நிரூபன் பூரணியின் திருமண நாளும் நெருங்கி வந்திருந்தது.
திருமணத்திற்கு கேட்டதும் உடனே சம்மதம் தெரிவித்த நிரூபனைப் பார்த்து பூரணி புன்னகைக்க,’ என்ன சிரிக்கிறா, இவ எப்படி உடனே கல்யாணத்திற்கு ஒத்துக்கிட்டா… காச்சலுக்கு இவ்வளவு மதிப்பா… இல்ல வேற ஏதாச்சும் நடந்திருக்குமா… உடனே சம்மதிக்கிற ஆள் கிடையாது… இது எப்படி?’ என அத்தனை கேள்விகள் வரிசைகட்டி நின்றன அவனுக்கு.
“சரி தம்பி உடம்பை பாத்துக்கிடுங்க, நாங்க கெளம்புறோம். ஊருக்குள்ள எல்லாம் சொல்லணும். நா பத்திரிக்கை அடிச்சு செய்யலாம்னு நினைச்சேன். நீங்க வேணாங்குறீங்க. சரி பரவாயில்லை கல்யாணம் நடந்தா சரிதான்.” என்று விடைபெற்றார் கலியபெருமாள்.
நிரூபன் சரி என்று விடைகொடுக்க, அனைவரும் கிளம்பிவிட்டிருந்தனர்.
பூரணிக்கு கைபேசியில் அழைக்கிறேன் என சைகையிலேயே கூறிவிட, அவளும் சம்மதமாய் தலையசைத்து விடைபெற்றாள்.
ஆனால் இருவராலுமே தொடர்புகொள்ள முடிந்தநேரத்தில் சரிவர பேசவியலவில்லை.
இதோ அதோவென அவர்கள் எதிர்பார்த்த தருணமும் நெருங்கியிருந்தது.
திருமணத்திற்கு நிறைய அழைக்கவில்லை எனினும் இருவரின் நலன்விரும்பிகள் மனதார வாழ்த்த வந்திருந்தனர்.
திருமணத்திற்கு நடராஜன் கூட ராகுல் மஞ்சுவோடு வந்திருந்தார். வழக்கம் போல வனஜா சண்டையிட்டிருக்க , அதை பெரிதாக கண்டுகொள்ளாமல் வந்திருந்தார்.
கந்தவேலன் பரிமளா இருவரும் நிரூபனுக்காய் நிறைந்த மனதுடன் வந்திருக்க , சிவகுரு , பார்வதி, விஜயா, மூவரும் வந்து நின்றனர் பெயரளவில்.
மற்றபடி குமரன் வீட்டினர் தான் அத்தனை ஏற்பாடுகளையும் கவனித்துக் கொண்டனர். மணப்பாறையிலேயே திருமண மண்டபம் ஒன்றை பேசியிருந்தான் நிரூபன். கோவிலுக்கு திருமணம் முடிந்து செல்லலாம் இப்போது மண்டபத்தில் வைக்கலாம் என கந்தவேலன் சொல்லிவிட, மற்றவர்களும் மறுக்கவில்லை. இனியனும் ,கமலியும் நிரூபன் வீட்டில் வந்து தங்கியிருந்து மற்ற ஏற்பாடுகளை கவனிக்க நிரூபனுக்கு அதிக வேலை இல்லாமல் போனது.
மணமேடையில் பூரணி வந்து அமரும் வரையிலுமே அவனுக்கு பதற்றம் தொற்றிக் கொண்டே இருந்தது. தேவை இல்லாமல் யாரும் பேசிவிடுவார்களோ என்ற எண்ணம் அவனை அலைகழித்துக் கொண்டிருந்தது. பேசவும் செய்தார்கள் தான். இத்தனை வருடம் கழித்து இது தேவையா, இன்னும் வயதில் குறைந்த பெண்ணை பார்த்திருக்கலாம் இனி திருமணம் செய்து என்ன பயன் என்று பேசினாலும் சிலரோ இப்போதாவது மனம் வந்ததே நன்றாக இருக்கட்டும், இதில் என்ன தவறு ஏன் செய்யக்கூடாது மனதிற்கு பிடிக்கும்போது தவறில்லை எனவும் சொல்லத்தான் செய்தார்கள்.
திரைப்படத்திற்கு வரும் மிக்ஸ்ட் ரிவியூ போல இவர்களின் திருமணத்திற்கு அனைத்துப் பக்கமும் கருத்து வந்த வண்ணம் தானிருந்தது.
பூரணி மணக்கோலத்தில் இருக்க சரண்யாவிற்கும் கண்கலங்கி போனது.
கிட்டத்தட்ட பதினேழு வருடங்களுக்கு பிறகு அவளது கைகளை மருதாணி அலங்கரிக்கிறது . நகப்பூச்சு மிளிர்கிறது. அன்று நிரூபன் வைத்த குங்குமத்திற்கு பிறகு இன்று தான் குங்குமம் வைக்கிறாள். கண்ணாடி வளையல்கள் கலகலத்தது. வெளியே தெரியாத கால்கள் கூட இருக்கிறேன் என்று கால்கொலுசின் மூலம் சிணுங்கி இருப்பைக் காட்டியது.
எப்போதும் நெற்றியோடு வைக்கப்பட்டிருந்த கருப்பு வண்ணம் இன்று காதோரம் திருஷ்டிக்காய் வைக்கப்பட்டு தன்னிருப்பை மறைத்தது.
பெண்ணுக்குத்தானே அடையாளம் மறுக்கப்படுகிறது ஆண்களுக்கு இல்லையே.
“எம்மா ரெடி ஆகிட்டிங்களா? சீக்கிரம் கூட்டிட்டு வா, ஏ பவளம் என்ன நிக்கிறவ கூட்டிட்டு வா, நீ தானே நாத்தனா!?” என செவ்வந்தி அழைக்க , அவர் விழிகளெல்லாம் நீர் தழும்பியது. தன் அண்ணன் இடத்தில் இன்று வேறொரு நபர். மனம் கனத்தாலும் ஏற்க வேண்டிய நிதர்சனம்.
‘இப்படியே நினைத்தால் வாழவேண்டியவள் அல்லவா முடக்கப்படுவாள்’ என்று எண்ணி தன்னை அடக்கியவர் வாங்கண்ணி என்று அழைக்க பூரணிக்கும் மனம் சுணங்கத்தான் செய்தது.
ஐயா இடத்தில் நிரூபன் இல்லையில்லை அவர் இடத்தை யார் நிரப்பிவிட முடியும். நிரூபனே அதை ஏற்க மாட்டானே…!
கணவன் இடத்தில் தான் நிரூபன் என்ற மனிதன். துணையாய் சொந்தமாய் ஆகச்சிறந்த நண்பனாய் வரப் போகிறான். அவ்வளவே…
மதுரா சிறுமியாய் இருக்கும் போது பூரணிக்கும் மருதாணி வைக்கச் சொல்லி அத்தனை அழுகை அழுவாள். வைக்கக்கூடாது என்று மறுக்கும் போது ஏன், எதற்கு என்று கேள்வி கேட்டு துளைத்து அவளும் மருதாணியை வைக்காமல் போன நாட்கள் எத்தனையோ உண்டு.
“இந்தாடி அப்பறம் கொஞ்சிக்கலாம் வழியை விடு” என பவளம் மகளை கடிந்து கொண்டு பூரணியை மணமேடைக்கு அழைத்துச் செல்ல ,மார்த்தாண்டன் வேகமாய் வந்தார்.
“யப்பா இருய்யா இருய்யா!” என தனது பாக்கெட்டில் இருந்து ஒரு சங்கிலியை எடுக்க அனைவருக்கும் வியப்பு தான்.
“பவளம் இதை கழுத்துல போட்டுவிடு. ஏதோ என்னால முடிஞ்சதுப்பா.”என்று பவளத்திடம் கொடுக்க
“எதுக்குண்ணே இதெல்லாம் ?”பூரணி சங்கடமாய் கேட்க
“அதெல்லாம் சொல்லக்கூடாது, பவளம் போடு நேரமாவுது பாரு.” என்று கண்காட்டியபடி நிற்க பவளம் சங்கிலியை அணிவித்து விட்டார்.
நிரூபன் பூரணியைக் காணுகையில் நிறைவாய் உணர்ந்தான். ஏனோ மனதினுள் அமிழ்ந்த எண்ணங்களெல்லாம் மீண்டுமாய் உயிர்ப் பெறுவது போலொரு தோற்றம்.
ஆயிரம் குறை சொல்லி, அரைமனதாய் ஏற்று நெடிய விவாதத்திற்கு பின்னான இத்திருமணத்தை காண வந்த உறவினர்கள் முன்னிலையிலும் தன் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு வாழ்த்த வந்த நண்பர்கள் முன்னிலையிலும் பூரணியை நிரூபன் மனையாளாக ஏற்றுக் கொண்டான்.