“லூசு… என்னை நினைச்சு அப்படி சொல்லல. நம்ம குடும்பத்தை நினைச்சு பயமாயிருக்குனு சொன்னேன்”
“கோபத்துல முதல் மருமகளை தள்ளி வச்சதால, உன் பொண்டாட்டியையும் கொடுமை பண்ணுவாங்கனு நினைச்சிட்டியாடா? என் மாமா அப்படிபட்டவர் இல்ல”
“லூசு…” என தலையில் லேசாய் குட்டியவன், “என் அப்பா பத்தி எனக்கு தெரியாதா?” என கடிந்து, “பிரச்சனை அதுயில்ல. சத்யனும் கல்யாணம் செய்துக்கமாட்டேங்குறான். சரவணன் காதல் தோல்வினு பைத்தியகாரதனமா அமெரிக்கா போய்ட்டான். எதோ காரணத்துனால உனக்கும் கல்யாணம் பிடிக்கல. நான் ஒருத்தன் கல்யாணம் செய்து என்ன சுகத்தை கண்டுடப்போறேன்?” என்றான் விரக்தியாக.
“எனக்கு கல்யாணம் பிடிக்கல, அதனால வேணாம்ங்கிறேன். சத்யன் அவன் பொண்டாட்டியை மறக்க முடியாம தவிக்கிறான். சின்னவன் பிரச்சனைலாம் இன்னும் இரண்டு வருசம் கழிச்சி சரி பண்ணிடலாம். எங்களை யோசிச்சு உன் வாழ்க்கையை பாழாக்கிக்காத” என்றாள் அக்கறையாக.
“ம்… பாழாக்கிக்கனும்னு வேண்டுதல் பாரு” என முறைத்தவன், “நீ சொல்றமாதிரி சரவணனுக்கு இன்னும் வயசிருக்குனு வச்சிக்கலாம். இரண்டொரு வருசம் கழிச்சு சரவணன் கல்யாணம் செய்தாலும் அவன் இருக்கிற இடத்துலதான் பொண்டாட்டி இருக்கும். இங்க இருக்கிறது நான் மட்டும்தானே? எனக்கு வரப்போறவ சரியில்லனா குடும்பத்துல இருக்க கொஞ்ச நஞ்ச நிம்மதியும் போய்டும்.
சத்யன் கல்யாணம் செய்துக்குவான்ற நம்பிக்கைலாம் எனக்கில்ல, அப்படியே செய்துக்கிட்டாலும் வர பொண்ணு ஜனனிம்மாவை மகளா பார்க்குமா? நானும் ஷுட்டிங் ஷுட்டிங்னு அதிகம் வெளிலதான் இருப்பேன். இந்த குடும்பத்துக்கு சேவகம் செய்யத்தான் வந்தேனானு பிரச்சனை வருமோனு பயமாயிருக்கு சுகந்தி.
ஜன்னிம்மா போல நீயும் எனக்கு முக்கியம். எங்களுக்கிருக்க ஒரே அத்தை பொண்ணு நீ… சேகர் நல்லா பார்த்துக்கிட்டாலும் உன்னை நினைச்சு அத்தை புலம்பும் போதெல்லாம் மனசுக்கு நெருடலாவே இருக்கு. அங்க பத்து நாள், இங்க பத்து நாள் நீ இருந்தாளாவது சுகந்தி நல்லாதான் இருக்கானு மனசை தேத்திக்குவேன். அத்தை புலம்பலும் கொஞ்சம் கம்மியாகும். அப்பாவும், ஜனனிம்மாவும் ரொம்ப சந்தோசப்படுவாங்க.
உனக்கு கல்யாண வாழ்க்கைதான் சரியா அமையல. எங்களோடவாவது சந்தோசமா வச்சிக்கனும்னு ரொம்ப ரொம்ப ஆசையா இருக்கு. நீ இங்க இருந்தா வெளில ஷுட் போகும்போது ஜனனியை பார்த்துக்க நீ இருக்கேனு நான் நிம்மதியா இருப்பேன். ஆனா இதெல்லாம் நடக்காதுனு எனக்கு நல்லா தெரியும். அப்படியே நடந்தாலும் என் கல்யாணம் வரைக்கும்தான்.
சேகர் பொண்டாட்டி உன்மேல தனி அன்பு வச்சிருக்கு. அவங்க மாதிரிலாம் என் பொண்டாட்டி கண்டிப்பா இருக்கமாட்டா. இருக்க பிரச்சனைல இவங்கத்த பொண்ணு வேறையானு உன்னை பாரமா நினைப்பா. அந்த நேரம் உன்னை இங்க இருக்க சொல்லி என்னாலயும் வற்புறுத்த முடியாது.
அப்பா காலைல ஏழு மணிக்கு இன்ஸ்டியூட்க்கு போனார்னா நைட் எட்டு மணிவரைக்கும் இன்ஸ்டியூட்லதான் இருப்பார். சிஃப்ட் மாத்தி மாத்தி ஸ்டூடண்ட்ஸ் வந்துட்டேதான் இருப்பாங்க. இன்ஸ்டியூட்டை க்ளோஸ் கூட பண்ண சொல்லிடுவேன். ஆனா வீட்டுல அடைஞ்சி கிடந்தார்ன்னா அம்மா நியாபகம், மகன்களோட பிரிவு, அத்தை உன்னை நினைச்சு படுற வேதனைனு எல்லாம் மொத்தமா சேர்ந்து அப்பாவை படுக்க வச்சிடும்.
அவர் ரிலாக்ஸா இருக்குறதுக்காகத்தான் இன்னும் டைப் இன்ஸ்டியூட்டை ரன் பண்ண வச்சிட்டிருக்கேன். இத்தனை பிரச்சனை மண்டையை குடையும் போது எங்கயிருந்து கல்யாணத்துக்கு ஆசை வரும்?” என நீண்ட விளக்கம் கொடுத்தான் அன்பரசு.
சுகந்தி முகம் வாட, ஹப்பா… குழப்பி விட்டுட்டோம் என நிம்மதியானவன், “ஹேய்… நீ டல்லாகாத. இன்னைக்குத்தான் நான் கூப்பிட்டதும் வந்திருக்க. ஜாலியா இருப்போம். வாழ்க்கை அது போக்குல போகட்டும். நமக்கானது நடக்கும். என்னென்ன அனுபவிக்கனும்னு இருக்கோ அதையெல்லாம் அனுபவிச்சிதானே ஆகனும்?” என்றான் இலகுவாக.
“என்னை கூட விடு அன்பு. இங்க சரி வரலனா எங்க வீட்டுக்கு போய்டுவேன். ஆனா நீ சொன்னமாதிரி ஜனனிம்மாவை உன் பொண்டாட்டி ஏத்துக்கலனா பாவம் குழந்தை… ரொம்ப மனசொடைஞ்சிடுவாடா. பெத்த அப்பனை பெரியப்பானு கூப்பிட்டு, உன்னை அப்பானு கூப்பிடுறா. கூப்பிடுறது மட்டுமில்ல. அவளுக்கு எல்லாமும் நீதான்” என்றாள் மிகுந்த கவலையாக.
“நீ ஏன் லூசு எங்களுக்கு முன்ன பிறந்த? அட்லீஸ்ட் சத்தியனுக்கப்புறமாவது பிறந்திருக்கலாமில்ல? உன்னை இந்த வீட்டு மருமகளாக்கியிருப்போம். எல்லா பிரச்சனைக்கும் தீர்வு கிடைச்சிருக்கும்” என்றான் விளையாட்டு போல.
முறைத்தவள், “சின்னவளா பிறந்திருந்தாலும் அந்த தடிமாட்டை கல்யாணம் செய்துக்கமாட்டேன்” என்றாள்.
“ஏன்? ஏன்? எங்கண்ணனுக்கென்ன குறை?” என அன்பரசன் சண்டைக்கு கிளம்ப, இவனின் திட்டம் அறியாமல், சத்யன் மீதுள்ள பழைய வருத்தத்தில், “அவனுக்கு ஒரு குறையும் இல்ல. நான்தான் சத்தியன் மனசை கஷ்டப்படுத்திட்டேன். என் கல்யாணம் முடிஞ்சதும் என்னை பார்க்க வந்தான் அன்பு.
அப்போ இருக்க மனநிலையில பேசல, அவன் வாங்கிட்டு வந்த கிஃப்டையும் வேணாம்னுட்டேன். அவமானத்தோட கிளம்பி போனவன்தான், அதுக்கப்புறம் என்கிட்ட பேசுறதில்ல. அத்தை இறப்புக்கு வந்தப்போ நானா பேசவும் கடமைக்கு பேசினான். உன்னையும்தான் நிறைய முறை திட்டியிருக்கேன். நீ என்கிட்ட கோபிக்கல. ஆனா அவன் அப்படி இல்ல. ரொம்ப ரோசக்காரன்” என்றாள்.
“அவன் பொண்டாட்டி செத்த துக்கத்துல இருக்கான். நீ பழைய சுகந்தியா இருக்க வேண்டியதுதானே? எல்லா நேரமும் எல்லாராலையும் சரியா இருக்க முடியாது. அப்போ இருந்த மனநிலையில அப்படி இருந்துட்டேன். அதோட நீயும் அத்தை மாமாக்கு துரோகம் செய்து கல்யாணம் பண்ணின கோபமும் இருந்துச்சுனு ஒரு சாரியை சொல்லி ஃப்ரண்டாகலாம்ல?” என்றான் உரிமையாக.
“ஆமாம்ல? ஃப்ரண்டாகலாம்ல?” என நெகிழ்வோடு கேட்டவள், “முன்னலாம் எப்படிலாம் என்னை டீஸ் பண்ணுவான்? பெரியவன்ற மரியாதைக்கு ஒருமுறையாவது பேர் சொல்லியாவது கூப்பிட்டுருக்கானா? எரும எருமனேதான் சொல்வான். யார் சொன்னாலும் கேட்கமாட்டான். அவன் சொல்றது மட்டுமில்லாம உனக்கும் சரவணனுக்கும் சொல்லி கொடுப்பான். மூனு பேரும் சேர்ந்து கொஞ்ச நஞ்ச அலப்பறையாடா செய்விங்க? ஹம்… அதெல்லாம் ஒரு பொற்காலம்” என்றாள் பழைய நினைவுகளில் ஏக்கமாக.
“எல்லாம் சரியாகும் அன்பு” என தேற்ற, “ம்கூம்… சரியாகிட்டாலும். உன் வாழ்க்கையும் சத்யன் வாழ்க்கையும் சரியாகும்வரை எதுவும் சரியாகாது” என அலுத்தவன், இன்று இவ்வளவு போதும் என நினைத்தபடி “சரி விடு… கஷ்டத்தையே யோசிச்சிட்டிருந்தா சின்ன சின்ன சந்தோசங்களையும் இழந்திடுவோம்” என்றான் இயல்பாக.
“என் சந்தோசம் நம்ம வீட்டுலதான்டா. கல்யாணம் எனக்கு பிடிக்கல. ஆனா சத்யன் அப்படியில்ல. பொண்டாட்டியை மறக்க முடியாம தவிக்கிறான். போனவ திரும்பமாட்டானு அவனுக்கு புரிய வை” என்றாள்.
“ஏன்? நான்தான் சொல்லனுமா? நீ சொன்னா என்னவாம்?” என அன்பு முறைக்க, “நான் சொன்னா நீ முதல்ல ஒழுங்கானு கேட்பான்” என்றாள் பாவமாக.
“உன் கல்யாணத்தை பத்தி பேசக்கூடாதுனு சத்யன்கிட்டயும்தான் சொல்லியிருக்கேன். அப்படிலாம் கேட்கமாட்டான். ஒருவேளை கேட்டாலும் என்னை நம்பி யாரும் இல்ல, உனக்கு அப்படியா? பொண்ணை பெத்துருக்கோம்ன்ற நினைப்பாவது இருக்கானு கேளு. இப்போ இல்லனாலும் பின்னாள்ல ஜனனிம்மாக்கு கண்டிப்பா அம்மா தேவைன்ற அவசியத்தை புரிய வை. நான் சொல்றதை விட, ஒரு பொண்ணா நீ சொல்றது சரியா இருக்கும்”
“சரி போய் தூங்கு. நான் ஒரு வாக் போய்ட்டு வரேன்” என எழுந்தான். சுகந்தி உள்ளே போனபின்னே மாதவனும் கல்பனாவும் மகிழ்வோடு அன்பரசிடம் வந்தனர்.
“அன்பு… சுகந்தியை இப்படி பார்க்க ரொம்ப சந்தோசமா இருக்குடா” என்றார் மாதவன்.
“எனக்கும்தான்ப்பா. கல்யாணத்தை பத்தி பேசலனா இயல்பாத்தான் இருக்கும் போல. இவ்வளோ நாள் பொறுத்தோம். இன்னும் கொஞ்ச நாளைக்கு கல்யாணத்தை பத்தி பேசாதிங்கப்பா. கண்டிப்பா சரி செய்திடலாம்” என்றான்.
“சரிப்பா. இன்னைக்கு சுகந்தியோட மாற்றம் உன்னாலதான். இதேபோல அவ வாழ்க்கையிலும் மாற்றம் வரும்னு நம்பறேன்” என நம்பிக்கையோடு சொல்லி கல்பனா உறங்க செல்ல, “நானும் போய் படுக்குறேன்ப்பா” என்று தந்தை சென்றதும், மிக மெதுவாக நடக்கலானான் இதமான மனதோடு.
சுகந்தி மனசுல ஜனனிம்மாவை பதிச்சிட்டோம். சத்யனுக்கு கேட்கும்போது இதை வச்சே எப்படியாவது கார்னர் பண்ணனும்” என சற்று நேரம் இவர்கள் நினைவில் உழன்றவன் மனக்கண்ணில் முல்லை வந்தாள்.
நெடு நாட்களாக கஜேந்திரன் வம்பு செய்திருக்கிறான். அவளின் அத்தை, சித்தப்பா மகன்களிடமாவது சொல்லலாமில்லை? என்ற கோபத்திலிருந்தான். ஆனால் அவர்கள் அத்தனை உரிமையை இவளுக்கு கொடுக்கவில்லை என இன்றுதான் புரிந்தது அன்பரசிற்கு.
எல்லாரும் சுயநலத்தோட உச்சமா இருப்பாங்க போல. ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் என்னை இணை வைத்து பேசியவர்கள், இன்னும் என்னென்ன பேசினார்களோ? எப்படி அழுதிருந்தால் அவளின் முகம் அப்படி வீங்கி சிவந்திருக்கும்? முல்லைக்கு நிகராக பெரியவரின் முகமும் ஆதரவற்ற நிலையில்தானே இருந்தது? அப்படி என்ன நடந்திருக்கும் என யோசித்தபடி நடந்தான்.
முல்லையை நினைத்ததும் சுகந்தி கிண்டல் செய்தது நினைவு வர, அந்த பிள்ளையை ஒருமுறை கூட அப்படி கண்ணோட்டத்துல பார்த்ததில்ல, சுகந்தி எப்படிலாம் பேசுறா என நினைத்தவன், ச்சு… மரியாதைடா அன்பு. அண்ணியாகப்போறவ, ப்ச் இல்லயில்ல அண்ணியாகப்போறவங்க என தனக்குத்தானே சொல்லிக்கொண்டான் சிரிப்போடு.
மேலும் சற்று தூரம் சுகந்தி நினைவோடே நடந்து ரங்கசாமியை கடந்தவன், அங்கு அமர்ந்திருந்தவர் பெரியவர்தானே என திரும்பிப்பார்க்க, அவர்தான் அமர்ந்திருந்தார்.
நிழற்கூட திண்டில் அமர்ந்திருந்தவரைப் பார்க்க பாவமாக இருக்க, அவரருகே சென்றவன், “ஐயா, என்ன இங்க உக்கார்ந்திருக்கிங்க? உடம்பேது படுத்துதுங்களா?” என்றான்.
மகளுக்கு சொத்து எழுதி வைப்பதை அறிந்து கொண்டு அக்காவும் நாராயணனும் பேசிய வார்த்தைகள் மனதினை அறுக்க இவ்வளவுதானா சொந்தங்கள் என விரக்தியோடு அமர்ந்திருந்தவர், அன்பரசின் குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்தார்.
“ஆமாம் தம்பி. கொஞ்ச நேரம் நடக்கலாம்னு வந்தேன். முடியல, உக்கார்ந்துட்டேன்” என்றவர் “என் மகளுக்காக அந்த பையனை மிரட்டினதோட இல்லாம ஜிம்மை விட்டே நிறுத்தியிருக்கிங்க. ரொம்ப நன்றி தம்பி” என்றார்.
“இதுக்கு எதுக்குங்க நன்றி? இது என் கடமை” என்றான் பணிவாகவே.
“இல்ல தம்பி. உங்களை விட்டா யாராலும் அவனை கண்டிச்சிருக்க முடியாது. அத்தனை பலசாலிகிட்ட என்னாலயும் மோத முடியாது” என்றார் வருத்தமாக.
அன்பரசு அக்கறையாக விசாரித்ததும் நம் மகளை அன்புக்கு கொடுத்தா என்ன? இவனை விட நல்லவனை எங்க தேடுறது என யோசனைகள் உதிக்க, இப்படி நினைப்பு மனதை இதமாக்க அன்பரசிடம் சற்று நேரம் பேச மனம் உந்தியது.
அந்த நேரம் முல்லையிடமிருந்து அழைப்பு வரவே, ஏற்றவர் “வந்துட்டிருக்கேன்மா. நீ தூங்கு” என்றார்.
“எங்க வந்துட்டிருக்கிங்க? நம்ம ஸ்ட்ரீட்ல உங்களை காணோமே” என கேட்டவள் கண்ணிற்கு ரங்கசாமி தெரியவே தந்தையருகே வந்து டியோவை நிறுத்தினாள்.
இந்த நேரத்திற்கெல்லாம் வெளியே வரமாட்டார் ரங்கசாமி. எட்டு மணிபோல் உண்டு, தனது வீட்டின் முன்னேயே சற்று நேரம் நடந்து ஒன்பது மணிக்கெல்லாம் வீட்டிற்குள் வந்திடுவார் ஆதலால் இன்று பத்து மணியாகியும் தந்தை வராமல் போகவே பயந்துவிட்டாள் முல்லை.
அருகிலிருந்த அன்பரசை பார்த்ததும் அன்று தனது வீட்டில் அத்தை இவனோடு இணைத்து பேசியதை நியாபகம் வர, அவமானத்தோடு தந்தையிடம் திரும்பியவள், “இந்த நேரத்துல இங்கலாம் எதுக்குப்பா வந்திங்க? நம்ம ஸ்ட்ரீட்ல உங்களை காணோம்னது பயந்தேபோய்ட்டேன்” என்றாள்.
“போன் செய்தா எங்க இருக்கேனு சொல்லப்போறேன். அதுக்காக இந்த நேரத்துல தனியா வருவியா? வீட்டுக்கு போ. நான் தம்பிகிட்ட பேசிட்டு வந்துடுவேன்” என்றார் கண்டிப்போடு.
அள்ளி முடிந்த கொண்டையோடு பேண்ட் சர்ட் என இரவு உடையிலிருந்தாள் முல்லை. தந்தையை காணோம் என்றதும் வண்டியை எடுத்துக்கொண்டு வந்திருந்தவளின் தவிப்பை நெகிழ்வாய் பார்த்தவன்… “ஐயா நீங்க உங்க பொண்ணோட வண்டியிலயே போங்க. நாளைக்கு மதியம் நான் ஃப்ரீதான். உங்க காம்ப்ளக்சுக்கு வாங்க, நாம பேசலாம்.” என்றான்.
“சரிங்க தம்பி. நாளைக்கு பார்க்கலாம்” என்று மகளின் வண்டியில் ஏறினார்.
எதோ சொல்ல நினைச்சிருக்கார். அவங்க பொண்ணு வரவும் கிளம்பிட்டார். பொண்ணு முன்ன பேச முடியாம அப்படி என்ன விசயமா இருக்கும்? என யோசித்தவன், தன்னை பார்த்ததும் முல்லையின் முகம் ஏன் சிறுத்துவிட்டது? என்று யோசித்தபடி நடந்தான்.
சுகந்தி இவளை காஷ்மீர் ஆப்பிள் என்றது நியாபகம் வர, ம்… இப்போவும் அப்படித்தான் இருக்கா. ஹம்… அழகா இருந்து நமக்கென்ன பிரியோஜனம்? எனக்கெல்லாம் பொண்ணை கொடுக்க யோசிக்கக்கூட மாட்டாங்க.
நாமளா பொண்ணு கேட்டு ஒருவேளை சம்மதிச்சாலும் அந்த தயிர்சாதத்துக்கும், ஏக் தம்ல இரண்டு முனு கிலோ நல்லி எலும்பு சாப்பிடற நமக்கும் ஒத்தே வராது. மனசை அடக்குடா அன்பு என்று சிரிப்போடு நினைத்தபடி வீட்டிற்கு வந்தான் அன்பரசு.