நிமிடங்கள் பல கடந்தும் சம்ரு தன்னிலையில் மாற்றமில்லாது அப்படியே நின்றிருக்க…
கண்கள் மீது வைத்திருந்த கையின் இடைவெளியில் அவளை பார்த்துக்கொண்டு அமைதியாக படுத்திருந்தான்.
அவள் என்ன செய்கிறாள் என்று பார்ப்பதற்கு. கொஞ்சமே கொஞ்சம் விளையாடி பார்க்க நினைத்தான்.
“இப்படி நின்னுட்டே இருந்தால் கால் வலி தான் வரும்” என்றான் விஷ்வா.
“வரட்டும்” என்று கடுப்பாக மொழிந்தவள், “தூங்குங்க. இப்போ தூக்கம் தான் ரொம்ப முக்கியம்” என்றாள். வார்த்தைகளை பற்களுக்கிடையில் கடித்தவளாக.
“வேறென்ன முக்கியம். நைட் வரதே தூங்குறதுக்குதானே?” என்றான் எழுந்து அமர்ந்தவனாக.
“ட்யூப் லைட்டாங்க நீங்க?” என்றவளின் முகம் காட்டிய பாவனையில் பீறிட்டு வந்த சிரிப்பை இதழுக்குள் அதக்கியவன் அடுத்து அவள் கேட்டதில் வெடித்து சிரித்தான்.
“இன்னைக்கு என்னன்னு உங்களுக்கு தெரியாதா?” கண்கள் விரிய அவள் கேட்ட தோரணை அவனின் சிரிப்பை கூட்டியது.
விஷ்வா சிரித்ததில் அவனை இன்னும் இன்னும் முறைத்தாள்.
பள்ளி வயதில் அவன் எதாவது விளையாட்டுக்கு செய்தால், இப்படித்தான் முறைத்துக்கொண்டு நிற்பாள். இந்த ம்ருதியை தானே அவன் காதலிக்கத் தொடங்கியது. இமை சிமிட்டாது பார்த்து ரசித்தான்.
“வேணுன்னே வம்பு பண்றீங்களா? போங்க… நான் போறேன்” என்று திரும்பிட, அவள் பின்னால் மறைத்து வைத்திருந்ததை பார்த்துவிட்டான். முழுதாய் பார்ப்பதற்கு முன் கையை முன்னால் கொண்டு சென்றிருந்தாள்.
வெகு இலகுவாய் அவனால் அவளுடன் இருந்திட, பேசிட முடிந்தது. மனதிலிருக்கும் காதலுக்கு பழையதை வைத்துக்கொண்டு விலகி நிற்க தெரியாது. அன்பு கொண்டவர்கள் சந்திக்கும் தருணம்… எத்தனை ஜென்மங்கள் சென்றிருந்தாலும், காதலை பகிர்ந்திடத்தான் நினைத்திடும். காட்டிடும்.
இங்கு இருவரையும் அவர்கள் கொண்டுள்ள காதலின் பித்துநிலை அவர்களை ஆட்சி புரிந்திட வைத்தது.
“அப்போ வேணுன்னே சீண்டுறீங்களா?”
“ஆமாம்” என்றவன் எழுந்து அவள் முன் வந்து நின்றான். வேகமாக அவளின் கை பின் சென்றிருந்தது.
“என்னது?”
“என்னது, என்னது?”
“கையில என்ன?” எனக் கேட்டுக்கொண்டே கதவினை தாழிட்டான்.
“சொல்ல முடியாது போங்க” என்றவள், “உங்களுக்காக பார்த்து பார்த்து மேக்கப் போட்டு, ஹேர் பிளாட் போட்டால் உங்களுக்குத்தான் கஷ்டம், ஜூவெல்ஸ் போட்டால் உங்களுக்கு வலிக்கும், சாரீ பின் பண்ணா டைம் வேஸ்ட் ஆகும் அப்படின்னு பின் பண்ணாமல் மேனேஜ் பண்ணி, உங்க முன்னாடி வந்து நின்னா(ல்)… என் முகத்தை கூட சரியா பார்க்காமல் தூக்கம் வருதாம் தூக்கம். இப்போ போய் தூங்குங்க போங்க” என்று தன்போக்கில் என்ன சொல்கிறோம் என்று உணராது சொல்லியவள் வேக வேகமாக அடி வைத்து மெத்தை அருகே சென்று மீண்டும் அவன் முன் வந்து நின்று இரு கையையும் கோர்த்து நீட்டினாள்.
சம்ரு மூச்சுவிடாது படபடவென சொல்லிய வார்த்தைகளில் அவனுள் அடக்கி அழுத்தி வைக்கப்பட்ட உணர்வுகள் யாவும் வெடித்து கிளம்பின. அவனது கண்கள் காதலுக்கு இணையான தாபத்தையும் கொட்டி கவிழ்த்தது.
காதலும் தாபமும் சரிவிகிதம் கலந்திருப்பின் அங்கே ஆட்சி புரிவது இரு மனங்களுக்கு இடையேயான நேசம் மட்டுமே!
தன் முன்னால் நீட்டப்பட்டிருந்த சம்ருவின் இரு கை விரல்களுக்கு நடுவே பந்தாய் குவிந்து மலர்ந்திருக்கும் நாவல் பழ நிற ரோஜாக்களை கண்டு முகத்தோடு சேர்த்து அகமும் விகசிக்க நின்றான் விஷ்வா.
“இந்தாங்க… வச்சிக்கோங்க! ஹைபிரிடா இருந்தாலும் இப்போ இந்த கலர் அவைளபில் (available) இல்லை தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமேன்னு எவ்வளவு கஷ்டப்பட்டு பெங்களூரிலிருந்து வரவைச்சேன். பிடிங்க” என்றவள் விஷ்வாவின் கையில் பூங்கொத்தை திணித்துவிட்டு,
“உங்கக்கிட்ட கொடுக்கும்போது என்னென்னவோ சொல்லணும் நினைச்சேன். எல்லாம் மறந்துப்போச்சு. ஐ லவ் யூ மட்டும் தான் ஞாபகம் இருக்கு” என்று உள்ளிருப்பதையெல்லாம் தன்னைப்போல் பிதற்றிக்கொண்டிருக்கிறோம் என்பதை உணராமலே எல்லாத்தையும் சொல்லியவள் இதழ் குவித்து காற்றினை ஊதிட…
“நினைவு இருப்பதை சொல்லு” என்றான். விஷ்வாவுக்கு வேண்டியது அவளது காதல் மட்டும் தானே! அதைத்தான் அவள் கொள்ளை கொள்ளையாய் கொட்டிக்கொடுத்துக் கொண்டிருக்கிறாளே! அதைவிடவா அவள் சொல்லப்போகும் பல வார்த்தைகள் அவனை மகிழ்வித்திடப் போகிறது?
“லவ் யூ. சொல்லியாச்சு. குட் நைட். தூங்குங்க… போங்க” என்று இரண்டடி நகர்ந்தவள்,
“ஹான்… அப்புறம்” என்று விஷ்வாவை நெருங்கி அவன் கால் மீது ஏறி நின்று, “எதுக்கு இவ்வளவு ஹையிட்டா இருக்கீங்க?” என்றவளாக, அவன் கன்னத்தில் தன் பூவிதழ் ஒற்றி எடுத்து “இன்னைக்கு ஒரு கிஸ் கூட பண்ணலன்னா நாளைக்கு வரலாறு தப்பா பேசும்” என்க, அவளில் மொத்தம் தன்னை மறந்தான் விஷ்வா.
தன் காலிலிருந்து தன்னவளை இறங்கவிடாது இடையோடு கையிட்டு தன்னுள் இறுக்கிக்கொண்டான்.
அவன், அவள், ரோஜா…
விஷ்வாவுக்கும் ரோஜாவுக்கும் நடுவில் விஷ்வாவின் ம்ருதி.
இருவருக்குமிடையேயான ஆழ்ந்த அணைப்பு. அவள் தான் கொஞ்சம் கொஞ்சமாக தன்வசம் இழந்து கொண்டிருந்தாள்.
“ஒரு கிஸ் மட்டும் பத்தாதே ம்ருதி.”
காதில் ஒலித்த விஷ்வாவின் ஹஸ்கி குரல் அவளின் அடி வயிற்றில் சில்லிப்பை உண்டாக்கியது.
“வேறென்ன வேணும்?” விழி உயர்த்தி அவன் விழி கலந்து வினவினாள்.
“இந்த ரோஜா மொத்தம் வேணுமே!”
அவனது குரல் இன்னுமின்னும் அவளை கிறங்க வைத்தது.
சம்ரு அவனில் நின்றபடி எம்பியவளாக அவனது கண்களில் முத்தம் வைத்து தன் சம்மதம் வழங்க,
அவளோடு சேர்ந்து நடந்தவனாக, சம்ரு அறைக்குள் வரும்போது, அவன் உள்ளிருந்து வந்த அறைக்குள் சென்றான்.
சம்ரு எதையும் உணரும் நிலையில் இல்லை.
விஷ்வாவின் கைகளில் அழுத்தம் கூடிக் கொண்டேப்போக, சம்ரு அவனோடு ஒன்றிப்போனாள்.
அறைக்குள் வந்தவன் காலினால் கதவினை சாற்றியபடியே, கையிலிருந்த ரோஜாவை சுவற்றிலிருந்த ஸ்டோன் ஸ்டேண்டில் வைத்தவனாக அவ்வறையின் இரவு விளக்கை ஒளிரச் செய்தான்.
மங்கிய வெளிச்சத்தில் வரிவடிவமாய் தன் கரங்களில் வீற்றிருப்பவளின் விழி நோக்கியவன்,
“உனக்கான எந்த விளக்கமும்…” என்று ஆரம்பிக்கும் முன் அவன் அதரத்தை தன்னிதழோடு பொருத்தி அவனது வார்த்தையை விழுங்கினாள்.
இருவருக்குமே முதல் இதழ் முத்தம். சற்று தடுமாறித்தான் போனார்கள். தொடங்கியவளே முத்தத்திற்கு முற்றுமளிக்க…
அவனது உதடுகள் இதழ் தீண்டிட துவங்கின.
கட்டிலின்றி தரையோடு போடப்பட்டிருந்த மெத்தை விரிப்பில் தன்னவளை மலர் கொத்தென மென்மையிலும் மென்மையாய் கிடத்தியவன் அவளின் பாதத்தில் முத்தம் வைத்து தன் ஆலிங்கினத்தை ஆரம்பித்தான்.
தேன் சுரந்திடும் பூவாய் அவளிருக்க… பூவுக்குள் தேன் உறுஞ்சிடும் வண்டாய் அவனாகினான்.
பூவுக்கும் நோகாது தெரியாது தேனெடுக்கும் வித்தையில் சற்று தடுமாறித்தான் போனான். அவன் தடுமாறும் இடங்களை கண்டுகொண்டவளுக்கு, தன்னவனின் உண்மை நிலை தெரிந்திட… கண்ணில் கசிந்திட்ட நீருடன் தாவி அணைத்துக்கொண்டாள்.
அணைப்பின் உச்சம் தீவிரம் காட்டிட, முதல் முறை என்பதால் தெரிந்ததை கற்பித்து கற்று முன்னேறினர்.
பருகும் ஒவ்வொரு சொட்டு தேனும், அவர்களின் காதலுக்கு அர்த்தம் சேர்பித்தன.
அவன் மீட்டிடும் ஸ்வரங்கள் யாவும் பூவிதழ் வருடும் மென்மை. அவனிடம் அவள் உணரும் இதம் யாவும் நெகிழ்விலும் மிருதுவாய்.
பூவுக்கு காவல் இருப்பவனே அக்கணம் களவுகரானாய் தன்னுள் கொள்ளையிட்டு மண்டியிட்டான்.
எப்போதும் தன்னவனின் விழி அசைவுக்கு பிரதிபலிப்பவள், இன்று அவனது விரல் தீண்டலுக்கும் இதழ் வருடலுக்கும் தன்னை ஒப்புவித்துக் கொண்டிருந்தாள்.
தன்னவளிடம் தான் உணரும் யாவற்றையும் தன்னிடம் அவளையும் உணர வைத்தான்.
அவளை தனக்குள் ஆட்படுத்தி, தன்னை அவளிடம் ஒப்புவித்து மெல்ல மெல்ல முன்னேறினான்.
காதலில் பெறப்படுவதை இரு மடங்காய் கொடுப்பதில் தானே சுகம். இங்கு கொடுத்து களைத்தவர்கள், பல மடங்காய் பெற்று புத்துணர்வு அடைந்தனர்.
நெற்றி முத்தத்தில் தன் ஆலாபனை முடிவுக்கு கொண்டு வந்தவன், அவளிடமே மீண்டும் மீண்டும் தஞ்சம் அடைந்தான். அவளும் புது ராகமாய் தனக்குள் தன்னவனை சுக கீதமாய் மீட்டிக்கொண்டே இருந்தாள்.
தேனின் சுவை மட்டுமல்ல இரு மனங்கள் பாடும் கீர்த்தனையும் அலாதியாய் இருக்கும்போது சுவை ஒரு முறையோடு நின்றுபோகுமா என்ன?
பத்து வருட காத்திருப்பின் தேடலில் இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்திடாது காதலில் கரை காண சாகரத்தில் மூழ்கிக்கொண்டிருந்தனர்.
காதலில் இருவரும் அன்று தான் ஒருவரில் மற்றொருவர் இரண்டற கலந்து உயிர் கொடுத்து சுவாசம் பருகி மோட்சம் பெற்றனர்.
“யூ ஆர் மை ரோஸ் ம்ருதி. ரோஸ் மீன்ஸ் யூனிவர்ஸ்… எவ்ரித்திங்” என்று விலகி படுத்தவனை நெருங்கி நெஞ்சத்தில் தலை வைத்து மஞ்சம் கொண்டாள்.
“ஓகேவாடா?”
“ம்” என்றவள் அவனது மார்பிலேயே கன்னத்தை தேய்த்தவளாக, அவன் மீது கையிட்டு அழுத்தமாக அணைத்தவளாக உறங்கிட,
தன்மீது காதல் ஒன்றை மட்டுமே சுமந்து இந்நொடி வரை தனக்காக எல்லாம் செய்யும் அவனின் ம்ருதியின் மீது காதல் கரைபுரள… தன்மீது துயில் கொள்ளும் மனையாளை புரட்டி தலையணையில் கிடத்தியவன், அவளின் கழுத்து எம்புகளில் கடித்து வைக்க… தூக்கத்தில் அளறியபடி எழுந்து அமர்ந்தவள் அவனது டி-ஷர்ட் அணிந்திருக்க, போர்வையை தன்மீது சுற்றியவளாக விஷ்வாவை முறைத்து வைத்தாள்.
“நீதான ம்ருதி உன்கிட்ட எதையும் கண்ட்ரோல் பண்ண வேணாம் சொன்ன… உன்னை பார்த்துட்டே இருந்தனா, ஆசை அதிகமாச்சா… கடிக்கணும் தோணுச்சு” என்றான் இதழில் உறைந்து நின்ற புன்னகையோடு, கண்களில் குறும்போடு.
“அதுக்கு… இப்படியா” என்றவள் வலித்த இடத்தை தேய்த்திட…
“அச்சச்சோ…” என்று கழுத்தை சுற்றி ஆராய்ந்தாள்.
அவளின் பதட்டத்தில் பதற்றம் கொண்டவன்,
“என்னடா… ரொம்ப வலிக்குதா?” என அவ்விடத்தை விரலால் வருடியவனாக வினவ,
“விஷ்… விஷ்வா, தா…த்…தாலியை காணோம்” என்றவள், படுக்கையிலிருந்து எழுந்து நின்றாள்.
என்னவோ என்று பதட்டம் அடைந்தவன், அவள் தாலியை காணவில்லை என்றதும் ஆசுவாசமாக எழுந்தான்.
கழுட்டியவனுக்கு தாலி காணமல் போகவில்லை என்பது தெரிந்திருந்ததே!
சம்ருவின் முகத்தில் கலவரம், இரவு விளக்கின் ஒளியிலேயே முடிந்தளவு வேகமாக தேடினாள்…
“எதுக்கு இவ்வளவு டென்ஷன் ம்ருதி?” என்றவனிடம்,
“உங்களை இன்னொரு முறை இழக்க நான் தயாரா இல்லை விஷ்வா. என்னவோ நீ…” என்றவள், கண்களை மறைத்துவிட்ட நீருடன் அவனை தாவி கட்டிக்கொண்டவளாக, “உன்னை விட முடியாதுடா” என்றாள் தழுதழுபப்பாக.
சம்ருவின் உள்ளம் புரிந்தது அவனுக்கு. தன்விடயத்தில் எத்தனை சென்சிட்டிவ் என்று அவனுக்குத் தெரியும். அதன் ஆழம் இந்நொடி அவளின் பேச்சில் தான் முழுதாய் விளங்கியது.
“நான் உன் முன்னாடி தானே இருக்கேன்” என்றவன் அவளின் முகம் நிமிர்த்தி, கலைந்திருந்த முடிக்கற்றையை காதோரம் ஒதுக்கியவனாக…
“டிஸ்டர்ப்பாஃ இருந்துச்சு ம்ருதி” என்று அத்தருணத்தை அவன் கூறிட, “ச்சூ… விஷ்வா” என்று தன் முகத்தை அவன் மார்பிலே புதைத்து சிணுங்கினாள்.
அதில் அவன் அழகாய் புன்னகைத்து அவளை அணைத்து உச்சியில் முத்தம் வைத்து விடுத்தான்.
“அப்போ தான் கழட்டி போட்டேன். இங்கு தான் பெட்டில் கிடக்கும்” என்றவன் சம்ருவை தள்ளி நிறுத்தி… மின் விளக்கு ஸ்விட்சினை ஆன் செய்தான்.
மங்கிய வெளிச்சத்தில் தெரியாத யாவும், பளிச்சென்ற ஒளியில் அவள் கண்களுக்கு ஆச்சரியத்தை விருந்தளித்தன.
“இதோ இருக்கே!” என்று படுக்கைக்கு சற்று தள்ளி தரையில் கிடந்த தாலி கொடியை கையிலெடுத்தவன், மனைவியின் கழுத்தில் போட்டும் விட்டான்.
“இப்போ ஓகேவா?” எனக் கேட்டவன், “இனி அந்த நேரத்தில் கூட கழட்டமாட்டேன்” என்று அவளை வெட்கப்பட வைக்க எண்ணி கூறிட அவளோ விழிகள் மின்ன அறையை பார்வையால் வட்டமிட்டுக் கொண்டிருந்தாள்.
“விஷ்வா…” அவளின் குரலில் அப்படியொரு பிரம்மிப்பு.
எதற்கான பாவனை என்று அறிந்தவன் படுக்கையில் அமர்ந்து சுவற்றில் சாய்ந்து அவளையே பார்த்தான்.
சம்ருவின் முகத்தில் வந்து போகும் பல ஜாலங்களை தன்னகத்தே பொக்கிடமாக சேமித்தான்.
பள்ளி வயது முதல், கல்லூரியில் இறுதியாக பிள்ளையார் முன்பு சம்ருவால் வைக்கப்பட்டு, விஷ்வாவால் எடுக்கப்பட்ட அனைத்து ரோஜாக்களும், ஹெர்பேரியமாக பதப்படுத்தப்பட்டு புகைப்படத்தின் சட்டத்தில் வடிவமைக்கப்பட்டவையாகவும், எபோக்சி ரெசினில் மூழ்கடித்து பல வடிவங்களில் அலங்கார சட்டங்களாகவும், மின் விளக்குகளாகவும், வாசனை மெழுகுவர்த்திகளாகவும் அறை முழுவதும் சுவற்றில் அழகாய் ஆங்காங்கே மாட்டப்பட்டும், கண்ணாடி குடுவைகளில் ஸீலிங்கில் தொங்கிக்கொண்டும் இருந்தன. சுவற்றோடு இணைந்த ஸ்டோன் வடிவங்களில் சிரித்துக்கொண்டிருந்தன. அறை முழுவதும் அவள் அவனுக்காக தூது அனுப்பிடும் ரோஜாக்களின் காய்ந்த மலர் வாசனை நறுமணமாய்.
சுவற்றில் பதிந்திருக்கும் அலங்கார கல்லில், சம்ருவின் இரண்டு புத்தகங்கள். ஒன்று பள்ளி நாட்களிலும், மற்றொன்று கல்லூரி நாட்களிலும் அவள் கிறுக்கத்தனமாக வி.ஆர் எழுத்தை வட்டமிட்டு வைத்தவை. அவனிடம் பொக்கிடமாக.
அவளிடமிருந்து அவளுக்கே தெரியாது எடுத்த ரோஜா வடிவ சாவி கொத்து. சிறு ஆணியில் ஆடிக்கொண்டிருந்தது.
இரண்டு நாட்களுக்கு முன்பு கல்லூரி பார்க்கிங்கில் கொடுத்த பூங்கொத்தும், அவ்வறைக்கு வரும் முன் அவளளித்த ஊதா வர்ண ரோஜா மலர்களும் அவற்றுடன் சேர்த்து அவள் மனதெங்கும் பூமழை தூவியது.
“விஷ்வா” என்று அவன்மீதே தொப்பென்று விழுந்தவள், அவனது முகம் பற்றி இதழால் போர் தொடுத்தாள். கணக்கிலடங்கா முத்தம் பெற்று அவன் தான் களைத்தான்.
அவள் இன்னுமின்னும் அவன் வாசம் நுகர்ந்து தன் வாசத்தை அவனுக்கு கடத்திக்கொண்டிருந்தாள்.
‘நீயின்றிப்போன என் நாட்கள் யாவும் உன் வாசத்தோடு தான் நகர்ந்து கொண்டிருக்கின்றன.’
விஷ்வா சொல்லவில்லை. சம்ருதி அவனது காதலால் உயிரில் உணர்ந்தது.
°கோடி வாசங்கள் எனை தீண்டி போனாலும்…
உயிரை தீண்டாதோ உன் வாசம்?
பூமி தேய்ந்தாலும் தீராத இரயில் பாதை…
காதல் ஒன்றே அன்பே!°