ரேகாவுக்கு, தலைக்கு மேல வெள்ளம் போனால், ஜான் என்ன? முழம் என்ன? என்ற மனநிலை. இன்று இல்லை என்றாலும், அடுத்து ஏதோ ஒரு நாளில் மற்றவர்களும் இவள் மேல் கை வைத்திருக்க தானே போகிறாள். அதனால் மொத்தமாய் சொல்லிவிட்டாள்.
அதோடும் நிறுத்தவில்லை அவள்.
“இவரோட ஃபோனை வாங்கி செக் பண்ணீங்கன்னா, இன்னும் சில விஷயம் தெரியும் உங்களுக்கு. என்னை மட்டும் இல்லாம இங்க இருக்க மத்த பொண்ணுங்களையும் ஆபாச வீடியோ எடுத்து வச்சுருக்காரு” என்று சொல்லிவிட, சுரேஷ் சுதாரிப்பதற்குள் அவனை ஃபோனை பறித்திருந்தனர் போலீசார். அங்கிருந்த லேடி கான்ஸ்டபில் அதை நோண்டிப்பார்க்க, குவிந்து கிடந்த வீடியோக்களை அருவெருப்போடு பார்த்தவர், ஓங்கி அறைந்தார் அவனை.
“இந்த கன்றாவி எல்லாம் விருப்பத்தோட நடக்குதுன்னா தண்டனை குடுக்க முடியாது. ஆனா, நீ சொல்லும்மா… இதே தைரியத்தோட இவன் மேல புகார் குடுத்து கோர்ட்’ல வந்தும் சொல்லுவியா?” என்றார் அந்த லேடி போலீஸ்.
“நிச்சயமா சொல்லுவேன்!” ரேகா சொல்ல, “அப்புறம் என்ன சார்? இழுத்து போங்க அந்த எச்ச நாய்ங்களை” என்றதும், போலீசார் அத்தனை பேரையும் அப்படியே இழுத்து சென்றனர். சட்டை மாட்டக்கூட அவசாகம் கொடுக்கவில்லை. அவர்களின் மனைவிகள் செய்வதறியாது நின்றிருக்க, அவர்களை நெருங்கிய நகுலன், “எதனால எல்லாத்தையும் பொறுத்துப்போனீங்கன்னு தெரியாது. அந்த வீடியோ தான் பிரச்சனைன்னா அந்த பயம் இனி உங்களுக்கு வேண்டாம். ரேப் அட்டெம்ப்ட் கேஸ் கண்டிப்பா போடுவோம் அவனுங்க மேல! உங்க புருஷன் மேல ரொம்ப பாசம்ன்னா நல்ல வக்கீலோட ஸ்டேஷன் போங்க” என்றவன் திரும்ப, ரேகா அப்படியே நின்றிருந்தாள்.
“ரொம்ப தைரியமா பேசிட்டம்மா! இந்த கேஸ் ஒரு முடிவுக்கு வர வரைக்கும் இதே தைரியத்தோட இரு!” என்ற நகுலன், “வா!” என்று சொல்ல, பொம்மை போல அவனுடன் சென்றாள். கோவர்த்தனுக்கு முதல் முறையாய் பேச வராமல் போனது. ஸ்டேஷன் போன பின்பும் கூட அமைதியாய் ஓரிடத்தில் அமர்ந்து ரேகாவை தான் கவனித்துக்கொண்டிருந்தான்.
அவளது அதீத பயம், அழுகை எல்லாம் நகுலன் சொல்லியிருக்க, இப்போது அப்படியே எதிர்பதமாய் அவளை கண்டதும், அவள் மனநிலையை அனுமானிக்க முயன்றான் கோவர்த்தன்.
முறையாக சுரேஷ் மற்றும் மற்றவர் மீது புகார் எழுதிக்கொடுத்தாள் ரேகா. நள்ளிரவை தாண்டிய நேரத்தில் யாரையும் அழைத்து பேச முடியாமல் ஃபோனையும் பறிகொடுத்து மாட்டிக்கொண்டதில் வெறியேறி போயிருந்தது அவர்களுக்கு.
“எல்லாம் உன் பொண்டாட்டியால! இத்தனை வருஷம் ஓசில என்ஜாய் பண்ணிட்டு இருந்த நீ. சொந்தமா ஒருத்தியை கூட்டிட்டு வருவன்னு நினைச்சோம். ஒருத்தி செத்தே போய்ட்டா… இன்னொருத்தி எங்க கொண்டு வந்து நிறுத்திருக்கா பாரு…” ஒருவன் திட்ட,
“பொண்டாட்டியை கூட கண்ட்ரோல் பண்ண துப்பில்ல உனக்கு, ச்சை!” என்றுவிட்டான் மற்றவன்.
“உன் மச்சான் தானே அது? பேசு டா!” சிவா சொல்ல, லாக்கப்பில் இருந்தே, “மச்சான், இங்க வாங்க” என்று அழைத்தான் சுரேஷ், கோவத்தை காட்டாது.
“சொல்லுங்க மாப்பிள்ளை” வெகு நக்கலாய் கேட்டபடி நகுலன் போக, அதைக்கூட அவன் உணரவில்லை.
“நாங்க சும்மா ஃபன் (fun) பண்ணோம் மச்சான். இதை பெருசு பண்ணாம விடுங்க எங்களை. உங்க தங்கச்சிக்கும் புத்தி சொல்லி அனுப்புற வழியை பாருங்க” என்று சொல்ல, “ஓ! fun தானா? ஓகே ஓகே… அனுப்பிடலாம்…” என்று நகுலன் சொன்னதும் மலர்ந்த அவன் முகம், “ஆனா, உன் மேல வேற கேஸ் இருக்கே மாப்பிள்ளை?” என்றான்.
முகம் இருள, “என்ன கேஸ்?” என்றான் சுரேஷ்.
“இதோ இதுதான்!” என்ற நகுலன், ஒரு பேப்பரை எடுத்து நீட்ட, அப்படியே உள்ளிருந்தபடியே படித்தவன் முகம் அதிர்ந்துப்போனது.
‘வாணிலா’வா?’ பல்லைக்கடித்தவன், “இது ஆதாரம் இல்லாதது. இவளோட பேரன்ட்ஸ்’க்கு கால் பண்ணுங்க. அவங்களே சொல்லுவாங்க, என் பொண்ணு லூசு, அவ பேச்சை பெருசு பண்ணாதீங்கன்னு” தைரியமாய் சொன்னான்.
அதைக்கேட்டதும், கோவர்த்தனின் பார்வை ரேகாவிடம் இருந்து சுரேஷிடம் போனது. அவன் அத்தனை உறுதியாய் சொல்கிறான் என்றால், அவனுக்கு இந்த அளவு இடம் கொடுத்த வாணிலாவின் பெற்றவர்கள் மேல் வெறுப்பே வந்தது அவனுக்கு.
“ஆதாரம் இல்லாம எப்படி சுரேஷ்? தேனிலாவோட வாக்குமூலமே இருக்கு” என்ற நகுலன், ரேகா கொடுத்த துணி சுற்றிய டைரியை எடுத்து அவன் முகத்தின் முன்னே காட்ட, மூச்சே நின்றது அவனுக்கு.
ரேகா கரத்தில் அதை பார்த்த அன்றே தான் கிழித்து வீசியிருந்தால், இப்போது இந்த நிலையே வந்திருக்காது. ‘இது என்ன செய்யும் என்னை?’ என்ற அவனது அகந்தை, புதைக்குழியாய் மாறி அவனை விழுங்க காத்திருந்தது. சமைந்து நின்றிருந்தவனை நெருங்கிய நகுலன், “இதெல்லாம் ஒரு கேசே இல்ல, வெளில வந்துடலாம்ன்னு உனக்கு தோணும். உண்மையும் அது தான். ஈசியா வந்துடலாம்” அவன் சொல்ல, கண்ணில் ஒளியுடன் பார்த்த சுரேஷை இகழ்ச்சியாய் பார்த்து சிரித்தான் நகுலன்.
“ஆனா, நான் விட மாட்டேன்! எத்தனை வருஷம் ஆனாலும் உன்னை ஜெயில்ல கம்பி எண்ண வைக்காம விட மாட்டேன்” என்றவன், “அதையும் விட, கொஞ்ச நேரம் முன்ன எடுத்த வீடியோ அடுத்த ஆறு மாசத்துக்காது சோஷியல் மீடியா சுத்தும். உன் பேரும் முகமும் போஸ்டர் அடிக்காத குறையா நாறும். பையில்ல வந்தாலும், உன்னால நடமாட முடியாது. அதுக்கு நான் கேரண்டி!” என்றுவிட்டு பின்னால் பார்த்தவன், “உங்களையும் தாண்டா!” என்றான் மற்றவர்களிடம்.
யாரும் பெரிய செல்வசீமான்கள் கிடையாது. நடுத்தரத்திற்கும் மேல்தரத்திற்கும் இடைப்பட்ட ஆட்கள். இதில் இருந்து எப்படி மீண்டு வருவது என அவர்கள் யோசிக்க, நகுலனின் பேச்சில் இருந்த திடமும் இல்லாமல் போய்விட்டது.
அவன் பேச்சிலேயே, ‘இவன் தங்களை விடப்போவதில்லை’ என்று புரிந்தே போனது.
ரேகாவிடம் போன நகுலன், “உன்கிட்ட இவ்ளோ தைரியத்தை எதிர்ப்பார்க்கலம்மா! ஆனா, இதே தைரியம் கடைசி வர இருக்கணும். என்ன?” என்றான்.
நிமிர்ந்தவள், “இருக்கும் சார்!” எனும்போதே கண்கள் கலங்க, “ரொம்ப நன்றி சார்” என்று கையெடுத்து கும்பிட்டு அழுதாள்.
“கையை இறக்கு ம்மா” என்றவன், “இதோ இவர் சொல்லி தான் உன்னை வந்து நான் பாத்தது” என்று கோவர்த்தனை காட்ட, அவனை குழப்பமாய் பார்த்தாள் ரேகா.
அதை உணர்ந்தவன், “நான் வாணிலா புருஷன்” என்றதும், விழி விரித்தவள், “ரொம்ப நன்றி சார், நீங்க எல்லாம் உதவி செய்யல்லன்னா இந்நேரம் என் உயிர் போயிருக்கும்” என்று அழுக, “அப்படி எதுவும் யோசிக்காதீங்க ரேகா” என்றான் கோவர்த்தன்.
“இல்ல சார். அந்த டைரியை நான் படிச்சப்போ எனக்கு உண்மையா பொய்யான்னே புரில. வானிலா மேல அந்த அக்காக்கு ரொம்ப பாசம்ன்னு தெரிஞ்சுது. அவங்க இப்படி ஒன்னு எழுதி வச்சுருக்காங்கன்னு சொல்ல தான் அவங்களை தொடர்புக்கொள்ள முயற்சி பண்ணேன். அப்போ என் ஃபோனை இவர் உடைச்சப்போ சந்தேகம் வந்துச்சு.
அடுத்தடுத்து இந்தாளோட உண்மையான முகமும் தெரிஞ்சுது. எனக்குன்னு யாரு இருக்கா? நானும் அந்த அக்கா மாறியே போய்டுவேன்னு தான் நினச்சேன். எனக்காக இவ்ளோ ரிஸ்க் எடுத்து நீங்க வருவீங்கன்னு நினைச்சே பாக்கல… உங்களுக்கு ரொம்ப ரொம்ப கடமைப்பட்டுருக்கேன்” என்றான் தழுதழுப்புடன்.
அவளை அத்தனை நேரம் பார்த்து ஆராய்ந்திருந்த கோவர்த்தன், “உங்களுக்காக இவ்ளோ செஞ்சுருக்கோம்ன்னு சொல்றீங்க. எங்களுக்காக நீங்க ஒன்னு செய்வீங்களா?” என்றான்.
“கண்டிப்பா சார். உயிரை கூட குடுப்பேன்” என்றாள் ரேகா நன்றியுடன்.
“குடுக்க வேணாம். பத்திரமா வச்சுக்கோங்க” அவன் சொல்ல, அவளுக்கு விளங்கவில்லை.
“உயிரை குடுக்கணும்ன்னு நினைக்காதீங்க. எத்தனை கஷ்டம் வந்தாலும் வாழணும்ன்னு நினைங்க. தற்கொலை எப்பவும் எதுக்கும் தீர்வே இல்லை. தேனிலா தைரியமா வெளில வந்துருந்தா இப்ப நீங்க இங்க இருந்துருக்க மாட்டீங்க. நீங்க இப்ப தைரியமா இங்க வரலன்னா, உங்க இடத்துல நாளைக்கு வேறொரு பொண்ணு இருந்து அழுதுருப்பா! புரியுதா உங்களுக்கு?” என்றான். அவள் மெல்ல தலையாட்டினாள்.
“உங்க மனசுக்குள்ள, இனி நம்ம எதுக்கு வாழனும்? வாழ்ந்து என்ன செய்ய போறோம்? போக முன்ன அவங்களுக்கு தண்டனை வாங்கி குடுப்போம்ன்னு ஓடுது… சரியா?” என்று கேட்டதும், அதிர்ந்தாள் பெண், அப்படியே அவள் மனதை கண்ணாடி போல சொல்லிவிட்டானே என்று!
“அந்த எண்ணம் வேண்டாம். அதை விட்டொழிங்க. உங்களுக்குன்னு சில கடமைகள் இருக்கும். அதை காலம் வரும்போது நீங்க செய்யணும். அதுக்கு முன்ன அவசரப்பட்டு சாகுறதெல்லாம் ரொம்பவே தப்பு… புரியுதுங்களா?” என்றான் இதமாய்.
மையமாய் தலையசைத்தாள் ரேகா.
“உங்க அப்பா முகத்துல எப்படி முழிக்குறதுன்னு யோசிக்காதீங்க… என் பொண்ணு செத்துப்போய்ட்டான்னு தெரிஞ்சு உடையுறதை விட, என் பொண்ணு புருஷனை விட்டு வந்துட்டான்னு தெரியும்போது பெருசா உடையபோறதில்லை உங்க அப்பா!
நீங்க இல்லாமையே போறதை விட, இருந்து உங்க அப்பாவை நல்லா பாத்துக்கலாம்!” என்றான் அழுத்தமாய், அவள் மனதில் அழுத்தங்களை உணர்ந்து.
அதையும் விட, “உங்க அப்பா எங்க ஊருல தான் இருக்காரு. அவருக்குன்னு ஒரு வீடு இருக்கு, உங்களுக்கு அங்க வேலை ரெடியா இருக்கு. புது ஊருக்கு வாங்க… புதுசா வாழ்க்கையை ஆரம்பிங்க… நிம்மதியா இருங்க. காலம் வரும்போது வாழ்கை உங்களை வேற பாதைல கூட்டிட்டு போகும்” என்று நம்பிக்கையாய் சொல்ல, ஏதோ தெம்பாக உணர்ந்தாள் ரேகா.
அவளுக்கு இத்தனை சொல்பவன் அவள் தந்தையிடம் பேசாமலா இருந்திருப்பான்? வளைகாப்பு முடிந்த அன்றே அவரிடம் ஃபோனில் பேசி, மறுநாள் நேரில் பேசி, பொறுமையாய் விளக்கி, அவரை தேற்றி கையோடு அவரை அங்கிருந்து அழைத்து வந்து அவர்கள் தோட்டத்து வீட்டிலேயே குடியமர்த்திவிட்டு தான் ஓய்ந்தான் கோவர்த்தன்.
அவன் என்ன செய்கிறான் என்று வானிலாவுக்கே சொல்லாதபோது வீட்டினருக்கா சொல்லியிருப்பான்!? அம்சாவுக்கு வானிலாவை கவனிப்பதிலேயே நேரம் போய்விட்டது. கோவர்த்தனை வாணிலா தவிர யாரும் அதிகமாய் தேடவில்லை.
சொன்னது போல ரேகாவை அவள் தந்தையிடம் ஒப்படைத்துவிட்டு, மீண்டும் ஒருமுறை அவர்களுக்கு தைரியம் கொடுக்கும்படி நிறைய பேசிவிட்டு தான் தன் வீட்டுக்கே சென்றான்.
போனதும், வானிலாவிடம் அத்தனையும் அவன் சொல்ல, “அவனுக்கு கண்டிப்பா தண்டனை கிடைக்கும் தானே!?” என்றாள் தவிப்பாய்.
“நகுலனை யாருன்னு நினைச்ச நீ!? ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா அவன் பேச்சை அவனே கேட்க மாட்டான் தெரியுமா? அந்த நாயி ஜெயில்ல கடந்தே சாகும். இந்த கேஸ் போனாக்கூட வேற எதாவது கேஸ் போட்டு செய்ய வேண்டியதை அவன் செஞ்சுடுவான். யூ டோன்ட் வொர்ரி பேபி!” என்று தோளணைக்க, மெதுவாய் சாய்ந்தவளின் இடை கிள்ளி, துள்ளி சிரிக்க வைத்தான் கோவர்த்தன்.
வாய் விட்டே சந்தோசமாய் சிரித்தவளின் சிரிப்பு அடுத்த பதினைந்தாவது நாளில் மணவறையில் அவனோடு அமரும்போது கூட நீளத்தான் செய்தது.