அடுத்த மாதமே அஞ்சலி கருவுற்றிருப்பதாக வீட்டில் அனைவரிடமும் சொல்ல… விஷ்வாவுக்கு பேரதிர்ச்சி.
‘இதெப்படி சாத்தியம்?’
அஞ்சலியிடம் “ராகுல் வந்துவிட்டானா?” என்று தான் விஷ்வா கேட்டான். ஒருபோதும் அஞ்சலியின் வயிற்றில் வளரும் குழந்தை தன்னுடையதாக இருக்குமென்று அவன் எண்ணவில்லை.
விஷ்வாவின் கேள்வியில் சத்தமிட்டு சிரித்த அஞ்சலி…
“இது உன் குழந்தை தான் விஷ்வா. உன்னோட ஜீன் தான். நீதான் இதுக்கு அப்பா” என்றவள் அவனது உடலிலிருந்து அவனுக்கே தெரியாது விபத்தின் போது மயக்கநிலையில் எடுக்கப்பட்ட உயிரணுவை செயற்கை முறையில் அஞ்சலியின் கருமுட்டையில் செலுத்தி, அதன் மூலம் குழந்தை உண்டாகியிருப்பதற்கான மருத்துவ அறிக்கைகள் அடங்கிய கோப்பினை அவன் முன் நீட்டினாள்.
விஷ்வாவால் நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
பித்து பிடித்தவன் போல் அமர்ந்திருக்க…
“இப்போ உண்மையை சொல்லு விஷ்வா. எந்த உண்மையை எல்லாருக்கும் சொல்லணும் நினைச்சிட்டு இருக்கியோ அந்த உண்மையை சொல்லு” என்று எக்களித்து சிரித்தவள், “உன் குழந்தை அனாதையா வளரணுமா இல்லை உன் குடும்ப சூழலில் வளரணுமா? நீயே முடிவு பண்ணிக்கோ!” என்றாள்.
என்னயிருந்தாலும் அவனது உயிரல்லவா. அதைவிட ஒரு உயிர் உருவாக அவனுக்கே தெரியாது அவன் காரணமாகியிருக்கிறான். தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்களே அப்படியொரு மீள முடியா சுழலில் சிக்கிக்கொண்டான் விஷ்வா.
அவனது சம்மந்தமே இல்லாது குழந்தை உருவாகியிருந்தாலும் அது அவனுடைய ரத்தம். எப்படி அவனால் விட்டுக்கொடுக்க முடியும்.
இயற்கையின் தாம்பத்யம் என்பதில் அரிச்சுவடியைக்கூட அறிந்திடாத விஷ்வா ஒரு குழந்தைக்கு தந்தையாகியிருந்தான்.
அஞ்சலி சுயநலத்தின் உச்சம் என்பதை தெரிந்துகொண்டவனுக்கு வேதனையே மிஞ்சியது.
இனி, தான் தாலி கட்டவில்லையென்றாலும் குழந்தைக்கு தகப்பன் நீதானே என்று கட்டம் கட்டுவார்களே! அஞ்சலிக்கு உதவ நினைத்த தன் மடமையை எண்ணி எண்ணி நொந்தான்.
‘இப்போது தாலி கட்டவில்லை என்று சொன்னாலும், உன் குழந்தை அவள் வயிற்றில் வளருதே!’ என்பார்களே. உண்மையை சொன்னாலும் பலனில்லையே! இதற்குத்தானே அஞ்சலி காய் நகர்த்தினாள்.
“இனி என் சம்ரு எனக்கில்லையா?” இதுநாள்வரை கூட, ஏதோவொரு திடத்தில் இருந்தவன் இன்று மொத்தமாக வெடித்து கதறி துடித்தான்.
அதன் பின்னர் உயிருள்ள வெறும் கூடாக மட்டுமே வலம் வந்தான். ஒருநாள் மொத்த அழுத்தமும் தாங்க முடியாது வருணுக்கு அழைத்து எதுவும் சொல்ல முடியாது கதறியவன், அது முதல் வருணிடம் ஓரிரு வார்த்தைகள் பேசத் துவங்கியிருந்தான்.
அனு கூட, “அதான் வாழ ஆரம்பிச்சிட்டிங்களே, யாருக்கும் தெரியாமல் கோவிலுக்கு கூட்டிட்டு போய் தாலி கட்டிடுண்ணா” என்று சொல்ல விஷ்வாவிடம் விரக்தியாய் ஒரு புன்னகை.
அஞ்சலி கருவுற்று மூன்று மாதங்கள் சென்றிருந்தது.
ஒருநாள் மாலை வெளியில் சென்றிருந்த அஞ்சலி ஆவேசமாக வீட்டிற்கு வந்தாள்.
என்னவென்று கேட்க…
“ராகுல் வந்துட்டான். நான் அவனோடு போகப்போகிறேன். குழந்தையை கலைக்கப்போகிறேன்” என்று சொல்ல சுஜா, அவளின் பெற்றோரை வரவழைத்துவிட்டார்.
இந்திரா கூட மகள் செய்ய நினைப்பது பாவமென்று நினைத்து அறிவுரை கூற, யார் சொல்வதையும் அவள் காதில் வாங்குவதாக இல்லை.
“எனக்கு இந்த குழந்தை வேணாம்… அவசரப்பட்டுட்டேன். எனக்கு என் காதல் முக்கியம். அதுக்கு தடையா யார் வந்தாலும் தூக்கிபோட நான் தயார்.” ஆவேசம் அவளிடம்.
“இது உன் குழந்தை அஞ்சலி.” சுஜா மன்றாடினார்.
“ஆசைப்பட்டு வரலையே!” இப்போது அவளிடம் எள்ளல்.
விஷ்வா அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்த்திருந்தான்.
புருஷோத்தமன் ஏதோ சொல்லவர,
“என் வாழ்க்கையே உங்களால் தான் வீணானது” என்று, திருமணத்தன்று ராகுலை கடத்தி இல்லாத சித்திரவதை செய்து அவனை ஊரைவிட்டே துரத்தியது என புருஷோத்தமனின் செயல்களை விளக்கியவள், “என் காதலை அழிச்சிங்கல, இப்போ உங்க மானத்தை நான் அழிக்கிறேன்” என்று கூறி ராகுலை வீட்டிற்கே வரவழைத்து அவனுடன் வீட்டைவிட்டு வெளியேற,
“எனக்கு டிவோர்ஸ் கொடுத்திட்டு போ” என்றான் விஷ்வா.
அஞ்சலி நடக்காத கல்யாணத்துக்கு விவாகரத்தா என்று நினைக்க…
இவ்வளவு செய்த அஞ்சலி இன்னும் என்ன வேண்டுமானாலும் செய்வாள். அது இனியொருமுறை தன் வாழ்வை பாதித்திடக் கூடாதென்று நினைத்த விஷ்வா, நடக்காத திருமணத்திற்கு விவாகரத்து கேட்டிருந்தான்.
இப்போது அஞ்சலி உண்மையை சொல்ல நினைக்க… அது அவளால் முடியாது போனது. தாலி கட்டவில்லை என்றால், குழந்தை எப்படி என்கிற கேள்வி தான் செய்த இழி செயலை வெளிக்கொண்டுவருமென்று நினைத்தவள் விஷ்வா கேட்ட விவாகரத்தை கொடுக்க ஒப்புக்கொண்டாள்.
மொத்த குடும்பத்திற்கும் பேரிடி.
இதில் புருஷோத்தமன் தான் விஷ்வாவை சுஜாதாவின் மூலம் சூழ்நிலை கைதியாக்கி அஞ்சலிக்கு மணமுடிக்க ராகுலை கடத்தி துரத்தியிருக்கிறார் என்ற நிஜம் அனைவரையும் விட சுஜாதவை அதிகம் பதம் பார்த்தது.
இப்போது அஞ்சலியும் தான் காதலித்தவனுடன் சென்றிட…
அண்ணனென்று தன் மகனுக்கு தானிழைத்த பெரும் அநீதி சுஜாவை வெகுவாக தாக்கியது.
வழக்கு நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்க…
அஞ்சலி குழந்தையை கலைக்க முயற்சிக்க… விஷ்வா அஞ்சலி பார்க்க செல்லும் மருத்துவர்களிடமெல்லாம் குழந்தையை கலைத்தால் அஞ்சலியின் உயிருக்கு ஆபத்தென்று சொல்ல வைத்து தன் உயரில் உதித்த மலரை காப்பாற்றியிருந்தான்.
உலகின் பார்வையில் ஒரு வருடத்திற்கு மேல் ஒன்றாக இருந்தும்… இருவரும் விருப்பப்பட்டே விலக்கு கேட்டும்… அஞ்சலி பேறு நிலையில் இருப்பதால் குழந்தையை மனதில் வைத்து வழக்கு இழுத்தடிகப்பட்டது.
ஒரு கட்டத்தில் அஞ்சலி குழந்தையே எனக்கு வேண்டாமென்று எழுதி கொடுக்க, ஆறு மாதங்களுக்கு பின்னர் விவாகரத்து கிடைத்தது.
பத்து நாட்களில் குழந்தை பிறக்க… ராகுலின் ஊர் சேலம் என்பதால் அப்போது அவனுடன் அங்கிருந்த அஞ்சலி விஷ்வாவுக்கு அழைத்து சொல்ல விருப்பமின்றி குழந்தையை அங்கிருக்கும் சுடர் காப்பகத்தில் சரோஜாவிடம் விஷ்வாவின் பிள்ளையென்று சொல்லியே விட்டுச் சென்றாள்.
ராஜாவின் மூலம் விஷ்வாவின் விவாகரத்தை அறிந்த சம்ரு, அஞ்சலி குழந்தையை வேண்டாமென்று சொல்லியதையும் அறிந்திருக்க… அவளை கண்காணித்துக் கொண்டுதானிருந்தாள்.
அன்னையின்று என் விஷ்வாவின் குழந்தை ஒருநாளும் இருந்திடக் கூடாதென்று, என்னென்னவோ தகிடு தத்தம் செய்து பிள்ளையை தத்தெடுத்துமிருந்தாள்.
மொத்த உண்மையையும் அஞ்சலி சொல்லவே கேட்டிட்ட அனைவருக்கும் மனதில் ஒருவித ஆசுவாசம் தான் ஏற்பட்டது.
அஞ்சலியின் செயல்களை பொறுக்க முடியவில்லை என்பதைவிட ஏற்கவே முடியவில்லை.
புருஷோத்தமனை பழிவாங்கிடத்தான் ராகுல் மீண்டும் வந்து அஞ்சலியை தன்னுடன் அழைத்து சென்றது. தன் மகளின் வாழ்வு வீணாகியதை எண்ணியெண்ணி புருஷோத்தமன் மருக வேண்டுமென்றுதான் சில மாதங்களுக்கு தன்னுடனே வைத்திருந்து அனுப்பிவிட்டான்.
இந்த உண்மை யாவும் சமுதாயத்தில் தன்னை தவறாக சித்தரிக்கும் என்று காலம் கடந்து உணர்ந்துகொண்ட அஞ்சலி இந்திராவின் மூலம் மீண்டும் விஷ்வாவின் வாழ்வில் நுழைய நினைத்து வர, இங்கு அனைத்தும் மாறியிருந்தது.
புருஷோத்தமன் எதுவும் பேசும் நிலையில் இல்லை. சம்ருவுக்கு தான் செய்தது தன் மகளின் வாழ்வை காவு வாங்கிவிட்டது என்பதை உணர்ந்து வருந்தினார். இனி வருந்தி பயனில்லையே!
அன்று குழந்தைக்காக செயற்கை முறை கருத்தரிப்பு செய்து கொண்டபோதும் சரி, எதைப்பற்றியும் கவலைக்கொள்ளாது கிடைக்காத காதலுக்காக தன்னை தேடிவரும் காதலை விட்டுவிட மனமின்றி ராகுலுடன் சென்ற போதும் சரி… தோன்றாத ஒன்று இன்று அனைவரின் முன்பும் குற்றவாளியாக நிற்கும்போது அஞ்சலிக்கு புரிந்தது.
‘எல்லாத்திலும் அவசரம். எதாவது ஒரு வாழ்வை காப்பாற்றிக்கொள்ள நினைத்தவளை அவசரம் மட்டுமே வழி நடத்தியது. அவசரத்தில் தொடங்கும் எதற்கும் முடிவு என்பது வெகு சீக்கிரமே!’ அனுபவத்தில் தெரிந்துகொண்டாள்.
அவளது காதலில் நிலையாக நின்றிருந்தால்… இன்று விஷ்வாவின் காதல் அவன் கை சேர்ந்திட்ட மாதிரி அவளுடைய காதலும் ராகுலுடன் இணைந்திருக்குமோ!
எல்லாம் எல்லாருக்கும் தெரிந்துவிட்டது.
விடயமறிந்த இந்திரா கூட தன் அகங்காரம் விடுத்து தலையில் கை வைத்தவராக தரையில் அமர்ந்துவிட்டார்.
உண்மை புரிகிறது. இருப்பினும் மகளின் வாழ்வை அப்படியே விட்டுவிட முடியாதே!
“என்னயிருந்தாலும் விஷ்வா குழந்தையை சுமந்து பெத்திருக்காள். அவள் வாழ்க்கைக்கு ஒரு வழி சொல்லுங்க?” முதல் முறையாக சத்தமின்றி கத்தாது அதிகாரம் செய்யாது பணிவாக நலிந்த குரலில் பேசியிருந்தார் இந்திரா.
“இன்னமுமா உங்களுக்கு எதுவும் புரியல?” மித்ரன் தான் கோபம் கொண்டிருந்தான்.
“விஷ்வாவாக முடிவு செய்து ஐவிஎப் நடந்திருந்தாலும் ஒரு சான்ஸ் இருக்கு. இங்கு அவனுக்கு தெரியாமலேயே எல்லாம் செய்திருக்கீங்க. இது எவ்வளவு பெரிய அஃபென்ஸ் அண்ட் க்ரைம் தெரியுமா?” எனக் கேட்ட மித்ரன், “ஒழுங்கா உங்க பொண்ணை கூட்டிட்டு கிளம்பிடுங்க. இல்லை இப்போ இங்க போலீஸ் வரும்” என்றான். கூர்மையாக.
சம்ருவினுள் ஒரு யூகம்… ஐவிஎப்’ல் கூட டோனார் யார் என்பதை அறிந்துகொள்ளும் வாய்ப்பிருக்கு. ஆனால் விஷ்வாவின் கையெழுத்து மருத்துவ அறிக்கையில் எந்தவொரு இடத்திலும் இல்லை. அதனாலேயே அழுத்தமாக விஷ்வாவை நம்பி ஐயூஐ என்று கூறியிருந்தாள். இப்போது அதுதான் உண்மையென்றிருந்தது.
சம்ருவின் பேச்சில் காதலாக விஷ்வா கர்வம் கொண்ட இடம் இதுதான்.
தனக்கென்று வரும்போது தான் வலியும் வேதனையும் தெரிகிறது.
“மிரட்டுறதுலாம் உங்களுக்கு தான் வரும். அது எங்க வேலையில்லை” என்ற மித்ரன், “இதுக்குமேல உங்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. இது ஏற்கனவே விஷ்வா சொல்லியாச்சு. அப்படியிருந்தும் நீங்க இங்கு வந்து நிற்க காரணம் இந்த சொத்துக்கள் தானே! உங்களுக்கெல்லாம் எவ்வளவு கொடுத்தாலும் பத்தாது. இனி உங்க நிழல் இங்கு பட்டாலும், கொடுத்ததை எடுத்துக்கொள்வது தப்பாயிருந்தாலும் அதை செய்ய நான் தயங்கிடமாட்டேன். வீட்டை விட்டு வெளியில் போறீங்களா?” என்று புருஷோத்தமனின் முகத்திற்கு நேரே கூறிவிட்டான்.
“நீ இவங்களை மாதிரி இல்லைன்னு நினைச்சேன். ஆனால் நீதான் இவங்களை விட அதீத விஷம்” என்று அஞ்சலியை பார்த்து சொல்லிய மித்ரன்,
“இனியாவது முடிவெடுப்பதில் நிலையாக இரு” என்றான்.
அங்கு மித்ரன் மட்டுமே தெரிந்துகொண்ட விடயங்களிலிருந்து மீண்டிருந்தான். அதுவும் தன் தம்பிக்காக பேச வேண்டிய இடத்தில் இருப்பதால்.
“என் குழந்தையை கொடுங்க… நான் போறேன்!”
அஞ்சலி அவ்வாறு கேட்டிட… சம்ரு விஷ்வாவின் கையை இறுக பற்றினாள். அவளிடம் பரிதவிப்பு.
“குழந்தை வேணான்னு எழுதி கொடுத்திட்டதா நினைவு” என்று தோரணையாகக் கூறினான் மித்ரன்.
அண்ணன், அண்ணி என்று தான் செய்த யாவும் பாம்புக்கு பால் வார்த்த கதையென்று தெரிந்த சுஜா, இப்போதும் திருந்தாது அஞ்சலி குழந்தையை கேட்டதும் கோபத்தில் பொங்கிவிட்டார்.
அஞ்சலியின் கையை பிடித்தவர், தறதறவென அவளை இழுத்துக்கொண்டு சென்று கேட்டிற்கு வெளியில் வீதியில் விட்டுவிட்டு வந்தார்.
உள்ளே வந்தவர்,
“இனி தங்கச்சின்னு சொல்லிக்கிட்டு என் வீட்டுக்கு யாரும் வரக்கூடாது. மீறி வந்தால், வரவங்களை வெட்டி போடவும் தயங்கமாட்டேன்” என்று அழுத்தமாகக் கூறியதோடு, “உங்க பொண்ணை தெருவில கழுத்தை பிடிச்சு தள்ளின மாதிரி உங்களையும் தள்ளணுமா?” எனக் கேட்க, வாழ்நாளிலே அடுத்தவரின் பேச்சிற்கு மதிப்பு கொடுத்திடாத புருஷோத்தமனும், இந்திராவும் தலை குனிந்து வெளியேறினர்.
தன் தவறுகளின் வீரியத்தை உணராதவர்கள் என்றுமே மனமாற்றம் அடைந்திடமாட்டார்கள். அவர்களைப் போன்றோர் தான் இங்கிருந்து சென்றவர்களும். இனி இவ்வீட்டிற்கும், விஷ்வாவின் வாழ்விற்கும் அவர்களுக்கும் எவ்வித சம்மந்தமுமில்லை.
திருந்த நினைப்பவர்களுக்கு மன்னிப்பே ஆக சிறந்த தண்டனை தான்.
உறவுகளையும் குடும்பத்தையும் நேசிப்பவர்களுக்கு மன்னிக்கத்தான் தெரியும். பழிவாங்கிடவோ, தண்டனை வழங்கவோ தெரியாது. மன்னிப்பு என்பதே பெரும் செயல் என்பதை அறியாமலே தவறு செய்தவர்களுக்கு வழங்கியிருந்தனர்.
அவ்வீட்டிற்கு தேவையில்லாதவர்கள் சென்றதும், விஷ்வாவின் முன் தரையில் மண்டியிட்ட சுஜா, மகனின் கையை பிடித்துக்கொண்டு கண்ணீர் வடித்தார்.
“என்னை மன்னிச்சிடுப்பா!” அதைத்தவிர அவரால் வேறென்ன கேட்டிட முடியும்.
விஷ்வா சிறு புன்னகையில் கடந்துவிட்டான்.
யுகிக்கு இப்போதுதான் ஒன்று புரிந்தது… சுடரை தத்தெடுப்பதில் சம்ரு ஏன் அத்தனை பிடிவாதமாக இருந்தாளென்று. அது விஷ்வாவின் குழந்தை என்றே அவளுக்கு இன்றுதானே தெரியும்.
விஷ்வாவுக்கு தன் தங்கை தான் முதலும் முடிவும் என்பதில் யுகிக்கு அத்தனை நிறைவு.
மித்ரன் பார்வையாலேயே தன் தம்பியை ஆரத்தழுவியிருந்தான். மித்ரன் என்றுமே விஷ்வாவின் மறைமுக பலமல்லவா! இன்றும் ஒரு சகோதரனாக தன்னிடத்தை சரியாக பூர்த்தி செய்திருந்தான் மித்ரன்.
சுசிக்கு தன் நண்பனை நினைத்து மனதிலிருந்த வருத்தங்கள் யாவும் நொடியில் மறைந்துவிட்ட மாயம்.
ஆளாளுக்கு விஷ்வாவை அணைத்து எல்லாம் சரியாகியதில் சந்தோஷம் பெற்று தங்கள் மகிழ்வை வெளிப்படுத்திட… வருண் மட்டும் நெகிழும் தன் நெஞ்சத்தை கலங்கிய விழிகளில் வெளிப்படுத்தினான்.
“உன்னைப்பற்றி எல்லாம் தெரிந்தும்… நானும் எல்லாரையும் போல் நினைச்சிட்டனே! உன் காதலுக்கு முன்னால் எல்லாமே ஸீரோடா” என்ற வருண் விஷ்வாவை அணைத்து விடுவிக்க… சிறிது நேரத்தில் நடந்து முடிந்த பேச்சுக்கள் முற்றுப்பெற்றது.
விஷ்வாவும், சம்ருதியும் காதலுக்காக வாழ்வில் பெற்ற துன்பங்கள் எல்லாம் அன்று முடிவுக்கு வந்தது.