அதீத நிம்மதி விஷ்வாவுக்கு மட்டுமல்ல… அவனது குடும்பத்தாருக்கும்.
ராஜா தான் விஷ்வாவின் மீது பெரும் மனத்தாங்கலில் இருந்தான் என்பதால், அப்போதே ராஜாவுக்கும், தினேஷுக்கும் அழைத்து அனைத்தையும் சுசி விளக்கிட… ராஜா அதே ஊர் என்பதால் விஷ்வாவை காண ஓடோடி வந்துவிட்டான்.
அழுத்தமாக ஒரு அணைப்பு. நண்பர்களின் மனத்தாங்கலுக்கு ஒற்றை அணைப்பே போதுமானதாக இருந்தது.
தினேஷ் சென்னையில் வேலையில் இருப்பதால், விஷ்வாவுக்கு கால் செய்து பேசியிருந்தான்.
மித்ரன் அம்மையப்பனுக்கு அழைக்க, அவர் சென்னை சென்று கொண்டிருப்பதாக சொல்ல… அலைப்பேசி தொடர்பிலேயே ஒன்றுவிடாது நடந்தது நிகழ்ந்தது என அனைத்தையும் சொல்லிவிட்டான்.
அம்மையப்பனுக்கு மனமே லேசானது போலிருந்தது.
சுஜாதாவின் பேச்சை நம்ப முடியாது உண்மையா என்று மீண்டும் மீண்டும் கேட்டு தெரிந்துகொண்டார்.
“உங்களுக்கு வருத்தமில்லையேப்பா? என்னயிருந்தாலும் உங்களுக்கு தங்கை அவர்” என்று மித்ரன் இழுத்திட…
“என் மகனைவிட எனக்கு வேறு யாரும் பெரிதில்லைப்பா” என்ற அம்மையப்பன், “நானிருந்திருந்தால் என்ன பேசியிருப்பானோ அதைத்தான் சரியாக பேசியிருக்கிறாய்” என்றார்.
“சரிப்பா வேலையை முடிச்சிட்டு சீக்கிரம் வாங்க” என்று வைத்துவிட்ட மித்ரன், விஷ்வாவுடன் பேசிக்கொண்டிருந்த ராஜா மற்றும் வருணுடன் இணைந்து கொண்டான்.
இன்று வீடே முழு சந்தோஷத்துடன் காணப்பட்டது.
அனு, ஸ்ரீ மற்றும் தருணுடன் விளையாடிக்கொண்டிருக்க, யுகியும் சுசியும் சுஜாவுடன் இரவு சமையலில் ஈடுபட்டிருந்தனர்.
இன்னமும் விஷ்வா சம்ருவுடன் எதுவும் பேசிடவில்லை. தன்னை சுற்றி இருப்பவர்களை தவிர்த்து அவனால் எழுந்து செல்ல முடியவில்லை. நொடிக்கு ஒரு தரம் மேலே விழி உயர்த்தி தனதறையை பார்த்து வைத்தான்.
விஷ்வாவுக்கு சம்ருவிடம் தன் மனதை கொட்டிட தவிப்பாக இருந்தது.
உண்மைகள் யாவும் தெரிந்த பின்னர் அவள் என்ன மனநிலையில் இருக்கின்றாள் என்றே அவனால் தீர்மானிக்க முடியவில்லை.
விஷ்வாவின் விழி அசைவு வைத்து புரிந்துகொண்ட மித்ரன்,
“நீ போய் ரெபிரஷ் செய்துட்டு வாயேன் விஷ்வா!” என்று அவனை அறைக்கு அனுப்பிட நினைத்து சொல்ல…
விஷ்வாவும் இருக்கையிலிருந்து வேகமாக எழுந்துகொண்டான்.
ஆனால் சம்ரு கீழே இறங்கி வருவதை கண்டவன், உற்சாகம் வடிந்தவனாக இருக்கையில் தொப்பென்று அமர்ந்துவிட்டான்.
சுடர் உறங்கிவிட்டதால் பேபி மானிட்டரை ஆன் செய்துவிட்டு அதன் கனெக்ட்டரை கொண்டு வந்து விஷ்வாவை பாராது அவன் முன் வைத்தவள் கிச்சனிற்குள் சென்றுவிட்டாள்.
“என்னடா சம்ரு உன்மேல கோபமா இருக்க மாதிரி இருக்கு” என்ற ராஜா “நானேதும் உனக்கு சப்போர்ட்டா எதாவது பேசட்டுமா?” எனக் கேட்க, விஷ்வா தன் இரு கரம் குவித்து வேண்டாமென்று தலையசைக்க… வருணும் மித்ரனும் சத்தமாக சிரித்துவிட்டனர்.
“ம்க்கும்” என்ற ராஜா, “அப்புறம் ஏன் அவளை ஏக்கமா பாக்குறியாம்?” என்றான் ராஜா.
“டேய் இப்போ என்னடா உன் பிரச்சனை? அவள் என் பொண்டாட்டி நான் எப்படிவேணாலும் பார்ப்பேன். சும்மா கேலி பண்ணன்னு என்னவும் கேட்காதே” என்று படபடவென பேசிய விஷ்வா, “பாருங்க அண்ணாஸ்” என்று தன்னுடைய சகோதரர்களிடம் முறையிட அவர்களோ விஷ்வாவின் சிறுபிள்ளை தனத்தில் பீறிட்டு கிளம்பிய சிரிப்பை கட்டுப்படுத்த முடியாது வெளிக்காட்டியிருந்தனர்.
“நீ சுடர் கல்வி சாம்ராஜ்ஜியத்தின் தலைவன் டா. இப்படி சையில்டிஷ்ஷா பிஹேவ் பண்ணிட்டு இருக்க?” வருண் கேட்டிட…
“உன்னை பார்த்து நம்ம கவர்மெண்ட்டே பயப்படுது” என்றான் மித்ரன்.
“ம்க்கும்… இப்படி சொல்லியே என்னை ஒதுக்கி வச்சிடுங்க” என்ற விஷ்வாவிடம் ஆதங்கம்.
எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் வீட்டில் உள்ளவர்களிடம் சாதாரண மனிதனாகத்தான் இருக்க ஆசைப்படுவோம். அதில் விஷ்வாவும் விதிவிலக்கு இல்லையே!
வருணும், மித்ரனும் விஷ்வாவுக்கு இருபக்கமும் அமர்ந்து அவனது தோளில் தட்டிக்கொடுத்திட…
“இனி உன்னை கெத்தா பார்த்தது போய் வச்சு செய்ஞ்சிடுவாங்கடா. நீயே வாய் கொடுத்து மாட்டிகிட்டியே!” என்று கிண்டல் செய்தான் ராஜா.
“போடா… உனக்கு சரண் தான் சரிபட்டு வருவான். அவனுக்கு போன் போட்டு உன்னை கோர்த்து விடுறேன்” என்று விஷ்வா அலைப்பேசியை எடுக்க…
சுஜா பிள்ளைகளுக்கு உணவு தான் ஊட்டுவதாக சொல்லிவிட, பட்டாளம் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டனர்.
சாப்பிடும்போதும் விஷ்வாவின் பார்வை சம்ருவை அடிக்கடி தொட்டு மீண்டதே தவிர, அவள் அவனை பார்க்கவே இல்லை.
சட்டென்று விஷ்வா இரும்பிட…
“தண்ணி குடிங்க விஷ்வா” என்று தம்ளரை நகர்த்தி வைத்தபோதும் அவனின் முகம் பார்க்கவில்லை.
“கோபமா இருக்கியா?”
யாருக்கும் கேட்டிடாது அவளுக்கு மட்டுமே கேட்கும்படி அவள் புறம் சாய்ந்து மெதுவாகக் கேட்டிருந்தான்.
“இல்லையே!” என்றவள், அவன் அடுத்து பேசுமுன் “சுசி குருமா எடுங்க” என்று தனக்கு முன் அமர்ந்திருந்தவளிடம் கவனத்தை வைத்தாள்.
“போடி…” என்று முகம் சுருங்கிய விஷ்வா அடுத்து அவளை கண்டுகொள்ளாது உணவை விழுங்கி வைத்தான்.
பேபி மானிட்டர் சத்தம் கொடுக்க…
விஷ்வா வேகமாக எழ…
அவன் தட்டில் இன்னும் இரண்டு சப்பாத்தியை வைத்த சம்ரு…
“நான் பார்த்துக்கிறேன். சாப்பிட்டு வாங்க” என்று கிட்டத்தட்ட அதட்டுவதைப்போல் சொல்லி, சுடருக்கு பால் எடுத்துக்கொண்டு அனைவரிடமும் குட்நைட் கூறி மாடியேறிவிட்டாள்.
சம்ருவுடனான தனிமைக்காகக் காத்திருந்த விஷ்வா வேகமாக உண்டுவிட்டு எழ,
“டேய் இருடா. நாங்க கிளம்பினதும் போவ” என்று ராஜா வேண்டுமென்றே தடுத்திருந்தான்.
“வி.ஆர் சாருக்கு மனைவிக்கிட்ட ரொமான்ஸ் பண்ணனுமா” என்று ராஜா இழுத்து சொல்ல… அனைவரும் கலகலத்து சிரித்தனர்.
விஷ்வா ராஜாவின் முதுகிலே அடி வைத்து… “நேத்ராகிட்ட உன்னை பத்தி போட்டுக்கொடுக்கிறேன் இரு” என்றிட, ராஜா தலைக்குமேல் கை கூப்பியிருந்தான்.
“அது” என்ற விஷ்வா, “சரி சாப்பிட்டாச்சுல எல்லாரும் கிளம்புங்க” என்று ராஜாவை விரட்டியதோடு, வருண் யுகியையும் தருணோட எதிர்வீட்டுக்கு அனுப்பி வைத்தான்.
அனுவையும் தானே அவளின் அறைக்குள் விட்டவன்,
“ம்மா அனுக்கு டேட் கிட்ட வந்திருச்சே! இனி நைட் அவளோடு நீங்க படுத்துக்கோங்க” என்று அன்னையிடம் சொல்லியவனாக, மித்ரன் தன்னை கண்டு நமட்டு சிரிப்பு சிரிப்பதை கண்டு கொள்ளாதவனாக…
“உன் புருஷனை கூட்டிட்டு முதலில் ரூமுக்கு போ” என்று சுசியிடம் கட்டளையாகக் கூறிவிட்டே மாடியேறினான்.
திருமணத்தின் போதோ… தங்களின் பிரத்யேக முதல் தனிமையின் போதோ கூட விஷ்வாவுக்கு படபடப்பு இல்லை. ஆனால் இப்போது சம்ருவை பார்க்க, பேசிட ஒருவித தயக்கம் தவிப்பு அவனிடம்.
விஷ்வா அறைக்குள் நுழைந்து கதவினை சாற்றி தாழிட்டு இருவரும் எங்கே என்று பார்க்க…
பால்கனியில் நின்று சுடரை இடுப்பில் வைத்துக்கொண்டு வானில் நட்சத்திரங்களைக் காட்டிக்கொண்டிருந்தாள் சம்ருதி.
அவர்களை பார்த்தபடி குளியலறைக்குள் புகுந்தவன் பத்து நிமிடங்களில் வெளியில் வர, இன்னமும் பால்கனியில் தான் நின்றிருந்தனர்.
“சில் வின்ட். ஏன் அங்கவே நின்னுட்டு இருக்க?”
விஷ்வாவை திரும்பி பார்த்த சம்ரு ஏதும் பேசவில்லை. மீண்டும் சுடருடன் ஐக்கியமாகி விட்டாள்.
“பேசமாட்டியாடி?”
அவளுக்கு பின்னால் உரசியவாறு நின்று வினவினான்.
“பேபி தூங்க லேட்டாகும். நீங்க படுங்க” என்றவள், அங்கு போடப்பட்டிருக்கும் குஷனில் அமர்ந்து சுடருடன் கதை பேச ஆரம்பித்துவிட்டாள்.
சில நிமிடங்கள் சம்ருவையே பார்த்து நின்றவன், முறைத்துவிட்டு மெத்தையில் சென்று படுத்துக்கொண்டான்.
மெத்தையில் உருண்டவன் தூக்கம் வராது எழுந்து பால்கனிக்கு வர, அங்கிருந்த ஊஞ்சலில் சுடரை படுக்க வைத்து ஆட்டிக்கொண்டிருந்தவள், என்னவென்று அவனை நிமிர்ந்து பார்க்க… சம்ருவை அழுத்தமாக, மிக நெருக்கமாக அணைத்து விடுவித்தான்.
அப்போது அவனுக்கு அந்த அணைப்பு தேவையாக இருந்தது.
எத்தனை பெரும் சுழலிலிருந்து மீண்டிருக்கிறான். மனைவியின் தேகத்தின் இதம் வேண்டுமாய் இருந்திட, உள்ளத்து உணர்வினை அணைப்பில் கடத்தி எதுவும் பேசாது உள்ளறைக்கு சென்றுவிட்டான்.
நேரம் செல்ல செல்ல சுடரும் சம்ருவுடன் சேர்ந்து விளையாடி சிரித்த அசதியில் தூக்கத்திற்காக மெல்ல கண்கள் சொருகிட… உள்ளே வந்த சம்ரு விஷ்வாவை காணாது எங்கே என்று பார்வையால் அலச, உள்ளறையின் கதவு இடுக்கில் கீற்றாய் வெளிச்சம் தெரிந்தது.
விடிவிளக்கை ஒளிரச் செய்து, பால்கனி கதவினை மூடிவிட்டு, சுடரின் உறக்கத்தை ஒருமுறைக்கு இருமுறையாக உறுதி செய்துகொண்டு உள்ளறைக்குள் சென்றாள்.
விஷ்வா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.
அவன் அலைப்புறுதல்கள் எல்லாம் நீங்கி இளைப்பாறும் இடம் அவனது சம்ருதியின் வாசம் நிறைந்திருக்கும் அவ்வறை அல்லவா! உறக்கம் வராது அங்கு வந்தவன் அடுத்த கணமே உறங்கியிருந்தான்.
மெத்தையில் விஷ்வாவுக்கு அருகில், முதல் தனிமை இரவில் சம்ரு அளித்த ஊதா வர்ண ரோஜாக்கள் கண்ணாடி குடுவையில் எபோக்சி ரெசினில் மூழ்கடிக்கப்பட்டு நுண்ணிய பல்புகளால் நிறைந்து மின்னிக்கொண்டிருந்தது.
“இதையெல்லாம் இப்படி பத்திரப்படுத்த எப்படித்தான் ஐடியா வந்ததோ” என்று நினைத்தவள், அதனை எடுத்து ஒளிர்ந்து கொண்டிருந்ததை அணைத்து அருகிலிருந்த மேசையின் மீது வைத்தவள் கணவனை ஒட்டி, ஒற்றை கையில் தலையை தாங்கியவளாக அவன் முகம் பார்த்து படுத்தாள்.
“தூங்க சொன்னால் தூங்கிடுவீங்களோ” என்று அவனின் உறக்கம் கலையாதவாறு மூக்கை பிடித்து ஆட்டியவள், அவனது கண்ணுக்கு கீழான புள்ளியில் முத்தம் வைத்தாள்.
“எதுக்குடா என்னை இவ்ளோ லவ் பண்ற?” எனக் கேட்டிருந்தாள்.
அவனின் மீசையை நிமிண்டியவள்,
“நிஜமாவே தூங்கிட்டிங்களா?” எனக் கேட்டு, அவனின் மீசை நுனியை பற்களால் கடித்து இழுக்க…
“அடியேய் ராட்சசி” என்று அளறியபடி எழுந்தமர்ந்திருந்தான் விஷ்வா.
“தூங்க சொல்லிட்டு எதுக்கு கடிக்கிற?” எனக் கேட்டான். மீசையை நீவியபடி.
“ரொம்பத்தான்” என்றவள், மீண்டும் விரலால் மீசையை பிடித்திழுக்க…
“காலேஜ் டேசிலிருந்தே உனக்கு இதுமேல் ஒரு கண்ணுல?” எனக் கேட்டான்.
“ஆமாம்… உங்களை எக்ஸ்ட்ரா அழகா காட்டுதே” என்றாள்.
“ட்ரிம் பண்ணிடுறேன் இரு.”
“பண்ணிடுவீங்களா?” அவள் கேட்ட தோரணையில் அவளை இழுத்து அணைத்திருந்தான்.
திரும்ப அவளின் விரல் அவனின் முகம் நோக்கி உயர, கை வைத்து மறைத்துக்கொண்டான்.
அவள் முறைத்திட… “ஒரிஜினல் மீசைடி. இழுக்கும் போது வலிக்குது. அதுவும் நீ வெறி வந்தவள் மாதிரி இழுக்கிற” என்றான் பாவமாக.
“ஆசை அதிகம் ஆனா அப்படித்தான்” என்றவள் விஷ்வாவின் மடிமீது அமர்ந்து அவனின் நெற்றி முட்டி மூக்கு உரசிட… இதழ் இடைவெளியில், இதழ்கள் உரசியும் உரசா நிலையில்…
“என்னை ரொம்ப பிடிக்குமா?” என வினவினாள்.
“இதுக்கு நான் பதில் சொன்னாதான் ம்ருதிக்கு தெரியுமா?” என்றவன் அவளின் மூக்கு நுனியில் மெல்ல இதழ் குவித்து பதித்தான்.
“நீங்க சொல்லி நான் கேட்கணுமே!” என்றவள் இன்னும் அவனை நெருக்கிட…
“பேசாமல் முகம் திருப்பிட்டு இருந்திட்டு, இப்போ எதுக்குடி டெம்ப்ட் பண்ற?” செல்லமாக முறுக்கிக்கொண்டவன், அவளின் இதழை தன் இதழால் உரசி விலகினான்.
“சென்னை போகலையா?”
“உன் சுருங்கிப்போன முகத்தை பார்த்திட்டு போக முடியலடி. அதான் பிளான் மாத்தி அப்பாவை அனுப்பி வச்சிட்டு உன்னை பார்க்கலான்னு ஓடி வந்தால்… செம ட்விஸ்ட். கதையோட டர்னிங் சீன்ஸ் போயிட்டிருக்கு” என்றான்.
“எல்லாம் எனக்காகவா?” அக்கணம் தெரிந்து கொண்ட பல விடயங்கள் மனதில் அலைமோதிட விழி விரித்து கேட்டாள்.
“எனக்காக… இந்த பொண்ணை அவ்வளவு பிடிக்கும்” என்று அவளின் நெற்றியில், கண்களில் முத்தம் வைத்தவன், “இவளைத்தவிர வேற யாரையும் இந்த மனசு ஏத்துக்க மாட்டேங்குது. என்னை ஏதோ பண்ணிட்டாள். மொத்தமா மயக்கி வச்சிட்டாள்” என்று அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.
“இப்பவும் உனக்கு என்கிட்ட எந்த விளக்கமும் தேவையில்லையாடா?”
கேட்டவனின் முகம் அவளின் கழுத்தில் பதிந்திருக்க… அவனது பிடரியை கொத்தாக பற்றி இழுத்து தன்னை பார்க்கச் செய்தவள்,
“இந்த கண்ணுல இருக்க எனக்கான காதல் மட்டும் போதும். அந்த காதலை எனக்காக நீங்க பொத்தி வைச்சு பத்திரமா என்கிட்ட சேர்த்திருக்கீங்க. இதைவிட வேறென்ன விளக்கம் வேணும்… ஹான்” என்றாள்.
“அப்புறம் எதுக்கு கோபமா இருந்த?”
“நீங்க என்னை மறுக்க சொன்ன காரணம் எதுவுமே உண்மை இல்லைங்கிறப்போ… அதையே காரணம் காட்டி எதுக்கு என்னை மறுத்தீங்க?” இடையில் கை குற்றி ஆழ்ந்து பார்த்து வினவினாள்.
“உண்மை யாருக்குமே தெரியாதப்போ… எல்லாரையும் பொறுத்தவரை அஞ்சலி தான் என்னோட” பட்டென்று அவனின் வாயினை கை வைத்து மூடியவள் வேண்டாமென்று இரு பக்கமும் தலையசைத்தாள்.
“நீங்க உண்மையை சொல்லியிருக்கலாமே?” ஆதங்கமாக கேட்டாள். அவளின் மனம் அவனுக்கு புரியாமலில்லை.
“சுடரோட பிறப்பு கேள்விக்குறியாகியிருக்குமே!?”
விஷ்வாவின் இத்தனை அமைதி எதற்காக என்று புரிந்துகொண்டவள்,
“நான் மொத்தமாவே வேணான்னு இருந்தீங்களா?” எனக் கேட்டாள். அத்தனை பரிதவிப்பு. ஆமாமென்று சொல்லிவிடுவானோ என்கிற தவிப்பு.
“கொஞ்சநாள் முறுக்கிட்டு சுத்தியிருந்திருப்பேனே தவிர, இந்த ம்ருதி பொண்ணை ஒரேயடியா வேணான்னு சொல்லியிருக்க மாட்டேன். அவள் இல்லாமல் இந்த விஷ்வா இல்லையே” என்றவன்,
“உன்கிட்ட கூட உண்மையை சொல்லாததுக்கு ரீஸன்… எந்த விளக்கமும் காரணமும் சொல்லாமல் என் மீதிருக்கும் காதலால் மட்டுமே நீ என்கிட்ட வரணுன்னு எனக்கிருந்த பேராசை. என் ம்ருதியை தவிர வேறு யாராலும் என்னை முழுதா தெரிந்துவைத்திருக்க முடியாதுங்கிற கர்வம். அதுக்காகத்தான்” என்றவனை தாவி தனக்குள் புதைத்துக்கொண்டாள்.
இருவரின் ஆழமான அன்பிற்கு கேட்டக்கப்படாத விளக்கமும் சொல்லப்படாத காரணமும் புரிதலில் அடங்கியது தான் சான்று.
விஷ்வா அஞ்சலி தாலியே கட்டவில்லை என தெரிந்த கணம், சுற்றம் மறந்து அவனை தாவி இறுக பற்றி முகம் முழுக்க இதழ் தீண்டிட எழுந்த வேட்கையை சுற்றி இருப்பவர்களை கருத்தில் கொண்டு கட்டுப்படுத்தியவள், தங்களின் தனிமையில் காட்டாற்று வெள்ளமாய் கரை புரண்டு தன் சுழலில் அவனை திக்குமுக்காட வைத்தாள்.
அந்த ஏகாந்த இரவில் தன் அசைவில் அவனை வழி நடத்தினாள்.
அங்கு மெல்லினம் போர் புரிந்திட வல்லினம் அடங்கி தன்னை ஒப்புவித்து அழகு சேர்த்தது.
யுத்தத்தின் முடிவுகள் யாவும் மீண்டுமொரு தொடக்கமாய் மாறிட… இருவரிடமும் ஆட்சி புரிந்தது அவர்களின் காதல் மட்டுமே.
தேடல்கள் நீண்டுகொண்டே செல்ல தாய்மை விழித்துக்கொண்டது. அத்தருணத்திலும் தன்னவனின் தேவையை உச்சம் தொட்டு முற்று வைத்து இதமாய் தீர்த்தவள் அவனின் மீசையில் அழுத்தமாக முத்தம் வைத்து விலகி வெளியறைக்கு சென்றாள்.
சிணுங்குவதற்கு தயாராக இருந்த குழந்தையை தூக்கி தோளில் போட்டு தட்டிக்கொடுத்தபடி நடந்தவள்… குழந்தை உறக்கத்திற்கு சென்றதும், தாயும் சேயுமாய் தந்தையிடம் சென்றனர்.
“தூங்கியாச்சா?”
“ம்” என்றவள் குழந்தையை இருவருக்கும் நடுவில் படுக்க வைத்து படுத்துக்கொள்ள… சுடரை அள்ளி தன் நெஞ்சில் போட்டுக்கொண்ட விஷ்வா, மனைவியை இழுத்து தன் கைவளைவில் வைத்து அணைத்தபடி விழி மூடினான்.
“லவ் யூ…” கண்கள் மூடி மெல்லொலியில் சம்ரு சொல்லிட…
“லவ் யூ டூ மை ரோஸ்” என்ற விஷ்வா இமை திறக்காது சம்ருவின் நெற்றியில் இதழ் ஒற்றினான்.
காதலால் உலகம் அமைத்து வாழ்வின் பயணத்தை துவக்கியிருந்தனர் சம்ருவின் வி.ஆர்’ம், விஷ்வாவின் ம்ருதியும்.
விஷ்வாவின் ரோஜா வாழ்க்கை முழுமைக்குமாய் அவனில் வாசம் கொண்டுவிட்டது. இனி அவர்களுக்கிடையில் தடைகளின்றி ரோஜாக்கள் தூது செல்லும். ரோஜாக்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது நீண்டு கொண்டேயிருக்கும்.
நெஞ்சம் சுமக்கும் காதல் ஆத்மார்த்தமான நிஜமென்றால், எத்தகைய பெரும் தடைகள் போராட்டமாய் அமைந்தாலும்… நேசம் சுமக்கும் நெஞ்சங்களை அந்த காதலே வாழ்க்கை பாதையில் இணைத்திடும்.