இரவு உணவுக்காக அடுப்பில் இடியாப்பம் பிழிந்து வைத்த ரேகா, அது வேகும் இடைவெளியில் தேங்காய்பாலும், வெள்ளை குருமாவும் தயார் செய்துக்கொண்டிருந்தாள். தேங்காயோடு இதர உருப்படிகள் சேர்த்து மிக்ஸியில் அரைத்தவள் மனம் மட்டும் அங்கே இல்லவே இல்லை. கை மட்டும் பழகிய பழக்கத்திற்கு வேலைகளை செய்துக்கொண்டிருக்க, இரு நாட்களுக்கு முன் வீட்டுக்கு வந்த அந்த புதியவர்கள் தான் அவள் மனதுக்குள்.
அவர்கள் யார்? எப்படி சொந்தம்? என்ற கெடுபிடியான விசாரணை மாமியாரும் புருஷனும் நடத்தியும், அவளால் தெளிவாக எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. அவளுக்கே அப்போது தெரியாதே, அவர்கள் யாரென்று.
வந்தவன், ‘அண்ணன், பெரியப்பா’ என்ற முறையில் வந்ததால் ஆனமட்டும் தப்பித்தாள். இல்லையென்றால் தனிமையில் சுரேஷிடம் இருந்து மிக மோசமாக கற்பனைகளை கேட்டிருக்கக்கூடும். அதிலும் வந்தவன் தனியாக வராமல் ‘தந்தை’ என்ற ஒருவனோடு வந்தவரை மேலும் நலமாய் போனது.
வந்தவன் கொடுத்துவிட்டு போன கடிதத்தை அன்று மாலை வரை பிரித்துப்பார்க்ககூட அவளுக்கு தனிமை கிடைக்கவில்லை. திலகா அவளை எப்போதும் போல படுத்திக்கொண்டிருந்தார். மாலை நேரம் வாசலில் யாரோ வந்து அழைக்கவும் அவரிடம் நின்று சுவாரஸ்யமாய் திலகா நியாயம் பேச, அந்த இடைவெளியில் மறைத்து வைத்திருந்த பேப்பரை எடுத்து படித்தவளுக்கு, இப்போதும் கூட வார்த்தை மாறாமல் நினைவு இருந்தது.
முன்பின் உறவில்லாத யாரோ ஒருவன் தன் நலனை வேண்டி, தனக்காக உதவ பிரயத்தனம் எடுக்க, தன்னால் இதிலிருந்து வெளியே வருவது எல்லாம் அத்தனை சுலபம் என்று தோன்றவே இல்லை. ஒற்றையாளாய் தன்னை மெனக்கெட்டு வளர்த்து, பார்த்து பார்த்து கட்டிவைத்து, மகள் நன்றாக வாழ்கிறாள் என்று ஒரு உயிர் அங்கே நிம்மதியாக இருக்க, அதை கெடுக்கும்படி தான் போய் நின்றாள்…!? ம்ஹும்… தந்தை ஒடிந்தே போவார் என்று அஞ்சினாள்.
அதற்காக இங்கேயே தன் வாழ்க்கையை ஓட்ட முடியும் என்று தோன்றவில்லை. முன்னே எப்படியோ… முதல் இரண்டு மாதங்கள் ‘கணவன்’ என்ற போர்வையில் அவன் தன்னை உடலால் வதைத்ததை எல்லாம் பல்லைக்கடித்து பொறுத்துக்கொண்டாள். ‘திருமணம்’ என்றால் இப்படிதானோ? இதெல்லாம் சகஜம் தானோ என்றெல்லாம் தோன்றியது. ஆரம்பத்தில் ஒருமுறை தன் தூரத்து உறவு பெண்ணிடம் மறைமுகமாய் கேட்டதற்கு அவள் அப்படி தானே சொன்னாள்?!
‘ஆம்பளைங்க அப்படி இப்படி தான் இருப்பாங்க. ஒன்னும் தெரியாதவன்னா உருட்டிட்டு இருப்பான். உன் புருஷனுக்கு தான் முன் அனுபவம் இருக்கே! சும்மாவா இருப்பான்!?’ கிண்டல் தொனியில் அவள் கேட்கையில், இதெல்லாம் இயல்பு என்று தான் நினைத்திருந்தாள். அவன் கொடுத்த வலிகளை கூட கண்ணீரோடு தாங்கிக்கொண்டவளுக்கு, அவனது அலட்சியம் தான் மனதை வருத்தியது.
‘வலிக்குதுங்க’ என்று அழுதால் கூட அவன் அதை கண்டுக்கொள்வதில்லை. அவளுக்காக என்று அவன் எதுவுமே செய்ததில்லை.
திலகத்தை பற்றிய எந்த எதிர்ப்பார்ப்பும் அவளிடம் கிடையாது. அவளறிந்த மாமியார்கள் போல தான் அவரும். சற்றே அதிகமோ என்று நினைத்தாலும், கணவன் அனுசரணையாய் இருந்திருந்தால் இதெல்லாம் அவளுக்கு ஒரு விஷயமே கிடையாது.
தந்தையை மனதில் கொண்டு ‘இது தான் தன் வாழ்க்கை’ என அவள் பழகிக்கொள்ள முயன்ற நேரம் தான், அவள் கணவனின் வேறொரு முகம் அவளுக்கு தெரியவந்தது. அதன்பிறகு தான் அவளுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாய் போகிறது.
தந்தையை நினைத்து வாழவும் முடியவில்லை; கணவனின் சுயரூபம் அறிந்து வாழவும் முடியவில்லை. உண்மையில் நரகம் அவளுக்கு. இதில் இருந்து வெளியே வர வேண்டும் என்றால் அவள் மட்டுமே பூரணமாய் மனம் வைக்க வேண்டும்.
“இன்னுமாடி இடியாப்பம் வேகுது?” ஹாலில் இருந்து திலகத்தின் கட்டை குரல் கேட்டதும் நெற்றியில் அடித்துக்கொண்டு சுறுசுறுப்பாய் வேலையை முடித்தாள் ரேகா. அடுப்பை அணைத்துவிட்டு மாமியாரை சாப்பிட அழைக்க அவள் வரும் நேரம், சுரேஷின் வண்டி சத்தம் கேட்க, இரவை நினைத்து இப்போதே அவள் உடல் நடுங்க ஆரம்பித்தது.
“என்ன நின்னுட்டே இருக்க? போய் கதவை திற” திலகா சொல்ல, ரேகாவுக்கு பின்னே, “எல்லாம் சொல்லணும் இவளுக்கு…” என்ற குத்தல் வேறு அவரிடம் இருந்து.
கதவை திறந்ததும், வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே வந்தவன், அவளிடம் பையை நீட்டிவிட்டு ஒரு பார்வை கூட பார்க்காமல் உள்ளே சென்றான். அடுத்த நிமிடங்களில் அவன் தன்னை சுத்தப்படுத்திக்கொள்ள, அவனுக்கு வேண்டிய துண்டு, மாற்றுடை எல்லாம் கைக்கே கொண்டு சென்று கொடுத்தாள் ரேகா. அவளை ஒரு பொருளாக கூட மதிக்காமல் அவன் போக்கிற்கு எல்லாம் முடித்துக்கொண்டு அன்னையிடம் வந்து பேச அமர்ந்தான்.
தயங்கி தயங்கி அங்கு வந்தவள், “அப்பாக்கிட்ட பேசி ஒரு வாரமாச்சு. ஃபோன் தரீங்களா?” என்றாள் அவனை பார்க்காமல்.
நக்கலாய் ஒரு சிரிப்பு சிரித்தவன், “ஃபோன் பேசுறேன்னு சொல்லி எவளுக்காது மெயில் போடலாம்ன்னு பாக்குறியா?” என்று கேட்க, இவளுக்கு அன்றைய நாள் நினைவுக்கு வந்து கண்கள் கரித்தது.
வானிலாவின் மெயிலுக்கு தகவல் அனுப்பியும் அவளிடம் இருந்து பதில் வராமல் போக, சுரேஷின் அலைபேசியில் இருந்து அவன் சேமித்து வைத்திருந்த வானிலாவின் எண்ணுக்கு அவள் ஃபோனில் இருந்து வாட்சைப் கால் செய்தாள். அவனிடம் அவளது எண் எப்படி இருக்கிறது என்றெல்லாம் ரேகா யோசிக்கவில்லை.
வாணிலா அவளிடம் பேசாமல் போய்விட, மீண்டும் மெயில் அனுப்பினாள். அதற்கும் பதில் வராமல் போனதும், அந்த ‘டைரி’யின் சில பக்கத்தை அவசரமாய் ஃபோட்டோ எடுத்து மெயில் அனுப்பும் நேரம், சுரேஷிடம் கையும் களவுமாக மாட்டிக்கொள்ள, அவளது ஃபோன் சுவரில் பட்டு தெறித்து விழுந்தது. சேதாரம் ஃபோனுக்கு மட்டுமல்ல. அவளுக்கும் தான்!!! அன்று தான் அவனது மற்றொரு முகத்தை பார்க்கவும் நேர்ந்தது.
அதன்பின் அவளுக்கென சொந்தமாக ஒரு ஃபோன் கூட இல்லை. ஒவ்வொரு நேரமும் இப்படி அவனிடம் கெஞ்சிக்கொண்டு நின்று குத்தல் பேச்சு கேட்க வேண்டியதாக தான் இருக்கிறது.
“எவளும் என்னை ஒன்னும் பண்ண முடியாது” திமிராக சொன்னவன், “நாளைக்கு பேசிக்கலாம். போய் சாப்பாடு எடுத்து வை!” என்றான். திலகா இது எதிலும் உள்ளே வரவில்லை. அவர் நினைத்தால், மருமகளுக்காக பேசலாம். ஏன் அவர் ஃபோனை கூட கொடுக்கலாம். ஆனால், மகனை மீறி ஒன்றுமே செய்யமாட்டார்.
கண்ணை தாண்டிய கண்ணீரை மறைத்துக்கொண்டு, கிச்சனுக்கு சென்றவளுக்கு மீண்டும் அந்த கடிதத்தை பார்க்க தோன்றியது. மிளகாய் டப்பாவில் மறைத்து வைத்திருந்த பேப்பரை எடுத்து விரித்து பார்த்தாள்.
“உனக்கு எதாவது பிரச்சனைன்னா என்னை உன் அண்ணனா நினைச்சு இந்த நம்பருக்கு கூப்பிடும்மா! வாணிலா மூலமா நீ நல்லா இருக்கியான்னு பாக்க வந்துருக்கோம்! நீ ஒரு வார்த்தை சொன்னாலும், உனக்காக உதவ நாங்க இருக்கோம்” சுருக்கமான அந்த வார்த்தைகள், அவளுக்கு அத்தனை தெம்பூட்டின.
அவர்கள் கொடுத்த நம்பர் கூட அவளுக்கு மனப்பாடம். மீண்டும் அதை எடுத்த இடத்தில் ஒளித்து வைத்துவிட்டு, சுரேஷுக்கும் திலகாவுக்கும் உணவை பரிமாறினாள் ரேகா.
அன்றைய இரவு வழமை போல ரேகாவின் உடலில் தன் வக்கிரத்தை கொட்டினான் சுரேஷ். அவனது வக்கிர முகத்தின் உச்சத்தை இன்னும் பெண்ணவள் காணும் காலம் வரவில்லை.
***
இந்தியன் சூப்பர் மார்கெட் ஒன்றில் பொருட்களை பார்த்து பார்த்து எடுத்து ட்ராலியில் போட்டுக்கொண்டிருந்தாள் வாணிலா. ஓரளவு சமையல் பழகியிருந்ததால் முன்னை போல தடுமாற்றம் இன்றி பொருட்களை தெரிவு செய்ய முடிந்தது அவளுக்கு.
“நிலாம்மா… இது வேணுமா பாருடா” வரமிளகாய் பேக் ஒன்றை கோவர்த்தன் எடுத்து காட்ட, ஒரு பார்வை மட்டும் பார்த்தவள் ஒன்றுமே சொல்லாமல் வேறு பார்க்க தொடங்கினாள். உதட்டை பிதுக்கினான் கோவர்த்தன். இரண்டடி நகர்ந்ததும் வேறொரு பொருளை எடுத்து, “இது வேணுமா?” என்று அவன் கேட்க, அதற்கும் அதே பார்வை மட்டுமே.
அவன் சளைக்கவில்லை. மீண்டும் மீண்டும் அவளை எதாவது கேட்டு தொந்தரவு செய்துக்கொண்டு தான் இருந்தான். அவளும் தன் பார்வையை மாற்றாமல் அவ்வப்போது முறைத்துக்கொண்டு தான் இருந்தாள். கடந்த ஒரு வாரமாய் இந்த முறைப்பு மட்டும் தான் அவளிடம். அது பொங்கி வரும் கோவத்தின் வெளிப்பாடாய் இருந்திருந்தால், அவளை அசால்ட்டாக அடக்கியிருப்பான் கோவர்த்தன். ஆனால், அவள் முறைப்பில் கோவத்தை விட, எள்ளல் தான் அதிகமாய் இருப்பதாய் அவனுக்கு பட, ஒரே அசிங்கமாய் போனது.
வானிலாவின் அடுத்த ப்ராஜெக்டும் வெற்றிகரமாக முடிய, ஸ்பெயினில் அவளுடைய பணி முடிந்து சொந்த நாட்டுக்கு திரும்பலாம் என்று மெயில் வந்து சேர்ந்தது. ‘ரெசிடென்சி’ வேலைகள் ஒருபுறம் நடக்க, வாணிலா வீட்டில் தான் இருந்தாள். கோவர்த்தன் மட்டுமே மருத்துவமனை சென்று வந்து கொண்டிருந்தான். அன்று வார இறுதி என்பதால் பொருட்களை வாங்க வெளியே வந்திருக்க, தளராமல் தன் சமாதானப்புறாவை பறக்க விட்டுக்கொண்டிருந்தான்.
“பிஸ்கட் வேணுமா நிலாம்மா?” ஒரு பெரிய பேக்கெட்டை தூக்கி அவன் காட்ட, முறைக்க திரும்பியவள், உண்மையிலேயே முறைத்தாள். அவள் பார்வையின் சூடு உணர்ந்தவன், தன் கையை பார்க்க, பிஸ்கட் பேக்கெட்டில் நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு அழகான ஒரு நாயின் படம் இருக்க, அவசரமாக அதை இருந்த இடத்தில் வைத்தவன், “சாரி” என்றான் அசடு வழிந்து.