வக்கீல் பரமேஸ்வரன் உடனடியாகச் செயலில் இறங்கினார். சிவசந்திரனிடம் நேரம் கேட்டுக் கொண்டு அவனைச் சந்திக்க அவனுடைய வீட்டுக்கு சென்றார்.
இருவரும் பொதுவாக அவரவர் ஷேம லாபங்களைப் பகிர்ந்து கொள்ள, மேற்கொண்டு வக்கீல் வந்த விஷயத்தைத் தொடங்கினார்.
“என் நண்பர் ஒருவர் அவருடைய பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கிறார். சட்டென எனக்கு உங்கள் நினைவு தான் வந்தது சிவசந்திரன், நல்ல இடம் உங்களுக்குச் சம்மதம் என்றால் நானே பேசி முடித்து விடுகிறேன்” என்றார்.
சிரித்துக் கொண்டே, “வழக்கமாக விவாகரத்து வாங்கித் தருவது மட்டும்தானே வக்கீல் வேலை. இப்போது நீங்களே திருமணமும் செய்து வைத்து விவாகரத்திற்கு ஆள் பிடிக்கிறீர்களா?” என்று கேட்டான் சிவசந்திரன்.
லேசாக அசடு வழிந்தவாறே, “ச்சேச்சே, உங்களுக்குப் பொருத்தமான இடம் என என் மனதிற்குப் பட்டதால் தான் இதைப் பற்றிப் பேசுகிறேன் இல்லாவிட்டால் இதுபோன்ற சமாச்சாரங்களில் நான் தலையிடுவதே இல்லை. நாளை இரு தரப்பிலும் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் நம் தலையைப் போட்டு உருட்டுவார்கள் பாருங்கள்” என்றார்.
“நான் இன்னும் திருமணத்தைப் பற்றி யோசிக்கக் கூட இல்லை சார்”
“ஆனால் இது நீங்கள் திருமணத்தைப் பற்றி யோசிக்க வேண்டிய வயது தானே. நான் இல்லாவிட்டால் கூட வேறு யாராவது உங்களுக்குத் தகுதியான இடங்களைப் பரிந்துரைப்பார்கள் தானே, அவனவன் உங்களைப் போன்ற மாப்பிள்ளை கிடைக்க மாட்டானா எனக் காத்துக் கொண்டிருக்கிறான்” என்று விடாமல் பேசினார்.
“இல்லை சார், இப்போதைக்கு என் எண்ணம் முழுவதும் என் நிறுவனத்தின் வளர்ச்சியில் தான் இருக்கிறது”
“நிறுவன வளர்ச்சிக்கு என்ன குறை அதுதான் விண்ணை எட்டிக் கொண்டிருக்கிறதே” என்று அவனை உயர்த்திப் பேசியவர் தொடர்ந்து, “வயதில் மூத்தவனாக உங்கள் நலம் விரும்பியாகச் சொல்கிறேன், தொழிலில் வெற்றி பெறுவது மட்டும் முக்கியமல்ல அதேபோல் வாழ்க்கையிலும் வெற்றி பெறுவது தான் முக்கியம். அதற்கு நல்ல துணைவி மற்றும் நல்ல குடும்பச் சூழ்நிலை மிகவும் அவசியம். உங்களை மணந்து கொள்ள ஆயிரம் பெண்கள் வருவார்கள் ஆனால் அவர்களில் யார் நல்ல பெண் எனத் தேர்ந்தெடுப்பது தான் கஷ்டம் இப்போது நான் சொல்லும் இடம் உங்களுக்கு ஈக்குவலான ஸ்டேட்டஸில் இருப்பவர்கள் மிகவும் நல்ல குடும்பம். அதிலும் அந்தப் பெண்ணைப் பற்றிச் சொல்லவே வேண்டாம் அவ்வளவு நல்ல பெண். அவளை ஒருதரம் பார்த்தாலே யாரும் திருமணத்தை மறுக்க மாட்டார்கள்” என்றார்.
வக்கீலுக்குப் பேசவும் கற்றுக் கொடுக்க வேண்டுமா! தொடர்ந்து விடாமல் பேசி அவன் மனதை கரைய வைத்தார்.
அவன் வெகுவாகப் பிடி தளர்வது தெரிந்தவுடன் அவ்விடத்திலேயே விஸ்வநாதனுக்கு ஃபோன் செய்து, “உங்கள் பெண்ணின் சமீபத்திய புகைப்படத்தை என்னுடைய வாட்ஸ்அப்பிற்கு அனுப்புங்கள்” என்றார்.
அடுத்து சில நிமிடங்களில் கங்காவின் புகைப்படம் வக்கீலின் கைபேசிக்கு வந்தது. அதை அவர் சிவசந்திரனிடம் காண்பிக்கக் கங்காவை பார்த்த மாத்திரத்தில் அவனுக்குள் ஒரு பரவசம் உண்டாவதை தவிர்க்க முடியவில்லை.
புகைப்படத்திலிருந்து பார்வையை எடுக்காமலேயே, “பெயர் என்ன?” என்று வினவினான்.
“கங்காதேவி” என்று அவர் சொன்ன போது அவன் மனம் உற்சாகமடைந்தது. அவரே சொன்னது போல் மறுப்பேச்சின்றிப் பெண் பார்க்க சம்மதித்தான்.
வக்கீல் அந்த விஷயத்தை விஸ்வநாதனிடம் தெரிவிக்க அவரும் அதை மனைவியிடம் கூறி மறுநாள் சிவசந்திரன் பெண் பார்க்க வரவிருப்பதையும் கூறினார்.
விஸ்வநாதன் ஒரு ஆணாதிக்கவாதி! அவரை எதிர்த்து பேசுவதோ அல்லது கேள்வி கேட்பதோ அந்த வீட்டில் நடக்காத ஒன்று. அவர் சொன்ன சொல்லுக்குக் கட்டுப்படுவது தான் மனைவி மக்களின் வேலை.
பிள்ளைகள் ஒன்றிரண்டு விஷயத்தில் முரண்பட்டாலும் மனைவிக்கு அவர் கொடுக்கும் தண்டனையில் மாதவியே அவர்களைச் சம்மதிக்க வைத்து விடுவாள். இம்முறையும் அதுவே நடந்தது “யார் என்றே தெரியாதவன் முன்னாள் எப்படி அலங்கரித்துக் கொண்டு நிற்பது நான் என்ன பொம்மையா” என்று கங்கா தாயிடம் பெண்ணுரிமை பேச மாதவி மகளை அடக்கினாள்.
“காலம் காலமாக எல்லா வீடுகளிலும் இப்படித் தான் நடந்து கொண்டிருக்கிறது. இதுதான் சம்பிரதாயம் இதுதான் முறை” என்று எடுத்துச் சொன்னாள் மாதவி.
கோபத்துடன், “அதனால் தான் உங்கள் வாழ்க்கை இப்படி இருக்கிறது அம்மா. பெண்ணின் விருப்பத்தைக் கேளாமல் முடிவெடுக்கும் அதிகாரத்தை இவர்களுக்கு யார் தான் கொடுத்ததோ, அப்பாவிடம் இதைப் பற்றி நானே பேசுகிறேன்” என்று பொங்கி எழுந்தாள் கங்காதேவி.
மகள் இவ்வளவு பேசியது தெரிந்தாலே விஸ்வநாதன் மாதவியின் தோலை உரித்து விடுவார். இந்த லட்சணத்தில் அவள் நேராக அவரிடமே பேசினால் அவ்வளவுதான் என்று பயந்த மாதவி, கணவரின் கோபத்தை மகள் தாங்கிக் கொள்ள மாட்டாள் எனவே மெதுவாக அவளுக்கு எடுத்துக் கூற முற்பட்டாள்.
“என் வாழ்க்கை ஒன்றும் நீ நினைப்பது போல் அவ்வளவு மோசமாக இல்லைம்மா. உன் அப்பா கொஞ்சம் கோபக்காரர் தான் ஆனால் அதைத் தவிர என் வாழ்வில் வேறென்ன குறை சொல்லு. துணிமணி நகைநட்டு பஞ்சு மெத்தை சொகுசு கார் எல்லாம் தான் இருக்கிறதே” என்றார்.
“அது மட்டுமே போதுமா அம்மா?” என்ற மகளின் கேள்வியில் மாதவியின் மனம் விம்மியது.
நிச்சயமாகப் போதாது தான்! வசதிக்கு ஆயிரம் தேவைப்பட்டாலும் வாழ்க்கைக்குத் தேவையான நிம்மதி மட்டும் தான். அது ஒரு நாள் கூட மாதவிக்குக் கிடைத்ததில்லை. பெற்ற மகளிடம் கூட இந்தத் துயர வாழ்வை பற்றி அவள் மனம் திறந்து பேசியதில்லை. அப்படிப் பேசினால் அவள் ஒரேயடியாக எல்லாவற்றையும் வெறுத்து விடுவாளே என்று தனக்குள்ளே வைத்துக் கொண்டிருப்பாள்.
குழந்தை பருவத்தில் தந்தையின் குணம் பற்றிப் புரியாவிட்டாலும் வளர வளர அவரை நன்றாகவே புரிந்து கொண்டு விட்டாள் கங்கா.
தந்தை எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும் “எல்லார் வீட்டிலும் இப்படித்தான்” என்று விட்டேற்றியாக விட்டு விடும் மாதவியை அவளால் மாற்றவே முடியவில்லை.
“அதெல்லாம் கிடைக்காதவர்களுக்குத் தான் அதன் அருமை தெரியும்” என்றவள், “என்ன இருந்தாலும் உன் அப்பா மோசமான ஒருவனை மாப்பிள்ளையாகத் தேர்ந்தெடுத்து இருக்க மாட்டார் என்றுதான் நான் நினைக்கிறேன். அதனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஒப்புக்கொள்”
“வருகிறவன் நல்லவனாகவே இருக்கட்டும் ஆனால் எனக்கென்று தனிப்பட்ட விருப்பமே இல்லையா அம்மா” என்று வருத்தத்தோடு கேட்டாள் மகள்.
“நீ இப்பிறவியில் அப்படிப்பட்ட இடத்தில் பிறக்கவில்லை கங்கா. எப்படி இருந்தாலும் உன் அப்பா தேர்ந்தெடுப்பவன் தான் உனக்குக் கணவனாக வருவான், வீணாக மனதில் எதுவும் ஆசை வளர்த்துக் கொள்ளாமல் நடப்பதை ஏற்றுக் கொள்” என்று கெஞ்சலுடன் முடித்தாள் மாதவி.
மறுநாள் பெண் பார்க்கும் படலத்திற்காகச் சிவசந்திரனை விஸ்வநாதன் வீட்டிற்கு அழைத்து வந்தார் வக்கீல். அன்னையின் வற்புறுத்தலுக்காக அலங்காரப் புதுமையாக வந்து நின்ற கங்காதேவி மாப்பிள்ளையாக வந்திருந்த சிவச்சந்திரனை பார்த்து ‘இவனா!’ அதிர்ச்சி அடைந்தாள்.
ஆக, எல்லாம் இவனுடைய வேலை தான் போலும்! இவன்தான் வேண்டுமென்றே அவளைப் பின்தொடர்ந்து தந்தைக்குத் தூபம் போட்டுத் திருமணப் பேச்சு வரை கொண்டு வந்திருக்கிறான் மற்றபடி அப்பாவுக்கு இவனை எப்படித் தெரியும் என்று தவறாகப் புரிந்து கொண்டு மனதுக்குள் அவனைச் சாடினாள்.
அவனோ வக்கீலிடம் , “பெண்ணுடன் தனியே பேச வேண்டும்” என்று கூறவும், அவரும் பதிலுக்கு, “அதுவும் சரிதான் தனியே பேசினால் தானே அவர்களுக்கும் ஒரு புரிதல் வரும், என்ன விஸ்வநாதன்” என்று கேட்டார்.
எப்போதும் இதையெல்லாம் கடுமையாக ஆட்சேபிக்கும் விஸ்வநாதன், இப்போது வந்திருப்பவன் திருப்பிக் கொண்டு விட்டால் என்ன செய்வது அதனால் மனப் பொருமலுடன் அமைதியாக இருந்து விட்டார்.
அடுத்த அறையில் இருவரும் தனியே பேசச் சென்றனர் ‘உன்னைத் திருமணம் செய்து கொள்ள எனக்கு விருப்பமில்லை’ என்று அவனிடம் சொல்லி விடக் கங்கா தயாராகக் காத்திருக்க, அவளை முந்திக்கொண்டு பேசினான் சிவசந்திரன்.
“அன்று என் நண்பன் உன்னிடம் அப்படிப் பேசியது தவறு தான். ஆனால் அவன் வெளிநாட்டில் வசிப்பவன் அதனால் அங்கே சோஷியலாக இருப்பது போல் இங்கேயும் விளையாட்டுத்தனமாக அப்படிப் பேசி விட்டான்” என்றவன் அவள் இடையில் பேச முற்படுவதைத் தடுத்து “பொறு! அது சரி என்று நான் சொல்ல வரவில்லை அவன் உன்னிடம் அப்படிப் பேசியதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். உன்னைப் பற்றிச் சரிவரத் தெரியாத யாரோ அப்படிப் பேசியதற்காக நீயும் வருந்த வேண்டியதில்லை. அதை நேரடியாக உன்னிடம் சொல்லிவிட்டு போகவே நான் இங்கு வந்தது. ஏனெனில் வேறு எங்கேயும் உன்னிடம் இப்படித் தனியே பேசும் சந்தர்ப்பம் கிடைக்காது இல்லையா” என்றால் தன்மையாக.
நண்பனின் பேச்சுக்காக வருத்தம் தெரிவிப்பவனிடம் மேலே என்ன பேசுவது என்று அவளுக்குப் புரியவில்லை. மீண்டும் அவனே பேசினான்.
“நீயே உன் வீட்டில் ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லி திருமணப் பேச்சை நிறுத்தி விடு”
திகைப்புடன், “என்னது நானா” என்றாள் கங்கா.
“நீயேதான்”
சட்டென, “அதெல்லாம் நான் எப்படிச் சொல்ல முடியும்? நீங்களே சொல்லிவிடுங்கள்” என்று படபடப்புடன் கூறினாள்.
“நான் எதற்காகச் சொல்ல வேண்டும் எனக்குத்தான் உன்னைப் பிடித்திருக்கிறதே!” என்று அவன் கூறிய போது அவளுக்கு மீண்டும் அதிர்ச்சி
புருவத்தைச் சுருக்கி, “என்ன” என்றாள்.
“உண்மைதான் எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது. ஆனால் உனக்குத்தான் என் மீது நல்ல அபிப்பிராயம் இல்லை, விருப்பமில்லாதவளை வற்புறுத்தக் கூடாது என்பதற்காகத்தான் உனக்கு அந்தச் சலுகையைத் தருகிறேன். இல்லாவிட்டால் அடுத்த ஒரு வாரத்திற்குள் நம் திருமணத்தை நடத்தி முடித்திருப்பேன். அதற்கு அச்சாரமாக இப்போது பாதி அளவிலாவது உன்னை என் மனைவியாக்கிக் கொண்டிருப்பேன்” என்ற போது அவள் முகம் வியர்த்துச் செவ்வானம் போல் சிவந்தது.
சிவந்த அவள் மேனியை பார்வையால் வருடியபடி ரசித்தவன், “உனக்குப் பிடிக்காத இந்தத் திருமணத்தை நிறுத்துவதற்காக நீ என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம் அதை நான் மறுக்கவே மாட்டேன்” என்று பெருந்தன்மையுடன் பகர்ந்துவிட்டு வெளியேறினான்.
அவன் முடிவுக்காகக் காத்திருந்த பெரியவர்களிடம், “திருமணத்தைப் பற்றிய முடிவை முதலில் உங்கள் பெண் சொல்லட்டும்” என்றான்.
“அவளுக்கு என்ன தெரியும் சின்னப் பெண், பெரியவர்கள் சொல்லும் முடிவுக்கு அவள் சம்மதிக்கப் போகிறாள்” என்று விஸ்வநாதன் கூறிய பொழுது அவர் எப்படிப்பட்ட பழமைவாதி என்பது அவனுக்கு ஓரளவு புரிந்தது.
“இல்லை! எதுவாக இருந்தாலும் அவள் தீர்மானிக்கட்டும், அது தான் சரியாக இருக்கும். ஆனால் முடிவை அவள் தான் நேரடியாக என்னிடம் சொல்ல வேண்டும்” என்றுவிட்டுச் சென்றான்.
பிறகு என்ன வழக்கம் போல் விஸ்வநாதன் மனைவியை மிரட்டி மகளைப் பணிய வைக்க முயன்றார். மாதவி மகளிடம் வந்து மன்றாட அவளோ வந்தவன் நல்லவனா கெட்டவனா என்ற குழப்பத்தில் இருந்தாள்.
ஆனால் மாதவியின் கணிப்பு வேறாக இருந்தது. “எனக்கென்னவோ வந்தவர் நல்லவராகத் தான் படுகிறார் குற்றம் குறை காண முடியவில்லை. நல்ல படிப்பு நல்ல தொழில் தோற்றத்தில் கூட நல்ல உயரமாக உனக்குப் பொருத்தமானவராகத் தான் இருப்பார். உண்மையிலேயே உங்களுக்குப் பெயர் பொருத்தத்தைப் போல ஜோடி பொருத்தம் கூட அபாரமாகத் தான் இருக்கிறது. அதனால் தயக்கம் இன்றித் திருமணத்திற்கு ஒப்புக் கொள்” என்றாள்.
“இப்போது எல்லாவற்றுக்கும் சரி என்று சொல்லிவிட்டு ஒருவேளை நான் திருமணத்திற்கு முதல் நாள் எங்காவது ஓடிவிட்டால் என்ன செய்வீர்கள் அம்மா?” என்று விளையாட்டாகக் கேட்டாள் கங்காதேவி.
விரக்தியுடன், “என்னால் என்ன செய்ய முடியும்? ஆனால் இப்படி ஒரு பெண்ணைப் பெற்று குடும்ப மானததை வாங்கியதற்காக உன் தந்தை என்னைக் கொன்று விடுவார். அதுவும் மகள் பிரிவால் மாரடைப்பு வந்து செத்துவிட்டாள் என்று இயற்கையான மரணமாகவே மாற்றி விடுவார் நீ திரும்பி வந்து பார்க்கும்போது நான் இருக்க மாட்டேன்” என்று பெருமூச்சு விட்டாள்.
மாதவி சொன்னதைக் கேட்டு கங்காவின் விழிகளில் நீர் திரையிட்டது. கண்ணீர் மல்க “அம்மா” என்றாள், “உன்னை வருத்துவதற்காக நான் இதைச் சொல்லவில்லை. உண்மை நிலவரத்தை தான் சொன்னேன்” என்றாள் அன்னை.
சிவசந்திரன் கொடுத்த அவகாசத்தைக் கூட விஸ்வநாதன் தன் குடும்பத்துக்குக் கொடுக்கவில்லை.
“என்ன சொல்கிறாள் உன் மகள்?” என்று மனைவியைக் குடைந்து கொண்டே இருந்தார். ஒரு நாளைக்கு மேல் காத்திருக்கும் பொறுமையின்றி, “அவள் யோசித்த வரை போதும் இப்போதே அந்தப் பையனுக்கு ஃபோன் செய்து திருமணத்திற்குச் சம்மதம் என்று சொல்ல சொல். ம் சீக்கிரம்” என்றவர் சிவசந்திரனுக்கு ஃபோன் செய்து அழைப்பை ஸ்பீக்கரில் வைத்துவிட்டு மனைவி மகள் அருகிலேயே நின்றிருந்தார்.
கத்தி முனையில் நிற்க வைத்துப் பேரம் பேசுவதைப் போல் தந்தை இப்படி நடந்து கொள்வது கங்காவுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை, ஆனாலும் வேறு வழி இன்றி மறுமுனையில் அவன் குரல் கேட்டவுடன், “எனக்குத் திருமணத்திற்குச் சம்மதம்” என்று கூறிவிட்டு பட்டென்று அழைப்பை துண்டித்தாள். அதன் பின் திருமண வேலைகள் வேக வேகமாக நடந்தன.
அன்னை கூறியது உண்மையே! ‘வன் திண்கைச் சிலை நெடுந்தோள் மரகதத்தின் மலை’ என்பதற்கேற்ப இருக்கும் சிவசந்திரனின் தோற்றத்தில் எந்தக் குறையும் இல்லை தான். பெயர் பொருத்தம் கூட வெகு கச்சிதமாக அமைந்திருந்தது. அவளே பலமுறை மனதிற்குள் ‘கங்காதேவி சிவசந்திரன்’ என்று சொல்லிப் பார்த்தாள். ஆனால் இவையெல்லாம் மட்டுமே ஒரு திருமணத்திற்குப் போதுமா? என்று அவள் மனம் குழம்பியது.
அப்படிப்பட்ட குழப்பமான மனநிலையில் தான் கங்கா அந்த ஆசிரமத்திற்குச் சென்றாள். அவளால் லட்ச லட்சமாக நன்கொடை வழங்க முடியாவிட்டாலும் கூடத் தன்னால் இயன்ற சிறு சிறு உதவிகளைத் தவறாமல் செய்து வந்தாள். அங்கிருக்கும் முதியவர்களுக்கு மகளாகவும் பேத்தியாகவும் இருந்து சிரித்துக் கதைபேசி மகிழ்வாள். நூலகத்திலிருந்து புத்தகங்கள் கொண்டு வருவது பின் அதை மாற்றிக் கொடுப்பது ஆங்காங்கே இலவசமாகக் கிடைக்கும் விதைப்பந்துகளைக் கொண்டு வந்து செடி நடுவது என அடிக்கடி அங்கே அவள் செல்வதுண்டு.
அன்றும் அது போல் அங்கே சென்றிருந்தபோது தான் அவள் சிவசந்திரனை பார்த்தாள். சற்றுத் தூரத்தில் அவன் அந்த இல்லத்தின் நிர்வாகியுடன் பேசிக் கொண்டிருந்தான். அவள் அழகாக வெட்டப்பட்ட செடிகளுக்கு நடுவே அமைக்கப்பட்டிருந்த கல் பெஞ்சில் சில முதியோருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள்.
வேண்டுமென்றே அவள் முன்னால் உத்தமன் வேஷம் போடுகிறானா? என்று தான் அவனுளுக்கு நினைக்கத் தோன்றியது.
ஆனால் அவள் நினைத்தது தவறு என்று பக்கத்தில் இருந்த பாட்டியம்மாள் வேறுவிவரம் சொன்னார்.
“அதோ பார் கங்கா, அங்கே இருக்கிறாரே அவர்தான் சிவா தம்பி. இந்த ஆசிரமத்திற்கு மிகப் பெரிய ஸ்பான்சர் அவர் தான். இங்கே எங்களுக்குக் கிடைக்கும் அத்தனை வசதியும் அவர் செய்து கொடுத்தது தான். உன்னைப் போலவே அவரும் ரொம்ப நல்ல பிள்ளை, எந்தப் பந்தாவும் இல்லாமல் எல்லோரிடமும் பாசமாகப் பழகுவார், எங்களுக்கெல்லாம் அவர் பெறாத மகன் மாதிரி”
அதற்குள் பெரியவர்களுக்கு மாலை சிற்றுண்டிக்கான நேரம் வந்துவிட அவர்களும் ஒருவர் பின் ஒருவராக விடை பெற்று சென்றனர்.
கங்காதேவி அங்கிருந்து கிளம்புவதற்குள் அவளைப் பார்த்துவிட்டு அருகே வந்த சிவசந்திரன்.
“என்ன இந்தப் பக்கம்” என்று கேட்டான்.
“அடிக்கடி வருவேன் என்ற கங்கா, நீங்கள் எப்படி இங்கே?” என்று வினவினாள்.
“நானும் எப்போதாவது வருவேன்” என்று சாதாரணமாகக் கூறினானே தவிரத் தன்னுடைய ஸ்பான்சர் ஷிப்பை அவன் பற்றிச் சிறிதும் பேசாதது கங்காவுக்கு ஆச்சரியமாக இருந்தது.
கூடவே அவனைப் பற்றிய ஏளனமான எண்ணம் ஒன்றும் அவளுக்குத் தோன்றியது. அவள் முகத்தைப் படித்தவன், “ஏதோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறாய் போல என்ன அது?” என்று கேட்டான்.
“ஒன்றும் இல்லை” என்றாள் அவள் அவசரமாக.
“அப்படி என்றால் நிச்சயமாக என்னைப் பற்றித் தான் ஏதோ நினைத்திருக்கிறாய், என்ன அது?” என்று மேலும் துருவினான்.
அவன் விடாமல் கேட்கவும் அவளும் மனதில் தோன்றியதை வெளிப்படையாகக் கூறினாள்.
“கருப்புப் பணம் எல்லாம் இங்கேதான் கைமாறுகிறது போல என்று நினைத்தேன்” என்றாள்.
லேசாக நகைத்து விட்டு, “அதில் தவறொன்றும் இல்லையே” என்றவன் “பினாமிகளின் பெயரில் குவிந்து கிடக்கும் பணம் எல்லாம் இந்த மாதிரி நல்ல காரியத்துக்குப் பயன்படுவது நல்லது தானே” என்றான் இலகுவாக.
“சாரி நான் தான் ஏதோ தவறாக…” என்றவளிடம் “நெவர் மைண்ட்! ஆடிட்டர்களைப் பற்றி எல்லோருக்கும் ஏற்படும் சாதாரண எண்ணம்தான் அது” என்று அவன் இனிமையாக முறுவலிக்க அவளும் இணைந்து கொண்டாள்.
ஆடிட்டராக இருந்து கொண்டு சகல செல்வங்களையும் தானே பதுங்கிக் கொள்ளாமல் இப்படிப்பட்ட நல்ல காரியங்களையும் செய்கிறவனை நொடியில் தவறாக நினைத்ததற்காகத் தன்னையே நிந்தித்துக்கொண்டாள் கங்காதேவி.
பேரிடர் காலத்தில் கூடப் பத்து பைசா நிவாரணத் தொகையைக் கொடுக்காத தந்தையை விட இவன் எவ்வளவோ உயர்ந்தவன் என்ற எண்ணமும் எழுந்தது. அதுவரை அவனைப் பற்றியும் அவனுடனான திருமணத்தைப் பற்றியும் அவளுக்கு இருந்த மனக்குழப்பம் தெளிந்தது.