“அது ஏண்டா இப்பவே தெரியணும். யுக்தா உன் மேல செம காண்டுல இருக்காடா. நான் உன்னோட கூட்டுன்னு தெரிஞ்சிது, அவ்வளவு தான்” என்ற வருண் விஷ்வா வீட்டு கேட்டை தாண்டிக்கொண்டு உள்ளே எட்டி பார்த்தான்.
“ஹேய்… எப்பா, நீ ஆளவிடு. தருணை வேணுன்னாலும் நீயே வச்சிக்கோ. நான் போறேன்” என்ற வருண் வேகமாக வீட்டிற்குள் ஓட, விஷ்வாவின் சிரிப்பு அவனைத் துரத்தியது.
விஷ்வா வீட்டிற்குள் வரும்போது,
ஸ்ரீ தன்னுடைய பொம்மைகளை எல்லாம் தருணிடம் காட்டிக்கொண்டிருந்தாள்.
“ஃபிரண்ட் கிடைச்சதும் மேடம் ஒரே குஷி” என்ற சுசி, இருவருக்கும் நட்ஸ்சினை சிறு கிண்ணத்தில் இட்டு கொடுத்தாள்.
அப்போதுதான் உள்ளே வந்த விஷ்வா,
“தருணுக்கு பிஸ்தா அலர்ஜி சுசி. அதை மட்டும் எடுத்திடு” என்றான் சாதாரணமாக.
“தருண் இந்த ஊருக்கு புதுசாம்.” நேரடியாகக் கேட்காது சுற்றி வளைத்தாள்.
“சோ, வாட்?” அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான்.
“இன்னைக்கு தான் இங்க, எதிர்வீட்டுக்கு குடி வந்தாங்களாம். தருண் இப்போ தான் சொன்னான். நீயென்னடான்னா அவனை நல்லா தெரியுங்கிற மாதிரி அவனுக்கு இது ஒத்துக்காதுன்னு சொல்ற!” என்று கேட்டபோதும் தருணின் கிண்ணத்தில் இருந்த பிஸ்தாவை எடுத்துக்கொண்டிருந்தாள் சுசி.
“வருண்ணா பையன்.”
விஷ்வா சொல்லியதில் அதிர்ந்து நிமிர்ந்தவளின் கையிலிருந்த பிஸ்தா யாவும் தரையில் சிதறின.
“விஷ்வா…” என்று வேகமாக அவன் முன் தரையில் அமர்ந்தவள், அவனின் கைகளை பிடித்துக்கொண்டு,
“சம்ருதி…” என்றாள்.
அவளுக்கு எப்படித் தொடங்கி எப்படி வாக்கியத்தை முடிப்பதென்று தெரியவில்லை.
“வருவாள்.”
விஷ்வா முகத்திலும் சரி, எண்ணத்திலும் சரி, தோழியாய் அவனை நன்றாக புரிந்து வைத்திருக்கும் சுசியாலும் கணிக்க முடியவில்லை.
“உனக்கு சம்மதமா விஷ்வா?”
“எது?”
சுசி என்ன கேட்கிறாள் என்று நன்கு புரிந்தும் தெரியாத மாதிரி வினவினான்.
“புரியாமலில்லை” என்றவன், “எனக்கே என்ன பண்றதுன்னு தெரியல சுசி. அஞ்சலி என் லைஃபில் இருந்தப்பவும் சரி, இப்போவும் சரி… என்னோட காதல் ம்ருதி மட்டும் தான். ஆனால் அஞ்சலிக்கு நான் உண்மையாத்தான் இருந்தேன். அந்த வாழ்க்கையில கடமை இருந்துச்சு… எனக்கு காதலா ஒரு வாழ்கை என் ம்ருதி கூட வாழணும் ஆசையா இருக்கு சுசி” என்றவனின் கண்களில் நீரின் பளபளப்பு.
அது என்னவென்று சுசி உணரும் முன்பே சட்டென்று உள்ளிழுத்திருந்தான். தன்னை சீர்படுத்தியிருந்தான்.
“அப்போ நாளைக்கே அவங்க வீட்டில் பேசலாம் விஷ்வா!”
இடவலமாக அவனது சிகை ஆடியது.
“என்னடா? முன்ன தான் ஆயிரம் தடையிருந்தது. இப்போ நீ ஓகே சொன்னால் போதுங்கிற நிலையில் தான் எல்லாரும் இருக்காங்க” என்று கூறினாள்.
“நான் ம்ருதி லவ் பண்ண பழைய விஷ்வாவா இல்லையே சுசி.” அவனிடம் அத்தனை சோகம் இழையோடியது.
“அன்னைக்கு அப்படி நடக்கலன்னா… இந்த நொடி வரை என் ம்ருதிக்காக நான் வெயிட் பண்ணியிருப்பேன் சுசி. நிச்சயம் வேற யாரும் வந்திருக்கமாட்டாங்க. ஆனால் நான் இப்போ அதே பழைய விஷ்வா இல்லையே” என்று முதல் முறையாக உள்ளத்து தவிப்பை புலம்பலாக வெளிப்படுத்தினான்.
“எனக்காக அவள், யாருமே செய்ய துணியாததை செய்றாள் சுசி. அவளோட வாழ முடியாது தெரியும். அட்லீஸ்ட் பக்கத்துல வச்சி பார்த்துக்கணும் தோணுது சுசி.”
எதையும் அழுத்தமாக உள்ளுக்குள் புதைத்துக்கொள்ளும் விஷ்வாவின் வெளிப்படையான குமுறல்… சுசியை என்னவோ செய்தது.
“அவள் அளவுக்கு என் லவ் டெப்த் இல்லையோ தோணுது சுசி. கொஞ்சநாளா! அது உண்மையும் கூட” என்றவன் இரு கைகளாலும் கண்களை தேய்த்தவனாக எழுந்து நின்றான்.
தோழனின் உண்மை மனம் அறிந்தவள் விக்கித்து அப்படியே தரையில் அமர்ந்துவிட்டாள்.
எவ்வளவு நேரம் தனக்குள் உழன்று கொண்டிருந்தாளோ…
அனுவை மாலை நேர நடைபயிற்சிக்காக வெளியில் கூட்டிச்சென்ற மித்ரனும்,
இன்றைய நாளில் நடந்த நிகழ்வின் தாக்கத்தை குறைக்க, இறைவனிடம் மனம் விட்டு முறையிட நினைத்து கோவில் சென்ற அம்மையப்பன் சுஜாதாவும் ஒருசேர வீட்டிற்குள் நுழைந்த அரவத்தில் வேகமாக முகத்தை துடைத்துக்கொண்டு எழுந்து நின்றாள் சுசி.
“என்ன சுசி ஏன் பதறி எழுந்துக்குற?”
சுஜாதா கேட்க, பதில் சொல்லாது சுசி தடுமாறியதிலே என்னவோ என்று கண்டுகொண்டான் மித்ரன்.
“பசங்க விளையாடிட்டு இருந்தாங்க. அப்படியே பார்த்துட்டே உட்கார்ந்துட்டேன் அத்தை” என சமாளித்தவள், கிச்சனுக்குள் சென்று மறைத்தாள்.
அனு அதற்குள் தருணுடன் நட்பாகியிருந்தாள்.
“நீங்க க்யூட்டா இருக்கீங்களே!”
“எங்க சித்திம்மாவும் அப்படித்தான் சொல்லுவாங்க” என்ற தருண் அழகாய் வெட்கப்பட…
“சோ… சுவீட்” என்று தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டார் அம்மையப்பன்.
அதற்குள் தருண் யார் என்று அனைத்தும் ஸ்ரீ அனைவரிடமும் ஒப்பித்துவிட்டாள்.
தருண் சொல்லிய பெயர்களில் மித்ரனுக்குத்தான் குழப்பம் சேர்ந்தது.
தருண் வீட்டுக்கு போகவேண்டுமென்று சொல்ல…
தான் விட்டு வருவதாக அழைத்துச் சென்றான் மித்ரன்.
ஸ்ரீ’யை தன்னுடைய வீட்டுக்கு வருமாறு அழைத்துவிட்டு அனைவருக்கும் டாடா சொல்லி கிளம்பியிருந்தான் தருண்.
வீட்டு வாயிலை கடந்து கேட்டினை நெருங்கும் சமயம்…
“அப்பா, அம்மா நேம் சொன்னிங்களே உங்க சித்திம்மா நேம் என்ன?” என்று தருணிடம் தன்னுடைய குழப்பத்தை தீர்த்துக்கொள்ள வினவினான் மித்ரன்.
“சம்ருதி” என்ற சிறுவன், “இப்போ அவங்களுக்கு ஒரு பாப்பா கூட இருக்கு. சுடர்” என்று கூடுதல் தகவல் அளித்து மேலும் மித்ரனின் குழப்பத்தைக் கூட்டினான்.
மித்ரனுக்கு தம்பியின் காதல் தெரியும். காதலில் அவனின் ஆழம் தெரியும். ஆனால் அதைப்பற்றி பேசியது கிடையாது. விஷ்வாவின் காதலுக்கு வீட்டில் மறுப்பு இருந்திருக்கவில்லை. இருந்திருந்தால் தம்பிக்கு உதவ வேண்டுமென்பதற்காக அதைப்பற்றி பேசியிருப்பானோ என்னவோ?
சுஜாதா உட்பட விஷ்வாவின் காதலுக்கு பச்சை கொடி காட்டிய பின்னர் வாழ்த்தோடு முடித்துக்கொண்டுதான். ஆனால் யார் என்ன என்று அனைத்து விவரங்களும் சுசி மூலம் அறிந்திருந்தான்.
“இப்போ எங்க இருக்காங்க?”
“வால்பாறை.” சொல்லிய தருண் வீட்டு வாயிலை அடைந்ததும் வேகமாக உள்ளே ஓட, எதிரில் யுகி.
மித்ரனை கண்டதும் அவளிடம் தடுமாற்றம்.
நொடியில் சமாளித்துவிட்டாள்.
“வாங்க… வாங்கண்ணா” என்ற யுகியின் குரலில் வெளிவந்த வருண், அவள் மித்ரனை அண்ணா என்று சொல்லியதில்,
‘இவள் முறையை மாத்திடுவாள் போலிருக்கே!’ என்று நெற்றியில் தட்டிக்கொண்டான்.
மித்ரன் இயல்பாய் கேட்டிட, சம்ரு, விஷ்வா காதல் இவர்களுக்கு தெரியாதென்று நினைத்துக்கொண்ட யுகி மித்ரனிடம் சகஜமாக்கினாள்.
“ஆமாம்” என்றவள், “மாமாக்கு டிரான்ஸ்பர் ஆகிடுச்சு. அதான்… இனி இங்கு தான்” என்றவள் எதிர் வீட்டை பார்த்தபடி, “இது உங்க வீடா?” எனக் கேட்டாள்.
‘ப்பா… என்னம்மா நடிக்குறா?’ இவ்வளவு நேரம் தன்னிடம் எகிறிய யுக்தாவா இதுவென்று அதிசயத்தான் வருண்.
பூங்காவிற்கு தருணுடன் சென்றவன், தனியாக வந்ததை கூட கவனிக்காது கேட்டினை கடந்து வீட்டிற்குள் செல்ல இருந்த சிறு இடைவெளியில் போடப்பட்டிருக்கும் சிமெண்ட் பெஞ்சில் தலையை தாங்கியவாறு உட்கார்ந்திருந்த யுகி, கணவனை கலக்கமாக ஏறிட்டாள்.
இந்த கலக்கம் எதற்கானதென்று அவனுக்குத்தான் தெரியுமே!
அவளாக சொல்லட்டுமென்று என்னவென்று கூட கேட்கவில்லை.
“மாமா… மாம்…ம்மா…” திணறினாள். வார்த்தைகளே வெளியில் வரவில்லை.
மனைவியின் கை பிடித்து உள்ளே அழைத்துச்சென்றவன், அவள் பருக நீர் கொடுத்து முதுகை மெல்ல நீவி விட்டான்.
யுகி சற்று தெளிந்ததும்,
“இப்போ சொல்லு!” என்றான்.
“எதிர்வீட்டில் விஷ்வாவை பார்த்தேன்.”
வருணிடம் சிறு அதிர்வு கூட இல்லை. அதுவே அவன் அறிந்த விடயம் இதுவென்று அவளுக்கு உணர்த்தியது.
“ஏதும் பிளான் பண்றீங்களா?”
ஏன் இந்த கேள்வி எனும் பார்வை மட்டுமே வருணிடம்.
“அதான் உங்க தம்பியை பார்த்தேன்னு சொன்னதும்… வழக்கமா அவர் பெயர் எடுத்தாலே கோபம் காட்டுற நீங்க சின்ன விழி விரிப்பு கூட இல்லாமல் அமைதியா இருக்கீங்களே! அதான் கேட்டேன்” என்றாள்.
வருணிடம் சன்னமான சிரிப்பு.
“சிரித்து ஏமாத்தாதீங்க மாமா.”
“எனக்கும் இங்கு வரும்வரை எதிர்வீட்டில் விஷ்வா இருப்பான்னு தெரியாது” என்று உண்மையையே கூறினான். என்ன அதற்கு மேலான உண்மையை மறைத்துவிட்டான். சொல்ல வேண்டாமென்ற எண்ணமில்லை. ஆனால் இப்போது வேண்டாமென்று நினைத்தான்.
வருண் பொய் சொல்லவில்லை என்பது அவன் நேர்கொண்டு சொன்னதிலேயே உணர்ந்துகொண்டவள்…
“எனக்கென்னவோ பயமா இருக்கு மாமா. சம்ரு இப்போ தான் கொஞ்சம் நார்மலா இருக்காள். திரும்ப விஷ்வா…” என்று இழுத்தவள்,
“ஒண்ணுமில்லை மாமா” என்றவள், அப்போதுதான் தருணின் நிணவு வந்து அவனை விசாரித்தாள்.
பூங்காவில் தற்செயலாக விஷ்வாவை சந்தித்ததையும், மித்ரனின் மகளும் தருணும் நண்பர்கள் ஆனதையும், அவளுடன் அவள் வீட்டிற்கு சென்றிருப்பதையும் வருண் சொல்லிட யுகி கணவனை பிடிபிடிவென பிடித்துவிட்டாள்.
“அவங்களுக்கும் நமக்கும் ஒண்ணுமில்லை மாமா. இந்த உறவு சம்ருவுக்கு எத்தனை வலியை கொடுக்கும். தெரிந்தே நாம் உறவு வைத்துக்கொள்ள வேண்டாம். நீங்க வேற வீடு பாருங்க. இனி இங்கு இருக்க முடியாது. சம்ரு வர போவ இருப்பாள். கஷ்டம். எல்லாருக்கும் கஷ்டம்” என்றவள் வார்த்தயை தொடர்வண்டியாய் நீட்டிக்கொண்டே போக, கேட் திறக்கும் சத்தத்தில் தருணை கண்டு வந்தவள் மித்ரனை பார்த்ததும், சற்று நேரத்திற்கு முன்பு சொன்னதைப்போல் தள்ளி நிற்க முடியவில்லை.
ஒரு காலத்தில் அவனுடன் ஓடியாடி சுற்றித் திரிந்திருக்கிறாளே! எப்படி முகம் திருப்பாவாள்.
சொல்லப்போனால் காதல் கொண்ட இருவருமே அக்காதலின் பிரிவுக்கு காரணமாக இருக்கும்போது இவள் யாரை குற்றம் பார்ப்பது.
இப்போது கூட இங்கு இருக்க வேண்டாம் என்பதற்கு காரணம், தவறில்லை என்றாலும் அவர்களெல்லாம் விஷ்வாவின் குடும்பம். அவனை வைத்து தானே மற்றவர்கள் யாவரும்.
யுகி தனக்குள் உழன்று கொண்டிருக்க… மித்ரனின் “வருகிறேன்” என்ற வார்த்தையில் தான் சுயம் திரும்பினாள்.