அவனோ இலகுவாக,” இப்போ நான் என்ன கேட்டுட்டேன்னு இப்படி பார்க்கிற?” என்று கேட்க
“நான் அப்படி எல்லாம் அந்தப் பொண்ணு கிட்ட பேசினதில்லை மோகன். நான் சாதாரணமா தான் பேசினேன். நீ அதனால தப்பா எடுத்துட்டியா?” என்று படபடப்பாக கேட்டுவைக்க
“ச்சே ச்சே இல்ல கவின் நான் எதார்த்தமா தான் கேட்டேன்” என்றவன் ,”இல்ல தோணுச்சு மதுராவுக்கு நீ பொருத்தமா இருப்பன்னு, அதான் பட்டுன்னு கேட்டுட்டேன் மனசுல வச்சுக்காதே” என்று விவாதத்தை அங்கேயே முடித்து விட்டான் மோகன்.
இனியனுக்கே இதுவும் நன்றாகத் தானே இருக்கிறது எனத் தோன்றிவிட்டது. ஆனால் பவளம் ஒப்புக்கொள்ள வேண்டுமே…?!
மேலும் மூவரும் பேசப் போக, அதற்குள் கலியபெருமாள் அழைத்துவிட்டார்.
“அவங்க வந்துட்டாங்க இன்னும் என்ன காட்டுல பண்ணிட்டு இருக்கீங்க ?, வெரசா வாங்க.” என்று இணைப்பைத் துண்டிக்க மூவரும் கிளம்பிவிட்டனர்.
சட்டென்று கவின் மோகனின் கைப்பிடித்து நிறுத்தியவன்,” அப்படி உறுதியா மதுரா உனக்கு வேண்டாம்னா, நான் வீட்டுல பேசச் சொல்லவா?” என கேட்டுவிட்டான்.
“ஏன்டா ரெண்டு பேருமே பேசுறீங்களே உங்க பேச்சுக்கான ஆளே மது தான்., அவ மனசுல என்ன இருக்குன்னு தெரியாம நீங்களா ஒரு முடிவெடுக்குறீங்க?” என்றான் இனியன் முறைப்பாக.
“ஆமால்ல !”என்று இருவரும் ஒருசேர சொல்ல,
” சரிதான் மொதல்ல அத்தையைப் பார்ப்போம், அப்புறம் இதைப் பத்தி பேசலாம். என் தங்கச்சிக்குப் பிடிக்கலைனா கட்டாயம் எல்லாம் படுத்தக்கூடாது” என்று எச்சரித்துவிட்டே இனியன் கிளம்பினான்.
***********
பூரணி மறுவீடு வந்திருக்கிறாள் என்று அறிந்த அக்கம் பக்கத்தினர் மீண்டும் புறணி தான் பேசினர். சிலர் மனதார வாழ்த்தவும் செய்தனர்.
பார்வதியும், விஜயாவும் வீட்டை அத்தனை நோட்டம் விட, செவ்வந்தியும் பவளமும் கவனித்துக் கொண்டுதானிருந்தனர்.
“வீடெல்லாம் பெருசு தான்.” என்ற பேச்சு வேறு.
கலியபெருமாள் ஒரு பக்கம், மறுபக்கம் மார்த்தாண்டன் அமர்ந்திருக்க நிரூபன் பேசிக் கொண்டேயிருந்தான். அருகில் கந்தவேலன் வேறு வளவளக்க ஏதோ வருடக் கணக்கில் பழகியது போல அப்படி ஒரு விவாதம் பேச்சு தான்.
விஜயாவும், பார்வதியும் மெல்ல மெல்ல பூரணி இருந்த அறைக்கு செல்ல, அங்கே அவள் சிவலிங்கத்தின் புகைப்படத்திற்கு விளக்கேற்றிக் கொண்டிருந்தாள்.
“ஏம்மா வேற ஆம்பளையவே கட்டிக்கிட்ட, இன்னும் பழையபுருஷன் போட்டோக்கு வெளக்கேத்துற?” என்ற பார்வதியின் கேள்வியில் ஒரு மாதிரியாக சங்கடப்பட்டுப் போனாள் பூரணி.
‘என்ன பேச்சு இது?’என்பது போல எரிச்சலுடன் பார்த்தவள்,” கோவிலுக்கே போய்ட்டு வந்துட்டோம். அப்புறம் எதுக்கு வீட்டில் விளக்கேத்தணும்னு நினைக்கிறோமா என்ன…? வந்ததும் முதல் வேலையா வீட்டுச்சாமியை கும்பிட்டு தானே வேற வேலை பார்க்கிறோம்” என்றாள் நறுக்கென்று.
பார்வதியோ குழப்பத்துடன் ,” நீ என்ன சொல்ற ?”என்று கேட்கவும்
பரிமளா வேகமாக,” என் கொழுந்தன் தான் அவங்க கோவில் , போட்டோவுல இருக்கறவர் சாமினு சொல்றாங்கக்கா… சாமியை மறக்க மறுக்க நாம என்ன நாத்திகனா?” என்று கேட்டுவைக்க பதிலே பேசமுடியவில்லை பார்வதியால்.
“பூர்ணி உன்னை செவந்திக்கா கூப்பிட்டாங்க வா” என்று கையோடு பரிமளா அழைத்துச் செல்ல ,மற்ற இருவரும் வெளியே வரவேண்டிய கட்டாயம்.
*******
‘எவன் என்ன சொன்னா எனக்கென்னடா?’ என்பது போல பூரணியின் மறுவீட்டு விருந்தை அதகளப்படுத்தியிருந்தனர் கலியபெருமாளும், மார்த்தாண்டனும்.
ஊரில் ஒருவர் விடாமல் வேறு அழைப்பு விடுத்திருக்க வீடே நிறைந்திருந்தது.
‘இவ்வளவு அலப்பறை தேவையா?’ என்பது போலத்தான் பார்த்திருந்தனர் விஜயாவும் , பார்வதியும்.
பவளம் வேறு கமலியை அத்தனை தாங்கு தாங்க, பார்வதிக்கு மஞ்சுவை வனஜா திட்டியதே நினைவில் வந்து நின்றது.
“உன் மக மதிக்கலை, அத்தைனு நினைக்காம அவ பாட்டுக்கு தனிக்குடித்தனம் போயிட்டா” என்றெல்லாம் இன்னும் அதிகமாக பேசி வைத்திருக்க ,
பார்வதிக்கு,’ ஏன் மஞ்சுவை ராகுலுக்கு கட்டி வைத்தோம்?’ எனத் தோன்றிவிட்டது. செய்த பாவம் சும்மா விடுமா என்ன… எல்லாவற்றிற்கும் மேலாக மகள் கணவன் பேச்சைக் கேட்டுக் கொண்டு மறுவீட்டிற்கு பிறகு இன்னும் வீட்டிற்கு வராதது தான் அவரை அத்தனை வருத்தத்திற்குள்ளாக்கியிருந்தது. கணவனிடம் முறையிட, அவரோ,” நீதான ஆசைப்பட்ட.. என்று முடித்து விட்டார். சிவகுருவிற்கு கணவன் மனைவி ஒற்றுமையாய் இருக்கிறார்களா அதுபோதும்” என்று நினைத்து விட்டார்.
********
மதியவிருந்து முடிந்து ஓய்வெடுக்கும்படி பூரணி, நிரூபனை போகச் சொல்லிவிட, பூரணியின் அறைக்கு முதன் முதலாய் வந்திருந்தான் நிரூபன்.
ஓய்வெல்லாம் தேவைப்பட்டிருக்கவில்லை. ஆனாலும் உள்ளே வந்திருந்தான்.
“சாப்பாடு நல்லா இருந்ததா?” என்றவளிடம் வயிற்றை தொட்டு தடவிக் காட்டினான்.
“இப்படியே சாப்டேன் இன்னும் ஒரு மாசத்தில் தலகாணி மூட்டை சுமக்க வேண்டியது தான்.” என்றான் தொப்பை விழுந்துவிடும் என சூசகமாக.
“அப்போ தலகாணி மூட்டை கன்ஃபார்ம் தான்.” என்றவள்,” தூங்கறீங்களா?” என்று கேட்க
டேபிளில் சாய்ந்து நின்றபடி அவனைப் பார்க்க ,’என்ன?’ என்று பார்வையாலேயே வினவ,’ ஒன்றுமில்லை’ எனத் தலையாட்டினாள்.
“இங்கருந்து எல்லாம் எடுத்துட்டு வந்துட்டியா?” என்று கேட்டதும்
“ம்ம்ம் எடுத்தாச்சு.” என்றாள் பதிலுக்கு.
“எல்லாமா…? இல்லேயே ஒரு விஷயம் மறந்த மாதிரி இருக்கே?” என்றான் மீண்டும்.
“எல்லாம் எடுத்துட்டேன். எதுவும் மறந்தமாதிரி இல்லையே ?!”என்று அறையை சுற்றி பார்வையை சுழலவிட, சட்டென்று எழுந்தவன் அவளைப் பிடித்து சிவத்தின் புகைப்படம் முன்பு நிறுத்தினான்.
“இதை ஏன் மறந்த பூர்ணி. மறந்துட்டியா இல்லை எடுக்க வேண்டாம்னு யாரும் மறுத்துட்டாங்களா?” என்று கேட்க அவள் விழிகளில் நீர் நிரம்பியது.
“உங்களுக்கு… உங்களுக்கு” என்று அவள் தடுமாற
“ம்ம்ம்… எனக்கு என்ன எனக்கு. சாமினு சொல்லிட்டு எடுக்காம வந்தது தப்புத்தானே…?”என்றவன்
” இங்கிருந்து கிளம்பும்போது ஐயாவோட தான் கிளம்புறோம் சரியா?!” என்று சொல்ல
இன்ன உணர்வென்று தெரியாமல் திகைத்து நின்றாள் பூரணி .
“இல்லைங்க யாரும் இப்படி செய்யமாட்டாங்களே அதனால தான். “
“எல்லாரும் செய்யலைனா நாமளும் செய்யக்கூடாதுனு அர்த்தமில்லை பூரணி. எனக்குத் தோணுது எடுத்துட்டுப் போகலாம்னு. எடுத்துப்போக யார் அனுமதி கேட்கணுமா கேட்டுக்கலாம் !”என்றான் இயல்பாக.
“பெரியமாமா கிட்ட கேட்டுக்கலாம்” என்றவள்,” நான் ஒண்ணு கேட்கவா?” என்று அவன் விழி பார்க்க
“நம்ம வீட்டில் அவ ஃபோட்டோ ஏன் இல்லைன்னு கேட்கப் போறியா?” என்றான் சிரிப்புடன்.
“அவங்க அவதான் என் மனைவின்றதுக்கான எந்த அதிகாரமும் தரலையே…!அவ விஷயத்தில் அவ மனசிலும் நான் இல்லை , வாழ்க்கையிலும் இல்லை. அதைவிட அப்போ இருந்த கோபம் அவளுடைய எதையும் வச்சுக்கத் தோணலை. “என்றான்.
“சரி அதை விடு இன்னொரு கோர்ஸ் முடிக்கணுமே. அது எப்படி இங்கிருந்து போறீயா இல்லை நம்ம வீட்டிலிருந்து திண்டுக்கல் போறீயா. ஆனா போற நேரம் அதிகம் எப்படினு யோசிச்சுக்கோ” என்று சொல்ல
“இல்ல அவங்க கிட்ட பேசிட்டேன் அந்த பிராஞ்ச் மணப்பாறையிலும் இருக்கு. அந்த கோர்ஸ் மட்டும் இங்க படிக்கிறேன்னு கேட்டிருக்கேன்.” என்றாள்.
“ம்ம்ம், எல்லாம் யோசிச்சிருக்க!” என்றவனுக்கு அப்போது தான் நினைவே வந்தது திருமணத்திற்கு உடனே எப்படி ஒப்புக் கொண்டாள் என்ற விஷயம்.
“ஆமா கேட்க நினைச்சேன் எப்படி உடனே கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட?” எனும்போதே வெளியே சலசலப்பு கேட்டது.