முழங்கையை தேய்த்துக்கொண்டே எழுந்த கோவர்த்தனோ, “ஆத்தா… அநியாயம் பண்றீங்க ஆத்தா” கிண்டலாக சொல்ல, “பழிச்சு பேசுறியாடா நீ? உன்னை இங்க வர சொல்லி வேண்டுதல் வச்சு மந்துரம் ஒதனுமோ நாங்க?” என்றவர், கைக்கு என்ன கிடைக்கும் என்று தேட, பயந்தவனாய் அங்கும் இங்கும் ஆடியவன், “அதான் வந்துட்டேன்ல ம்மா! அம்மா… அம்மா… அம்சமான அம்சா… வந்த புள்ளையை கொஞ்சாம அடிக்க தேடுறீங்களே இது நியாயமா?” என்று பேச, வெளியே அதை கேட்டவர்களுக்கு சிரிப்பு தான். வானிலாவுக்கும் சிரிப்பாய் வந்தது.
குழம்பு கரண்டியை கையில் தூக்கியவர், “உன் அக்காளுக்கு புள்ளை பொறந்தா வர முடியாது…?” என்று ஆரம்பிக்க,
“உன் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணா வர முடியாது…?!” அவர் கேட்க,
“ம்மா… லாக் டவுன் ம்மா அப்ப” என்றான் தில்லாக.
“உன்னை எவன் டா வெளிநாட்டுல போய் லாக் ஆவ சொன்னது?” என்று புறங்கையை பார்த்து வீசினார் கரண்டியை. குறி தப்பாமல் அதை முட்டியை தாக்க, “அம்மாஆஆ” என அளவுக்கு மீறி அலறினான் கோவர்த்தன். சிரித்துக்கொண்டிருந்த வாணிலா, “நான் உள்ள போறேனே!” என்று கேட்க, பர்வதம் விடவே இல்லை.
“இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணு” என்று நிறுத்துக்கொண்டார்.
உள்ளே நின்றவன் வாசலில் ஒரு கண்ணை வைத்துக்கொண்டே தான் உள்ளே ஆடிக்கொண்டிருந்தான் அம்மாவிடம். அவர் இன்னும் ரெண்டு அடி போட்டு அவனை திட்டிக்கொண்டிருக்க, “போதும் அங்கிள். அவரை அடிக்க வேண்டாமே!” முகம் சுருக்கி தயக்கமாய் சொன்ன வானிலாவை, “இரு நிலாம்மா” என பர்வதம் சொல்லவும், “விடு பாரு… நிலா போகட்டும்” என்றுவிட்டார் விஷ்ணுவர்த்தன்.
முதல் ஆளாய் உள்ளே சென்றாள் வாணிலா. அவள் பின்னே எல்லோரும் போக, அம்ஸா யாரையும் பாக்கவில்லை. இத்தனை நாட்கள் அவன் ஆடிய கண்ணாமூச்சி ஆட்டத்துக்கு இப்போது இவர் ஆடிக்கொண்டிருந்தார். அடுத்த அடி அவன் தோள்பட்டையில் விழுந்தபோது, வாணிலா பேச வர, அவளுக்கு முன்னே, “நிறுத்து அம்ஸா! வீட்டுக்கு வந்த புள்ளையை இப்படி தான் கை நீட்டுவியா?” என்றிருந்தார் அப்பம்மா, அம்சாவின் மாமியார்.
அவர் பேச்சுக்கு மரியாதை தரும் விதமாய் கரண்டியை கீழே வைத்துவிட்டார் அம்ஸா.
“வந்தவனை கவனி! கூட யார் வந்துருக்காங்கன்னும் பார்த்து கவனி” என்ற அப்பம்மா வெளியே போக, அப்போது தான் அம்ஸா வானிலாவை பார்த்தார்.
“ஏய் கண்ணு…” முகம் மலர அழைத்தவர், அருகே போய் கையை பிடித்துக்கொள்ள, சங்கோஜத்துடன் அவரிடம் கையை கொடுத்தாள் வாணிலா.
“உன்னையும் கூட்டிட்டு வரவன் ஒருவார்த்தை முன்னமே சொல்லிருக்கனுமா இல்லையா? அப்படியே இழுத்துட்டு உள்ள வந்துருக்கான் பாரு! கிறுக்கன்” கோவர்த்தனை முறைத்துக்கொண்டே சொன்னவர், “நீ வாடா, சாமி கும்பிடு மொதோ! குளிச்சுட்டு விளக்குசட்டி வைக்கலாம்” என்றபடி அவளை கையோடு அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார்.
வீட்டின் இரண்டாம் மருமகள் என்று தான் எல்லோருக்கும் தெரியுமே! அம்சாவோடு வாணிலா போக, எல்லோரும் அவர் பின்னூடே சென்றதும் அடுக்களையில் ஒற்றையாளாய் தனித்து நின்றிருந்தான் கோவர்த்தன்.
அன்னை அழைத்ததும் வாணிலா தன்னை ஒருமுறை பார்ப்பாள் என எதிர்பார்த்திருந்தான் கோவர்த்தன். அதற்கு கூட அவகாசம் கொடுக்காமல் தான் அன்னை அழைத்துக்கொண்டு சென்றார் என்பதெல்லாம் கருத்தில் இல்லை அவனுக்கு. முகம் நொடியில் சுருங்கிப்போக, அங்கிருந்து பட்டாலைக்கு (ஹால்) சென்று காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்துக்கொண்டான்.
அவர்கள் வீட்டின் பூஜையறை கூட படுக்கையறை போல விஸ்த்தாரமானது தான். ஆட்கள் எல்லோரும் உள்ளே நின்று சிரித்து பேசிக்கொண்டிருப்பது கேட்டது அவனுக்கு. கண்ணை மூடி சாய்ந்துவிட்டான். சில நொடிகளிலேயே கண்ணை சுழற்றிக்கொண்டு உறக்கம் வர, மெல்ல மெல்ல அவனை நெருங்கிய நொடி, “மச்சாஆஆஆன்” என்ற அலறல் அருகே கேட்டதில் அடித்துப்பிடித்து எழுந்தான் கோவர்த்தன்.
பர்வதவர்த்தினியின் கணவன் சுபாஷ் தான் அலறியது. வயலுக்கு நீர் பாய்ச்ச போயிருந்த சகலைகள் இருவருமே வந்திருந்தனர் இப்போது. சுபாஷ் அவனைக்கண்ட அதிர்ச்சியில் அலற, நகுலன் ‘சொல்லவே இல்லையேடா’ என்ற எண்ணத்தோடு நின்றிருந்தான்.
“எப்ப வந்த மச்சான்? ஒரு வார்த்தை சொல்லல?” சுபாஷ் ஆரவாரமாய் ஆரம்பிக்க, ‘இப்போதானே ஓஞ்சுது… திரும்ப தொடங்குறாரே!’ என கோவர்த்தன் நினைக்கும் முன்பே, சாமியறையில் இருந்து வெளியே வந்த அம்ஸா, “நல்லா கேளுங்க மாப்பிள்ளை. வரோம்ன்னு முன்கூட்டியே சொல்லிட்டா நம்மல்லாம் மனசு குளிர்ந்துருவோம்ல… அதான் சொல்லல” வார்த்தையில் இடித்தார் அவனை.
“அம்ஸா, வந்தவனை ஒரே நாள்ல திருப்பி அனுப்பலாம்ன்னு இருக்கியா?” விஷ்ணுவர்த்தன் இப்படி கேட்டதும் அம்ஸா ஒன்றுமே பேசாமல் விறுவிறுவென இரண்டாங்கட்டுக்கு(வீட்டின் இரண்டாம் பகுதி) சென்றுவிட்டார்.
“போய் எதாவது ஆகாரம் குடிங்க மாப்பிள்ளை, அப்புறம் பேசுவீங்க” என்ற விஷ்ணுவர்த்தன், “பாரு… வீட்டுக்காரை அழைச்சுட்டு போ” என்று மகளிடம் சொன்னார். அவர்கள் அங்கிருந்து போக, வாணிலா பொடுசுகளோடு தயங்கி நிற்கவும், “பசங்களா? நம்ம கெஸ்ட் ரூம்ல ஒன்னை அக்காக்கு திறந்து விடுங்க… கொஞ்ச நேரம் படுத்து எழும்பட்டும்” என்று பேரன் பேத்திகளிடம் சொன்னதும் அவர்கள் பொறுப்பாய் அவள் கரத்தை பற்றி இழுத்துக்கொண்டு சென்றனர்.
அவர்கள் வேகத்தில் சற்று தடுமாறிக்கொண்டே சிரித்தபடி சென்றவளுக்கு அப்போதும் கோவர்த்தனை திரும்பி பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லை. அறையின் மெத்தையில் சென்று விழுந்தவள் இருந்த அசதிக்கு நிமிடத்தில் உறங்கிப்போனாள்.
“நீயும் எதாவது குடி நகுலா” விஷ்ணுவர்த்தன் சொல்ல, அவன் சரியென்றதும், கொல்லையில் பால் கறக்கும் வேலை முடிந்ததா என பார்க்க சென்றுவிட்டார் அவர்.
நகுலனும் கோவர்த்தனும் தனித்து நிற்க, “அயித்தான்…” என்று அழைத்தான் கோவர்த்தன்.
“உங்கிட்ட பேசணும்… வெளில வா!” என்ற நகுலன் நிற்காமல் வீட்டின் வெளிகேட்டுக்கே சென்றான்.
“என்ன ஆச்சு அயித்தான்?” கோவர்த்தன் சற்று பதட்டமாய் கேட்டான்.
“இன்னொரு முறை நானே போய் அந்த பொண்ணை பார்த்துட்டு வரேன்னு உன்கிட்ட சொன்னேன்ல? நேத்து போனேன் அங்க! அந்த பொண்ணோட ஒரு பக்க முகமே வீங்கிப்போயிருக்கு. தர்ம அடி அடிச்சுருக்கான் அந்த பொறுக்கி. எனக்கு ஏன் ஃபோன் பண்ணலன்னு கேட்டதுக்கு, என்கிட்ட ஃபோன் இல்லன்னு சொன்னாங்க… இதை நான் எதிர்ப்பார்த்திருந்தேன். அதனால போகும்போதே ஒரு பட்டன் ஃபோனோட தான் போனேன்.
அவங்கக்கிட்ட அதை குடுத்து, டைம் கிடைக்கும்போது எனக்கு கால் பண்ணி, என்ன பிரச்சனைன்னு சொல்லுன்னு அழுத்தி சொல்லிட்டு வந்தேன். ஆனா அப்படியும் அந்த பொண்ணு எனக்கு கூப்புடல! அப்பாக்கு தெரிஞ்சா கஷ்டப்படுவாருன்னு பயந்தாங்க! அவர் நம்பரையும் வாங்கிட்டு வந்துருக்கேன்… அவர்க்கிட்ட பொறுமையா பேசணும்” என்றவன்,
“என்ன பிரச்சனைன்னு முதல்ல தெளிவா தெரிஞ்சா தானே மச்சான், நம்ம பேசவே முடியும்? அந்த பொண்ணை காப்பாத்தலாம்ன்னு நம்ம நினைச்சா கூட அந்த பொண்ணு அதுக்கு ரெடியா இருக்க மாட்டாங்க போல” சலித்துக்கொண்டான்.
கேட்டுக்கொண்டிருந்த கோவர்த்தன், “அந்த சுரேஷ் மேல ஏதாவது கேஸ் இருக்கா?” என்றான்.
“அதெல்லாம் நல்லா செக் பண்ணிட்டேன். ஒரு தப்பு இல்ல. அவன் வேலை செய்யுற பேங்க்’லயும் அவனை பத்தி கேட்டேன். ஒரு தப்பு சொல்லல யாரும்” என்று நகுலன் சொல்ல, “ஒருவேளை பெரிய பிரச்சனை எதுவும் இருக்காதோ?” என்றான் கோ சந்தேகமாய்.
“பிரச்சனை இல்லாம தான் ஒரு பக்க கன்னம் வீங்குதா?” கடுப்பாக கேட்ட நகுலன், “இதெல்லாம் டொமஸ்டிக் வைலென்ஸ் கோ! சாதாரணமா கடந்து போகக்கூடாது. அதையும் விட ஏற்கனவே அங்க ஒரு பொண்ணு செத்துருக்கு. அப்போ இதுல கண்டிப்பா ஏதோ இருக்கு. புரியலையா உனக்கு?” அவன் போலீஸ் மூளை உறுதியாய் சொன்னது அந்த சுரேஷ் சரியில்லை என்று!
“அந்த பொண்ணு சொல்லாம நம்மளால ஒண்ணுமே பண்ண முடியாதே அயித்தான்… ஏன் அந்த பொண்ணு எதுவும் சொல்ல மாட்டேங்குது? அட்லீஸ்ட் பிரச்சனை இல்லன்னாது சொல்லலாம்ல?” கோவர்த்தன் கேட்க, “என்னவோ இருக்கு கோ, அதான் அந்த பொண்ணு வாய் திறக்க மாட்டேங்குது” என்றான் நகுலன்.
சரிதான்!!! அவளை வாய் திறக்க விடாமல் ஒடுங்கிப்போக வைத்திருந்தான் சுரேஷ்.
அந்த விடியற்காலை நேரத்தில் அறைக்குள் துணிக்கு பஞ்சமாகி போக, மூலையில் தன்னை குறுக்கிக்கொண்டு கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தாள் ரேகா. கட்டிலில், போதையில் சிவப்பேறிய கண்களோடு அமர்ந்திருந்த சுரேஷ், நிதானமாய் சிகெரட் புகையை இழுத்து மெதுவாய் விட்டான்.
“எப்படி இருக்கு வீடியோ குவாலிட்டி? தெளிவா இருக்கா?” அவன் குரல் நாராசமாய் கேட்டது அவளுக்கு. அந்த அறையில் இருந்த பெரிய ஸ்மார்ட் டிவியில் படம் ஓடிக்கொண்டிருந்தது.
ரேகாவின் அந்தரங்கப்படம்! சுரேஷுடன் ரேகா இருந்த அந்தரங்க பொழுதுகள் எல்லாம் முழுநீள படங்களாக ஓடிக்கொண்டிருந்தது திரையில். அதைப்பார்த்து தான் உடல் கூச, தன்னையே அருவெருத்துக்கொண்டு இருந்தாள் ரேகா.
இவளை எளிதில் தன் வழிக்கு கொண்டு வந்துவிடலாம் என்று நினைத்திருந்தான் சுரேஷ். ஆனால், முகம் வீங்க அடி வாங்கியும் அவள் அவன் வழிக்கு வராமல் போக, அவனது பிரம்மாஸ்திரம் அவளை படிய வைத்தது. அவளுக்கே தெரியாமல் பல நாட்களாய் அவன் எடுத்த வீடியோ.
“இதெல்லாம் உன் வீடியோ தான். நான் சொல்றதை கேட்டா என்கிட்ட மட்டும் இருக்கும். இல்லனா இது இல்லாத ஒருத்தன் ஃபோனும் இருக்காது. உன் அப்பனுக்கு கூட ஸ்பெஷல் ஷோ போட்டு விடுவேன்!” அவன் சொல்ல, காதை பொத்திக்கொண்டாள் ரேகா.
“என்ன சொல்ற? ஓகே வா?”
அவள் பேசவில்லை. அழுகை மட்டுமே வந்தது.
“சரி, நான் ஆனதை பாத்துக்குறேன்” அவன் ஃபோனை எடுக்க, “வேண்டாம்… வேண்டாம்” என்று கதறினாள் ரேகா.
“அப்போ ஓகே’வா?” அவன் குரூரமாய் கேட்க, தன்னையே வெறுத்தவளாய், “சரி!” என தலையாட்டினாள் அவள். வெளியே ‘சரி’ என சொன்னாலும் அவள் மனம் அந்த நொடியில் தேனிலாவின் முடிவை தான் முடிவு செய்திருந்தது.