°இந்த தீராத ஆறாத பேராசைக்கு
இன்று நான் என்ன பேர் வைப்பது?°
நிச்சயம் சம்ருதியினுள் விஷ்வா இருக்கும் இடத்திற்கு வெறும் காதல் என்று மட்டும் பெயர் சொல்லிவிட முடியாது. காதலுக்கும் மேல் ஓர் பெயருண்டு என்றால் நிச்சயம் அவர்களின் நேசத்திற்கு அது பொருந்து.
வால்பாறை வந்தும் வருணுக்கு அழைத்து தெரிவித்துவிட்டாள் சம்ருதி.
யுகியும், வருணும் எத்தனையோ வற்புறுத்தியிம் சுடரை தான் தான் வளர்ப்பேன். தன்னுடன் தான் வைத்துக்கொள்வேன் என்று அத்தனை அடமாக சொல்லிவிட்டாள்.
“வேலைக்கும் சென்றுவந்து, கைகுழந்தையை தனியாக உன்னால் சமாளிக்க முடியாது சம்ரு. அட்லீஸ்ட் ஒரு வருடமாவது நான் பார்த்துக்கொள்கிறேன்.”
“சொன்னா கேளு அம்மு. யுக்தா வீட்டில் பகலில் அதிக வேலையில்லாமல் தானே இருக்கப்போகிறாள். அவள் பார்த்துக்குவாள். குழந்தை ஒரு வருடம் வரை எதுக்கு அழறான்னே தெரியாது. நானும் ஒரு டாக்டரா கூடவே இருந்து பார்த்துப்பேன். தருணுக்கும் பேபியை ரொம்ப பிடிக்கும். அவனோட விளையாட போவன்னு இருப்பாள். உன்னோடன்னா தனியா இருக்கணுமே!”
“அப்பா தான் இல்லை. அம்மா நானும் இல்லைன்னா எப்படி மாமா?”
சம்ரு கேட்ட கேள்வியில் இருவரும் அமைதியாகி விட்டனர்.
ஒரு வாரமென்றாலும் தருணுடன் சிரித்து விளையாடிய குழந்தை இன்று அமைதியாக படுத்திருப்பது சம்ருவுக்கு என்னவோ போலிருந்தது.
சமாளித்துவிடலாம் என்று வந்துவிட்டாள், ஆனால் முடியுமென்று தெரியவில்லை.
காலை எட்டு மணிக்கு கிளம்பினால், மாலை ஐந்து மணிக்குத்தான் வீடு வருவாள். அதுவரை குழந்தை யாருடன் இருப்பாள். யாரையும் நம்பி கை குழந்தையை கொடுக்க அவளுக்கு மனம் வரவில்லை.
சம்ரு இங்கு வரும்போதே ஒரு முடிவுடன் தான் வந்திருந்தாள். தான் நினைப்பது நடக்காவிட்டால் அக்கா மாமாவை ஏமாற்றியது போல் ஆகிவிடுமே என்று நினைத்தே தன் முடிவை அவர்களிடம் அவள் கூறவில்லை.
இங்கு வந்து தான் நினைப்பது நடந்துவிட்டால் சொல்லிக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டாள்.
திருச்சி என்று இல்லாமல் வேறு ஊராக இருந்திருந்தால் ஒப்புக்கொண்டு அவர்களுடனே சென்றிருப்பளோ என்னவோ?
விஷ்வா மணவிலக்கு பெற்று விட்டான் என்று அறிந்ததும், தன் காதல் சேர மீண்டும் ஒரு வாய்ப்பு என்று எண்ணி சம்ருதி மகிழவெல்லாம் இல்லை. மாறாக அதீத வருத்தம் தான் அடைந்தாள். அதுவும் குழந்தையை விஷ்வாவிடம் ஒப்படைக்காது இல்லத்தில் விட்டு சென்றது தெரிந்து நொறுங்கிப்போனாள். விஷ்வா எப்படிப்பட்ட வாழ்வு வாழ்ந்திருப்பான் என்று நினைத்து குற்றவுணர்வுக்கு ஆளாகினாள்.
தான் மட்டும் விஷ்வாவின் காதலை ஏற்றிருந்தால்? இன்று ஒரு குடும்பமாய்!
சுடரின் முகம் பார்த்து நினைத்தவளுக்கு நினைவே அத்தனை தித்திப்பாய்.
தன்னால் தானோ? பெரும் பராம் ஒன்று கவலையாய் அவளது மனதில் ஏறிக்கொண்டது.
இப்போது சென்று அவன் முன் நின்றால் பாவப்பட்டு வாழ்கை கொடுப்பது போல் நினைத்துவிடுவானோ என்ற எண்ணம் அவளிடம் தானாக வந்து ஒட்டிக்கொண்டது.
அதனால் இனியும் விஷ்வாவின் முன் சென்று நிற்கக்கூடாதென்று தான் நினைத்திருந்தாள்.
எல்லாம் அஞ்சலியை காணும் வரையில் தான்.
இரண்டு தினங்களுக்கு முன்பு சுடருக்கு வேண்டிய பொருட்கள் வாங்க, மால் ஒன்றிற்கு சம்ரு சென்றிருந்த சமயம் அஞ்சலியை அவளது கணவனுடன் காண நேரிட்டது.
விஷ்வாவுடனான பிரிவுக்கு பின்னர், அஞ்சலி இரண்டாவதாக மணம் புரிந்து கொண்டாள். அதுவும் விவாகரத்து பெற்ற ஒரு மாத காலத்திற்குள்.
விஷ்வாவுடனா விலக்கை நினைத்து சிறு வருத்தமோ கவலையோ அஞ்சலியின் முகத்தில் சிறிதும் இல்லை. மாறாக பேருவகை குடிகொண்டிருந்தது. புதிய கணவனுடன் அத்தனை பூரிப்புடன் அங்கு வலம் வந்து கொண்டிருந்தாள். பெற்ற குழந்தையை பற்றிய சிந்தனை கூட அவளுக்கு இருப்பதுபோல் தெரியவில்லை.
தவற்றையெல்லாம் தன் பக்கம் வைத்துக்கொண்டிருக்கும் அஞ்சலியே அத்தனை சந்தோஷமாக இருந்திடும் போது ஒரு தவறும் செய்யாத விஷ்வா ஏன் தனித்து நிற்க வேண்டும்? ஒரு பாவமும் அறியாத சுடர் ஏன் தந்தையற்று வளர வேண்டும்? தந்தையில்லாமல் வளரும் குழந்தை சமூகத்தில் எத்தனை பேச்சுக்களை அனுபவிக்க வேண்டி வரும். அவளுள் அந்நொடி கலக்கம் சூழ்ந்தது. கலக்கம் குழப்பமாக மாறிட…
தனக்காக இல்லையென்றாலும் சுடருக்காக விஷ்வாவுடன் இணைந்துவிட்டால் என்னவென்று அக்கணம் அவளுள் ஓர் எண்ணம் உதிக்க திடுக்கிட்டாள்.
அந்த அதிர்வுடன் தான் இரண்டு நாட்களை கழித்தாள்.
என்ன தான் வருண் அவளின் வாழ்வை பற்றி விஷ்வாவுடன் பேசுகிறேன் என்று கூறியபோது மறுப்பு தெரிவித்தாலும், இது சரிவருமா என்கிற கேள்வி அவளுள் ஓடிக்கொண்டு தான் இருந்தது.
அதனால் தான் விஷ்வா லைனில் இருக்கும்போது வருண் கேட்டபோது கூட, முன்பு போல் அழுத்தம் கொடுத்து முடியாதென்று மறுப்பை கூறவில்லை.
அதனை நினைத்துக்கொண்டு அமர்ந்திருந்தவள், சுடரின் அழுகையில் சுயம் மீண்டு குழந்தையை மடியில் அள்ளிக்கொண்டாள்.
“எங்களை சேர்த்து வைக்கத்தான் நீ பிறந்தியா?” என்று தன்னைப்போல் கேட்டுவிட்டவளுக்கு,
‘நாங்கள் சேர வேண்டுமென்பது தான் நியதியோ?’ என்ற கேள்வி மூளைக்குள் முளைத்தது.
அந்நொடி,
“அப்படி நாங்க சேர வேண்டுமென்பது தான் விதியென்றால் அது தானாக நடக்கட்டும்” என்று காலத்தின் கையில் தன்னுடைய பயணத்தை ஒப்புவித்தாள்.
“கோ வித் த ஃப்ளோ ம்ருதி” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டவளுக்கு, தானாக விஷ்வா தன்னை அழைக்கும் பெயர் வந்திருந்தது.
‘விஷ்வா.’ அவனின் பெயருக்கே அவளின் மனம் குளிர்ந்தது.
காதலிக்க இருவரும் அருகருகே இருக்க வேண்டுமென்கிற அவசியமில்லையே! மனமிருந்தால் போதும். அதில் இணைக்கான தவிப்பும் நேசமும் இருந்தால் போதும்.
விஷ்வா, சம்ருதி இருவருமே அந்நிலையில் தான் காதலை காதலாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
அடுத்து தன்னுடைய சிந்தனைகளையெல்லாம் ஒத்தி வைத்தவள், மகளிடம் ஐயக்கியமாகினாள்.
*****
விஷ்வா ஸ்ரீநிதி’யுடன் பூங்காவிற்கு வருவதற்கு முன்பே தருணுடன் வருண் வந்திருந்தான்.
பூங்காவின் வாயிலிலேயே விஷ்வா வருணை கண்டுவிட்டான்.
தருண் பந்து வைத்து விளையாடிக்கொண்டிருக்க, வருண் கல் மேடையில் அமர்ந்து பார்த்திருந்தான்.
“கேள்வி கேக்குறதுல அப்படியே உங்க அம்மா மாதிரி” என்று சொல்லி, “வீட்டில் போர் அடிச்சுது அதான் உன்னை கூட்டிட்டு இங்கு வந்தேன்” என்றான்.
“ஹ்ம்ம்…” என்று தலையாட்டிய ஸ்ரீ, “நான் ஊஞ்சல் ஆடிட்டு வரேன் விஷ்வாப்பா. நீங்க உட்கார்ந்திருங்க” என்று ஓடிய ஸ்ரீ,
“அம்மா” என்ற விளிப்பில் கீழே விழுந்திருந்த தருண் எழுந்திட கை நீட்டினாள்.
“தேன்க்ஸ்” என்று அவளின் கை பிடித்து எழுந்து நின்றவன், “கால் ஸ்லிப் ஆகிருச்சு” என்று பந்தினை குனிந்து எடுத்தான்.
“நீங்க இந்த பார்க்குக்கு இன்னைக்குதான் வறீங்களா?”
“ஏன் கேட்குற?” தருண் புருவம் உயர்த்தினான்.
“எங்க விஷ்வாப்பா கூட இப்படித்தான் பண்ணுவாங்க” என்று அவனின் புருவத்தில் கை வைத்த ஸ்ரீ, “அதோ அவங்க தான் விஷ்வாப்பா” என்று ஸ்ரீ கை காட்டிய திசையில் தருண் பார்க்க, விஷ்வாவும் வருணும் கையை பிடித்துக்கொண்டு நின்றிருந்தனர்.
“பக்கத்துல இருக்கிறது என்னோட அப்பா” என்றான்.
“பிரண்ட்ஸ்?” ஸ்ரீ கை நீட்டிட,
“எந்த ஸ்டேண்டர்ட்?” எனக் கேட்டிருந்தான் தருண்.
“யூ.கே.ஜி.”
“ஹோ…” என்ற தருண், “அம் செக்கெண்ட் ஸ்டேண்டர்ட். நீ என்னைவிட குட்டிபொண்ணு. அண்ணா கூப்பிடு” என்று சொல்லி அவளின் கரம் பற்றி குலுக்கினான்.
அதில் ஸ்ரீ கிளுக்கி சிரிக்க, விஷ்வா மற்றும் வருணின் கவனம் இவர்கள் மீது படிந்தது.
“நியூ ஃபிரண்ட் பிடிச்சிட்டான் போல” என்று வருண் சொல்ல…
“மித்ரன் அண்ணா பொண்ணு” என்றான் விஷ்வா.
“சூப்பர் டா… இவங்களை வச்சு வீட்டுக்குள்ள வந்திடலாம்” என்ற வருணை பார்த்த விஷ்வா, “சுசிக்கு உங்களை எல்லாம் நல்லாவேத் தெரியும்” என்றான்.
“இருக்கட்டும்” என்ற வருண், “நீயின்னும் ரீஸன் சொல்லல” எனக் கேட்டான்.
“அதான் சொன்னனே வரு’ண்ணா. எனக்கு பார்க்கணும் போல இருக்கு.”
“இது சரியான காரணமில்லையே! பார்க்கணுன்னா வால்பாறைக்கு போயிட்டு, கரெஸ்பான்டன்ட் அப்படின்னு நேரில் கூப்பிட்டுவச்சே பார்த்திட்டு வந்திருக்கலாமே” என்று தன்னுடைய சந்தேகத்தை வினவினான்.
“உன் மனசில் எதுவும் ஐடியா இருக்கா விஷ்வா?”
“இப்போதைக்கு எதுவும் இல்லை. சுடர் அவகிட்ட இருந்தாலும், எனக்கும் கூட வச்சிக்கணும் தோணுது. இப்போதைக்கு அவ்வளவு தான்” என்றவன், “நான் வரும்போது யுகி அண்ணி வெளியில் தான் இருந்தாங்க. என்னை பார்த்துட்டு அவங்க முகத்துல அப்படியொரு ஷாக்” என்று சிரித்தான்.
“எப்போவாயிருந்தாலும் பார்த்துதானே ஆகணும். சில் வருண்ணா!” என்றவனின் மலர்ந்த முகம் கண்ட வருண்…
“நீ இப்படியிருக்க என்ன வேணா பண்ணலாம்” என்றான். நெகிழ்வாய்.
“போதும்… போதும். அவங்க என்ன பன்றாங்க பார்ப்போம் வாங்க” என்று பிள்ளைகளிடம் வருணை இழுத்துச் சென்றான் விஷ்வா.
“வேறென்னவும் கேட்டுடுவேன்னு தான டைவர்ட் பண்ற நீ?”
“செம ஷார்ப் வருண்ணா நீங்க” என்ற விஷ்வா,
“ஸ்ரீம்மா” என்று அழைக்க, அவனருகில் ஓடிவந்தவள், “தருண் அண்ணா. இவங்க கூட விளையாட ஜாலியா இருக்கு விஷ்வாப்பா” என்று தருணை அவனுக்கு அறிமுகம் செய்ததோடு நாங்கள் நண்பர்களாகி விட்டோம் என்பதையும் கூறினாள்.
“ஹாய் தருண்” என்ற விஷ்வா, அவன் முன் மண்டியிட்டு, அவனுக்காக கொண்டு வந்திருந்த சாக்லேட்டினை பேண்ட் பையிலிருந்து எடுத்து கொடுத்து, தருண் வருணின் முகம் பார்ப்பதை கண்டு, “உங்கப்பா என்னோட அண்ணா தெரியுமா?” எனக் கேட்டான்.
வருண் மற்றும் விஷ்வாவின் பார்வை ஒன்றோடொன்று மோதி விலகியது.
“சித்திம்மாவுக்கும் நீங்க ஃபிரண்டா?” என்ற தருணின் கேள்வியில் விஷ்வா என்ன பதில் சொல்வதென்று தெரியாது வருணை பார்த்திட…
“ஃபிரண்ட் ஆகிடுவாங்க. நீ சாக்லேட் வாங்கிக்கோ” என்று சமாளித்தான்.
“கொஞ்சமா சாப்பிடணும்” என்று விஷ்வா சொல்ல,
“நாங்க ஷேர் பண்ணிப்போம்” என்று ஸ்ரீயையும் காண்பித்த தருண் விஷ்வாவிடமிருந்து வாங்கிக்கொண்டான்.
“தருணுக்கு நம்ம ஸ்கூல்லே அட்மிஷன் போட்டாச்சு வருண்ணா. நாளைக்கு போங்க, எல்லாம் பிரின்ஸ்பால் பார்த்துப்பாங்க” என்ற விஷ்வா, “நாளைக்கு சேலம் போறேன். வர டூ டேஸ் ஆகும்” என்றான்.
அப்படியே பேசிக்கொண்டே இருவரும் பிள்ளைகளை கையில் பிடித்தவாறு வீடு வந்து சேர,
“பார்க்கலாம் வருண்ணா” என்று விஷ்வா சொல்லும்போதே, ஸ்ரீ தருணை கூட்டிக்கொண்டு தன் வீட்டிற்குள் சென்றிருந்தாள்.