சுடர் கல்வி அறக்கட்டளை நிறுவி எழுபத்தி ஐந்தாவது வருடம் பூர்த்தி அடைகிறது.
அதனை பெரிய விழாவாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சுடர் கல்லூரிகள், மற்றும் பள்ளிகளும் விழாக்கோலம் பூண்டிருந்த்து.
சுடர் தலைமை கல்வி குழுமமான திருச்சியில் விழா தொடங்கும் அதே நேரம் அனைத்து இடங்களிலும் துவங்கும் வகையில் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தன.
அந்தந்த ஊரின் முக்கிய பிரமுகர் தலைமை ஏற்று நடத்தும் வகையில் ஏற்பாடு செய்தான் விஷ்வா.
தலைமை கல்வி குழுமத்திற்கு மாநிலத்தின் கல்வி அமைச்சர் வருகை தருகிறார்.
மாலை மாணவர்களின் பலவிதமான கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
பகல் முழுவதும் மாணவர்களுக்கு பல்வேறு வகையான போட்டிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இவ்விழாவில் பழைய மாணவர்கள் அனைவரையும் முடிந்தளவு சுடர் சார்பாக அழைக்கப்பட்டு, அவர்களுக்கான ரீயூனியன் போல் ஏற்பாடு செய்திருந்தான் விஷ்வா. இந்த யோசனையை அவனுக்கு அளித்தது அவனது ம்ருதி.
அன்று சுடர் திருவிழா போல் பல வர்ணங்களால் நிறைந்து வானவில் கோலமாய் காட்சியளித்தது.
விஷ்வா அதீத பரபரப்பில் இருந்தான்.
மினிஸ்டர் கிளம்பி விட்டதாக தகவல் வர, அவனின் பரபரப்பு இன்னும் அதிகமாகியது. அனைத்து சுடருக்கும் அழைத்து ஒரே நேரத்தில் விழா தொடங்க ஆயத்தமாக உள்ளதா என்று தெரிந்துகொண்ட பின்னரே அவனிடம் நிதானம் வந்திருந்தது.
போன வருடம் தான் மாநிலத்தின் சார்பாக அளிக்கப்படும் வளரும் சாதனையாளர் விருதினை பெற்றிருந்தான்.
“இவ்விருதெல்லாம் எதிர்பார்த்து எதுவும் செய்யவில்லை” என்று விஷ்வா விருதினை மறுக்க… அடம் பிடித்து விஷ்வாவை விருதினை ஏற்க வைத்திருந்தாள் சம்ருதி.
“ரொம்பத்தான் என்னை உன் கைக்குள்ள போட்டு வச்சிருக்க ம்ருதி” என்ற விஷ்வாவிடம் அதிகப்படியான காதல் மட்டுமே!
“சொல்ற ஆளு சொன்னதான் கேட்பாங்க போல…” மித்ரன் தன் தம்பியை கேலி செய்ய…
“நீங்க சுசி சொல்லி கேட்டதே இல்லைங்கிற மாதிரி பேசுறீங்க மித்துண்ணா…” என்று மித்ரனை விஷ்வா வாரிட… மித்ரன் சரண்டர் எனும் விதமாக கை உயர்த்தியிருந்தான்.
விருதினை வாங்கிட எவ்வித ஆர்பாட்டமும் இல்லாமல், மிக எளிமையானத் தோற்றத்தில், தான் மட்டுமே சென்று வாங்கியிருந்தான்.
கல்வியில் புதுவிதமாக என்ன யுக்திகளை புகுத்திட முடியுமோ அத்தனையையும் செய்திருந்தான். படிப்பை முடித்து வெளியேறும் மாணவர்களை அவர்களின் விருப்பத்திற்கு மற்றும் திறமைக்கு ஏற்ற வகையிலான வேலையை சுடரே உறுதி செய்து தந்தது.
சுடர் கல்வியியலில் பணி புரிய நினைப்பவர்களுக்கும் வாய்ப்பளித்தான் விஷ்வா.
கல்வியை அத்தனை எளிமையாய் அனைவருக்கும் கொண்டு சேர்த்தான்.
சுடரில் சேர்ந்தால் போதும்.மாணவர்களின் வாழ்க்கை செட்டில்ட் எனும் மந்திரத்தை செயலில் உருவாக்கியிருந்தான் விஷ்வா.
அதன் அடிப்படையில் தான் விஷ்வாவுக்கு விருது வழங்கப்பட்டது.
மினிஸ்டர் திருச்சியை நெருங்கிவிட்டதாக தகவல் வரவும் மித்ரனுக்கு அழைத்தான்.
“மித்துண்ணா வந்துட்டிங்களா?”
“வந்தாச்சுடா. ஸ்டேஜ் பிளேசுக்கு வந்துட்டோம்” என்ற மித்ரன், “சத்தமா இருக்குடா. இங்கு வா பேசிக்கலாம்” என்று வைத்துவிட்டான்.
அடுத்து சம்ருவுக்கு அழைத்தான்.
“எல்லாம் ரெடியா ம்ருதி.”
“ரெடி விஷ்வா. வெல்கம் சர்வீஸ் ஸ்டூடன்ட்ஸ் கேட்டுக்கு போயிட்டாங்க. பிளவர் பொக்கே நான் கொண்டு வந்துட்டிருக்கேன். நீங்க எண்ட்ரன்ஸ் போயிடுங்க” என்றவள், “லவ் யூ விஷ்வா” என்றாள். அதுவரை இருந்த ஒருவித படபடப்பு நீங்கி உற்சாகமாக கல்லூரியின் வாயில் பகுதிக்கு செல்ல, தன்னுடைய அறையிலிருந்து வெளியில் வந்தவன், அலுவலக கட்டிடத்தின் முன்னிருக்கும் பிள்ளையாரை வணங்கிட சென்றான்.
சம்ருதி கலைநிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்கள் தயாராகிவிட்டார்களா என பார்க்க ஒப்பணை அறைக்கு வந்தபோது தான் விஷ்வா அவளுக்கு அழைத்திருந்தான்.
சம்ருதி இப்போது அங்கு பணிபுரிகிறாள். அவள் விஷ்வாவிடம் சொல்லியது போல், சுடர் ஓரளவிற்கு வளர்ந்து, குழந்தை பெற்ற பின்னர் தான் கல்லூரிக்கு வர சம்மதம் தெரிவித்தாள்.
விஷ்வா டென்சனில் இருக்கிறான் என்பதை உணர்ந்தே காதல் வார்த்தை மொழிந்தாள். விஷ்வா எப்போதும் இளைப்பாறும் இடம் ம்ருதியின் காதல் அல்லவா. இப்போதும் அந்த காதல் இருவருக்குள்ளும் பல மடங்கு பரந்து விரிந்து விருட்சம் பெற்றது.
சம்ருதி லவ் யூ சொன்னது அவளுக்கு அருகில் நின்றிருந்த சில மாணவிகளுக்கு கேட்டுவிட… அவர்கள் ஹோ என்று கூச்சலிட்டதில் சம்ருவுக்கு நாணம் அழையா விருந்தாளியாக ஒட்டிக்கொண்டது.
“நீங்க இருக்கிறதை மறந்துட்டேன். சாரி” என்ற சம்ரு, “இதெல்லாம் நமக்குள்ளே இருக்கட்டும்” என்க, “எப்படித்தான் இப்படி லவ் பண்றீங்களோ மேம்” என்றாள் ஒரு பெண்.
“அதுவும் நீங்களும் கரெஸும் கிளாஸ் டைமில் சந்திக்கும் போது யாருன்னே தெரியாத மாதிரி பார்த்துகிட்டு மூவ் ஆவீங்களே சான்ஸே இல்லை மேம்” என்று சிலாகித்தாள் மற்றொரு பெண்.
“அப்போ கிளாஸ் கவனிக்கமால் எங்களைத்தான் நோட் பண்றீங்களா?” என்று கேட்ட சம்ரு, “இருங்க பங்க்ஷன் முடிஞ்சதும் உங்களையெல்லாம் சஸ்பெண்ட் பண்ண சொல்றேன்” என்று பொய்யாக விரல் நீட்டி எச்சரித்தாள்.
அங்கிருந்த மாணவிகள் அனைவரும் சத்தமாக சிரித்து, “எந்தவொரு ஸ்டூடன்ட்ஸ் ஸ்டடியும் வீணாக எங்க கரெஸ் விடமாட்டார் மேம்” என்று கோரஸாகக் கூறிட, சம்ருதி புன்னகையுடன் சென்றுவிட்டாள்.
விஷ்வா பிள்ளையாருக்கு அருகில் சென்ற போது…
ஆறு வயது சுடர் தன்னுடைய நான்கு வயது தங்கை நிதன்யாவின் கை பிடித்து பிள்ளையாருக்கு முன்பு ரோஜா வைத்துக்கொண்டிருக்க… அனுவின் ஆறு வயது மகள் ஆராத்யாவுடன் ஸ்ரீயும் அருகில் நின்றிருந்தனர்.
“என்னது என்னோட பிரின்சஸ் எல்லாரும் கணேசாவுக்கு ஐஸ் வைக்கிறாங்க போலிருக்கே” என்று கேட்டுக்கொண்டே அவர்களின் பின்னால் நின்றிருந்தான் விஷ்வா.
“அச்சோ மாம்ஸ் ஐஸ் வைக்கல… ரோஸ் வைக்கிறோம்” என்று கிலுக்கி சிரித்தாள் ஆராத்யா.
“அச்சோ… மாமாக்கு ஐஸுக்கும் ரோஸ்க்கும் வித்தியாசம் தெரியலையே… சாரிடாம்மா” என்று மழலையாய் மாறி பதில் தந்த விஷ்வா ஆராத்யாவை தூக்கிக்கொள்ள…
எங்கிருந்து வந்தானென்று தெரியவில்லை. தருண் வேகமாக வந்து விஷ்வாவின் முன் நின்று முறைத்தான்.
‘இவன் இருக்கிறதை கவனிக்காமல் விட்டுட்டனே!’ என்று உள்ளுக்குள் அளறினான் விஷ்வா.
தருண் நான்கு பெண்களுக்கும் பிடித்தமானவன். நன்றாக பார்த்துக்கொள்வான். அவர்களுக்கு ஒன்றென்றால் தானும் சிறு பையன் தானென்ற எண்ணமின்று பெரிய மனிதனாக முன் நின்றிடுவான்.
ஆனால் விஷ்வா என்று வரும்போது மட்டும் அதிகப்படியான உரிமை உணர்வு தோன்றிவிடும். தன்னுடைய தங்கைகளுக்கு கூட விஷ்வாவை விட்டுக்கொடுத்திட மாட்டான்.
வீட்டிலிருப்பவர்கள் அனைவரும் அவனை மாற்ற பலவிதமாக பேசியும், தருணால் விஷ்வா விடயத்தில் மாற முடியவில்லை.
தருணை பொறுத்தவரை விஷ்வாவுக்கு பின்னர் தான் மற்றவர்கள். தன் சகோதரிகளாகவே இருந்தாலும்.
“சாரி விஷ்வாப்பா. உங்க விடயத்தில் ஓவர் பொஸஸிவ் ஆகுறேன். இவங்க எனக்காக விட்டுக்கொடுக்கும் போது மாத்திக்கணும் தோணும். ஆனால் முடியமாட்டேங்குதே!” என்றான் சோகமாக.
“இப்போ என் தருண் குட்டி பையன் தானே! வளர்ந்தால் சரியாகிடுவான்” என்று அவனை சரிசெய்து அனுப்பி வைத்த விஷ்வா, வாயிலுக்கு சென்றான்.
தன் குடும்பத்தார் இருக்குமிடம் வந்த தருண், ராஜாவும் தினேஷும் தத்தம் குடும்பத்துடன் வந்திருக்க, ராஜாவின் மகனுடன் இணைந்துகொள்ள, சிறுமியர் தினேஷின் மகளை தங்களுடன் சேர்த்துக்கொண்டனர்.
விஷ்வாவுக்கு முன்பே சம்ரு வந்து நின்றிருந்தாள்.
“எப்போ வறீங்க நீங்க?” தன்னருகில் வந்து நின்ற விஷ்வாவின் இடையிலேயே கை முட்டியால் பிறர் அறியாது இடித்திருந்தாள் சம்ருதி.
“நம்ம வீட்டு வாலுங்களை பார்த்தேன்” என்று விஷ்வா சொல்லிக் கொண்டிருக்கும்போதே அமைச்சரின் கார் வந்து நின்றது.
விஷ்வாவும் சம்ருவும் ஒன்றாக சேர்ந்து பூங்கொத்து கொடுத்து வரவேற்க, அம்மையப்பன் சால்வை போர்த்தி மரியாதை செய்தார்.
விழா இனிதே துவங்கியது.
நிகழ்ச்சியில் முக்கியமானவர்கள் அனைவரும் பேசியதும், நடனம், பாட்டு, நாடகம் என கலைநிகழ்ச்சிகளுக்கு நடுவே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட… கொண்டாட்டமும் கூச்சலுமாய் நிகழ்ச்சி அழகாய் முடிந்தது.
பத்து மணிக்கெல்லாம் முடிவடைந்திட வேண்டுமென்பதில் விஷ்வா கவனமாக இருந்தான். அதன் படியே முடித்திருக்க… மாணவர்கள் அனைவரும் பத்திரமாக வீடு செல்வதற்காக கல்லூரி வாகனங்கள் தயாராக நிற்க… விஷ்வா அங்கு சென்றுவிட்டான்.
எட்டு மணி ஆகியதுமே குழந்தைகள் தூக்கம் வருகிறதென்று ஆரம்பிக்க… வருணும், யுகியும் குழந்தைகள் அனைவரையும் கூட்டிக்கொண்டு வீட்டிற்கு எப்போதோ புறப்பட்டிருக்க, மற்றவர்கள் நிகழ்ச்சி முடிந்து இப்போது தான் கிளம்பினர்.
சம்ரு செல்வதற்கு முன் விஷ்வாவை தேடிச்செல்ல…
“டைம் ஆகும் ம்ருதி. நீ அவங்களோட கிளம்பு. ஸ்டூடன்ட்ஸ் பத்திரமா அனுப்பி வச்சிட்டு, எல்லாம் முடிச்சிட்டு வர லேட்டாகும்” என்றவனை சில கணங்கள் அமைதியாக பார்த்து நின்றவள் ஏதும் சொல்லாது கிளம்பிவிட்டாள்.
விஷ்வா வீட்டிற்கு வரும்போது வீடே நிசப்தமாக இருந்தது. பின்னே நள்ளிரவுக்கு மேல் கடந்தல்லவா வந்திருந்தான்.
தாழிடப்படாத தங்கள் அறையை திறந்துகொண்டு விஷ்வா உள் செல்ல, சம்ருதி அவர்களின் பிரத்யேக அறைக்குள் தூங்கியிருந்தாள்.
குளித்து முடித்து வந்தவனின் அரவத்தில் விழித்துக்கொண்டவள்,
“இப்போ தான் வறீங்களா? டைம் என்ன?” என்று கேட்டிட…
“எல்லாம் என் ம்ருதியை சிணுங்க வைக்கிறதுக்கான நேரம் தான்” என்று அவளை அணைத்து படுத்து, அவளின் பின்னங்கழுத்தில் குறுகுறுப்பு காட்டியவன், “இன்னைக்காவது பதில் சொல்லு ம்ருதி” என்றான். கிட்டத்தட்ட கெஞ்சல் தொனி.
“அதென்ன இன்னைக்கு?” எனக் கேட்டவள் அவன் பக்கம் திரும்பி படுத்தாள்.
“மேடம் எனக்கு தெரியாமலே என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டிங்களே அந்த டே இன்னைக்கு” என்றவன் சாய்வாக அமர்ந்து சம்ருவை இழுத்து தன் மேல் போட்டுக்கொண்டான்.
“ஹோ… அந்த ரிஜிஸ்டர் மேரேஜ் பேப்பரில் இருக்கும் டேட்டா?” என்று கேட்டவள், “அதுதான் ஸ்ட்ராங்
எவிடென்சா இருக்கும். அதை காட்டினால் வேற கேள்வி கேட்காமல் சுடரை கொடுத்திடுவாங்கன்னு தோணுச்சு. நம்ம ரெண்டு பேரோட பெர்த் டேட் வச்சு… டேட் அண்ட் மன்த் போட்டேன். அது பார்த்தால் நடக்காத கல்யாணத்துக்கு நீங்க ஒன்னு பண்ணீங்களே அதுக்கு நெருக்கமான டேட்டா ஆகிருச்சு” என்று விளக்கமாகக் கூறினாலும், அவன் கேட்பதற்கு மட்டும் அவள் பதில் சொல்லிட தயாராக இல்லை.
அவன் கேட்பது சரோஜாவிடம் அவள் கொடுத்த புகைப்படம் பற்றி…
இருவரும் ஒன்றாக கல்லூரி நாட்களில் அப்படியொரு புகைப்படம் எடுத்ததாக அவனுக்கு நினைவே இல்லை. ஏன் இருவரும் ஒன்றாக ஒரே இடத்தில் இருந்த தருணங்களைக்கூட விரல் விட்டு எண்ணிவிடலாமே! அவனும் அதைப்பற்றி பலவிதமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறான் அவள் சொல்வதாக இல்லை.
“என்னோட சைன் எப்படி போட்ட?”
“சொல்ல முடியாது” என்றவள், எழுந்து தண்ணீர் அருந்த… அவனின் பார்வை முழுக்க, தண்ணீர் துளிகள் உருண்டோடும் அவளின் குரல் வளைவில் தான். கூடவே அவனது நெஞ்சமும் தடம் புரண்டது.
விஷ்வா முகம் சோகமாக வைத்திட…
“வால்பாறை ஸ்கூல் ரிஜிஸ்டரில் உங்க சைன் பார்த்திருக்கேன். அதை பிராக்டிஸ் பண்ணி தான் மேரேஜ் பேப்பரில் போட்டேன். ஆனால் அப்படியே அசல் மாதிரி வரும் எக்ஸ்பெக்ட் பண்ணல” என்றவள், “இந்த விஷ்வாவுக்கான எல்லாம் ம்ருதி பொண்ணுக்குத்தான்” என்று சிலாகித்துக் கூறினாள். தண்ணீர் அருந்தும் இடைவெளியில்.
அவளை தோள் வளைவில் கொண்டு வந்தவன்,
“பேபிஸ்லாம் எங்கே?” எனக் கேட்டு, அவளின் இறுதி துளி நீரை தான் பருகியிருந்தான்.
மனைவியின் இதழில் நீர் அருந்தத் துவங்கியவன், தேன் பருகி விடுவித்தான்.
“கேள்வி கேட்டு பதில் சொல்ல விடமா பண்றீங்க!” என்றவள் அவனின் மீசையை வலிக்க இழுத்து வைத்தாள்.
“நீ இழுத்து இழுத்து ஒருநாள் கையோட வரப்போவுது இல்லைன்னா நான் மொத்தமா ஷேவ் பண்ணிடப்போறேன் பாரு” என்றான்.
“போடி” என்றவன், “பேபிஸ் எங்கே?” என்க, “எல்லாம் ஒண்ணா இருந்தால் தருணோட தானே இருப்பாங்க. இன்னைக்கும் அக்கா வீட்டில் தூங்கியாச்சு” என்றாள்.
அவ்வீட்டின் பத்திரத்தை ஒருநாள் விஷ்வா வருணிடம் கொடுக்க… வருண் வாங்கவே மறுத்துவிட்டான். பின் விஷ்வாவின் அடத்தில் வருண் தான் இறங்கி வரவேண்டியதாகியது.
இப்போதும் விஷ்வா சம்ருவுடன் அவ்வவ்வபோது கோயம்புத்தூர் சென்று செண்பகம் பாட்டியை பார்த்து வருவான். அதில் அவருக்கு தனி சந்தோஷம். தனித்திருப்பவருக்கு உறவாக நாங்கள் இருக்கிறோம் என்ற நம்பிக்கையின் மகிழ்ச்சியை அவருக்கு விஷ்வா அளித்திருந்தான்.
“அது அப்படியில்லை ம்ருதி… நமக்கு பிரைவசி கொடுக்க வருண்ணா பண்ற பிளான் இது” என்று அவன் கண்ணடித்து சொல்ல… அவனின் நோக்கம் புரிய, “எனக்கு தூக்கம் வருதுப்பா… என்னால முடியாது” என்று அவள் விலகி படுக்க… வி.ஆர் விட்டால் தானே!
தன்னுடைய மொத்த காதலையும் கொஞ்சமும் குறையாது ஒவ்வொரு முறையும் புதிய தேடல்களின் வழி காட்டிக்கொண்டிருப்பவன், இன்றும் தன் ஆலிங்கினத்தின் கீழ் தன்னவளை தன்னை மட்டுமே நினைக்க வைத்து, உலகம் மறந்திட மகிழ்வின் ஆழத்தில் கரை சேர்த்து… தானும் அவளின் தீரா காதலில் மையல் கொண்டு பித்தாகினான்.
திடீரென சத்தம் கேட்க… இருவரும் அறையை விட்டு வெளியில் வந்து பார்க்க, அனைவரும் மொட்டை மாடிக்கு சென்று கொண்டிருந்தனர்.
“என்னப்பா இந்நேரத்தில் மொட்டை மாடிக்கு?”
அம்மையப்பனிடம் விஷ்வா வினவிட,
பிள்ளைகளுடன் வருண் மற்றும் யுகியும் கூட படிகளில் ஏறிக் கொண்டிருந்தனர்.
“எல்லாம் இந்த ராஜாவும், தினேஷும் பண்ற வேலை விஷ்வா. காரணமே சொல்லாமல் இந்நேரத்துக்கு வீட்டை தட்டி எல்லாரையும் எழுப்பி மேல வாங்கன்னு சொல்லிட்டு போறானுங்க!” என்று பதில் சொல்லிக்கொண்டே அம்மையப்பன் படி ஏறிட, விஷ்வாவும் சம்ருவும் கூட மேலேறினர்.
“நீங்களே வந்துட்டிங்களா?” எனக் கேட்ட ராஜா, “வாங்க வாங்க ரெண்டு பேரும் சேர்ந்து கேக் கட் பண்ணுங்க” என்று அழைத்தான் தினேஷ்.
குழந்தைகள் ஆறு பேரும் கேக்கினை சுற்றி துள்ளலாய் குதித்துக் கொண்டிருக்க…
“எதுக்குடா கேக் கட்டிங். இன்னைக்கு என்ன ஸ்பெஷல்” என்று மித்ரனும், வருணும் ஒன்றாகக் கேட்க,
“நாங்களும் இங்க வரும்வரை கேட்டு பார்த்துட்டோம் ரெண்டு பேரும் வாய் திறக்கவே இல்லை” என்று அங்கலாய்த்தனர் ராஜா மற்றும் தினேஷின் மனைவி நேத்ரா மற்றும் வசுந்தரா.
“என்னடா?” சம்ரு கேட்டிட…
“சீக்கிரம் கட் பண்ணுங்க விஷ்வாப்பா கேக் சாப்பிடணும்” என்று அவசரப்படுத்தினார்கள் பிள்ளைகள்.
“ஆமாம் ஆமாம் வந்து கட் பண்ணுங்க” என்று ராஜா அழைக்க…
“ரீஸன் சொல்லுங்கடா?” என்று விஷ்வா கேட்கும்போதே…
“நானும் வந்துட்டேன்” என அங்கு வந்த சரண்… “சாரி கொஞ்சம் டிலே ஆகிருச்சு” என்று தினேஷுடன் சேர்ந்து வானில் வெடிக்கும் பட்டாசுக்களை கொளுத்திட…
குழந்தைகளுடன் பெரியவர்களும் உற்சாகமாக கண்டு களித்தனர்.
“விஷ்வா இன்னைக்கு தான் நானும் தினேஷும் ஏதோ விளையாட்டா சொல்லப்போய்… நீ சம்ருவை விரும்புறன்னு எங்களுக்கு ஷாக் கொடுத்த நாள். ஃபிஃப்டின் இயர்ஸ் கம்ப்ளீட்டட்” என்று சொல்லி ராஜா கத்தியை நீட்டிட,
விஷ்வா அவனை வெட்டவா குத்தவா என்ற ரீதியில் பார்த்திட… ‘டேஸ்லாம் ஒண்ணா சிங்க் ஆகுதே!’ என நினைத்தாள் சம்ரு.
“அப்போ உங்களுக்கு லவ் ஆனிவெர்சரியா?” என்று கேட்டு வருணும் மித்ரனும் கை தட்டிக்கொள்ள…
“அண்ணாஸ்” என்று சிணுங்கிய விஷ்வாவின் முகத்தில் ஒளிர்ந்த அதிகப்படியான மகிழ்வு அங்கிருந்த அனைவருக்கும் ஒருவித இதத்தை அளித்தது. விஷ்வா அங்கிருப்பவர்களின் ஒட்டுமொத்த அன்பிற்கும் அரசன். அதனை அவன் உணர்ந்தானோ இல்லையோ, குழந்தைகள் உட்பட அனைவரும் உணர்ந்திருந்தனர்.
“குழந்தைங்க முன்னாடி இதெல்லாம் தேவையாடா” என்று விஷ்வா சிறு புன்னகையோடு கேட்க…
“எங்களுக்கு உன்னுடைய ஒவ்வொரு நிகழ்வும் ஸ்பெஷல் தான் விஷ்வா” என்ற அம்மையப்பன் அவனின் முதுகில் கை வைத்து… “போங்க, கட் பண்ணுங்க” என்றார்.
சுஜா சம்ருவின் கையில் அழுத்தம் கொடுக்க…
விஷ்வாவும், சம்ருவும் இணைந்து கேக் வெட்டிய தருணம் எல்லோரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தது.
அவ்விடத்தில் அந்நொடி நிரம்பியிருந்தது முழுக்க முழுக்க அன்பு மட்டுமே.
அன்பில் உயர்ந்தோர் எதையும் இழந்தார் இல்லை.
இனி ஒரு கூட்டுக்குள் அவர்களின் சந்தோஷத்திற்கு பஞ்சமில்லை.