இரவு வெகு தாமதமாகத்தான் விஷ்வா வீட்டிற்கு வந்திருந்தான். அனைவரும் உறங்கியிருந்தனர்.
சுஜா மட்டும் கூடத்தில் இருட்டில் விஷ்வாவுக்காகக் காத்திருந்தார்.
அவரை கண்டுகொள்ளாது மாடியேறியவனை அஞ்சலி பேச வேண்டுமென்று அழைக்க… விஷ்வா கீழே தங்களை பார்த்தபடி நின்றிருந்த சுஜாவைதான் விழி தாழ்த்தி பார்த்தான்.
அவர் அவனுக்காக காத்திருக்கவில்லை. இன்றும் அஞ்சலியை தனித்து விட்டுவிடுவானோ… அவன் தவிர்த்தால் எப்படியும் அஞ்சலியை விஷ்வாவுடன் அறைக்குள் அனுப்பிட வேண்டுமென்பதற்காகவே உறங்க செல்லாது அமர்ந்திருந்தார்.
அவரின் எண்ணம் புரிந்ததாலே… இந்நேரத்தில் ஒரு வாக்குவாதம் வேண்டாமென்று அஞ்சலி பேச வேண்டுமென அழைத்ததும், லானிலிருந்த இருக்கையில் சென்று அமர்ந்தான்.
விஷ்வாவுக்கு முன் அஞ்சலி அமர்ந்ததும், அவர்களின் தனிப்பட்ட பேச்சென்று சுஜா எழுந்து சென்றுவிட்டார்.
விஷ்வா அஞ்சலியே பேசட்டுமென்று அமைதியாக இருக்க…
“நீ லவ் பண்ற பொண்ணு யார் விஷ்வா?” என சம்மந்தமேயில்லாது கேட்டிருந்தாள் அஞ்சலி.
விஷ்வா பதிலேதும் சொல்லாது மௌனித்திருக்க…
“எனக்கு அந்த பொண்ணை நினைக்கும்போது பொறாமையா இருக்கு” என்றவள், விஷ்வாவின் புருவ தூக்கலில்… “அந்த பொண்ணு மேலிருந்த லவ்வால் தானே… அத்தை அப்படி செய்தும் என் கழுத்தில் நீ தாலி கட்டல?” எனக் கேட்டாள்.
விஷ்வா எதுவும் பேசுவதாக இல்லை போலும். அவளே மீண்டும் பேசினாள்.
“ராகுல் ஏன் உன்னை மாதிரி இல்லை விஷ்வா?” என கேட்டவள், “அவன் என்னை உண்மையாதான் லவ் பண்ணான்” என்று ராகுல் தானாக மண்டபம் விட்டு அதுவும் தான் வேண்டாமென்று சென்றிருக்கமாட்டான் என்று ஏதோவொரு நம்பிக்கையில் கூறினாலும்… ராகுலின் மீது அத்தனை கோபம் இருந்தது என்னவோ உண்மை.
விஷ்வா எழுந்துகொள்ள…
“இன்னும் நான் பேசி முடிக்கல விஷ்வா” என்றாள்.
மீண்டும் அமர்ந்தான்.
“நான் என்ன பண்ணேன் விஷ்வா? ஏன் என்கிட்ட பேசமாட்டேங்கிற?”
“எப்போ எல்லார்கிட்டவும் உண்மையை சொல்லப்போற?”
“என்ன உண்மை விஷ்வா?” என்றவள் புரிந்ததும் “ராகுல் பற்றி தெரியுற வரை இது இப்படியே இருக்கட்டுமே! இப்போ தெரிந்தால் மீண்டும் நம்மை சேர்க்கத்தான் பார்ப்பார்கள்” என்றதோடு, “இப்போ எல்லார் பார்வையிலும் நமக்கு கல்யாணம் ஆகிடுச்சு. கொஞ்சநாள் அது அப்படியே இருக்கட்டுமே!” என்றாள்.
“நிச்சயம் இது செட்டாகாது. உண்மையை சொல்லிடுறது தான் எனக்கு நல்லது” என்றவன், “நாளைக்கே சொல்லிடுறேன்” என்றான்.
“ப்ளீஸ் விஷ்வா” என்று கெஞ்சலோடு, “என் அம்மா அப்பா பற்றி உனக்கே தெரியுமே! வேறெதுவும் செய்திடுவார்கள். ராகுல் பற்றி தெரியும் வரை சமாளிப்போமே?” எனக் கேட்டாள்.
அஞ்சலி அவளின் பெற்றோர் போலில்லை என்ற எண்ணம் விஷ்வாவுக்கு. நரிக்கு பிறந்தது நரியாகத்தான் இருக்குமென்று எண்ணாது போனான்.
சுஜா எப்படி தன்னை கார்னர் செய்தார் என்பதை நினைத்து பார்த்த விஷ்வா, ‘தாலி கட்டவில்லை என்கிற உண்மை தெரிந்தால்… வேறு எதாவது செய்து தன்னை கார்னர் செய்வார். இதேபோல் இனியொருமுறை அனைவரின் பார்வையையும் மறைக்க முடியுமா என்று தெரியாது. ஊருக்கே இப்போது அஞ்சலியின் கணவன் யாரென்றால் தான் தான். இனி உண்மையை கூறினாலும் அவர்களின் பார்வை மாறப்போவதில்லை. அஞ்சலியை ஊர் தப்பாக பேசலாமென்று… இப்படி பலவற்றை கூறி தன்னை மீண்டும் கட்டிபோட்டிடுவார்’ என்று எல்லா பக்கமும் அலசி ஆராய்ந்த விஷ்வாவுக்கு கொஞ்ச நாட்கள் அமைதியாக இருப்பதுதான் சரியென்று தோன்றியது.
அத்தோடு அனைவரின் பார்வையிலும் இப்போது அஞ்சலியின் கணவனாக நடந்துகொள்ள வேண்டிய சூழல் இருப்பதால்… அஞ்சலியும் தன்மீது நம்பிக்கை கொண்டிருப்பதால், அஞ்சலியை தன் கடமையென எண்ணி அவளுக்கு உதவி செய்ய ஒப்புக்கொண்டான்.
கடமையாக மட்டுமே நடந்துகொண்டான். தன்னால் அஞ்சலியின் வாழ்வு வீணாகிட வேண்டாமென நினைத்தான்.
அப்போதும் அஞ்சலியை தன்னுடைய அறைக்குள் எல்லாம் அவன் அனுமதிக்கவில்லை. அனைவரும் பார்க்க அஞ்சலியிருந்த அறைக்குள் செல்பவன், வருபவன் அவ்வறையோடு இணைந்திருக்கும் பால்கனி வழியாக தனதறைக்கு சென்றிடுவான்.
அன்று மட்டுமே விஷ்வா அஞ்சலியுடன் பேசியது. அதன்பின் அவளது முகம் கூட பார்திருக்கமாட்டான்.
மற்றவர்கள் பார்வைக்கு எப்படியோ? தன்னுடைய மனதால் தனது காதலுக்கும் சம்ருவுக்கும் நேர்மையாக இருக்க வேண்டுமென நினைத்தான். இருந்தான்.
விஷ்வா சம்ருவை காதலிக்கும் காதலை வைத்து அஞ்சலிக்கு அவன்மீது ஒரு பிடித்தம் தானாக வந்தது.
விஷ்வா காதலிக்கும் பெண் நானாக இருக்கக்கூடாதா என்று எண்ணுமளவிற்கு அவளின் மனது விஷ்வாவின் பக்கம் சாய்ந்தது.
அந்தளவிற்கு விஷ்வா மனதில் தன்னுடைய காதலை போற்றினான்.
மெல்ல மெல்ல விஷ்வாவை நெருங்க முயற்சித்தாள் அஞ்சலி.
அறைக்குள் தானே விடமாட்டேன்கிறான் என வெளியில் அனைவரது முன்பும் ஒரு மனைவியாக செய்ய வேண்டியவற்றை செய்தாள்.
நடக்கும் நாடகத்தில் விஷ்வாவால் பொதுவில் அவளை தவிர்க்க முடியவில்லை.
தனியாக அழைத்து விஷ்வா பேசிட,
“அத்தை புருஷனுக்காக எதுவும் செய்யமாட்டியா… சாப்பாடு கூட அவனுக்கு உன்னால் பரிமாற முடியாதான்னு திட்டுறாங்க விஷ்வா. சும்மா இதனை செய்வதில் என்னயிருக்கு” என்று சாதரணமாக அவள் கேட்டிட… விஷ்வாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
வீட்டில் யாருடனும் விஷ்வா பேசுவது கிடையாது. சுஜா தவிர மற்ற நால்வரிடமும் அவர்களாகக் கேட்கும் கேள்விக்கு ஒற்றையாய் பதில் அளித்து நகர்ந்திடுவான். தன் முழு கவனத்தையும் சுடரில் மட்டுமே வைத்தான்.
மாதங்கள் பல செல்ல…
அஞ்சலிக்கே விஷ்வாவை அவனது காதலிலிருந்து வெளிக்கொண்டு வருவது முடியாதென்று தோன்றிட… ராகுலுக்கு என்னவானதென்று அறிய முற்பட்டாள்.
சம்ரு ஒரளவுக்கு மீண்டு தெளிந்திருக்க… ராஜா விஷ்வாவை பார்ப்பதற்கு வந்திருந்தான்.
விஷ்வாவுக்கு எப்படியும் சம்ருவுக்கு நடந்த திருமணம் தெரிந்திருக்குமென்று தெரியும். இப்போது இந்நிலையில் பேசுவது சரியிருக்காது என்பதாலேயே வருணிடம் கூட பேசாதிருக்கிறான்.
ராஜாவை பார்த்து விஷ்வாவின் முகத்தில் கொஞ்சம் கூட சிரிப்பென்பதில்லை.
ராஜாவும் விஷ்வாவை பார்க்க வந்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை.
அஞ்சலி விஷ்வாவுக்காக செய்யும் அனைத்தும் பார்த்துக்கொண்டிருந்த ராஜாவுக்கு, எப்படி விஷ்வாவால் இவ்வளவு எளிதாக சம்ருவை மறக்க முடிந்ததென்று கோபமாக வந்தது.
அதனை சுசியிடம் கேட்கவும் செய்தான்.
சுசியும் ராஜாவும் தோட்டத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க… அவர்களை அறியாது, நடக்கலாமென்று அங்கு வந்த விஷ்வா அவர்களது பேச்சினை கேட்க நேரிட்டது.
“விஷ்வா அஞ்சலியை ஏற்றுக்கொள்ளமாட்டான்னு தான் நானும் நினைத்தேன். ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தான். இப்போ அஞ்சலியின் நெருக்கமெல்லாம், அவர்களுக்குள் சரியாகிவிட்டதைப்போல் தான் தெரிகிறது” என்ற சுசியின் பதிலில் ராஜா அருகிலிருந்த மரத்தின் தண்டில் தன் கையை குற்றினான்.
“டேய்… என்னடா?” சுசி பதறினாள்.
“இவனால் அங்கொருத்தி பித்து பிடிக்காத குறையா இருக்காள். இவன் மட்டும் எப்படி?” என்ற ராஜாவின் மனம் சுசிக்கு புரிந்தபோதும், அவளால் தன்னுடைய நண்பனை விட்டுக்கொடுக்க முடியவில்லை.
“காதலிங்கிறதை விட, மனைவிங்கிற ஸ்தானம் ரொம்ப பெருசு ராஜா. காதலிக்குக்கூட உண்மையில்லாமல் இருக்கலாம். ஆனால் மனைவிக்கு?” என்ற சுசி, “இப்போ விஷ்வா அஞ்சலிக்கு கணவன். உன்னால் சம்ருவை இரண்டாவதாக மணம் முடித்து வைக்க முடியுமா?” என்று வினவினாள்.
ராஜாவுக்கு அக்கேள்வியே ஒப்பவில்லை.
“என்ன சுசி இப்படி கேட்கிற? அதெப்படி முடியும்?”
“முடியாதுல… அப்போ தனக்கு அமைந்த வாழ்க்கையை விஷ்வா வாழ்வதில் தப்பில்லையே?” என்று சுசி கேட்கவும் தான் ராஜாவால் விஷ்வாவின் சூழலை புரிந்துகொள்ள முடிந்தது.
“என்னயிருந்தாலும் மண்டப வாசலில் சம்ரு அழுத அழுகையை என்னால் எப்பவும் மறந்திட முடியாது சுசி” என்று ராஜா சொல்லிய பின்னர் தான், சுசிக்குமே அன்று சம்ருவை விஷ்வாவுடன் பேச வைத்திட வர சொல்லியதே நினைவு வந்தது.
“எவ்வளவு பெரிய முட்டாள்தனம் பண்ணிட்டேன்.” சுசி நெற்றியிலேயே தட்டிக்கொண்டாள்.
“என்ன சொல்ற சுசி?”
“அன்னைக்கு சம்ரு அங்கு வர காரணமே நான் தான்” என்று எதற்கென்று விளக்கமும் கொடுத்து, “அவளை விஷ்வா இன்னொரு பொண்ணுக்கு தாலி கட்டுறதை பார்க்க வச்சு எத்தனை பெரிய கஷ்டத்தை கொடுத்திட்டேன்” என்று வருந்தினாள்.
அதன் பின்னர் தான் ராஜா விஷ்வாவுடன் மீண்டும் சகஜமாக பேச ஆரம்பித்திருந்தான்.
சம்ரு எப்படியெல்லாம் துடித்திருப்பாளென்று நினைத்த விஷ்வா, பல மாதங்களுக்கு பின்னர் அன்று தான் வருணை தொடர்பு கொண்டான். வருண் எடுத்து விஷ்வாவை பேசவேவிடாது தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி கவிழ்த்து வைத்துவிட்டான்.
அதன் பின்னர் தான் சரண் மூலமாக சம்ருவை பற்றி அறிய நினைத்து அவனை தொடர்புகொண்டு ஓரளவுக்கு விளக்கம் கொடுத்து, சம்ருவை பற்றி தெரிந்துகொண்டான்.
சரண் மூலமாகத்தான் சம்ரு இதிலிருந்து வெளிவருவதற்காக ஆசிரியர் பணிக்கு செல்லவிருப்பதை கேள்விப்பட்டு, அவளை சரண் மூலம் வால்பாறை அனுப்பி வைத்தது விஷ்வா தான்.
ஆனால் அங்கு தான் செல்ல வேண்டுமென்று அவளே முடிவு செய்திருப்பாளென்று அவன் அறிந்திருக்கவில்லை. அப்பள்ளியின் முதல்வர் விஷ்வாவுக்கு அழைத்து சொல்லும்வரை.
வருண் விஷ்வாவிடம் கோபமாக பேசிவிட்டு அதிகம் வருந்தினான். அந்த வருத்தம் நாளுக்கு நாள் கூடிட தானே விஷ்வாவை தொடர்புகொள்ள விஷ்வா ஏற்கவேயில்லை.
இங்கு தான் அஞ்சலி வேறொன்றை செய்து மொத்தமாக விஷ்வாவின் காதலுக்கு முடிவு கட்டியிருந்தாளே!
அஞ்சலியும் விஷ்வா அவனுடைய காதலோடு வாழ்ந்தால் வாழ்ந்து கொள்ளட்டும் என்ற பக்குவத்திற்கு வந்திருந்த தருணம்.
அஞ்சலியை காண வந்த இந்திரா…
“கல்யாணமாகி ஒன்றரை வருடமாகிப்போச்சு. இன்னும் அவனை உன் பின்னால் அலையை வைக்க முடியல” என்றவர், “நடக்க வேண்டியது நடந்து… குழந்தைன்னு ஒண்ணு வந்திட்டால் நீ வேணான்னு சொன்னாலும் அவன் உன்னை விடமாட்டான். முதலில் குழந்தைக்கு ஏற்பாடு பண்ணு” என்று ஓதிவிட்டு சென்றார்.
மீண்டும் அஞ்சலிக்கு விஷ்வாவின் காதலை பெற ஒரு வாய்ப்பிருப்பதாகத் தோன்றிட… இந்திரா சொல்லியதை முயற்சித்துப்பார்க்க நினைத்தாள்.
விஷ்வாவின் நிழலைக்கூட தீண்டிட முடியாதவளால், அவனது குழந்தைக்கு அம்மாவாகிட முடியுமா என்ன?
எவ்வளவோ முயற்சித்தும் விஷ்வாவின் பார்வையை கூட தன்மீது அஞ்சலியால் திருப்பிட முடியவில்லை.
விஷ்வாவை செண்டிமெண்ட்டால் தான் வளைக்க முடியுமென நினைத்தவள்,
இந்திராவும், சுஜாவும் தன்னை பெண்ணே இல்லை, ஒரு குழந்தைக்கு அம்மாவாக முடியாது என்பதைப்போல் பேசுவதாக விஷ்வாவிடம் சொல்லி அழ, சுஜா ஒருபோதும் அப்படியெல்லாம் பேச மாட்டாரென்று தெரிந்தாலும் இந்திரா ஆட்டி வைத்திருப்பார் என நினைத்து அஞ்சலியின் பேச்சை நம்பினான்.
“அதுக்கு நானென்ன பண்ண?” என்று கேட்டான்.
“எனக்கு குழந்தை வேணும். நான் அம்மாவாகனும்” என்றாள்.
“உனக்கு தான் கல்யாணமே ஆகலையே! உண்மையை சொல்லிடு” என்றான்.
“நீதான் என் புருஷன்னு ஊரே நம்புதே விஷ்வா!” அலட்டிக்கொள்ளாது கூறினாள்.
அவளின் புதிய பேச்சில் தோன்றிய அதிர்வை மறைத்த விஷ்வா,
“விளையாடாதே அஞ்சலி” என்றான்.
“நான் விளையாடுல விஷ்வா. எனக்கு உன்னை பிடிக்க ஆரம்பிச்சிடுச்சு. ராகுல் பற்றி எந்த தகவலும் இல்லை. நீயும் லவ் பண்ற உன் காதலிக்கு துரோகம் பண்ணிட்டதாக நினைத்து வருந்திக்கிட்டிருக்க. எப்படியும் உனக்கு கல்யாணமாகிடுச்சுன்னு அந்தபொண்ணு உன்னை ஏற்கப்போவதில்லை. அதற்கு நாமே கணவன் மனைவியாக வாழ்ந்திடலாமே!” என்றாள்.
விஷ்வா அவளின் எண்ணத்திற்கு பதில் கொடுக்காது,
“நானே உண்மையை சொல்லிடுறேன்” என்று நகர,
“கிட்டத்தட்ட ரெண்டு வருசம் ஆகிருச்சு விஷ்வா. இட்ஸ் டூ லேட். என்கூட வாழ்ந்துட்டு குழந்தையில்லைன்னு, எனக்கு தாலியே கட்டலன்னு பொய் சொல்றதா சொல்லுவேன்” என்று கிட்டத்தட்ட மிரட்டினாள்.
வீட்டில் மகிழ்வே இல்லையென அன்று காலையில் தான் அனைவரும் குலதெய்வ கோவிலுக்கு கிளம்பி சென்றிருந்தனர்.
விஷ்வா கல்லூரியில் வேலையிருப்பதாக செல்ல மறுத்திட, இன்று தனியாக விஷ்வாவுடன் இருக்க சந்தர்ப்பத்தை உண்டாக்கிட வேண்டுமென அஞ்சலியும் செல்லவில்லை.
அந்த நினைவில்லாது, இன்று எப்படியும் உண்மையை சொல்லிட வேண்டும்… இல்லையென்றால் அஞ்சலி என்னவும் செய்திடுவாளென்று விஷ்வா கீழே வர, வீட்டின் வெறுமை அவனுக்கு நிஜம் உரைத்திட… நிலையில்லா மனதுடன் காரினை எடுத்துக்கொண்டு கல்லூரிக்கு புறப்பட்டவன் விபத்தில் சிக்கியிருந்தான்.
அஞ்சலி மட்டுமே வீட்டிலிருக்க விடயம் கேள்விப்பட்டு, விபத்தில் சிக்கியதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஷ்வாவை தன்னுடைய நண்பனின் மருத்துவமனைக்கு மாற்றியிருந்தாள்.
விஷ்வா உண்மையை சொல்லப்போகிறேன் என்றதுமே, அவன் தனக்கு ஒத்துவரமாட்டானென்று அறிந்துகொண்ட அஞ்சலி விஷ்வாவுக்கு நேர்ந்த விபத்தை தனக்கு சாதகமாக்கிக்கொள்ள நினைத்து திட்டம் வகுத்தாள்.
விஷ்வாவுக்கு பலமான அடியெல்லாம் இல்லை. விபத்தின் அதிர்வு அதிகம் என்பதால் மயக்கம் தெளிய இரு நாட்களாகியது. அந்த நாளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டாள். அஞ்சலி.