வீட்டிலேயே திருமண ஏற்ப்பாடுகளை அமோகமாய் செய்திருந்தனர் அம்சவர்த்தினியும் விஷ்ணுவர்த்தனும். மணவறையில் அமர்ந்து ஐயர் சொல்வதை சொல்லிக்கொண்டிருந்தாலும் இடையிடையே அவளிடம் ஏதோ பேசி சிரிக்க வைத்துக்கொண்டே இருந்தான் கோவர்த்தன். அவளும் கலகலவென சிரித்துக்கொண்டே இருக்க, அம்சாவுக்கு தான் பதக்’பதக்’கென அடித்துக்கொண்டது.
இரவு பெரிய பூசணிக்கொண்டு சுற்றிப்போட வேண்டும் என்று நினைத்துக்கொண்டார். கூட்டத்தில் யாரோ போல அமர்ந்திருந்தனர் ஜெயமோஹனும் காஞ்சனாவும்.
ஊரெங்கும் தேனிலாவின் மரணமும், சுரேஷின் வண்டவாளமும் தான் பேச்சுப்பொருளே! இப்படியுமா பெத்தவங்க இருப்பாங்க!? என்று கண்டமேனிக்கு பேச்சுக்கள் கேட்க வேண்டியதாய் இருந்தது. சுரேஷிடம் இப்படி ஒரு முகம் இருக்கும் என அவர்கள் நினைக்கவே இல்லை. பெற்ற பெண்களை நம்பாமல் போனோமே என்று காலம் கடந்து குற்ற உணர்ச்சியாகி போனது.
வானிலாவின் திருமணத்துக்கு கூட தகவல் தான் வந்தது அவர்களுக்கு. பெற்றவராய் முன்னிருந்து எந்த சடங்கும் கிடையாது என அப்போதே சொல்லிவிட்டனர். என் பிள்ளை! என்று மார்தட்டும் யோக்கியதை கூட இல்லாமல் அழைத்ததே போதும் என வந்திருந்தனர்.
அவர்கள் முன் தட்டு ஒன்று நீட்டப்பட, அதில் இருந்த மஞ்சள் அரிசியை அள்ளிய காஞ்சனா நிமிர்ந்து பார்த்தார். ரேகா தான் சிரித்த முகமாய் நின்றிருந்தாள். ரேகாவுக்கு அவர் யாரென தெரியவில்லை. ஆனால், அவருக்கு தெரிந்தது.
தாங்கள் மட்டும் தன் பெண்ணுக்கு ஆதரவாய் நின்றிருந்தால், இந்நேரம் அவள் தங்களோடு இப்படி இருந்திருப்பாளே! என்று அடித்துக்கொண்டது. கொட்டிய பாலை நினைத்து என்ன பயன்!?
ஐயர் ‘கெட்டிமேளம்’ சொல்ல, மஞ்சள் அரிசி மழையில் குளித்தபடி, முகம்க்கொள்ளா சிரிப்போடு வாணிலா கழுத்தில் மும்முடி இட்டான் கோவர்த்தான்.
‘வான்க்கோ’வின் திருமணம் மிக அழகாய் முடிந்தது.
வந்தவர்கள் எல்லாம் சொல்லிக்கொண்டு கிளம்ப, விருந்து உபசாரத்தில் எல்லோருமே பிஸியாக இருந்த நேரம், மெல்ல தங்கள் மகளிடம் வந்தனர் ஜெயமோகனும் காஞ்சனாவும்.
தன் அருகே வந்த பெற்றவர்களை எந்த சலனமும் இல்லாமல் சிரித்த முகமாய் பார்த்த வாணிலா, “வாங்க!” என்று வரவேற்று புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க, செயற்கையாக கூட புன்னகைக்க வரவில்லை அவர்களுக்கு.
“அம்மாடி” காஞ்சனா ஆரம்பிக்க, “கண்டிப்பா சாப்பிட்டுட்டு தான் போகணும்” என்று வணக்கம் வைத்த பெண்ணை, ஏக்கமாய் பார்த்த இருவரும் முகம் கசங்க அங்கிருந்து விலக, “ஒன்ஸ் ஃபோர் ஆல் பேசிடு நிலாம்மா” என்றான் கோவர்த்தன்.
வீடு தான் என்பதால், பெற்றவர்களை கீழிருந்த ஒரு அறைக்கு அழைத்து சென்ற வாணிலா, “என் கல்யாணத்துக்கு வந்தது ரொம்ப சந்தோஷம்” என்றாள்.
அவர்கள் பதில் சொல்லும்முன், “உங்களை பொறுத்தவரை பொண்ணை கல்யாணம் முடிச்சு குடுத்துட்டா அதோட கடமை முடிஞ்சுது, பின்ன அவ எதுக்காகவும் அவ புருஷனை விட்டு வந்துடக்கூடாது. அதானே? எங்களை எந்த குறையும் இல்லாம நல்ல விதமா தான் நீங்க வளர்த்தீங்க. அப்போ புரில, நீங்க உங்க கடமையை தான் செஞ்சுருக்கீங்கன்னு.
மனசுல நம்ம பொண்ணுங்குற எண்ணம் இருந்துருந்தா, எங்க இவ நம்ம வீட்டோட வந்து பாரமா இருந்துருவாளோன்னு பயம் வந்துருக்குமா? பெத்த பொண்ணை நம்பாம எவனோ ஒரு பொறுக்கி பேச்சை கேட்டுருக்க தோனிருக்குமா? அவ செத்தே போனப்போ கூட அவமேல தான் தப்பு இருக்கும்ன்னு நினைச்சுருப்பீங்களா?” என்றவள்,
“பெத்த பொண்ணை உங்களை மாதிரி நம்பாம போறதும் தப்பு… பெத்த பையனை அந்த திலகா மாறி கண்மூடித்தனமா நம்புறதும் தப்பு. அந்த அம்மாவை பாக்க ஆள் இல்லாம, தனியா கஷ்டப்படுதாம். அதுக்கு இதெல்லாம் போதவே போதாது. அதுமாறி நிலைமை உங்களுக்கு வராது. அதான் ஒருத்தருக்கொருத்தர் துணையா இருக்கீங்களே!!!” என்றாள் விரக்தியாய்.
“நீங்க எங்களை பொண்ணா பாக்கல… ஒரு பொருளா மட்டும் தான் நினைச்சுருக்கீங்க. வித்த பொருள் எந்த காரணம் கொண்டும் திரும்ப உங்ககிட்ட வந்துடக்கூடாது. அதானே!? ஒரு பொருள் இல்லாமையே போய்டுச்சு. இன்னொரு பொருள், எந்த காலத்துலயும் உங்ககிட்ட திரும்ப வராது! இதை நான் என் புருஷனையோ புகுந்த வீட்டையோ நம்பி சொல்லல… என்னை நம்பி சொல்றேன்!!!
என்மேல எனக்கு நம்பிக்கை இருக்கு… அந்த நம்பிக்கை எனக்கு கிடைக்க காரணம் நீங்க… நான் இந்த உலகத்துக்கு வர காரணம் நீங்க. அதுக்கான நன்றி எனக்கு உண்டு! அதை மீறி என்கிட்ட எதையும் எதிர்ப்பார்க்காதீங்க. ப்ளீஸ்!!!” என்றுவிட்டாள்.
காஞ்சனாவால் ஒரு வார்த்தையும் பேச முடியவில்லை. ஜெயமோகனும் மகளை கண்ணீரோடு பார்த்தவர், தன்னை சமாளித்துக்கொண்டு ஏதோ மகளுடன் பேச முயன்ற மனைவியை, “வா, போலாம்!” என்று அழைத்தார்.
“இல்லங்க…” அவர் ஆரம்பிக்க, “மேற்கொண்டு பேசி வெறுப்பை வளர்க்க வேண்டாம். வா! அவ நல்லா இருப்பா!” என்றதோடு கிளம்பிவிட, வானிலாவுக்கு கண்ணீர் பொங்கியது. அவளால் தேனிலாவின் இறப்பில் இருந்து மீளவே முடியாது போல. எப்போது நினைத்தாலும், கண்ணீர் நிற்காமல் வந்துவிடும். பெற்றவரின் அலட்சியத்தால் அனாமத்தாக ஒரு உயிர் போய்விட்டதே என்ற வருத்தம் ஏகம் உண்டு அவளுக்கு.
ஜன்னலோரம் நின்று கண்ணீர் வடித்தவளை, “என்ன நிலாம்மா, என்னை கல்யாணம் பண்ணதுல ஆனந்த கண்ணீரா?” என்று கேட்டு கிண்டலடித்தான் கோவர்த்தன். முறைத்தபடி திரும்பியவள், “தேனிலா நியாபகம்” என்று சொல்ல, “அடடடா… எத்தனை முறை சொல்றது… உன் அக்காவை நம்மளே பெத்து அம்சமா வளர்ப்போம்ன்னு” சலித்தவன் போல சொன்னான் அவன்.
“சரி சீக்கிரம் அந்த வேலையை பார்ப்போம்!” அவள் நமட்டு சிரிப்பாய் சொல்ல, “அடியே பைத்தியக்காரி, நிஜமா உன் வயித்துல புள்ள இருக்குடி!” என்றான் கடுப்பாய். பின்னே எத்தனை நாளாய் சொல்லிக்கொண்டிருக்கிறான் அவனும்!? நம்பவே மாட்டேன் என்கிறாளே!!!
“நாளைக்கே ஹாஸ்பிடல் போறோம். ஸ்கேனிங் பண்றோம்… அப்போவாது நம்பித்தொல!” என்றவன், “நாள் தள்ளிப்போறதை வச்சு நீ தான் எனக்கு சொல்லணும். ஆனா, நான் உனக்கு சொல்லிட்டு இருக்கேன்” என்றான் தலையில் அடித்து. அப்போது படக்கென கதவு திறக்க, உள்ளே வந்த அம்ஸா முறைத்த முறைப்பில் புது மாப்பிள்ளை பொட்டாட்டம் வெளியே ஓடினான்.
வந்த உறவுகள் எல்லாம் அவனிடம் கதையளக்க, பெண்ணை பற்றி விசாரிக்க, அவர்களுக்கு மேலோட்டமாய் விளக்க என அன்றைய பொழுதே நொடியில் ஓடிப்போனது. உறவுகள் எல்லாம் அருகருகே தான் என்பதால் வீட்டில் யாரும் தங்கவில்லை. வீட்டாட்கள் மட்டுமே இருக்க, மதிய விருந்தில் மீதமானதை கொண்டே இரவு உணவை முடித்தனர்.
முற்றத்து நிலா வெளிச்சத்தில் எல்லோரும் அமர்ந்து பேச ஆரம்பிக்க, “அசதியா இருந்தா போய் படு நிலா” என்றார் அம்ஸா.
“இல்லத்தே… நேரம் ஆகட்டும்!” அவள் சொல்லிவிட, பேச்சு எங்கெங்கோ போனது. சிரிப்பும் ஆர்ப்பரிப்பும் வீட்டை நிறைக்க, நிலாவுக்கு மனமே நிறைந்து இருந்தது. வெறும் நாலு சுவருக்குள் தனிமை மட்டுமே அனுபவித்து வாழ்வே வெறுத்தவள் போல வாழ்ந்தவளுக்கு, இப்படி ஒரு குடும்பம் கிடைக்கும் என கனவு கூட கண்டதில்லை. காணாத கனவை கூட நினைவாக்கிய கணவன் மேல் காதல் கூடியது. குழந்தை போல சிரித்து பேசிக்கொண்டிருப்பவனில் இருந்து கண்ணெடுக்க முடியவில்லை அவளால்.
என்னதான் மும்மரமாய் பேசிக்கொண்டிருந்தாலும், வாணிலா மீது ஒரு கண் வைத்திருந்த கோவர்த்தன், அவள் பார்வை தன்னிடமே இருக்கவும் சட்டென திரும்பி, ‘என்ன?’ என்றான் விழிகளாலேயே.
அவன் கேட்ட நிமிடம், தன்னை மீறி உதடு குவித்து பறக்கும் முத்தம் ஒன்றை அவனுக்கு நிலா அனுப்பி வைக்க, சமைந்துப்போனான் அவன். அதன் பின் பேச்சாவது மூச்சாவது… நினைவெல்லாம் நிலா தான்.
“ஏன் அண்ணே நெத்தில தழும்பு இருக்கு? நானும் வந்ததுல இருந்தே கேட்க நினைச்சேன்!” ராகவர்த்தினி கேட்க, பதில் வராமல் விழித்தான் கோவர்த்தன். விழியெல்லாம் வஞ்சியின் மீதே!!!
“ட்ரீட்மென்ட் பண்றேன்னு ஏடாகூடமா பேசி வச்சுருப்பான். எவளாது எடுத்து மூஞ்சி மேல வீசிருப்பா!” பர்வதம் பகடி போல சொல்ல, அது தானே உண்மை!? அது தெரிந்த நிலாவுக்கு அப்படி ஒரு சிரிப்பு. கண்ணில் நீர் வர அவள் சிரிப்பு ஆசையாய் பார்த்திருந்தான் அவன். அதற்குமேல் முடியாமல், “அண்ணே, எல்லாரும் இங்கயே இருந்தா எப்படி? யாராது சீக்கிரம் போய் என் ரூமை ரெடி பண்ணுங்க” என்று ஹர்ஷவர்த்தன் காதில் கிசுகிசுத்தான்.
அதை கேட்ட ஹர்ஷா சத்தமாய், “ம்மா… இவனுக்கு இவன் ரூமை ரெடி பண்ணனுமாம்” என்று சொல்ல, கண்ணாலேயே நாலு கட்டு விளக்கமாற்றடி வீசினார் அம்சவர்தினி.
“இன்னும் மூணு மாசத்துக்கு அவ என்னோட தான் தூங்குவா!” முறைத்துக்கொண்டே சொன்னவரை எதிர்த்துக்கூட பேச முடியாமல், “நாங்க தான் இந்த மாசமே கிளம்பிடுவோமே!” என்று முனகினான் அவன்.
அதை ஸ்ரிவர்த்தன் சத்தமாய் சொல்லி அம்மாவிடம் போட்டுவிட, “போறதுன்னா பாஸ்போர்ட் தரேன், நீ கிளம்பு… நிலா எங்கயும் வர மாட்டா! நான் விட மாட்டேன்” என்றுவிட்டார்.
அவன் இதை எதிர்ப்பார்க்கவில்லை.
“ம்மா… எனக்கு லீவ் முடிய போகுது ம்மா” அவன் சொல்ல, “நீ கிளம்பு. அவ இருக்கட்டும்” என்றார்.
“அவ இல்லாம நான் எப்படி?” என்றவன் தவிப்புடன் நிலாவை பார்த்தான். அவனை போலவே அவளும் தவிப்புடன் தான் இருந்தாள். அது அவனுக்கு யானை பலம் கொடுக்க, “நான் இல்லாம அவ இருக்க மாட்டா ம்மா” என்றான் நம்பிக்கையாய்.
“வெளிநாடு அனுப்ப மாட்டேன்டா… புள்ளையை பெத்த பின்ன வேணா போகட்டும்” என்றார். அதெல்லாம் வெறும் வாய் வார்த்தை தான். பிள்ளை பெற்றால் பத்தியம், வைத்தியம் என்று எதாவது சொல்லி பிடித்து வைப்பார் என்று தெரியும் அவனுக்கு.
“அம்மா… நானே டாக்டர் தானே… அங்க நான் பார்த்துப்பேன் அவளை” அவன் சொல்ல, “என்ன பாத்துப்ப? கூடவே இருப்பியா எந்நேரமும்?” என்றார்.
“அதெல்லாம் நான் பார்த்துப்பேன் ம்மா… இங்க எல்லாம் வசதி பத்தாது. பக்கத்துல நல்ல ஹாஸ்பிடல் கூட இல்ல” அவன் சொல்ல, “நான் இங்க தானே புள்ள பெக்க போறேன்?” என்று வியந்தாள் ராகவர்த்தினி. நிறை மாத பெண்ணிடம் என்னவென்று சொல்வான் அவன்!?
“உன்கிட்ட சரி வருமா வராதான்னு நான் கேட்கல… இதான் முடிவுன்னு சொல்றேன்” என்ற அம்ஸா, “எல்லாரும் போய் தூங்குங்க, நேரமாச்சு” என்று எழுந்துவிட்டார்.
அவரை தொடர்ந்து எல்லோரும் எழுந்துவிட, “அத்தே, எனக்கு இவர்கூட தான் இருக்கனும்” என்று தயங்கினாலும் தைரியமாய் சொல்லிவிட்டாள் வாணிலா.
அம்சவர்த்தினி ரகசிய சிரிப்போடு தன் கணவனை பார்த்தார்.
வாணிலா தனக்காக பேசியதும், “நான் சொன்னேன்’ல? நான் பாத்துப்பேன்” என்றான் கோவர்த்தன் தில்லாக.
“என்ன பார்த்து கிழிப்ப? பிரசவம் பாக்க தெரியுமா உனக்கு?” அவர் கேட்க, “அது எதுக்…” அவன் பேசும்போதே, “ஸ்ஸ்ஸ்! பிரசவம் பாக்க தெரியுமா? தெரியாதா?” என்றார்.
“தெரியாது!” அவன் சொல்ல, “அப்ப அனுப்ப முடியாது” என்றுவிட்டு அறைக்குள் சென்றுவிட்டார். போகும் முன், “நீ உன் ரூம்ல படும்மா… நான் சித்த நேரத்துல வரேன்” என்றுவிட்டு போக, கடுப்போடு நின்றிருந்தான் கோவர்த்தன்.
நான் பார்த்துக்கொள்கிறேன், நீ போய் வா! என்று அவள் சொல்லியிருந்தால் தான் இந்நேரம் தேவதாஸ் போல ஆகியிருப்பான். அப்போதே ஃபோனை எடுத்தவன் யாருக்கோ டையல் செய்தபடி வீட்டின் கடைக்கோடி பின்வாசலுக்கு நடந்தான்.
வாணிலா தன் அறைக்கு போக, அங்கே வந்த அம்ஸா, “உன்னை அனுப்பலைன்னு கோச்சுக்காத நிலா… உங்களை பிரிச்சு வைக்குற எண்ணம் இல்ல எனக்கு. இதை விட்டா வேற எந்த காரணம் சொல்லியும் என் பையனை என்னோடவே வச்சுக்க முடியாது. அதான்! எப்படியும் ஒன்னு ஒண்ணரை வருஷம் என்னோட இருப்பான்ல இப்ப? அது போதும் எனக்கு!” என்றவர், “நான் இப்படி சொன்னேன்னு சொல்லாத!” என்றுவிட்டு, படுத்துக்கொண்டார்.
எத்தனை பிள்ளைகள் இருந்தும் தாய்க்கு ஒவ்வொன்றும் ஒவ்வொரு கண்ணாக தான் இருக்கும் என்று அப்போது உணர்ந்தாள் வாணிலா. சிறிது நேரம் படுத்திருந்தவளுக்கு உறக்கமே இல்லை. கோவர்த்தன் உறங்கினானா என்று தெரியவில்லையே என அவனுக்கு அழைப்பு விடுக்க, பிசி என்று வந்தது.
‘இன்னுமா பேசிக்கொண்டிருக்கிறான்?’ என்ற வியப்போடு மெல்ல எழுந்து அவள் பின்வாசல் போக, அங்கே படிக்கட்டின் கடைசியில் அமர்ந்து மும்மரமாய் ஸ்பேனிஷில் பேசிக்கொண்டிருந்தான் கோவர்த்தன்.
படிகளில் இறங்கியவள், அவனுக்கு மேல் இருந்த படியில் அமர்ந்து அவன் கழுத்தை கட்டிக்கொள்ள, ஆசையாய் மறுகரம் கொண்டு அவளை வளைத்தான் கோவர்த்தன். அதன்பின் அவன் பேச்சுக்கள் எல்லாம் வேகவேகமாய், பேச்சை முடிக்கும் எண்ணத்தில் தான் இருந்தது. இரு நிமிடங்களில் அழைப்பு முடிய, “என்ன பொண்டாட்டி? அரைமணி நேரம் கூட தனியா இருக்க முடிலையா?” என்று சீண்டினான்.
“ஆமா… பர்ஸ்ட் நைட் அன்னைக்கு புருஷனை தேடாம இருந்தா தான் தப்பு…” அவளும் சீண்டலாகவே சொல்ல, வியப்பாய் பார்த்தவன், “ஆஹா, மேடம் லவ் மூட்’ல இருக்கீங்க போலவே!” என்றான்.
“வேற மூட்’ல இருக்கேன்னு சொன்னா மட்டும் என்ன பண்ணிடுவீங்க…?” வேண்டுமென்றே அவள் சீண்ட, “அங்க இருக்கு பாரு மோட்டார் ரூம்…” என்று இருட்டில் கை காட்டியவன், “பத்தே செகன்ட்ல உன்னை தூக்கி தோள்ல போட்டுட்டு போய்டுவேன்!” என்று தீவிரமாய் சொல்ல, நம்பியே விட்டாள் அவள்.
“ஏய் ஏய் சும்மா சொன்னேன்!” உடனே பின்வாங்கியவளை நக்கலாய் பார்த்தவன், “வெறும் வாய் தான்” என்றான் அவள் தாடையில் இடித்து.
“என்ன பேசிட்டு இருந்தீங்க ரொம்ப நேரமா?” அவள் கேட்டதும், “லீவ் எக்ஸ்டென்ட் பண்ணனும்னு டீன் கிட்ட பேசுனேன். அவர் லீவ் எல்லாம் குடுக்க முடியாது. ‘விர்சுவல் கன்சல்டிங்’ பாருன்னு சொல்லிட்டாரு… அதுவும் நல்லது தான்… சும்மா இல்லாம, வீடியோ கால்ல ட்ரீட்மென்ட் பண்ணலாம்” என்று சொல்ல, “என்னோடவே இருப்பீங்களா அப்போ?” என்று சந்தோஷமாய் கேட்டாள் நிலா.
“உன்னை விட்டு எங்கடி போவேன் நான்!?” வெறும் வார்த்தை அல்ல அது. அவன் ஆழ்மனதில் இருந்து அவன் சொல்ல, “இப்படி ஒரு குடும்பத்தை விட்டுட்டு ஏன் போறதுலையே இருக்கீங்க? இப்போ தான் நான் இருக்கேன்ல? நான் உங்களை பார்த்துக்க மாட்டேனா?” என்றாள்.
“என்னை நீ பார்த்துப்ப… ஆனா உன்னை? எனக்கு முன்னாடி உன்னை பார்க்க இங்க ஒரு ஊரே இருக்கு. உன்னை என்கிட்டே இருந்து பிரிச்சுடுவாங்க நிலா” என்றான் பாவமாய்.
“போடா லூசு!!!” அவள் திட்ட, “ஹாஹா… கொஞ்ச வருஷம் அங்க ஜாலியா இருப்போம்… நம்ம பசங்களுக்கு விவரம் தெரிஞ்சு தாத்தா பாட்டி வேணும்ன்னு கேக்கும்போது இங்க ஓடி வந்துடலாம்… சரியா?” என்றான். அவன் எதையும் சும்மா சொல்வதில்லையே!? இதையெல்லாம் முன்பே யோசித்து தான் இருக்கிறான் என்பது அவன் சொன்ன வேகத்திலேயே தெரிந்தது.
அவன் அண்ணாந்து அவளை பார்த்து பேசிக்கொண்டிருக்க, தானாக அவனை தன் மடியில் கிடத்தியவள், அவன் சிகையை விலக்கி நெற்றியில் அழுத்தமாய் முத்தம் வைக்க, கண்களை மூடிக்கொண்டான் கோவர்த்தன். அந்த ஒரு முத்தத்தை அதன் அடி வரை சென்று அனுபவித்துக்கொண்டிருந்தான்.
காதல் இல்லா நாட்களிலும் சரி,
காதல் கொண்ட நாட்களிலும் சரி,
காமம் கொண்ட இரவுகளிலும் சரி,
காமம் இல்லா இரவுகளிலும் சரி…
அவனை பார்த்த ஷணத்தில் இருந்து அவளுக்காக அவன் நொடிகள்…!
அவளை ரசிக்கவே அவன் கண்கள்…!
அவளை மகிழ்விக்கவே அவன் செய்கைகள்…!
இப்படி அவளுக்காகவே அவன்!
“உங்களை அன்னைக்கு பார்க்காம போயிருந்தா இப்படி ஒரு அழகான வாழ்க்கையை அனுபவிக்காமையே போயிருப்பேன்!” உணர்ந்து சொன்ன பெண்ணை விழி திறந்து பார்த்தவன்,
“நீ…
என்னை பார்த்தாய்…
மயங்கி விழுந்தாய்…
நான்…
உன்னை பார்த்தேன்…
மயங்கி விழுந்தேன்…
நீ விழித்துக்கொண்டாய்…
நான் மிதந்துக்கொண்டிருக்கிறேன்…
உன் காதலில்…!!!
அவன் வாயில் வந்ததை சொல்ல, “அய்ய… என்ன இது?” என்றாள் வாணிலா.
“கவித ம்மா… கவித கவித…” அவன் சொல்லவும், “ரொம்ப மொக்கையா இருக்கு!” என்று நிலா சிரிக்க, “நீ போடி… நான் என் பொண்ணுக்கிட்ட கேட்டுக்குறேன்” என்றவன், அப்படியே திரும்பி அவள் வயிற்றில் உதட்டை அழுத்தி, “தேனு பாப்பா… அப்பா கவிதை எப்படி இருக்கு?” என்று பேச, அவன் மீசை உரசலில் சிலிர்ந்து கூசியது அவளுக்கு.
அவள் நெளிய நெளிய வேண்டுமென்றே அவன் அழுத்தி பிடித்து மகளுடன் பேசிக்கொண்டே இருக்க, அவளுக்கு சிரிப்பையும் குறுகுறுப்பையும் அடக்கவே முடியவில்லை. கோவர்த்தனை அடித்துக்கொண்டு, அங்கும் இங்கும் நெளிந்தபடி அவள் சத்தமாய் சிரிக்க,
“என்னடா அங்க சத்தம்!?” என்ற அம்சாவின் கணீர் குரல், சற்று தூரத்தில் இருந்து. வாரி சுருட்டி எழுந்துவிட்டான் மனைவி மடியில் இருந்து.
இருட்டில் எங்கே ஆள் நிற்கிறார்கள் என்றுக்கூட தெரியவில்லை.
“அத்தே இன்னும் தூங்கல போல… நான் போறேன்!” என்றவள், வீட்டை நோக்கி திரும்ப, நொடியில் அவளை இழுத்தவன், அழுத்தமாய் கன்னத்தில் முத்தம் வைக்க, “இன்னும் என்னடா பண்றீங்க?” என்ற அவரின் அடுத்த குரலுக்கு அடித்துப்பிடித்துக்கொண்டு சிரிப்போடு உள்ளே ஓடினர் இருவரும்…!