சேலம் சென்று வந்ததிலிருந்து விஷ்வா மிகவும் அமைதியாகிவிட்டான்.
அவன் எப்போதுமே மௌனாளி தான். ஆனால் கசந்த வாழ்வு விலகிச்சென்றிட கடந்த காதலை நினைத்து, அவனது காதலியின் செய்கையில் பூரித்து தனது இயல்பிலிருந்து தனித்து தெரிந்தான். நகர்ந்த சில நாட்களாக.
ஏனோ… இன்று மீண்டும் தனது கூட்டுக்குள் சென்றுவிட்டான்.
‘என்ன நினைச்சிட்டு இதெல்லாம் பன்றாள்?’ இதே கேள்வி தான் நகர்ந்து செல்லும் நான்கு நாட்களாய் அவனுள்.
இதில் வால்பாறைக்கு சென்ற சம்ருதி அடுத்தநாளே பள்ளிக்குச் சென்று, வேலையை ரிஸைன் செய்வதாக முதல்வருக்கு மெயில் அனுப்பிட… அடுத்த நொடியே அது விஷ்வாவுக்கு தெரிந்துவிட்டது.
சரியான காரணம் என்னவென்று அவன் கேட்டிட… அதையே முதல்வரும் சம்ருதியிடம் கேட்டிருந்தார்.
வேறு வேலை கிடைத்திருப்பதாக சம்ருதி சொல்லிட,
“நீங்க இங்கு வேலைக்கு வரும்போதே, ஓவர் குவாலிஃபைட் வேண்டாம் சொன்னேன் தானே! இப்போ நீங்க போயிட்டால் உங்க பிளேசுக்கு நான் திரும்ப இன்டர்வியூ வைக்கணும்” என்றார். இருக்கும் வேலை பளுவில் இதுவும் வேறா என்று அவருக்கு அலுப்பாக இருந்தது.
கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக சம்ரு அங்கு வேலை செய்கிறாள்… பொறியியலில் முதுநிலை முடித்து ரிசர்ச் ஸ்காலரான அவளுக்கு கல்லூரியிலேயே வேலை கிடைக்கும் என்று அவர் அப்போதே மறுத்திருந்தார். இவள் தான் தனக்கு வேலை இங்கு வேண்டுமென்று விடாப்பிடியாக இருக்க… அப்போதும் முதல்வரிடம் மறுப்பு தான்.
“உங்க கரெஸ்பான்டன்ட் கிட்ட நான் வேலை கேட்குறேன்னு என் பேர் சொல்லுங்க” என்று அவள் சொல்லி முடிக்கும் முன்னர் முதல்வருக்கு அழைத்த விஷ்வா என்ன கூறினானோ அவள் அங்கு வேலையில் அமர்த்தப்பட்டாள். ஆனால் விஷ்வா சொல்லி தான் வேலை கிடைத்தது என்பது அவளுக்கு இன்னமும் தெரியாது. விஷ்வாவின் பெயரை குறிப்பிட்டதும், உறவினர் என நினைத்து வேலை கொடுத்ததாக நினைத்துக்கொண்டாள்.
அன்று அத்தனை அடமாக வேலை கேட்டவள், இன்று வேண்டாமென்று நிற்பதற்கு காரணம் தெரியவில்லை என்றாலும்… விஷ்வாவிடமிருந்து வந்த பதிலால் ஏற்றுக்கொண்டார்.
“வேறு வேலை எங்கம்மா?” விஷ்வா தான் கேட்க சொல்லியிருந்தான். அவரும் கேட்டிருந்தார்.
“திருச்சி சுடர் காலேஜ் சார்.”
அவளது பதிலில்,
‘என்ன பிளான் அவளோடது?’ என்ற ஆராய்வு தான் அவனிடம்.
அதைவிட கையில் சலசலத்த திருமண சான்றிதழும், மெத்தையில் கிடந்த புகைப்படமும் அவனை நிதானத்தை இழக்க வைத்திருந்தது.
புகைப்படம் கல்லூரி காலத்தில் எடுக்கப்பட்டது. இவள் பொறியியல், அவன் பிஸ்னெஸ் அட்மினிஸ்ட்ரேட்டிவ் துறை. இருப்பினும் திருச்சியில் உள்ள சுடர் கல்வி குழும கல்லூரியில் தான் பயின்றனர்.
அரிதாக பார்த்துக்கொள்வார்கள். புன்னகைக்குக்கூட பஞ்சமின்றி கடந்து சென்றுவிடுவார்கள்.
ஒரே கல்லூரி வளாகமாக இருந்தாலும் கூட, சுசிக்கே சம்ருதியை தாமதமாகத்தான் தெரியும். அந்தளவிற்கு எட்ட நின்றிருந்தனர்.
அப்படியிருக்கும் போது இந்த புகைப்படம்? அவனுள் பெரும் கேள்வி.
நிச்சயம் போட்டோ ஷாப் செய்தது கிடையாது. ஒரிஜினல். ஆராய்ந்துவிட்டான்.
அடுத்து சான்றிதழ்…
அதிலிருக்கும் கையெழுத்து அவனுடையது தான். ஆனால் அவன் இடவில்லை. அவள் போட்டிருக்கிறாள். நகலெடுத்தது போல் அப்படியே அசலாக போட்டிருக்கிறாள். அதில் அவனது இதழ் விரிந்தது.
அவனுக்கு புரிந்துதான் இருந்தது.
குழந்தையை வாங்குவதற்காக திருமணம் முடிந்துவிட்டது என்று பொய் சொல்லியிருக்கிறாள். அதற்கேற்ப சாட்சியங்கள் கொடுத்திருக்கிறாள்.
அதுவும் பெயருக்கு கூட யாரோ ஒருவனின் பெயரை கூற பிடிக்காது, விஷ்வா… விஷ்வரூபன் என்கிற பெயரையே பயன்படுத்தி இருக்கிறாள். அவளது காதலின் ஆழத்திற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா என்ன?
“தன்னைப்பற்றி அனைத்தும் அறிந்தும்… இந்நிலையிலும் என் மீது அத்தனை காதலா?” என்று வாய்விட்டு கேட்டுக்கொண்டவனுக்கு, ‘அவளுடைய காதல் உன்னுடையதை விட உயர்வானது’ என்று அவனது மனம் உடனடியாக பதில் கொடுத்திருந்தது.
“இருக்கட்டுமே! காதல் அழுத்தமாக தடம் பதித்திட யாரோ ஒருத்தருடைய காதல் ஆழமா இருந்தால் போதும். அது என் ம்ருதியுடையதாக இருந்தால், அவள் காதல் ஒன்றே எனக்கும் போதும்” என்று சொல்லிக்கொண்டான்.
ஆனால் இருவரும் இணைவது அவனளவில் சாத்தியமில்லாதது.
சம்ருதி மனதில் என்ன உள்ளதோ?
விஷ்வாவை தனக்குள் அடக்கிவிடுவாளா?
அக்கணம் தான் வால்பாறை பள்ளி முதல்வரிடமிருந்து, சம்ரு வேலைக்கு செல்லப்போகும் கல்லூரி உங்களுடையது தானென்று தகவல் வந்தது.
இந்த செய்தி அவனே அறியாதது.
‘என்னவோ பன்றாள்.’ சிரிப்போடு சொல்லிக்கொண்டவனுக்கு அது என்னவென்று தான் தெரியவில்லை.
அப்படியே அவளின் நினைவுகளோடு அமர்ந்துவிட்டான்.
கதவினை தட்டிவிட்டு உள்ளே வந்தான் மித்ரன்.
“என்ன சீக்கிரம் வந்துட்ட?” என்று கேட்டவாறே, கையிலிருந்த சான்றிதழையும், போட்டோவையும் அலமாரியில் பத்திரப்படுத்தினான்.
“பார்த்து நாலு நாள் ஆச்சே!” என்ற மித்ரன் அருகில் அமர்ந்தான் விஷ்வா.
“ஹோம் விசிட் மட்டும் தான் பிளான் பண்ணி போனேன். அப்புறம் காலேஜ், ஸ்கூல் விசிட்டும் முடிச்சிடலான்னு… அதான் ஃபோர் டேஸ் ஆகிப்போச்சு” என்ற விஷ்வா மித்ரனின் மடியில் தலை சாய்த்து, அமர்ந்திருந்த நீண்ட கோச்சில் தன் உடலை சுருக்கிக் கொண்டான்.
விஷ்வா ஏதோ அலைப்புறுதலில் இருக்கிறான் என்பதை அவன் மடி சாய்ந்ததிலேயே புரிந்துகொண்ட மித்ரன், தான் பேச வந்த விடயத்தை விடுத்து, அமைதியாக தம்பியின் தலை கோதியபடி இருந்தான்.
“யுகி, வருண்ணாவை பார்த்திட்டியா?”
சில நிமிடங்களுக்கு பின்னர் விஷ்வாவே கேட்டிருந்தான்.
“ம்” என மட்டும் ஒலித்த மித்ரன், “சுசி என்னென்னவோ சொல்றா” என்றான்.
“உண்மை தான். வருண்ணா பேமிலி இங்குவர காரணம் நான் தான்” என்ற விஷ்வாவின் மனதை படிக்க முனைந்தான் மித்ரன்.
“என்னண்ணா அப்படி பாக்குற?”
“நீ என்ன தின்கிங்கில் விஷ்வா இருக்க?”
“தெரியல…” சிறு இடைவெளி விட்ட விஷ்வா, “வேணுன்னு தோணுற நேரம் வேணான்னும் தோணுதே மித்துண்ணா” என்று மித்ரனின் மடியில் முகத்தை அழுந்த தேய்த்தவனாக… “பழைய விஷ்வாவுக்கு இருந்த தகுதி இப்போயிருக்க விஷ்வாவுக்கு இல்லையே! அதுவே என்ன எட்ட நிக்க வைக்குது மித்துண்ணா” என்றான்.
தம்பியின் மனம் அண்ணனுக்கு புரிவதாய்.
“காதலுக்கு எந்த தகுதியும் கிடையாது விஷ்வா. மனசு மட்டும் போதும். அங்கு கொட்டி கொடுக்க அளவுக்கு அதிகமான நேசமிருந்தால் போதும். காதல் நடந்தது, நடக்கப்போவதை பத்தியெல்லாம் யோசிக்காது. தட் டைம் என்ன நடக்குதோ, தோணுதோ அதை மட்டும் தான் நினைக்கும், செய்யும். வீணா உன்னை நீயே குழப்பிக்கிட்டு காம்ப்ளிகேட் பண்ணிக்காத” என்ற மித்ரன்,
“எனக்கு வாழ்நாள் முழுக்க கில்ட் ஆகிடும் மித்துண்ணா.”
“ஓகே ஃபைன். அப்போ வேண்டாங்கிறதுலையாவது தெளிவா இரு. நீ இப்படி இருக்காத. என்னவோ மாதிரியிருக்கு. நீ’ன்னா அப்பாவுக்கே கொஞ்சம் பயம் கலந்த மரியாதை தான். உன்னை அந்த கெத்தோட பார்த்துதான் பழக்கம். உடைஞ்சு போய் நின்னப்போ கூட உன்னை இந்த மாதிரி பார்க்கல” என்று முழுக்க முழுக்க தம்பியை தேற்றுவதற்காகவும், ஆறுதல் படுத்துவதற்காகவும் மட்டும் பேசிய மித்ரன்…
“உனக்குன்னு இருந்தால் அது உனக்கு தான். உன்கிட்ட நிச்சயம் வரும். ஜஸ்ட் கோ வித் த ப்ளோ’டாம்மா” என்க, எழுந்து அண்ணனை அணைத்துக்கொண்டான் விஷ்வா.
அணைப்பின் அழுத்தம் சொல்லியது, விஷ்வா எவ்வளவு குழம்பியிருக்கிறான் என்று. காதல் குழப்பவாதிகளை தெளிவாக்கும். கூர்மையானவர்களை குழப்பத்தின் பிடியில் உழலச் செய்யும்.
“ச்சூ… என்னடா இது. தி கிரேட் வி.ஆர் சின்னபுள்ளை மாதிரி பண்ணிட்டு இருக்காரு.” விஷ்வாவின் மனதை மாற்றிட, மித்ரன் கேலியில் இறங்கினான்.
“உங்களுக்கு நான் ஸ்ரீ மாதிரி தானே! அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க” என்ற விஷ்வா இன்னும் சலுகையாய் அண்ணனின் தோள் சாய்ந்து இறுக்கிக்கொண்டான்.
“இப்போ மட்டும் சுசி பார்க்கணும்…” மித்ரன் சிரிப்போடு கூறிட,
“எல்லாம் பார்த்தாச்சு… பார்த்தாச்சு…” என்று உள் நுழைந்திருந்தாள் சுசித்ரா.
“என்ன வி.ஆர் சார் ஒரே குஷி மூடா?” என்றவளை முறைத்த விஷ்வா,
“பார்த்தா அப்படியா தெரியுது?” என்று முறைத்தான்.
“பின்ன இல்லையா? அண்ணனும் தம்பியும் பண்ற ரொமான்ஸ் பார்த்திட்டு நான் அப்படித்தானே நினைச்சேன்” என்று சுசி மேலும் சீண்டிட…
“எதே ரொமான்ஸா…” என்று ஷாக் ஆன விஷ்வா… “எல்லாம் என் நேரம். என் அண்ணனைக்கூட கட்டிபிடிக்குற உரிமை எனக்கில்லாமல் போச்சு” என்று போலியாய் அலுத்துக்கொண்டான்.
“அதுக்குத்தான் நாங்க இருக்கோம்ல…” என்ற சுசி, “வேணுன்னா சார் ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டு, பொண்டாட்டியை ஹக் பண்ணுங்க, கிஸ் பண்ணுங்க… யார் கேட்கப்போறாங்க” என்று ஒரு ஃப்ளோவில் சொல்லிவிட…
“சுசி…” என்று மித்ரன் அதட்டிடும் முன்னர், விஷ்வா அவளின் தலையில் வலிக்கக் கொட்டியிருந்தான்.
“நீ இப்போ சொன்னது ஹர்ட் ஆகலன்னு சொல்லமாட்டேன். ஆனால் நீ வேணுன்னு சொல்லலத் தெரியும். அதனால் தான் அமைதியா கொட்ட மட்டும் செஞ்சிருக்கேன்” என்ற விஷ்வா, “எல்லாம் தெரிஞ்ச நீயே இந்த விடயத்தில் கிண்டல் பண்றது ஒரு மாதிரி இருக்கு சுசி” என்றான் வருத்தமாக.
“சாரி… சாரி… சாரி விஷ்வா. ஐ டி’டிண்ட் மீன் இட். சாரி” என்ற சுசியை இப்போது நன்றாக முறைத்த விஷ்வா,
“சாரி சொல்லி இன்னும் ஹர்ட் பண்ற நீ?” எனக்கேட்டு இம்முறை ஓங்கி கொட்டியிருந்தான்.
வலியில் அவளின் சுருங்கிய முகம் பார்த்து சிரிப்பு வந்தாலும், விஷ்வா கொட்டிய இடத்தை மித்ரன் நன்கு தேய்த்துவிட்டான்.
அந்நேரம் “விஷ்வாப்பா” என்று ஸ்ரீ ஓடிவர சூழல் சகஜமானது.
“ஸ்ரீ குட்டிக்கு என்ன வேணுமாம்? விஷ்வாப்பாவை தேடுறாங்க!” விஷ்வா மகளை அள்ளி தூக்கிக்கொண்டான்.
சிறியவளோ அவனின் பிடியிலிருந்து இறங்கி…
“பாட்டி உங்களை சாப்பிட வர சொன்னாங்க” என்றவள், “நான் தருண் அண்ணா வீட்டுக்கு போறேன். வருணப்பா புது கேம் வாங்கி கொடுத்தாங்களாம். அண்ணா என்னை விளையாட கூட்டிட்டுப்போக வந்திருக்காங்க” என்று நிற்காது கூறிக்கொண்டே ஓடிவிட்டாள்.
“இந்நேரத்தில் வேணாம் ஸ்ரீ” என்று சுசியும் அவள் பின்னால் செல்ல…
“நான் பத்திரமா தர்ட்டி மினிட்ஸில் கூட்டி வந்திடுறேன் சுசிம்மா” என்று அவளுக்காக கீழே காத்திருந்த தருண் முகம் சுருக்கி கேட்டிட…
முதல் நாள் மித்ரன் வருணின் வீட்டிற்கு சென்றது. அதன் பின் வெளியில் யுகியை பார்த்தால் சின்ன ஸ்மைல். அவ்வளவு தான்.
விஷ்வாவின் வீட்டில் மூவரைத் தவிர்த்து மற்றவர்களுக்கு எதிர் வீட்டில் புதிதாக வந்திருக்கிறார்கள் என்று மட்டும் தெரியும். யாரென்று தெரியாது.
பெரியவர்களுக்குள் முறையான அறிமுகம் இன்னும் நடக்கவில்லை.
இன்று காலையில் தான் சுசியும், யுக்தாவும் பார்த்துக்கொண்டனர். சிறு புன்னகையோடு சென்றுவிட்டனர்.
ஆனால் குழந்தைகளின் நெருக்கத்தால் இரு வீட்டிற்கும் அசைக்க முடியாத பாலம் ஒன்று உருவாகிக்கொண்டிருக்கிறது.
ஸ்ரீயும் வருணும் மற்றவர்களின் தாய், தந்தையையும் இயல்பாய் அப்பா, அம்மா என்று விளித்து உறவுகளை தங்களை அறியாது ஆழப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
அம்மையப்பன், சுஜாவுக்கு கூட தருண் அங்கு வருங்கின்ற நேரம் அத்தனை பிடித்தமானதாக இருந்தது.
மூவரும் கீழே உணவுக்கூடம் வரும்போது…
“பசங்க ரெண்டு பேரும் ரொம்ப பாசமா ஆகிடுச்சுங்க… ரெண்டு வீட்டுக்கும் மாத்தி மாத்தி ஓடியே தனிப்பாதையை உண்டாக்கிடுச்சுங்க. ஆனால் இன்னும் தருண் அப்பா, அம்மாகிட்ட நாம அறிமுகம் கூட செய்துக்கல. நாளைக்கு தருணோட அம்மாகிட்ட சும்மா பேசுவாவது செய்யணுங்க” என்று சுஜா அம்மையப்பனிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.