கீபோர்ட் மீது வேகவேகமாய் தட்டிக்கொண்டிருந்த வாணிலாவின் விரல்கள் திடுமென வேகம் குறைய, கணினி திரையை கவனமாய் பார்த்துக்கொண்டிருந்த கண்களில் கண நேர தடுமாற்றம் உண்டாக, சட்டென தன்னை மறந்து சிரிக்க ஆரம்பித்தாள் வாணிலா.
தொடர்ந்து அரை நிமிடத்திற்கு தன்னை மறந்து சிரித்தவள், பின் சுற்றம் பார்க்க, அவளை சுற்றி வெவ்வேறு திசைகளில் இருந்த மூவரும் இப்போது அவள் திசை நோக்கி தான் பார்த்திருந்தனர்.
மெலிதாய், “சாரி… சாரி கைஸ்” சிரிப்பை அடக்கியபடி அவள் சொல்ல, அதில் ஒருத்தி சற்று சத்தமாகவே, “ஐ தின்க் ஷி நீட்ஸ் டு கன்சல்ட் அ டாக்டர்” என்று அருகே இருப்பவனிடம் சொல்லி திரும்ப, அவனும் அதை ஆமோதிப்பதை போல தலையாட்டிவிட்டு வேலையை தொடர்ந்தான்.
கடந்த சில நாட்களாகவே இவள் இப்படித்தான் ஆகிப்போனாள். திடீர் திடீரென தனியே சிரித்தால் அவர்களும் என்னதான் நினைக்க முடியும்? முன்பெல்லாம் அவள் பேசியதே இல்லை, சிரித்ததே இல்லை. அதைவிட இப்போது அவள் தனியே சிரிப்பது தான் அவர்களை விநோதமாய் பார்க்க வைத்தது.
‘காட்… ஹி மேட் மி மேட்!’ என்று சந்தோஷமாய் சலித்தவளுக்கு, அவனுடன் தான் பழக ஆரம்பித்து வெறும் பத்தே நாட்கள் தான் ஆனது என்பதை நம்பவே இயலவில்லை.
பார்த்தபோதெல்லாம் முறைத்தபோதே விடாது தொனதொனப்பவன், அன்று ஹாஸ்பிட்டலில் வாய்விட்டு சிரித்த பின்னா விடுவான்? அவளை பேசி பேசியே கவுன்சிலிங் வர ஒத்துக்கொள்ள செய்துவிட்டான். அவளும் சொல்லிவிட்டு போகாமல் எல்லாம் இல்லை. அவன் சொன்ன நேரத்துக்கு அவன் அறைக்கதவை இருமுறை தட்டிவிட்டுப்போக, “வாங்க… வாங்க… வாங்க…” என்று பலமாய் வரவேற்றான் கோவர்த்தன்.
அவன் வரவேற்ப்பில் அவள் இதழ்கள் நீள, லேசான கூச்சத்தோடு அவன் எதிரே இருக்கையில் அமர்ந்தாள் வாணிலா.
“வர மாட்டீங்கன்னு நினைச்சேன்!” அவன் சொல்ல, “வந்துருக்கக்கூடாதோ?” என்றாள் அவள், அவன் நெற்றியில் ஆயிருந்த காயத்தை பார்த்தபடி.
“நேர்ல தேடியே வந்துருப்பேன்!” உடனே சொன்னான் அவன்.
“ஏன் அப்படி?” அவள் புருவம் சுருங்க, “வேற என்ன பண்றது? டாக்டருக்கு பேஷன்ட் வேண்டாமா? அதுவும் நம்ம தமிழ் பேஷன்ட் ஒருத்தர் சிக்குன பிறகு சும்மா விட முடியுமா?” என்றவன், “இங்கிலிஷும் ஸ்பேனிஷும் பேசி பேசி வாய் கொலகொலன்னு இருக்குங்க” என்றான்.
“கவுன்சிலிங் வரவங்க எல்லாம் பேஷன்ட்டா உங்களுக்கு?” கோவம் போல அவள் கேட்க, “பின்ன கஷ்டமர்’ன்னா சொல்ல முடியும்?” என்று அலுங்காமல் கேட்டான் அவன்.
இவளுக்கு தான் அடுத்து என்ன பேசுவதென்ன தெரியவில்லை.
“ஒரு பைவ் மினிட்ஸ் வெயிட் பண்ண முடியுமா? இயற்கை அழைக்குது” அவன் சொல்ல, “ம்ம்” என்றதும், அந்த விசாலமான அறையின் மூலையில் இருந்த சிறு கதவை திறந்துக்கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தான்.
சும்மா இருந்தவளுக்கு அவனில்லாத அறை கவனம் ஈர்க்க அங்கிருந்த பொருட்களை எல்லாம் பார்க்கலானாள். இதற்கு முன் வந்தபோது நிதானமாய் சுற்றி பார்க்கும் நிலையில் அவள் இருக்கவில்லை.
இப்போது பொறுமையாய் பார்த்தாள். நிறைய மாடர்ன் ஆர்ட் சட்டங்கள் தொங்கிக்கொண்டிருந்தன. சில ஸ்பெனிஷ் கோட்ஸ்(quotes), சில ஆங்கில கோட்ஸ் அதோடு கூடவே சில தமிழ் கோட்ஸ்’ கூட இருக்க, ஆர்வம் அவளை மீறி அங்கே சென்றது.
“சாதாரணமாக இருப்பதே இவ்வுலகில் சாதனை தான்!”
‘உண்மை தானே! எத்தனை நடந்தாலும் எதுவும் நடவாதது போல காட்டிக்கொள்வதே இங்கு பிரயத்தனமான பாடு!’ என்று அவள் மனம் எண்ண, அடுத்த போர்டில்,
“விட்டுச்செல்வதை விளையாட்டுப்போட்டியாய் வைத்தால்,
இங்கு பங்குபெற பலரும் வருவார்கள்!!!” என்று இருக்க, அவள் இதழ்கள் விரக்தியாய் சிரித்தது.
அடுத்த போர்ட் ஒன்றில்,
“பல நாள் பசியால்
உடல் ஒட்டிப்போய்
உணவைத்தேடி அலையும்
உறவற்ற நாயை போல
உன் உணர்வை தேடி நான்!” என்று இருக்க, வாணிலாவின் மூளை கூட்டிக்கழித்து பார்த்தது.
“ஓ… டாக்டருக்கு லவ் பெஃலியரோ?” வாய்விட்டே அவள் சொல்ல, கதவை திறந்துக்கொண்டு வந்தான் அவன்.
“சாரி! வெயிட் பண்ண வச்சுட்டேன்!” என்றவன், “என்ன நிக்குறீங்க?” என்று கேட்க, “உங்க ரசனையை எடை போட்டுட்டு இருந்தேன்!” என்று சொல்ல, அவள் பார்வை படும் இடங்களை பார்த்தவன், “எப்படி இருக்கு என் கற்பனை?” என்று கேட்க,
“என்னவோ நீங்களே எழுதி வச்ச மாறி கேக்குறீங்களே?!” என்றாள் அவள்.
“நான் எழுதுனது தாங்க!” அவன் திகைப்புடன் சொல்வதை அவள் நம்பாமல் தான் பார்த்தாள்.
“நம்ப மாட்டீங்களா? நான் வேணுனா உங்களை பத்தி ஒரு கவிதை சொல்லவா?”
“ஐயோ ஆளை விடுங்க டாக்டரே!” என்றவள் அவளுக்கான சேரில் சென்று அமர. அப்போது தான் கவனித்தாள். அவன் பெயர் பலகைக்கு அருகிலேயே இன்னொரு பெயர் பலகை இருந்ததை. அதில் இருந்ததை படித்தவள், “வாட்?” என்று சிரிக்க ஆரம்பிக்க, எட்டிப்பார்த்தவன், முகத்தை சோகமாக்கி,
“இல்லையா பின்ன? ‘ஜோக் இஸ் இன்சூரியஸ் டு ஹெல்த்’ங்க!” என்று சொல்ல, அவள் சிரிப்பின் வேகம் தான் அதிகமானது. கலகலவென அவள் சிரிக்க, மேசையில் சாய்ந்து கன்னத்தில் கைவைத்து அவளையே பார்க்க ஆரம்பித்தான் கோவர்த்தன்.
அதைக்கூட உணராமல் அவள் நினைத்து நினைத்து சிரிக்க,
“முப்பதுக்கும் மேற்ப்பட்ட
முழு நிலவுகளை கண்டேன்…
நீலவானில் அல்ல,
நீண்டு நீ சிரிக்கையில்!” அவன் ரசித்து சொல்ல, அவள் சிரிப்பு, புன்னகையாய் தேங்கி நின்றது, பின் அதுவும் மறைந்தது.
அவன் பார்க்க, அவள் பார்க்க என நொடிகள் சென்றது. பார்வைகள் நிமிடங்களை பரிமாறிக்கொள்ள, உதடுகள் பேச மறந்து உறைய, சில நிமிட பார்வைக்கு பின் நான்கு உதடுகளும் ஒரே கணத்தில் பேச ஆரம்பித்தது.
அவள் கேள்வியில் அவன் திகைக்க, அவன் கேள்வியில் அவள் முழிக்க… அடுத்த நொடிகளில் அப்படி ஒரு சிரிப்பு இருவருக்கும்.
புன்னகைக்கு காரணம் தேவையில்லை.
புன்னகைக்கவும் காரணம் தேவையில்லை. சிரிக்கும் இருவரை தாண்டி தள்ளி நின்று பார்ப்போரை, ‘பைத்தியம்!’ என சொல்ல வைத்தாலும் பரவாயில்லை.
‘சிரிப்பு உடலுக்கு நல்லது!’
அவனுடன் கழிந்த முதல் சிட்டிங் கவுன்சிலிங் எண்ணி இப்போதும் புன்னகையோடு வேலை செய்துக்கொண்டிருந்தாள் வாணிலா. அடுத்தடுத்த மீட்டிங்கில் அவள், அவளைப்பற்றி சொல்ல ஆரம்பித்திருந்தாள்.
அவள் அக்கா தேனிலா பற்றியும் சொல்லி அவள் மறைவுக்கு பிறகான விஷயங்களை மேம்போக்காக சொல்லி வைத்தாள். என்ன தான் மனம் விட்டு பேசும் அளவிற்கு, ‘நண்பன்’ இடத்தில் அவன் இருந்தாலும் அவனிடம் முழுக்க முழுக்க எதையும் சொல்லிவிட முடியவில்லை.
இதோ இப்போது அடுத்த சிட்டிங்! இன்னும் சற்று நேரத்தில் அவனை சந்திக்க வேண்டும். அரக்க பரக்க ‘லாகவுட்’ செய்து அவனிடம் தேடி சென்றாள் வாணிலா.
வழக்கம் போல அவனிடம் இருந்து வந்த ஆர்ப்பாட்டமான வரவேற்ப்புடன் அன்றைய செஷன் ஆரம்பிக்க, “என்கூட பேச ஆரம்பிச்ச பிறகு எப்படி பீல் பண்றீங்க?” என்றான்.
“எதுக்குடா பேசுனோம்ன்னு பீல் பண்றேன்” உடனே அவள் சொல்ல, “ஏங்க?” என்றான் அவன் பாவமாய்.
“பின்ன என்னங்க? எதாவது நினைச்சு சிரிப்பு வந்துடுது, ஆபிஸ்’ல எல்லாம் லூசோன்னு பாக்குறாங்க” சோகம் போல சொன்னாலும் அவளிடம் கோவம் இல்லை என்று புரிய, “விடுங்க, உண்மை என்னைக்கு இருந்தாலும் வெளில வந்து தானே ஆகும்?” என்றான் அவன்.
அவன் கிண்டல் புரியவும், அவள் முறைக்க, பேச்சு மெதுமெதுவாய் வாணிலாவின் வாழ்க்கை பக்கம் போக, அவள் மீண்டும் தேனிலாவின் இறப்பில் வந்து நிற்க,
“லுக் நிலா… யார் நம்மக்கிட்ட எவ்ளோ க்ளோஸா இருந்தாலும், எல்லாத்தையும் நம்மக்கிட்ட ஷேர் பண்ணிருப்பாங்கன்னு சொல்ல முடியாது நிலா! எல்லார்க்குள்ளையும் ஒரு பர்சனல் ஸ்பேஸ் கண்டிப்பா இருக்கும். அது உங்க அக்காவுக்கும் இருந்துருக்கும்; உங்களுக்கு தெரியாம!” அவன் குரல் உறுதியாய் ஒலித்தது.
வாணிலாவின் முகம் மாற, “கண்டிப்பா இருந்துருக்காது. எனக்கு என் அக்காவை பத்தி தெரியும்!” அவளும் உறுதியாய் சொன்னாள்.
“அது நம்ம கற்பனை நிலா. உங்க அக்காவை உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். நீங்க அவங்கக்கூட எல்லாமே பேசிருக்கீங்க. அதேப்போல தான் அவங்களும் உங்ககிட்ட இருந்துருப்பாங்கன்னு நினைக்குறீங்க. அது தப்பு கிடையாது. ஆனா நான் சொல்றது என்னன்னா, எல்லார்க்குள்ளையும் பகிரப்படாத ரகசியங்கள் கண்டிப்பா இருக்கும்ங்குறது தான்!”
“இருக்காது!” அவள் முகம் யோசனை காட்டியது.
“அப்படி இருக்காதுன்னா… உங்க அக்கா உங்கக்கிட்ட எல்லாமே சொல்ற மாதிரி ஆளுன்னா… ஏன் கல்யாணத்துக்கு பிறகு எதையுமே சொல்லாம விட்டாங்க?” அவன் கேட்க, அவள் திணறினாள்.
“அது… அவளோட ஹஸ்பென்ட்” அவள் திணற, “இருபத்தி நாலு மணி நேரமும் கூடவே இருந்தாரா என்ன? உன்கிட்ட ‘எனக்கு பிரச்சனை’ன்னு ஒரு வார்த்தை சொல்லக்கூடவா உங்க அக்காவுக்கு நேரம் கிடைச்சுருக்காது? அட்லீஸ்ட் ஒரு மெஸ்சேஜ்!” அவன் கேட்டிட, அவளிடம் பதிலில்லை.
“ம்ம்ம்!?” தோளை அசட்டையாய் குலுக்கியவன், “சம் அப்பைர்! (some affair) அது (pre-marital affair) ப்ரீ மாரிட்டல் அப்பைர்’ராவும் இருந்துருக்கலாம். இல்லன்னா (post-marital affair) போஸ்ட் மாரிடல் அப்பைர்’ராவும் இருந்துருக்கலாம். இது அவங்க புருஷனுக்கு தெரிஞ்சு பிரச்சனை…” தன் யூகத்தை அவன் சொல்லிக்கொண்டே போக, எதிரில் இருந்தவளை கவனிக்க மறந்துப்போனான்.
அவன் பேசி முடிக்கும் முன்னே அவன் மேசையில் இருந்த பேப்பர் வெயிட்டை எடுத்து அவன் நெற்றியை நோக்கி வீசியிருந்தாள் வாணிலா. திடீர் தாக்குதலில் பொறி கலங்கியது அவனுக்கு. நெற்றியை பிடித்துக்கொண்டு அவன் குனிந்துவிட, அவன் கையை மீறி குபுக்கென்று ரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது.
அவனை அடித்துவிட்டோம், அவனுக்கு காயம்பட்டு ரத்தம் வருகிறது என்பதெல்லாம் வாணிலாவின் கவனத்திலேயே இல்லை.
“என் அக்காவை பத்தி எனக்கு தெரியும். அவளைப்பத்தி தப்பா ஒரு வார்த்தை பேசுன, அடுத்த முறை பேச வாய் இருக்காது!” என்று ஆக்ரோஷமாய் சொன்னவள்,
“இனி என் மூஞ்சிலையே முழிச்சுடாத! இருக்குற கோவத்துல கொன்னாலும் கொன்னுடுவேன்!” வெறுப்பாய் சொல்லிவிட்டு கதவை படாரென அடித்து சாற்றிவிட்டு போனாள்.
போனவள், மொத்தமாய் மாறிப்போனாள். சில நாட்கள் சிரித்த முகமாய் இருந்தவள், இப்போது மீண்டும் உர்ரென ஆகிப்போக, அவளுடன் பணிபுரியும் ஆட்களுக்கு தான் ‘இவள் யார்’ என்பதே விளங்கவில்லை.
வெகு நாட்களுக்கு பிறகு அவள் கூட்டை விட்டு வெளியேற உதவி செய்தவனே, இப்போது மீண்டும் கூட்டுக்குள் அவளை அடைத்துவிட்டான். அடுத்த ஒரு வாரம் அந்த ‘பைத்தியக்கார வைத்தியன்’ அவள் கண்ணிலும் இல்லை, கருத்திலும் இல்லை.
ஆனால் வந்தான்…! நெற்றியில் பெரிய கட்டுடன் சற்றே வீங்கிய புருவங்களுடன் பரிதாபமாய் நின்றிருந்தான் அவள் ஆபிஸ் வெளியே!!!