சிங்கமும் தோற்றுப்போகும் வி.ஆர்’ன் அமர்த்தலான தோரணையில். அவனது பார்வையின் தீட்சண்யம் இந்திராவை பொசுக்கிக் கொண்டிருந்தது.
தான் பார்க்க பிறந்து வளர்ந்தவனின் கம்பீரத் தோற்றம் அவருள் ஆத்திரத்தை அதிகரித்தது.
‘இவன் தன்னை எதிர்த்து பேசுவதா?’ என்று சற்றும் அசராது நின்றார். உள்ளுக்குள் வி.ஆர்’ன் முகம் பயத்தை அளித்தாலும் காட்டிக்கொள்ளாது நின்றிருந்தார்.
அப்போது மித்ரன் அங்கு வர,
அவர்களுக்குள் நடந்து கொண்டிருக்கும் போர் பற்றி அறியாது,
“வாங்க அத்தை. எப்போ வந்தீங்க?” என்று கேட்டவன், அவரின் முகம் பார்த்து ஏதோ சரியில்லை என்று கணித்தவனாக தந்தையின் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.
தம்பியின் தோற்றம் கண்டவன்,
“சிங்கத்தை சீண்டிட்டாங்களாப்பா?” என்று அம்மையப்பனிடம் கிசுகிசுத்தான்.
அவரும் ஆமாமென்பது போல் தலையசைத்திட…
“அவனே எப்படான்னு காத்திருந்தான். வந்து சிக்கிட்டங்களேப்பா. வச்சு செஞ்சிடுவானே” என்ற மித்ரனின் முகத்தில் இளநகை.
“என்னப்பா என்ன கேட்டுட்டு உன் அப்பாகிட்ட பேசிட்டு இருக்க?”
இதற்குமேல் விஷ்வாவிடம் தன்னுடைய ஆட்டம் செல்லாதென்று மித்ரனிடம் ஆரம்பித்திருந்தார்.
“நீங்க பதில் சொல்லலையே அத்தை.”
“யாருக்குமே பெரியவங்கிற மரியாதை கொஞ்சமும் இல்லை. வயசு வித்தியாசம் இல்லாமல் எதிர்த்து பதில் பேசுறீங்க” என்றவர், “நீயே அஞ்சலியை கட்டியிருந்தாள், இந்த பிரச்சனை எல்லாம் வந்திருக்குமா? என்னவோ உன் தம்பிக்காரன் சொல்லிட்டான்னு, எவளோ ஒருத்தியை இழுத்துட்டு வந்துட்ட. ஆனால் அவளோட நீ குடும்ப நடத்துறியா இல்லை உன் த…”
“அத்தை…” மித்ரன் வெகுண்டு எழுந்துவிட்டான்.
மித்ரனின் கோபம் அனைவருக்குமே புதிது.
சிறு வயது முதல் மித்ரன் கோபப்பட வேண்டிய இடத்திலெல்லாம் அவனுக்கு அரணாக முன் வந்து நின்றிடுவான் விஷ்வா. அதனால் மித்ரனுக்கு தன்னுடைய கோபத்தை காட்டும் தருணம் அமைந்ததே இல்லை.
ஆனால் இன்று, அவன் வாய் மூடிக்கொண்டிருந்தால் அவர் சொல்வதை ஏற்றுக் கொண்டதைப்போல் ஆகிவிடுமே! அதனாலே கோபத்தை தாமதியாது வெளிப்படுத்தினான்.
“என்னடா இல்லாததை சொல்லிட்டேன் நான்…” அவர் முடிக்கவில்லை, மித்ரன் கை நீட்டியிருந்தான். அவன் அடிக்கு முன்னால் அம்மையப்பன் அடித்ததெல்லாம் அடியே இல்லையென்று தோன்றிவிட்டது அவருக்கு.
“அத்தைன்னு பார்க்கமாட்டேன்” என்று விரல் காட்டி எச்சரித்தவன், “இந்த அத்தைங்கிற அழைப்புக்கூட என் அப்பாவோட பிறந்துட்டிங்க… அதுக்காகத்தான்” என்றதோடு, தன் தம்பியின் பக்கம் திரும்பியவன், “இனி இவங்க நிழல் கூட நம்ம வீட்டில் படக்கூடாது” என்று சொல்லிவிட்டு தன்னுடைய அறைக்கு சென்றுவிட்டான்.
“என்னடா ஆளாளுக்கு துள்ளுறீங்க… என் பொண்ணு வாழ வேண்டிய இடத்தில் இவ வாழ்ந்துட்டு இருக்கிறாள். சரின்னு விட்டு உனக்கு கட்டிக்கொடுத்தால், நீ அவளை வீட்டை விட்டு அனுப்பிட்டு உன் இஷ்டத்துக்கு ஆடிட்டு நிக்குற” என்றவர் நாக்கில் நரம்பில்லாது பேசிக்கொண்டே போக அம்மையப்பன் அறுவறுத்துப் போனார்.
இப்படியும் பேசுவார்களா என்று.
“என்ன செய்யணுமோ செய்திடு விஷ்வா” என்றவர் எழுந்து செல்ல…
“என்னங்க… அண்ணி” என்று தடுத்தார் சுஜா.
“உனக்கு நான் வேணுமா உன் அண்ணன் குடும்பம் வேணுமா? முடிவு பண்ணிக்க. உன் அண்ணன் தான் உசத்தின்னா, உன் அண்ணியோடு நீ இப்பவே கிளம்பலாம். டிவோர்ஸ் பேப்பர் உன்னைத்தேடி வரும்” என்று வார்த்தையால் இடியை சுஜாதாவின் தலையில் மெல்ல இறக்கிச் சென்றிருந்தார் அம்மையப்பன்.
விவாகரத்து வாங்கும் வயதா?
சுஜா கப்சிப் என்று அப்படியே தரையில் அமர்ந்துவிட்டார்.
“பார்த்தியா சுஜா உன் வீட்டுக்காரர் சொல்லுவதை!” இதனை சாதகமாக வைத்தி சுஜாவை தூண்டிவிடலாமென இந்திரா நினைக்க, சுஜா தலை நிமிரவே இல்லை.
“என்ன பயம் காட்டுறாராமா? நீ வா சுஜா போகலாம். அப்புறம் தெரியும் அருமை” என்று இந்திரா பேசிக்கொண்டே போக,
அவரை சொடக்கிட்டு அழைத்தான் விஷ்வா.
“என்ன என்கிட்ட ஆரம்பிச்சு மித்ரனிடமும் நடக்கலன்னு அம்மாகிட்ட உங்க ஆட்டத்தை ஆடுறீங்களா?” என்று கேட்டவனின் கேள்வியில் தன்னை கண்டுகொண்டானே என்கிற முக பாவம் அவரிடம்.
“நீங்க வந்த வேலை நடக்காது” என்றவன், “வெளியில் போங்கன்னு வேறெப்படி சொல்ல” என்று வாயிலை பார்த்தான்.
“திமிரு கூடிப்போச்சு. ஊரே பெருமையா பேசுதுன்னு ஆணவம். நாளைக்கே உன் காலேஜ் பெயரை என்னால் கெடுக்க முடியும். மொத்தமா உன்னை காலி பண்ணிடுவேன். என்னையவே வீட்டை விட்டு போன்னு சொல்றியா நீ. இது நான் பிறந்த வீடுடா, எனக்கும் சமபங்கு உரிமை இருக்கு” என்றவர் சட்டமாக இருக்கையில் அமர்ந்தார்.
“அண்ணி” என்று இந்திராவை பார்த்துக்கொண்டே அழுத்தமாக சுசியை அழைத்தவன், அவளிடம் ஏதோ சொல்ல… விஷ்வாவின் அறைக்கு சென்றவள் இரண்டு நிமிடங்களில் வந்தாள்.
அவளது கையில் சில பத்திரங்கள் இருந்தன.
அதனை இந்திராவின் முன் வைத்தவன்…
“இது உங்க வீட்டுக்காரர் என்னோடதுன்னு மிதப்பா வலம் வராரே குவாரி அதோட பத்திரம். அது உங்க அண்ணன்… ச்ச… ச்ச… என்னோட அப்பா அம்மையப்பன் ஆரம்பித்தது. உங்க வீட்டுக்காரர் வேணுன்னு கேட்டதற்காக விட்டு கொடுத்தது. இன்னும் என் அப்பா பெயரில் தான் இருக்கு” என்றவன் அதனுடைய பத்திரத்தை எடுத்து தனியாக வைத்தான்.
“அம்மையப்பன் என்கிற பெயருக்காக மட்டும் தான் குவாரியில் லாபம் வருது” என்று கர்வமாகவேக் கூறினான்.
‘பின்றியே விஷ்வா!’ என்று உள்ளுக்குள் குதுகலித்த சுசி, ‘இப்போன்னு கவுன்டர் கொடுக்க பக்கத்தில் யாருமில்லையே’ என்று தன்னுடைய அறையை பார்க்க, அங்கு அறை வாயிலில் மார்பிற்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு சாய்ந்து நின்று தன் தம்பியின் செயலை ரசித்திருந்தான் மித்ரன்.
மனைவியின் பார்வையை உணர்ந்த மித்ரன் ஒற்றை கண்ணடித்து இதழ் ஊதிட, பட்டேன்று சூடேறிய கன்னத்தை மறைத்தவளாக திரும்பிக் கொண்டாள் சுசி.
“அப்புறம் நீங்க இருக்கீங்களே வீடு… பகட்டா, ஆடம்பரமா என்னோட பங்களான்னு உங்க லேடீஸ் கிளப்பில் பெருமை பேசிக்கிறீங்களே… அது அனுக்காக என் அண்ணா வாங்கியது” என்று அதனுடைய பத்திரத்தை தனியாக எடுத்து வைத்தான்.
“நீங்க ஆசைப்பட்டு கேட்டீங்களேன்னு என் தங்கச்சி விட்டுக்கொடுத்தது” என்றான்.
இந்திராவின் முகம் விழுந்துவிட்டது. இருப்பினும் கோபத்தில் அவரின் முகம் ஜிவுஜிவுத்தது.
“என்னடா சொல்லிக்காட்டுறீயா?” எங்கே கொடுத்ததை திருப்பிக் கேட்டுவிடுவானோ என்கிற பயம் அவருக்கு.
“பயப்படாதீங்க கொடுத்ததை திருப்பி வாங்குற பழக்கம் எங்களுக்கில்லை” என்றவனின் பேச்சில் மொத்தமாக அடிவாங்கினார் இந்திரா.
அவன் திருப்பி கேட்க மாட்டேன் என்றதும் இந்திராவுக்கு சிறு நிம்மதி உள்ளுக்குள்.
“இந்த வீட்டில் உரிமை பற்றி பேசுனீங்களே! அதுக்காக சொல்லிக்காட்டுறேன்னு வச்சிக்கோங்களேன்” என்றான் அமர்த்தலாக.
“முன்னடி இருக்கே தோட்டம் அது மட்டும் தான் தாத்தாவுடையது. இந்த வீடு… இதிருக்கும் இடமெல்லாம் என் அப்பா சம்பாதித்து வாங்கியது. சோ, உங்க உரிமை அந்த தோட்டத்தோடு நின்னுடனும். ஐ மீன் வீட்டுக்கு வெளியில் தான் உங்க அதிகாரம்” என்று அடிக்கு மேல் அடி கொடுத்தான். தன்னுடைய நிதானமான பேச்சில்.
“அந்த தோட்டம் வேண்டுமென்றால் கேளுங்க. அதையும் என் அப்பா சும்மாவே கொடுப்பார்.”
அவன் சொல்லிய விதமே நாங்கள் பிச்சை போட்டு நீ வாழ்கிறாய் என்ற மறைபொருளை கொடுத்திட, இந்திரா இங்கு வந்ததே தவறோ என்று நொந்து போனார்.
“அடுத்து…” என்று விஷ்வா ஆரம்பிக்க…
“போதும்” என்று வீடே அதிர கத்தியிருந்தார் இந்திரா.
“ஆரம்பிச்சதை முடிச்சிடுறேன். நாளை பின்ன திரும்ப வந்து நீங்க நிக்கக்கூடாது பாருங்க. அப்படி வந்தால் கண்டவங்களையும் அடிக்கடி வீட்டிற்குள் விடும் பரந்த மனசு எனக்கில்லை” என்றான்.
விஷ்வாவின் வெட்டு ஒன்று துண்டு இரண்டான பேச்சுக்கள் தெரியும். ஆனால் இந்தளவிற்கு வார்த்தையில் மற்றும் செயலிக் கடுமை காட்டுவான் என்று எதிர்பார்க்கவில்லை.
என்ன பேசினாலும் அம்மையப்பன் பாசத்திற்கும் உறவுக்கும் கட்டுப்பட்டு எப்போதும்போல் அமைதியாகத்தான் இருப்பாரென்று தப்பாக நினைத்துக்கொண்டு வந்தவருக்கு, அப்படியில்லை என்று அவரின் எண்ணத்தை பொய்யாக்கியிருந்தார் அம்மையப்பன்.
தங்கச்சி என்கிற பாசமெல்லாம் தனது குடும்பத்துக்கு அப்புறம் தான் என காட்டிவிட்டார்.
உறவுகள் எண்ணம் அறிந்த பின்னர் சுயநலமாக இருப்பது தவறில்லையே. கயிற்றை ஒரு முனை இறுக்கி பிடிக்க, மற்றொரு முனையில் இழுத்துக்கொண்டே சென்றால் நிச்சயம் ஓரிடத்தித்தல் அறந்துவிடத்தானே செய்யும். இங்கும் அதுதான் நடந்தது.
அம்மையப்பன் எவ்வளவு தான் தனக்கு தங்கையென்றும், சுஜாவுக்கு அண்ணனென்றும் இழுத்து பிடித்து தக்க வைத்துக்கொண்டே இருந்தாலும், இந்திரா, புருஷோத்தமன் பிடி நீண்டு கொண்டே இருக்க… உறவுகள் அறுபட்டு போனது.
“உங்க பையன் நடத்துற கம்பெனிக்கு பேஸ் என் அப்பா கொடுத்த பணம். அதுக்கு முறையா அவர் டேக்ஸ் கட்டியிருக்கார். அதுவும் அவர் பெயரில் தான். அது ஒன்று போதும் நிரந்தரமா உங்க பையனை தெருவில் நிறுத்த” என்று தன்னுடைய பேச்சினை நிறுத்தியவன், இந்திராவின் அரண்ட முகம் சிறு திருப்தியை அளிக்க,
“ஆனால் பாருங்க… நீங்க நானில்லையே! அதனால் பயப்பட வேண்டாம். நான் அப்படியெல்லாம் செய்யமாட்டேன்” என்றான்.
“ரொம்ப நல்லவன் தான் நீ.” அதற்கும் இந்திரா முகம் காட்டினார்.
“நீ சொல்லலைனாலும் என் மகன் நல்லவன் தான். அது ஊருக்கே தெரியும். நீ சொல்ல வேண்டிய அவசியமில்லை.” அறையிலிருந்து விஷ்வா பேசுவதை மட்டும் கேட்டுக்கொண்டிருந்த அம்மையப்பன், இந்திரா தன் மகனை பேசவும் வெளியில் வந்து பதிலுக்கு கொடுத்திருந்தார்.
“என்னண்ணா உன் மகனை பேசவிட்டு வேடிக்கை பாக்குறியா?”
“நான் அண்ணன்னு உனக்கு இப்போதான் நினைவு வருதா?” எனக் கேட்டவர், “நான் உன்கிட்ட பேசவரல” என்று முகத்திற்கு நேராகவே சொல்லி… “அனுவுக்கு நகையெடுக்கும் போதெல்லாம் உன் பொண்ணுக்கும் சேர்த்து எடுத்து கொடுத்ததே முன்னூறு பவுனுக்கு மேல இருக்கும். அதை விஷ்வா விட்டுட்டான். அதை சொல்லத்தான் வந்தேன்” என்று அம்மையப்பன் சொல்லிகாட்டிட, இந்திரா முதலுக்கே மோசமாகிடுமே என்று அதிர்ந்து நெஞ்சில் கை வைத்தார்.
“அப்புறம் அவங்க வீட்டிலிருக்கும் எல்லா பொருளுமே… தங்கச்சி பாசத்தில் அவங்க கேட்குறாங்கன்னு நீங்க வாங்கி கொடுத்தது தானேப்பா” என்று மித்ரனின் குரலில் திரும்பி பார்த்த விஷ்வாவுக்கு சிரிப்பில் உதடு நெலிந்தது.
‘குடும்பத்துக்கே கொடுக்கு முளைத்துவிட்டது.’ அப்போதும் இந்திரா அப்படித்தான் நினைத்தார். இவற்றுக்கெல்லாம் காரணம் தானும், தன் குடும்பமும் தானென்பதை வசமாக மறந்து போனார்.
“என்ன குடும்பமே குத்திகாட்டுறீங்களா?” அவரது பேச்சு அடங்குவேணா என்றது.
“எதிரிலிருக்கவங்க எப்படி இருக்காங்களோ அப்படித்தானே எதிர்வினை இருக்கும்” என்ற விஷ்வா, “இதெல்லாம் சொன்னது செய்ததை சொல்லிக்காட்டிட இல்லை. உங்கக்கிட்ட இருப்பது எல்லாமே என் அப்பாவுடையது என்று நினைவுபடுத்ததான். அத்தோடு உங்க கணவரும், மகனும் என் அப்பா இல்லைன்னா ஜீரோ தான். அதை இன்னும் கொஞ்ச நாளில் நீங்களே பார்ப்பீங்க” என்றவன், எடுத்துக்காட்டிய பத்திரத்தையெல்லாம் அம்மையப்பனிடம் கொடுத்து, “நீங்களே கொடுத்திடுங்கப்பா. ஆனால் இதுக்கு அப்புறம் இவங்க மேல படுற காத்துக்கூட நம்ம வாசல் வரக்கூடாது” என்றுவிட்டு விடுவிடுவென மாடி ஏறிவிட்டான்.