அதுவரை சரளமாகப் பேசிக் கொண்டிருந்த வசுந்தரா அதற்கு மேல் பேச முடியாமல் தயக்கத்துடன் அவளை ஏறிட,
“என்ன மேடம்?” என்று அமைதியாகக் கேட்டாள் கங்கா.
“உன் விஷயத்தில் சந்துரு நடந்து கொண்டது முற்றிலும் தவறுதான் அதை யாராலும் நியாயப்படுத்த முடியாது. அவன் அப்படியெல்லாம் நடந்து கொண்டதற்கு முதல் காரணம் சிவரூபன் செய்த சூழ்ச்சியும் சதி செயலும் தான். செய்யாத குற்றத்திற்காகச் சிறையில் அவன் எவ்வளவு துன்பப்பட்டு இருப்பான் அதனால் எவ்வளவு அவப்பெயர், அவமானம் ஏற்பட்டிருக்கும். அப்போது அவன் எவ்வளவு மன அழுத்தத்தில் இருந்திருப்பான் என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாரம்மா. ஒரு பெண்ணாக உன் வாழ்க்கையைப் பற்றி எனக்கு முழு அக்கறை இருக்கிறது அதேபோல ஒரு தாயாக அவன் சார்பாகப் பேச வேண்டிய கடமையும் அக்கறையும் எனக்கு இருக்கிறது. உன்னைப் பிரிந்து அவனும் சுகவாசியாக வாழவில்லை இங்கே இத்தனை பேர் இருந்தும் அவன் தனியே அனாதை போல் தான் இருக்கிறான். அவனும் இன்னொரு வாழ்வை தேடிக் கொள்ளவில்லை. உன் விஷயத்தில் அவன் பலமுறை அவசரப்பட்டுத் தவறாக நடந்து கொண்டிருந்தாலும் அவன் அவ்வளவு கொடூரமானவன் அல்ல இது என்னை விட உனக்கு நன்றாகத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். நீயும் அவனைப் போல் அவசரப்பட்டு விடாமல் நிதானமாகவும் தெளிவாகவும் யோசித்து முடிவு செய் கங்கா”
இதற்குச் சரி என்று சொல்வதா அல்லது மறுத்துப் பேசி வாதம் செய்வதா? என்று புரியாமல் அமர்ந்திருந்தாள் கங்கா.
“உன்னைப் பற்றி எல்லா விஷயமும் எனக்குத் தெரிந்து விட்டதால் இந்த ஊரை விட்டு வேலையை விட்டு போய்விட வேண்டும் என்று மட்டும் நினைக்காதே. எந்தச் சூழ்நிலையிலும் இது உனக்கு மிக மிகப் பாதுகாப்பான இடம். அப்படியே உனக்கு இங்கே இருக்கப் பிடிக்காவிட்டாலும் அதை நேரடியாக என்னிடம் சொல்லிவிடு உனக்கு நான் மாற்று ஏற்பாடு செய்து தருகிறேன். சிவரூபன் செய்த சதியில் நீயும் சந்துருவும் இதுவரை இழந்தவரை போதும், இனியும் அது தொடரக்கூடாது, நீங்கள் இருவரும் நன்றாக இருக்க வேண்டும்” என்று வாஞ்சையுடன் கூறினார்.
சிவசந்திரனுக்கு வசுந்தராவிடம் பாசமோ ஒட்டுதலோ இல்லை என்பது கங்கா அறிந்த ஒன்று தான். அப்படிப்பட்டவனுக்காகப் பரிந்து பேசும் வசுந்தராவின் தாயுள்ளம் கங்காவை பிரமிக்க வைத்தது. கூடவே ஒரு குறுகுறுப்பும் ஆர்வமும் தோன்ற, “மேடம் நான் உங்களை ஒன்று கேட்கலாமா” என்று தயக்கத்துடன் கேட்டாள் கங்கா.
“ஓ கேளேன்”
“அவர்…. உங்கள் மூத்த மகன், அவர் உங்களையெல்லாம் விட்டு விலகி தானே இருக்கிறார் அப்படி இருந்தும் அவர் மேல் உங்களுக்கு எப்படி இவ்வளவு பாசம்” என்று கேட்டாள்.
“உன் கேள்வி எனக்குப் புரிகிறதும்மா. சந்துருவுக்கு என் மேல் பாசம் இல்லை, ஆனால் நான் ஏன் அவனுக்காகப் பரிந்து பேச வேண்டும் என்று கேட்கிறாய் அப்படித்தானே?” என்று வினவிய வசுந்தராவின் அனுபவ அறிவு அவளுக்கு வியப்பளித்தது
‘ஆம்’ என்பது போல மேலும் கீழுமாகத் தலையசைத்தாள்.
“அவனுடைய கோபத்தில் நியாயம் இருக்கிறது அவனுடைய அன்னையின் இடத்தை நான் அபகரித்துக் கொண்டதாக அவன் நினைத்துக் கொண்டிருக்கிறான். ஆனால் அது உண்மையல்ல என்பது அவனுக்குத் தெரியாது என்னுடைய திருமணம் ஒரு கட்டாயத் திருமணம், அதுவும் அவசர அவசரமாக நடந்தது. திருமணத்திற்குப் பிறகு தான் சந்துருவின் தந்தைக்கு ஏற்கனவே திருமணம் ஆகி பெற்றோருக்காக மனைவியைக் கைவிட்டு விட்டார் என்கிற விஷயமே எனக்குத் தெரிய வந்தது, ஆனால் ஏற்கனவே ஒரு குழந்தை இருந்த விஷயம் எனக்குத் தெரியாது.
அப்படியே இவர்களை நான் எதிர்த்துப் பேசினாலும் என் குழந்தையை வாங்கி வைத்துக் கொண்டு என்னை வீட்டை விட்டு வெளியேற்ற நினைத்தார்கள். அதனால் என் பெற்றோருக்காகவும் என் மகனுக்காகவும் இதையெல்லாம் சகித்துக் கொண்டு வாழ வேண்டிய கட்டாயத்தில் நான் இருந்தேன். சிவரூபன் போன பிறகு தான் என் கணவருக்கு மூத்த மகன் இருக்கும் விஷயமே இங்கிருக்கும் எல்லோருக்கும் தெரிந்தது. ஆரம்பத்திலேயே சந்துரு என்று ஒரு மகன் இருப்பது எனக்குத் தெரிந்திருந்தால் என் மகனை கூட விட்டுவிட்டு நான் இந்த வாழ்விலிருந்து விலகிப் போயிருப்பேன். எல்லாவற்றையும் இழந்து விட்ட எனக்கு இப்போது இந்த வாழ்வில் மிச்சம் இருப்பது சந்துருவும் நீயும் மட்டும்தான்” என்று முடித்தவரின் கண்கள் லேசாகக் கலங்கி இருந்தன.
அவர் விடைபெற்றுச் சென்ற பின்பு வெகு நேரம் யோசித்தாள் கங்கா. வசுந்தராவின் கடந்த காலத்தையும் இப்போது அவர் சிவசந்திரன் மேல் கொண்டுள்ள தாய் பாசத்தையும் கண்டு அவளுக்கு அனுதாபமும் ஆச்சரியமும் எழுந்தது என்னவோ உண்மைதான் அதற்காகச் சிவசந்திரனை மன்னித்து விடக்கூடிய அளவுக்கு அவள் ஒன்றும் மகான் அல்ல. ஆயிரம் பேர் ஆயிரம் சொன்னாலும் தன் கணவனுக்குத் தன்னிடம் நம்பிக்கை இல்லையே என்று கோபம் கொள்ளக்கூடிய சாதாரணப் பெண் தான் அவள். மன்னிப்பு என்கிற ஒற்றை வார்த்தையில் மனமிரங்கி மன்னித்து விடக்கூடிய தவறையா அவன் செய்தான். அன்று அவன் பேசிய இழிவான பேச்சுகளையும் விவாகரத்துப் பத்திரத்தில் கையெழுத்திட்டு அவள் முகத்தில் வீசி எறிந்ததையும் அவள் இன்னமும் மறக்கவில்லை. ஜென்ம ஜென்மமாய்த் தொடர வேண்டிய திருமணப் பந்தத்தை ஒரு நொடியில் சுலபமாக அவனால் முறித்துக் கொள்ள முடிந்தது ஆனால் அவன் செய்த தவறை அவளால் அவ்வளவு சுலபமாக மறக்கவும் மன்னிக்கவும் முடியவில்லை.
அன்றைக்கு அவன் செய்த தவறுக்குப் பின்னால் ஒரு சிவரூபன் தான் இருந்தான், இனிவரும் காலங்களில் இன்னும் அது போல் எத்தனையோ சிவரூபன் வரலாம்? அப்போதும் இப்படியே நடந்து கொள்வானா? அவன் எப்படியோ நடந்து கொள்ளட்டும் ஆனால் இனி ஒரு முறை அவளால் வனவாசம் போய் அக்னி பிரவேசம் செய்து அவளை நிரூபித்துக் கொண்டிருக்க முடியாது. அதன் பிறகு மீண்டும் அவனை மன்னிக்கவும் முடியாது. அப்படியே எல்லாவற்றையும் மறந்தாலும் மன்னித்தாலும் இனி அவனுடன் சேர்ந்து வாழ்வது என்பது சாத்தியமற்ற ஒன்று என்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது.
அதனால் இந்த நிலை இப்படியே தொடரட்டும்! வசுந்தரா சொன்னது போல் இது அவளுக்கு மிகவும் பாதுகாப்பான இடம். கையில் கிடைத்திருக்கும் இந்தப் பாதுகாப்பான இடத்தை விடுத்து மறுபடியும் எதற்காக அவள் வேறு இடத்தைத் தேடிச் செல்ல வேண்டும்? இதே போன்றதொரு அமைதியான சூழ்நிலையில் இங்கே அவளுடைய வாழ்க்கை தொடருமானால் இதுவே அவளுக்குப் போதுமானது, வேறு எதுவும் தேவையில்லை யாரும் தேவையில்லை என்ற முடிவில் அவள் உறுதியாக இருந்தாள்.
அன்று அந்தப் பகுதியில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள கேளிக்கை பூங்காவிற்குப் பள்ளி சார்பாக இன்பச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு வகுப்பு மாணவர்களுக்கும் தனித்தனியே வாகனங்களும் அவர்களுடைய பாதுகாப்பிற்கு அந்தந்த வகுப்பு ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
கங்காவும் அவளுடைய வகுப்பு மாணவர்களும் கூடச் சுற்றுலாவுக்குச் சென்றனர். அந்தச் சுற்று வட்டார பகுதிகளில் பிற பள்ளிகளில் இருந்தும் மாணவர்கள் வந்திருந்ததால் அதிகக் கூட்டமாகவே இருந்தது.
வெளிநாடுகளில் அமைந்திருக்கும் அம்யூஸ்ட்மென்ட் பார்க்குகளைப் போல இந்தப் பூங்காவும் மிகப் பிரம்மாண்டமாகவே அமைக்கப்பட்டு இருந்தன. பல ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்ற சுற்றுலாவில் கலந்து கொள்ளும் கங்கா எல்லாவற்றையும் ரசித்துப் பார்த்தாள். மாணவர்களுடன் சேர்ந்து ராட்டினங்கள் மற்றும் நீர் விளையாட்டுகளில் உற்சாகத்துடன் கலந்து கொண்டாள். மனதிலிருந்து கசப்புகளை எல்லாம் மறந்து அவள் மகிழ்ந்து கொண்டிருந்த வேளையில் இரு மாணவிகள் ஓடி வந்து, “மிஸ், ஹாரிகாவை காணோம்” என்று பதற்றத்துடன் கூற அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது.
ஆனால் கூட்டத்தில் அவர்கள் சரியாகக் கவனித்திருக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில், “காணாமல் எங்கே போகப் போகிறாள் இங்குதான் எங்காவது இருப்பாள் சரியாகப் பாருங்கள்” என்றாள்.
“இல்லை மிஸ், நாங்கள் எல்லா இடத்திலும் பார்த்து விட்டோம் அவள் எங்கேயும் இல்லை” என்றனர் சிறுமிகள்.
“என்ன?”
“யெஸ் மிஸ்.
“நாங்கள் மூவரும் ரெஸ்ட் ரூம் போகலாம் என்று வந்தோம் ஆனால் வெளியே வந்து பார்த்தபோது ஹாரிகாவை காணவில்லை, மற்ற இடங்களிலும் பார்த்துவிட்டு தான் உங்களிடம் வந்து சொல்கிறோம்” என்று தெளிவாகக் கூறிய பின்னர்த் தான் அவளுக்கு ஏதோ தவறு நடந்திருப்பது புரிந்தது.
அந்த மாணவிகளிடம், “ஓகே, மீண்டும் நன்றாகத் தேடிப் பாருங்கள். நானும் ஒருமுறை பார்த்துவிட்டு வருகிறேன்” என்று கூறிவிட்டுக் காணாமல் போன மாணவியைத் தேட அவள் எங்கேயும் தென்படவில்லை.
இனியும் தாமதிக்கக் கூடாது என்று பதற்றத்துடன், தலைமை ஆசிரியருக்கு தகவல் கொடுக்க அவர் உடனடியாகச் சிவசந்திரனுக்கும் வசுந்தராவுக்கும் விஷயத்தைத் தெரிவித்தார். அடுத்தச் சில நிமிடங்களில் மற்ற மாணவர்கள் எல்லோரும் பள்ளி வாகனங்களிலேயே அவரவர் வீட்டிற்குப் பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.