சிவசந்திரனின் தாய் கஸ்தூரி கோவையைச் சேர்ந்தவர். வியாபார விஷயத்திற்காக அடிக்கடி கோவை வந்த நடராஜன் கஸ்தூரியை விரும்பி வீட்டுக்குத் தெரியாமல் மணந்து கொண்டார். மகன் பிறந்து மூன்று வயது நிறைவடைந்த பிறகு கூடத் தன்னுடைய கந்தர்வ மனம் பற்றி வீட்டிற்குத் தெரிவிக்காமல் மறைத்தே வைத்தார், அவருக்குத் தெரியும் அந்த விஷயம் வீட்டிற்குத் தெரிந்தால் அன்றோடு கஸ்தூரியை அவர் மறந்து விட வேண்டியது தான் என்பது! அவர் பயந்ததைப் போலவே அந்த விஷயம் அவருடைய வீட்டிற்குத் தெரிய வந்தது. அவசரமாக மகனுக்கு மணமுடித்து வைக்க நினைத்த பெரியவர்கள் தங்கள் வீட்டில் கடன் வாங்கி இருந்த வசுந்தராவின் தந்தையைக் கடனை காட்டி பணிய வைத்தனர்.
அரயல் புரசலாக நடராஜனின் முதல் மனைவியைப் பற்றிய விஷயம் ஊரில் பரவியிருக்க அவரை மணம் முடிக்க மறுத்தார் வசுந்தரா. நடராஜனின் குடும்பத்தினரோ பெண்ணைக் கொடுக்காவிட்டால் வாங்கிய கடனை வட்டியுடன் சேர்த்து ஒரே நாளில் கட்ட வேண்டும் என்று கழுத்தை நெரித்தனர். ஆனால் கடனை அடைக்க அதைத்தவிர வேறு வழி இல்லை என்று வசுந்தராவின் தந்தை மகளின் காலில் விழ மனம் நிறைந்த வெறுப்புடன் திருமணத்திற்கு உடன்பட்டார் வசுந்தரா.
வசுந்தராவை மணந்து கொள்ளாவிட்டால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வோம் என்று மிரட்டி நடராஜனையும் திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்து இருவருக்கும் விருப்பமற்ற ஒரு திருமணத்தைச் செய்து வைத்து குல கௌரவத்தைக் காப்பாற்றிக் கொண்டனர். மனைவியையும் குழந்தையையும் தன்னந்தனியே தவிக்க விட்டு வந்த நடராஜன் கடிதம் மூலம் கஸ்தூரிக்கு நடந்ததைத் தெரிவித்தார்.
அதைப் படித்தவுடன் மனதால் அந்த உறவை முறித்துக் கொண்டார் கஸ்தூரி. இனி தன் மகனுக்குத் தந்தை தேவை இல்லை தாய் மட்டும் தான் என்று தீர்மானமாக முடிவெடுத்தார். எப்பொழுதும் யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாதென்ற முடிவுடன் மகனுடன் ஊரைவிட்டு வெளியேறியவர், சென்னைக்கு வந்து ஏதோ ஒரு தொழிற்சாலையில் கூலி வேலைக்குச் சேர்ந்தார். பெரும்பாடு பட்டு மகனை பட்டதாரி ஆக்கினார்.
தன்னுடைய வாழ்நாளில் யாருக்குமே பாரமில்லாமல் வாழ்ந்த கஸ்தூரி மகன் சம்பாதிக்கத் துவங்கிய போதே அவனுக்கும் சுமையாக இல்லாமல் இறைவனடி சேர்ந்தார்.
வெறும் இனிஷியலாக மட்டுமே தந்தையை அறிந்த சிவசந்திரன் தாயின் மூலமாகத் தந்தையைப் பற்றிய முழு விபரத்தையும் அறிந்த போதிலும் கூட அவருடைய மறைவைப் பற்றித் தந்தைக்குத் தெரிவிக்கவும் இல்லை, அதன் பிறகும் தந்தையைத் தேடிச் செல்லவும் இல்லை. தாயின் வைராக்கியத்தைத் தனதாக்கிக் கொண்டு தனியாகவே வாழ்ந்து வந்தான்.
கல்லூரி படிப்பை முடித்தவுடன் சென்னையின் பழமையான ஆடிட்டிங் நிறுவனத்தில் அவனுக்கு வேலை கிடைத்தது. அவனுடைய உழைப்பும் திறமையும் வெகு சீக்கிரத்திலேயே நிறுவனத் தலைவரின் பார்வையில் பட அவருடைய நன்மதிப்போடு பணி உயர்வையும் பெற்றான். முதலாளியின் நம்பிக்கைக்கு உரியவனாக முதல் இடத்தில் இருந்த சிவசந்திரன் தொழில் சூட்சமங்கள் அத்தனையும் அவரிடம் கற்றுக் தேர்ந்தான்.
அவருடைய மறைவுக்குப் பின்னர்த் தனக்கென்று தனியாக ஆடிட்டிங் நிறுவனம் ஒன்றை நிறுவியவன், வில்லுக்கு விஜயன் என்பதைப் போல ஆடிட்டிங் என்றால் சிவசந்திரன் தான் என்று தொழிலில் பெயரெடுத்தான் பேரும் புகழும் அவனைத் தேடி வந்தன.
அதன் மூலம் பல பெரிய மனிதர்களின் நட்பும் உறவும் கிடைத்தன. அப்படிக் கிடைத்த நட்பு தான் வக்கீல் பரமேஸ்வரன் அவருடைய மகளின் திருமண விழாவிற்குச் சென்ற போது தான் கங்காவை அவன் முதன் முதலாகப் பார்த்தது.
கங்காவின் தந்தை விஸ்வநாதனுக்கும் வக்கீல் பொதுவான நண்பர் என்பதால் அவரும் குடும்பத்துடன் அந்தத் திருமணத்திற்குச் சென்றிருந்தார்.
இப்படிப்பட்ட இடங்களில் ‘விஐபி’களின் நட்பும் அறிமுகமும் தனக்குக் கிடைக்கும். அதேபோல் சௌந்தர்யவதியான மகளுக்கும் ஒரு ‘விஐபி’ மாப்பிள்ளை கிடைத்து விடுவார் என்பது விஸ்வநாதனின் கூடுதல் அபிலாஷையாக இருந்தது.
சிவப்பு நிற லெஹங்காவும் வைர நெக்லஸ் மற்றும் தோடு அணிந்து கொண்டு அழகான சிகை அலங்காரத்தில் பணக்கார வீட்டுப் பெண்ணாய் வலம் வந்த கங்காவை திருமணத்திற்கு வந்திருந்த பல ‘விஐபி’ க்களின் கண்களும் வட்டமடித்தன.
அதிக வேலைப்பாடுகளால் மிகவும் கனமாக இருந்த அந்த லெஹெங்காவை இரு புறமும் கைகளால் பற்றிக் கொண்டு தரையில் பார்வையைப் பதித்த படி நடந்து வந்து கொண்டிருந்தாள் கங்காதேவி. அவளுக்கு எதிர் புறமாக வந்து கொண்டிருந்த சிவசந்திரன் “சந்திரா…” என்ற குரல் கேட்டு நின்ற இடத்தில் இருந்தே திரும்பிப் பார்த்தவனும் கங்காவை கவனிக்கவில்லை. நொடியில் அவன் நெஞ்சில் வந்து மோதி நின்ற கங்கா, சட்டெனச் சுதாரித்துக் கொண்டவள் வேகவேகமாக ஒரு ‘சாரி’ யை கூறிக்கொண்டு விலகி ஓடினாள்..
காற்றைப் போல் தழுவி விட்டு செல்பவளை மீண்டும் ஒருமுறை பார்க்கத் தோன்றியது அவனுக்கு. அவன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்த போதே அவனை அழைத்த நண்பன் அவனருகே வந்துவிட உடனே கவனத்தை மாற்றிக் கொண்டான் சிவசந்திரன்.
எரிச்சலுடன், “என்னடா அது சந்திரா சந்திரா, சந்தர் என்றாவது அழைக்கக்கூடாதா? ஏன் தான் இப்படி என் மானத்தை வாங்கித் தொலைக்கிறாயோ” என்று நண்பனை கடிந்து கொண்டான்.
“சந்திராவில் இருக்கும் ‘கிக்’ சந்தரில் எங்கே இருக்கிறது?” என்றான் அவனது உயிர்த்தோழன் பிரமோத். அவன் வெளிநாடு வாழ் இந்தியன் உல்லாச விரும்பி எல்லாவற்றிலும் சிவசந்திரனுக்கு நேர் எதிர் குணம் கொண்டவன். ஆனால் நட்பில் கர்ணன்.
“அதெல்லாம் கிடக்கட்டும், இவ்வளவு நேரமாக இங்கே அருமையான ரொமான்டிக் காட்சி அரங்கேறியது போல” என்று கண்ணடித்த பிரமோத், “ஆனால் இதெல்லாம் எனக்குக் கொடுத்து வைக்கவில்லையப்பா” என்று அலுத்துக் கொண்டான்.
“யாராவது இருவர் தெரியாமல் மோதி கொண்டால் அது ரொமான்டிக் காட்சியா?” எனக் கேட்டான் சிவசந்திரன்.
“பல ரொமான்டிக் காட்சிகளின் தொடக்கமே இந்த மோதல் தான். அதெல்லாம் உனக்கு எங்கிருந்து தெரியப்போகிறது” என்று சலிப்புடன் பேசியவனை இடைமறித்து,
“அதைத் தெரிந்து கொள்ளும் ஆசையே எனக்கு இல்லை வா போகலாம்” என்று மேலும் அந்தப் பேச்சை தொடர விடாது அவனை அங்கிருந்து அழைத்துச் சென்றான்.
அடுத்து சில தினங்களில் கங்காவும் சிவசந்திரனும் தற்செயலாகச் சந்தித்துக் கொள்ளும் படியான சந்தர்ப்பம் அமைந்தது.
அன்று சர்வீஸுக்குக் கொடுத்திருந்த தனது காரை திரும்பப் பெறுவதற்காக நண்பன் பிரமோத்துடன் அந்தச் சர்வீஸ் சென்டருக்கு வந்திருந்தான் சிவசந்திரன்.
அப்போது சில நிமிடம் வரவேற்பில் காத்திருக்க நேர்ந்தது. மேஜை மேலிருந்த மேகசீனை எடுத்துப் படித்துக் கொண்டிருந்தான் சிவசந்திரன். வெளிப்புறமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பிரமோத் உல்லாசமாக விசில் அடித்தபடி, நண்பனின் தோளில் இடித்து வாயில் புறமாகப் பார்வையைக் காட்டினான். அவன் பார்வை போன திசையில், ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு ஸ்டண்ட் போட்டுக் கொண்டிருந்தாள் கங்கா.
“இது அந்தப் பெண் தானே?” என்று ஆர்வத்துடன் கேட்டான் பிரமோத்.
வேண்டுமென்றே, “எந்தப் பெண்” என்று அவளைத் தெரியாததைப் போல் கேட்டான் சிவசந்திரன்.
“தெரியாத மாதிரி நடிக்காதே, அன்று வக்கீல் வீட்டுத் திருமணத்தில் உன் மேல் வந்து மோதினாளே நீ அவளைத் திரும்பி திரும்பிப் பார்த்ததை நான் அங்கேயே பார்த்து விட்டேன்”
“சரியாக நினைவில்லை” என்று மழுப்பிவிட்டு, கையிலிருந்த இதழில் பார்வையைச் செலுத்தினான்.
ஆனாலும் பிரமோத்துக்கு ஆர்வம் குறையவில்லை, “ஒருவேளை இந்தப் பெண் நம்மைப் பின் தொடர்ந்து வந்திருப்பாளோ?” என்று ரகசியமாகக் கேட்டான்.
“நீ இப்படி அவளையே பார்த்துக் கொண்டிருந்தால் இந்தச் சந்தேகம் அவளுக்கே வந்துவிடும், அதனால் அவள் பக்கமாகப் பார்வையைத் திருப்பாதே” என்று அவனை அடக்கினான் சிவசந்திரன்.
“சும்மா சொல்லக் கூடாது அந்தப் பெண் செம்ம அழகுடா” என்று அவன் மேலும் அவளை வர்ணிக்கும் முன் குறுக்கிட்டு, “டேய்…” என்று விரல் நீட்டி எச்சரித்தான்.
உடனேயே, “மச்சான்…அவள் எனக்குச் சிஸ்டராடா? என்று பிரமோத் கேட்ட போது சட்டென நகைத்து விட்டான் சிவசந்திரன்.
கங்கா நேராக உள்ளே வந்து ரிசெப்ஷனில் ஏதோ பேசினாள் பின்னர் அவளுடன் ஓர் ஊழியர் சென்று அவளது ஸ்கூட்டியை ஆராய்ந்து விட்டுப் பின்னால் இருந்து கெரேஜ் க்கு தள்ளிச் சென்றான். கங்கா அவளுடைய ஸ்கூட்டியை சர்வீஸ் செய்ய வந்திருக்கிறாள் என்பது அவர்களுக்குப் பிறகு தான் புரிந்தது.
அதற்குள் சிவசந்திரனின் கார் பின்னால் இருந்து முன்னால் கொண்டு வந்து நிறுத்தப்படவும் நண்பர்கள் இருவரும் காரை நோக்கி சென்றனர்.
கங்கா முதலில் உள்ளே வந்த போதே சிவசந்திரனை பார்த்துவிட்டாள். அவள் மனதிலும் அதே கேள்வி தான், முதலில், ‘இது அன்று மோதிக் கொண்டவன் தானே’, அடுத்தது ‘அவள் போகும் இடத்தில் இவன் எப்படி?’ என்பது. ஆனால் அவன் காரைக் கண்டவுடன் அவளுக்கு ஏற்பட்ட ஐயம் அகன்றது.
அவன் காருக்காகத் தான் வந்திருக்கிறான் மற்றபடி வேறு எதற்காகவும் இல்லை முக்கியமாக அவளுக்காக இல்லை என்று நிம்மதி அடைந்தாள்.
கங்காவின் வண்டி சர்வீஸுக்காக எடுத்துச் செல்லப்பட்டததைக் கவனித்த பிரமோத் நேராக அவளிடம் சென்று, “எக்ஸ்கியூஸ் மீ” என்றவன், “நாங்கள் வேண்டுமானால் உங்களுக்கு லிஃப்ட் தரட்டுமா” என்று இனிய குரலில் கேட்டான்.
நடந்து கொண்டே, “நோ தேங்க்ஸ்” என்றவளிடம்,
மீண்டும் அவன் அவசரமாக, “நாங்கள் என்றால் நாங்கள் அல்ல இதோ என் நண்பன் லிஃப்ட் தருவான். ஹீ இஸ் எக் குட் கம்பெனி யூ நோவ்” என்றான்.
இடையில், “பிரமோத்….” என்று சிவசந்திரன் தடுத்தும் கேளாமல் பேசியவனை எரித்து விடுவதைப் போல் பார்த்தவள் ஆத்திரம் தீராமல் அவனுக்குப் பின்னால் நின்றிருந்த சிவசந்திரனையும் மூச்சிரைக்க முறைத்துவிட்டு வேகமாகச் சாலையில் வந்த ஆட்டோவை நிறுத்தி அதில் ஏறிச் சென்று விட்டாள்.
“என்னடா இவள் லிஃப்ட் கொடுக்கிறேன் என்றதற்குப் போய் இப்படி முறைக்கிறாள்” என்று குறைப்பட்டான் பிரமோத்.
பிரமோத் அவளிடம் இப்படிப் பேசியது நண்பனுக்காக. என்ன செய்வது அவன் வெளிநாட்டில் வாழ்ந்தவன். அங்கே எதையும் வெளிப்படையாகப் பேசிப் பழகியதில் இங்கேயும் அப்படியே பேசிவிட்டான். அவளும் கோபித்துக் கொண்டு போய்விட்டாள். அடுத்த முறை அவளைச் சந்திக்க நேர்ந்தால் நிச்சயம் இதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று எண்ணினான் சிவசந்திரன்.
“நீ லிஃப்ட் கொடுப்பதைப் பற்றி மட்டும் பேசியிருந்தால் அவள் மரியாதையுடன் போய் இருப்பாள். கம்பெனி கொடுப்பதைப் பற்றிப் பேசியதற்கு நம்மை அடிக்காமல் போனாளே என்று சந்தோஷப்படு” என்று அவனுடைய தவறை சுட்டிக் காட்டினான் சிவசந்திரன்.
“நிச்சயமாக….இது வெளிநாடு மாதிரி இல்லை, இங்கே பெண்களிடம் இப்படி எல்லாம் பேசக் கூடாது” என்று கண்டித்தான்.
“இந்தியாவில் நடை உடை பாவனையிலிருந்து ஓரின சேர்க்கை வரை எல்லாவற்றுக்கும் வெளிநாட்டு நாகரீகத்தைத் தான் பின்பற்றுகிறார்கள், இதில் மட்டும் தான் இப்போது கலாச்சாரச் சீர்கேடு வந்துவிட்டதா?”
“எல்லாமே அவரவர் விருப்பம் தான், அந்த லிஃப்ட்டையும் கம்பெனியையும் ஏற்றுக் கொள்வது உட்பட” என்றான் அவன் இலகுவாக.
சற்றே வருத்தமான குரலில், “ஆனால் இப்போது அவள் உன்னையும் சேர்த்து தவறாக நினைத்திருப்பாளோ?” என்றான்.
அவன் தோளில் தட்டிய சிவசந்திரன், “நினைத்தால் நினைக்கட்டும்! உனக்குச் சிஸ்டராகும் வாய்ப்பு அவளுக்கு இல்லை அவ்வளவுதான் விடு!” என்றான்.
சில தினங்களுக்குப் பின் கங்காதேவியின் தந்தை விஸ்வநாதன் வக்கீல் பரமேஸ்வரனை சந்திப்பதற்காக அவருடைய அலுவலகத்திற்கு வந்திருந்தார்.
ஆரம்பத்தில் சிறியதாக ஒரு சோடா கம்பெனி வைத்து நடத்திக் கொண்டிருந்த விஸ்வநாதன் படிப்படியாகக் குளிர்பான தொழிற்சாலையை உருவாக்கினார். நிறுவனம் வளர வளர விஸ்வாநாதனின் நண்பர் தேவராஜும் அந்தத் தொழிற்சாலையில் பணத்தை முதலீடு செய்து தன்னையும் ஒரு பங்குதாரராக இணைத்துக் கொண்டார். ஆயினும் நிறுவனத்தின் பெரும் பங்கை விஸ்வநாதன் தன்னிடமே வைத்துக் கொண்டார்.
குளிர்பான தொழிற்சாலையில் உற்பத்தி பெருக பெருக அதன் சுற்றுப் புறத்தில் இருந்த நிலங்களில் நிலத்தடி நீர் வற்ற தொடங்கியது. அதனால் விவசாயத்திற்கு நீர் பற்றாக்குறை, குடிநீர் தட்டுப்பாடு போன்ற நிலை ஏற்பட்டது. அதோடு தொழிற்சாலையில் இருந்து வரும் கழிவுகள் நேரடியாக அருகில் இருந்த நீர்நிலைகளில் கலக்கப்பட்டுச் சுற்றுச்சூழல் பாதிப்பு, பல்வேறு நோய் தொற்றுகள் எனப் பல இன்னல்கள் ஏற்பட்டன.
இதனால் பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் அந்தத் தொழிற்சாலை மேல் பல வழக்குகளைத் தொடர்ந்தனர். அத்தனையும் நிலுவையில் இருக்கும் நிலையில் அங்கே இங்கே யாருக்காவது லஞ்சம் கொடுத்து தொடர்ந்து தொழிற்சாலையை இயங்க வைத்துக் கொண்டிருக்கிறார் விஸ்வநாதன். இப்போதும் வழக்கு விஷயமாகத் தான் வக்கீல் அலுவலகத்திற்கு விஜயம் செய்திருக்கிறார்.
“ஓகே ஓகே அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று யாருடனோ போனில் பேசிய படியே வந்தார் வக்கீல்.
“நீங்கள் எப்போது வந்தீர்கள் விஸ்வநாதன், காபி சாப்பிடுகிறீர்களா?” என்று விசாரித்துவிட்டு அவருடைய தொழிற்சாலை சம்பந்தப்பட்ட கேஸ் கட்டுகளைத் தனது ஜூனியர் இடம் கொண்டு வரச் சொன்னார். எல்லாவற்றையும் மீண்டும் ஒரு முறை படித்தவர்,
“விஸ்வநாதன், உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. உங்கள் கம்பெனி வழக்கு விஷயத்தில் நியாயம் என்பது பொது ஜனம் பக்கம் தான் இருக்கிறது. அதனால் எப்போது வேண்டுமானாலும் தீர்ப்பு அவர்களுக்குச் சாதகமாக வரலாம், இல்லாவிட்டாலும் யாராவது திறமையான வக்கீல் வாதாடினால் ஸ்டே ஆர்டராவது வாங்கிவிட முடியும். நீங்களும் எத்தனை காலத்துக்குத் தான் இப்படி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துக் காரியத்தைச் சாதிக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?” என்று விஸ்வநாதன் தலையில் பேரிடியை இறக்கினார்.
அதைக் கேட்டு ஆடிப் போன விஸ்வநாதன், “நீங்களே இப்படிச் சொன்னால் எப்படிச் சார், இந்த ஊரில் உங்களை விடத் திறமையான வக்கீல் எவன் இருக்கிறான்” என்றார்.
சர்வ சாதாரணமாக, “வல்லவனுக்கு வல்லவன் வையத்தில் உண்டு விஸ்வநாதன்” என்று கூறிய வக்கீல் அவர்கள் தொடர்ந்து, “ஆனால் உங்கள் பிரச்சனைக்கு எனக்கு ஒரு தீர்வு தோன்றுகிறது” என்பதையும் சேர்த்துச் சொன்னார்.
“என்ன அது?” என்று பரபரப்பானார் விஸ்வநாதன்.
“எனக்குத் தெரிந்த ஓர் ஆடிட்டர் பிள்ளையாண்டான் இருக்கிறான். சின்ன வயது தான் ஆனாலும் உங்களையும் என்னையும் விடவும் பலே கெட்டிக்காரன், தொழிலில் நல்ல வளர்ச்சியடைந்து விட்டான் அதோடு அவனுக்கு நிறையச் செல்வாக்கும் இருக்கிறது. அவனுக்கு உங்கள் மகள் கங்காவை முடித்து விட்டால் பிறகு உங்கள் பிரச்சனைக்கு அவன் தான் நிரந்தரத் தீர்வு. அவனுக்குத் தாய் தகப்பன் இல்லை, ஆனால் அந்தஸ்தில் உங்களை விட அதிகம். முதலில் அவனை என் பெண்ணுக்கு தான் முடிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன், ஆனால் அவள் காதல் என்று ஒருவனை அழைத்து வந்துவிட்டாள். மீறி நடந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்ற மிரட்டல் வேறு, நானும் வேறு வழியின்றி ஒப்புக் கொள்ள வேண்டியதாகி விட்டது. அது என் தலை விதி, ஆனால் உங்களுக்கு என்ன உங்கள் வீட்டில் எல்லாமே உங்கள் சொற்படி தானே. நீங்கள் சரி என்றால் நான் அவனிடம் பேசிப் பார்க்கிறேன்” என்றார் தெளிவாக.
ஆதாயம் இல்லாமல் இவ்வளவு பேசுவாரா வக்கீல். தனக்குத் தெரிந்த நட்பு வட்டத்தில் யாருக்காவது சிவசந்திரன் மருமகனாகி விட்டால் அவனுடைய இன்ஃப்ளுயன்ஸ் அவருக்கும் அவ்வப்போது பயன்படும் என்பது அவருடைய மனக் கணக்கு.
விஸ்வநாதனின் மூளை அதிவேகமாக வேலை செய்தது. செல்வத்திலும் செல்வாக்கிலும் உயர்ந்து விளங்கும் ஒருவன் தனக்கு மருமகனாக வருவது தொழில் வட்டாரத்திலும் சொந்த பந்தங்களுக்கு மத்தியிலும் அவருக்கு எத்தகைய கௌரவமாக இருக்கும். அப்படியொரு ‘விஐபி’ ஐ தானே அவரும் தேடிக் கொண்டிருக்கிறார் அதுமட்டமில்லாமல் அவனால் அவருடைய தொழில் ஸ்தாபனம் ஸ்தம்பித்துப் போகாமல் தப்பிக்கும் என்றால் அதைவிடவும் வேறென்ன வேண்டும் அவருக்கு!
அதனால் மருமகனாக வரவிருப்பவனின் பெயர் குணம் இதர பழக்க வழக்கங்கள் என எதையும் ஆராய்ந்து பார்க்கும் எண்ணம் கூட அவருக்கு எழவில்லை. தனக்கு லாபம் தரக்கூடிய விஷயங்கள் நிறையவே இருப்பதால் உடனே திருமணத்திற்கு ஒப்புக் கொண்டார்.
“நமக்குச் சமமான அந்தஸ்தில் இருப்பவன் என்று நீங்களே இவ்வளவு சொன்ன பிறகு நான் எப்படி வேண்டாம் என்று சொல்ல முடியும்?” என்று காரிய சித்தியுடன் சிரித்தார் விஸ்வநாதன்.