கண்ணை மூடி உறங்கிக்கொண்டிருந்த பெண்ணை பார்த்து இது தான் தோன்றியது கோவர்த்தன் மனதுக்குள். அவள் மயக்க நிலைக்கு சென்று நாற்பத்தி எட்டு மணி நேரங்களை நெருங்கப்போகிறது. ஆனாலும் அவனிடம் அத்தனை பயமில்லை. அவளின் நிலை என்ன என்பதை தெளிவாய் உணர்ந்தவன் என்பதால், அவளை கவனமாய் பார்த்துக்கொண்டு அவளுடனே இருந்தான்.
அவள் உடல் எழுந்துக்கொள்ள முயன்றாலும், அவள் மனம் மிகுந்த சோர்வில் ‘என்னை சற்று இளைப்பாற விடேன்’ என்று கெஞ்சுகிறது போலும். எந்த மருந்துக்கும் அசைவேனா என்று உறங்கிக்கொண்டிருந்தாள்.
மெல்லிய உடல்வாகுடைய ஸ்பேனிஷ் பெண்ணொருத்தி பாதி திறந்திருந்த அறைக்கதவின் வழி, உள்ளே வர அனுமதி கேட்டு நின்றாள்.
அவன் வர சொல்ல, “டாக்டர், டவல் பாத் டைம்!” அவள் நினைவுப்படுத்த, ‘கோ அ ஹெட்’ என்றவன் எழுந்து வெளியே சென்றான். அவளை மருத்துவனைக்கு அவன் அழைத்து செல்லவில்லை. மாறாக குட்டி மருத்துவமனையாக அவள் அறையை மாற்றியிருந்தான்.
ஈமெயிலில் அவளுக்கு ப்ளட் டெஸ்ட் செய்ததற்கான ரிபோர்ட்டை அனுப்பி வைத்திருந்தனர். அதை பார்வையிட்டுக்கொண்டே அவன் நின்றிருக்க சில நிமிடங்களில் அந்த பெண் வந்து, ‘முடிந்தது’ என்றாள்.
மருத்துவமனையில் இருந்து ஸ்பெஷலாக இவளை தினம் இருவேளை வரவழைத்திருந்தான் கோவர்த்தன். இருமுறை உடல் துடைத்து வேறு உடை மாற்றவும் இன்ன பிற தேவைக்காகவும் வரவைத்திருந்தான்.
நேரம் இரவை நெருங்குவதால், அவளுக்கு தேவைத்தாண்டி பணத்தை கொடுத்து பத்திரமாய் வண்டியேற்றி அனுப்பிவிட்டு அறைக்குள் வர, கட்டிலில் சாய்ந்து அமர்ந்து மலங்க மலங்க விழித்திக்கொண்டிருந்தாள் வாணிலா.
கண்டவன் நொடி நேரத்தில் அவள் அருகே சென்றான்.
“ஹே நிலா… எப்படி இருக்க இப்போ?” அவன் கேட்டதும், அசதியாய் தலையசைத்தவள், ‘தண்ணீர்’ என சைகை செய்தாள். இதழ்கள் எல்லாம் வறண்டு போயிருந்தது. அவள் இடக்கை மேற்புறத்தில் நீடில் இருக்க, அருகே முடிந்துப்போன சலைன் பாட்டில் தொங்கிக்கொண்டிருந்தது.
தண்ணீர் பாட்டிலை அவள் கையில் கொடுக்காமல் அவள் தாடை பிடித்து கொஞ்சம் கொஞ்சமாய் புகட்டினான். அவளுக்கு தண்ணீர் உள்ளே செல்வதே வயிறு பிரட்டியது. உடனே ‘போதும்’ என்றுவிட்டாள்.
“ரிலாக்ஸ்!!! தலை சுத்துதா?” அவன் கேட்டதும் மறுப்பாக தலையசைத்தாள்.
“உனக்கு ஜஸ்ட் ஃபீவர் தான். அதுக்கூட இப்போ இல்ல. கொஞ்சம் நல்லா சாப்பிட்டா நார்மல் ஆகிடுவ!” ஆறுதலாக சொன்னான் கோவர்த்தன்.
முயன்று, ‘ம்ம்ம்’ என்றாள் அவள்.
அவள் கரத்தில் பொருத்தியிருந்த நீடிலை கவனமாக எடுத்துவிட்டு, அந்த இடத்திற்கு ஐஸ் பேக் வைத்தான். அவள் ‘எழுந்துக்கொள்ள வேண்டும்’ என்று சைகையில் சொல்ல, “முடியுமா?” என்றான்.
“ட்ரை பண்றேன்” என்றவளுக்கு தன் உடல்நிலையை பரிசோதிக்கும் எண்ணம். அதோடு படுத்தே இருந்ததில் முதுகும் இடுப்பும் ‘என்ன?’ என்று கேட்டது. மெல்ல கைக்கொடுத்து அவள் முழுபாரத்தையும் அவனே தாங்கிக்கொண்டு தரையில் நிறுத்தினான் அவளை.
ஏனோ உடல் தன் கட்டுப்பாட்டிலேயே இல்லை என்பதாக தோன்றியது அவளுக்கு. சரியாக நிற்கக்கூட முடியாமல் அவள் தடுமாற அழுகையே வந்துவிட்டது, தனக்கு என்னவோ ஆகிவிட்டதோ என்று!
அவள் எண்ணம் உணர்ந்தவன் போல, “மனசு பலவீனமா இருந்தா உடம்பு தளர்ந்துடும்… உடம்பு வீக்கா இருந்தா மனசு தளர்ந்துடும். இது நார்மல் தான். உனக்கு ஒண்ணுமே இல்ல… இன்னும் ரெண்டே நாள்ல என் இன்னொரு பக்க நெத்தியை பொலக்குற அளவுக்கு நீ பர்ஃப்க்ட்லி நார்மல் ஆகிடுவ!” அவன் சொன்ன ஆறுதலில் அவனை முயன்று முறைத்தாள் பெண்.
‘நிக்கவே தெம்பில்ல… இதுல முறைப்பா?’ என்று நினைத்து சிரிப்பு வந்தாலும் அதை முகத்தில் காட்டாமல் பாவமாய் வைத்துக்கொண்டு அவளை தாங்கியபடி நின்றிருந்தான் கோவர்த்தன்.
“என்னவோ, நான் நூறு முறை பொளந்த மாறி பேசுறீங்க” வறண்ட தொண்டையில் இருந்து வார்த்தைகள் லேசாக திக்கி வந்தது.
“இன்னும் தொண்ணூத்தி ஒன்பது முறை பொளந்தாலும் எனக்கு பிரச்சனை இல்ல… நீ கூட இருந்தா போதும்!” சொல்லிவிட்டு சட்டென கண்சிமிட்டினான் அவன்.
முறைக்க முயன்றாலும் முடியவில்லை. முழுக்க முழுக்க அவன் தயவில் நிற்கிறாள். தன்னை சுற்றி வளைத்து பிடித்துக்கொண்டு கண்சிமிட்டுபவனை என்ன செய்ய?
நான்கெட்டு நடக்கவே உடல் தளர்ந்துப்போனதை போல உணர்ந்தாள் நிலா. போதுமென சோபாவில் அமர வைத்தவன், சில நிமிடங்களில் இன்ஸ்டன்ட் சூப் மிக்சை மிதமான சூட்டில் எடுத்து வந்தான். அவளுக்கு உண்ண வேண்டும் என்ற எண்ணமே இல்லை. அப்படியே படுத்துக்கொள்ளலாம் போல தான் தோன்றியது. ஆனாலும் விடாமல் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் அதை புகட்டிவிட்டு, வாய்துடைத்து, சற்று நேரம் அவளோடு கதை பேசி பின் உறங்க சொல்லி அவளை படுக்க வைக்கும் வரை சிரித்த முகமாகவே இருந்த கோவர்த்தனின் முகம் அவள் ஆழ் மனதில் அப்படியே பதிந்துப்போனது.
மீண்டும் அவள் கண் விழிக்கையில் மறுநாள் பொழுது விடிந்திருந்தது. முதல் நாள் போல மிகவும் தளர்வாக உணராமல் சற்று தெம்பாக தோன்றியது, கூடவே கோவர்த்தனின் சிரிப்பு சத்தமும் அவளுக்கு தெம்பூட்டின.
தலையை நிமிர்த்தி பார்த்தாள். சோபாவில் சாய்ந்து படுத்தபடி கையில் இருந்த போனை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான். மீம்ஸ் பார்க்கிறானோ? என அவள் நினைத்து முடிப்பதற்குள், ‘டேய் போதும் போங்கடா’ என்ற சத்தம் வர, அவன் வீடியோ காலில் இருக்கிறான் என புரிந்தது.
“விடாத அயித்தான், இன்னும் நாலு போஸ் எடுங்க” இவன் சிரித்துக்கொண்டே சொல்ல, அங்கே மறுபக்கத்தில் சிரிப்போடு பெரும் சலசலப்பு. ஏதோ குடும்பமாய் சிரிக்கிறார்கள் என்று தான் புரிந்தது அவளுக்கு. அதை கண்டதும் ஒரு நொடியில் அவள் மனக்கண்ணில் தன் பழைய வாழ்க்கை மின்னிமறைய, பெரும் ஏக்கம் அவளுள்.
இப்படிதானே நாமும் இருந்தோம்? நம் வாழ்வும் சிரிப்பும் சிணுங்கலுமாய் பெற்றவருடனும் உடன்பிறந்தவளுடனும் இப்படிதானே இருந்தது. எத்தனை அழகான நாட்கள் எல்லாம்!? ஒரே ஒரு திருமணம் அத்தனையும் துடைத்து எரிந்துவிடுமா என்ன? பெற்றவரை மற்றவராய் மாற்றி விடுமா என்ன? தன்னை ஒரு அனாதை போல நிறுத்தி விடுமா என்ன? இன்னும் என்னென்னவோ எண்ணங்கள்!!!
தன்னை போல அவள் கையூன்றி எழுந்து அமர, அந்த அசைவில் இவள் புறம் பார்த்தவன், “குட் மார்னிங் நிலா” என்றபடி போனை சோபாவில் போட்டுவிட்டு வந்தான்.
“மார்னிங் கோ!” என்றவளுக்கு பேச்சே வரவில்லை. மனதில் லேசான அழுத்தம்.
“ரெஸ்ட் ரூம் யூஸ் பண்றியா? ஹெல்ப் பண்ணவா?” அவன் அக்கறையாய் கேட்க, “நானே பாத்துக்குறேன் கோ!” என்றவள், எழுந்து நிற்கப்போக தலை கிர்ர்ர்ரென ஒரு சுற்று சுற்றியது. தலையை தாங்கியபடி அப்படியே அமர்ந்துவிட்டாள்.
“சாப்பிட்டா சரியாகும்!” என்ற கோ, அவளை கைத்தாங்கலாய் அழைத்து சென்று பாத்ரூமினுள் விட்டு வெளியே வந்தான். இன்னமும் அழைப்பு துண்டிக்கப்படாமல் தான் இருந்தது. ஃபோனை அவன் அப்படியே வைத்ததால் திரை மட்டும் விட்டத்தை கட்டிக்கொண்டிருண்தது அவர்களுக்கு.
ஐந்தே நிமிடத்தில் தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு, கொஞ்சமாய் தன்னை திருத்திக்கொண்டும் வெளியே வந்தவளை மீண்டும் கைப்பிடித்தே அழைத்து வந்து அமர்த்தியவன், பருக சூடான இஞ்சி டீ கொடுக்க, மறுக்கவே முடியாமல் அதன் வாசனையில் மயங்கி, வாங்கி குடிக்க ஆரம்பித்தாள்.
அங்கே ‘ஃபோனில்’ இவன் பார்க்கிறானா இல்லையா என்றே கண்டுக்கொள்ளாமல் ஆரவாரமாய் இருந்தது.
“பேசுங்க” என்று காட்டினாள் வாணிலா.
“ம்ம்ம்” என்றவன், ஃபோனை எடுக்காமல், “அப்பா அம்மாக்கு ‘ஃபார்டியத்’ ஆனிவர்சரி… விஷ் பண்றியா?” என்றான் கேள்வி போல. ஆனாலும் அது கேள்வியாய் மட்டுமில்லாமல் அவன் ‘அவா’வாகவும் தெரிய, அவள் மறுக்கவில்லை.
உடனே சந்தோசமாய் ஃபோனை எடுத்தவன், ‘மியூட்’டை எடுத்துவிட்டு, “ஹே… இங்க பாருங்க… நிலா பேசுறா!” என்றுவிட்டு அவள் அருகே அமர்ந்து ஃபோனை நீட்ட, சங்கோஜம் தான் அவளுக்கு.
அந்த சின்ன ஃபோன் திரையில் அத்தனை முகங்கள். ஏதோ ஸ்டான்ட் வைத்து ஃபோனை தள்ளி நிறுத்தியிருப்பார்கள் போலும். நட்ட நடுவே பெரிய சைசில் கேக் இருக்க, அதன் பின்னே கோவர்த்தனின் பெற்றவர்கள், அவர்களின் இருபுறமும் அவர்கள் மக்கள். பார்க்கவே அத்தனை நிறைவாக இருந்தது.
கோவர்த்தன் முழங்கையில் லேசாக இடிக்க, “ஹான்?” என முழித்தாள் பெண்.
‘நன்றி’ என்று சொன்னாலும் அவர்கள் இருவரையும் பார்த்து குறுகுறுவென ஏதோ பேசுவது போலவும் கண் ஜாடை செய்வது போலவும் அவளுக்கு தெரிய, அருகே திரும்பினால், கோவர்த்தனும் ஏதோ கண்ஜாடை செய்வது போல தெரிந்தது. இவள் பார்த்ததும் மாற்றிக்கொண்டானோ என்று தோன்ற அந்த சந்தேகத்தோடே பேசியும் முடித்தாள்.
அடுத்த இரண்டு நாட்கள் அவள் மறுக்க மறுக்க, அவளை தாங்கினான் கோவர்த்தன். உடலும் சற்று தேற அலுவலகம் செல்கிறேன் என்றவளை விடவில்லை அவன். அவளுக்கு முடியாமல் இருந்த நேரம், அவள் டீம் ஹெட் ‘டியாகோ’வுடன் விடுப்புக்காக பேசி நடப்பாகிவிட்டிருந்தான். அதனால் தயங்காமல் அவருக்கு அழைத்து அவள் உடல்நிலையை எடுத்து சொல்லி ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ வாங்கிக்கொடுத்தான்.
அடுத்த ஒரு வாரத்தில் அவள் நன்றாக தெரிவிட்டாலும் அவன் விடவில்லை. டியாகோ கொடுத்த நாட்கள் வரை வீட்டில் இருந்தே வேலை செய்ய வைத்தான். நடுநடுவே அலுவலகம் போக வேண்டி வந்தால், அவனே அழைத்து சென்று கூட்டி வந்தான். இதற்கிடையில் மருத்துவமனை வேறு! தன் வேலையும் பார்த்து, அவளையும் பார்த்து என பம்பரம் போல சுற்றினான் என்று தான் சொல்ல வேண்டும்.
வானிலாவுக்கு தான், தான் எப்படி உணர்கிறோம் என்றே சொல்ல தெரியவில்லை. தன்னை ஒரு ‘ராணி’ போல உணரவைக்கும் அவன் செய்கைகள் அவளை அசைத்தது உண்மை. சிறிது சிறிதாக அவனுக்கு அவள் ‘அடிக்ட்’ ஆகிக்கொண்டிருக்கிறாள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.
‘இது வேண்டாம், தள்ளி இருப்போம்’ என தனியே இருக்கும் நேரங்களில் தோன்றும். அதுவே அவன் சிரித்தபடி அவளை நோக்கி வரும் கணம் அத்தனையும் மறந்து போகும். அவன் நடத்தையில் அவளை கவர வேண்டும் என்ற நாடகத்தன்மை இல்லை. வெகு இயல்பாக அவனிடம் ‘தாய்மை’யை உணர முடிந்தது. அது தான் அவளை அவனை விட்டு விலக முடியாமல் இறுக்கியது.
“ஒய்… என்ன ஒரே சிந்தனைலையே இருக்க?” அவளை தட்டினான் கோவர்த்தன். அவனைப்பற்றிய சிந்தனையில் தான் அவள் மூழ்கியிருந்தாள். அதை சொல்லவா முடியும் என்று சிரித்து சமாளித்தாள்.
அவன் கையில் காக்டெயில் இருந்தது. மிடறு மிடறாக பருகிக்கொண்டு எதிரே தன்னை மறந்து ஆடிக்கொண்டிருக்கும் கூட்டத்தை கண்களில் லயிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான்.
ஸ்பெயின் நகரின் அழகான ஒரு நைட் கிளப்பில் இருந்தார்கள் இருவரும். அவன் வீட்டில் இருக்கும் ஆப்ரிக்கா ஆணழகன் தான் இப்போதும் அவனுக்கு இலவச டிக்கெட்டை வழங்கியது. தோழியோடு வருவதற்காக அவன் வாங்கியிருக்க, இன்று அவனுக்கு வேறொரு வேலை வந்துவிட்டதாம். வீணாக்க வேண்டாமென்று தனக்கு பலமுறை சுடசுட இட்லி கொடுத்த நன்றிக்காக தன் ஹவுஸ் ஓனருக்கு டிக்கெட்டை தள்ளிவிட்டான்.