கலியபெருமாள்., மோகன் பேசத் துவங்கும் முன்பே, “பூரணி விஷயமான்னா நான் எதுவும் பேச விரும்பலை தம்பி.”என்று கூறி விட்டார் பட்டென்று.
“ஓஓஓ!, நாங்க இந்த விஷயமா தான் பேச வந்திருக்கோம்னு உங்களுக்குப் புரியுது அப்படித்தானே ?!”என்ற மோகன்
“நீங்க விரும்பலைன்னாலும் பேச வேண்டிய கட்டாயத்தில் நாங்க இருக்கோம் ப்பா.” என்றவன்
“ஒரு காரணம் சொல்லுங்க, ஏன் சித்திக்கு ரெண்டாங்கல்யாணம் பண்ணி வைக்க உங்களுக்கு விருப்பம் இல்லை?” என கேட்க
“பூரணி சிவத்தோட பொண்டாட்டி, அப்படி இருக்கும்போது..” எனும் போதே இடைவெட்டியவன்
“அது அவர் உயிரோடு இருந்தப்ப, இப்போ அவங்க ஒரு தனிமனுசி.” என்றான் அழுத்தமாக
“தனிமனுசின்னாலும் அது சிவத்தோட பொண்டாட்டியா தான் இந்த வீட்டுல வாழ்ந்துச்சு. இப்போ திடீர்னு வேற வீட்டுக்கு அனுப்புன்னா…?”
“இதுவே உங்களுக்கு ஒரு மக இருந்து இந்த நிலையில் வருஷக்கணக்கா இருந்தாலும் இப்படித்தான் சொல்வீங்களா மாமா?” என்று இனியன் சட்டென கேட்டுவிட
“ஆமாய்யா. அவங்க மாமியார் வீட்டுல பாத்துக்கிறாங்கன்ற பட்சத்தில் விடத்தான் வேணும்.”என்றார் கலியபெருமாள்.
“இதுவே கொடுமைப்படுத்தி இருந்தா, அம்மாச்சி அத்தையை படுத்தி வச்சாங்களே அந்த மாதிரி. அதைப் பார்த்துட்டு வயசானவங்க சகிச்சுட்டுப் போன்னு நீங்க சொன்னிங்களாம், அந்த மாதிரி இருந்தாலும் மாமியார் வீட்டிலேயே விட்டு இருப்பீங்களோ?” என இனியன் சுருக்கென்று கேட்டுவிட
“அது அது.. அவங்க துக்கத்தை வெளிக்காட்ட முடியாம…” என்று தடுமாற
“எது மாமா துக்கத்தை வெளிக்காட்டுறது?, ஏன் சித்திக்கு இல்லையா துக்கம்?, பிறந்த வீட்டை விட்டு யாருமே இல்லாம வீட்டுக்காரர் தான் கதினு நம்பி வந்ததுக்கு., அவர் விட்டுப் போயாச்சு. வேற வழியில்லாம அவங்க இங்க இருந்ததுக்கு என்னென்ன நடக்கணுமோ அத்தனையும் நடந்தாச்சு. ஒரு வேளை உங்க தம்பி இறந்ததுக்கு நீங்களும் அந்த துக்கத்தை சித்தி கஷ்டப்படுறதைப் பார்த்து ரசிச்சு ஆத்திக்கிட்டிங்களோ?” என்றதும்
செவ்வந்தி,” இனியா !”என்று சத்தமிட்டார்.
“இருங்கத்தை. நான் சொல்றதில் தப்பு எதுவும் இல்லை. நீங்க பாதுகாக்கிறோம்ன்ற பேர்ல அவங்களை வீட்டுக்குள்ள ஜெயில் கட்டி அடைச்சு வச்சிருக்கீங்க, அதுதான் உண்மை.” என்றான் கோபம் குறையாமல்.
“நாங்க தங்கமா தாங்கி இருக்கோம்யா அது பூரணிக்குத் தெரியும்.” என்று செவ்வந்தி சொல்ல
“வீட்டு வேலைக்காரியா வேணும்னா வச்சேன்னு சொல்லுங்கம்மா!” என்று மோகன் சொல்லிவிட
“என்ன மோகனு நீயே இப்படி பேசுற.? என்னைக்காவது நாங்க அப்படி நடத்தி இருக்கோமா சொல்லு” என்று ஆற்றாமையாக கேட்க
“இல்லைதான்மா. ஆனா நல்லாவும் நடத்தலை. புரியுதா உங்களுக்கு. இத்தனை வருஷத்தில் கல்யாணம் , காதுகுத்துனு எத்தனைக்குப் போயிருப்பீங்க. அவங்களை அழைச்சுட்டுப் போனீங்களா…? இல்லையே!, அம்மா வீட்டுக்கு, சொந்தக்காரங்க வீட்டுக்குனு எத்தனை இடத்துக்கு என்னை, இவனை, மதுவை விட்டுட்டு போயிருப்பீங்க. அவங்க தானே பார்த்துக்கிட்டாங்க. சோறு ஊட்ட, எங்களை ஸ்கூலுக்கு கிளப்ப காலையில் வீட்டுவேலை, காட்டுவேலைனு அத்தனையும் பார்க்க அதுதானே செஞ்சாங்க. நீங்க போடுற மூணுவேளை சோறுக்கும், துணிமணிக்குமா அவங்க ஏங்கி நின்னாங்க. அது தந்துட்டா போதும் அந்த மனுசிக்கு வேற என்ன தேவை இருக்கப் போகுதுனு நீங்களா முடிவு பண்ணி வச்சுட்டீங்க.” என்றான் அடுக்கடுக்காக .
“வேற என்னடா தேவை இருக்கப் போகுது.?, தனியா இருக்க பிள்ளைக்கு இருக்க எடம், உங்க சோறு ,பாதுகாப்பு இதைத்தவிர வேற என்ன தேவை இருக்கப் போகுது?” என்று செவ்வந்தி கேட்டுவிட
“இந்த மூணையும் ஏதோ ஒரு ஆசிரமம் கூட தந்துடும். அதுக்கு வீட்ல இருக்க வேண்டிய அவசியம் இல்லை.” என்றான்.
“அவங்களை விட்டுடுங்கத்தை. இனியாவது உங்களை மாதிரி சுமங்கலியா வாழட்டும். ப்ளீஸ். நீங்க நல்லா பார்த்துக்கிட்டீங்க நான் நம்புறேன். அதோடு இந்த வாழ்க்கையையும் அமைச்சு தந்திடுங்களேன். அவங்க அப்பா அம்மா இருந்திருந்தா இந்நேரம் இப்படி விட்டு இருப்பாங்களா சொல்லுங்க.? மக வாழ்க்கைக்குனு ஏதாவது செஞ்சிருப்பாங்க தானே…? நீங்க ஏன் செய்யலை. இப்போ செய்ய நினைக்கிறவங்களையும் ஏன் தடுக்குறீங்க…?” என்று மதுரா கேட்க
“நம்ம சனத்துல ரெண்டாங்கல்யாணம் எல்லாம் பழக்கம் இல்ல. உங்க தாத்தாவும் சின்ன வயசுல தான் போனாரு. அதுக்காக உங்கம்மாச்சி வேற கல்யாணமா பண்ணிக்கிச்சு.? நாலு பிள்ளையையும் வளர்த்து கரை சேர்க்கலை”
“அப்போ பூரணி சித்திக்கு எத்தனை பிள்ளை இருக்குங்க கரை சேர்க்க…? பதில் சொல்லுங்க, ஒத்தை மனுசியாவே கடைசிவரை உங்களுக்கு சேவகம் செஞ்சு காலத்தை ஓட்டனுமா அவங்க. இத்தனை வருஷமா விபரம் தெரிஞ்சு நாங்க அதை யோசிக்காம விட்டதே தப்புனு தோணுது எங்களுக்கு. யாரோ ஒருத்தன் சுருக்குன்னு செருப்பால அடிச்ச மாதிரி சொன்னபிறகு தான் யோசனையே வருது. எங்களுக்கே அப்படினா உங்களை மாத்த ரொம்ப சிரமப்படணும் நாங்க.” என்ற மோகன்
“நம்ம சனத்துல பழக்கம் இல்லைனு நாம ஏன் சொல்லணும்ப்பா? நாம அந்தப்பழக்கத்தை உருவாக்குவோமே, சித்தி கல்யாணம் ஒரு ஆரம்பமா இருக்கட்டுமே ?!”என்றான்.
மார்த்தாண்டன் அங்கே வரவும் ,”
இந்தாருங்க இதைப்பத்தி நீங்க பேசக் கூடாது, சொல்லிட்டேன்.” என்றபடி பவளமும் பின்னாலேயே வேகமாக வந்தார்.
“என்ன பேசக்கூடாது?” என்றவர் கலியபெருமாளை ஒரு வழியாக்கி விட்டுத்தான் பேச்சை நிறுத்தினார்.
“இப்ப என்னதான் மச்சான் சொல்ல வர்றீங்க…? இது எதுவும் எனக்கு சரியாப்படலை “என்றார் கலியபெருமாள் அப்போதும் அதிருப்தியாக.
“சரியாப் படாம எப்படி போகும். உங்க காலம் வரைக்கும் நீங்க பார்ப்பீங்க அப்பறம் “
“ஏன் மோகன் இல்லை அவன் பார்த்துப்பான் வளர்த்த பாசம் விடுமா?” என்றார் அதற்கும்.
“சரிதான்!” என்றவர்,” நீங்க எல்லாம் வெளியே இருங்க நான் பேசுறேன் “என மார்த்தாண்டன் சொல்லவும் இளையவர்கள் வெளியேறினர்.
“சரி மச்சான் நீ சொல்றது எல்லாம் சரிதான். நான் ஒத்துக்கிறேன். ஆனா அதுக்குனு ஒரு தொணை இருந்தா நல்லாருக்கும்ல. யாரையும் கொறை சொல்லலை. இத்தனை வருஷமா இதைப் பத்தி நாம யோசிக்கவே இல்லை. நம்மளை வளர்த்தி விட்டவங்களும் இந்த மாதிரி சிந்தனைக்கு நம்மளை கொண்டு போகலை. வயசுப்புள்ளையா இங்கின அது இருக்கப்ப நமக்கும் பிள்ளைகுட்டினு இருந்திருந்தானு யோசிச்சிருக்கும்ல. ஒரு காச்ச தலைவலினு படுத்தா கேட்கிறதுக்கு ஆள் இருந்தா நல்லா இருக்கும்னு நினைச்சிருக்கும் தானே… அட இதை எதுவுமே நினைக்கலைனு வச்சுப்போம். இந்த சேகரன் பய இத்தனை வருஷம் கொடைச்சல் குடுத்திருக்கானே அதை சொல்ல கூட தயங்கி நிற்கிற புள்ளையை எப்படிய்யா இன்னுமே ஒத்தையில விடுறது.?”
“எம்மவ பாக்கும், மருமகன் பார்ப்பாரு அதெல்லாம் வேற கணக்கு. ஒனக்கு மேலுக்கு முடியலைனா செவந்தி பார்க்கிற மாதிரி வருமா இல்ல எனக்கு எம்பொண்டாட்டி பார்க்கிற மாதிரி வருமா…? அது மாதிரி அந்த பிள்ளைக்கு ஒரு ஆளு வேணாமா… இம்புட்டு வருஷம் இதெல்லாம் நம்ம புத்தியில ஒரைக்காததே பாவம் இல்லையா. கொஞ்சம் யோசி மச்சான். சாதி சனம்னு பார்க்காத… அவங்க எல்லாம் செத்துக் கெடந்தா கூட்டத்துல அழுவறவுக… ஒறவா நிக்க ஒரு மனுசன் அதுக்கு வேணும்யா” என்று நீளமாய் மார்த்தாண்டன் பேசி முடிக்க, கலியபெருமாள் முகத்தில் சிந்தனை விரவியது. இன்னமுமே பூரணியின் மறுதிருமணத்தை அவரால் ஏற்க இயலவில்லை.
ஆனால் செவ்வந்தியின் முகம் ஓரளவுக்குத் தெளிந்திருந்தது. திருமணமே செய்யக்கூடாது என்று சொல்லியிருந்தவர்,’ ஏன் செய்யக்கூடாது?’ என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டிருந்தார்.
*******
நிரூபனோ தன் சொந்தங்களின் நிராகரிப்பையோ, ஏச்சுப்பேச்சுக்களையோ காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை.
திருமணத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டான்.
ஆனால் பூரணி என்ன நினைக்கிறாள் என்று எவருக்கும் தெரியவில்லை.
இந்த பிரச்சினைக்குப் பிறகு பேச்சும் குறைந்துபோனது. வழக்கமான வேலைகளை மேற்கொள்பவளை செவ்வந்தி கவனிக்கத் தான் செய்தார்.
நிரூபன் பூ வைத்தபிறகு அவள் மறுபடியும் குங்குமம் வைக்கிறாளா என்று கூட ஆராய ,அவளோ மென்புன்னகையுடன் கடந்து விடுவாள்.
கவின் திருமண விஷயத்தைக் கூறிய பிறகு,’ தங்கையைக் காண வேண்டும்’ என சரண்யா கேட்டிருக்க, மதிவாணன் தானும் வருவதாய் சொல்லியவர் விடுமுறைக்கு கேட்டிருப்பதாக கூறினார்.
சரண்யாவோ,’ மதி எதுவும் குழப்பம் செய்ய வருகிறாரோ!’ என்று தயங்க
அவரோ ,”உன் தங்கச்சிக்கு பொடவை துணிமணி எடுக்கிறதுனா போயிட்டு வந்திடலாம் சரண்யா. இங்க வந்தப்ப ஏதோ வெளுப்பு கலர்லயே சீலை கட்டியிருந்தா” எனக் கூறியதும் சரண்யாவுக்கும் கண்கள் வெளியே வந்து விழுந்துவிடாத குறை தான்.
“ஏன் கவி இந்த மனுசன் நல்லாத்தான இருக்காரு…?இல்ல ஆவி கீவி அடிச்சுடுச்சோனு கேட்டேன். ஒரு மனுசன் மாறலாம் அதுக்குனு இப்படியா…?கொஞ்சமாவே அக்கறைபடச் சொல்லுடா, சென்னை ஏற்கனவே டிசம்பர் வந்தா மழை வெள்ளத்துல மூழ்குது. இதுல இவர் வேற இம்புட்டு நல்லவரா மாறி மழையை வரவைக்க பார்க்கிறாரு.” என்று கிண்டலடிக்க கவின் சிரித்துக் கொண்டான்.
“ம்மா , நீங்க இருக்கீங்களே..!” என்றவன் தன் கார்டை நீட்டினான்.
“எதுக்குடா…?”
“ம்ம்ம், சாரி எடுக்க வேண்டாமா… நீங்களும் எடுத்துக்கங்க, அப்படியே கமலிக்கும்” என்றிட
“ஆமா ஆமா குடு குடு. அப்புறம் எல்லாம் உன் பொண்டாட்டி வந்தா அவளுக்குத்தான் எடுப்ப” என வம்பு செய்ய
“ம்மா !”என்றவனோ,” வாய்ப்பு கம்மி அவ சுடி மிடி போட்டா என்ன செய்ய அதுதான் எடுத்துத் தர முடியும்!” என்று பதிலுக்கு பேச
“அடேய்!” என சிரித்த சரண்யா ,”சரி சரி கிளம்புறேன், அப்புறம் மதிவாணன் மலையேறிட்டா ஒண்ணும் செய்ய முடியாது.” என்று ஓட, கவினுக்கு சிரிப்பு தான்.
இங்கு நிரூபன் பூரணியின் கைபேசி எண்ணை வாங்கியிருந்தவன், தான் எடுத்த புடவை நகை எல்லாம் புகைப்படம் எடுத்து பூரணிக்கு அனுப்பி இருந்தான்.
‘ஏன் இப்படி பண்றாங்க…?’ அலுப்பாய் உணர்ந்தவளை மேலும் சிந்திக்க விடாமல் அவனே அழைத்து விட்டான்.
அழைப்பை ஏற்கலாமா வேண்டாமா என்ற போராட்டம் அவளுள்.
அழைப்பு நின்று விட்டது. மீண்டும் அழைப்பான் என நினைத்தவளுக்கு ஏமாற்றம் தான். நிரூபன் அழைத்திடவில்லை.
மோகன் வந்து நின்றான்.
“சித்தி உள்ளே வரலாமா ?”என்றதும்,” வா மோகன் இதென்ன புதுசா கேட்கிற அடி வேணுமா?” என்று சிரிக்க
அவனது கைபேசியை நீட்டியவன் ,”பேசுங்க “என்று கொடுத்துவிட்டுச் செல்ல, அதில் நிரூபன் எண்ணைக் கண்டு முறைத்தாள் மோகனை.
“பேசுங்க. உங்களுக்கு ரிங் போகலையாம்” என்றபடி சென்று விட்டான்.
காதில் வைத்தவள்,” ஹ்ம்ம்” என்றதிலேயே அவன் அடுத்துப் பேசத் துவங்கி விட்டான்.
“பூர்ணி உன் ஃபோன்ல கால் எடு, இப்ப வைக்கிறேன்.” என்று துண்டித்தவன், மறுபடியும் பூரணியின் எண்ணுக்கே அழைத்திட , வேறு வழியின்றி அழைப்பை ஏற்றாள்.
“இதெல்லாம் ஏன் செய்றீங்க?, எனக்கு இதில துளி கூட விருப்பம் இல்லை நிரூபன், சொன்னா புரிஞ்சுக்கோங்க. உங்களுக்கு நல்ல பொண்ணா கிடைக்கும். வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கங்க என்னை விட்டுடுங்க” என்றாள் சற்று கோபத்துடன்.
“சரி நான் நேர்ல வரேன் பேசிக்கலாம் “என்றவன் சிலநொடி மௌனத்திற்கு பிறகு,” பூரணி!” என்று அழைத்தான்.
“ம்ம்ம்…!”
“சாப்டியா…?”கேட்கும் போதே உடைந்திருந்தாள்.
“நான் வைக்கிறேன்.” என இணைப்பை துண்டித்து விட்டாள் .
சிலநிமிடங்களுக்குப் பிறகு அவனது புலனச்செய்தி வந்து விழுந்தது.
“சாப்டியானு தான கேட்டேன். பதில் சொன்னியா நீ.? சாப்பிட்டு தூங்கு. “என முடித்திருந்தான்.
தன்னை மீறிய புன்னகை அவள் முகத்தில்.
நிரூபனுக்கோ மனமே தாளவில்லை.
‘இவளை எப்படித்தான் சகஜமாக்கி வாழப் போகிறேனோ?’ என்று தோன்றிவிட்டது.
சமையலறைக்குள் புகுந்தான்.
பெரிதாய் பாத்திரங்களோ, மளிகைச்சாமான்களோ இல்லை. தேவையானது மட்டுமே வைத்திருந்தான்.
“கேஸ் அடுப்பு எல்லாம் மாத்தணும். வாங்கி பல வருஷம் ஆகிடுச்சு “என முனகிக் கொண்டான்.
‘ரெண்டு பேருக்கும் இந்த ரூம் போதும் தான். அவ வந்தபிறகு எது தேவையோ அவளையே கேட்டுப்போம்’ என்று நினைத்தபடி பூஜையறைக்குள் நுழைந்தான்.
தன் பெற்றோரின் புகைப்படத்தைப் பார்த்தவன்,’ உங்க மருமக மனசை சீக்கிரம் மாத்திடுங்க. எனக்கும் வயசாகுது’ என முணுமுணுத்தபடி விளக்கை தூண்டி விட்டான்.
விளக்கு தந்த ஒளியில் அவன் அகமும், முகமும் மலர்ந்தது.
இந்த ஒரு வாரத்தில் சிவகுருவின் வீட்டில் இருந்து மாற்றி மாற்றி பேசிவிட்டனர் இந்தத் திருமணம் வேண்டாமென்று. வனஜாவிற்கு கூறிய அதே பதில் தான் இங்கேயும் ரெக்கார்ட் செய்ததை போலக் கூறிக் கொண்டிருக்க ,அவர்கள் எரிச்சல் ஆகி திருமணத்திற்கு வரவில்லை என்று கூறிவிட்டனர்.
கந்தவேலன் தன் குடும்பத்தினருடன் திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பே வந்துவிடுவதாக கூறி இருந்தான்.
**********
“கமலி டேப்லெட் போட்டுட்டியா…?”என்று இனியன் கேட்க பதிலே இல்லை கமலியிடத்தில்.
“கேட்கிறேன் தானே ?!”இனியன் சட்டையைக் கழற்றி ஹேங்கரில் மாட்டி விட்டு துண்டை எடுக்க, அப்போதும் பதில் இல்லை அவளிடத்தில்.
“என்னாச்சு கனி?” அவளருகில் வந்தமர
“உங்களுக்கு இதை விட்டா வேற கேள்வியே தெரியாதா… நான் என்ன உங்க க்ளைண்டா? இல்லை பேஷண்டா? எப்ப பார்த்தாலும் அதைப்பத்தியே கேட்கறீங்க…?” படபடவென்று பொரிந்துவிட்டாள் ஆற்ற்மையாக.
“இல்ல… நான்”
“போதும்ப்பா முடியலை என்னால. இந்த மூணு மாசத்தில் நான் உங்க கிட்ட இருந்து அதிகம் கேட்டது இந்த வார்த்தைகளை தான்.”என்றவள்,
“ஹேய் கனி என்ன இப்படி எல்லாம் பேசுற…? நிஜமா அந்த எண்ணமெல்லாம் இல்லை. ஓபனா ஒண்ணு சொல்லவா… சிரிச்சுட மாட்டியே…?”என்று வினவிட
“ம்ஹூம்” என்று தலையாட்டினாள்.
“உன் கிட்ட எப்படி அப்ரோச் பண்றது… அதாவது உன்னை எப்படி கரெக்ட் பண்றதுனு தெரியலை கனி!” என்று சொல்லி விட்டான் வேகமாக.
கமலி சத்தமாக சிரித்துவிட, அவள் வாயை பொத்தியவன்,” ப்ளீஸ் இப்படி சிரிக்காதே…” என்றான் பாவமாக முகத்தை வைத்தபடி.
“சிரிக்கலை சிரிக்கலை” என்று அவனது கையை கூச்சத்துடன் விலக்கியபடி எழுந்து கொள்ள .
அவளது கையைப் பிடித்தவன்,” வீட்டுல விஷேஷமில்லையானு கேட்கிறதால நீ இவ்வளவு யோசிக்க வேண்டாம் கனி. அவங்க பெரியவங்க அப்படித்தான் கேட்பாங்க… அதை பெருசா எடுத்துட்டு வலுக்கட்டாயமா ரிலேஷன்ஷிப் பில்ட் பண்ண நினைக்காத. உனக்கான ஸ்பேஸ் நீ எடுத்துக்கலாம். உனக்கா மனசுல எந்த உறுத்தலும் இல்லாம என்னை ஏத்துக்கணும் என்னைப் பத்தி யோசிக்கணும்னு தோணும் இல்லையா அப்போ இதெல்லாம் நடக்கட்டும். ரொம்ப மெனக்கெடாத நீ.” என்றவன் எழுந்து சென்று விட்டான்.