அதே போல் சென்னையில் இருந்து கவின் தன் குடும்பத்தோடு வந்து இறங்கியிருக்க, மதிவாணன் சரண்யா இருவரும் கமலியைப் பார்த்து விட்டு பின்னர் பூரணி வீட்டிற்கு வந்தனர்.
மொத்தக் குடும்பமும் கலியபெருமாள் வீட்டில் இருந்தனர்.
கலியபெருமாளிடம் திருமணத்திற்கான சம்மதத்தை வேண்டி நின்றான் நிரூபன்.
“உங்க சம்மதம் இல்லாம இந்தக் கல்யாணம் நடக்காது. நீங்க முடிவு சொல்லுங்க” என்று கேட்டிருக்க
அவர் வாய்திறக்கும் முன்பே பூரணி பேசத் துவங்கியிருந்தாள்.
“அச்சோ கடவுளே நிரூபா உங்களுக்கு எல்லாம் என்னைப் புரியவே இல்லை. எனக்குத் தேவை மறுமணம் கிடையாது. விதவைனா அவளுக்கு மறுமணம் செய்து வச்சுட்டா எல்லாம் ஓவரா?, முடிஞ்சதா?!, அவ சந்தோஷமா இருந்திடுவாளா…?இன்னொரு குடும்பத்திற்குள் மருமகளா போய் அதே தினசரியை வாழ்வா, அவ்வளவு தான் அவளோட மறுமணமா இருக்கும். எனக்கு அது தேவை இல்லை நிரூபா” என்றாள் அலுப்பாக.
“சரி உன் தேவை தான் என்ன அதைச் சொல்லு…” நிரூபன் இறங்கி வந்து விட்டான்.
“சுதந்திரம்” என்றாள் ஒற்றை வரியில் .
அனைவரும் அவளைப் பார்க்க , பூரணியோ நிர்மலமான முகத்துடன் இருந்தாள்.
“புரியல சித்தி !”கவின் சொல்லவுமே
“சுதந்திரம் வேணும் கவின். நானா செயல்படணும். நீ விதவை இங்கே வராதே, போகாதே , இதை செய்யாதே, தொடாதே னு ஆயிரம் கட்டுப்பாடு வேண்டாம். நாங்க எப்படி இருக்கோமோ அப்படியே அக்ஸப்ட் பண்ணிக்கணும், நாங்க தொட்டா, வந்தா விளங்காதுனு சொல்லற நிலைமை இருக்கக் கூடாது. பூ வைக்காத, பொட்டு வைக்காத, நல்ல விஷயம் நடக்கும்போது முன்னாடி வராதேனு சொல்லாம சாதாரணமா எல்லார் கிட்டயும் எப்படி பேசுவீங்களோ அதே மாதிரி பேசணும் பழகணும். சுதந்திரமா மங்கலகாரியத்துக்கு வரணும், முடியுமா…?”என்று அவள் பேசவுமே வாயடைத்துப் போய் பார்த்தனர்.
“இதெல்லாம் பேசினா பெண்ணியம் போல இருக்கும் கவின். மனசு அல்லாடுற நேரத்தில் அதெல்லாம் ஒண்ணுமில்ல , நீ வான்னு அரவணைக்க யாராவது வேணும்னு தோணும். ஐயா போல ஒரு மனுசன் இருந்திருந்தா அரவணைச்சிருப்பார் நிச்சயம். அவர் தம்பிக்கோ இல்லை யாருக்கோ என்னை கொடுத்துட்டு, நான் விதவையா அவர் உயிரோடு இருக்கும் போது நின்னிருந்தா… இப்படி விட்டு இருக்க மாட்டார். எந்த ஒரு இடத்திலும் அவர் அம்மாவை தனிச்சு விட்டதே இல்லை தெரியுமா…? அவங்களை வச்சு தான் எல்லா காரியங்களும் செய்வார். அவர் இறந்தபிறகு அத்தை கூட இப்படி முண்டச்சியை முன்ன நிறுத்தி செஞ்சதால தான் போயிட்டியாடானு கேட்டு அழுதாங்க. நம்மை சுத்தி உள்ளவங்க மட்டுமில்லை, சில சூழ்நிலைகளும், நிகழ்வுகளும் கூட மனுசங்களை ஒரு வேளை அப்படித்தான் இருக்குமோன்னு நினைக்க வச்சிடுது” என்றாள் விரக்தியாக.
நிரூபன் ஆழ்ந்து பெருமூச்செடுத்தான். பூரணியின் அருகில் நெருங்கி நிற்க, சுற்றத்தார் கண்டு விலகினாள் பெண்ணவள்.
நாகரீகம் கருதி வெளியேறப் போயினர் இளையவர்கள்.
“தனிப்பட்ட விஷயம் பேசலை நில்லுங்க.” என்றவன்,” உன்னை கல்யாணம் பண்ணிக்க கேட்டது, பிடிச்சு தான். ரொம்ப பிடிச்சது. உன்னோடு குடும்பம் நடத்தி பிள்ளை பெத்துக்க மட்டுமான பிடித்தம் இல்லை அது. குழந்தை பெத்துக்கவோ வளர்க்கவோ தான் மறுமணம்னா என் முதல் பொண்டாட்டி இறந்து சில மாசத்திலேயே கல்யாணம் பண்ணி இருப்பேன். ரயில் பயணத்தில் கிடைச்ச சிநேகம் மாதிரி வாழ்க்கைப்பயணத்தில் ஒரு துணையா கேட்க தோணுச்சு. முறையா கேட்க நினைக்கிற நேரத்தில் நானே எதிர்பாரா அதிரடி அது. உன்னை பெருமாள் அண்ணன் கூட அவன் சேர்த்து வச்சு பேசினப்ப , ஏனோ அப்பா மகளை கலங்கப்படுத்துற மாதிரியான உணர்வு அது. அவரை சில நாட்கள் கவனிச்சவன்ற முறையில் தோணின உணர்வு அது. ரொம்ப அழகான பந்தத்தை அசிங்கப்படுத்தியதை ஏற்கவே முடியல என்னால. அதனால விளைந்த கோபம். நீ விதவைன்றது தானே அவனுக்கு இளக்காரம். அந்த பிம்பம் உடைஞ்சுட்டா உரிமையா சண்டை போடலாம் உனக்கு ஆதரவா நிற்கலாம்னு ஒரு எண்ணம். அதனால தான் அப்படி செஞ்சேன்.” என்றவன்
“இப்போ என்ன உனக்கு கல்யாணம் வேண்டாம் அவ்வளவு தானே ?!”என்று கேட்க பூரணி விழிவிரித்துப் பார்த்தாள்.
“இனி உன்னை கட்டாயப்படுத்தலை நான்
. யாரையும் கட்டாயப்படுத்தி ஒரு உறவிற்குள் கொண்டு வரமுடியாது. அப்படி கொண்டு வர்ற உறவும் நிலைக்காது.”என்றவன் நேராக கலியபெருமாளிடம் சென்று நின்றான்.
“உங்க எண்ணப்படி அவங்க கல்யாணம் பண்ணிக்க விரும்பலை, இப்பவும் சிவம் அண்ணன் மனைவியா இருக்க கட்டாயப்படுத்தாதீங்க. சுயமா நிற்கட்டுமே… வாழட்டும். இத்தனை நாளும் தந்த பாதுகாப்பைக் கொடுங்க அது போதும். ” என்றான் கைகூப்பி
“என்னய்யா இது?” என அவன் கையை படபடப்புடன் இறக்கி விட்டவர்,”நெசத்துக்கும் அந்த புள்ள வாழக் கூடாதுனு நாங்க நெனைக்கலை. நாங்க பழைமையிலேயே பொழங்குன மனுசங்க. இப்படி திடுதிப்புனு கல்யாணம் அதுஇதெல்லாம் ஏத்துக்க முடியலை. ஆயா இப்ப பேசுன மாதிரி அப்போதைக்கு எதுவும் சொல்லி இருந்தா கூட யோசிச்சிருப்போமோ என்னவோ. இல்ல பழைமையில ஊறுன நாங்க அதையும் தப்பா எடுத்துக்கிட்டு அடக்கி வச்சிருந்தாலும் வச்சதுதான். ரெண்டாவது அது வேலைக்குப் போய் தான் குடும்பத்தை பாக்கணும், அப்படினுலாம் நாங்க நெனைக்கலை. ரெண்டு தலைமுறைக்கு தேவையானதை சேத்து வச்சிருக்கோம். இந்தா மோகனை கூட வெளியூருக்கு வேலைக்கு அனுப்ப ப்ரியமில்லை எங்களுக்கு. நாமளே நாலு பேத்துக்கு வேலை குடுக்கிறோம், நம்ம புள்ள வெளியே போய் பொழைக்கிறதானு வேணாம்னு வெவசாயம் பார்க்கிறோம். இதுல பொம்பளைப்புள்ளையை வேலைக்கு அனுப்புற ரோசனையே வரலை” எங்களுக்கு.
“அப்ப இருந்த நெலைமையும் வேற. சிவம் போனதும் எங்கம்மா முடியாம படுத்துக்கிச்சு. பூரணி தன்னைப்போல பாத்துக்கவும், நாங்க வயலுகாடுனு பொழைப்பை பார்த்தோம். காட்டுவேலை, வீட்டுக்கு வந்தா கஞ்சி குடிக்கனு, எங்க நெனப்பும் காலமும் அதிலேயே ஓடிப் போச்சு. காலங்காலமா புருஷனை பறிகொடுத்தவுக எப்படி இருப்பாகளோ அப்படியே தான் பூரணி இருக்குனு நாங்களும் பெருசா எடுத்துக்கலை “என்று நீளமாக பேசி முடிக்க
“உங்களை தப்புன்னு நாங்க சொல்லலைப்பா. இதுவே வேற குடும்பமா இருந்திருந்தா உன்னை நீயேப் பாரு, இல்ல உங்கம்மா வீட்டுக்கே போயிருனு அனுப்பி வச்சிருப்பாங்க. நீங்க அப்படி செய்யலையே…! நல்லா பார்த்துக்கிட்டீங்க ஆனாலும் அவங்க மனசுன்னு ஒண்ணு இருக்கேப்பா, அதை அவங்களா சொல்ல முடியாதே. சில சூழ்நிலைகள் தான் சொல்லும். இப்பவும் காலம் கடந்துடலை. 36 வயசெல்லாம் ஒரு வயசில்லை. அவங்க என்ன நினைக்கிறாங்களோ அதைச் செய்யட்டும், நாம துணை நிற்போம் அவ்வளவு தான்.” என்றான் மோகன்.
“செரிய்யா. ஒப்புக்கிறேன் பூரணி என்ன நினைக்குதோ அதைச் செய்யட்டும். ஆனா…”என்றதும்,
‘ வேறு என்ன சொல்லப் போகிறாரோ?’ என்று அனைவரும் பீதியுடன் பார்த்தனர்.
கலியபெருமாள் பூரணியிடம் சென்றவர்,”ஆயா இன்னது தான் எம்மனசுல இருக்குன்னு எங்க கிட்ட ஒத்தை வார்த்தை சொல்லி இருக்கலாம். தப்புத்தான் நாங்களும் அதைக் கேட்டுக்கிடலை. நீ கேட்டது வச்சது எல்லாம் நியாயம் தான். விதவைங்கிறதுக்காக நம்ம சனங்களும் மனசை நோவடிக்கிறாங்க தான். அவங்களுக்கு புரியிறது புரியாதது எல்லாம் தாண்டி இந்த பயம்னு ஒண்ணு இருக்கே , அது மனுசனை நல்லதனமாவே யோசிக்க விடாது. எல்லாரும் அப்படிதான், நீயும் கட்டுக்கழுத்தியா வாழ்ந்திருந்தா இப்படி தான் யோசிச்சிருப்ப… சில விஷயங்களை என்ன செஞ்சாலும் மாத்த முடியாது.”என்றதும் கவின் குறுக்கிட்டான்.
“நீங்க சொல்றது சரிதான் பெரியப்பா, மாத்த முடியாது தான். ஆனா இதைப் பெருசா எடுத்துக்காத மக்களும் இருக்கத்தான் செய்றாங்க. பெரிய பெரிய நகரங்களில் இதை கவனிக்கக் கூட நிறைய பேருக்கு நேரமிருக்காது. முதல்ல நம்ம மாறிப்போம் நம்மளை தொடர்ந்து யாராவது மாற நினைச்சா மாறிக்கட்டும். அவங்க ஆசைப்படுறதை செய்ய கூட இருந்து பார்த்துக்கிட்டாலே போதும் பெரியப்பா “என்றான் நிறைவாக.
“சரிதான்யா. அது போக்குப்படி வாழட்டும், வேணாம்னு சொல்லலை” என்றதும் குமரன் பொங்கி விட்டான்.
“ஏங்க எல்லாம் சரி, பொண்ணு கேட்டு வந்த எங்கண்ணனை இப்படி வெறும் கையோட அனுப்புறது எந்த விதத்துல நியாயம் ?”என கேட்டு விட குமரனின் கையைப் பிடித்தான் நிரூபன்.
“மன்னிச்சிடுங்க தெரியாம பேசிட்டான். அவங்களுக்கு இதில் விருப்பம் இல்லைன்னும் போது, கட்டாயப்படுத்தறதும் சரிவராது. நாங்க கிளம்புறோம்” என்று குமரனின் கையைப் பிடித்துக் கொண்டு வெளியேறிவிட்டான் நிரூபன்.
“அண்ணே நீ செய்றது சரியே இல்லைண்ணே!, இவ்வளவு தூரம் எல்லா ஏற்பாடும் செஞ்சு வேணாம்னு சொல்றது…?அண்ணே நான் பேசுறேண்ணே, வேணாம்ண்ணே வாண்ணே திரும்ப போய் கேட்போம் “என கெஞ்சியபடி குமரன் நடக்க நிரூபன் விழிகள் கலங்கியிருந்தது.
“போதும்டா குமரா. விருப்பம் இல்லைன்னு சொல்றவங்க கிட்ட வேற என்ன சொல்லச் சொல்ற.?, ப்ப்ச் விடு, இதுதான் நடக்கணும்னா இப்படித்தான் நடக்கும். ஏற்கனவே நடந்தது எல்லாம் இன்னும் அப்படியே தான் இருக்கு. எதுவும் மாறலை. இன்னொரு விருப்பம் இல்லாத பொண்ணை கட்டிட்டு வந்து பழையபடி பழியை சுமக்க தெம்பில்லை எனக்கு. பத்து வருஷமா கட்டி வச்சிருந்த மனசை இனிமேலும் அடக்கி வைக்க வேண்டியது தான். இதைப் பத்தி பேசவே வேண்டாம் விடுடா “என்றவன் நடையில் அத்தனை வேகம்.
இங்கே இளையவர்களுக்கெல்லாம் அத்தனை ஏமாற்றம். பூரணியின் இந்த அதிரடியை யாருமே எதிர்பார்க்கவில்லை. மறுமணத்திற்காகத் தானே இத்தனை போராட்டம். ஆனால் விருப்பம் இல்லை எனச் சொல்லும்போது யார் தான் என்ன செய்ய முடியும்.
மதிவாணன் கோபத்தை அடக்கி நின்றிருந்தவர்,”இந்தாம்மா நீ என்னதான் நெனைச்சுக்கிட்டு இருக்க, சரிதான் வேலைக்கு போவணும், சுயமா நிக்கணும். எல்லாம் சரி தான். ஆனா அந்த தம்பியை கட்டிக்கிட்டு செஞ்சா வேணாமின்னு இருக்கா.?, ஒனக்காக பேசி உன்னைய அத்தனை இக்கட்டில் இருந்தும் காப்பாத்தி வந்தவருக்கு இந்த ஆசையை நிறைவேத்தத் தெரியாதா…? சின்னதுல இருந்தே இந்த துடுக்குத்தனம் தான் எனக்குப் புடிக்கிறதே இல்லை. எல்லா வேலையிலையும் அவசரக்கழுத தான். ஒங்கப்பன் இருந்திருக்கணும் நாலு சவட்டு சவட்டி இருப்பாரு ஒன்னைய…! அவரக் கட்டிக்கிறதுல என்ன பெரச்சினை ஒனக்கு?” என்று சத்தமிட
பூரணி நிதானமாக,” எல்லாம் சரி தான் மாமா. என்னை யார்னேத் தெரியாதப்ப அத்தனை பிரச்சினையிலும் இருந்து காப்பாத்தி கூட்டிட்டு வந்திருக்கார். எனக்கான பாதுகாப்பை அவர் கிட்ட நான் நெறையவே உணர்ந்திருக்கேன். ஆனா அவர் யாரு…ம்ம்ம், அந்த வனஜாவோட தம்பி. நடராஜனுக்கு மச்சான் முறை ஆகுது. ஏதாவது விஷேஷம் இல்ல அவங்களையே போய்ப் பார்க்கணும் அப்படிங்கும் போது வனஜா சும்மா இருப்பாளா…? தூரத்து சொந்தமாகவே என்னை ஏத்துக்காத அவங்க தம்பி பொண்டாட்டியா ஏத்துப்பாங்களா…?”
“நீங்க ஏன் சித்தி அவங்களை பார்க்கறீங்க.? சித்தப்பாவை பாருங்க, அவர் மனசை பாருங்க .”என்று விட்டான் கவின்.
“அவர் தனியா வாழப் போறதில்லை கவி. சொந்தங்களுக்கு மத்தியில் தான் வாழப் போறார். வனஜா ஒரு பைத்தியம். அப்பவே அவ கொழந்தையை காலடியில் போட்டு என்னை வேதனைப்படுத்தினா. இதோ கமலி கல்யாணத்தில் அவ்வளவு தூரம் அவ யோசிக்க வேண்டியதே இல்லை, ஆனா என்ன நடந்துச்சு…? தேவை இல்லாம எத்தனை பழி. அதே மாதிரி நிரூபனை கல்யாணம் பண்ணிக்கிட்டா எத்தனை பிரச்சினையை உண்டாக்குவா, யோசிச்சுப் பாருங்க. அதை விட முக்கியமான ஒண்ணு இருக்கு “என்றதும் அவளை அனைவரும் திகைப்பாய் பார்த்தனர்.
“இனியன் கமலியை நினைச்சிங்களா…? அவங்க வாழ்க்கை. அங்க தான் ராகுலும் இருக்கான். சொந்தபந்தம் னு கூடும்போது அவனும் வொய்ஃபோட வருவான். நேரா பார்க்கவேண்டி இருக்கும். இனியன் தப்பா நினைக்கிற பிள்ளை கிடையாது. அவன் என் வளர்ப்பு, அதுபோல கமலியும் வேற நினைப்பில் நிச்சயம் இருக்க மாட்டா, எங்கக்கா வளர்ப்பு அப்படி கிடையாது. “என்றவள்
” ஆனா மஞ்சு வனஜாவோட அண்ணன் பொண்ணு, அவ எப்படின்னு நமக்குத் தெரியாது. நல்ல பொண்ணாவும் இருக்கலாம். ஆனா அவங்க அம்மாவை யோசிச்சுப் பாரு. அந்தக் கல்யாணத்தில் பிரச்சினை வந்ததுக்கு முக்கிய காரணமே அவங்கப் பேச்சுதான். “என்றதும் எல்லோரும் அதிர்ந்து பார்க்க
“இதை நான் அவங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கும்போது கேட்டேன். வனஜாவோட அந்த மாற்றத்துக்கு காரணமும் அதுதான். அப்படிப்பட்ட பொம்பளைங்க இருக்கிற இடத்தில் நான் கல்யாணம் பண்ணிட்டுப் போனா என்ன ஆகும் யோசிங்க. நிரூபன் நிம்மதியா வாழ்வாரா…? நித்தம் ஒரு பிரச்சினையைக் கிளப்பி அவர் நிம்மதியைக் கெடுத்துட மாட்டாங்க. நல்லா இருக்கிற மனுசனை இப்படி நிம்மதியில்லாத வாழ்க்கை வாழவிடறதுக்கு அவர் தனியாகவே வாழட்டும். இல்ல வேற பொண்ணை கட்டிட்டு சந்தோஷமா இருக்கட்டும். நான் அவங்க குடும்பத்துக்கு வேண்டாம். “என்றாள் தீர்மானமாக.
“சண்டை சச்சரவு இல்லாத வீடு எது புள்ள. இதையெல்லாம் பார்த்தா வாழ முடியுமா… நீயி இன்னொரு தடவை யோசியேன். ஒன்னைய மறுபடியும் பூவோடையும் , பொட்டோடையும் பாக்க ஆவலா இருக்கு புள்ள “என செவ்வந்தி கூட சொல்லி விட்டார் மனம் தாளாமல்.
“ஒருத்தர் கூட நாம இருந்தா சுகதுக்கம் எல்லாத்தையும் தரணும்கா. அதை விட்டுட்டு துக்கத்தை மட்டுமே தரக்கூடாது. நான் தர மாட்டேன். நான் இனிமே பூ ,பொட்டு வச்சுப்பேன். அவர் தானே வச்சுவிட்டார். நான் ஏன் அதை வேண்டான்னு சொல்லணும். என் அய்யா இறக்கும்போதே என்னை அதெல்லாம் எடுக்கக் கூடாதுனு தான் சொன்னாரு. நான் தான் அவரே இல்லை. அப்புறம் இது எதுக்கு எனக்குத் தேவையில்லைனு தூக்கி எறிஞ்சுட்டேன். இப்பவும் இதை எல்லாம் நான் வச்சுக்கிட்டா அய்யாவோட ஆன்மா சந்தோஷம்தான் படும். வச்சுப்பேன் நான் வச்சுக்கணும் இல்ல.” என்றாள் கண்கலங்கி.
மார்த்தாண்டன் வாய்விட்டு கதறி அழுதுவிட்டார்.
“இதுக்காகவாச்சும் நீ உசுரோட இருந்திருக்கக் கூடாதாடா…? புள்ள இவ்வளவு வேதனையை அனுபவிக்காதே. “என சொல்லி அழுதுவிட
“அவர் உசுரோட தான் இருக்காருண்ணே. இந்தா என் பிள்ளைங்க ரூபத்துல ஒரு உசுரா இல்லாம, மூணா இருக்கார். அவர் காப்பாத்தி விட்டது தானே. அதான் பொத்திப் பொத்தி வளர்த்துட்டேன். கூடவே வாழறாரே போதுமே?!” என்று மதுராவை அணைத்துக் கொள்ள, அத்தனை அழுகை அனைவரிடமும்.
“என்னடி சொல்ற…?ஆக்ஸிடண்ட்னு சொன்னாங்க “சரண்யா மனம் தாளாமல் கேட்டுவிட
“அவனும் அங்கத்தான் இருந்தான். இதுக நாலும் விளையாடிக்கிட்டு இருக்க ,சிவம் வளர்த்த காளை ரெண்டும் அன்னைக்கு என்ன கெரகமோ திமிறிக்கிட்டு அத்துக்கிச்சு. புள்ளைங்க வெளையாடுறதைப் பார்த்துக்கிட்டே அவன் நிக்க ரெண்டு காளையும் ஒன்னோட ஒண்ணு சண்டை போட்டுக்கிட்டு இதுகளைப் பார்த்து ஓடி வர அவன் சுதாரிச்சு திரும்ப அதுக்குள்ள பிள்ளைங்க மூணையும் நோக்கி பாஞ்சுருச்சு எல்லாரும் ஓடியாறதுக்குள்ள மூணு புள்ளைகளையும் தூக்கி அந்தப் பக்கம் வைக்கப்போர்ல போட்டு திரும்பவுமே அவனை குத்தி கிழிச்சிருச்சு. அதோட அந்த மாடு ரெண்டையும் இழுத்துக் கட்டி வச்சவன், அப்பறம் தான் மயங்கியே விழுந்தான். ரெண்டுநாளு தான் ஆஸ்பத்திரியில் வச்சிருந்தோம். ஆயாவை பாக்கணும்னு கேட்க அதுமட்டும் போய் பேசுச்சு. அப்பறம் மச்சான் போய் பேசுனாரு ரெண்டு பேரையும் பாத்துக்கிட்டே உசுரை விட்டுட்டான். “
“அதுல இருந்து மாடும் வேணாம், ஒண்ணும் வேணாம்னு வளர்க்கிறதே இல்லை. உசுரைக்குடுத்து வளர்த்த அவனே போயிட்டான். பெறகு என்ன இருக்கு எங்களுக்கு. சென்மத்துக்கும் மறக்குமா அவன் சாவு. யாருக்கு என்ன கொறை வச்சான் அவன். எல்லாரையும் நல்லாப் பார்த்த அவனுக்கு ஏன் அந்த கதினு நான் சாமி கும்புடுறதை கூட விட்டுட்டேன். “என்றார் கலியபெருமாள் பெருமூச்செறிந்து.
பூரணி விறுவிறுவென்று அறைக்குள் சென்று விட்டாள்.
சரண்யா பின்னே செல்ல முற்பட, பவளம் தடுத்தவர்,” அதுவா வரும். நெனப்பு வாரப்ப எல்லாம் இப்படிதான் போய் உட்கார்ந்துக்கும். நம்ம போனா ரொம்ப அழுகும், அதனாலேயே கூட உட்கார மாட்டோம் , தானா வந்தா சரியாகிடும். எங்கண்ணனுக்கு அழுதாப் புடிக்காது. அதனால அழமாட்டாங்க “என்றார்.
சரண்யாவிற்கும், மதிவாணனுக்கும் குற்றவுணர்வாகிப் போனது பூரணியோடு தாங்கள் இல்லாமல் போனதை நினைத்து.
ஒரு மணிநேரம் கழித்து இளையவர்கள் மட்டும் உள்ளே செல்ல, பூரணி அமைதியாக அமர்ந்திருந்தாள்.
மதுரா போய் மடியில் படுத்துக் கொள்ள இனியனும், மோகனும் அருகில் அமர்ந்து கொண்டனர்.
“நான் நல்லாதான்டா இருக்கேன். ஏன் மூஞ்சியைத் தூக்கி வச்சிருக்கீங்க?” என்றதும்
மதுரா நிமிர்ந்து அவனை முறைக்க, அவன் கண்டுகொள்ளவே இல்லை.
“நண்டு எழுந்திரு, சித்திக்கு கால்வலிக்கும்” என்று மோகன் எழுப்ப
“மைக்மோகன் சொல்றதை எல்லாம் கேட்க முடியாது.” என்றாள் பதிலுக்கு.
“மது நீ ஒதை வாங்கப் போற.” என இனியன் கண்டிக்க, சூழல் சற்று இலகுவானது.
“என்ன செய்ய விரும்புறீங்க சித்தி. சென்னை வர்றீங்களா…? ஏதாவது படிக்கறீங்களா இல்லை கம்ப்யூட்டர் கோர்ஸ் இல்ல வேற ஏதாவது என்னத் தோணுதோ செய்ங்க “என கவின் ஆர்வமாகி விட
“இத்தனை வருஷம் கேப் விட்டுடுச்சு கவி. அதெல்லாம் சரிவருமாத் தெரியல.” என்றாள்.
“ஐம்பது வயசில் கூட படிச்சு டிகிரி வாங்கறாங்க. நீங்க என்ன இப்படி சொல்றீங்க. நீங்க படிக்கறீங்க , என்ன படிக்கணும்னு யோசிக்கிற சாய்ஸ் உங்களோடது” என்றான் முடிவாக.
“யோசிச்சு சொல்றேன் கவி.” என்று முடித்துக் கொண்டாலும் , மனதினுள் ஒரு பயம் விரவத்தான் செய்தது.
***********
நிரூபன் கடைக்குச் சென்றே இரண்டு நாட்கள் ஆகிவிட்டிருந்தது.
அண்ணன்களும் வராததால் சற்று நிறையவேத் தனிமை கிடைத்தது. இன்னும் பூரணி திருமணத்தை மறுத்த விஷயத்தை யாரிடமும் பகிரவில்லை அவன். பகிர விருப்பமும் இல்லை அவனுக்கு.
குமரனுக்குத்தான் ஆதங்கம் தாங்கவே இல்லை. தன் அன்னையிடம் சொல்லி சொல்லி மாய்ந்து போனான்.
கடையில் ஏனோதானோ என்று வியாபாரம் பார்த்துக் கொண்டிருக்க இனியன், மோகன் எல்லோரும் கடைக்கே சென்று விட்டனர்.
“குமரா!” என்று அழைத்ததுமே சடாரெனத் திரும்பியவன் முகத்தை கடுகடுவென வைத்துக் கொண்டான்.
“சித்தப்பா எங்கே?” என்று கேட்டதும் பொங்கிவிட்டான் அவன்.
“ஆமா பொல்லாத சித்தப்பா… இப்ப என்னத்துக்கு வந்தீங்க…? அதான் கல்யாணம் வேணாமின்னு மூஞ்சியில அடிச்ச மாதிரி சொல்லி வெரட்டி விட்டுட்டீங்களே!?” என்று குத்தலாய் சொல்ல
இனியன் கடைக்குள் நுழைந்தவன்,” என்னா கோபம்டா உனக்கு. சரி சரி மாமா வீட்டைக் காட்டு. எங்கத்தைக்கு மாப்பிள்ளை வீடு பார்க்க வந்திருக்கோம், வீடு எப்படின்னு பார்த்தாத் தான் பொண்ணு தருவோம்.” என்றான் அவன் கழுத்தில் கைபோட்டபடி.
“எல்லாம் பண்ணிடலாம்டா நீ வீட்டைக் காட்டு” என்றதும் கடையை பரபரப்புடன் மூடியவன்,” வாங்க போவோம் “என்று தனது டிவிஎஸ் 50 ஐ எடுத்தான்.
“பின்னாலேயே வாங்கண்ணே. கொஞ்ச தூரம் தான் வீடு.” எனும்போதே,” காரில் போகலாம் வண்டியை வச்சுட்டு வா.” என கவின் அழைக்க அவர்களோடே ஏறிக் கொண்டான்.
“சொந்த வீடு வையம்பட்டியில் ஒண்ணு இருக்குண்ணே. இங்கன சின்னதா ஒரு வீட்டை ஒத்திக்கு வாங்கி இருக்காரு. போகவர சவுரியமா இருக்கும்னு. கொஞ்சநாள்ல சொந்தமா வாங்கிடுவாரு. நிலமெல்லாம் இருக்கு. இந்தக் கடை கூட அவரோட சொந்த உழைப்பு பங்குதாரர் யாரும் இல்லை. அண்ணியை நல்லா வச்சுக்குவார்ண்ணே. பயப்படாம கட்டிக்குடுங்க.” வழிநெடுக பேசிக் கொண்டே வந்தான் குமரன்.