சற்று முன் இருந்த சூழல் இலகுவானதைப் போல ஒரு தோற்றம்.
மனம் முழுவதும் ஏதோ அழுத்துவது போன்றதொரு உணர்வு. மனதில் இருப்பதை எல்லாம் யாரிடமாவது கொட்டி விட வேண்டும் என்று நினைத்தாள் பூரணி.
“நீங்க சொல்லுங்கத்தை.”என்றாள் மது.
“என்ன சொல்ல… காதலிச்சேன், நடராஜனை ரொம்ப பிடிச்சது . மதி மாமா நான் ஃபோன் பேசுற விஷயம் கேள்விப்பட்டு மாப்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டார். பயத்தில் என்ன செய்றதுனு தெரியாம , கடைசி பரிட்சை முடிஞ்சதும் வீட்டை விட்டு ஓடிப் போயிட்டேன். எனக்குத் தெரியும் என் வீட்டில் காதலிச்சா ஒத்துக்க மாட்டாங்க. பிரச்சினை பண்ணுவாங்கன்னு, ஆனா என் அப்பா என் மேல உயிரா இருந்தார். நான் கொஞ்சம் பிடிவாதம் பிடிச்சா கூட ஒத்துப்பார்ன்ற தைரியத்தில் நடராஜன் கூட வீட்டை விட்டு ஓடிப் போயிட்டேன். எனக்கு எந்த பயமோ, கமிட்மெண்ட்டோ இருக்கல. மூத்த அக்கா இறந்து போயிட்டா, ரெண்டாவது சரண்யா அக்கா கல்யாணம் ஆகி செட்டில் ஆகிட்டா, அவளுக்கு குழந்தைகளும் இருக்காங்க, அதை விட மதி மாமா அவ மேல உயிரா இருந்தாங்க. அதனால அவளை விட மாட்டாங்கனு நம்பிக்கை இருந்தது. அதனால பெருசா எதிர்ப்பு வராதுனு நம்பி போயிட்டேன். ஆனா அடிதடி அளவிற்கு ஆகும்னு நான் நினைச்சுக் கூட பார்க்கலை. “
“என்னது அடிதடியா?!” ஆச்சரியத்துடன் இனியன் கேட்க
“ம்ம்ம் அடிதடினா எப்படி சொல்ல?, ஜாதி பார்த்தாங்க
ரொம்ப வித்தியாசம் எல்லாம் இல்லை ஒரே ஜாதியில் உட்பிரிவு வேற வேற அவ்வளவு தான் அதுக்கே அவ்வளவு சண்டை. நடராஜன் வீட்ல அவங்கப்பா ஆட்களை கூட்டிட்டு வந்து என்னை அடிச்சு, அவரையும் அடிச்சு இழுத்துட்டு போயிட்டாங்க. மதிமாமா என்னை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டார் . “
“என்னை என் அப்பா முதன் முதல்ல அடிச்சாரு. நான் என்ன சொல்ல வர்றேன்னு கேட்காம அடிச்சாரு. எந்த நேரத்தில் சாப்பாடு கேட்டாலும் போடுற எங்கம்மா, எனக்கு சாப்பாடே தராம பட்டினி போட்டாங்க. அக்கா திட்டுனா. அழுதா, கதறினா. கல்லு மாதிரி தாங்கிக்கிட்டேன், அத்தனையும் அவ்வளவு உறுதியும், நம்பிக்கையும் இருந்தது என் காதல் மேல… நடராஜனையும் அவங்க வீட்டில் ரொம்ப அடிச்சதாக கேள்விபட்டேன். கிட்டத்தட்ட ஒரு மாசமா என் போராட்டம் தொடர்ந்துகிட்டே இருந்தது. நடராஜன் திரும்ப வருவார்னு நம்பினேன். சரியா சாப்பிடாம , தூங்காமனு ரொம்ப ஓய்ஞ்சு போயி இருந்தேன். இப்படியே விட்டா செத்துடுவானு பேசினாங்க . ஒரு சிலர் அவ ஆசைப்படுற வாழ்க்கையை தந்திடுங்களேன்னு கூட சொன்னாங்க, அப்ப மதி மாமா உண்மையை போட்டு உடைச்சார். “
“என்ன உண்மை சித்தி…?”
“ம்ம்ம் நடராஜனுக்கு கல்யாணம் ஆன உண்மையை…” என்றதும் அங்கிருந்த அனைவருக்கும் சிறு அதிர்வு.
“கட்டாயக் கல்யாணம் னு சொன்னாங்க அவர் ஃப்ரெண்ட்ஸும், என் ஃப்ரெண்ட்ஸும்… உள்ளூர அத்தனை வலி. என் காதலை இழந்துட்டேன்னு அத்தனை துடிச்சேன். அப்புறம் அவர் எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும் சந்தோஷமா அந்தப் பொண்ணை ஏத்து வாழணும்னு எனக்கு நானே சொல்லி தேத்திட்டேன். அப்புறம் அப்படியே உள்ளூர இறுகி, அமைதி ஆகினு ஆளே மாறிட்டேன். பழைய துடுக்குத்தனம் எல்லாம் காணாமலேயே போயிடுச்சு. பூரணி… தேய்பிறை நிலவா மாறிட்டா… “என்று சிலநிமிடம் இடைவெளி விட்டாள்.
பின் அவளேத் தொடர்ந்து, “காலேஜ்ல பட்டமளிப்பு விழா ஏற்பாடு பண்ணி இருக்காங்கனு சொல்லவும், என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் வந்து அப்பா கிட்ட கேட்டு கெஞ்சி பர்மிஸன் வாங்கி அழைச்சுட்டுப் போனாங்க. வெளியே வரவும் கொஞ்சம் நிம்மதியா உணர்ந்தேன். ஆறு ஏழு மாசம் ஆகிடுச்சே வெளிக்காத்தை சுவாசித்து அப்படி ஒரு சந்தோஷம். ஆனா என் சந்தோஷம் கடவுளுக்குப் பிடிக்கலைனு நினைக்கிறேன். எதிர்ல வந்தாரு நடராஜன் , அவரைப் பார்த்ததும்
எனக்கு என்ன உணர்வில் நான் இருந்தேன்னே சொல்லத் தெரியல. பாத்துட்டே நின்னேன். மனுசன் தலையை குனிஞ்சுட்டே போயிட்டாரு, எனக்கு கஷ்டமா போயிடுச்சு. என்னை விட்டுட்டோம்னு குற்ற உணர்ச்சியில் இருப்பாரு. அதெல்லாம் வேண்டாம். உங்களை நம்பி வந்த பொண்ணு கூட சந்தோஷமா வாழுங்க என்னை நினைச்சு உங்க வாழ்க்கையை கெடுத்துக்காதீங்கனு சொல்ல நினைச்சேன். அப்படி இப்டினு ஃபங்ஷன் முடிஞ்சு ரெண்டு பேரும் தனியா பேச சந்தர்ப்பம் கிடைச்சது. “
“பேசுனிங்களா?” ஆர்வம் தாளாமல் மதுரா கேட்க கவின் அவளை பார்த்தான்.
“பேச ஆரம்பிக்கும் போதே அவரோட வொய்ஃப் வனஜா வந்துட்டாங்க” என்றாள் பூரணி.
“அப்புறம் என்ன ஆச்சு அத்தை ?”என்று மதுரா கேட்டுவிட பூரணியிடம் மெல்லிய புன்னகை.
“ஓஓஓ ! அவர் லைஃபை ஏத்து வாழ ஆரம்பிச்சுட்டாரு அதான் எதுவும் பேசாம வந்துட்டிங்களா?” என்று கேட்டதும்
“அதுவும் ஒரு காரணம். எங்க காதலை உடனே மறந்து வாழ ஆரம்பிச்சிட்டதும் ஒரு காரணம்” என்றாள் விரக்தியாக.
“புரியல சித்தி.” என கவின் சொல்ல.
“வனஜாவுக்கு அப்போ ஏழாம் மாசம் ஸ்டார்ட் ஆகி இருந்தது. வளைகாப்புக்கு மறக்காம வந்திடுங்கனு சொன்னாங்க” என்றாள் .
அங்கிருந்த நால்வருக்கும் புரிந்தது நடராஜன் திருமணம் ஆனதுமே அதை ஏற்றுக் கொண்டு விட்டார் என்று.
“அவர் அந்தப் பொண்ணை ஏத்துக்கிட்டு வாழ்ந்ததை என்னால ஏத்துக்கவே முடியல மது. எப்படி என்னை காதலிச்சு கல்யாண ஏற்பாடு எல்லாம் செஞ்சு, அது நடக்கலைன்னதும் உடனே ஒரு கட்டாயக் கல்யாணம். அந்தக் கட்டாயக் கல்யாணத்தை ஏத்துக்க தான் வேணும். ஆனா ஒரே நாள்லயேவா ஏத்துக்க முடிஞ்சுது. அவ்வளவு வீக்கானதா என் மேல அவர் வச்ச லவ் னு தோணுச்சு. நானே அவர் அந்தப் பொண்ணு கூட நல்லா வாழட்டும் னு தான் நினைச்சேன். ஆனால் இந்த அதிரடி மாற்றம். ம்ஹூம் என்னால ஜீரணிக்கவே முடியல. உனக்காகவா என் குடும்பத்தை தூக்கி எறிஞ்சுட்டு வந்தேன் னு எம்மேலேயே எனக்கு வெறுப்பு ,விரக்தி, ஆனா தற்கொலை செஞ்சுக்க….” எனும் போதே அலறி விட்டனர் நால்வரும்.
‘சித்தி அத்தை ..!’என்று சத்தம் கேட்க, அவர்களைப் பார்த்து அமைதியாக புன்னகைத்தவள்,” தற்கொலை செய்யறது கோழைத்தனம்னு சொல்லுவாங்க. ஆனா அதை செய்துக்க கூட தனி தைரியம் வேணும் அந்த தைரியம் எனக்கில்லை. கடவுள் தந்த உயிர் அவருக்கு எப்போத் தோணுதோ அப்போ எடுத்துக்கட்டும்னு என்னைப் பெத்தவங்களுக்காக வாழ ஆரம்பிச்சேன். அவங்களை கடைசி காலத்தை நல்லபடியா வாழ விடணும்னு யோசிச்சேன். காதல் தோல்வியை மூட்டைக் கட்டி பரண் மேல கடாசியாச்சு. இனி நம்ம அப்பா ,அம்மா இது தான் நம்ம உலகம்னு மனசை தேத்திட்டேன். வாழ்ந்தேன். நிம்மதியாவே இருந்தது. நிம்மதியாகவே இருந்துட்டா கடவுளைத் தேட மாட்டோமே அதான் வேற வகையில் பிரச்னை வந்தது.” என்றதும் நால்வருக்கும் ஆழ்ந்து பார்த்தனர்.
“நடராஜன் வீட்டில் ஏதோ பிரச்சினை. ஆனா அது என்னை வச்சு வந்ததா வதந்தி கிளம்பிடுச்சு. வனஜா வந்தாங்க. ஏதோ நடராஜனை நான் பிடிச்சு வச்சுட்டு இருக்கறதைப் போல, என் காலடியில் பச்சைப் பிள்ளையை போட்டு அவரை விட்டுடுனு கதறினாங்க. நான் எவ்வளவோ மறுத்தேன் நான் அவரைப் பார்க்கவே இல்ல, பேசவே இல்லைனு சாதிச்சேன். உண்மையும் அது தான். என் அப்பா அம்மா மேல ஏன் நான் உயிரா நினைச்ச கமலி கவின் மேல கூட சத்தியம் பண்ணினேன். நம்பவே இல்லை. நீ நாசமா போவடினு சாபம் விட்டுட்டுப் போனாங்க. அப்புறம் மதிமாமா வந்தார். அவ்வளவு தான் தெரியும் , அடுத்த ஒரு வாரத்தில் என்ன நடந்துச்சோ ஒருத்தரைப் பிடிச்சு கட்டி வச்சுட்டாங்க. இன்னும் கொஞ்ச நாள் விட்டிருந்தா கல்யாணம் பண்ணிக்கிற பக்குவத்திற்கு நானே வந்திருப்பேன். ஆனா புதுசா இறகு முளைச்ச பறவையை பயிற்சி கொடுத்து பறக்க வைக்கிறேன்னு சிறகை ஒடிச்ச மாதிரி கல்யாணத்தை பண்ணி வச்சாங்க. அவர் பேர் கூட தெரியலை எனக்கு. ரொம்ப நல்ல மனுசன். கடவுளை நேர்ல பார்த்திருக்கியானு யாராச்சும் கேட்டிருந்தா யோசிக்காம கை காட்டி இருப்பேன் அவரை. அத்தனை நல்ல குணம். என் காதல் தெரிஞ்சிருந்தது அவருக்கு. எனக்காக டைம் கொடுத்தார். வாங்கின அடிக்கும் திட்டுக்கும் அருமருந்தா அவர் இருந்தார். இறகில் வருடி விட்டதைப் போல ஒரு வாழ்வு. ஹப்பா என்ன சொல்ல அவர் மேல பக்தியே வந்திடுச்சு எனக்கு, ஐயா எல்லாம் மனுச உருவில் வாழ்ந்த தெய்வம். அவர் மேல காதல் வர தான் நேரம் பிடித்தது. மத்தபடி அவர் மேல பாசம் உண்டு, பக்தி உண்டு, அந்த மனுசனை நல்லாப் பார்த்துக்கணும்ங்கிற ஆர்வம் இருந்தது. பார்த்துக்கிட்டேன். என் இருளில் இருந்து வெளியே வந்தேன். இனியன் அம்மா நிறைய அட்வைஸ் பண்ணாங்க. உடலளவில் இணைஞ்சா தான் உங்களுக்குள்ள நெருக்கம் வரும். சந்தோஷமா இருங்கன்னு சொல்லி என்னை மாத்த முயற்சி செஞ்சுட்டே இருந்தாங்க. அவர் மேல அத்தனை பாசம் அவங்களுக்கு. நானும் மாற முயற்சி எடுத்தேன் மது. நான் மாறிய நேரம் அவர் என்னை விட்டுட்டுப் போயிட்டார். யாருமே பார்க்க முடியாத தூரத்திற்கு. நெற்றி நிறைய குங்குமமும் , தலைநிறைய பூவுமா காத்திருந்தேன். மொத்தமா நான் அதை என் கூடவே எடுத்துட்டுப் போறேன்டி சொல்லாம சொல்லி வெள்ளை மூட்டையா வந்து கிடந்தார். “என்று விசும்பி அழுதாள்.
“சித்தி!” என்று மோகன் ஆறுதலாய் கைகளை இறுகப் பற்றிக் கொண்டான். சிறு வயதானாலும் சிவத்தின் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது எனத் தெரிந்தவனாயிற்றே. இனியனும் மதுவும் அழுதிருந்தனர் அவர் நினைவில்.
பூரணி தன்னை நிதானப்படுத்திக் கொண்டு, “அதுக்கப்புறம் எதுவும் பிடிக்கலை. எங்கேயும் போறதில்லை , வர்றதில்லை. கவினும் கமலியும் நினைவில் வருவாங்க. அந்த ஏக்கத்தை மோகன், இனியனும் மதுவும் தீர்த்தாங்க. இப்படியே என் வாழ்க்கை போகுது . இத்தனை வருஷத்தில் நடராஜன் நினைவு வரவே இல்லை மது. அந்தப் பெயரை பார்த்ததும் தான் எனக்கு அதிர்ச்சி தான் வந்தது, வேறெதுவும் பெருசா தோணல. ஆனா அவங்க…” என முகத்தை சுளித்தாள் அருவறுப்பாக.
“விடுங்க சித்தி” என கவின் சமாதானம் கூறியவன்,” ஏன் சித்தி எங்களைப் பார்க்கக் கூட தோணலையா உங்களுக்கு.? எங்களை தான் அப்பா ஹாஸ்டல் ல விட்டுட்டாங்க. ஆனா அம்மா இருந்தாங்களே ஏன் நீங்க அவங்களைப் பார்க்கல ?,அவங்களும் உங்களை பார்க்கலைன்ற வருத்தம் எனக்கிருக்கு சித்தி.” என்றான் அமைதியாக.
“உங்கப்பாக்கு என்னை சுத்தமா பிடிக்காது கவி. அதுவும் நான் ஓடிப் போனதில் மதிமாமா வீட்டில் எங்க உறவையே வெட்டிவிடச் சொல்லி அவ்வளவு பிரச்னை பண்ணிட்டாங்க. அப்புறம் கல்யாணம் முடிச்சதும் என் அப்பா அம்மாவே எங்களை பார்க்க வர்றேனு ஊர்ப்பக்கம் வந்து திரியாதேனு சொல்லிட்டாங்க. அய்யாவுக்கு அதில் கோபம் வேற… அதனால என்னை ஊருக்கு கூட்டிப் போவாங்க அப்புறம் கையோட அழைச்சுட்டு வந்திடுவாங்க. எனக்கும் அம்மா வீட்டுக்குப் போறதை விட, அய்யா கூட இருக்க தான் பிடிச்சது. அப்புறம் அவர் இறந்த பிறகு நான் அங்கே வரப் போக இருந்து அதனால அக்காவை மாமா ஏதாவது சொல்லிடுவாரோனு தான் பார்க்கவே இல்லை. நாம தான் குடும்பம், குழந்தை னு வாழலை. அக்காவாவது சந்தோஷமா இருக்கட்டுமேன்னு தான் பார்த்துக்கலை.” என்றாள் பூரணி.
கவினும், கமலியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பத்திரிக்கை வைத்ததற்கே தன் தந்தை தாம்தூமென்று குதித்ததும், திருமணம் நின்றதும் அதற்கு பூரணியை காரணம் காட்டியதும் நினைவில் வந்து நின்றது.
“இவ்வளவு யோசிக்கிறவளுக்கு அந்த சிந்தனை வராம இருந்திருக்குமா என்ன…?இந்த சேகரன் தொல்லை பண்றதில் இருந்து தப்பிக்க ஒரு வாய்ப்பா கூட செகண்ட் மேரேஜ் பண்ணிடலாம்னு யோசிச்சேன்.”என்றாள்.
“அப்புறம் ஏன் அத்தை அம்மா , மாமா யார் கிட்டயாவது சொல்லி இருக்கலாமே?” என்று மதுராவும் ஆற்றாமையுடன் கேட்க
பூரணி சிரித்தாள்.
“என்னன்னு மது. எனக்கு ரெண்டாம் கல்யாணம் பண்ணி வைங்கன்னா…? ஒரு பொண்ணா நான் போய் இதை கேட்க முடியுமா…? எல்லார் மனசிலும் என்ன தோணும் தெரியுமா…? புருஷன் செத்து கொஞ்ச வருஷம் தான் ஆகுது அதுக்குள்ள அடுத்த புருஷன் தேடுறான்னு பேசுவாங்க. மனுசநாக்கு எப்படியும் புரளும். எனக்கே அது அசிங்கமா தோணுச்சு. அய்யாவை ரொம்ப மதிச்சேன் நான். ஈவன் அவரே டெத்பெட்ல என்னை இன்னொரு கல்யாணம் பண்ணிக்க சொல்லிட்டு தான் இறந்தார். “
“அப்புறம் என்ன சித்தி. கேட்டிருக்கலாமே… அட்லீஸ்ட் இவங்களாச்சும் இதைப் பத்தி யோசிச்சிருக்கலாமே…?நீங்க கேட்டிருக்கணும் சித்தி” என கவின் சற்று கோபத்துடன் சொல்ல
“என்னன்னு கவி. யார் கிட்ட கேட்பேன். என் வாழ்க்கையை பத்தி யோசிக்கிற இடத்தில் இருந்த அம்மா அப்பா உயிரோடு இல்லை. இருந்தாலும் யோசிப்பாங்களா தெரியாது. அக்கா இருக்கா ஆனா அவ கூட தொடர்பும் இல்லை. அதைப் பத்தி நினைக்க அவளுக்கு தோணுச்சானு கூட தெரியாது. என்னை எதிரியா நினைக்கிற மதி மாமா கிட்டயா இதைப்பத்தி பேசச் சொல்ற.? நான்தான் ஒதுங்கி நின்னேன்.ஆனா அக்கா அவளை நான் ஒதுக்கலையே, ஒரு நாள் வந்து பார்த்து நல்லா இருக்கியான்னு கேட்டிருந்தா என் மனசை சொல்லி இருப்பேனோ என்னவோ.?”
“கேட்கிற உங்களுக்கு கூட தோணலாம் அப்போ நீ காதலிச்சது என்ன விஷயம் னு. கண்டிப்பா காதலிச்சேன். ஆனா அதையே நினைச்சு மறுகிட்டு வாழற காவியக்காதலி இல்லை நான். எதார்த்தம் என்னவோ அதை ஏத்துக்கிட்டு வாழற சாதாரண மனுசி அவ்வளவு தான்.”
“அய்யா என் வாழ்க்கையில் வந்த பிறகு எல்லாம் மாறுச்சு. நல்லா இருந்தேன் ஆனா அவர் இறந்த பின்ன., ஒதுங்கிப் போறதுன்னா என்ன, ஒதுக்கறதுனா என்ன னு தெரிஞ்சது. அம்மா மாதிரி பார்த்துக்கிட்டவங்க மாமியாரா மாறினாங்க. மகன் போன துக்கத்தை எல்லாம் என் மேல கொடுமையா இறக்கினாங்க. அதையும் தாங்கிக்கிட்டேன். அப்போதெல்லாம் எனக்கு ஆறுதல் பவளம் அண்ணி, செவந்தியக்கா தான் . உங்க அம்மாச்சி இறந்தபிறகு தான் நான் கொஞ்சம் நிம்மதியா இருந்தேன். உங்கப்பாவுக்கு நான் அய்யாவோட மனைவின்ற மரியாதை. அதிகம் பேச மாட்டார் ஆனா வெளியே ஒருத்தர் ஒண்ணு சொல்லும்படி வச்சுக்க மாட்டார். பிறகு உங்க மூணு பேரையும் பார்த்துக்க வளர்க்கன்னு அப்படியே வாழ்க்கை போயிடுச்சு மது. இப்பவும் அதே மாதிரி போகட்டுமே. எனக்கு இதுவெல்லாம் வேண்டாம். நான் இதிலேயே நிம்மதியா இருக்கேன். இதுநாள் வரையில் சேகரனோட குணம் வீட்டில் யாருக்கும் தெரியாம இருந்தது அதனால அவனால் எனக்குத் தொந்தரவு. இப்போ இனி அது கூட இல்லை. நான் இப்படியே இருக்கேனே !”என்றாள் சற்று சங்கடமாக.
நிரூபன் அத்தனையையும் கேட்டு விட்டு இணைப்பைத் துண்டித்திருந்தான்.