நிரூபன் கொதித்துப் போய் நின்றிருந்தான். சேகரன் பேசிய பேச்சிற்கு அவனைக் கொல்லாமல் விட்டதே அதிசயம் தான்.
கலியபெருமாள் இடிந்து போய் அமர்ந்திருக்க, செவ்வந்தி தான் அவரைத் தேற்றிக் கொண்டிருந்தார் .
“நீங்களே இப்புடி இடிஞ்சு போவலாமா…? அவேன் சொன்னா நான் நம்பிடுவேனா?, ஒங்களையும், அவளையும் தெரியாதா எனக்கு. பவளம் என்னானு கேளு புள்ள, பாரு இந்த மனுசன! ” என முந்தானையை எடுத்து முகத்தைத் துடைத்தபடி அழ, பவளமும் விக்கித்து தான் நின்றார்.
“பாவிப்பய இந்த எண்ணத்துல தான் சுத்தி இருப்பான்னு தெரியலையேண்ணி. இவனெல்லாம் சிவத்து கூடப் பொறந்தவனா…? விமலாவுக்கு தெரிஞ்சா என்ன நெனைப்பா…?” என பவளமும் தன் பங்கிற்கு அழ, யாரைத் தேற்றுவது என்று புரியாமல் சிறியவர்கள் திகைத்து நின்றிருந்தனர்.
“மாமா என்ன மாமா நீங்களே கலங்கினா எப்படி?, எழுந்திருங்க.” என இனியனும் சொல்லிப் பார்க்க
“எம்மூட்டு சாமியா அந்தப் பொருவை(பொருவு-பொண்ணு) நெனைச்சிருக்கேம்யா. இப்புடி ஒரு வார்த்தை கேட்டுப்புட்டானேய்யா…” குரலே உடைந்திருந்தது அவருக்கு.
வீட்டிற்குள்ளேயே அத்தனை களேபரமும் நடந்திருந்தது. ஆனாலும் அக்கம் பக்கத்தினர் சிலர் விழிப்பு வந்து எட்டிப் பார்க்க, சேகரன் தள்ளாடி நிற்கவுமே,” இவன் வர்றப்ப எல்லாம் அவர் கிட்ட சண்டை கட்டாம போமாட்டானே ?!”என்று முனகியபடி போய்விட்டனர்.
சிலரோ,” என்ன செவந்தியக்கா ?”என வினவிட,
” குடிச்சுட்டு விழுந்து கெடக்கிறாப்ள, அதான் சத்தம் போட்டுட்டாரு அவரு.” என சமாளித்தார்.
“குடிச்சு இருக்காரு, அடிச்சுக்கிடிச்சுப்புடாதீங்கண்ணே… சடக்குனு ஏதாவது ஆகிரும். காலையில எழுந்ததும் பேசுங்க” என பக்கத்து வீட்டு ஆள் அறிவுரை சொல்லி விட்டுச் செல்ல, சேகரனை இழுத்து உள்ளே போட்டிருந்தனர். அதன்பின்பு தான் இத்தனை பேச்சும் நடந்தது.
அவன் போதையிலும், அடிவாங்கிய சோர்விலும் மயங்கிக் கிடந்தான் உளறிக் கொண்டு.
விடிந்து போனது. அனைவரும் உறக்கமின்றி ஆளுக்கொரு மூலையில் அமர்ந்திருந்தனர்.
சேகரன் எழுந்தமர்ந்தான். மதுபோதையில் பேசியவனுக்கு எதுவும் சரியாக நினைவில் இல்லை.
‘நிரூபனிடம் அடிவாங்கியது, பூரணியை அவன் அணைத்து நின்றது, கலியபெருமாள் ஓடிவந்தது’ என்று சில காட்சிகள் தான் நினைவில் இருந்தது.
முதல் நாள் உள்ளே நுழையும் போதே கலியபெருமாள் வெளியே உறங்குகிறார் என்றறிந்தே கதவைத் தாழிட்டு இருந்தான் சேகரன்.
‘செவ்வந்திக்கு மாத்திரை போட்டால் விடியும்வரை எழ மாட்டார் என்பதை விமலாவின் மூலம் அறிந்திருக்கிறான். மோகனும் அறைக்குள் உறங்குவான் என்பதால் அவன் அறையை மட்டும் வெளியே தாழ்ப்பாள் போட்டு விட்டு, அறைக்குள் இருப்பவளை ஒரு வழியாக்கிட வேண்டும்’ என்று நினைத்து தான் வந்தான்.
அவன் வரும்போதே கழிவறையில் இருந்து பூரணி வரவும்,’ வசதியாகப் போனது’ என்றெண்ணி அவளை நெருங்கி அவள் கையால் அடிவாங்கிட, அடுத்த நிமிடம் நிரூபன் அடித்ததும் மதுபோதை கூட இறங்கிப் போனது அவனுக்கு.
‘அடித்தவர் கலியபெருமாளாக இருக்கும்.’ என பார்த்திட, சேகரனுக்கு அப்பட்டமான அதிர்ச்சி அது நிரூபன். அவனை மறக்க முடியுமா சேகரனால். நடுசாலையில் வைத்து மிதித்தவனாயிற்றே…! அவனைப் பற்றி விசாரிக்க நினைக்கும் போதே கேட்ட சத்தத்தில் மோகனும் கலியபெருமாளும் வந்து விட்டனர்.
‘முன்பக்கம் கதவைத் தட்டாமல் சரியாக பின்பக்கம் வந்திருக்கிறாரே கலியபெருமாள்?!’என ஆச்சரியம் அடைந்தாலும், நிரூபன் பூரணி மீதிருந்த அந்த நேர கோபத்தில் அதைப் புறம் தள்ளிவிட்டு பூரணியைப் பற்றி குறை சொல்ல, செவ்வந்தியும் எழுந்து வந்து விட்டார்.
அனைவரும் வரும் போதே நிரூபன் பூரணியை விட்டு விலகிவிட
கலியபெருமாள் பதறிக் கொண்டு பூரணியை நெருங்கியவர் ,”என்னய்யா என்ன சாமி…?ஆயா நீ ஏன் இப்படி நிக்குற…?”என்று கேட்க
“வாய்யா பெரியமனுசா…! இங்க ஒருத்தன் என்னைய அடிச்சிருக்கான், அதை கேட்காம நேரா அவகிட்ட போற… என்ன கொழுந்தியா மேல அம்புட்டு அக்கறையா?” என நாக்குழற கேட்டவன்,
“ஏன்டி மூத்தவனை வளைச்சுட்டு தான் ,நான் கூப்டா வரமாட்டேங்கிறியா நீ…? ஆளு இந்த வயசுலயும் வாட்டசாட்டமா இருக்கான். அதனாலயா…? நான் சொத்துக்காரன்டி என்னையும் பாரு… “என்று வாய்க்கு வந்தபடி பேச, கலியபெருமாள் அவன் கழுத்தைப் பிடித்து விட்டார்.
“பாவிப்பயலே என்னடா பேசுற…?” என்று கழுத்தை இறுக்க
அவனோ ,”சும்மா நடிக்காதய்யா… இவளை நீ வச்சுக்கிட்ட தான… நீயும் சீக்காளி பொஞ்சாதி கூட எத்தனை நாள் குடும்பம் நடத்துவ?, அதான் இப்படி இவளை..” எனும் போதே மோகனும்,நிரூபனும் அவனைப் புரட்டியெடுக்க, மயங்கி விழுந்து விட்டான் சேகரன்.
அதன் பின்னர் இப்போது தான் கண்விழிக்கிறான். கண்விழித்ததும் கண்டதென்னவோ நிரூபனைத் தான்.
“இவேன் இன்னும் போவலயா …? ஏய் எழுந்திருடா, என்ன தைரியம் இருந்தா என்னைய அடிச்சிட்டு இங்கேயே இருப்ப…?”என தள்ளாடி எழுந்து வேட்டியை கட்ட, நிரூபன் அவனை அருவறுத்து பார்த்தான்.
“என்ன திமிரா பாக்குறான் பாரு.. மோகன் அந்த அருவாள எடுடா… ஏன்டி இவனை கூட்டு சேத்துருக்கியா நீ…?ஆமா யாருடா நீயி ?”என்று எரிச்சலாக கேட்டபடி அவனை நெருங்க,
நிரூபனோ,’ நீ வாடா உனக்கிருக்கு’ என்பது போல பார்த்திருந்தான்.
அவன் நெருங்கும்போதே மோகன், சேகரனின் பேக்கை எடுத்து நடுவில் போட்டான்.
“அப்புடி தூக்கிப் போடுடா, எடுத்துட்டு வெளியே போடா” என சேகரன் நிரூபனைப் பார்த்து அரற்ற,
மோகனோ அமைதியாக,”அது உன் பை தான். எடுத்துக்கிட்டு மரியாதையா வெளியே போயிடு, இல்ல போலீஸ்ல புடிச்சுக் குடுத்திடுவேன்” என்றான்.
“எது நான் வெளியே போகணுமா…? டேய் திமிரா…! ஓஓஓ! இவனுக்கு மாமா வேலை பார்க்கிறது நீதானா…?நல்லா இருக்குதுண்ணே உன் வளப்பு “என்று கலியபெருமாளிடம் செல்ல, பவளம் ருத்ரதாண்டவம் ஆடிவிட்டார்.
“ஏன்டா பரதேசி நாயே…! என்ன திமிரு இருந்தா நேத்து அந்தப் பேச்சு பேசி இருப்ப… நீயெல்லாம் எங்க கூடப் பொறந்த பொறப்பாடா, இனி வீட்டுப் பக்கம் காலடி எடுத்து வச்ச சந்தி சிரிச்சுப் போவும் பாத்துக்கிடு… மரியாதையா வீட்டை விட்டு வெளியே போ “என்றார் பளார் பளாரென அறைந்து.
பவளத்தை தள்ளி விட்டவனோ,” அதைச் சொல்ல நீ யாரு…? உன்னைய கட்டிக் குடுத்தாச்சு , மரியாதையா தள்ளி நில்லு என்னையவே அடிக்கிற எவ்வளவு திண்ணக்கம் உனக்கு. “என அடிக்க பாய, இனியன் இடையில் வந்து நின்றான்.
“யோவ் !கையை ஒடிச்சு விட்ருவேன் பாத்துக்கிடு. சாமி மாதிரி இருந்த மனுசனை சரிச்சு உட்கார வச்சுட்டு, பேச்சா பேசுற மானம் மரியாதை போறதுக்குள்ள இங்கருந்து போயிடு” என்றான் ஆத்திரமாக.
“ஏய் என்னை ஏன்டா அடக்க வர்றீங்க…? இதோ இவளைத் தூக்கிப் போட்டு மிதிச்சா சரியா போயிரும்” என பூரணியைப் பார்த்து கத்த
“மேல கை வச்சிட்டு நீ உயிரோடத் திரும்பிடுவ” என்று நிரூபன் அவனை முறைத்தபடி பேச ,சேகரனுக்கு கோபம் தலைக்கேறியது.
” யார்ரா நீ?, என் வீட்ல வந்து அதிகாரம் பண்ணிட்டு இருக்க?, அன்னைக்கு அடிச்சது நீதானே?! “என்றவன் நிரூபனிடம் பாய, அவனை கழுத்தோடு சேர்த்து பிடித்து தூக்கி இருந்தான்.
“நிரூபா விடுங்க” என்று பூரணி சத்தமிடவும், மேலே ஏறிய கை அப்படியே கீழே இறங்கியது நிரூபனுக்கு .
சேகரன் அதற்கும் அவளை தவறாக பேச, கலியபெருமாள் எழுந்தவர்,” உனக்கு சேர வேண்டிய பங்கு மொத்தமும் வந்து சேரும். இப்ப இந்த வீட்டை விட்டு நீ வெளியில போ” என்று சொல்ல,
” நான் ஏன் போகணும்?” என திமிராக நின்றான்.
” ஏன் போகணுமா?, எங்க சித்தியை நீ அவதூறா பேசுவ, உன்னை வீட்ல வச்சு விருந்தாடுவாங்களா?” என்று மோகன் கோபத்துடன் எகிற
சேகரனும்,” உன் சித்தி அப்படியே பெரிய பத்தினி, உத்தமி, அவளுக்கு வக்காலத்து வாங்கிட்டு வந்தியா…போடா. வீட்ல என்ன நடக்குதுன்னு தெரியாம பேசாத” என்றான் அதற்கும்
‘இவனை இப்படியே விட்டால் அதிகமாக பேசுவான்’ என்று இனியன் பெண்களை உள்ளே செல்லும்படி பணித்தான்.
“நீங்க மூணு பேரும் உள்ள போங்க, நாங்க பேசிக்கிறோம். “என்று சொல்ல, மறுப்பாய் பூரணி முன் வந்து நின்றாள்.
முதல் நாளே இனியன் மோகன் இருவருக்கும் சேகரனை கொன்றுவிடும் கோபம். செவ்வந்தியும் பவளமும் தடுக்கவில்லை என்றால் நேற்றே சேகரனின் கதி அதோகதியாகி இருக்கும். ‘பூரணியை தவறாக பேசிவிட்டான்’ என்றதுமே இனியனுக்கு அழைத்துவிட்டான் மோகன். பவளம் அந்நேரம் விழித்திருக்கவே இனியனோடு சேர்ந்து வந்து விட்டார்.
“அத்தை போங்கன்னு சொன்னேன்.” என இனியன் அமர்த்தலாக கூறியவன், சேகரனை முறைக்க
கலியபெருமாள் எழுந்தவர் ,”செவந்தி நா போய் படுக்கிறேன், என்னமோ படபடப்பா வருது” என்று சோர்வாய் நகர்ந்தார்.
“இதுக்கு ஒரு முடிவு கட்டாம எங்கப் போற நீ ?”என்று சேகரன் சத்தமிட
“அய்யா சாமி உன் கூட பொறந்ததுக்கு நல்ல நல்ல பட்டம் எல்லாம் கட்டிட்ட, இதுக்கு மேலயும் உம்பேச்சைக் கேட்க எனக்கு தெம்பு இல்லப்பா. பேசாட்டுக்கு ஊருக்கு போ.” என்று கையெடுத்துக் கும்பிட்டவர்,
” என் தம்பி சிவத்து எடத்துல அந்தப் பொருவை நா வச்சிருக்கேன். ஒனக்கு எல்லாம் எங்க ஒறவை வெளக்கணும் னு அவசியம் இல்லடா. எம்மூட்டு புள்ளை அது. கீழா பேசிட்டில்லடா நல்லா இருடா நல்லா இரு. சென்மத்துக்கும் எம்மூஞ்சியில முழிக்காத நீயி. செத்தா ஒடம்பெறந்தவன்னு வந்து நின்றாதடா.. ஏ ஆவி கூட அடங்காது. எங்கட்டை வேவாது. எய்யா மோகனு!, எனக்கு இனிமேட்டுக்கு ஒரு பெறந்தவ மட்டுந்தான். அதைத் தவிர வேறெந்த சனமும் எந்தலைமாட்டுல வந்து நின்னு அழுவக் கூடாது.” என்று உடைந்து போய் பேசி விட்டு நகர
சேகரனோ தான் பேசியது தெரியாமல்,” இப்ப என்னத்துக்கு இவளுக்காக ஒறவை அத்துவிடுற நீயி. எவனையோ கூட்டிட்டு வந்து வூட்டுல கூத்தடிக்கிறா, அதைக் கேட்க துப்புல்ல. என்னவோ சாவுக்கு வராதன்னு என்னைய திட்டுற…” என்று எகிற
“யோவ்! ஒத்த வார்த்த பேசுன நீயி., பொணமாத் தான் வெளிய போவ, வாயை மூடிக்க” என்று மோகன் பாய
“என்னடா அவ வீட்டுக்குள்ள கள்ளபுருஷன் கூட கொஞ்சுறா, நீ எம்மேல பாயிற , அவர் என்னவோ ஒறவை அத்து விடுறாரு.” என்றவன்,” இதுக்குத்தான் அப்பவே சொன்னேன். இவளை நானே ரெண்டாந்தாரமா கட்டிக்கிறேன்னு…” என்றிட எட்டி மிதித்திருந்தான் நிரூபன்.
“நானும் பொறுமையா போகலாம்னு பார்த்தா பேசிட்டே போற… உன் மகளா இருந்தா இப்படித்தான் பேசுவியாடா நீ.” என்றவன் பூரணியைப் பார்த்து,” இங்க வா !”என்றழைத்தான்.
அவளை ஆழ்ந்து பார்த்தவன்,” அப்போ…நான் ப்ப்ச் எல்லாம் புரியுது உனக்கு, அப்படித் தானே!?” என்று வினவிட , மற்றவர்கள் குழப்பமாக பார்த்தனர் இருவரையும்.
“நிரூபன் ப்ளீஸ் கிளம்புங்க. எதுவும் வேண்டாம். “என்றாள் வேகமாக.
“அத்தை அவங்க ஏன் கிளம்பணும்?” என்றபடி கமலி, கவினோடு வந்து நின்றாள் மதுரா.
கவின் கமலியை பார்க்க விடியற்காலையில் வந்திருந்தான் சென்னையில் இருந்து. வீட்டில் இனியன் பவளம் இருவரும் இல்லாமல் இருக்கவே, இங்கு தான் வந்திருக்க வேண்டும் என்று தேடிக் கொண்டு வந்து விட்டனர். மார்த்தாண்டம் இன்னும் எழவில்லை.
“பூர்ணி என்ன புள்ள, எதுக்கு அந்த தம்பியை போகச் சொல்ற நீ.?” என செவ்வந்தி புரியாமல் தவிக்க
“அக்கா நான் சொல்றேனே…” என்றவள், பரிதவிப்புடன்,” போயிடுங்க” என்றாள் இறைஞ்சுதலாக.
“அவர் போக மாட்டார் சித்தி.” என்று கவின் வந்து நின்றான் நிரூபனோடு.
“என்னய்யா நடக்குது இங்க?” என கலியபெருமாள் பூரணியைப் பார்க்க
“மாமா நம்ம வீட்டாளுங்களால சம்மந்தமில்லாத அவர் காயப்படுறார். நமக்கு உதவி செஞ்ச பாவத்துக்கு அவருக்கு இந்தப் பேரெல்லாம் வேண்டாம் அதான் போகச் சொல்றேன். “என்றாள் படபடப்பாக.
“நல்லா நடிக்கிறாய்யா… இப்படி நடிச்சு நடிச்சுத்தான் அந்தாளை கைக்குள்ள போட்டிருக்க, இப்ப வெளிய ஒருத்தனா?” அடிவாங்கியும் வாய் அடங்கவில்லை சேகரனுக்கு.
எதையும் யோசித்திடவில்லை நிரூபன். கூடத்தில் மாட்டியிருந்த சிவலிங்கத்தின் புகைப்படத்தைப் பார்த்தான். பரபரவென்று பூரணியின் கைப்பிடித்து அழைத்துச் சென்றவன், சிவத்தின் புகைப்படத்தில் மாட்டியிருந்த பூவை எடுத்து அவள் தலையில் வைத்து விட்டான். அவர் நெற்றியில் ஒட்டப்பட்டிருந்த ஒரு ரூபாய் அளவிருந்த சந்தனகுங்குமத்தையே பெயர்த்து அவள் நெற்றியில் பூசிவிட்டான் நொடிப் பொழுதினில்.
அனைவரும் அதிர்ந்து திகைத்துப் போய் பார்க்க, பூரணிக்கு மயக்கமே வந்து விட்டது.
அவளைத் தாங்கிப் பிடித்தவன்,” நேரா வகிட்டில் வச்சிருப்பேன். ஆனா இவன் சொன்னது உண்மையாகிடுமே…? முறைப்படி பொண்ணு கேட்டு வரேன். பூரணி இனி என் மனைவி “அழுத்தமாக உரைத்தவன், அவளை அமரவைத்து விட்டு நிற்க, சிலையாய் சமைந்திருந்தவர்கள் எல்லாம் உயிர்பெற்றது போல அதிர்வைக் காட்டினர்.