நண்பனின் திருமண விஷயத்தைக் கேள்விப்பட்டதும் பிரமோத் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தான். சிவசந்திரனை ஆரத் தழுவிக்கொண்டு, “யூ ஆர் சோ லக்கி மேன்” என்றான் உற்சாகத்துடன். முன்பு சொன்னதைப் போலவே கங்காவை தங்கையாகவே பாவித்து நட்பு பாராட்டினான்.
கங்காவுக்கும் சிவசந்திரனுக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது. நிச்சயதார்த்தம் மற்றும் திருமண வேலைகளைச் சிவசந்திரன் சார்பாக முன் நின்று நடத்தியவர் அவனுடைய தாய் மாமா மட்டுமே. தன்னுடைய திருமண விபரத்தை தந்தை வழி உறவினர்களுக்கு அவன் தெரிவிக்கவில்லை. அப்போது விஸ்வநாதனுக்கு அது பெரிய குறையாகவும் தெரியவில்லை. அவருடைய கவனம் முழுவதும் அவருடைய பிரச்சனைகளைச் சிவசந்திரனை வைத்து சரி படுத்திக் கொள்வதிலேயே முனைப்பாக இருந்தது.
குளிர்பான தொழிற்சாலை சம்பந்தப்பட்ட வழக்குகள், தொழிற்சங்க பிரச்சனைகள், தொழிற்சாலையை விரிவுபடுத்துதல் என அதுவரை அவருக்கு இருந்த அத்தனை பிரச்சனைக்கும் சிவசந்திரன் மூலமாகவே தீர்வு கண்டார். நீதிபதிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் என அனைத்து இடங்களிலும் சிவசந்திரனின் செல்வாக்கை பயன்படுத்திக் கொண்டார்.
விஸ்வநாதன் தன்னுடைய தேவைகளுக்காகப் பல முறை அவனை அணுகினாரே தவிர ஒரு முறை கூட மாமனார் என்ற உறவினை பாராட்டவில்லை. விஸ்வநாதன் அவருடைய தொழிலையும் சமூக மதிப்பையும் மேலும் உயர்த்திக் கொள்ள ஒரு பணக்காரனை தேடி இருக்கிறாரே தவிரத் தன் மகளுக்காக நல்ல கணவனைத் தேடவில்லை என்பதும் அவருடைய சுயநலமிக்கக் குணமும் அவனுக்கு ஆரம்பத்திலேயே தெளிவாகப் புரிந்துவிட்டது. ஆன போதிலும் அவர் கேட்கும் உதவிகளை அவன் மறுக்காமல் செய்து கொடுத்ததற்கான காரணம் கங்கா! அவளைப் பார்த்த மாத்திரத்தில் அவன் காதலில் விழவில்லை, அதே வேளையில் வக்கீல் அவளுடைய புகைப்படத்தைக் காண்பித்த போது அவனுக்கு மறுக்கவும் தோன்றவில்லை. திருமணம் கைகூடாமல் போனாலும் பரவாயில்லை, மீண்டும் ஒருமுறை அவளை நேரில் அதுவும் அருகில் சந்திக்கும் ஆர்வம் ஏற்பட்டது.
கங்கா திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்த பின்னால் அவளுடைய தந்தையின் அற்ப குணம் அவனுக்குப் பொருட்டாகத் தெரியவில்லை.
கங்காவின் வீட்டில் விஸ்வநாதன் மட்டும் தான் அப்படி, மற்றபடி சிவசந்திரனின் ஆளுமைக்கும் தோரணைக்கும் வசந்த் விசிறி ஆகிவிட்டான். அவனுடைய நற்குணத்தைப் பார்த்த மாதவியும் கங்காவுக்கு அவனை விடப் பொருத்தமான மாப்பிள்ளை வேறு யாருமே இருக்க முடியாது என்று மனம் பூரித்துப் போனாள். கூடவே, தாயில்லா பிள்ளை என்ற பரிவும் பாசமும் சேர்ந்து கொள்ள அவனை மகனாகவே நினைக்க வைத்தது.
நிச்சயத்திற்குப் பிறகு மணமக்கள் இருவரும் கைப்பேசியில் உரையாடத் தொடங்கினர். பல முறை அவளை வெளி இடங்களுக்கு அழைத்துச் சென்றான். திருமணத்திற்கு முன்பாக இருவரும் இப்படி ஒன்றாக ஊர் சுற்றுவது தவறு என்று அதற்குத் தடை விதித்து மகளை அதட்டிக் கொண்டிருந்த விஸ்வநாதன் வாசலில் வந்து நின்று சிவசந்திரனின் காரை பார்த்ததும் அமைதியாகிவிட்டார். விஸ்வநாதன் தன்னுடைய குடும்பத்தில் செலுத்தும் சர்வாதிகாரத்தைச் சிவசந்திரனிடம் செலுத்த முடியவில்லை அதற்குக் காரணம் அவனுடைய செல்வாக்கு. அதை அறிந்து கொண்ட கங்கா அடுத்த முறை பயணத்தின் போது தடுக்க முற்பட்ட தந்தையிடம், “என் மகள் எங்கேயும் வர மாட்டாள் என்று நீங்களே அவரிடம் சொல்லி விடுங்கள்” என்று சிடுசிடுத்தாள். அவ்வளவுதான் அதற்குப் பிறகு அவரால் தடுக்க முடியுமா என்ன!
சிவசந்திரன் தனது வருங்கால மனைவியிடம் தன்னுடைய வீர பிரதாபங்கள் மற்றும் இத்தியாதிகளை ஒவ்வொன்றாக வரிசைப்படுத்தி உடனடியாக அவள் தன்னைப் பற்றிச் சகலமும் புரிந்து கொள்ள வேண்டும் என்று நிர்பந்திக்கவில்லை. மாறாக அவளிடம் ஒரு நல்ல நண்பனாகப் பழகினான். அவளையும் பேச வைத்தான் அவள் பேசுவதைக் கவனித்தான். அவன் கவர்ச்சியாகப் பேசவில்லை ஆனால் அவன் பேசிய விதம் அவளை வசீகரித்தது. அவன் பழகிய முறை அவளை ரசிக்க வைத்தது.
எவ்வளவுதான் தனிமை கிடைத்த போதிலும் அவன் ஒரு நாளும் அவளிடம் அத்துமீறி பழகியதில்லை அனாவசியமாக அவளைத் தொட்டு பேசியதும் இல்லை. அதுவே அவனைப் பற்றி அவளை உயர்வாக எண்ண வைத்தது.
திருமணம் சிவசந்திரனின் அன்னை கஸ்தூரிக்கு விருப்பமான இடமான மருதமலை முருகன் சன்னதியில் நடந்தேறியது. வரவேற்பு சென்னையில் கடற்கரை ரிசார்ட் ஒன்றில் பல விவிஐபி க்கள் கலந்து கொள்ளப் பலத்த பாதுகாப்புடன் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடந்தது. திருமணச் செலவுகள் லட்சத்தில் தொடங்கிக் கோடிகளில் முடிந்தது அத்தனையும் சிவசந்திரனின் பணம் தான்.
திருமணத்திற்கு வந்திருந்த விஸ்வநாதனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வட்டம் அவரிடம், “பிடித்தாலும் புளியங்கொம்பாகப் பிடிக்க வேண்டும். உங்களுக்கு வாய்த்த யோகம் யாருக்கு வாய்க்கும்” என்று பொறாமையுடன் பேசியதைக் கேட்டு கர்வப் பட்டுக் கொண்டார்.
அதிலும் ஓரிருவர், “உங்கள் மருமகன் நினைத்தால் எப்படிப்பட்ட எட்டாக் கனியும் கையில் வந்து விழுந்து விடுமே. நீங்கள் மனது வைத்தால் அவரிடம் பேசி அந்தக் காண்டிராக்டை நமக்கே கிடைக்கும் படி செய்ய முடியும்….” என்று நயந்த குரலில் பேசவும், தவறியும் அவர்களைச் சிவசந்திரன் அருகில் நெருங்கி விடாதவாறு கவனமாகப் பார்த்துக் கொண்டார்.
காரணம், சிவசந்திரன் என்னும் ஆலமரத்தின் அத்தனை விழுதுகளும் தனக்கு மட்டுமே உரித்தானது என்ற அவருடைய எண்ணமே!
திருமணத் தம்பதிகள் தேன் நிலவுக்கு மாலத் தீவு சென்றனர். சிவன் கங்கைக்குள் மூழ்கியதும், கங்கை சிவனுக்குள் ஐக்கியமானதும் அங்கே தான். கடலுக்கு நடுவே கட்டப்பட்டிருந்த தண்ணீர் வீட்டுக்குள் சிவசந்திரனும் கங்காதேவியும் ஈருடல் ஓருயிராய் சங்கமித்தனர். இரு இதயங்களும் இடம் மாறியதை போலவே அவர்தம் சுவாசங்களும் இடம் மாறி ஆசுவாசப் படுத்திக் கொண்டது. தனியாக மோகமும் பல நாள் ஏக்கமும் அணை மீறிய வெள்ளமாக மாற, ஊன் உறக்கம் உணவு உணர்வுகள் உறவுகள் என உலக வாழ்வின் சகலத்தையும் மறந்த இருவரும் ஒருவரில் ஒருவர் மயங்கி அந்தத் தீவுக்குள் காதல் கிளிகளாகத் திரிந்தனர். இருவரில் யார், யாரை அதிகமாகத் தேடினர் என்பதை இருவருமே அறியார்.
கங்கைக்குச் சிவன் கடலாக இருக்கச் சிவனுக்கோ கங்கை கரையாக இருந்தால். கரையை விட்டுத் தள்ளி இருந்தாலும் கரையைத் தொடாமலேயே இருந்தாலும் கரையைப் பிரிந்து மட்டும் வாழ்வதில்லை கடல்.
அன்று அவன் வாழ்வின் கரை அவள் என்று எண்ணியவன் பின் நாளில் அவளையே கறையாக நினைப்பான் என எவரேனும் அப்போது அவனிடம் கூறி சொல்லி இருந்தால், அவருடைய சொல்லும் பல்லும் அப்போதே போயிருக்கும். அப்படி உயிருக்கும் மேலாக அவளை நேசித்தான் சிவசந்திரன்.
தேனிலவு முடிந்து திரும்பி வந்தவர்கள் சிவசந்திரனின் தனி வீட்டில் இல்லற வாழ்வை தொடங்கினர். மோகம் முப்பது நாள் இன்னும் பழமொழி அவர்கள் விஷயத்தில் பொய்யாகிப் போனது.
தாயின் அன்பையும் உறவுகளின் அரவனைப்பையும் கங்கா என்ற பெண் அவனுக்கு மொத்தமாக வழங்கினாள். எப்போதும் அலுவலகம் வேலை என்றே ஓடிக் கொண்டிருந்தவனுக்கு வீடு குடும்பம் என்னும் புது உலகத்தைக் காட்டினாள் கங்கா. அவள் அலைபேசியில், “எங்கே இருக்கிறீர்கள் எப்போது வருவீர்கள்?” என்று கேட்கும் போதெல்லாம், இவ்வுலகில் தன்னைத் தேடவும் ஓர் உயிர் இருக்கிறது என்ற உணர்ச்சியே அவனை இன்பத்தில் ஆழ்த்திவிடும். அதே இன்பத்துடன் வீட்டுக்குச் சென்றால் மனைவியின் மதிமுகம் வேறெந்த நினைவையும் பின்னுக்குத் தள்ளியது.
சிவசந்திரனுக்கு அலுவலகம், மீட்டிங், பார்ட்டி என எங்கே இருந்தாலும் முப்பொழுதும் மனையாளின் நினைவுதான். கங்காவும் அவனுக்குச் சளைத்தவள் அல்ல, நாளெல்லாம் அவன் நினைவில் பசலை பிடித்துக் கொள்ள இரவு எந்நேரம் ஆனாலும் அவன் வீட்டுக்கு வரும் வரை உண்ணாமல் உறங்காமல் காத்திருப்பாள்.
வீட்டில் வேலைக்கார பெண், சமையல்காரர், காவலாளி, டிரைவர் என்று அவள் நகத்திற்கும் காயம் படாதவாறு பணியாட்களை நியமித்து அவளைப் பாதுகாத்தான் கணவன். தந்தை வீட்டில் இருந்த கண்டிப்பும் கட்டுப்பாடும் அவளுக்கு இங்கே இல்லை. எல்லாவற்றிலும் அன்பும் அக்கறையும் தான் பொங்கித் ததும்பக் கண்டாள். அவளுடைய விருப்பத்திற்கு மாறாக அவன் எதையுமே செய்ததில்லை. ஒரு மலரையும் மழலையையும் கையாள்வதை விட மிக மென்மையாக அவளைக் கையாண்டான் சிவசந்திரன்.
அவள் தந்தையிடம் கண்ட சர்வாதிகாரமும் செருக்கும் அவனிடம் தேடினால் கூடக் கண்டுபிடிக்க முடியாது. அதுவும் அவளுடைய தந்தை ஒரு நகை வாங்குவதற்குக் கூடச் செய்கூலி சேதாரம் இல்லாமல், வரி செலுத்தாமல் கள்ள மார்க்கெட்டில் கிடைக்குமா என்று குறுங்கணக்கு போடுவார். அதன் வடிவமைப்பு கூட அவருக்குப் பிடித்தமானதாக இருந்தால் போதும், எல்லோரும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என எண்ணுவார். ஆனால் சிவசந்திரன் ஒரு நகச் சாயம் வாங்கினால் கூட மனைவிக்குப் பிடித்திருக்கிறதா எனப் பல முறை உறுதிபடுத்திக் கொண்டு தான் வாங்குவான்.
முன்னுரிமை, முக்கியத்துவம், மரியாதை போன்ற வார்த்தைகளை எல்லாம் செவி வழியாக மட்டுமே கேட்டு வந்த கங்காவுக்கு, எல்லா விஷயங்களிலும் மனைவிக்கு முன்னுரிமை கொடுக்கும் அண்புக் கணவனிடம் காதல் ஊற்றெடுப்பதில் ஆச்சரியமில்லை தான்!
அப்படிப்பட்ட தூய்மையான காதலில் உள்ளம் நெகிழ்ந்த கங்கா அவனுக்காக உயிரை விடவும் சித்தமாகவே இருந்தாள். அவளுடைய வாழ்வை முழுமையாக அவனுக்கே அர்ப்பணித்து விட்டு வாழ்ந்தாள்.
கணவனும் மனைவியும் அன்னியோனியமாய் ஆத்மார்த்தமாய் வாழ்ந்து வந்த அந்த வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அளவின்றி நிறைந்திருந்தது.
தொழிலில் நண்பர்கள் அதிகரிப்பதை போல் எதிரிகளும் அதிகரித்துக் கொண்டே இருப்பர், அதற்குச் சிவசந்திரனும் விதிவிலக்கல்ல! இன்னும் சொல்லப் போனால் செல்வங்களும் செல்வந்தர்களும் நிரம்பித் ததும்பும் ஆடிட்டர் தொழிலில் அவனுக்கு நண்பர்களை விடவும் எதிரிகளின் எண்ணிக்கை தான் அதிகம்.
‘யானை எப்போது குழியில் விழும் எப்போது மண்ணெடுத்து போட்டு அதன் தடயத்தை மூடி மறைத்து விடலாம்’ என்று அவனுடைய வீழ்சிக்காகப் பல கழுகுகள் காத்திருந்தன. அப்படியொரு நாளும் வந்தது.
சிவசந்திரன் போதைப் பொருட்கள் கடத்துவதாக அவனைப் போதை பொருள் தடுப்பு போலீசார் கைது செய்தனர். மேலும் அவனது கார் அலுவலகம் போன்ற இடங்களில் போதைப் பொருட்களையும் கைப்பற்றியது மாநில அளவில் பெரிய செய்தியாகப் பரவியது. செய்தி கேட்டு நிலைகுலைந்த கங்கா கணவனைக் காண காவல் நிலையத்திற்கு விரைந்தாள். ஆனால் அங்கே எஸ்பி அலுவலகம் கமிஷனர் அலுவலகம் என்று மாற்றி மாற்றி அலைக்கழிக்கப்பட்டாள். கடைசியாக வழக்கின் தீவிரத்தை எடுத்துரைத்த உயர் அதிகாரிகள் அவனைச் சந்திக்க முடியாது என்று தெளிவாகக் கூறிவிட, அடுத்ததாக எதையும் சிந்திக்கும் திராணியற்று ஸ்தம்பித்துப் போனாவள் தந்தையைத் தேடி ஓடினாள்.
நாடறிந்த செய்தி அவருக்கும் தெரிந்துதான் இருந்தது. கதறியபடி அவரிடம் ஓடிவந்த மகளை மாதவி ஆறுதலாக அணைத்துக் கொள்ள, “அவரைக் காப்பாற்றுங்கள். வக்கீலிடம் பேசுங்கள் அப்பா….” என்றாள் தந்தையிடம்.
“சரி” என்றார் அவர் யோசனையுடன்.
பெரிய செல்வந்தன் விவிஐபி என்றெல்லாம் பல கனவு கண்டு அவனுக்குப் பெண் கொடுத்தால் கடைசியில் அவன் இப்படிப் போதை பொருள் கடத்துபவனாக இருந்திருக்கிறான். அதையும் தான் மாட்டிக் கொள்ளாமல் செய்யத் துப்பில்லாமல் இப்போது ஜெயிலில் உட்கார்ந்திருக்கிறான். அவனை வைத்து தான் நினைத்ததை எல்லாம் சாதிக்க வேண்டும் எனப் பெரிய திட்டம் போட்டு வைத்திருந்தால் இப்போது வெளியே தலை காட்ட முடியாதபடி மொத்தமாக மானம் போய்விட்டது. போதாததற்கு டிவியில் வேறு அவன் முகத்தை ஓயாமல் போட்டு காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பார்த்துவிட்டு அதுவரை கோடீஸ்வர மாப்பிள்ளையைப் பார்த்து மனப் புழுக்கத்தில் இருந்த சொந்த பந்தம் எல்லாம் ஃபோன் செய்து துக்கம் விசாரிப்பது போல் மன சாந்தி அடைந்து கொண்டிருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக மகள் வந்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறாள். தேவையா இந்தத் தலைவலி என்று இருந்தது அவருக்கு. இதற்கெல்லாம் காரணமான பரமேஸ்வரனை காண அவருடைய அலுவலகத்திற்குத் தேடிச் சென்றார்.
சிவசந்திரனைப் பற்றி ‘ஓஹோ’ என்று புகழ்ந்து பேசி அவனைத் தனக்கு மருமகனாக்கிய வக்கிலோ இப்போது வார்த்தை மாறி பேசினார்.
“எல்லோரையும் போல நானும் அவனை நல்லவன் என்று தான் நம்பினேன். ஆனால் அவன் இப்படி ஒரு அண்டர் கிரவுண்ட் மாஃபியாவாக இருப்பான் என்று யாருக்கு தெரியும். இனி அவனைப் பற்றிப் பேசிக்கொண்டு இங்கே வராதீர்கள். எனக்கும் அவனுக்கும் தொடர்பு இருந்தது என்று அறிந்தாலே இந்தப் போலீஸ்காரர்கள் வழக்கையும் விசாரணையும் வேறு கோணத்திற்கு மாற்றி விடுவார்கள்” என்று தனக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை என்பதைப் போல் முடித்துக் கொண்டார்.
வீட்டிற்கு வந்த விஸ்வநாதன் மகளிடம், “போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாமின் கிடைப்பது கஷ்டம் என்று வக்கீல் கூறிவிட்டார்” என்று கூறியவர் அவன் செய்த அத்தனை உதவிகளையும் மறந்துவிட்டு இந்த விஷயத்திலிருந்து ஒதுங்கிக் கொண்டார்.
சுயநலமிக்கத் தந்தையின் குணம் அறிந்த கங்கா அத்துடன் ஓயவில்லை அவள் அறிந்த அத்தனை வழிகளிலும் கணவனை வெளியே கொண்டு வர முயற்சித்தாள், ஒவ்வொரு ஜாமீன் மனுக்களையும் காவல்துறை சார்பாக நிராகரித்துக் கொண்டே இருந்தனர்.
ஆடிட்டிங் தொழிலில் சிவசந்திரனுக்கு அடுத்த இடத்திலிருந்து அவனுடைய எதிரிகள், இந்த வழக்கை வைத்தே அவனை ஒரேயடியாக ஒழித்துக் கட்ட நினைத்தனர். அவன் ஒழிந்தால்தான் அவனுடைய இடம், பொருள், செல்வாக்கு, இன்ன பிற வசதிகள் உட்பட அனைத்தும் தங்களுக்குக் கிடைக்கும் எனச் சதித்திட்டம் தீட்டினர். ஒருபுறம் எதிரிகளின் சதி என்றால் மறுபுறம் அவனுடன் நட்புறவாக இருந்த சில அரசியல்வாதிகள் எங்கே அவன் மூலமாகத் தங்களின் பினாமி ரகசியங்களும் சொத்து பட்டியலும் வெளியே வந்து விடுமோ எனப் பயந்து கொண்டு அவனுக்கு எதிராகச் சதி செய்தனர்.
சிவசந்திரன் மீது பல பொய்யான வழக்குகள் ஜோடிக்கப்பட்டு அவன் மீது பழி சுமத்தப்பட்டது. வெளிநாட்டு போதை கடத்தும் கும்பலுக்கும் அவனுக்கும் தொடர்பு இருப்பதாகக் குற்றப் பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டது. தினசரி சிவசந்திரனின் வழக்கு ஊடகங்களால் முக்கியச் செய்தியாக்கப்பட்டு விவாதப் பொருளானது. சுயநலம் மிக்கக் கழுகுகளின் பொறாமையினாலும் சதியினாலும் ஒவ்வொரு நொடியும் மரணத்தை மிக அருகில் சந்தித்தான் சிவசந்திரன். சிறையில் அவன் அனுபவித்த கொடுமைகளை விவரிக்கும் வார்த்தைகளில் கூட ரத்த வாடை வீசும் அந்த ரணங்களின் தாக்கம் தெரியும். அத்தகைய பொறுக்க முடியாத வலிகளைக் கூட அவனுடைய மன வலிமை பொறுத்துக் கொள்ள வைத்தது.
இப்படி ஒவ்வொரு நாளும் வழக்கின் தீவிரம் கூடிக் கொண்டே போகச் சிறைக் கம்பிகளின் பின்னால் இருந்த சிவசந்திரனும் வெளியே இருந்த கங்காதேவியும் எந்த நேரத்திலும் உயிர் பிரியக்கூடிய நிலையில் இருந்தனர்.