தனித் தனியே வண்டியில் ஏறினாலும் ஒன்றாகப் பயணித்தனர் சென்னைக்கு. மூன்று மணிக்கெல்லாம் வண்டி எழும்பூர் (எக்மோர்) ரயில் நிலையத்தில் சென்று நின்று விட்டது.
“டேய் குமரா ஸ்டேஷன் வந்திடுச்சு இறங்குடா” என சத்தமாய் நிரூபன் எழுப்பியதும் குமரன் எழுந்து கொண்டான்.
இனியன், மோகன் கூட அவன் சத்தத்தில் எழுந்து விட்டனர்.
பூரணி அப்போது தான் கண்ணசந்திருக்க , அனைவரையும் எழுப்பி விட்டான் இனியன்.
“ம்மா கொஞ்ச நேரம் தூங்க விடும்மா” மதுரா தூக்கத்தில் புலம்ப ,
மோகன் சிரித்தபடி,” மதுரா எழுந்துக்கோ, நீ வீட்ல இல்ல” என்று மெல்லிய குரலில் அதட்ட
“பின்ன என்ன காட்லயா இருக்கேன்?, மைக் மோகன் என் வீட்டுல என்ன பண்ற. போடா வெளியே. “என தூக்கத்திலேயே அவனை அடிக்க கையை காற்றில் அங்குமிங்குமாக அலைய விட்டாள்.
நிரூபன் சிரித்து விட்டான் அவள் செயலில்.
ஒரு வழியாக அவளை எழுப்பி அனைவரும் எக்மோர் ரயில்நிலையத்தில் இறங்கி விட்டனர்.
இன்னும் இருள் சூழ்ந்து தான் இருந்தது. ஆனால் ரயில்நிலையம் மின்விளக்குகளின் உதவியால் பகல் போல காட்சியளித்தது. மக்கள் கூட்டத்தில் திக்கித் திணறி நடைமேடையில் இருந்து வெளியேறி ஒரு வழியாக நெடுஞ்சாலைக்கு வந்து விட்டனர்.
“இனியா இந்த நேரத்தில் வீட்டுக்குப் போக வேண்டாம்டா. பிள்ளைங்களும் ரெடியாகி செமினாருக்குப் போகணும் அதனால ஏதாச்சும் ரூம்ல தங்கிட்டு அவங்களை செமினாருக்கு அனுப்பிட்டு நாம கிளம்புவோம்” என்றான் மோகன்.
“அதுவும் சரி தான்” என்றவன் அருகில் இருந்த தங்கும் விடுதிக்கு அவர்களை அழைத்துச் சென்றான்.
“அண்ணே எதுக்குண்ணே வீண்செலவு?, கொஞ்ச நேரம் தூங்கிட்டு குளிச்சுட்டு ரெடியாகப் போறோம் , அதுக்கு எதுக்கு ரெண்டு ரூம். ஒண்ணா போடுங்க. அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் என்னங்கடி?” என ஒரு பெண் கேட்க, மற்ற அனைவரும் சம்மதித்து விட்டனர்.
அங்கே தான் நிரூபனும், குமரனும் நின்று கொண்டிருந்தனர் தங்களுக்குள் பேசியபடி.
இனியன் பெண்களுக்கு ஒரு அறையை புக் செய்தவன், தனக்கும் மோகனுக்கும் தனியாக ஒரு அறையை புக் செய்தான்.
அதுவரைக்குமே நிரூபன் ஏதோ பேசியபடி நிற்க, இனியன் தானாக சென்று என்னவென்று விசாரித்தான்.
“இல்ல ஒரு நாலு மணி நேரம் தான் தங்கப் போறோம். அமவுண்ட் ஜாஸ்தியா இருந்தது அதான் பேசிட்டு இருக்கோம் “என்றான் நிரூபன்.
சில நிமிடம் யோசித்த இனியன்,” எங்க கூட வேணும்னா ஷேர் பண்ணிக்கிறீங்களாண்ணா?” என்று கேட்டு விட்டான்.
“அச்சோ ! உங்களுக்கு எதுக்குத் தம்பி வீண் சிரமம்?” என தயங்கினான் அவன்.
“இதுல என்ன சிரமம். எங்கத்தைக்கு யார் என்னன்னு பார்க்காம ஹெல்ப் பண்ணி இருக்கீங்க. உங்களுக்கு செய்யாம ?”என்றவன்,” சங்கடப்படாதீங்கண்ணா வாங்க.” என அழைத்து விட்டான்.
பணத்தை பாதிப்பாதி போட்டு ரூம் புக் செய்து விட்டனர்.
பெண்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குப் போக, ஆண்கள் அனைவரும் அவர்கள் பின்னோடே சென்றனர்.
“நாலு பேர் படுக்க முடியாது. நீங்க ரெண்டு பேரும் படுங்கண்ணா நாங்க கீழ படுத்துக்கிறோம்” என்றதும் மறுத்த நிரூபன்,” நீங்க படுங்கப்பா அந்தா ஷோபா இருக்கு அதுல நான் படுத்துக்கிறேன் “என்று அவர்கள் மூவரையும் படுக்க சொல்லி விட, குமரன் மறுத்து விட்டு ,”நமக்கு தரை தான் வசதி!” என்றபடி படுத்ததும் தூங்கி விட்டான்.
“இங்க ஒரு சொந்தக்காரங்க வீட்டு கல்யாணத்துக்கு வந்தோம் தம்பி. இந்த நேரத்தில் போய் எழுப்ப வேணாமின்னு போகல” என்றபடி படுத்து விட்டான் நிரூபனும்.
“நாங்களும் ஒரு கல்யாணத்திற்கு தான் வந்தோம்ண்ணா” என்று சொல்லியபடி, இனியனும் படுத்து விட்டான்.
“ஏழு மணிக்கு அலாரம் வை மோகன். அப்ப தான் கிளம்ப சரியா இருக்கும்” என சொல்லியபடியே இனியன் கண்களை மூடினான்.
மதுவும் அவள் தோழிகளும் உறங்கியிருக்க, பூரணிக்கு உறக்கம் அண்டவில்லை விழிகளை.
எண்ணங்களில் ஏதேதோ அலைப்புறுதல். ‘தன்னைக் கண்டதும் அக்கா, மாமாவின் ரியாக்ஷன் எப்படி இருக்கும்?’ என்பதை காண ஆவல் கொண்டிருந்தாள்.
அவளது எண்ணவோட்டத்தில் குறுக்கே வந்து நின்றார் நடராஜன்.
எருக்கங்குடியில் நடராஜன் என்ற பெயரில் அவளுக்குத் தெரிந்த ஒரே ஆள் அவர் மட்டும் தான். அவர் தானா இவர் என்றும் புரியவில்லை. நேரில் பார்த்தால் மட்டுமே உறுதியாய் நினைக்க முடியும் இது அவர் தானா என்று. அப்படி அவர் தான் என்றால் தன்னைக் கண்டதும் அவரின் மனநிலை எப்படி இருக்கும் என்பதே பெரிய கேள்வியாக வந்து நின்றது அவளுக்கு.
‘ஒரு வேளை காலவோட்டத்தில் தன்னை மறந்து கூட போயிருக்கலாம்!’ என்றும் நினைத்துக் கொண்டாள்.
மனம் தனது இளமைக் காலத்திற்கு பயணித்தது. கசப்பான நினைவுகள் அவை. தான் பிறந்திருக்கவே கூடாது என்று எண்ண வைத்த நாட்கள் அவை.
யோசிக்க யோசிக்க தலையை வலித்தது பூரணிக்கு. இரவு வேறு வாந்தி எடுத்ததில் இப்போது வெறும் வயிறு சத்தமிடத் துவங்கி இருந்தது.
‘இப்பவே பசிக்குதே… இந்த நேரத்தில் என்ன கிடைக்கும்?, தனியா எப்படி வெளியே போறது?’ என நினைத்தபடி அவஸ்தையாக கதவைத் திறந்தாள்.
வெளியே ரிஷெப்ஷனில் ஒரு பையன் தூங்கி வழிந்தபடி அமர்ந்திருந்தான்.
‘தூங்குற பையனை எப்படி எழுப்பறது, பாவம் தூங்கட்டும்’ என்று முனகியபடி வெளியே வர வாகனங்களின் சத்தம் கீறிச்சு கேட்டது.
‘ஹப்பா எவ்வளவு சத்தம்?’ என்று நினைத்தபடி சுற்றும் முற்றும் பார்க்க, நல்ல வேளையாக டீக்கடை இருந்தது.
‘இத்தனை ஆம்பளைங்க நிக்கிறாங்க எப்படி போறது?. பேசாம திரும்ப போய் படுத்திடலாமா?’ என்று எண்ணியபடி திரும்ப,” என்னங்க!” என்று ஒரு குரல் கேட்டது.
“நம்மளையா கூப்பிடுறாங்க… இருக்காது” என்று சொல்லியபடி முன்னே செல்ல,” ஏங்க உங்களைத் தான்!” என்று அழைத்திருந்தான் நிரூபன்.
“இல்ல ஒண்ணுமில்ல, சும்மா தான் வந்தேன்” என்று வேகமாக திரும்பி விட்டாள்.
“டீ… அது வந்து டீ குடிக்கிறீங்களா…?” என்றதும் வேண்டாமென மறுத்து விட்டுச் சென்றாள்.
நிரூபன் அதற்குமேல் வேறெதுவும் கேட்டிடவில்லை. முன்பின் தெரியாத பெண்ணை எங்ஙனம் வற்புறுத்த என விட்டு விட்டான்.
மீண்டும் அறைக்குள் சென்று விட்டாள்.
ஒரு வழியாக விடிந்து விட்டது. பெண்கள் எழும் முன்பே பூரணி குளித்து தயாராக இருக்க, மதுவின் தோழிகளும் எழுந்து தயார் ஆகி விட்டனர்.
இங்கே நிரூபனும், குமரனும் தயாராகி இனியனிடம் விடைபெற்றுக் கொண்டனர்.
*********
சரண்யா காலையிலேயே பரபரப்பாக சமைத்துக் கொண்டிருந்தார்.
மதிவாணனின் சொந்தத்தில் எல்லோரும் மண்டபத்திற்கு வந்து விடுவதாக கூறி இருக்க, பெரிதாய் அவர் வீட்டில் ஆட்கள் இல்லை. சரண்யா சொந்தத்தில் பூரணி வந்தால் தான் உண்டு. மற்றவர்கள் எல்லாம் திருமணத்திற்கு வருவதாக கூறி விட்டனர்.
“கவி சீக்கிரம் கிளம்பு, பூரணி ஃபோன் பண்ணிட்டா !”என குரல் கொடுத்துக் கொண்டே சமைத்தார்.
“ரெடி ஆகிட்டேன் மா. நான் போய் பிக் பண்ணிட்டு வரேன். கமலியை எழுப்பாதீங்க தூங்கட்டும். பத்து மணிக்கு மெஹந்தி வைக்க வந்திடுவாங்க. அப்ப எழுந்தா போதும்” என்றவன்,” அப்பா எழுந்தா எனக்கு கூப்பிடுங்க” என்றபடி கிளம்பி விட்டான்.
மதிவாணன் விழித்து தானிருந்தார். சமையலறையில் இருந்து வந்து கொண்டிருந்த வாசம், புன்சிரிப்பை வரவழைத்திருந்தது. இதுவே முன்பாக இருந்திருந்தால் சமைத்த பாத்திரத்தை போட்டு உடைத்திருப்பார். ஏனெனில் தன் மச்சினிக்குப் பிடித்த உணவுகளையாய் மனைவி சமைத்திருக்கிறாள் அல்லவா!.
“என்னங்க காஃபி தரவா?” என்று வந்து நின்ற மனைவியைப் பார்த்து விட்டு,” என்ன சமையல் காலையிலேயே ஆகிடுச்சு?” என்றார் வேண்டுமென்றே
“இல்லையே, எப்போதும் சமைக்கிற நேரம் தான் “என்று சமாளிக்க
“சரி சரி காஃபியை கொண்டா.” என்றவர் பீரோவில் எதையோத் தேட ஆரம்பித்து விட்டார்.
“ஏதாவது தேடுறீங்களா?, சொன்னா நான் தேடித் தரேன்.” என முன்வந்த சரண்யாவை முறைத்தபடி,” உன் தங்கச்சி வர்றானு ஓவரா ஐஸ் வைக்காத போ” என்று சொல்லி விட சரண்யாவோ,’ கொஞ்சம் ஓவராப் போறோமோ. அடக்கி வாசிப்போம் இல்லாட்டி இந்த மனுசன் பொசுக்குனு உச்சாணிகொம்பில் ஏறி நின்றுவாரு ‘என எண்ணியபடி,” நீங்களேத் தேடுங்க” என்று சென்று விட
‘என்ன ஒரு வார்த்தை சொன்னதும் போயிட்டா.?’ என முனகியபடி வந்தமர்ந்தார்.
ஏதாவது வேண்டுமென்றால் தானே தேட வேண்டும். இது சும்மா பாவலாவிற்கு அல்லவா தேடியது.
*********
“ம்மா பார்லர் மட்டும் போயிட்டு வந்திடவா?” நச்சரித்துக் கொண்டிருந்தாள் கமலி.
“உங்கப்பா இந்தக் கல்யாணத்திற்கு ஒத்துக்கிட்டதே பெருசு, இதுல நீ இங்கிருந்து விருகம்பாக்கம் போய் ஃபேஷியல் பண்ணனும்னு நிக்கிற. பேசாம இரு கமலி. அவரே பியூட்டிசியனுக்கு சொல்லி இருக்கிறார்” என அதட்டினார்.
“யாரு எங்கேஜ்மென்டுக்கு கூட்டிட்டு வந்தாங்களே! அவங்களா?” என்று பதைபதைப்பாக கேட்க
“எனக்குத் தெரியாதுடி. “என்றபடி கேசரியை எடுத்து நீட்டினார் ருசி பார்க்க.
“ம்மா ம்மா…ஏன்மா அவருக்கு இந்த கொலைவெறி.?, போனதடவையே ராகுல் ஏன் நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் ஹீரோயின் மாதிரி மேக்கப் போட்டு இருக்கன்னு கேட்டுட்டாரு. ப்ளீஸ் மா” என்று கெஞ்சினாள் பாவமாக
“உங்கப்பாக் கிட்ட என்னால பேச முடியாதுடி “என்றார் அவர்.
“ம்மா அதுக்கு நான் மூஞ்சியைக் கழுவிட்டு மட்டும் போய் நிற்கிறேன் ஆனா அந்தம்மா கிட்ட மட்டும் மேக்கப் போட்டுக்கவே மாட்டேன்” என்றாள் உறுதியாக .
மதிவாணன் வெளியே சென்றிருக்க பூரணி, மோகன், இனியன் மூவரும் கவினுடன் வந்தனர்.
கவின் தான் முன்னே வந்தான்.
“எங்கடா பூர்ணி?” என விழிகளை அலைய விட கவினுக்கு அத்தனை சிரிப்பு.
சிரிப்பை அவர் அறியாமல் கட்டுப்படுத்தியவன்,” பூரணி சித்தி வீட்டில் இருந்து இனியன், மோகன் தான் வந்திருக்காங்க “என்றான்.
“கவி விளையாடதடா!” என்றவர் ,”நீங்க வாங்கப்பா, உள்ள வாங்க” என்று இருவரையும் அழைத்து விட்டு வாசலை ஏமாற்றமாக பார்த்து நின்றார்.
“சரா என்னைத் தேடுறியா ?”என்று கவின் பின்னால் இருந்து எட்டிப்பார்க்க,” பூரிக்குட்டி !”என குழந்தையாக அவளை அணைத்துக் கொண்டார்.
இந்தக் குறும்புத்தனமான பூரணி இனியனுக்கும், மோகனுக்கும் புதிதானவள்.
“இந்தப் பையன் எப்படி ஏமாத்திட்டான் பாரு?, போடா படவா!” என்று கவினின் முதுகில் தட்டி விட்டு,” உள்ள வாங்கப்பா” என தங்கையை அணைத்தபடி அழைத்துச் சென்றார்.
சகோதரிகளின் பாசப் போராட்டம் முடியவே அனைவரும் உணவருந்த சென்றனர்.
“எங்கக்கா கமலி?” என பார்வையை சுழற்ற,” ரூமில் இருக்கா நீ உட்கார் நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்று உணவு மேசைக்கு செல்ல, தயக்கமாக,” அக்கா… மாமா!!” என்று கேட்க
“அவர் வெளியே போயிருக்கார் வந்திடுவார். நீங்க வாங்க சாப்பிடலாம், ஹே கவி! கமலியை கூப்பிடு நீயும் வாடா, சேர்ந்து சாப்பிடுவ” என பூரணியை அமர வைத்தார்.
கமலி ஜல் ஜல் என்று கொலுசொலி சிணுங்க வேகமாய் வந்தவள், இரு ஆண்கள் இருக்கவும் தயக்கமாக “ம்மா!” என்று வந்து நின்றாள்.
பூரணி திரும்பிப் பார்த்து விட்டு எழுந்தவள்,” கமலி !”என்றதும்,” சித்தி! ” என்று அருகில் வந்து நின்று கொள்ள ,”எப்படிடா இருக்க?” என்று அணைத்துக் கொள்ள, மதிவாணன் வீட்டினுள் நுழைந்தார்.