குழந்தையை வேலூரிலிருந்து கோயம்புத்தூர் அழைத்து வந்து ஒரு வாரமாகிறது.
இன்னமும் சம்ரு தனக்கு திருமணம் ஆகிவிட்டதென்று சரோஜா அம்மாவிடம் காட்டிய சான்றிதழ் பற்றி யுகி வருணிடம் எதுவும் சொல்லிக்கொள்ளவில்லை. சரியான சந்தர்ப்பம் அமையவில்லை என்பதே சரியாக இருக்கும்.
சுடரை எப்படி கவனிக்க வேண்டுமென்று தங்கைக்கு சொல்லி கொடுப்பதிலேயே தமக்கையின் நாட்கள் சென்று கொண்டிருக்கின்றன. அவர்களின் நாளை மொத்தமாக அந்த சின்ன சிட்டு கொள்ளை கொண்டுவிடுகிறாள்.
தருணுக்கு கூட பள்ளி நேரம் போக மற்ற பொழுதுகள் அவனது தங்கையுடன் தான் கழிகிறது.
அன்று மதியத்திற்கு மேல் தான் வருண் மருத்துவமனை சென்றிருந்தான். அதனால் இரவு நேரம் சென்றே வந்தான்.
வந்தவனின் முகத்தில் அத்தனை சோர்வு.
ஆடைகூட மாற்ற மனமின்றி இருக்கையில் தளர்வாக அமர்ந்துவிட்டான்.
கூடத்தில் தான் கீழே தரையில் கம்பளி விரித்து, சுடருடன் தருணும் சம்ருவும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
சம்ரு தருணுக்கு ஜாடை காட்டிட,
தருண், “அம்மா, அப்பா வந்தாச்சு” என்று அடுப்படிக்குள் இருந்த யுகிக்கு குரல் கொடுத்தான்.
“எப்போ வந்தீங்க மாமா? சத்தத்தையே காணோம்?” என்றவளாக வந்த யுகி, “என்ன யோசிக்கிறீங்க?” எனக் கேட்டாள். கணவனின் முகம் வைத்தே அவதானித்தவளாக.
“திருச்சிக்கு டிரான்ஸ்பர் வந்திருக்கு.”
வருண் அவ்வாறு சொல்லியதும், சம்ரு விலுக்கென நிமிர்ந்து வருணை பார்த்தாள்.
“போயே ஆகணுமா மாமா?”
“ஆமாம் யுகி. போய் தான் ஆகணும். ஏற்கனவே டூ டைம்ஸ் வேண்டான்னு சொல்லியிருக்கேன். இப்பவும் அப்படியே சொல்ல முடியாது” என்று மனைவியிடம் தன் பக்கம் கூறினான்.
“புரியுது மாமா” என்ற யுகி, “எப்போ கிளம்பணும்?” எனக் கேட்டாள்.
யுகி இப்படித்தான் முடிவென்று எடுத்துவிட்டால் அங்கேயே நின்றுவிடாது அடுத்து என்ன என்று கடந்துவிடுவாள்.
“நாளை மறுநாள் ட்யூட்டியில் ஜாயின் பண்ணியிருக்கணும் யுக்தா. நாம் நாளைக்கே கிளம்புறோம்” என்றான்.
“தின்க்ஸ்லாம்?” யுகி கேள்வியாக இழுத்தாள்.
“ஆட்களுக்கு சொல்லிட்டேன் யுக்தா… அவங்க நமக்கு பின்னாடியே தின்க்ஸ்லாம் கொண்டு வந்திடுவாங்க. தருணுக்கு டிசி வீக்கெண்ட் வந்து வாங்கிடுறேன்” என்றான்.
ஆமோதித்த யுகி சாப்பாடு எடுத்து வைக்கச் சென்றாள்.
உணவு நேரம் கழிந்ததும், சுடருடன் யுகியும், தருணும் ஐக்கியமாகி விட, சம்ரு வருணிடம் தன் முடிவை கூறினாள்.
“திருச்சிக்கு நான் வரல. நானும் சுடரும் நாளைக்கு வால்பாறை கிளம்புறோம். அல்ரெடி டூ வீக்ஸ் ஸ்கூல் லீவ் போட்டுட்டேன். அடுத்த வார்த்திலிருந்தாவது ஸ்கூல் போகணும்” என்றாள்.
“அதெல்லாம் வேண்டாம். தனியா குழந்தையும் உன்னையையும் விட முடியாது. வேலையை ரிஸைன் பண்ணு. திருச்சியில் வேற ஸ்கூலில் ஜாயின் பண்ணிக்கலாம்.” வருண் உடனடியாக தன்னுடைய மறுப்பைக் காட்டினான்.
இருவரின் மறுப்புக்கும் சம்ரு எந்தவொரு பதிலும் கொடுக்கவில்லை.
தன்னிலையில் மாற்றமில்லை என்பதைப்போல் இருந்தாள்.
அமைதியாக பல நிமிடங்கள் கடந்தன.
மேல் தளம் செல்லும் படியின் கைப்பிடியில் மார்பிற்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு சாதாரணமாக நின்றிருந்த சம்ருதியை வழக்கம்போல் வருண் முறைத்துக்கொண்டு நின்றான்.
இதற்கும் தனக்கும் யாதொரு சம்மந்தமும் இல்லையெனும் விதமாக சுடரை மடியில் வைத்து கொஞ்சிக் கொண்டிருந்தாள் யுகி.
சம்ருவின் நீண்ட அமைதியே அவள் தாங்கள் சொல்வதை கேட்கப்போவது இல்லை என்பதை அவளுக்கு உணர்த்திட, சுடர் மற்றும் தருணுடன் விளையாடி சிரித்தாள்.
“யுக்தா…”
“என்கிட்ட எதுக்கு கத்துறீங்க? நீங்களாச்சு, அவளாச்சு. என்ன பேசினாலும் மறுப்பு சொன்னாலும் அவள் முடிவுக்கு நம்மளை இறங்கி வர வச்சுக்கிட்டு தானே இருக்காள் அவள். இதுல மட்டும் நாம் சொல்லிடறதை கேட்க போகிறாளா என்ன? பாப்பாக்கு தூக்கம் வந்திருச்சு. நீ வா தருண் நாம் போய் தூங்கலாம்.” வருணிடம் கோபம் கொள்வது போல், தங்கைக்கு கொட்டு வைத்த யுகி பிள்ளைகள் இருவரையும் கூட்டிக்கொண்டு அறைக்குள் புகுந்துகொண்டாள்.
“சும்மா எல்லாத்துக்கும் இப்படி அடம் பிடிக்கக்கூடாது சம்ரு.”
“பிடிக்க வேண்டிய விடயத்துக்கு அடம் பிடித்திருந்தால், இப்படி ஓவ்வொண்ணுக்கும் நான் பிடிவதாம் பிடிக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது மா…” மாமா என்று சொல்லாமல் நிறுத்திக்கொண்டாள்.
தன்னைப்போல் “மாமா” என்று விளித்தவள் தனக்கு தாயுமானவனாக இருப்பவனை ஓடிவந்து கட்டிக்கொண்டாள்.
குழந்தையை தத்தெடுக்க சம்ரு கேட்டபோது, வருண் கோபமாக பேசிவிட… வேண்டுமென்றே அவனை மாமா என்று அழைப்பதை தவிர்த்திருந்தாள்.
அவன் கேட்காமலே அவனது காதலை நிறைவேற்றிக் கொடுத்தவள். அவன் கேட்டு இந்த அழைப்பையா கொடுக்காமல் இருந்திடுவாள்.
“என் மேல என்னடா கோபம் உனக்கு?”
சம்ருவின் தலையை வருடியவனாகக் கேட்டிருந்தான்.
“முன்னலாம் நான் என்ன கேட்டாலும் ஓகே சொல்லுவீங்க. இப்போலாம் வேண்டாம் சொல்றீங்க? என்னை அடம் பிடிக்க வைக்கிறதே நீங்கதான் மாமா” என்றாள்.
“நீ குட்டியா இருக்கும் போது கேட்டதும்… இப்போ கேட்குறதும் ஒண்ணா அம்மு? உனக்கு ஒத்து வராதுன்னு தோணுற விடயத்துக்க மறுப்பு சொல்லித்தானே ஆகணும்.” பொறுமையாய் எடுத்துக் கூறினான்.
அப்போதும் சம்ரு தன் நிலையில் பிடியாக நின்றாள்.
வழக்கம்போல் வருண் தான் அவள் விருப்பத்திற்கு சம்மதம் சொல்ல வேண்டியிருந்தது.
“மூஞ்சியை இப்படி வச்சே ஏமாத்திடு” என்று சம்ருவின் மூக்கை பிடித்து ஆட்டிய வருண்,
“விஷ்வாவுக்கு டிவோர்ஸ் ஆகிடுச்சு. தெரியுமா?” எனக் கேட்டிருந்தான்.
“ம்.” ஒற்றை வார்த்தை பதில் அவளிடம்.
“நான் பேசி பார்க்கட்டுமா?”
“வேண்டாம் மாமா.” வேகமாக சொல்லியிருந்தாள்.
“எப்படியும் நான் எவ்வளவு நல்ல மாப்பிள்ளை பார்த்தாலும், நீ யாருக்கும் ஓகே சொல்லப்போவதில்லை. அப்போ விஷவாவையே பண்ணிக்கலாமே! கல்யாணம்.” உண்மையில் சம்ருவின் மனதை ஆழம் பார்ப்பதற்கே வருண் இவ்வாறு கேட்டான்.
“வேண்டான்னு சொல்லிட்டு… இப்போ என்னன்னு கேட்குறது மாமா?” என்ற சம்ரு, “என்னால தான் அவன் வாழ்க்கை வீணாகிடுச்சோன்னு தோணுது மாமா” என்று கலங்கிப்போனாள்.
“சம்ரு…” அவள் இவ்வாறு சொல்வதில் என்ன மறை உள்ளதோ என்கிற அதிர்வு வருணிடம்.
“ஆமாம் மாமா. நான் மட்டும் கொஞ்சம் தைரியமா இருந்து, அவனோட காதலை அக்செப்ட் பண்ணியிருந்தால்… அதுகூட வேண்டாம், சின்ன பார்வை காட்டியிருந்தால் கூட என் விஷ்வா எனக்காக இந்த ஜென்மம் முழுக்கக் காத்திருந்திருப்பான். ஆனால் நான், அவனையும் அவன் காதலையும் வேண்டான்னு தானே முடிவு பண்ணேன். நான் மட்டும் என்னுடைய காதலை கொஞ்சமா காட்டியிருந்தாலும், யார் என்ன சொல்லியிருந்தாலும், குடும்பத்துக்காகன்னு கூட அவன் இன்னொரு பொண்ணு கழுத்துல தாலி கட்டியிருக்கமாட்டான் மாமா. நான் முடியாதுன்னு சொன்ன வார்த்தை அவனை இன்னொரு பொண்ணுகூட சேர்த்து வச்சு, அவன் வாழ்க்கையையே அழிச்சிடுச்சு” என்று நீளமாக மூச்சுவிடாது கூறியவள்,
“அவன் என் விஷ்வா மாமா. இங்கு அவனுக்கான இடம் எப்பவும் மாறாது. அதுக்காக இப்போ நான் போனால், எப்படா அஞ்சலி போவாள். அந்த இடத்துக்கு நான் வரலான்னு காத்திருந்த மாதிரி ஆகிடாதா மாமா?” எனக் கேட்டாள்.
இதற்கு வருண் என்ன பதில் சொல்வான். இது அவர்கள் இருவரும் மனதால் தெளிய வேண்டிய விடயம். அமைதியாக பார்த்திருந்தான்.
என்ன தான் வலி நிறைந்த சூழலாக இருந்தாலும், விஷ்வாவின் பெயரை உச்சரிக்கும் போது அவளின் முகம் காட்டும் வர்ணஜாலங்களை வருண் அவதானித்துக் கொண்டுதான் இருக்கின்றான்.
“விஷ்வா இப்போ நான் சொன்ன மாதிரி சிந்திக்கக்கூட மாட்டான் மாமா. ஆனால், அவனுக்குள்ள சின்ன புள்ளி அளவாவது அப்படி தோணிடுச்சுன்னா… அங்கேயே எங்க காதல் தோத்துடும். அதுக்கு நாங்க இணையாமல் இருப்பதே நல்லது. பிரிந்திருந்தாலும் காதல் காதல் தான்.”
“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல அம்மு. ஆனால் ரெண்டு பேரும் கிடைக்கும் சந்தர்ப்பங்களை எல்லாம் உதறி தள்ளிட்டு வாழ்கையை ரொம்ப காம்ப்ளிகேட் பண்ணிக்கிறீங்க” என்றான்.
விரக்தியாக புன்னகை சிந்தினாள்.
“அவனோட நினைப்பு மட்டும் போதும் மாமா. காலத்துக்கும் வாழ்ந்திடுவேன்” என்றாள்.
‘என்ன மாதிரியான அன்பு இது. காதல் செய்வதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை.’ வருணால் வியக்காமல் இருக்க முடியவில்லை.
“அவனுக்காக இப்போவாவது யோசியேன் அம்மு.”
“தூக்கம் வருது மாமா.”
திரும்பி நடந்தவளை வருணின் பேச்சு தடை செய்து நிறுத்தியது.
“விஷ்வா அவன் குழந்தையை தேடமாட்டான்னு உனக்கு தோணுதா?”
“குழந்தை என்கிட்ட இருக்குன்னு அவனுக்கு எப்பவோ தெரியும் மாமா.”
அவள் சொல்வது உண்மை தானே! அவன் கொடுத்த அனுமதியில் தானே சுடர் இன்று அவளது கைகளில்.
“அப்பாவையும் பொண்ணையும் பிரிக்கிறது பாவம் டா!”
“அம்மாக்கூட இருக்கனுன்னு அப்பாவே விரும்புறார் மாமா.” சம்ருவின் பதிலில் வருணுக்கு ஆச்சரியம். விஷ்வாவிடம் வருண் கேட்கும்போது அவன் சொல்லிய அதே பதில். வார்த்தைகளில் தான் மாற்றம் பொருள் அதேதான்.
சட்டென்று சம்ருவின் ஒற்றை கண்ணில் கோடாய் இறங்கியது கண்ணீர்.
“அம்மு…” பதறியவனாக அவளருகில் சென்ற வருணை கைகாட்டி தடுத்தவள்,
“அவனுக்கு விருப்பமில்லாத ஒண்ணை நான் செய்யமாட்டேன் மாமா. அவன் வாழ்கையை சரிசெய்யனுன்னு நினைக்கிறதை விட, எங்கு இப்போ என் வாழ்க்கைக்கு தான் இடைஞ்சலாகிடுவோமோன்னு தான் யோசிப்பான். முதல் கல்யாணத்தோட தாக்கம் போற வரை விஷ்வா இப்படி யோசிக்கவே மாட்டான் மாமா” என்றாள்.
“அப்போ விஷ்வா இன்னமும் அஞ்சலியை நினைச்சிட்டு இருக்கான்னு நினைக்குரியா நீ?”
“விஷ்வா எப்பவும் என்னை மட்டும் தான் நினைச்சிட்டு இருப்பான் மாமா.” அத்தனை திடம் அதில் அவளிடம்.
“அவனோட காதல் எப்பவும் நான் தான். நான் மட்டும் தான். கட்டிய தாலிக்கும், தன்னை நம்பி வந்த பொண்ணுக்கு உண்மையா இருக்கணுமுன்னு மட்டும் தான் என் நினைப்பை அவனுக்குள் புதைச்சிட்டு, அஞ்சலியோடு வாழ்ந்திருப்பான். அஞ்சலியோடு உண்மையா நேர்மையா வாழ்ந்திருப்பானே தவிர, காதலா வாழ்ந்திருக்கமாட்டான். அஞ்சலி போனபிறகு, அவனுள் ஒரு ஆசுவாசம் வந்திருக்கும். இனி தன்னுடைய காதல், நினைப்பு எல்லாம் தடையில்லாமல் தன்னுடைய மனதில் வலம் வரலாமென்று. என்னை நினைச்சு காதலிச்சிட்டு இருப்பானேத் தவிர, என்கூட வாழணும் நினைக்கமாட்டான்” என்றாள்.
இதையேதான் விஷ்வாவும் வேறு விதமாகக் கூறியிருந்தான்.
இருவரையும் நினைக்கும் போது வருணுக்கு ஆச்சரியம் கூடிக்கொண்டே போனது.
நடுவில் சறுக்கினாலும் இத்தனை காதலோடு ஒருவர் மனதை ஒருவர் ஊடுருவி பார்த்ததைப்போல் ஒருத்தரையொருத்தர் புரிந்து வைத்திருக்க முடியுமா?
கண்ணால் காண்கிறானே! நம்பித்தான் ஆக வேண்டும்.
என்ன பேசினாலும் அவர்கள் நிலையில் அவர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள் என்பது வருணுக்கு புரிந்தது.
‘இனி பேசி ஒன்றுமில்லை. அவர்களாகத்தான் முடிவு செய்ய வேண்டும்.’ நினைத்தவன் தன்னறை நோக்கி நகர…
“விஷ்வாவுக்கு டிவோர்ஸ் ஆகிடுச்சுன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?” எனக் கேட்டு வருணை அந்நேரத்தில் அதிர்வுக்குள்ளாக்கியிருந்தாள் விஷ்வாவின் சம்ருதி.