கடந்து சென்ற சில வருடங்களில் வேறெப்போதும் தனது இளைய மகனினன் முகத்தில் இப்படியொரு புன்னகையை சுஜா கண்டதில்லை.
அதற்கு முன்பும் சிரித்திருக்கிறான். அவை எல்லாம் ஒரு இன்ச்சில் மட்டுமே இருக்கும். இப்படி விரிந்த புன்னகை, இப்போது தான் காண்கிறார்.
முதல் முறையாக ‘தவறு செய்துவிட்டோமோ?’ என்று நினைத்தார்.
ஒரு நொடி தான். அவரது அண்ணன் பாசத்தில் தான் செய்தது எல்லாம் சரிதானென்று தோன்றியது. அடுத்த கணமே.
மித்ரனிடம் என்ன பதில் சொல்வதென்று தெரியாது அவர் விழித்து நின்ற தோற்றம் கண்டு தான் விஷ்வா சிரித்திருந்தான். இப்போது தன்னை பார்த்துக்கொண்டே சிந்தையில் உழன்றபடி நொடிக்கு நொடி முகத்தில் மாற்றத்தை காட்டிக்கொண்டிருந்த சுஜாதாவின் மீது விஷ்வாவின் பார்வை அழுத்தமாக ஆராய்வாக படிந்தது.
அதில் சுதாரித்துக் கொண்ட சுஜா…
“உனக்கு மாமான்னா சுசி அப்பாவுக்கு முன்னவே என் அண்ணன் தான்” என்றார்.
“ஓ…” என்ற விஷ்வா,
“அப்போ உட்கார்ந்து பேசலாம்மா” என்று இறங்கி வந்து மித்ரனின் அருகில் அமர்ந்தான்.
“வாங்கம்மா… வந்து இப்படி உட்காருங்க.”
வராது நின்றிருக்கும் சுஜாவை அழைத்து தனக்கு முன்னிருக்கும் இருக்கையை காண்பித்தான்.
“என்ன கேட்கணும்? கேளுங்க.”
விஷ்வா பேசியதும் மூத்த மகனையும் கணவரையும் மாற்றி மாற்றி பார்த்தவர் “புரமோத் மேல நிச்சயம் தப்பிருக்காது விஷ்வா” என்றார்.
அப்போது அங்கே வந்த அனு இரு அண்ணாக்களுக்கு நடுவில் அமர்ந்து விஷ்வாவின் தோள் மீது தலை சாய்த்துக்கொண்டாள்.
“எப்போ வந்தீங்கண்ணா?” மித்ரனிடம் கேட்டாள்.
“மார்னிங்கே வந்துட்டேன்டா! நேரே ஆபிஸ் போயிட்டேன்” என்ற மித்ரன், “நான் வரும்போது தூங்கிட்டு இருந்த, டிஸ்டர்ப் பண்ணல” என்றான்.
“உள்ள குட்டி என்ன சொல்றான்” என்று மித்ரன் அனுவின் வயிற்றில் கை வைத்து கேட்க,
“குட்டிகிட்டவே கேளுங்க” என்றாள் அனு.
அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருக்க…அவர்களையே பார்த்திருந்தான் விஷ்வா. சுஜா சொல்லியதை தவிர்த்தவனாக.
அதில் விஷ்வா தன்னை வேண்டுமென்றே தவிர்ப்பதாக நினைத்து,
“ரெண்டு பேரும் வேறெங்காவது போய் பேசுங்க” என்று சற்று சத்தமாகவே சொல்லிவிட்டார் சுஜா.
அனு… எதற்கு இந்த கோபம், திடீரென அம்மாவுக்கு என்னவாயிற்று என்று தெரியாது அவரின் சத்தத்தில் உடல் அதிர நிமிர்ந்து அமர, அவளின் அதிர்வை தன்மீது உள்வாங்கிய விஷ்வா…
மித்ரன் அன்னையிடம் இப்படியொன்றை எதிர்பார்க்கவில்லை. அவரது அண்ணன் பாசம் கொஞ்சம் கொஞ்சமாக அவரை குடும்பத்திடமிருந்து விலக்கி வைக்கிறது என்பதை அவரே அறியவில்லை.
“நீ வாடா!” என்ற மித்ரன் தங்கையை கைத்தாங்கலாக கூட்டிக்கொண்டு தோட்டது பக்கம் சென்றான்.
அம்மையப்பனும் எழ…
“நீங்களும் போயிட்டால் எனக்கு யாரு சப்போர்ட் பண்ணுவா?” என்று கேட்டார் சுஜா.
“உன் அண்ணனை கூப்பிடு” என்றவர் நகர,
“உட்காருங்கப்பா” என்றான் விஷ்வா.
தன்னுடைய மகனுக்காக மட்டுமே வேண்டா வெறுப்பாக அமர்ந்தார்.
இத்தனை நடந்தும் சுஜா அவரின் அண்ணன் பக்கம் நிற்பது அம்மையப்பனுக்கு எரிச்சலாக இருந்தது.
சுஜா இப்போது விஷ்வாவை நேருக்கு நேர் பார்க்க…
“என்னை சீண்டும் போதெல்லாம் நான் பொறுமையாதான் இருந்தேன்.”
விஷ்வாவின் பார்வையை எதிர்கொள்ள முடியாது சுஜாதாவின் விழிகள் தாழ்ந்தன.
“அவன் கை வைக்க நினைத்தது என் அண்ணா மேல… இதுவரை அவங்க விடயத்தில் நான் பொறுமையா இருந்ததே உங்களுக்காகத்தான். எப்போ எனக்கு சொந்தமானவங்க மேல கை வைக்க ஆரம்பிச்சானோ இனி அவனை விடமாட்டேன்.”
விஷ்வா அழுத்தமானவன் அமைதியானவன் என்று நன்கு தெரியும். ஆனால் இதனை கோபக்காரன் என்பது இப்போது தான் சுஜாவுக்கு தெரிகிறது. அதுவும் கண்கூடாக நேரில் பார்ப்பதால் மட்டுமே நம்புகிறார்.
பார்வையால் பிறரை நிறுத்தி வைப்பனுள் இவ்வளவு கோபம் இருக்கும் என்பதே இன்று தான் அறிகிறார் அவர்.
“புரமோத் செய்யலன்னு அண்ணா சொல்லுறார் விஷ்வா. நீதான் மிஸ் அண்டர்ஸ்டாண்ட் பண்ணிட்ட.” அப்போதும் அவரது அண்ணன் மகனுக்காகத்தான் பேசினார். முதலில் போன்று துடியாக இல்லாமல் குரல் சற்று மெலிந்து ஒலித்தது.
“அப்படி என்ன தான் அண்ணன் பாசமோ?” விஷ்வாவிடம் மனத்தாங்கல்.
“நீ உன் அண்ணனுக்கு பார்த்து பார்த்து செய்யுறீயே அப்படித்தான் விஷ்வா எல்லாருக்கும்.” மகனை மடக்கிவிட்டதாக நினைத்து கூறினார்.
“என் அண்ணனும் உங்க அண்ணனும் ஒண்ணு கிடையாது. அது உங்களுக்கே நல்லா தெரியும். என்னை பேச வைக்காதீங்கம்மா” என்றவன் பிடரியை உள்ளங்கையால் அழுத்திக் கொண்டான்.
“அதான் ஒண்ணுமாகலையே விஷ்வா. புரமோத்தை விட சொல்லேன். நீ சொன்னா விட்டுருவாங்கன்னு அண்ணா சொன்னார்” என்றார் சுஜா.
விஷ்வா இரண்டு பக்கமும் தலையை ஆட்டிக்கொண்டான். அவனுக்கு சலிப்பாக இருந்தது.
“நானோ மித்ரனோ கொஞ்சம் சுதாரிப்பா இல்லாமல் இருந்திருந்தால், இந்நேரம் மித்து ஐடி டிப்பார்ட்மெண்ட் கஸ்டடியில் இருந்திருப்பான். நம்ம டிரஸ்ட் பேர் எல்லாம் நியூஸ் சேனலுக்கும் தலைப்பு செய்தியாகியிருக்கும். உங்க அண்ணன் பக்கம் மட்டும் பார்க்காமல் எங்க பக்கமும் கொஞ்சம் பாருங்க. மித்து மாட்டியிருந்தால் அப்போ உங்களுக்கு சந்தோஷமா இருந்திருக்குமா?” என்று சற்று காட்டமாகவே கேட்டான்.
அவரிடம் வாதம் செய்திருக்கிறான். அவனிடம் பேசவே அவரை பயம் கொள்ள செய்திருக்கிறான். ஆனால் ஒரு போதும் இப்படி கடிந்து பேசியது இல்லை. இன்று அதையும் செய்துவிட்டான். சுஜா செய்திட வைத்துவிட்டார்.
“அப்பவும் நீங்க உங்க அண்ணன் பக்கம் தானே பேசியிருப்பீங்க!” அத்தனை நக்கல் அவனிடத்தில்.
“அவன் தான் செய்யலையே விஷ்வா.”
“ம்மா” என்று அழுத்தமாக பற்களுக்கு இடையில் உரைத்தவன்,
“அவன் செய்தானா இல்லையான்னு உங்களுக்கும் தெரியும். உங்க அண்ணன் மகனை பத்தியோ, இல்லை உங்க அண்ணன் குடும்பத்தை பத்தியோ இனி என்கிட்ட பேசாதீங்க. தப்பு செய்யலன்னா அவங்களே அவனை விட்டுட போறாங்க. இதுக்கு எதுக்கு உங்க அண்ணன் பதறனும்” எனக் கேட்டவன் முடிக்கும் முன்பு,
“நீதான் ஆள் வச்சு அவன் ஆபீஸ் ரூமில் கணக்கில் இல்லாத ஃபைல் எல்லாம் வச்சியாமே விஷ்வா?” என்று கேட்டிருந்தார்.
“அடுத்தவங்க பொருள் நமக்கெதுக்குன்னு திருப்பி வைச்சேன் ‘ம்மா” என்றான். நக்கல் சிரிப்புடன்.
நொடிக்கு நொடி தன்னுடைய முகபாவத்தை மாற்றிய விஷ்வா சுஜாவுக்கு முற்றிலும் புதிது.
“அப்போ நீதான் வச்சிருக்க?”
“ஆமாம். நான் இல்லைன்னு சொல்லலையே! அவன் செய்ததை திருப்பி செய்திருக்கேன். அவ்வளவு தான். என்கிட்ட இத்தனை கேள்வி கேட்குறீங்களே, உன் பையன் ஏன் இப்படி செய்தான்னு உங்க அண்ணனிடம் என் அண்ணனுக்காக கேள்ளுங்களேன் பார்ப்போம்” என்றானே பார்க்கலாம், சுஜாதாவின் முகம் மொத்தமாக விழுந்துவிட்டது.
அவரால் புருஷோத்தமனிடம் அவ்வாறு நேரடியாகக் கேட்டிட முடியுமா என்ன? பாசத்தால் கட்டிபோட்டிருக்கின்றாரே. அதை சுஜா தாண்டி விடுவாரா?
பாசத்தால் அடிமை படுத்தி வைத்திருக்கிறார் என்பதை சுஜா எப்போது உணரப்போகின்றாரோ?
அதற்கு வாய்ப்பில்லை என்று தான் விஷ்வாவுக்குத் தோன்றியது.
மகன் வாழ்க்கையே அவரால் கேள்விக்குறியாக நிற்கும் போதே தன்னுடைய அண்ணனைப்பற்றி உணர்ந்து கொள்ளாதவரா இந்த விடயத்தில் புரிந்துகொள்ள போகிறார்.
“ஒருத்தங்க நமக்கு கெட்டது செய்தால் நாமும் அவங்களுக்கு அதையே திருப்பி செய்யணும் இருக்கா என்ன?” எனக்கேட்ட சுஜாவை தீர்க்கமாக பார்த்தவன்,
சில நொடி அமைதிக்கு பின்…
“செய்யுற தப்புக்கெல்லாம் மன்னிப்பு மட்டுமே சரியான தண்டனையாகிடாது. பல மன்னிப்புகளில் திருந்தாதவன் இனியும் திருந்துவான்னு எனக்கு நம்பிக்கையில்லை” என்று சொல்லி விடுவிடுவென மேலே சென்றுவிட்டான்.
“எவ்வளவு பட்டாலும் மாறுவேனான்னு இருக்காங்களே இவங்க.” வாய்விட்டு முணுமுணுத்தவனாக அறைக்குள் நுழைந்த விஷ்வா கால்களை நிலத்தில் பதித்தபடி அப்படியே மெத்தையில் மல்லாக்க படுத்துவிட்டான். அன்னையை நினைத்து அவனின் மனம் சமன்பட மறுத்தது. நெற்றியை அழுந்த தேய்த்து விட்டான். நிமிடங்கள் கடந்தன.
‘இப்படியே இருந்தால் சரிவராது’ என நினைத்தவன் குளியலறைக்குள் புகுந்துகொண்டான்.
“எப்படி பேசிட்டு போறான் பாருங்க!” சுஜா மற்றும் விஷ்வாவின் பேச்சுக்களை பார்வையாளராக மட்டுமே பார்த்திருந்த அம்மையப்பன் விஷ்வா மேலேறியதும் இருந்த இடத்திலிருந்து எழுந்துகொள்ள கணவரிடம் பொறுமினார் சுஜா.
அம்மையப்பனின் பதிலில் சுஜா வாயடைத்து நின்றார். என்றுமே தன்னிடம் சத்தமிட்டு கூட பேசிடாத கணவர் இன்று இவ்வாறு சொல்லியதும் சுஜாவிடம் அதிர்வு.
“அப்போ அவன் பேசினது சரின்னு சொல்றீங்களா?”
அவரிடம் பிள்ளை மற்றும் கணவர் தன்னுடைய பேச்சினை அலட்சியப்படுத்துகிறார்களே என்கிற ஆதங்கம். முதல் முறை என்பதால் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
“உன்னை மட்டுமே யோசிச்சு நாங்க பொறுமையா இருந்ததெல்லாம் போதும் சுஜா” என்ற அம்மையப்பன், “இனியாவது விழிச்சிக்கோ. பாசத்துக்கும் அடிமைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு” என்றவர் தன்னுடைய மற்ற இருப்பிள்ளைகளை நோக்கி தோட்டத்திற்கு நகர்ந்தார்.
எப்போதுமே தன் குடும்பம் தன் பின்னால் நிற்கும் என்கிற கர்வம் வீழ்ந்த தருணம். சுஜா இதனை புருஷோத்தமனிடம் சொல்ல முடியாது.
“குடும்பத்தை உன் கட்டுப்பாட்டில் வைக்கத் தெரியாதா” என்று வறுத்தெடுத்திடுவார்.
கணவன், பிள்ளை என் யார் பேசியும் அவரது மூளை சரியாகவில்லை. மீண்டும் அண்ணன், அவரின் குடும்பத்தை நினைத்து தான் வருத்தம் கொண்டார்.
சுஜாவையும் குறை சொல்லிட முடியாது. தாய் தந்தையற்ற தன்னை அண்ணன் என்பவன் அனைத்துமாக இருந்து வளர்த்த நன்றிக்கடன் அவரை புருஷோத்தமன் எது செய்தாலும் அவர் பக்கம் நிற்க சொல்கிறது. கண்மூடித்தனமான பாசம் அண்ணன் மீது. அவரும் என்னதான் செய்வார்.
இரவு உணவுக்கு விஷ்வா வந்தபோது சுஜா அவரின் அண்ணனிடம் பேசிக்கொண்டிருக்க… விஷ்வாவின் உடல் தானாக இறுகியது.
‘மீண்டும் மீண்டும் அண்ணன் பாசத்தில் குடும்பத்தை தள்ளி நிறுத்துகிறார்’ என்று மனதில் வெடித்தவன் உணவு உண்ணாது சென்றுவிட்டான்.
அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தவன் மொபைலை எடுத்து வாட்ஸப்பில் சம்ருதியின் பக்கத்தை திறந்தான். அவளது புரொஃபைலில் உள்ள அபௌட் கேப்ஷனில் கடந்த ஏழு வருடங்களாக மாற்றப்படாது இருக்கும் வாக்கியத்தை வாசித்தான். மீண்டும் மீண்டும் படிதான். தன்னுடைய மனம் ஒருநிலை படும்வரை அந்த ஒற்றை வரி வாக்கியத்தையே பிடித்திருந்தான்.
வலது கையின் நான்கு விரல்களும் மொபைலை அணைத்தவாறு பிடித்திருக்க, பெருவிரல் கொண்டு அவ்வரியை மெல்ல வருடிக்கொண்டிருந்தான்.
இன்றும் அந்த வாக்கியத்தை தொட்டு தடவிக் கொண்டிருந்தவனின் மனம், சென்ற வாரத்தில் நடந்த நிகழ்வுகளை அசைபோட்டபடி வெதும்பிக் கொண்டிருந்தது.
வழக்கம்போல் அவனுக்காக கடந்த பல வருடங்களாக அவள் மாற்றாது வைத்திருந்த வரி என்றும்போல் இன்றும் அவனின் மனதை மெல்ல குளிர்வித்து விஷ்வாவை அமைதிபடுத்தியது.
அன்று சுஜா அதைப்பற்றி விஷ்வாவிடம் பேசியது. புருஷோத்தமன் என்ன கூறினாரோ சுஜா அதன் பின் புரமோத் பற்றி விஷ்வாவிடம் பேசவில்லை.
அதனால் மனதில் எழுந்த குழப்பத்தால் தான் அன்றைய தினத்தை இன்று ஓட்டிப்பார்த்தான் புருஷோத்தமனின் திட்டம் நிச்சயம் தன் அன்னையின் மூலம் என்பதை கண்டுகொண்டான்.
விஷ்வா அமைதிக்கொள்ளும் இடம் சம்ருதி மட்டுமே.
அவளிடம் எப்போதுமே அவனுக்கான தெளிவு கிடைக்கும்.
மீண்டும் ஒருமுறை கேப்ஷனை படித்தவன் மொபைலை பாக்கெட்டில் போட்டபடி எழுந்து கொண்டான்.
வழக்கமான ரவுண்ட்ஸ். கல்லூரியை சுற்றி.
இருப்பினும் அவனது உள்ளம் அவளது வார்த்தைகளை அவளது குரலில் உள்வாங்கியபடி இருந்தது.
“I will always be with you no matter the circumstances. S’VR❤️.” (எந்தவொரு சூழலாக இருந்தாலும், நான் எப்போதும் உன்னுடன் இருப்பேன்.)