“அட வாடா உள்ளே… வேற யாரோட வீடு மாறி யோசிக்குற?” வாசலில் சத்தமாய் கேட்டது சுரேஷின் குரல். அடுக்களையில் நின்ற ரேகா என்னவென்றும் பார்க்கவில்லை. சில முறை ஆட்கள் வந்திருக்கிறார்களே என்று யதார்த்தமாய் அவள் வெளியே வந்தபோது, ‘எதுக்கு இங்க வந்து ஆடுற?’ என்று சுரேஷ் நறுக்கென கேட்டது அவளை இப்போது இடத்தை விட்டு நகரவிடவில்லை.
“அம்மா…? ம்மா?” குரல் கொடுத்துக்கொண்டே சுரேஷ் ஹாலுக்கு வந்திருக்க, அடுக்களை வாசலில் தயங்கி வந்து நின்ற ரேகா, “அத்தே, வாக்கிங் போறேன்னு போனாங்க” என்றாள் மெதுவாய். சுரேஷுக்கு தெரியாதா என்ன? தெரிந்து தானே அந்நேரம் வந்ததே!
தெரியாதவன் போலவே, “அச்சோ!” என்று வியந்தவன், “நீ உக்காரு சிவா, அம்மா வந்துடுவாங்க… உன்னை பார்த்தா ரொம்ப சந்தோசப்படுவாங்க” என்று சொன்னபடி நண்பனை அமர வைத்தான்.
வந்தவனை வரவேற்ப்பதா? இல்லை அப்படியே போய்விடுவதா? என குழம்பி ரேகா சில நொடிகள் நிற்க, “என்னடி அப்படியே நிக்குற? போய் குடிக்க எதாவது கொண்டு வா!” என்று சுரேஷ் அதட்டவும் வேகமாய் உள்ளே சென்றவள் காஃபி போட ஆரம்பித்தாள்.
வெளியே இருந்த ஆண்கள் இருவரும் கண்களால் பேசிக்கொண்டனர்.
சுட சுட காஃபி எடுத்து வந்தவள், புதியவனுக்கு மிக மெல்லிய வரவேற்ப்பு புன்னகையுடன் கொடுத்துவிட்டு, கணவனுக்கும் கொடுத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டாள். கிரைண்டரில் மாவு ஓடிக்கொண்டிருக்க, உள்ளே நின்றவளுக்கு வெளியே இவர்களின் ரகசிய பேச்சு காதை அடையவில்லை.
“என்ன மச்சி? எப்படி இருக்கா என் பொண்டாட்டி?” சுரேஷ் கேட்டதற்கு, மிதமாக தலையாட்டிய சிவா, “ரொம்ப சுமாரா இருக்கா… தேனிலா அளவுக்கு இல்ல” என்றான்.
“டேய், அவ வேலை செஞ்ச அலுப்புல இப்படி தெரியுறா டா! மத்தபடி வொர்த்’தான். நம்ம டேஸ்ட்க்கு ஏத்த மாறி பக்காவா இருப்பா” ஏதோ பொருளுக்கு மார்கெட்டிங் செய்பவன் போல பேசினான் சுரேஷ்.
“அப்போ சரி! நீ பேசி ஓகே வாங்கிடு! நம்ம க்ரூப்’ல அப்றமா சொல்லிப்போம். இப்போவே சொன்னா பறப்பானுங்க…” சிவா சிரித்துக்கொண்டே சொல்ல, “அதெல்லாம் சப்ப மேட்டர். நான் பேசிக்குறேன் இவகிட்ட” என்று சுரேஷ் சொன்னதும், “இப்டி தான் தேனிலாக்கும் சொன்ன… கடைசில யாருக்கும் கிடைக்காம நக்கிட்டு போச்சு” என்றான் சிவா கடுப்போடு.
“இவ தேனிலா மாறி இல்லடா… பயந்தவ! பிடிவாதம் பிடிக்க மாட்டா! ரெண்டு அறை அறைஞ்சா சரின்னு சொல்லிடுவா” சுரேஷ் அசால்ட்டாய் சொன்னதும், “அது உன் பாடு! நம்ம கிட்ட வந்து அழுதுக்கிட்டு இருந்தான்னா எல்லாரும் காண்டாகிடுவானுங்க, பாத்துக்கோ” என்ற சிவா, விடைபெற்று சென்றுவிட்டான்.
சுரேஷ் அன்றிரவே அவளிடம் இதைப்பற்றி பேசிவிட வேண்டும் என்று முடிவு செய்தான்.
***
பெனிடோறம் கடற்கரை ரெசார்ட் ஒன்றில் சுகமாய் உறங்கிக்கொண்டிருந்தான் கோவர்த்தன். முட்டி வரை நீண்ட வெண்ணிற பாத்ரோப்’புடன், பால்கனி கண்ணாடி கதவுகளை திறந்துக்கொண்டு வெளியே சென்ற வாணிலா முகத்தில் சில்லென்ற காற்று பட, காற்றின் தொடுகை கூட கணவன் தொடுகை போல சிலிர்க்கத்தான் வைக்கிறது அவளை.
இந்திய நாட்டை விட்டு ஸ்பெயினிற்கு அவள் வந்தபோது எந்த தனிமை அவளை துரத்தியதோ? எந்த வெறுமை அவளை விரட்டியதோ? அது இப்போது அவள் கண்படும் தூரத்தில் கூட இல்லை. எங்கோ, எங்கேயோ காணாமல் போயிருந்தது.
கோவர்த்தன் தான் அவள் கணவன் என்ற எண்ணத்தை போதும் போதும் என்ற அளவில் அவள் மனதில் விதைத்துவிட்டான் அவன். வெறும் உடல் நெருக்கத்தால் மட்டுமல்ல… அவள் மனதில் அழுத்தமாய் அமர்ந்துக்கொண்டான் அடமாக. காதலிப்பதை விட, காதலிக்கப்படுவது சுகம் என கேள்விப்பட்டிருக்கிறாள்! அதை அனுபவிக்கும்போது இத்தனை சுகமாக இருக்கும் என்று அவள் கற்பனை கூட செய்ததில்லை.
தேனிலாவிடம் பெண் பார்க்கும் வைபவம் நடந்த அன்று வாணிலா இப்படி கேட்டிருந்தால், “உனக்கு அந்த ‘ஸ்பார்க்’ வந்துச்சா? அவன் முகத்தை பார்த்ததும், இவன் தான் என் ஆளுன்னு, இவன்கூட தான் என் லைப் ட்ராவல் ஆகணும்ன்னு…? தோணுச்சா அப்படி?” என்று!
வாணிலா மனதுக்கு தெரியும், கோவர்த்தனை பார்த்த முதல் பார்வையிலேயே பிடித்துப்போனது என்று. அவனிடம் தோன்றிய அந்த ‘ஸ்பார்க்’கை ‘இது சரி வராது’ என்று அவளாகத்தான் மறைத்து வைத்தாள். அத்தனையும் மீறி அவளை கவர்ந்துவிட்டான் கள்ளன்.
‘திருமணம்’ என்ற பந்தம் கோவர்த்தனுடன் மட்டுமே முடிவது இல்லை தானே!? அவனைக்கொண்டு ஒரு மினி கிராமமே உறவாக ஒட்டிக்கொண்டு வருகிறதே! அவர்களோடு இயல்பாக பழக முடியுமா? அவர்களோடு உறவாக காலம் தள்ள முடியுமா? என்றெல்லாம் ஏகப்பட்ட பயம் மனதுக்குள் இருந்தாலும் அதையெல்லாம் இந்த ஒருவனுக்காக பழகிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.
பெற்றவரிடம் சொல்லிக்கொள்ளாமல் திருமணம் செய்வோம் என்று கனவில் கூட நினைத்ததில்லை அவள். காலம் செய்யவைத்துவிட்டது. அதை நினைத்து வருத்தமெல்லாம் இல்லை அவளிடம். தன்னை மோசமான வளர்ப்பாக சொந்தபந்தங்கள் பேசும், அவ்வளவு தானே! பேசிவிட்டு போகட்டும். எனக்கென்ன!? என்ற மனநிலையில் தெளிவாக இருந்தாள்.
அவள் தன்போக்கில் சிந்தித்துக்கொண்டு நின்றுவிட, தொலைகாட்சியில் வரும் காஃபி விளம்பரம் போல, அற்புதமான நறுமணம் அவள் நாசியை நிறைத்து கவனத்தை கலைத்தது. திரும்பிக்கூட பார்க்க தேவையில்லை. கோவர்த்தன் துயில் கலைந்து, அவளுக்காக காஃபியை தயார் செய்கிறான் என்று புரிய, நிறைவான புன்னகை அவளிடம்.
இந்த சின்ன சின்ன அக்கறை போதும், எத்தனை இன்னல் வந்தாலும் அவள் இன்முகமாய் நிமிடங்களை நகர்த்த!
அவளிடம் கோப்பையை நீட்டியவன் கரம், அப்படியே அவள் இடையோடு அழுந்திக்கொள்ள, இயல்பாக வேடிக்கை பார்த்துக்கொண்டு ரசித்து குடிக்க ஆரம்பித்தான் கோவர்த்தன். மேற்சட்டை இல்லாத வெற்று மார்போடு, பெரிய டவல் ஒன்றை மட்டுமே இடையில் கட்டிக்கொண்டு நின்றிருந்தான்.
“ட்ரெஸ் மாத்த கூட டைம் இல்லையா?” குடித்துக்கொண்டே கேட்டாள்.
“மாத்தி என்ன பண்ண போறோம்?” அவளை பாராமலேயே சொன்னான். அவள் கன்ன சிவப்பை காஃபி குடிப்பதை போல குனிந்து மறைத்துக்கொள்ள, கண்ணனின் கண்ணில் படாமல் போகுமா என்ன!? அவனிடம் நிமிர்வான புன்னகை!
“முடிச்சுட்டு வந்து….” இப்போதும் அவன் வார்த்தை கொக்கி போட, காஃபி குடிப்பதாக குனிந்துக்கொண்டாள் வாணிலா.
அவள் பதில் சொல்லாமல் இருக்க, அவள் காதோரம் வந்தவன், குறுகுறுப்பூட்டும் குழைந்த குரலில், “டுவண்டி வன்…?” என்றான். அவள் கண்கள் விரிந்தது.
“சிக்ஸ்டி?” அவன் கேட்க, “நோ!” வேகமாய் தலையை ஆட்டினாள்.
“ப்ச்… அட்லீஸ்ட் செவண்டி வன்?” அவன் கேட்டதும், “வெதர் நல்லா இருக்கு, வாக் போலாம் வா!” என்றபடி உடை மாற்ற சென்றுவிட்டாள். சின்னப்பிள்ளை போல காலை உதைத்துக்கொண்டு நின்றிருந்தான் அவள் வரும் வரை. பார்த்தவளுக்கு சிரிப்பு தான். என்னவோ இரவில் அவள் சொல்வதை மட்டுமே கேட்பவன் போல அனுமதி வேறு! என்று நினைக்க, நீண்ட புன்னகையோடு, அவனை கிளப்பி இருவருமாய் வெளியே வந்தார்கள்.
இருவரும் ஒன்றாக வாழ ஆரம்பித்து இரு வாரங்கள் தான் இருக்கும். மருத்துவமனைக்கு ஒரு வாரம் விடுமுறை சொல்லியிருந்தான். இங்கு வந்தும் ஒரு வாரம் முடியப்போகிறது. திரும்ப வீட்டிற்கு செல்ல வேண்டும், வீட்டிற்கு போனால் வேலைகளுக்கு நடுவே இப்படி இஷ்டம்போல இருக்க முடியாது. விரைவில் இந்தியா போக வேண்டும், வீட்டில் பேசி இவர்கள் திருமணத்தை நடத்த வேண்டும். எல்லாம் அவன் மண்டைக்குள் ஓட, அவள் கரம் பற்றியபடி அமைதியாக நடந்து வந்தான்.
எப்போதும் லொட லொடவென பேசும் ஆள் அமைதியாக வருவதை அதிசயம் போல பார்த்திருந்தவள், “என்ன டாக்டர்? சைலெண்டா வரீங்க?” என்றாள்.
“ஹும்?” என திரும்பியவன், அவளை பார்த்ததும் குறும்புடன், “நீ ‘ப்ரக்னன்ட்’ ஆகிட்டா என்ன பண்றதுன்னு யோசிக்குறேன்” என்றான்.
‘லூசா நீ!’ என்பது போல பார்த்தவளும், “வீ ஆர் சேஃப்” என்றாள் மிடுக்காய்.
“அப்கோர்ஸ்… பட் நாட் ஆன் த பர்ஸ்ட் டே” அசால்டாய் அவன் சொல்லிவிட்டு ஐஸ்க்ரீம் வாங்க சென்றுவிட்டான். அவள் தான் வாயை பிளந்து வயிற்றை தொட்டுபார்த்துக்கொண்டு நின்றாள்.
***
“குழந்தைங்கன்னா அப்படி தான். ஒரு இடத்துல நிக்காம தங்கு தங்குன்னு குதிக்குங்க. தாறுமாறா ஏறி குதிச்சா குடல் ஏறிக்கும். குடல் ஏறுனா அடிக்கடி வெளிய போவுங்க… இதோ இப்படி நிக்க வச்சு, கொஞ்சூண்டு எண்ணையை தொட்டு வயித்துல ரெண்டு பக்கமும் அலுங்காம நீவுனா, ஏறுன குடலு தன்னால இறங்கிக்க போவுது… என்னடி என் தங்கம்?”
இரண்டு வயது குழந்தையிடம் கதையாக பேசிக்கொண்டே அவள் வயிற்றில் நீவி விட்டுக்கொண்டிருந்தார் அம்சவர்த்தினி. குழந்தையை நிற்கவைத்து பிடித்திருந்த தாயோ, “பயந்துட்டேங்க அண்ணமண்டி… ஆஸ்பத்திரிக்கு போகனுமோன்னு நினைச்சுக்கிட்டே உங்ககிட்ட வந்தேன்” என்று சொல்ல, குழந்தை வயிற்றில் இருபக்கமும் தட்டிப்பார்த்து, “அவ்ளதான், முடிஞ்சுது! டொப்பு டொப்புன்னு சத்தம் வரல பாரு!” என்றவர்,
“இந்த கால புள்ளைங்க கொசுக்கடிக்கு கூட பயந்து வேகுறதால தான் ஒண்ணோட போதும்ன்னு ஒத்த புள்ளையை சுத்திக்கிட்டு காலத்தை ஓட்றீங்க…” என்றார்.
“நீங்க இருக்க தைரியத்துல தான் நான் தனியா இவளை வச்சு சமாளிக்குறேன் அண்ணமண்டி… இல்லனா என் அம்மைக்கு நொடிக்கொருக்க ஃபோனை போட்டு உலட்டிட்டு கடப்பேன்” என்ற பெண் சிரித்துக்கொண்டு சென்றாள். அம்சவர்த்தினி அந்த ஊர் பெண்களுக்கு மத்தியில் படிக்காத டாக்டர்! என்ன பிரச்சனை என்று வந்தாலும் அவரிடம் ஒரு வைத்தியம் இருக்கும், அதில் பலனும் இருக்கும்.
தன்னால் முடியாதது தன் பிள்ளைகளாவது செய்யட்டும் என மருத்துவராக்க அவர் ஆசைப்பட, மூத்தவன் மனுஷனுக்கு பாக்க மாட்டேன், மாட்டுக்கும் ஆட்டுக்கும் தான் பார்ப்பேன் என்று விட்டான். நடுள்ளவனோ, மனுஷனுக்கும் இல்ல, மாட்டுக்கும் இல்ல, கண்ணுக்கே தெரியாத மனசுக்கு தான் வைத்தியம் பார்ப்பேன் என்றுவிட்டான்.
பெண்களுக்கு மருத்துவம் என்ற சொல்லே ஒவ்வாமையை கொடுத்தது. அவரது கடைசி நம்பிக்கை, வீட்டின் கடைக்குட்டி ஸ்ரீவர்த்தன் தான். அவர் ஆசைப்போலவே பதினோராம் வகுப்பில் பையாலஜி எடுத்திருந்தான். நன்றாக படிக்கும் ஆள் தான். பெரிதாக ஆசை வைத்து ஏமாற கூடாது என முடிவாக அமைதி காத்தார் அவர்.
வாசல் திண்ணையில் அமர்ந்திருந்த அம்சவேணி எண்ணையாகியிருந்த கரங்களை சுத்தம் செய்ய எழுந்துக்கொள்ள, வாசலில் புல்லட் வரும் சத்தம் கேட்டு அப்படியே நின்றுவிட்டார்.
இவர்கள் இருக்கும் வீட்டின் கடைக்கோடி பின்கட்டிற்கு வந்து சற்றே உரக்க குரல் கொடுத்தால், ராகவர்த்தினியின் வீட்டுக்கே கேட்கும். அத்தனை தொலைவு!?
சொந்த அத்தை மகனை தான் கட்டியிருக்கிறாள். மாமனார் மாமியாரை ஒரு சொல் சொல்லிவிட முடியாது. சொந்த பெண்ணை காட்டிலும் தாங்குவர். ஆனாலும் பெண்ணுக்கு அன்னையிடம் தான் தஞ்சம் புக தோன்றுகிறது. அதை துளியும் கண்டிக்காமல் அவள் போக்கிலேயே அவள் ஆசைக்கு விட்டுவிடுகின்றனர் புகுந்த வீட்டினர். இன்னும் இரண்டு நாட்களில் வளைகாப்பு வேறு உள்ளது.
“நல்ல பொண்ணு!” என்றவர், மகளுக்கு பிடித்ததை செய்ய சென்றார்.
காக்கி உடையில் புல்லட்டிலேயே சிவகங்கை வரை சென்றான் நகுலன். நேராக சுரேஷ் வீட்டின் முன்னே வண்டியை நிறுத்திவிட்டு காலிங் பெல் அடிக்க, சில நிமிடங்களில் வந்து கதவை திறந்த ரேகா, நகுலனை சற்று பயமும் அழுகையும் கலந்த பார்வை பார்த்தாள்.
ஆனால், அவளை பார்த்த நகுலனுக்கு கோபமும் ஆத்திரமும் தான். முகமே ஒரு பக்கம் வீங்கிப்போய் இருந்தது அவளுக்கு. கண் இமைகள் எல்லாம் தடித்து, ஒரு பக்க உதடு கிழிந்து, ரத்தம் உறைந்து, அவளை பார்க்கும்போதே சுரேஷ் அடித்திருக்கிறான் என்று தெளிவாக புரிய,
“என்ன நடந்துச்சு?” என்றான் கோவத்தை அடக்கி.
அழுகை அவளை மீறி கிளம்ப, பேச முடியாமல் நின்றாள்.
“வீட்ல யார் இருக்கா?” அவன் கேட்டதும், “அத்..அத்தை மட்டும்… குளிக்குறாங்க…” என்றாள் மெல்ல.
“ஃபோன் இருந்தா பண்ணிருப்பியா?” அவன் கண்ணை சுருக்கி சந்தேகமாய் கேட்டதும், அவள் மௌனமாய் இருக்க, இன்னும் ஆத்திரம் தான் வந்தது அவனுக்கு.
“அடிச்சாலும் மிதிச்சாலும் புருஷன் தான் முக்கியம்… இல்ல?” அவன் நக்கல் போல கேட்க, “இல்லண்ணா… என் அப்பா பாவம். நான் நல்லா இல்லன்னு தெரிஞ்சா உடைஞ்சுருவாரு” என்றாள் தலை குனிந்தபடி.
“உங்க அப்பா நம்பர் குடு” என்று வேகமாய் கேட்டு வாங்கியவன், பேன்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு பட்டன் போனை எடுத்து, அதை சைலென்ட் மோடில் போட்டு அவளிடம் நீட்டினான்.
“இதை ஒளிச்சு வச்சுக்கோ! உன்னால சமாளிக்க முடியாத அளவு எதாவது பிரச்சனைன்னா உடனே கூப்புடு எனக்கு! முடிஞ்சா யாரும் இல்லாத நேரம் எனக்கு கூப்ட்டு உனக்கு என்ன பிரச்சனைன்னு சொல்லு…” என்றவன்,
“நீ நல்லா இல்லன்னு தெரிஞ்சா மட்டும் உங்க அப்பா ஒடிஞ்சு போக மாட்டாரு. நீயே இல்லாம போயிட்டன்னு தெரிஞ்சா கூட ஒடிஞ்சு தான் போவாரு. அந்த நிலைக்கு போக முன்னாடி எதாவது செய்!” சொல்லிவிட்டு, “நான் வந்தேன்னு சொல்லாத யார்கிட்டயும்” என்றதோடு கிளம்பிவிட்டான்.
“யாருடி வந்தது?” திலகாவின் குரல் சமீபத்தில் கேட்க, கண்ணை துடைத்துக்கொண்டு ஃபோனை இடுப்பில் சொருகியவள், “கூர்க்கா அத்தே… காசு கேட்டான். அப்பறம் வர சொன்னேன்” என்றாள். காக்கி உடையை போல பார்த்ததால் அவரும் அதற்குமேல் நோன்டவில்லை.
சுரேஷ் வீட்டை விட்டு சற்று தூரம் சென்றவன் கோவர்த்தனுக்கு அழைத்தான்.
பயனரின் எண் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளது என்று வர, “என்னடா பண்ற நீ!?” என நொந்தான் நகுலன்.
“நிலாம்மா… நீ கேட்டன்னு தான் வளைகாப்புக்கே இந்தியா போறோம்! சரியா ஒரே மாசம் தான். திரும்ப என்கூட வந்துடனும். அம்மா சொல்லுச்சு, தங்கச்சி சொல்லுச்சு, குழந்தை பொறக்கட்டும் பார்த்துட்டு வரேன்னு சொல்லக்கூடாது சரியா?” என்றான் இளக்கமின்றி.
ஒரு வார ஹனிமூன் முடிந்து மீண்டும் இயல்புவாழ்க்கைக்கு இவர்கள் திரும்பிய நேரம், ராகவர்த்தினி இவனை வளைகாப்புக்கு வரும்படி வருந்தி அழைத்துக்கொண்டிருப்பதையும் இவன் மழுப்பலாய் ‘பார்க்கலாம்’ என்று நழுவுவதையும் கண்ட வானிலாவுக்கு கஷ்டமாக இருந்தது.
மேடிட்ட வயிறோடு உடன் பிறந்தவனை வர சொல்லி அவள் கெஞ்ச, பார்த்த வானிலாவுக்கு ராகவர்த்தினி தேனிலா போல தெரிந்தாள். அவளை தன்னால் தான் சென்று பார்க்க முடியாமல் போனது, இவனாவது தங்கையை சென்று பாக்கட்டுமே என்று, ‘மாட்டேன்’ என்றவனை பிடிவாதமாய் டிக்கெட் போடவைத்து, அவசரமாய் லீவ் எடுக்க வைத்து இந்தியாவிற்கு கிளம்பியிருந்தாள்.
“அது உங்க வீடுங்க… நீங்க சொன்னா உடனே கிளம்பிட போறேன். எனக்கு உங்களை வச்சு தான் அவங்க எல்லாரும்” என்றவளை சின்ன சிரிப்போடு பார்த்தவன், “என்னை எங்கயும் விட்டுக்குடுக்கக்கூடாது! உனக்கு நான் மட்டும் தான் முக்கியமா இருக்கணும். எனக்கு அப்புறம் தான் உனக்கு எல்லாரும்…” என்றவன், “எப்பவும்…!!!” என்று அழுத்தி சொல்ல, அவன் ஆசைகளை தெரிந்தவளும், “சரிங்க டாக்டர்!” என்று சிரித்தாள்.