அம்மையப்பன் சோர்ந்து அமர்ந்திருந்தார். அவரை அப்படி பார்க்கவே கவலையாக இருந்தது.
கிடைத்தவரை லாபமென்று அம்மையப்பன் நீட்டிய பத்திரத்தை எவ்வித தயக்கமுமின்றி வாங்கிக்கொண்ட இந்திரா இடத்தை காலி செய்திருந்தார்.
சொந்தமென்று சொல்லிக்கொள்ள இருந்த ஒரு உறவின் உண்மை முகம் தெரிந்து கசப்பாய் உணர்ந்த அம்மையப்பன் அப்போது தொய்ந்து இருக்கையில் சரிந்தது.
தங்கைக்காக கொடுத்ததில் அவருக்கு துளியும் வருத்தமில்லை. ஆனால் அவர் தன்னுடைய பிள்ளைகளை பேசியதைத்தான் அவரால் இன்னமும் விழுங்கி வைக்க முடியவில்லை.
இந்திராவின் பேச்சுக்கள் சுஜாவிற்கும் அதிர்ச்சி தான். தன்னுடைய அண்ணன் சொல்லாது இந்திரா இங்கு வந்து இப்படி பேசியிருக்கமாட்டார் என்பது சுஜா அறிந்தது தான்.
புருஷோத்தமனின் பிரதிபலிப்பு தான் இந்திரா.
என்ன தான் அவர் செய்வதில் பல இன்னல்களை அனுபவித்திருந்தாலும், அண்ணன் என்கிற பாசத்தை சுஜா எங்கும் விட்டு கொடுத்தது இல்லை. இதுவரையிலும் அப்படித்தான் இருந்திருக்கிறார். ஆனால் , இன்று.
ஊரில் தன்னுடைய வளர்ப்பு போல் பிள்ளைகள் உண்டா என்பதில் அத்தனை பெருமை சுஜாவுக்கு. அதனையே கேள்விக்குறியாக்கியிருந்தார் இந்திரா.
‘என்னயிருந்தாலும் எப்படி அவருக்கு இப்படி பேசத் தோன்றியது. இதற்கெல்லாம் தான் கொடுத்த இடம் தானே காரணம்.’ சுஜாதா மனதால் நொந்துபோனார்.
இந்திரா, புருஷோத்தமனிடம் அதுபோன்றொரு பேச்சுக்கள் இல்லாமல், இன்று அத்தனை சுலபமாக இந்திராவின் வாயில் அவை வந்திருக்காது என்று திண்ணமாக நம்பிய சுஜாதா அண்ணன் மீதி அதிருப்தி அடைந்தார்.
என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை கருத்தில் கொள்ளாது ஆரம்பம் முதல் ஓட்டிப்பார்க்க… எல்லா இடத்திலும் அண்ணன் என்று தான் மட்டுமே இறங்கி சென்றிருப்பதும், அவரின் பேச்சுக்கு கட்டுப்பட்டு இருப்பதும் தெள்ளென புரிய, மனம் விண்டு வெதும்பினார்.
அவரின் பேச்சுக்கு ஆட்பட்டு ஆசை மகனின் வாழ்வை தானே பறிகொடுத்து விட்டோமே என்று கலங்கிப்போனார்.
காலம் கடந்து புரிந்து என்ன பயன்.
இந்திரா சென்றதுமே… சுஜா உள்ளுக்குள் மருகிக்கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்த குடும்பத்தினர், அவராக தெளிந்து வரட்டுமென்று அமைதியாக இருந்தனர்.
சுசி தான் மனம் கேட்காது அவருக்கான நேரமளித்து அவரிடம் சென்று அமர்ந்தாள்.
“எவ்வளவு நேரம் அத்தை இப்படியே உட்கார்ந்திருப்பீங்க? எல்லாரும் பாருங்க உங்களை நினைத்து தான் கவலையா இருக்காங்க” என்றிட, சுசியின் இரு கையையும் பற்றிக்கொண்டார் சுஜாதா.
“எங்களுக்கு கல்யாணம் ஆனதும் மித்ரன் வந்துட்டான். நாங்க ரெண்டு பேருமே அத்தனை சீக்கிரம் எதிர்பார்க்கல. ஆனால், விஷ்வா அப்படியில்லை. மித்ரனுக்கு அப்புறம் மூணு வருசம் ஆகியும் இன்னொரு பிள்ளை தங்கல. மித்ரன் ஒத்தையில நின்னுடுவானோன்னு ரொம்ப எதிர்பார்த்து பிறந்தவன் விஷ்வா. மித்ரனுக்கும் சேர்த்து அவன் தான் ரொம்ப பிடித்தமானவன். ஆசை மகன். ஆனால் அவன் வாழ்க்கையை சிதைக்கிறோமே, மகனோட விருப்பத்தை கொன்னுட்டு அவன் மறுக்க ஒரு வாழ்க்கையை திணிக்கிறோமேன்னு எண்ணம் கொஞ்சமுமில்லாமல், என் அண்ணன் சொன்னதுக்கு தலையாட்டி பொம்மையாய் இருந்ததுக்கு எனக்கு இது தேவைதான்” என்று மனதிலிருப்பதை கொட்டியவர்…
“என் பிள்ளை வாழ்க்கையை எப்படி நேர் செய்யப்போறேன்னு தெரியலையே!” என்றார் கவலை படிந்த முகத்துடன்.
“எல்லாம் சரி பண்ணிடலாம் அத்தை. அதுக்கு நீங்க சுறுசுறுப்பா எப்பவும் போல இருக்கணும். இப்படி வருத்தப்பட்டா ஆச்சா. விஷ்வாவும் வாழ்வான். சந்தோஷமா வாழ்வான். அவன் பிள்ளைகளையும் நீங்க தான் வளர்ப்பீங்க. இப்படி சோர்ந்து உட்காராமல் மாமாவை கவனியுங்க. உங்க வருத்தம் தான் அவரை வாட்டுது” என்று கணவரின் பக்கம் சுஜாவை திசை திருப்பிய சுசி, இனி அவர் தெளிந்திடுவாரென்று தன் வேலையை கவனிக்கலாயினாள்.
“என்னை மன்னிச்சிடுங்க.” கணவரின் காலடியில் அமர்ந்து சுஜா கேட்க,
“தங்கச்சி பாசமுன்னு நானும் தான் சுஜா நிறைய பண்ணிட்டேன். யாரையும் குறை சொல்லி ஒண்ணும் ஆகப்போறதில்லை. கொஞ்சநாள் போகட்டும். விஷ்வாவுக்கு எதாவது நல்லது செய்வோம்” என்று அம்மையப்பன் சொல்ல அப்போதுதான் சுஜாதாவின் முகம் தெளிந்தது.
அந்த நல்லதுக்கு மகன் ஒத்துக்கொள்ள வேண்டுமேயென்று உடனடியாக சுஜா உலகத்தில் உள்ள அனைத்து கடவுளுக்கும் வேண்டுதல் வைத்தார்.
அந்நொடி அவருள் ஒரு எண்ணம். சுசியிடம் பேச வேண்டுமென்று நினைத்துக்கொண்டார்.
மாலை போல கீழே வந்த விஷ்வா, கிச்சனில் நின்றிருந்த சுசியிடம் எல்லாம் ஓகே தானே என்பதைப்போல் பார்வையால் வினவ, அவ்ளோ இமை மூடி திறந்து பதில் வழங்கினாள்.
விஷ்வாவும் சிறு புன்னகையுடன் வெளியேறிட,
“உங்க ரெண்டு பேர் ஃபிரண்ட்ஷிப் பார்க்கும்போது பொறாமையா இருக்கு அண்ணி. எப்படி இப்படி. நல்ல அண்டர்ஸ்டாண்டிங். பார்வையாலேயே அண்ணா கேட்குறது உங்களுக்கும், நீங்க சொல்ற பதில் அவருக்கும் புரியுது… ப்பா… இப்படியொரு பிரண்ட்ஷிப் நான் பாக்கல” என்று அங்கு இருக்கையில் அமர்ந்து சுசி அழகாய் நறுக்கிக் கொடுத்திருந்த பழக்கலவையை சுவைத்தபடி சிலாகித்தாள் அனு.
அதற்கு புன்னகைத்த சுசியின் கைகள் மாலை சுற்றுண்டியில் கவனமாக இருந்தாலும்,
“எங்களோட ஃபிரண்ட்ஷிப்புக்கு பலமே நம்ம குடும்பம் தான் அனு. நானோ விஷ்வாவோ புரிதலோடு இருக்கிறது பெரிய விடயமல்ல. ஆனால் நீங்க எல்லாரும் முக்கியமா மித்ரன் எங்களை புரிஞ்சிகிட்டது தான் எங்க பிரண்ட்ஷிப் நீடிக்கக் காரணம். இந்த விடயத்தில் மித்ரன் எனக்கு கிடைச்சதுல நான் லக்கி தான்” என்று சொன்னவளிடம், விஷ்வாவுக்கான இடம் தனித்து தெரிந்தது.
“அப்புறம் அண்ணி…” என்று இழுத்த அனு, “கல்யாணத்துக்கு முன்னாடியே நீங்க அண்ணாவை லவ் பண்ணிங்களாமே! அப்படியா?” எனக் கேட்க,
“எனக்கும் மேடம் இன்னும் அந்த கதையை முழுசா சொன்னதில்லை” என்று மித்ரனின் குரல் கிச்சன் வாயிலில் ஒலித்தது.
“பொறுமையா தெரிஞ்சிக்கலாம். என்ன அவசரம்” என்ற சுசி அனு அறியாது மித்ரனை கண் களவு செய்தாள்.
“அப்புறம் என்னை பத்தி பெருமையா பேசிட்டு இருந்த போலிருக்கே!” மித்ரன் தான் அணிந்திருந்த கொசவு சட்டையின் காலரை தூக்கிவிட…
“நீங்க கிடைச்சதுக்கு அண்ணி புண்ணியம் பண்ணியிருக்கணுமாம்” என்று அனு ராகத்தோடு கூறினாள்.
“அப்படிங்களா பொண்டாட்டி?” என்ற மித்ரன் சுசியின் கன்னம் தட்ட…
“ம்க்கும்… ம்க்கும்…” என்று தன்னிருப்பை காட்டினாள் அனு.
“நான் அப்படியெல்லாம் சொல்லல” என்று சுசி வேகமாக மறுத்திருந்தாள்.
“ஒரு ரொமான்ஸ் ஃபிரியா பண்ண முடியுதா?” என்றவன் குறும்பை கை விட்டவனாக,
“நீ எனக்கு கிடைச்சது என்னோட சந்தோஷம் சுசி” என்று உணர்ச்சிவசத்தோடு கூறி, “நான் உன்னை மாதிரி சொல்லிட்டு சொல்லலன்னுலாம் சொல்லமாட்டேன்” என்று மனைவியை வம்பு செய்தான்.
“அப்புறம் இந்திரா அத்தை என்ன பேசியிருந்தாலும் அதெல்லாம் மைண்ட் பண்ணிக்காத. உங்க ரெண்டு பேரையும் எங்களுக்குத் தெரியும்” என்று மனைவியின் தலையில் கை வைத்து அழுத்தம் கொடுத்தான்.
“ச்சூ…” என்றவள், “இப்போ நீங்க தான் அதை நினைத்து நான் பீல் பண்ணுவேனோன்னு என்கிட்ட மாத்தி மாத்தி நாங்க உங்களை அப்படி நினைக்கலன்னு எனக்கு புரிய வைக்க மறைமுகமா சொல்லிட்டு இருக்கீங்க. நான் அதை கேர் பண்ணிக்கவே இல்லை. இந்த பேச்சை விட்டுட்டு வேற வேலையிருந்தால் ரெண்டு பேரும் போய் பாருங்க” என்றவள், “எனக்கு என் குடும்பத்தை பத்தி நல்லா தெரியும்” என்று அழுத்தமாகக் கூறினாள்.
“லவ் யூ டா…”
“நானும் லவ் யூ அண்ணி…”
மித்ரன் சொல்லிட அனுவும் சொல்லியிருந்தாள்.
“நானும் தான். லவ் யூ மருமகளே!” என்று சுஜாதாவின் குரல் பின்னால் ஒலித்திட…
“என்னை விட்டுடாதீங்கடா!” என்று வந்தார் அம்மையப்பன்.
“எனக்கு போட்டிக்குன்னே வருவீங்களா?” என்று விளையாட்டாய் முறைத்தவண்ணம் கேட்ட மித்ரன் சுஜாதாவின் தெளிந்த முகம் கண்டு நிம்மதி அடைந்தான்.
“ம்க்கும்… விஷ்வா இல்லைன்னா நீ பொண்ணு பார்க்கவே வந்திருக்கமாட்ட… அன்னைக்கு அவன் அப்படி என்னத்த சொல்லி உன்னை கூட்டிட்டு வந்தானோ!” அம்மையப்பன் கிண்டல் செய்தார்.
“இந்நேரம் வினித் கால் பண்ணாவாரே உனக்கு, பண்ணலையா?” என்று தங்கையை கேட்டு பேச்சை மாற்றினான் மித்ரன்.
“டைவர்ட் பண்ணாதடா… என்னன்னு சொல்லேன்?” சுஜா கூட ஆர்வமாகக் கேட்டார்.
பின்னே, கல்யாணம் வேண்டாம். பெண் பார்க்கவெல்லாம் வர முடியாதென்று அடமாக நின்றவனை சம்மதிக்க வைக்க ஆளாளுக்கு பேசி பார்த்தும் முடியாதென்று இருந்தவன், விஷ்வா பேசிய இரண்டு நிமிடங்களில் சரியென்று வந்தது மட்டுமல்லாமல், பெண்ணை பார்த்ததும் சம்மதம் சொல்லிவிட்டானே! அதன் ரகசியம் சுசியிடமே மித்ரன் பகிர்ந்தது இல்லை.
“போங்க… போங்க… அதெல்லம் விஷ்வமித்ரன் (அண்ணன் தம்பி பெயரை சேர்த்து சொல்றாராம்) ரகசியம். போய் வேலையை பாருங்க” என்றவன் நைஸாக கழண்டு வெளி வந்துவிட்டான்.
மித்ரனிடம் அழகான நீண்டு விரிந்த புன்னகை.
“உங்க வெட்கம் பின்னாடி வரை தெரியுது.” அனுவின் குரலில் பின்னந்தலையை கோதியவனாக அறைக்குள் சென்று மறைந்தான்.
“நீங்களாவது உங்க காதல் கதையை சொல்லலாம்?”
“நான் கூட தெரிஞ்சிச்சிக்கிறேனே!”
அனு கேட்க, அம்மையப்பன் கூட சுவாரஸ்யம் மின்ன கேட்டார்.
இருவரையும் இடுப்பில் கைகுற்றி முறைத்த சுசி, அது முடியாமல் போக சிரித்துவிட்டாள்.
“இன்னைக்கு நான் தான் சிக்குனேனா?” என்றவள்,
“ஸ்ரீ எங்க மாமா? உங்களோடு தானே தோட்டத்தில் விளையாடிட்டு இருந்தாள்” என்றாள்.
“இப்போ நாம பேசி பார்ப்போமாங்க?” சுஜா ஆர்வமாக வினவினார்.
“என்னன்னு?” அம்மையப்பன் அர்த்தமாகக் கேட்டார்.
சுசியும் சுஜா எதைப்பற்றி பேசுகிறார் என்று ஆராய்வோடு பார்த்திருந்தாள்.
“என்னயிருந்தாலும் நம்ம வீட்டு வாரிசுங்க.” தழுதழுப்பாய் சுஜா.
“விஷ்வா அப்படியெல்லாம் குழந்தையை விடுறவன் கிடையாது. அமைதியா இருக்கான் அப்படின்னா, வேறெதுவோ நடக்குது. அவன் வேற பிளானில் இருக்கான் அத்தை” என்று நண்பனை சரியாக கணித்தவளாக சுசி கூறிட…
“குழந்தை அவகிட்ட தான் இருக்கா?” எனக் கேட்டார் சுஜா.
“ஏன் எல்லாம் பேசி உங்களைத் தூண்டிவிடுற உங்க அண்ணன் இதை சொல்லலையா?” என்று சுசி காட்டமாகக் கேட்க, உண்மை தெரிந்த அம்மையப்பன் வாடியவராக கூடத்து இருக்கையில் சென்று அமர்ந்தார்.
கணவரை கண்டு ஏதோ சரியில்லையென யூகித்த சுஜா, சுசி சொன்னதில் அதீத வருத்தம் கொண்டார். ஒருங்கே பயமும் அவருள்.