மோகன் அசடுவழிந்தபடி ,”இல்லம்மா மறந்துட்டியோனு…” என இழுக்க
“பத்து முறை கேட்டாச்சு,நான் பத்து தடவையும் பதில் சொல்லியாச்சு. மிஸ்டர் மைக்” என கடுகடுக்க
“ஏய் மைக்னு சொல்லாதடி… அவதானே உனக்கும் சொல்லிக் கொடுத்தா. வரட்டும் அந்த நண்டு” என்று பதிலுக்கு அவன் முறைக்க
“அவ வரட்டும் சொல்லி வைக்கிறேன்” என்று சிரித்திட ,அவனும் சிரிப்புடன் ,”சீக்கிரம் வா நிவி. டைம் ஆகுது” என்றான்.
“நிவேதிதா…! நிரூபனின் சொந்தத்தில் அமைந்த பெண், நிரூபனுக்கு அம்மா வழி சொந்தத்தில் தங்கை மகள் அவள். நிரூபனின் தங்கை அவனுக்கு திருமணம் ஆனது தெரிந்து குடும்பத்துடன் வாழ்த்து தெரிவிக்க வர, அன்று பூரணிக்கு தாலிப்பெருக்கிப் போடும் வைபவத்தில் கலந்து கொண்ட மோகனைப் பார்த்து பிடித்ததும் கலந்து பேசி திருமணத்திற்கு ஏற்பாடு செய்து விட்டனர்.
நிவேதிதாவை மறுக்க காரணமில்லை மோகனுக்கு. அவனுக்கும் அவளைப் பிடித்திருக்கவே, திருமணம் செய்து வைத்துவிட்டனர். இப்போது மோகன் தன் மனைவியோடு பெங்களூரில் வசிக்கிறான் அவனுக்கான வேலையைத் தேடிக் கொண்டு.
இனியன் தான் கலியபெருமாளையும், செவ்வந்தியையும் பார்த்துக் கொள்வதாக கூறிவிட, நிம்மதியாக அங்கிருக்கிறான் அவன் ஆசையை நிறைவேற்றிக் கொண்டு.
இருவரும் இப்போது பூரணியைக் காண மணப்பாறை கிளம்பிக் கொண்டிருக்கின்றனர்.
********
“கனி இனி என்ன எய்றீங்க (செய்றீங்க) வனி ஆஸ்கிங்!?” என்றபடி ஓடிவந்தது ஒரு குட்டி வாண்டு.
கமலினி இனியனின் மகள் ஷ்ராவனி இரண்டரை வயது குட்டிவாண்டு.
“வனிக்குட்டி கிளம்பியாச்சா…?”இனியன் ஓடிவந்த மகளை தூக்கிக் கொள்ள
“ம்ம்ம்… ம்ம்ம் “
“எங்கே கிளம்பியாச்சு…!”
“மினி குட்டி பாக்க”
“யார் மினிக்குட்டி…?”
“பூரி பாட்டி தம்பி பாப்பா…”
“ஓஓஓ !, அப்போ போவோமா…? உன் மம்மியை வரச் சொல்லு”
“கனி…!”என்று சத்தமாக அழைத்திட, கமலினி வேகமாக வந்தாள்.
“ஹோய் அம்மா சொல்லுடி…”
“மாட்டேன்.. கனி இனி வனி தான் “என்றாள் முறைப்பாக
“எல்லாம் உங்களால, என்ன பேச்சு பேசுறா பாருங்க” இனியனை திட்ட
“பேசினதால தானே பேசுறா…!”என அவன் சிரிக்க
“ஹப்பா உங்க கிட்ட எல்லாம் பேசவேக் கூடாது…”
“நீ பேசாத கனி. நானே பேசிக்கிறேன். பேசுவோமா?” காதலாய் அவன் பார்க்க
“டேய் !அப்புறமா பேசுங்க வாங்க நேரமாச்சு” என பவளம் அழைத்ததும் அத்தனை சிரிப்பு அவனுக்கு.
“சிரிக்காதீங்க கோபம் வந்துடும். “
“சரி சிரிக்கலை” என அவன் கை வைத்து வாயை மூட, அவன் மகளோ கையை எடுத்துவிட்டு சிரிப்பதைக் காட்டிக் கொடுத்தாள்.
அவள் ஏதோ சொல்ல வருவதற்குள் பவளம் மீண்டும் அழைத்திட, ஒரு வழியாக பூரணியின் வீட்டிற்கு கிளம்பி விட்டனர்.
**********
நிரூபன் பூர்ணியின் செல்வமகனுக்கு இன்று முதல் பிறந்தநாள் விழா. அதற்குத்தான் அனைவரும் கிளம்பி வந்து கொண்டிருந்தனர்.
ஒரு வருடம் கழித்துத்தான் பிள்ளைசெல்வம் கிட்டியது இருவருக்கும். இருவருக்கும் குழந்தை பிறப்பதில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அதற்காக தள்ளியும் வைக்கவில்லை. தாமதமான திருமணம், அவர்களது உடல்நிலை என்று பலவற்றையும் கருத்தில் கொண்டு பிறந்தால் மகிழ்ச்சி, இல்லையேல் ஒருவருக்கு ஒருவர் துணை என்று நினைத்திருந்தனர்.
பூரணி கருத்தரித்ததற்கே பயந்து போனாள். குழந்தை ஆரோக்கியமாக பிறக்குமா?, தன் உடல் ஒரு குழந்தையை தாங்குமா?, என்றெல்லாம் பயம் என்றால்,
நிரூபனுக்கோ தன் பெற்றோர் போல தானும் தன் பிள்ளையை தவிக்க விட்டுச் சென்றிடுவோமோ என்ற பயம். இப்போது பிறந்தால் கூட தனக்கு அறுபது வரும்போது மகன் இருபதில் இருப்பான். வயதான பெற்றோரை எப்படி அவன் தாங்கி வாழுவான் என்றெல்லாம் யோசித்து பயந்திருந்தான். இதில் இத்தனை வயதிற்கு பிறகு கர்ப்பம் தரித்ததற்காக சொந்தங்களின் ஏளனப்பேச்சு பரிகாசம் வேறு அவர்களைத் தொடர்ந்தது.
“பிள்ளை எல்லாம் இந்த வயசுக்கு மேல உங்களால வளக்க முடியுமா?, சும்மா இருக்கிற காலம் வரைக்கும் சொத்துபத்தை அனுபவிச்சுட்டுப் போவீங்களா?” என்று பார்வதி குத்தலாய் சொல்லிவிட ,அத்தனை வேதனை இருவருக்கும்.
சிவகுருவிற்கு ஏதோ ஞானோதயம் பிறந்தது போல மனைவியை திட்டிவிட்டார்.
“சும்மா இருக்க மாட்டீயா நீயி. உன்னை வளர்க்க சொல்லி நிக்கிறாங்களா, போவீயா?!, நிரூவா அதெல்லாம் ஆளும் பேருமா வளர்த்துடுவீங்க வெசனப்பட்டுக்க வேண்டாம். ஆஸ்பத்திரியில் காட்டி நல்லபடியா பாத்துக்க.” என்றபடி போய்விட்டார்.
கலியபெருமாள் வீட்டில் கொண்டாடி தீர்த்துவிட்டனர் இருவரையும்.
சரண்யா வந்து தங்கையை பார்த்துக் கொண்டார். எந்த மன அழுத்தமும் பூரணிக்கு வந்துவிடக் கூடாதென அனைவருமே மெனக்கெட்டனர்.
இதில் குமரனைத்தான் கையில் பிடிக்க முடியவில்லை.
“அண்ணே நீ அண்ணி கூடவே இரு, கடை கணக்கு எல்லாம் வீட்டுக்கே கொண்டு வரேன். நீ அண்ணியைப் பார்த்தா போதும்” என்று மகிழ்ச்சியில் துள்ளிகுதித்தான்.
இப்படியான நல்லுள்ளங்களுக்கு மத்தியில் வாழ்பவளுக்கு மன அழுத்தம் வருமா என்ன…? நன்முறையில் ஆண்குழந்தையை பெற்றெடுத்துவிட்டாள் பெண்ணவள்.
********
குழந்தைக்கு ஆடை மாற்றும் கணவனை விழியகலாமல் பார்த்திருந்தாள் பூரணி.
“ம்ம்ம்… ராஜாக்குட்டி ரெடி ஆகியாச்சு. கண்ணாடியில் பார்க்கலாமா…? அப்பா எப்படி ரெடி பண்ணி இருக்கேன்னு சொல்றீங்களா?” என்றதும் பால்பற்கள் காட்டி சிரித்தான் குழந்தை.
கண்ணாடியில் முகத்தைக் காட்டியதும் தந்தைக்கு எச்சில் ஒழுக ஒரு முத்தம் பரிசாக கிடைத்தது.
“அவனுக்கு மேக்கப் பிடிச்சிருக்காம்” என பூரணி சொல்ல, நிரூபனுக்கு முகம் முழுக்க புன்னகையின் சாயல்.
ஆண்குழந்தை எல்லாம் அம்மாப்பிள்ளை என்று பொதுவாக சொல்வார்கள் இங்கே அப்படியே தலைகீழ் தான். அப்பாவுக்குத் தான் செல்லப்பிள்ளை அவன். கூறிய முதல் வார்த்தையும் அப்பா தான்.
பெண்ணை திருப்தி செய்ய முடியாதவன், பிள்ளை பெற்றுக் கொள்ள தகுதி இல்லை போல அதுதான் திருமணம் செய்யவில்லை என எத்தனையோ அவமானம் எல்லாம் இன்று காற்றில் வைத்த கற்பூரமாய் கரைந்திருந்தது மகன் அழைத்த அப்பா என்ற ஒற்றைச் சொல்லில். மித்ரனுக்கு முதலில் வருவதென்னவோ ப்பா தான் ப்பாபுவா (ரசம் சோறு) ப்பாகாபி (வரக்காப்பி)
மகனுக்கு சிவமித்ரன் என பெயரிட்டு இருந்தான் நிரூபன் . அவன் வைத்தது தன் தந்தை பெயரான சிவசாமியில் முதலும், சிவலிங்கத்தின் முதல் பெயராகவும் எடுத்து வைத்தான். தந்தை பெயரைச் சொல்லி அழைக்க முடியாதென்பதால் மித்ரன் என்று இணைத்து வைத்து மித்து என்று மட்டும் அழைக்கின்றனர்.
“நீயும் தயாராகு, எல்லாரும் வந்திடுவாங்க. பேக்கரியில் கேக் கொண்டு வருவாங்க வாங்கி வை. சமைக்க ஆள் வருவாங்க. நீ எதுவும் எடுத்து வைக்க வேண்டாம் எல்லாம் எடுத்து வச்சுட்டேன். அவங்க வந்தா சமைக்க இடம் மட்டும் காட்டு.” என்றவன்
“மதுரா பஸ் ஸ்டாண்டில் வந்து நிக்கிறதா சொல்லுச்சு, நான் போய் கூட்டிட்டு வந்திடுறேன். வரும்போதே டிஃபன் வாங்கிட்டு வரேன் அதையும் செய்ய வேண்டாம் “என்றான் பரபரப்பாக.
“அப்போ எனக்கு என்ன வேலை தான் மளிகைக்கடைக்காரர் வச்சிருக்காராம் ?”என்றாள் சிறுமூரலுடன்.
“என் சாமியை பாத்துக்கிற வேலை தான். என்ன மித்துக்குட்டி?” என்றதும் தூக்கத்திற்காக சொக்கி விழுந்து கொண்டே சாய்ந்து கொண்டான் அவன்.
“தூக்கம் வந்திடுச்சு.” என்றபடி தொட்டிலில் போட்டு ஆட்டிவிட்டு,”நீ போய் குளிப்பா” என்றான் அவளிடம்.
“அதுவரைக்கும் இருக்கீங்களா…?” என்றதும் அவளை அனுப்பி விட்டு கட்டிலில் அமர்ந்து கொண்டான்.
இருபது வருட தனிமைக்கு குட்டு வைத்தாற்போல அதன்பின் நடந்ததெல்லாம் நிரூபன் பூரணி வாழ்வில் சொர்க்கத்தின் திருவிழா தான். இடையில் சொந்தங்களின் சலசலப்பு இருந்தாலும் சந்தோஷத்திற்கு குறைவில்லை அவர்களுக்கு.
நிரூபனுக்கு தொழிலிலும் ஏற்றம் தான். வாழ்க்கையின் மகிழ்ச்சி தொழிலின் முன்னேற்றத்திலும் தெரிந்தது. சூப்பர் மார்க்கெட்டின் மேல்தளத்தில் ரெடிமேட் ஷோரூமும், மூன்றாவது தளத்தில் வீட்டு உபயோக பொருட்கள், ஃபர்னிச்சர் வகையறாக்கள் பிரிவையும் துவங்கி இருந்தான்.
என்ன சிவகுரு வீட்டினருக்குத் தான் மளிகைசாமான்கள் ஓசியில் கிடைப்பது நின்றுபோனது. முன்பிருந்த மளிகைக்கடையில் பில் போட்டும் போடாமலும் வாங்கிச் செல்வர். இப்போது எல்லாம் கணினிமயம் ஆக்கி வைத்து பில்லிங்கிற்கு ஆளும் சேர்த்திருக்க அவர்கள் பில் போடாமல் எதையும் வெளியே அனுப்புவதில்லை.
முதலாளிக்கு தெரிந்தவர்கள் என்று கூறியும் பலனில்லை.
“எங்க ஓனரண்ணனே பில் போட்டு தான் வாங்குவாங்க, காசில்லாம தந்தா கணக்குல இடிக்கும் சார்” என்று பூரணி சொல்லிக் கொடுத்ததை அச்சுப்பிசகாமல் அப்படியை ஒப்பித்து விடுவர் கடைப்பெண்கள்.
நிரூபனிடம் முறையிட்டால்,” எல்லாம் டீலர்ஸ் கிட்ட பொருள் எடுத்திருக்கேண்ணே. அவனுகளுக்கு கணக்கு ஒழிக்கும் போது கஷ்டமா இருக்கும். நான் வேணுன்னா காசு தரேன் அதுல வாங்குறியா?” என வேண்டுமென்றே கேட்டுவைக்க சிவகுருவிற்கு அதில் சற்று தலையிறக்கம். அதனால் அவன் கடையில் மளிகை வாங்குவதையே நிறுத்திவிட்டார். தம்பியிடம் மளிகை ஓசியில் வாங்கலாம், பணம் வாங்கினால் நாளை ஊருக்குள் மரியாதை போய்விடுமே என்ற எண்ணத்தில் அதை செய்யவில்லை அவர்.
பார்வதி பார்ப்பவர்களிடத்தில் எல்லாம் ,’பொருள் தரமில்லை அதனால் செல்வதில்லை ‘என்று சொல்லி வைத்திருக்க , அதற்கும் அவர்களிடத்தில் எதிர்வினையை வாங்கிக் கொள்வார்.
“என்னக்கா சொல்ற பூர்ணி கடையில தான் உளுந்தம்பருப்பு வாங்கினேன். இட்லி பந்து மாதிரி வருது, நீ கூட நல்லா இருக்குன்னு நாலு இட்லி சேர்த்து சாப்புட்டியே?” என்று குட்டு வைத்து செல்வார்கள் அண்டை அயலார் பெண்கள்.
வீட்டில் அடங்கவில்லை என்றால் ஊரில் மிதிபட்டுத்தானே ஆகவேண்டும் அந்தக் கதை பார்வதியின் கதை.
நிரூபன் பழையநினைவுகளை அசைபோட குளித்து முடித்து வந்துவிட்டாள் பூரணி.
“நீங்க போய்ட்டு வாங்க” என குரல் கொடுத்ததும் நிமிர்ந்தவன்,” மித்துக்குட்டி அம்மா அழகாகிட்டே போறாங்களே…?என்ன ரகசியம்?” அருகில் சென்று தலைக்குக் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து விட்டு முடியை உலரவிட்டான்.
“மித்துக்குட்டி அப்பா அடிவாங்கறது தான் ரகசியம். “என நமட்டுச் சிரிப்பு சிரித்தவளை கழுத்தைச் சுற்றி கைபோட்டுக் கொண்டு புன்னகைத்தவன் கன்னத்தில் முத்தமிட்டு,”சீக்கிரம் வந்திடுறேன் “வெளியேறினான்.
நீண்டநாள் பழகியதுபோல, திருமணம் ஆன புதிதிலேயே இயல்பாய் வாழ்ந்தனர் இருவரும். ஒரு மாதத்திற்குள் அவனது பழக்கவழக்கங்கள் எல்லாம் பிடிபட்டுவிட்டது அவளுக்கு. இப்படி தான் இருப்பான், இப்பொழுது தான் கோபம் வரும் என எந்த நேரம் எப்படி இருப்பான் என்றெல்லாம் கணித்திருந்தாள் அவனை.
தனிமையின் சிறைக்குள் முடங்கியிருந்தவளுக்கு வானமே எல்லை என்பது போல வரமாய் வந்தமைந்த வான்மகன்.
***********
சொந்தபந்தம் எல்லாம் நிரம்பியிருக்க, வீடே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது.
ஒருவர் விடாமல் அழைத்திருந்தனர் மகனின் பிறந்தநாள் விழாவிற்கு.
நடராஜன் சார்பாக ராகுலும், மஞ்சுவும் வந்திருந்தனர். இன்னும் இவர்களுக்கு குழந்தை இல்லை.
தங்கைக்கு இப்போது தான் திருமணம் முடித்துக் கொடுத்திருந்தான் ராகுல். காதல் திருமணம் தான். தனக்கு வாய்க்காததை தங்கைக்கு நிறைவேற்றி இருந்தான். குழந்தை இல்லாததால் விவாகரத்து செய்யும்படி கூட வனஜா திட்டியிருந்தார் அவனை.
“உன் இஷ்டத்துக்கு இனி ஆடமுடியாது. எங்களுக்கு குழந்தை எப்போ பிறக்கணும்னு கடவுள் முடிவு பண்ணுவார். நீ செஞ்ச பாவத்துல கொஞ்சமாவது அனுபவிக்க வேணாம் அதான் கடவுள் எங்களை தண்டிக்கிறாரு” என்றவன்,” இனி இப்படி பேசின மூஞ்சியிலேயே முழிக்க மாட்டேன். அப்புறம் செத்தா கூட கொல்லி போட ஆள் கிடைக்காது.” என கடுமையாக பேசியிருந்தான் வனஜாவை.
ஊருக்கு வந்திருந்த சிவகுருவிடம் ,”இதான் மச்சான் உன் தங்கச்சி லட்சணம், அவளுக்கு வேணும்னா கால்ல கூட விழுவா, இல்லாட்டி கழுத்தறுத்து போடுவா. நீயாச்சு அவளாச்சு பேசிக்கங்க” என்று நடராஜன் முடித்துவிட்டார்.
நடராஜனுக்கு மனமே ஆறவில்லை. ‘வாழ்க்கையை எத்தனைப் புரட்டிப் போட்டுவிட்டாள் படுபாவி!’ என்று தான் அவர் மனதில் தோன்றியது.
‘இவளால் தன் வாழ்வு தான் இப்படி ஆகிவிட்டது என்றால், மகன் வாழ்வையும் அல்லவா சேர்த்து அழித்து விட்டாள்’என குமுறிக் கொண்டிருந்தார்.
மகனோ,” நடந்ததை விடுங்க” என்று முடித்துவிட்டான். அவன் மனவேதனையும் புரியத்தான் செய்தது. காதல் தோல்வி எத்தனை வலி என்று அறிந்தவர் அல்லவா…
என்ன அவன் காதலுக்கும் தன் காதலுக்கும் சிறு வித்தியாசம் தான். மகன் பிறந்த பிறகல்லவா பூரணி மீது காதல் தோன்றியது அவருக்கு.
நடராஜன் தன் முதுகலைப்பட்டத்தை முடித்துவிட்டு விவசாயம் பார்த்துக் கொண்டிருக்க, அப்போதே வனஜாவை பேசிமுடித்து திருமணம் செய்து வைத்துவிட்டனர் அவரது வீட்டினர். பெரிய எதிர்பார்ப்பு இல்லை. அரசாங்க வேலைக்காக படித்துக் கொண்டிருந்தமையால் வேலைக்குச் செல்லவில்லை நடராஜன். விவசாயமும் தேர்விற்கான படிப்பும் என்று ஓடிக் கொண்டிருந்தது அவரது வாழ்க்கை. வனஜா பார்ப்பதற்கு சுமாரான பெண் தான். படிப்பும் அவ்வளவு இல்லை பத்தாம் வகுப்போடு நிறுத்தி விட்டு வீட்டில் தான் இருந்தாள் வீட்டு வேலைகளை பழகிக்கொண்டு. ஆனால் பிடிவாதமும் அகங்காரமும் சிறுவயதிலிருந்தே உண்டு அவளுக்கு. மூன்று ஆண்மகன்களோடு பிறந்த ஒற்றை பெண் கேட்கவா வேண்டும்.
‘வசதியான வீட்டில் வாழப் போகிறோம்’ என்று எண்ணி குடும்ப வாழ்வில் அடியெடுத்து வைத்தவளுக்கு, அந்த வீட்டு பழக்கவழக்கங்கள் சுத்தமாக பிடித்தமில்லை. அதிலும் ஆணழகனாய் திகழ்ந்த நடராஜன் வயல் வேலை செய்வது அறவே பிடிக்கவில்லை. வசதி வாய்ப்பிருந்து என்ன செய்ய இன்னும் பழைய பஞ்சாங்கம் போல அம்மி குழவியும் ஆட்டுக்கல்லையும் பயன்படுத்தி வேலை செய்யச் சொல்லும் மாமியாரைக் கண்டால் ஏக எரிச்சல் அவளுக்கு. நடராஜனிடம் சொன்னாலும் இதுதான் இங்கே பழக்கம் என்றுவிடுவார். ராகுல் தரித்து வளைகாப்பு போட்டுச் சென்றவள், திரும்பி வரவே மறுத்துவிட , காலங்கள் கரைந்து ராகுலுக்கு வயது மூன்று வயதாகியிருந்தது. விவாகரத்து செய்ய முடிவு செய்துவிட்டார் நடராஜன். வழக்கும் போடப்பட்டு அது போய்க் கொண்டிருக்க, இன்னும் சிறிது நாளில் விவாகரத்து கிடைத்துவிடும் என்ற நிலையில் தான் மனவுளைச்சலில் இருந்த மகனை அவரது தந்தை மீண்டும் படிக்க அனுப்பி விட்டார். நடராஜன் தன்னை புதிதாக உணர்ந்தார். எம்ஃபில் படிப்பில் கவனம் செலுத்தினார். ஆனாலும் தன்னை மீறி காதலில் விழுந்து விட்டார் பூரணியிடத்தில்.
‘தனக்குத் தான் விவாகரத்து கிடைக்கப் போகிறதே’ என்ற எண்ணத்தில் பூரணியிடம் காதலை சொல்லிவிட, இருவரும் காதல்பறவைகளாயினர். மகன் இருக்கிறான் என்று உணர்ந்திருந்தாலும் பூரணியிடம் பேசிக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டார்.
காதல் விவகாரம் வீட்டில் தெரிந்து மீண்டும் வனஜாவை அழைத்து வந்துவிட்டார் நடராஜனின் தந்தை. நடராஜனோ, இது அறியாமல் பூரணியோடு வீட்டை விட்டு ஓடிப்போக, பெரும் கலவரமாகிப் போனது. அதுவரையிலுமே பூரணிக்குத் தெரிந்திருக்கவில்லை நடராஜனுக்கு திருமணம் ஆகி குழந்தை இருக்கும் விஷயம். நடராஜன் அதை சொல்லவும் விடாமல், பூரணியை மறுபடியும் அனுப்பி வைத்துவிட
வனஜா ,’தானிருந்த இடத்தில் வேறொருத்தியை கொண்டு வருவாரா இவர் !’என்ற கோபத்தில் மனதை மாற்றிக் கொண்டு புகுந்த வீடு வரவே, நடராஜனுக்குத்தான் ஏற்க மனமில்லை அவளை.
வனஜாவோ ,அப்போதும் அடங்காமல் பூரணியின் வாழ்வில் பிரச்சினை உண்டாக்குவேன். அவள் எதிர்காலம் இல்லாமல் போய்விடும் என்று மிரட்டி மீண்டும் குடித்தனம் நடத்த திட்டமிட்டு செய்ய அவளுக்கு உறுதுணையாக இரு குடும்பமும் நின்றது. சிறுபெண்ணின் வாழ்வை வீணாக்கிவிடுவார்களோ என்று பயந்த நடராஜன், மீண்டும் வனஜாவை ஏற்றுக் கொண்டார். ஏனெனில் நண்பர்கள் மூலமாக பூரணி வீட்டில் அனுபவிக்கும் கொடுமையை அறிந்து கொண்டவர் தனக்குத் திருமணம் ஆகிவிட்டது என்று கூறும்படி சொல்லிவிட்டார்.
இவர்களின் பிரச்சினையில் ராகுல் பாதிக்கப்படுகிறான் என்று உணர்ந்து விவாகரத்து எல்லாம் மறந்து, மீண்டும் வாழ பூர்விகா தரித்துவிட்டாள்.
கல்லூரிப் பட்டமளிப்பு விழாவில் வேண்டுமென்றே பூரணியிடம் வளைகாப்பிற்கு வரும்படி சொல்லி விட்டுச் செல்ல, நடராஜனுக்குத்தான் மனம் ரணமாகியது.
மறுபடியும் மறுபடியும் பூரணியை வைத்தே பிரச்சினையை கிளப்பியவள் பூர்விகாவைத்தான் அன்று பூரணியின் காலடியில் போட்டு தன் கணவனை விட்டுவிடும்படி கெஞ்சியது எல்லாம். சிறுகுழந்தை அது ஆணா பெண்ணா என உணரக் கூட இயல்பாக இல்லை பூரணி அன்று.
இதனிடையில் நடராஜனுக்கு அரசாங்க வேலை கிடைத்ததும் தான் ஆசுவாசமானார். அதன்பிறகு தான் வனஜாவையும், அவரது அண்ணன்களையும் ஒருவழி செய்து கொண்டிருந்தார் நடராஜன். சீர் செய் , முறை செய் என்று பாடாய்படுத்தி தன் மனதின் காயத்தை ஆற்றுப்படுத்த, காலம் உருண்டோடியது.
“ஏன் நீங்களும் 23 வயசுல தானே கல்யாணம் பண்ணிங்க. ராகுல் பிறந்தான். அவனுக்கும் அதே போல பண்ணி வைங்க, இப்ப உங்க சம்பாத்தியம் இருக்கு பத்தாதா உங்களுக்கு. அதெல்லாம் நல்லா சம்பாதிப்பான் அவன்.”என்று வெடுக்கென பேசிவிட ஒன்றும் செய்ய இயலவில்லை அவரால்.
அதற்கு தகுந்தாற்போல ராகுலுக்கு கேம்பஸ் இன்டர்வியூவிலேயே வேலையும் கிடைத்துவிட, சரியென சம்மதித்து தான் மதிவாணனிடம் பேசி திருமணத்தை முடிவு செய்தார். அவர்களுக்கும் வயது ஒரு உறுத்தலாக இருக்க மகளின் காதலை மறுத்து பேச இயலாமல் திருமணத்தை ஏற்பாடு செய்துவிட்டனர்.
அதன்பிறகு தான் இத்தனை குளறுபடிகளும் நடந்தேறியிருந்தது.
இதோ இன்று அவரவர் வாழ்வை தகவமைத்துக் கொண்டனர். ஆனால் தான் என்ற நினைவே கசந்தது நடராஜனுக்கு. வீரனுக்கு ஒரு முறை மரணம் கோழைக்கு நித்தமொரு மரணம் என்பது போல வாழ்ந்திருந்தார் நடராஜன்.
***********
“மாமா போய் பேசுறீங்களா…?”சற்று மேடிட்ட வயிற்றைப் பிடித்துக் கொண்டு கணவனோடு நின்ற கமலியை பார்த்திருந்த ராகுலிடம் மஞ்சு கேட்க
“என்ன பேசுறது. நல்லா இருக்கியா என்னை மறந்துட்டியான்னா…?” என்று கேட்டவன்,” அவ ஹாப்பியா இருக்கா போதும். பார்த்ததே சந்தோஷம்.” என்றான் நிறைவாக.
“நான் போய் பேசவா… தப்பா எடுத்துக்குவாங்களா?” என்று தயங்கியவளிடம்
” போய் பேசுறதுனா பேசு, அப்படி எல்லாம் சட்டுனு முகம் காட்டமாட்டா…”என்றான் கனிவாக அவளைப் பார்த்தபடி
மஞ்சு வேகமாக அங்கு சென்றாள்.
துறுதுறுவென்று விளையாடும் ஷ்ராவனியை அவளுக்கு நிரம்ப பிடித்துவிட்டது. அவளைக் கொஞ்சிவிடும் வேகம் மஞ்சுவிடம்.
கமலினி மஞ்சுவை விலக்கவெல்லாம் இல்லை. இயல்பாய் நலம் விசாரித்து பேச ,அத்தனை மகிழ்ச்சி அவளிடம்.
“ரொம்ப தேங்க்ஸ்ங்க எங்க பேசாம ஒதுங்கி போயிடுவீங்களோனு நினைச்சேன். இது எத்தனை மாசம்?” என கேட்க
“அஞ்சு மாசம். நீங்க என்ன செஞ்சீங்க பேசாம போக. தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம்” என்றாள் கமலி மென்மையாக.
“பாப்பாவை தூக்கிக்கவா?” என்ற மஞ்சு, இனியன் ஷ்ராவனியை கொடுத்ததும் வாங்கிக் கொண்டாள். ராகுல் அவர்களை அமைதியாக கவனித்திருந்தான்.
ஷ்ராவனி செய்யும் சேட்டைகள் அவன் கவனத்தை ஈர்த்திருந்தது. ‘கமலி போல அமைதி இல்ல. துறுதுறுனு இருக்கா’ என்று நினைத்துக் கொள்ள இனியன் கவினோடு கழுத்தில் கைபோட்டு பேசிக் கொண்டிருந்தது தெரிய, ஷ்ராவனியின் துறுதுறுப்புக்கான காரணம் தெரிந்தது அவனுக்கு.
எப்படியும் ஏதேனும் விழா என்றால் சந்தித்து தான் ஆகவேண்டும், பேசும் சூழல் வந்தால் பேசித்தான் ஆகவேண்டும். ஆனால் நட்பாகவோ உறவாகவோ பழகிட முடியாதல்லவா. அதில் கவனத்துடன் இருந்தாள் அவள்.
பொய்யாகிப் போன நேசம் தான். அதையே நினைத்து வாழ்வை பொய்யாக்கிவிடுவது தான் மடத்தனம். அதனை ராகுல் கமலினி இருவருமே செய்யவில்லை. காதல் அது மனதின் ஓரத்தில் என்றும் பசுமையாய் நிலைத்திருக்கும். அதை வெளிக்காட்ட வேண்டிய அவசியம் இல்லையே.
கவின் தன் பெற்றோரோடு நின்றிருக்க, மதுரா கமலினியோடு வளவளத்துக் கொண்டிருந்தாள்.
இன்னும் பிறந்தநாள் விழா துவங்கவில்லை. அனைவரும் பேசிக் கொண்டமர்ந்திருந்தனர்.
மதிவாணன் தான் பேச்சைத் துவங்கினார். மடியில் மித்ரன் நின்றபடி அவர் தலையை தடவிக் கொண்டிருந்தான்.
‘ஆத்தாளுக்கும் மகனுக்கும் என் மண்டை மேல தான் கண்ணு.’ என நினைத்தவர்,” உட்காருடா பயலே சொட்டாந்தலையை சீவி என்ன பண்ண போற?” என்று அவனை அமர வைத்துக் கொள்ள, பூரணிக்கு சிரிப்பு வேறு வந்தது.
“அடியேய் உம்மவனை பாரேன். அலும்பு பண்றான்டி. அவர் பாரேன் தூக்கி வச்சிருக்கிறதை. அவர் பிள்ளைகளை கூட இப்படி தூக்குனாரா தெரியல. வனியையும், இவனையும் விட மாட்டேங்கிறாரு” என்று சரண்யா வேறு சொல்ல புன்னகையாக பார்த்திருந்தாள் பூரணி.
“இருக்கா ஏதோ சொல்ல வர்றாரு கேட்போம்.” என்றவள் பேச்சை கவனித்தாள்.
“எல்லாரும் கூடியிருக்கிறதால இங்கேயே பேசிடலாம்னு இருக்கேன் . எம்மகனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும். ஏற்கனவே அவன் மதுராவை கட்டி வைக்கச் சொல்லி வாய்வார்த்தையா கேட்டுட்டான். பாப்பா தான் வேலைக்குப் போகணும்னு சொல்லவும் ரெண்டு மூணு வருஷம் போகட்டும்னு விட்ருந்தேன். அவனுக்கும் வயசு ஆகுது. என்ன பொண்ணு தாரீகளா என்ன ஏதுனு சொல்லுங்க. வேற பொண்ணும் பார்க்கிற எண்ணம் அவனுக்கு இல்ல. ஒரு முடிவா சொல்லுங்க” என்றார் முடிவாக.
“இந்தாருங்க மறுவடி மறுவடி அவளையே பாக்காதீங்க. இன்னும் ரெண்டு வருஷம் வேலைக்குப் போறேனு வந்து நிப்பா. அதெல்லாம் முடியாது. கல்யாணத்தை இன்னும் ஒரு மாசத்துக்குள்ள முடிக்கிறோம் அவ்வளவு தான்” என்றார் பவளம்.
“மாமா எங்கண்ணன் நல்லா பாத்துக்குவார். எங்களுக்கு சம்மதம் நீங்க தான் சொல்லணும்” என்று கமலி சொல்லிவிட
பேத்தி பிறந்ததிலிருந்து மனிதர் குடிப்பதில்லை. பேத்தியோடு தான் நேரம் செலவிடுகிறார். கமலினி வந்ததிலிருந்து வெகுவாக அவரின் குடிப்பழக்கத்தை நிறுத்தி இருந்தாள். ஆனாலும் சுத்தமாக குடியை விட்டது ஷ்ராவனி பிறந்தபிறகு தான்.
“எத்தனை கோவிலு, எத்தனை வைத்தியம் பாத்திருப்பேன். ஒத்தநாளு எம்பேச்சு எடுபட்டு இருக்குமா.? இப்ப மருமக சொன்னா கேட்பாராம். பேத்தியை பாத்துட்டு தொடுறது கூட இல்ல. இந்த அறிவு நாங்க சொல்றப்ப எங்க போச்சாம்?” என வம்பிழுத்தாலும் பவளத்திற்கு அத்தனை நிம்மதி.
“மது சம்மதம் சொல்லட்டும்பா” என்று தீர்மானமாக நின்றான் கவின்.
‘அச்சோ ஹப்பா , நம்ம சம்மதத்தைக் கேட்டுத்தான் எல்லாம் செய்வாரு இவரு. இது கேபி இல்ல சரியான கேடி. நீ தனியா வாடி இருக்கு உனக்கு. பேசாம வேற மாப்பிள்ளை பார்க்க சொல்லி மண்டையை காயவைக்கலாமா… ? வந்ததும் வராததுமா வாயையா கடிச்சு வைக்கிற “என தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள் மது.
“மது சொல்லுடா !”என்று பூரணி அதட்டியதும்,” எனக்கு சம்மதம் அத்தை “என்றாள் வேகமாக.
“அடேங்கப்பா இவளை சம்மதிக்க வைக்க மூணு வருஷம் ஆகிடுச்சு.” என மோகன் அலுத்துக் கொண்டபடி கவினை கட்டிக் கொண்டான் மகிழ்ச்சியுடன்.
நனிமதுரா கவின் திருமணம் அனைவரின் முன்னிலையிலும் அங்கேயே நிச்சயிக்கப்பட்டுவிட்டது.
***********
மகன் மனைவியோடு சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தான் நிரூபன்.
தன் தம்பியின் புகைப்படம் அங்கே மாட்டப்பட்டிருந்ததில் அத்தனை நிறைவு கலியபெருமாளுக்கு.
“மித்துக்குட்டி சாமி கும்பிடுங்க. இப்படி இப்படி வச்சுக்கணும்” என்று இருகையையும் கூப்பி காட்ட அவன் சமர்த்தாக செய்தான்.
“இது யாரு யாரு… ?”என்று நிரூபன் பெற்றோர் புகைப்படத்தை கைகாட்ட
“அய்யா தான் சாமி.தெரியுதா உனக்கு. ஏ ராசா… சாமிக்கு தெரியுதா ஐயாவை ?”என மித்ரனை கன்னம் வழித்து கொஞ்ச பூரணிக்கு விழிகள் தழும்பியது கண்ணீரால்.
“அவர் அப்படித்தான் சொல்லித் தந்திருக்கார்.” என்றாள் சிவலிங்கத்தின் முகத்தை மனதில் நிறைத்தபடி.
அனைவருக்கும் அத்தனை மகிழ்ச்சி மித்ரனின் செயலில்.
“யப்பா நிரூவா! தம்பி பெறந்தநேரம் வந்துடுச்சு ஆரம்பிங்க” என கலியபெருமாள் சொல்லவும்,” இதோண்ணே!” என்றவன் மகன் மனைவியோடு வந்தான். குமரன் தன் குடும்பத்துடன் அருகிலேயே நின்று கொண்டான்.
கேக்கை பார்த்ததில் இருந்து அதை தொட முயன்று கொண்டிருந்தான் மித்ரன்.
“சித்தப்பா அவன் கேக்கை பிசைஞ்சு மாவாக்கறதுக்குள்ள கட் பண்ணுங்க “என மோகன் சொல்லவும் மூவருமாய் இணைந்து கேக்கை வெட்டினர்.
அனைவரின் வாழ்த்துக்களோடு சிவமித்ரன் தனது முதல் வயதில் அடியெடுத்து வைத்து விட்டான்.
ககனத்தில் சேர்ந்த பௌர்ணமியுடன் இன்று நட்சத்திரமாய் அவர்கள் வாரிசும் ஜொலிக்கிறது.