ஐந்து மணிக்கெல்லாம் விழிப்பு தட்டி விட்டது பூரணிக்கு.
நிரூபன் படுத்த இடத்தில் இல்லை. பூரணி இரவு உறங்கிய இடத்தில் தான் உறங்கிக் கொண்டிருந்தான். உருண்டு பிரண்டு இடமாற்றம் செய்து உறக்கம் ஒரு வழியாய் வரவே நல்லுறக்கம் அவனுக்கு.
‘ஒரு இடத்தில் படுத்து தூங்க மாட்டார் போல.’என்று எண்ணியபடி போர்வையை போர்த்தி விட்டாள்.
மெல்ல அவன் உறக்கம் கலையாமல் எழுந்தவள், வெளியே வந்து கூடத்தின் மின்விளக்கை போடாமல் இருளிற்கு கண்களை பழக்கி வாயிலுக்கு வர, தெருவில் ஆட்கள் நடமாட்டம் தெரிந்தது.
‘குளிச்சுட்டுப் போவோம்.’என எண்ணியபடி மற்றொரு அறையில் இருந்த குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.
குளித்து முடித்து தலையை உலரவைத்துவிட்டு நெற்றியில் பொட்டுவைத்தவள், குங்குமத்தைப் பார்த்தாள். மெல்லிய சாரலாய் நிரூபன் நினைவு. புன்னகையுடன் வகிட்டில் இட்டுக் கொண்டாள்.
சற்று நேரத்தில் தயாராகி வந்தவள், வாசல் தெளிக்கச் செல்ல,
“அண்ணி எழுந்திருச்சுட்டீங்களா…? அம்மா வாசல்ல கோலமாவு வச்சிருக்காங்க கோலம் மட்டும் போட்ருங்க. கூட்டி சுத்தம் பண்ணிட்டேன்.” என்றாள் குமரனின் தங்கை.
“அம்மா எங்க தூங்குறாங்களா…?”
“இல்ல முழிச்சுட்டாங்க. பொறவாசல கூட்டுறாங்க” என்று சொல்லவும், வாசலுக்குச் சென்ற பூரணி பெரிய பூக்கோலம் ஒன்றை போட்டுவிட்டு நிமிர , நிரூபன் திண்ணையில் வந்தமர்ந்தான்.
“என்ன கொழுந்தனாரே…! பொண்டாட்டி கோலம் போடுறதை கருக்கல்ல பார்க்க வந்துட்டாப்ள இருக்கு. நல்ல சுறுசுறுப்பான ஆளாத்தான் கட்டி இருக்கீங்க” என்று பேசிக்கொண்டே ஒரு பெண் மாட்டை ஓட்டிக் கொண்டு கடந்தாள்.
“அண்ணியே ஒத்துக்கிட்டா சரிதான்.” என்று குரல் கொடுத்தான் நிரூபன்.
“குளிக்காம ஏன் இப்படி வந்து நிக்கிறீங்க?” என்று பூரணி மெல்லிய குரலில் கடிந்து கொள்ள
“ஒண்ணுமே நடக்கலையே… குளிக்கணுமா என்ன?” என்று கேட்டு வைத்தான்.
“காலையிலேயே பேச்சைப் பாரு. உள்ள போங்க வர்றேன்.” என்று முறைக்க
“கல்யாணம் ஆகி ஒரு நாள் தான் ஆகியிருக்கு. அதுக்குள்ள முறைப்பா?” பேசியபடியே உள்ளே செல்ல
பூரணிக்கே அது வியப்பு தான்.
கதவை சாத்தியவள்,” வாசல்ல வச்சு என்ன பேச்சு அது.? பாப்பா இருக்கா, குமரன் அம்மா இருக்காங்க காதில் விழுந்தா என்ன நினைப்பாங்க.?” என மீண்டும் முறைக்க
“அவங்க பால் வாங்க கடைக்கு போயிருக்காங்க.”என்றான் புருவமுயர்த்தி.
“மனசுக்குள்ள வயசுப்பையன்னு நினைப்போ?” என்று மூக்கைச் சுரித்தவளிடம் நெருங்கி வர
“ம்ம்ம் வரக்கூடாது, குளிச்சா தான் வரணும் .”என்று அவனைத் தள்ளி நிறுத்தினாள்.
“குளிச்சுட்டு வர்றேன்.” என்று நகர்ந்தவனை புன்னகையுடன் பார்த்துவிட்டு பூஜையறைக்குள் சென்றாள்.
இயல்பாய் நெடுநாள் பழகியது போல ஒரு உரையாடல். இருவருக்கும் காலையிலேயே அத்தனை உவகை அதில்.
“அம்மாடி விளக்கேத்திட்டு வந்து இந்தப் பாலை காய்ச்சிடு” என்று குமரனின் அம்மா குரல் மட்டும் கொடுக்க, விளக்கை ஏற்றிய பூரணி நேராக அவர் முன்பு வந்து நின்றாள்.
“யம்மா… யம்மா…! மொத மொதல்ல கட்டுக்கழுத்தி மொகத்துல தான் முழிக்கணும், இங்க வராத போ போ” என்று திகைப்பாய் பேசி முகத்தை திருப்பிக் கொண்டு வெளியே செல்ல முற்பட, அவரைக் கைப்பிடித்து நிறுத்தியவள்
“இப்படி நாமளே ஒதுங்கிப் போறதால தான் நம்மளை இப்படி ஏதாவது சொல்லி ஒதுக்கி வைக்கிறாங்க. ஆசீர்வாதம் பண்ண கட்டுக்கழுத்தியா இருக்கணுமின்னு இல்ல. நல்ல மனசிருந்தா போதும் நீங்க திரும்புங்க “என்று அவர் முகத்தை தான் பார்த்தாள்.
“என்ன சின்னம்மா நீயே இப்படி பேசிக்கிட்டு வா வா உன் மருமகளை நீ பாக்காம…” என்று நிரூபனும் வந்துவிட அவருக்கு விழிகள் கண்ணீரில் நிறைந்தது.
“நல்லா இருக்கணும் ரெண்டு பேரும்.” என மனதார வாழ்த்தினார்.
“என்னம்மா எழுந்தாச்சா ?”என்றபடி வந்தாள் பரிமளா.
“வாங்கக்கா வாங்க மாமா!” என்று கந்தனையும் பூரணி வரவேற்க, இருவரும் உள்ளே வந்தனர்.
“அத்தை வாங்க காலையில சாப்பாட்டுக்கு ரெடி பண்ணுவோம், பூர்ணி நீயி ரெடியாகு. மறுவீடு போகணுமில்ல?” என பரிமளா சொல்ல
“அக்கா சேர்ந்தே செய்யலாம் எவ்வளவு நேரம் ஆகப் போகுது?” என்று தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டவளை மனம் நிறைந்துப் பார்த்தான் நிரூபன்.
வெகுநாட்கள் கழித்து வீடு திருவிழாக் கோலம் பூண்டதில் அத்தனை மகிழ்ச்சி அவனுக்கு.
இங்கே இப்படி என்றால் சிவகுருவின் வீட்டில் அத்தனை கேலி கிண்டல் பூரணி நிரூபனைப் பற்றி. வரைமுறை இல்லாமல் போய்க் கொண்டிருந்தது அவர்களது கேலிப் பேச்சு.
அத்தனைக்கும் மூக்குடைத்தாற்போல நிரூபனும், பூரணியும் ஊருக்குள் உள்ள கோவிலுக்கு தம்பதி சமேதராய் சென்று வழிபட்டுவிட்டு வந்தனர். அப்படியே தங்கள் வீட்டிற்கு வருவார்கள் என்று எதிர்பார்த்த சிவகுரு, பார்வதிக்கு ஏமாற்றம் தான்.
“பாத்தியா பாருவதி. பெரிய வீடு அண்ணன்னு மதிச்சு பொண்டாட்டியைக் கூட்டிட்டு வந்து ஆசீர்வாதம் வாங்காம போறான் பாத்தியா?” என்றார் கோபமாக
“மொதல்ல அண்ணனா நீ அவங்களை வீட்டுக்கு கூப்புட்டியா…? மதிக்காதவங்க வாசப்படியை மிதிக்க அவன் என்ன மானங்கெட்டா அலையிறான் “என்று குட்டு வைத்துவிட்டு சென்றான் கந்தவேலன்.
“ஆமாமா அப்படியே இளவட்டமா இருந்து கல்யாணம் பண்ணிக்கிட்டான், இதுல வரவேற்பு ஒண்ணு தான் கேடு” என்றார் அவர் சத்தமாக.
“நீ கூப்புடலன்னு அவனென்ன உன் வாசல்ல உண்ணாவிரதமா இருக்கான், நீதான் பொடுபொடுன்ன.. அதான் சொன்னேன். இளசா இருந்தாலும் பழசா இருந்தாலும் கல்யாணம் கல்யாணம் தான். ஒனக்கு ஆவலைன்னா அவன் பேச்சை எதுக்கு பேசுற?, விடு.” என கந்தவேலன் சொல்லிவிட, சிவகுரு விரைப்பாக எழுந்து சென்றார்.
“ஏங்க அவர் கிட்ட இப்படி பேசுறீங்க?” என பரிமளா சங்கடமாக சொல்ல
“நீ வேற, அடுத்த பத்துநாள்ல மளிகைச்சாமானுக்கு அங்க தான் நிப்பாரு, இதுல இவருக்கு வெட்டி வீராப்பு வேற. அவனை ஏதாச்சும் சொல்லணும் இவங்களுக்கு, அப்பதான் கண்ணடையும். மனசுக்குள்ள அம்புட்டும் வெசம்டி, நீ கிளம்பு நேரத்துலேயே போவோம்.” என்றான் அவன்.
பார்வதியோ ,”இந்தா பரிமளம் நில்லு, நாங்களும் வாரோம். அப்புறம் மாப்புள வீட்டுல இருந்து ஒருத்தரும் வரலைனு பேச்சு வந்திடக் கூடாது. ஆமா வேனு தானே பேசி இருக்காவ ?”என்றார் சலிப்பாக.
“ஆமாக்கா. சரி சரி சீக்கிரம் கிளம்புங்க” என்ற பரிமளா கந்தனிடம்,’ எதுவும் கூறாதே!’ என ஜாடையாக சொல்ல, அவனும் அமைதிகாத்தான்.
“இவக வந்து என்ன தாளிக்கப் போறாகளாம் ?”என்று கந்தன் முணுமுணுக்க
“என்னத்தையும் பேசட்டும் வாயில வசம்ப வச்சு தேய்க்க வேண்டியது தான்” என்று பரிமளா சொல்ல, அனைவரும் கிளம்பினர்.
காலையிலேயே அய்யலூரில் கலியபெருமாள் வீடு பரபரப்பாய் இருந்தது. பூரணி மறுவீட்டிற்காக இங்குதான் வருகிறாள். அதனாலேயே இத்தனை ஆர்பாட்டமும்.
மதிவாணன் குடும்பத்தினர் கூட அங்குதான் இருந்தனர்.
மோகன், கவின், இனியன் மூவரும் வயலில் இருக்க மோகனே பேச்சைத் துவங்கினான்.
“அப்புறம் கவி. கல்யாணம் எல்லாம் எப்போ செய்யலாம்னு இருக்க?” என்று கேட்டு வைக்க
“இப்பவே என்ன அவசரம் செய்வோம். நீ தானே மோகன் பெரியவன். உங்க கல்யாணம் முடிஞ்சு பண்ணிக்க வேண்டியது தான். அதுவுமில்லாம பொண்ணு வேற தயாரா இருக்கு” என்றான் கவின்.
“நீ வேற மச்சான், அவன் மதுரா வேணவே வேணாங்குறான்” என்று இனியன் சொல்ல
“ஏன் மோகன் நல்லப் பொண்ணு என்ன வாய்தான் கொஞ்சம் அதிகம்” என்றுவிட
“மச்சான் எந்தங்கச்சிக் கேட்டா, அவ்வளவு தான் நீங்க .”என்று இனியன் சிரிக்க