது அவன் சந்தோஷம் வாழ்ந்தால் போதும்” என்று மனதால் தன் சம்மதம் வழங்கினார் சுஜா.
இதுதான் ஆண்கள் மூவருக்கும் வேண்டியதாக இருந்தது. சம்ருவின் தற்போதைய பிம்பம் சுஜாவிடம் என்னவோ அப்படியே அவளை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டுமென நினைத்தனர். அதனாலேயே சுசி சம்ருவிற்கு ஏற்கனவே மணமாகிவிட்டதைப் பற்றி கேட்ட போதும் மூவரும் அதைப்பற்றி பேசவில்லை.
“உனக்கு ஓகேவாம்மா?” என சுசியிடம் கேட்ட அம்மையப்பன், “நாளைக்கு அதிக நேரம் ஒண்ணா இருக்கப்போறது பெண்கள் நீங்க தான். அதனால் உன் முடிவும் அவசியம்” என்றார்.
சம்ருவுக்கு திருமணம் முடிந்து விவாகரத்து ஆகிவிட்டது என்ற முடிவுக்கே வந்துவிட்ட சுசி,
“எனக்கு இதில் எந்த பிரச்சனையும் இல்லை. விஷ்வாவுடைய சந்தோஷம் தான் முக்கியம்” என்றாள்.
அனுவிற்கு அவளின் அண்ணன் காதலித்த விடயம் தெரியும். அது அஞ்சலியுடன் நடந்த எதிர்பாராத திருமணத்தால் முறிந்துவிட்டதென்று அறிவாள். அத்தோடு விஷ்வாவின் திருமணத்தில் அவள் மட்டுமே அறிந்த உண்மையும் ஒன்று உள்ளதே! ஆதலால் மீண்டும் தன் அண்ணனுக்கு அவன் ஆசைப்பட்ட விடயம் நடக்கப்போவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை. இனியாவது அவன் வாழ்வில் நல்லாயிருக்க வேண்டுமென்ற எண்ணம்.
“ஓகே ஃபைன்” என்ற விஷ்வா, “இப்போ ஒரு உண்மையை சொல்றேன்” என்றவனாக,
“அவள் என்னோட ம்ருதி. அவள் மனசில் எப்பவும் என்னைத் தவிர வேறு யாருக்கும் இடமில்லை. அவளுக்கு முதலும் முடிவும் நான் தான்” என்றான். கூர்மையிலும் வலுவாய்.
“புரியல விஷ்வா?” சுஜா, சுசி ஒரு சேர வினவினர்.
“நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. சம்ருவுக்கு கல்யாணமாகல” என்றான்.
“அப்போ குழந்தை?” சுசி வேகமாகக் கேட்டாள்.
“என்னோட குழந்தை.”
இரு பெண்களுக்கும் உச்சகட்ட அதிர்வு.
“ஆசிரமத்தில் அஞ்சலியால் விட்டுச்செல்லப்பட்ட என்னுடைய குழந்தையை எனக்காக, என் மீதான காதாலுக்காக அவள் குழந்தையா அடாப்ட் செய்துகிட்டாள்” என்றவன் அதற்காக சம்ரு செய்த தில்லு முல்லு திருமணத்தையும் கூறினான்.
அந்நொடியே சுசிக்கு சம்ருவை அணைத்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது.
சுஜாவுக்கு அத்தனை வியப்பு.
இப்படியும் ஒரு பெண்ணால் காதலிக்க முடியுமா என்று.
அக்கணம் முழு மனதாக சம்ருவை தன் மருமகளாக ஏற்றுக்கொண்டார் சுஜா.
மறுநாள் விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்திலேயே திருமணம் என்று அம்மையப்பன் சொல்லிட… அந்நொடியே சுஜா பரபரப்பாகிவிட்டார்.
அப்போதே அம்மையப்பன் மற்றும் தன் மூத்த பிள்ளை, மருமகள், அனுவென்று விஷ்வாவை தவிர்த்து அனைவரையும் கூட்டிக்கொண்டு எதிர்வீட்டிற்கு சென்றார்.
மாலை தான் தோட்டத்தில் மலர்ந்த முல்லை பூக்களை சரமாக தொடுத்து பிரிட்ஜில் வைத்திருந்தார். அவசரத்திற்கு அதனை மட்டும் எடுத்துக்கொண்டார்.
வருண் ஏற்கனவே யுகியிடம் விடயத்தை பகிர்ந்திருக்க… ஓரளவிற்கு அவளுக்கும் மகிழ்வு தான். வீரய்யனின் மரணத்திற்கான காரணம் ஏதோவொரு வகையில் இவர்களின் காதல் தானே காரணம். அதனை ஏனோ வருடங்கள் கடந்தும் யுகியால் மறக்க முடியவில்லை. அதற்காக தங்கையின் விருப்பத்திற்கு எதிராக நிற்கவும் அவள் நினைக்கவில்லை. தங்கை நன்றாக இருந்தால் போதும் என்ற திருப்தியான மனநிலையில் ஒப்புக்கொண்டிருந்தாள்.
வீட்டிற்குள் நுழைந்தவர்களை வருண் மற்றும் யுகி இன்முகமாக வரவேற்றிட சுஜாதாவின் பார்வை சுடரை தேடியது. என்னயிருந்தாலும் அவரின் வாரிசல்லாவா!
அவரின் பார்வை வட்டத்தை வைத்து, சுசி தான் அவரை அடக்கினாள்.
“நீங்க சுடருக்காக சம்ருவை ஏத்துகிட்டதா நினைத்திடக் கூடாது அத்தை” என்றாள். ஒருவித அழுத்தத்தில்.
“புரியுது… ஆனால் பார்க்கணும் தவிப்பா இருக்கே!” என்றார்.
சுஜாவுக்கு அடுத்த பக்கம் அமர்ந்திருந்த அம்மையப்பன்,
“இன்னமும் உன் பிள்ளையே அவன் பிள்ளையை பார்த்ததில்லை” என்றார்.
சுஜாவுக்கு ஆச்சரியம்.
விழிவிரித்து கணவனை நோக்கினார்.
“அவன் குழந்தைக்கு சம்ரு மட்டும் தான் அம்மான்னு முடிவு பண்ணிட்டான். சம்ருவின் உரிமையை அவனுக்காகக்கூட பறிக்க அவனுக்கு விருப்பமில்லை” என்றார்.
இருவரின் காதலின் ஆழம் தெரிய தெரிய அன்று அஞ்சலியின் கழுத்தில் விஷ்வாவை தாலி கட்ட வைப்பதற்காக தான் செய்த செயலின் வீரியம் பூதாகரமாக தெரிந்தது. உள்ளுக்குள் குற்றவுணர்வு வியாபிக்கத் தொடங்கியது.
ஏற்கனவே சுஜாவுக்கு யுகி நட்பாகியிருக்க எவ்வித தயக்கமுமின்றி பேச்சுவார்த்தையை துவங்கியிருந்தார்.
“பெரியவங்க நீங்க என்ன செய்தாலும் சரி” என்ற யுகியின் தன்மையான நடவடிக்கையில் சுஜாவுக்கு நிறைவு.
“சம்ருவை பார்க்கணுமே!” சுஜா இதுவரை சம்ருவை பார்த்ததில்லை. அருகிலிருந்தும் அதுக்கான வாய்ப்பு கிட்டவில்லை.
என்றோ மித்ரனின் திருமணத்தில் சடுதியில் பார்த்த சம்ருவின் முகம், சுசி நினைவு கூர்ந்தும் அவருக்கு நினைவில்லை.
“இன்னைக்கெல்லாம் சுடர் மதியத்திலிருந்து தூங்கவே இல்லை. அழுதுகிட்டே வேற இருந்தாள். அவள் அம்மாவை பார்த்ததும் குஷி ஆகிட்டாள். இந்நேரம் தூங்க வச்சிட்டிருப்பாள் நினைக்கிறேன்” என்று யுகி சொல்ல…
“அதற்கென்ன நாங்க போய் பார்த்துக்கிறோம்” என்று மாடியேறினார் சுஜா. உடன் சுசி, அனு.
சுடரை தன் அணைப்பில் நெருக்கமாக வைத்திருந்த சம்ரு ஆழ்ந்த உறக்கத்திலும், சுடரின் மார்பில் மென்மையாய் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
அறை முழுக்க குழந்தைக்கு வேண்டிய பொருட்கள் அனைத்தும் நிரம்பியிருந்தன.
இருவரையும் சுஜா பார்த்துக்கொண்டே நின்றிருந்தார்.
“இத்தனை நாளில் ஒருநாள் கூட இந்த கண்ணுக்கு கீழிருக்கும் மச்சம் என் கண்ணுல விழலையே” என்றவர், “உனக்குக்கூடவா சுசி தெரியல?” எனக் கேட்டார்.
ஒரே முறை இவ்வீட்டிற்கு சுசி வந்திருந்தாள். அன்று எங்கு அவள் குழந்தையை முழுதாய் பார்த்தாள். சம்ருவின் குழந்தை என்றதுமே அவளுக்கு அனைத்தும் நின்றுவிட்டதே! அதை இப்போது மறைக்காது கூறினாள்.
“அச்சோ நீங்க பேசி எழுப்பி விட்டுடாதீங்க. தூங்கட்டும். நாம் போகலாம். எப்படியும் ரெண்டு பேரும் நாளையிலிருந்து நம்ம வீட்டில் தான் இருக்கப்போறங்க” என்று அனு தான் இருவரையும் பிடிவாதமாக கீழே அழைத்து வந்தாள்.
துரித கதியில் அடுத்தடுத்த ஏற்பாடுகளை செய்தனர்.
அதை செய் இதை லிஸ்ட் போடென்று சுசியையும், அனுவையும் ஒரு வழி செய்த சுஜா…
“மாப்பிள்ளைக்கிட்ட சொல்லணும். கால் பண்ணு அனு” என்றார்.
“நான் சொல்லிக்கிறேன்” என்ற மித்ரன், வினித்திற்கு அழைக்க அம்மையப்பன், வினித்தின் பெற்றோருக்கு அழைத்தார்.
இவர்கள் சம்ருவின் வீட்டிற்கு கிளம்பி சென்றபோது வெளியில் சென்ற விஷ்வா, அப்போதுதான் வீடு திரும்பினான்.
அவனது சிறு சிறு செயலிலும் சம்ருவுடனான வாழ்க்கைகாக விஷ்வா எவ்வளவு ஏங்கியிருக்கிறான் என்பது வெளிப்பட்டது. அனைவரும் உணரும்படி.
சுஜா தன் குற்றவுணர்வால் துளிர்த்த நீரை சேலை தலைப்பில் ஒற்றிக்கொண்டார்.
தாலி கொடியுடன் முழுதாய் தங்கத்திலேயே வாங்கியிருந்தான். அதில் அனைத்து உருப்படிகளும் தங்க இழையாலேயே கோர்க்கப்பட்டிருந்தது.
அத்தனை அழகாக இருந்தது.
“இதெல்லாம் நல்ல நேரம் பார்த்து வாங்கணும், கோர்க்கணுங்க. இவன் இப்படி சொல்லாமலே…” சுஜா அம்மையப்பனிடம் முறையிட்டார்.
“அவன் மனசுக்கு என்னப்படுதோ அதை பண்ணட்டும் சுஜா. அவன் மனசுக்கு எல்லா நேரமும் நல்ல நேரம் தான்” என்று அப்பேச்சை முடித்துவிட்டார்.
அனுவிடம் சம்ருவுக்கான புடவை மற்றும் நகைகளை கொடுத்த சுஜா,
“முறைக்கு நீதான் போய் கொடுக்கணும். கொடுத்திட்டு வந்திடும்மா” என்றார்.
அனுவுடன் சுசியும் சென்று சம்ருவுடன் தனக்கிருந்த மன வருத்தத்தை வெளிப்படையாகக் கூறி, அதற்கான மன்னிப்பையும் வேண்டி இயல்பாய் சிறிது நேரம் பேசிவிட்டே வந்தாள். அப்போது தான் அவள் மனம் லேசானது.
அறைக்குள் வந்ததும் வருணுக்கு அழைத்த விஷ்வா,
“வருண்ணா” என்று கதறினான்.
அத்தனை நாள் வெளியில் சொல்ல முடியாது அவனை அழுத்திக் கொண்டிருந்த மொத்த பாரமும் விலகி ஓடிய உணர்வு.
“என் மனசும் இந்த நாளுக்காகத்தான் காத்திருந்துச்சோ? சந்தர்ப்பம் கிடைத்ததும் பயன்படுத்திகிட்டனா வருண்ணா?” என்று தவறு செய்துவிட்ட பாவனையில் சிறுவனாய் வினவிய விஷ்வாவுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாது வருண் மௌனித்திருக்க, அவனிடமிருந்து அலைபேசியை பறித்த சம்ரு…
“என்னை கட்டிக்க உங்களுக்கு அவ்வளவு கஷ்டமா?” என்றவள், “கஷ்டமாயிருந்தாலும் பரவாயில்லை. சேர்ந்து கஷ்டப்பட்டுக்கலாம். இப்போ தூங்குங்க. காலையில் என் கழுத்தில் தாலி கட்டும் போது உங்க முகம் பளிச்சுன்னு இருக்கணும். அந்த கண்ணுல எனக்கான காதல் அருவியா கொட்டணும். நினைவு வச்சிக்கோங்க” என்று மிரட்டிவிட்டு அலைப்பேசியை அணைத்துவிட்டாள்.
“கால் வால்யூம் கம்மி பண்ணி வைங்க மாமா” என்றவளாக சென்றவளை பார்த்து வருணுக்கு முகம் முழுக்க புன்னகை.
சம்ரு இந்த மாதிரி பேசி எத்தனை வருடங்களாயிற்று.
அதிகாலைக்கு முன்னரே யுகி சம்ருவை எழுப்பிவிட்டு சுடரை தூக்கிக்கொண்டு சென்றுவிட்டாள்.
அவள் எழும் போதே விஷ்வாவின் அறையில் மின்விளக்கு ஒளிர்ந்து கொண்டிருந்தது.
“எழுந்துட்டாங்க போல.” குளித்து முடித்து, அவன் தேர்ந்தெடுத்த ஆடை ஆபரணங்களில் தயாராகியவள் பால்கனியில் நின்று விஷ்வாவுக்கு அழைத்தாள்.
பட்டு வேஷ்டி சட்டையில் ஒரு கையில் அலைபேசியை பிடித்தவனாக மறு கை விரலால் மீசையை முறுக்கியபடி வந்தவனின் கம்பீரத் தோற்றத்தில் அவளும், வான் தேவதை தரையிறங்கி வந்ததோ என்ற பிரம்மிப்பில் தன்னவளை அவனும் இமை சுருக்காது பார்த்து ரசித்திருக்க…
அப்போதுதான் விஷ்வாவின் வீட்டிற்கு வந்த தினேஷ், தன் இருசக்கர வாகனத்திலிருந்து இறங்கும் முன்பே இரு வீட்டிற்கும் இடையிலிருந்த தெருவிலிருந்தபடியே இருவரையும் கவனித்துவிட்டான்.
இரு வீட்டின் பால்கனியில் பெண்ணும், பையனும் ஒருவரையொருவர் பார்த்தபடி நின்றிருக்க… அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் எனும் அக்காட்சியை அப்படியே தன் அலைப்பேசியில் புகைப்படமாக்கியிருந்தான் தினேஷ்.
அடுத்த சில நிமிடங்களில் சம்ருவை யுகி அழைக்க, விஷ்வாவிடம் தலையை அசைத்துவிட்டு சென்றாள்.
அவனுக்கு அந்நொடியே மூச்சு முட்டியது.
‘என்னை ஏண்டி இவ்ளோ லவ் பன்ற? கொல்லுதே!’ புலம்பியவன் கீழே செல்ல, அனைவரும் கிளம்பி கோவில் வந்து சேர்ந்தனர்.