ஸ்டாஃப் ரூமில் இருக்கும் சிசிடிவி காமிராவை ஆய்வு செய்து கொண்டிருந்தான் சிவசந்திரன். கங்கா, இது வெறும் கவனக் குறைவினால் ஏற்பட்ட விபத்து என்று கூறியிருந்த போதிலும் அவனால் அதை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மருத்துவர் கூறியதைப் போலக் கேஸ் கசிவை உணர முடியாத அளவிற்கு அப்படி என்ன கவனக்குறைவு இருந்து விட முடியும். எதற்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தால் ஒரு விடை கிடைக்கும் என்று எண்ணியவன், கங்காவைப் பற்றிய எந்த விஷயத்திலும் இனி அசட்டையாக இருந்து விடக்கூடாது என்ற முடிவில் இருந்தான்.
முதலில் அந்தச் சிசிடிவி கேமரா வெறும் ஒளி காட்சிகளை மட்டும் பதிவு செய்யக்கூடிய பழைய மாடல் கேமராவாக இருந்தது பெருத்த ஆச்சரியம் அளித்தது. தொழில்நுட்பத்தில் இவ்வளவு முன்னேற்றம் அடைந்திருக்கும் இந்தக் காலத்தில் காட்சிகளை மட்டும் பதிவு செய்யும் கேமரா அதுவும் இத்தனை பெரிய பள்ளியில் இருப்பதை எண்ணி அவனுக்கு முதலில் வசுந்தரா மீது கோபம் வந்தது. அன்றைக்கு என்னவோ அவனைப் பொறுப்பற்ற ‘ஜெ எம் டி’ என்று மட்டம் தட்டினார். இப்போதானால் அவருடைய நிர்வாகமும் பொறுப்பும் பல் இளிக்கிறதே என்று எண்ணியவாறு தொடர்ந்து சிசிடிவி காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
முதலில் ஏசி கேஸ் கசிவு முற்றிலும் விபத்து தான் என்பது உறுதியானது. சந்தேகப்படும்படி யாரும் ஸ்டாஃப் ரூமில் நடந்து கொள்ளவில்லை. ஆசிரியர்கள் ஒவ்வொருவராக உள்ளே வருவதும் போவதும் பேசிக் கொண்டிருப்பதும் என்று எல்லாமே இயல்பாகத் தான் இருந்தது.
விபத்து நடந்த அன்று மதியம் உபாத்தியாயினிகள் எல்லோரும் அளவளாவி கொண்டிருக்க அவர்கள் எல்லோரும் சென்ற பின்னால் கங்கா கதவடைத்துவிட்டு வந்து அமர்கிறாள். சில நிமிடங்கள் மௌனமாக அமர்ந்திருந்தவள் கைகளை மூடிக் கொண்டு அழுகிறாள், பிறகு அவளே தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பாடப்புத்தகத்திலிருந்து கேள்வித்தாளை தயாரிக்கிறாள். சிறிது நேரத்தில் புத்தகத்தை மூடி விட்டு மேஜையின் மேல் கைகளை ஊன்றி தலை குனிந்தபடி, சற்று நேரம் நெற்றிப்பொட்டை தேய்த்துக் கொண்டிருக்கிறாள், அப்படியே மேஜை மேல் மயங்கி சரிகிறாள்.
உள்ளே இருந்த ஆசிரியர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் எதற்காகக் கங்கா அழ வேண்டும் என்று அவனுக்குக் குழப்பமாக இருந்தது. அதைக் கண்டு பிடிக்க வேண்டும் என்ற வேகமும் எழுந்தது. சட்டென, தனது மொபைலை எடுத்தவன் யாருக்கோ ஃபோன் செய்து விட்டுக் காத்திருந்தான்.
சற்று நேரத்தில் அவனைத் தேடி ஒரு ‘லிப் ரீடிங் எக்ஸ்பர்ட்’ எனப்படும் உதட்டு அசைவு மொழிபெயர்ப்பாளர் வந்திருந்தார்.
குறிப்பிட்ட சில காட்சிகளை அவருக்குப் போட்டு காட்டி அதைப்பற்றி விசாரித்தான் சிவசந்திரன். எல்லாவற்றையும் பொறுமையாகப் பார்த்துவிட்டு, ஒரு வார்த்தையும் விடாமல் மொத்த உரையாடலையும் துல்லியமாக ஒப்பித்தார் வந்தவர்.
அதைக் கேட்டு அவனது தாடை இறுகியது. அவனைப் பற்றிய மற்ற ஆசிரியர்களின் பேச்சுக்குச் சுரத்தின்றிப் பதிலளித்த போதிலும் கங்காவுக்கு அது எரிச்சலாக இருந்திருக்கிறது, அதன் வெளிப்பாடே அந்தக் கண்ணீர் என்பதும் அவனுக்குப் புரிந்தது. தன்னைப் பற்றிய வர்ணனைகளை அவனாலேயே ரசிக்க முடியாத போது தன் மனைவியான கங்காவின் மனம் அதை எப்படிச் சகித்துக் கொண்டிருக்கும். அவள் இவ்வளவு வருந்தி மன உளைச்சலுக்கு ஆளாகும் அளவிற்கு அவர்களின் பேச்சு மிக அதிகப்படி என்றே அவனுக்குத் தோன்றியது.
அதன் பலனாகப் பள்ளியில் அதிரடியாகப் பல மாற்றங்களைக் கொண்டு வந்தான் சிவசந்திரன். முதலில் பள்ளியில் இருந்த மின் சாதனங்களில் இருந்து கதவு ஜன்னல் வரை ஒவ்வொரு பொருட்களும் பழுது பார்க்கப்பட்டது. பள்ளியின் ஒவ்வொரு கட்டடத்திற்கும் தனித்தனியே மின்னியல் வல்லுனர்கள் நியமிக்கப்பட்டனர். திரும்பும் திசை எல்லாம் ஒளியும் ஒலியும் பதிவு செய்யக்கூடிய நவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. அவற்றைக் கண்காணிப்பதற்குத் தனிக் குழுவும் கட்டுப்பாட்டு அறையும் நியமிக்கப்பட்டன.
அனைத்து ஆசிரியர்களுடனும் ஒரு சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தான் அவன். கூட்டத்திற்கு வசுந்தராவையும் வரவழைத்தான். பள்ளியில் அவன் ஏற்படுத்தி இருக்கும் புதிய சட்டதிட்டத்தையும் விதிமுறைகளைப் பற்றியும் அவனே பேசினான்.
“ஆசிரியர்கள் வேலைக்கு வருவது மாணவர்களுக்குப் பாடத்தையும் ஒழுக்கத்தையும் கற்பிக்கத் தானே தவிர, வெட்டிப் பேச்சு பேசி நேரத்தை போக்குவதற்காக அல்ல. மாணவர்கள் ஒழுக்கமாகவும் பண்பாகவும் வளர்வதற்கு முதலில் ஆசிரியர்களிடம் அவை இருக்க வேண்டும். ஆசிரியர்கள் தான் மாணவர்களுக்கு முன் மாதிரி. ஆகையால் இனி ஆசிரியர்கள் யாரும் அனாவசியமான பேச்சுகளோ அடுத்தவர் பற்றிய வம்புகளையும் பள்ளி வளாகத்திற்குள் பேசிக் கொண்டிருக்கக் கூடாது. அவரவர் சொந்த விஷயத்தைப் பற்றிக் கூடச் சக ஆசிரியர்களுடன் பேசி பொழுது போக்கக் கூடாது. பள்ளிக்குள் வந்து விட்டால் மாணவர்களையும் கல்வியையும் தவிர வேறு சிந்தனையே உங்களுக்கு வரக்கூடாது. ஸ்டாஃப் ரூமில் புடவை விற்பது ஊறுகாய் விற்பது போன்ற உங்கள் சொந்த வியாபாரங்களை அவரவர் இடத்தில் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் யாரும் இனி தாமதமாக ஸ்கூலுக்கு வரக்கூடாது அப்படி வருபவர்களுக்கு ஒரு நாள் சம்பளம் கிடையாது. தொடர்ந்து ஒரு வாரம் தாமதமாக வருபவர்களுக்கு மறுநாளில் இருந்து இங்கே வேலையும் கிடையாது.
ஆசிரிய தர்மத்தை கடைப்பிடித்து உண்மையாகவும் நேர்மையாகவும் கடமையாற்றுபவர்கள் மட்டும் இங்கே வேலை செய்தால் போதும். மற்றவர்கள் இப்போதே வீட்டுக்குக் கிளம்பலாம்” என்று தனது உரையை முடித்தான்.
இதனைப் புரளி பேசும் ஆசிரியர்கள் வருத்தத்துடனும் மற்றவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
இதேபோல் மாணவர்களுக்கு மத்தியிலும் பேசினான் சிவசந்திரன். ஆனால் இவ்வளவு காரசாரமாக அல்ல. சற்று நிதானமாகவும் எளிமையாகவும் பேசினான். “கல்வி என்பது வாழ்வில் மிக மிக அத்தியாவசியமானது. அதனால் மாணவர்கள் நிச்சயமாக அடிப்படைக் கல்வி அதாவது குறைந்தபட்சம் எழுத்துக்கூட்டி படிக்கும் அளவிற்கேனும் கல்வி கற்க வேண்டியது அவசியம்” என்றான்.
பள்ளிக்குள் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளைப் பற்றியும் எடுத்துச் சொன்னான். அதன் பின்னர் ஒவ்வொரு வகுப்பிலும் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு, மனோ தத்துவ நிபுணர்களைக் வைத்து தனித்தனியே கவுன்சிலிங் வழங்கவும் ஏற்பாடு செய்தான்.
அதேபோல் பாடத்தில் சந்தேகம் கேட்பதற்குக் கூடக் கூச்சப்படுபவர்கள் மற்றவர்கள் முன்னால் பேச அச்சப்படுபவர்கள் என வகுப்பு ஆசிரியர்கள் மூலமாக மாணவர்களைத் தனித்தனியே பிரித்து அவர்களுக்கும் முறையான கவுன்சிலிங் வழங்கப்பட்டது. இதனால் மாணவர்கள் பலர் பயனடைந்தனர்.
அந்தப் பள்ளியில் பயிலும் எந்த மாணவர்களும் இனி சராசரிக்கும் கீழ் அல்லது தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் என்ற நிலையில் இருக்கவே கூடாது. அது முழுக்க முழுக்க ஆசிரியர்களின் பொறுப்பு, மற்றும் அவர்களுடைய கற்பித்தல் திறமை. ஒரு வகுப்பில் எல்லா மாணவர்களும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அதுவும் மன உளைச்சல் இன்றி அப்படிப்பட்ட மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்தான். இவ்வளவு மாற்றங்களுக்குப் பின்னால் பள்ளி தலைகீழாக மாறிவிட்டிருந்தது
சிவசந்திரன் ஏற்படுத்திய எந்த மாற்றத்திற்கும் வசுந்தரா மறுப்பு தெரிவிக்கவில்லை. அவனிடம் இப்படிப்பட்ட பொறுப்புணர்வை தான் அவரும் எதிர்பார்த்தார். இப்படிப்பட்ட பொறுப்பு கங்காவின் விஷயத்திலும் அவனுக்கு வர வேண்டும். அந்த நாளும் வெகு தொலைவில் இல்லை என்றே எண்ணினார் வசுந்தரா.
அவன் பள்ளிக்குள் கொண்டு வந்த மாற்றங்கள் எல்லாம் நன்றாக இருப்பினும், அவனுக்குள் வந்திருக்கும் மாற்றத்தை மட்டும் அவ்வளவு எளிதாக நம்ப முடியவில்லை கங்காவுக்கு.
‘இத்தனை காலமாக இல்லாத அக்கறை திடீரென்று எப்படி முளைத்தது’ என்றெண்ணி குழம்பிப் போனாள் அவள்.
‘அவனுடைய பள்ளி அவனுடைய நிர்வாகம் எப்படியோ போகட்டும் தனக்கு என்ன வந்தது’ என்று எண்ணியவள் ஒரு வாரம் விடுப்பு கேட்டு விண்ணப்பித்து இருந்தாள்.
அவள் இங்கே வந்து நீண்ட நாட்கள் ஆகி இருந்தன. அந்த விபத்திற்குப் பின்னர் அவள் மனம் தாய் மடியை தேடியது. சென்னைக்குச் சென்று தாயையும் தம்பியையும் பார்த்து விட்டு வர வேண்டும் என்பதற்காக விடுப்பு கேட்டிருந்தாள் கங்கா.
ஒரு நாள் அரை நாள் விடுப்பு என்றால் தலைமை ஆசிரியரே ஒப்புதல் வழங்கி விடுவார். ஆனால் கங்காதேவி விண்ணப்பித்திருப்பது ஒரு வாரத்திற்கு எனவே அவளுடைய விடுமுறை விண்ணப்பத்தை ‘ஜெ எம் டி’ யின் பார்வைக்கு அனுப்பி வைத்தார் அவர். இப்போது பள்ளியில் எந்த முடிவையும் அவன் தான் தீர்மானிப்பது.
சிவசந்திரன் கங்காவை நேரடியாக அழைத்து “ஏன் எதற்கு?” என்று ஆயிரம் கேள்வி கேட்டுத் துளைத்தான்.
“அது உங்களுக்குத் தேவையில்லாத விஷயம்” என்று கடுகடுத்தாள் அவள்.
“உன் வாழ்வில் அப்படி ஒரு விஷயம் இருக்கிறதா என்ன?” என்று வியப்புக் காட்டினான் சிவசந்திரன்.
“அனாவசியமான பேச்சு தேவை இல்லை” என்று வெட்டி பேசினாள் அவள்.
“முறையான காரணமின்றி யாருக்கும் விடுப்பு கொடுக்க முடியாது என்பது பள்ளியின் விதிமுறை”
“எனக்கு உடம்பு சரியில்லை” என்று வாய்க்கு வந்த காரணத்தைக் கூறினாள் கங்கா.
இருக்கையிலிருந்து எழுந்து அவளருகே வந்தவன், “ஏன் என்ன ஆனது, அந்த விபத்துக்குப் பிறகு ஏதேனும் பக்க விளைவு ஏற்படுகிறதா” என்று கரிசனத்துடன் அவள் தோள் பற்றி வினவினான்.
அவன் கைகளைத் தட்டி விட்டு, “என்னைத் தொடாதீர்கள்” என்று சீறினாள் அவள்.
பதிலுக்கு, “அது என் உரிமை” என்றான் அவன் இலகுவாக.
உரிமையாம் உரிமை என்று ஆத்திரப்பட்டவள், “அது என்றைக்கோ உங்களை விட்டுப் போய்விட்டது” என்று சினந்து கொண்டாள்.
“அப்படியா!’ என்று இகழ்சியுடன் உதட்டை வளைத்தவன், “அன்றைக்கு நீ மயங்கி கிடந்த போது சுற்றி அத்தனை பேர் இருந்த போதிலும் இதே கைகளில் தான் உன்னைத் தொட்டு தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினேன், அது ஏன் தெரியுமா? நீ கங்காதேவி சிவசந்திரன் என்பதனால் தான்” என்றான்.
“அந்தப் பெயர் உங்களுக்கு இவ்வளவு உரிமையைக் கொடுக்கிறது என்றால் சீக்கிரத்தில் அதை மாற்றி விடுகிறேன்” என்று எரிந்து விழுந்தாள் கங்கா.
“முடிந்தால் முயன்று பார்” என்றவன், “ஒரு வாரத்திற்கு மட்டும் தான் விடுப்பு. அதற்கு மேல் ஒரு நாள் கூடத் தாமதிக்காமல் பள்ளிக்கு வந்து சேர வேண்டும், ஐ மீன் ஸ்கூலுக்கு” என்றான் புன்முறுவலுடன்.
என்ன ஆனது இவனுக்கு? இப்போதெல்லாம் இவன் பேச்சும் பார்வையும் ஒரு மாதிரியாக இருக்கிறதே! ஒருவேளை அவளை இங்கிருந்து விரட்டுவதற்காக அவன் கையாளும் புது உத்தியா இது.
எப்படியோ ஒரு வாரத்திற்கு இவனைப் பார்க்கத் தேவையிராது, அதுவே போதும் என்று ஆனந்தமாக ஊருக்குக் கிளம்பினாள்.
கங்கா ஊருக்குச் சென்றிருக்கும் சமயத்தைப் பயன்படுத்திச் சில காரியங்களைச் செய்ய நினைத்தான் சிவசந்திரன்.
அதற்காக முதலில் ராஜுவை தன்னறைக்கு அழைத்தவன், “உன்னிடம் சில விஷயம் பேச வேண்டும் ராஜு அதற்காக இன்று மாலை நீ என் வீட்டிற்கு வர வேண்டும்” என்றான்.
“இங்கேயே பேசலாமே சார்” என்று ராஜு கேட்டதற்கு, “இது ஸ்கூல் சம்பந்தப்பட்ட பேச்சு அல்ல, அதனால் இங்கே பேச முடியாது. ரூல்ஸ் என்பது ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல எனக்கும் சேர்த்து தான்” என்றான்.
“சரி சார் வருகிறேன்” என்றான் ராஜு.
ராஜு தன்னைச் சந்திக்க வருவது கங்காவுக்குத் தெரியக்கூடாது, அதற்கு அவள் எதிர் வீட்டில் இல்லாத இந்தச் சமயம் தான் சிறந்தது என்று கருதினான் சிவசந்திரன்.
அன்று மாலை ராஜு அவன் வீட்டிற்கு வந்தபோது வீட்டில் வேலையாட்கள் உட்பட யாரும் இல்லாமல் பார்த்துக் கொண்டான்.
‘ஜெ எம் டி’ எதைப் பற்றிப் பேசுவதற்காகத் தன்னை அழைத்திருக்கிறான் என்று ராஜுவினால் ஊகிக்கவும் முடியவில்லை. அதுவும் அவன் கங்காவைப் பற்றிப் பேசியதை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
“நீயும் கங்காவும் கல்லூரி நண்பர்கள் இல்லையா” என்று வினவினான் சிவசந்திரன்.
இப்போது ஏன் இந்தக் கேள்வி என்று புரியாமல், “ஆமாம் சார்” என்றான் ராஜு.
“உனக்கு வினுஷாவைத் தெரியுமா?” என்ற அவனது அடுத்தக் கேள்வியில் ராஜு சற்றே தடுமாறினான்.
அவன் ‘ஜெ எம் டி’ யாக இருந்தாலும் தன்னைப் பற்றிய எல்லா விஷயங்களையும் அவனிடம் சொல்ல வேண்டும் என்று கட்டாயமில்லையே, அதனால், “ஏன் சார் இதையெல்லாம் கேட்கிறீர்கள்?” என்று பணிவுடனே கேட்டான்.
ராஜுவின் எண்ணவோட்டம் சிவசந்திரனுக்குப் புரிந்தது.
“எனக்காகத் தான்” என்றவன் தனது பர்ஸை திறந்து காண்பித்து, “இதற்காகவும்” என்றான்.
உள்ளே கங்காவை மார்போடு தழுவி இருந்தான் சிவசந்திரன். முகம் கொள்ளா புன்னகையுடன் அவன் நெஞ்சில் புதைந்திருந்தாள் கங்காதேவி.
ராஜுவின் முகத்தில் அதிர்ச்சியும் ஆச்சரியமும் மாற்றி மாற்றி வந்து போயின. ‘ஜெ எம் டி’ யுடன் கங்கா இருப்பதை அவனால் நம்பவே முடியவில்லை. இவ்வளவு நெருக்கமாக இருந்தவர்கள் இப்போது அறிமுகம் இல்லாதவர்கள் போல் நடந்து கொள்வதையும் கூட!
“இப்போது நான் கேட்கும் கேள்விகளுக்கு நீ தயக்கமின்றிப் பதில் சொல்லலாம் இல்லையா?”
“சார் நான் இப்படிச் சொல்வதற்காகத் தவறாக எண்ண வேண்டாம். இதைப் பற்றி நீங்கள் கங்காவிடமே கேட்கலாமே அவள் அனுமதி இன்றி நான் எப்படி அவளைப் பற்றிப் பேச முடியும்” என்று கேட்டான் ராஜு
வலிகளை அடக்கிய குரலில், “ஏற்கனவே சொல்லி இருக்கிறாள், ஆனால் அப்போது அதைக் கேட்டுக் கொள்ளக் கூடிய மனநிலையில் நான் இல்லை. இனி இதைப் பற்றிய பேசக்கூடிய சூழ்நிலை எங்கள் இருவருக்குமே இல்லை. இப்போது நான் உன்னிடம் பேசுவது கங்காவை பற்றித் தெரிந்து கொள்வதற்காக அல்ல நாங்கள் இருவரும் இப்படி அந்நியர்கள் போல் வாழ்வதற்குக் காரணமானவர்களைத் தெரிந்து கொள்வதற்காகத்தான்” என்றான் அவன்.
“இது சுருக்கமாகச் சொல்லி விளங்க வைக்கக் கூடிய விஷயமல்ல சார்”
“அப்படியானால் எவ்வளவு விளக்கமாகச் சொல்ல முடிந்தாலும் சொல் ஆனால் எதையும் மறைக்காமல் முழுமையாகச் சொல்” என்றான் பதைபதைக்கும் மனதுடன்.