ககனம் -30
குமரனின் வாய்கொள்ளா பேச்சு முழுவதும் நிரூபனைச் சுற்றியே இருக்க, இளையவர்களுக்கு முகம் நிறைய புன்னகை தான்.
நிரூபன் துணியைத் துவைத்துக் காய வைத்துக் கொண்டிருந்தான்.
“அண்ணே!” வெளியில் இருந்து குரல் கொடுத்தபடியே குமரன் உள்ளே செல்ல, நிரூபன் வேகமாக வந்தவன்,” அடேய்! கடையில் இல்லாம இங்க என்ன பண்ற?” என வாளியை ஓரம் வைத்தவன், அப்போது தான் கவின் மோகனை கவனித்தான்.
“ஹேய்… வாங்கப்பா…! என்ன எல்லாரும் சேர்ந்து வந்திருக்கீங்க?” என்று புன்னகையோடு கேட்டவன், மேலே டீசர்டை அணிந்து கொண்டான்.
“குமரா, குடிக்க ஏதாவது வாங்கிட்டு வா. உட்காருங்க…” என்று அப்போதும் இலகுவான தோற்றம் தான் அவனிடத்தில்.
“சித்…!”என்று தயங்கி கவின் விழிக்க
“அப்படியே கூப்பிடு கவி. உங்க சித்தியை கட்டிக்கிட்டா தான் கூப்பிடணுமா என்ன?” என சொல்ல
“கோபம் ,வருத்தம் ரெண்டுமே இருக்குது தான். அதுக்காக என்ன செய்ய முடியும்.? பூரணிக்கும் தனிப்பட்ட ஆசை கனவெல்லாம் இருக்குமில்ல. சரி அதை விடுங்க. என்ன சாப்பிடுறீங்க…?” எனும் போதே குமரன் பழச்சாறுடன் வந்திருந்தான்.
“அண்ணே குறிஞ்சியில சாப்பாடு சொல்லவா, இல்ல மீனாட்சிபவன்ல சாப்பாடு சொல்லவா?, மாப்பிள்ளை வீடு பார்க்க வர்றப்ப சைவம் தான் போடணுமாம்,அம்மா சொல்லுச்சு. நீ சொல்லு மீனாட்சியா குறிஞ்சியா?” பரபரத்தான் குமரன்.
“குமரா அதெல்லாம் வேண்டாம். சித்தப்பாவை பார்க்கத் தான் வந்தோம்.” என்றதும் அவன் முகமே சுருங்கிப் போனது.
“டேய் !,எங்களுக்கும் ஆசை தான்டா ஆனா அவங்க வேணாமின்னும் போது நாங்க என்ன செய்ய முடியும்?” என்று சங்கடத்துடன் விளக்கம் தர
“விடுங்கடா, அவன் அப்படித்தான் நீ போய் மீனாட்சியிலேயே அஞ்சு மீல்ஸ் வாங்கிக்க” என்று பணத்தை நீட்டினான்.
“அதெல்லாம் வேண்டாம் மாமா.” என்ற இனியன்,” அத்தையை சீக்கிரம் சம்மதிக்க வைக்கிறோம் மாமா. அதுவரைக்கும்” என தயங்க நிரூபன் சிரித்துக் கொண்டான்.
“இன்னொரு கல்யாணம் பண்ணிடுவேனோன்ற பயமா இனியா.? அதெல்லாம் பயப்படாத. செய்ய மாட்டேன்.” என்றவன்
“கல்யாணம் பத்தி பேசும்போது எல்லாம் சிரிச்சானுக. வனஜா கிட்ட சொல்லி வம்பு பண்ணாங்க. கல்யாணத்துக்கு வரமாட்டேன்னு சொன்னாங்க வீட்டுக்கு வர்றதை நிறுத்தினாங்க. நான் பெருசா கண்டுக்கலை. “என்றான் இயல்பாய்
“அவங்க வராத வரைக்கும் சந்தோஷம் ண்ணே. இல்ல மாசா மாசம் வந்து அந்த சாமான் வேணும், இந்த சாமான் வேணும்னு ஓசியிலேயே வாங்கிட்டுப் போவாங்க. இப்ப தான் நிம்மதியா ஏவாரமே பாக்க முடியுது” என்றான் குமரன்.
“விட்றா நமக்கு வாச்சது அப்படித்தான்” என சமாதானம் சொல்லியபடி வேறு பேச்சுக்களை தொடர்ந்தான்.
அவர்கள் கிளம்பும்போது பூரணியின் மனம் மாறிவிடும் என்று ஆறுதல் அளித்து அனுப்பினான்.
“ம்ம்ம் சித்தப்பா, மாறணும்” என்று பெருமூச்செறிந்தபடி சிறிது நேரம் இருந்தவர்கள் விடைபெற்றுக் கொண்டனர்.
*************
ஆறு மாதங்கள் உருண்டோடியிருந்தது.
பூரணி கணினி வகுப்பில் இணைந்து ஒரு பட்டயப் படிப்பை முடித்திருந்தாள். மேலும் இரண்டு பட்டயப் படிப்பிற்கும் விண்ணப்பித்து இருந்ததால் அதைத் தொடர்ந்து கொண்டிருந்தாள்.
மோகன் பஸ் மட்டும் ஏற்றிவிடுவான். அவளே தனியே திண்டுக்கல் சென்று படித்து வந்தாள். ஆரம்பத்தில் தயக்கம் இருந்தாலும் அப்படி அப்படியே பழகியிருந்தது அவளுக்கு. மங்கல காரியத்திற்கு தான் அவள் இருப்பிற்கு தடை. சரஸ்வதி தேவியின் ஆசீர்வாதத்திற்கு பாகுபாடோ, பாரபட்சமோ கிடையாதே… துவக்கத்தில் சற்று தடுமாறினாலும் நாட்கள் செல்லச் செல்ல படிப்பும் பிடிபட்டுவிட அழகாய் பயணித்தது அவளது கல்விப்பயணம்.
நிரூபனும் நினைவில் வந்து போகாமல் இல்லை அவளுக்கு.
‘அழைத்துப் பேசலாமா?’ என்று கூட எண்ணியிருக்கிறாள்.
‘இப்படியே செல்லட்டும் தேவை இல்லாமல் அவன் மனதையும் கலைத்து விடக் கூடாது.’ என்றெண்ணி அமைதிகாத்தாள்.
ஆனால் காலமும் விதியும் அப்படியே விடுமா என்ன…?
‘தோழியின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை மருத்துவமனையில் இருக்கிறார் மணப்பாறைக்கு சென்று பார்த்து வருகிறேன்’ என கிளம்பி விட்டாள் மற்ற தோழிகளோடு.
மணப்பாறை என்றதுமே மனதில் நிரூபன் வந்தமர்ந்து கொண்டான்.
மணப்பாறைக்கு சொந்தங்களின்றி தனியே தோழிகளுடன் பயணம். இதுவும் நன்றாகத் தானிருந்தது அவளுக்கு. கல்லூரியில் படிக்கும்போது இப்படி வந்தது. அதை விடுத்து இப்போது தான் வருகிறாள். மணப்பாறை பேருந்து நிலையத்தில் இறங்கியதுமே விழிகள் அலைபாய்ந்தது அவளுக்கு.
‘ மளிகைக்கடை இங்கு தானே இருப்பதாக சொன்னார்கள் ?’என நினைத்தவள் , பெயர்பலகையாவது பார்க்க வேண்டும் என்று ஆவல் கொண்டாள்.
“பூரணிக்கா… வாங்க ஹாஸ்பிடலுக்கு ஆட்டோப் புடிச்சு தான் போக முடியும்.” என்று கூடப் படிக்கும் பெண் அழைக்க,
பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்ததுமே ஆட்டோ தான் நிறைய நின்றது. அருகில் ஒரு பூக்கடை வேறு. விதவிதமான ரோஜாக்களை கண்டதும் நிரூபனின் நினைவு அவள் மனதில்.
ஆட்டோவில் ஏறி அமர்ந்தும் பெயர்ப்பலகையை தேட மறக்கவில்லை அவள். ஆனால் கடை தான் தென்படவில்லை பாவம்.
‘எங்கே இருக்கும் ஒரு வேளை வேற பக்கம் வச்சிருப்பாங்களோ?!’ என்று நினைத்தபடியே வர, என்எஸ்பி சூப்பர் மார்க்கெட் என்று ஒரு பலகை மட்டும் தென்பட்டது. அதுவும் பூட்டியிருந்தது.
‘என்எஸ் மளிகை ஸ்டோர்னு தானே மோகன் சொன்னான். இங்க இல்ல போல!’ என்று யோசித்தபடி இருக்க மருத்துவமனை வந்து விட்டிருந்தது.
“இவ்வளவு பெரிய ஹாஸ்பிடலா இருக்கே இதுல எந்த வார்ட்னு தெரியலையே?” என தோழிகள் சுற்றி பார்க்க,
பூரணி ,’அந்தப் பெண்ணுக்கே அழைத்து கேட்கலாம்’ என்று சொல்ல,’ சரி ‘என அழைத்துக் கொண்டே இருக்க அழைப்பு தான் செல்லவில்லை.
“சரி விசாரிச்சுட்டேப் போவோம்” என்று புறநோயாளிகள் பிரிவிற்குள் நுழைந்துவிட்டனர்.
ஆறாவது பெட்டில் தோழியின் தந்தை படுத்திருக்க, அவரருகில் அந்தப் பெண் நின்றிருந்தாள்.
“அதோ அங்கே இருக்கா…!” எனக் கைகாட்டவும் அங்கே விரைந்தனர்.
அருகில் மற்றொரு கட்டிலில் முகம் முழுவதும் மூடியபடி ஒரு உருவம் படுத்திருந்தது. கையில் சலைன் வேறு ஏறிக் கொண்டிருக்க, அதில் கவனம் பதித்தவள் பின் திரும்பி அந்தப் பெண்ணிடம் நலம் விசாரித்தாள்.
“டைபாய்டு காய்ச்சல். இன்னும் ரெண்டு நாள் இருக்கச் சொல்லி இருக்காங்க. அம்மா வேலைக்குப் போகணும் அதான் நான் கூட இருக்கேன்க்கா” என்றாள் அப்பெண்.
சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு ,”பார்த்துக்கோ கிருத்தி. நல்லா சாப்பிட வை.” என்றபடி பழங்கள், ஹார்லிக்ஸ் அடங்கிய பையை கொடுத்தாள் பூரணி.
“சரிக்கா இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க நான் எதிர்பார்க்கவே இல்லை. தேங்க்ஸ் கா. டீ வாங்கிட்டு வரவா ?”என்று அவள் கேட்க
“அதெல்லாம் வேண்டாம் நாங்க வெளியே குடிச்சுக்கிறோம் நீ சாப்டியா.? ஏதாவது வாங்கிட்டு வரவா?” என்று அந்தப் பெண்ணிடம் கேட்க
“ஹாஸ்பிடல்லயே தருவாங்கக்கா, சாப்பாடு நல்லா இருக்கும். இங்கேயே சாப்பிட்டுடுவேன். வெளியே வாங்கினா கட்டுப்படியாகாதே. “என்றவளின் ஏழ்மைநிலை புரியத்தான் செய்தது அங்கிருந்த அனைவருக்கும்.
“சரிம்மா பார்த்துக்கோ!” என்று தன்னைப்போல் அடுத்து போர்வை மூடி படுத்திருந்த நபரைப் பார்க்க ,அப்போது போர்வை விலகியிருந்தது.
‘எங்கோ பார்த்த நினைவு?’ என்று யோசித்தவள், சற்று அருகில் சென்று பார்க்க ,”நிரூபா !” என தன்னிச்சையாக உரைத்துவிட்டாள் அவனின் பெயரை.
“என்னாச்சு என்ன… நிரூபா?” அவனருகில் சென்று அவசரமாய் உலுக்க
“யார்க்கா உங்க சொந்தக்காரங்களா…? பாவம் ரெண்டு நாளா தனியா தான் இருக்காரு. தானே போய் சாப்பாடு வாங்கி சாப்பிட்டாரு, அப்பறம் நான்தான் நேத்து வாங்கித் தந்தேன்” என்றவள்
” கூட யாரும் இல்லை போல” என்றதுமே கண்கள் கலங்கிப்போனது பூரணிக்கு.
“சொந்தமா… ஹ்ம்ம் சொந்தம் தான்.” என்று உரைத்தவளோ, அவன் நெற்றியில் கைவைத்துப் பார்க்க அனலாய் தகித்தது உடல்.
‘குமரன் எங்கேப் போனான்…? அவங்க அண்ணன் தம்பி யாருமே வரலையா…? தனியாவா…காய்ச்சலோட எப்படி இருந்தார்… எப்படி சமாளிச்சாரு…?’ அடுக்கடுக்காக கேள்விகள் உதித்தது அவள் மனதில்.
அவனை எழுப்பிடவும் தயக்கம். அவன் முகம் பார்த்து பேசிடவும் விருப்பம். தவியாய் தவித்து மனதில் அரற்றி அவனது கையைப் பிடித்துக் கொண்டாள்.
“அக்கா எழுப்புங்க” என்று மற்ற பெண்கள் சொல்ல
“தூங்குறாரே..!” என்றவள் இன்னுமே அவன் முகத்திலிருந்து விழியகற்றவில்லை.
முகம் வெகுவாய் சோர்ந்திருந்தது. தாடி வேறு மழிக்காமல் சிவந்த முகத்தில் கருகருவென இருக்க, மூக்குநுனியெல்லாம் சிவந்து கிடந்தது அவனுக்கு.
மற்றப் பெண்களும் காத்திருக்க,’ தன்னால் காத்திருக்க வேண்டாம்’ என்றெண்ணியபடி,” நீங்க கிளம்புங்கப்பா நான் அவர் முழிச்சதும் பார்த்துட்டு வர்றேன்” என்றாள்.
“அக்கா, இல்ல உங்களை எப்படி தனியா விட… ?”என்று அவர்கள் தயங்க