பள்ளி நிர்வாகிகள் அனைவரும் பள்ளிக்கு விரைந்தனர். மாணவி காணாமல் போன விஷயம் உறுதி செய்யப்பட்டவுடன் அந்த மாணவியின் பெற்றோருக்கு அதைத் தெரிவித்து அவர்களையும் அங்கே வரவழைத்தனர். மாணவியின் தந்தை ஓர் அரசியல் பிரமுகராம், அவர் வந்தவுடன், தன் மகளின் வாகனத்தில் பயணம் செய்த ஆசிரியர் யார் என்பதைக் கேட்டறிந்து பழியைக் கங்காவின் மேல் சுமத்தினார்.
“என் மகள் காணாமல் போனதற்கு முழுக்க முழுக்கப் பள்ளி நிர்வாகமும் பொறுப்பற்ற வகுப்பு ஆசிரியையும் தான் காரணம்” என்று கத்தினார்.
“சார், சார் கொஞ்சம் பொறுமையாக இருங்கள், அப்படி யாரும் இங்கே பொறுப்பில்லாமல் இருந்துவிடவில்லை. இதற்கு முன் இப்படி நடந்ததே கிடையாது, உங்கள் பெண்ணை எப்படியும் கண்டு பிடித்துவிடலாம்” என்று அவரைச் சமாதானம் செய்ய முயன்றார் தலைமை ஆசிரியர்.
“நீங்கள் என்ன கண்டு பிடிப்பது? அதை நான் பார்த்துக் கொள்கிறேன், ஆனால் இதை நான் சும்மா விடப் போவதில்லை எம்பி மந்திரி முதல்வர் வரை இந்தப் பிரச்சனையைக் கொண்டு செல்வேன். பெண் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பில்லாத இந்தப் பள்ளியை இழுத்து மூடாமல் விடமாட்டேன்” என்று ஆர்ப்பரித்தார்.
அதைக் கேட்ட கங்காவுக்கு உள்ளம் பதற கை, கால் நடுங்கியது. வயது பெண் காணாமல் போவது என்றால் பெற்றோர்கள் சும்மா விடுவார்களா? உண்மையில் இதற்குத் தான் தானே காரணம், கொஞ்சம் கூடுதல் கவனமாக இருந்திருந்தால் இப்படி ஒரு தவறு நடந்திருக்குமா. இதனால் இன்னும் அவளுக்கு என்னென்ன பிரச்சனை வரப்போகிறதோ அவளுக்கு மட்டுமா, பள்ளிக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் இது களங்கம் தானே என்று பரிதவித்தாள்.
“முதல்வர் வரை என்ன நீங்கள் பிரதமர் மனித உரிமை அல்லது ஐநா சபை வரை கூடப் போகலாம் ஆனால் அதற்கு முன்பாக ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களுடைய மகள் ஸ்கூல் கேம்பஸிலிருந்து காணாமல் போகவில்லை. மேலும் ஆசிரியர்கள் யாரும் உங்கள் பெண்ணை எதுவும் செய்யவில்லை. இத்தனை மாணவர்களில் உங்கள் ஒரு பெண் மட்டும்தான் காணாமல் போய் இருக்கிறாள் என்றால் எப்படி? அந்தப் பெண் சுற்றுலா சென்ற இடத்தில் ஒதுக்குப் புறமாக யாரும் இல்லாத இடத்தில் சுவர் ஏறி குதித்து அங்கிருந்து வெளியேறி இருக்கும் காட்சி கண்காணிப்புக் கேமிராவில் மிக நன்றாகவே பதிவாகி இருக்கிறது. அதற்குப் பள்ளியும் ஆசிரியரும் எப்படிப் பொறுப்பாக முடியும்? இது ஏதாவது அரசியல் லாபத்திற்காக நீங்கள் போடும் நாடகமாகவும் இருக்கலாம், உங்களுடைய விரோதிகள் யாராவது செய்த சதியாகவும் இருக்கலாம். இந்தக் கேசில் இருந்து எப்படி வெளியே வருவது என்று எனக்கும் தெரியும் உங்களுக்கு மட்டும் தான் செல்வாக்கு இருப்பதாக நினைத்துக் கொள்ளாதீர்கள்” என்றான் சிவசந்திரன் சற்றும் சளைக்காமல்.
“என்ன மிரட்டுகிறீர்களா?”
“அதை முதலில் யார் செய்தது என்று நன்றாக நினைவுப்படுத்திக் கொண்டு பேசுங்கள்” என்று அவன் கூறவும் அரசியல்வாதி கொஞ்சம் அடங்கினார்.
அவன் மேலும் பேசினான்.
“தவறு யாருடையதாக இருந்தாலும் காணாமல் போனது எங்களுடைய பள்ளி மாணவி. அவளைக் கண்டுபிடிக்க வேண்டிய கடமை எங்களுக்கும் இருக்கிறது, அதற்கு எனக்குக் கொஞ்சம் அவகாசம் வேண்டும் அதுவரை நீங்கள் பொறுமையாக இருந்தால் இந்தப் பிரச்சனைக்குக் கௌரவமாகவும் ரகசியமாகவும் தீர்வு காண முடியும் என்று நிதானமாக எடுத்துக் கூறினான்.
“சார் நீங்கள் என்ன சொன்னாலும் சரி எங்கள் மகள் பத்திரமாகத் திரும்ப வந்து விட்டால் போதும்” என்று தணிந்து பேசினாள் அந்த மாணவியின் தாய்.
சிவசந்திரன் தனது செல்வாக்கை பயன்படுத்திக் காவல்துறையில் ரகசியமாகப் புகாரளித்து மாணவியைக் கண்டுபிடிக்கக் கேட்டுக் கொண்டான். மேலும் தனிப்பட்ட முறையிலும் அவனுடைய ஆட்களை வைத்து தேடச் செய்தான். அருகில் உள்ள ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், செக் போஸ்ட்டுகள், டோல்கேட்டுகள், பக்கத்து மாவட்டங்களில் உள்ள விமான நிலையங்கள் என ஒரு இடம் விடாமல் பல இடங்களில் பல பேரை வைத்து தேடிய விதத்தில் அந்தத் திக் திக் தேடல் காட்சியும் சேசிங் காட்சியும் சினிமாவையே மிஞ்சும் வகையில் இருக்க, கடைசியாக அந்த மாணவி அவளுடைய காதலனுடன் பிடிபட்டாள். பிடிபட்ட இருவரையும் போலீசார் பள்ளி வளாகத்திற்கு அழைத்து வந்து ஒப்படைத்தனர்.
காதலனுடன் வந்த மகளைக் கண்ணீருடன் காத்திருந்த தாய் கன்னத்தில் மாற்றி மாற்றி அடிக்க, அவளுடைய காதலனை தந்தை அடிக்கத் துவங்கினார்.
“இதையெல்லாம் நீங்கள் வெளிய வைத்துக் கொள்ளுங்கள் இது பள்ளி, இப்போது விசாரிக்க வேண்டியது எங்களுடைய முறை” என்ற சிவசந்திரன் அந்த இருவரையும் முன்னால் வருமாறு அழைத்தான்.
அவன் பேச துவங்கும் முன்னால் அந்த மாணவி “எனக்கு யாருடைய உபதேசமும் தேவையில்லை, அவன் தான் வேண்டும். அவன் இல்லாமல் இருக்க முடியாது” என்றாள் தடாலடியாக.
“ஓ” என்று மெச்சுவதைப் போல் பாவனைச் செய்து சிவசந்திரன், “நீ எப்படி?” என்று அவளுடைய காதலனைக் கேட்டான்.
“எனக்கும் அவள் தான் வேண்டும்” என்றான் அவன் அவளைப் பின்பற்றி.
“வெரி குட்” என்றவன் அருகில் இருந்த பெண் போலீசை அழைத்து, அந்தப் பேக்கில் என்ன இருக்கிறது என்று பாருங்கள் மேடம் என்று மாணவியின் தோள் பையைக் காட்டினான்.
அதைத் திறந்து பார்த்தபோது அரசியல்வாதி வீட்டு மொத்த நகைகளும் சில ரொக்கங்களும் உள்ளே இருப்பதைக் கண்டு எல்லோரும் அதிர்ந்தனர்.
“தெய்வீக காதலுக்கு இதெல்லாம் எதற்கு? காணிக்கையாகவா!” என்று கிண்டலாகக் கேட்டான் சிவசந்திரன். அந்தப் பையனை பற்றி விசாரித்ததில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன் வெளிமாநிலத்தில் இருந்து வந்து இங்கே கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறான் அது தவிர அவனுக்குப் போதை வஸ்துக்களுடன் தொடர்பு இருப்பதாக அவன் மேல் காவல் துறையினருக்குச் சந்தேகம் உள்ளது வரை தெரிய வந்தது.
அவர்கள் இருவரையும் பார்த்து, “உங்கள் இருவருடைய வீட்டிலும் பேசி நானே உங்களுக்குத் திருமணம் செய்து வைக்கிறேன் ஆனால் அதற்குச் சில கண்டிஷன் இருக்கிறது என்று அவன் முடிக்கும் முன்பாக ஆத்திரத்துடன் குறுக்கிட்டார் அரசியல்வாதி.
“யார் பெண்ணுக்கு யார் திருமணம் பேசுவது?”
“இப்போது எதுவும் கை மீறி போய்விடவில்லை தயவு செய்து அமைதியாக இருங்கள். அப்படி இருக்க முடியாவிட்டால் வெளியே போய் நில்லுங்கள்” என்று விட்டு மீண்டும் தொடர்ந்தான்.
“இன்றிலிருந்து சரியாக எட்டு ஆண்டுகள் நீங்கள் இருவரும் பிரிந்து இருக்க வேண்டும் இ மெயில் இன்டர்நெட் வாட்ஸ்அப் நண்பர்கள் மூலமாகக் கூட உங்களுக்கு இடையே எந்தத் தொடர்பும் இருக்கக் கூடாது, அவ்வளவு ஏன் நீங்கள் இருவரும் உயிருடன் இருப்பது கூட ஒருவருக்கொருவர் தெரியக்கூடாது. மற்றபடி இந்த எட்டு ஆண்டுகளில் உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள நீங்கள் மேற்கொண்டு படிப்பதும் பணம் சம்பாதித்துச் சேமிப்பதும் உங்கள் தனிப்பட்ட விருப்பம். இப்படி முழுமையாக எட்டு ஆண்டுகள் பிரிந்து இருந்த பிறகும் உங்களுக்குள் இதே அளவு காதல் இருக்குமானால் அப்போது உங்களுக்கு முறைப்படி திருமணம் செய்து வைப்பதற்கு இங்கிருக்கும் எல்லோருமே சாட்சி. ஆனால் அப்படி ஒருவேளை உங்களுக்குத் திருமணமே நடந்தால் கூடப் பெண் வீட்டிலிருந்து ஒரு பைசா கூடச் சீர்வரிசையாகக் கிடைக்காது உங்கள் வாழ்வை நீங்களே பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். இவ்வளவுதான் கண்டிஷன், என்ன ஓகேவா?” என்று அவன் முடித்த போது நவயுக காதலர்கள் இருவருமே வாய் பிளந்தனர்.
“இதெல்லாம் எப்படி முடியும்?” என்று அந்த இளைஞனும் “என்ன, எங்களைப் பிரிக்கச் சதி செய்கிறீர்களா?” என்று அந்தச் சிறுமியும் கிறீச்சிட்டனர்.
“உங்கள் காதல் உண்மையானதாக இருந்தால் இந்தக் கண்டிஷன்களை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டு முறைப்படி திருமணம் செய்து கொள்வதில் என்ன தவறு இருக்கிறது அதுதானே உங்களுக்குப் பெருமையும் கூட” என்று இலகுவாகக் கேட்டான் அவன்.
“இதற்கு எட்டு ஆண்டுகள் எப்படிக் காத்திருக்க முடியும்?” என்று கேட்டான் அந்த இளைஞன்.
“ஏன் முடியாது உண்மையான காதல் என்றால் எட்டு ஆண்டுகள் என்ன எட்டு யுகங்கள் கூட ஒருவரை ஒருவர் பார்க்காமல் பேசாமல் வெறும் நினைவுகளுடன் மட்டுமே, காத்திருக்க முடியும் அப்படிக் காத்திருப்பதன் பெயர்தான் காதல்” என்றவனின் வார்த்தைகள் கங்காவின் மனதை சலனப்படுத்தியது.
அவன் தொடர்ந்து பேசினான். “இப்படி யாருக்கும் தெரியாமல் பொன்னையும் பொருளையும் மூட்டை கட்டிக்கொண்டு ஊரை விட்டு ஓடுவதற்குப் பெயரெல்லாம் காதல் அல்ல” என்றவன் தனது இருக்கையில் இருந்து எழுந்து சுற்றி வந்து, “வெறும் எட்டு ஆண்டுகள் பிரிந்திருக்க வேண்டும் என்ற சாதாரணக் கண்டிஷனை கூட ஏற்றுக்கொள்ள முடியாமல் இப்படி உடல் நடுங்கி கொண்டிருக்கும் இந்தப் போதை ஆசாமியை திருமணம் செய்து கொண்டு என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டபடியே அவன் அணிந்திருந்த முழுக்கை சட்டையை விலக்கி அவன் போதை ஊசி பயன்படுத்தியதால் ஏற்பட்டிருந்த காயங்களைக் காட்டினான்.
அவனுடைய உடல் நடுக்கமும் சிவப்பேறி இருந்த கண்களும் தான் சிவசந்திரனுக்கு அவனை அடையாளப்படுத்திக் காட்டிக் கொடுத்தது.
எப்போதும் முழுக்கை சட்டையை அணிந்திருக்கும் அவனுடைய கையையும் காயத்தையும் இதுவரை கண்டிராத அந்தச் சிறுமி முதல்முறையாக மிரட்சியுடன் அவனைப் பார்த்தாள்.
அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றவனைச் சுற்றி வளைத்து மடக்கிப்பிடித்த போலீசார் “இது ஒரு பெரிய கேஸ். இவன் தனி ஆள் இல்லை, இங்கே போதைப் பொருள் கடத்துவது பெண்களைக் கடத்துவது என்று பெரிய கும்பலே இதில் ஈடுபட்டு இருக்கிறார்கள், இவனை வைத்து தான் மற்றவர்களைப் பிடிக்க வேண்டும்” என்று கூறிவிட்டு பெண்ணின் பெற்றோரிடம் திரும்பி , “எதற்கும் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருங்கள் ” என்றுவிட்டு அவனை இழுத்துச் சென்றனர்.
எவ்வளவுதான் வீராவேசமாகப் பேசினாலும் தங்கள் மகள் எவ்வளவு பெரிய ஆபத்தில் சிக்க இருந்தாள் என்பதைக் கண்கூடாகப் பார்த்து மிரண்டு போன அந்தத் தந்தையின் அரசியல் பலமும் பணப் பலமும் அப்போது தான் மட்டுப்பட்டது.
அந்தச் சிறுமியிடம் வந்த சிவசந்திரன், “உன்னைப் போன்ற பெண்ணை என்ன சொன்னாலும் திருத்த முடியாது உன்னைத் திருத்துவது என் வேலையும் அல்ல. பெற்றோரைப் பற்றியும் குடும்பக் கௌரவத்தைப் பற்றியும் கவலைப்பட இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு மனம் வருவதில்லை. அதனால் அதை விட்டு விடுவோம், ஆனால் நீ கொண்டு சென்ற பணமும் நகையும் காலியாகி விட்டால் அடுத்தப் படியாக அவன் உன்னையும் விற்று விட்டு உன்னைப் போல் இன்னொரு பெண்ணைத் தேடி இருப்பான், அப்போது உன் நிலைமை என்ன, அதைப்பற்றியாவது யோசித்துப் பார்த்தாயா?” என்று கேட்டவுடன் அந்தப் பெண் உடைந்து அழுதாள்.
“உங்களுக்கு வாக்கு கொடுத்ததைப் போல உங்கள் மகளைக் காப்பாற்றி ஆகிவிட்டது. இவ்வளவு நடந்ததற்கு இதுவே வேறொரு பள்ளியாக இருந்திருந்தால் இப்படி ஒரு பெண்ணே எங்கள் பள்ளியில் படிக்கவில்லை என்று சுலபமாக விலகிக் கொண்டிருப்பார்கள். இப்படியொரு போதை ஆசாமியுடன் பழகியதற்காகக் காவல்துறையினர் உங்கள் மகள் மீதும் நடவடிக்கை எடுத்து இருப்பார்கள். ஆனால் அவ்வளவுக்குப் போக எனக்கு விருப்பமில்லை அதனால் இப்போதே உங்கள் பெண்ணுக்கு டிசி வாங்கிக் கொள்ளுங்கள், அதுதான் எங்கள் பள்ளிக்கும் இங்கே படிக்கும் மற்ற மாணவர்களுக்கும் நல்லது” என்றான் அழுத்தம் திருத்தமாக.
அந்த மாணவியின் தாய், “தவறு எங்கள் பெண் மேல் வைத்துக் கொண்டு பள்ளியின் மேலும் டீச்சர் மேலும் அனாவசியமாகப் பழி போட்டு பேசியது எங்களுடைய தப்புதான் அதற்காகத் தயவு செய்து எங்களை மன்னித்து விடுங்கள் சார். தயவு செய்து டிசி மட்டும் கொடுத்து விடாதீர்கள்” என்றாள்.
கூடவே அவரது கணவரும், “நான் ஆரம்பத்தில் பேசியதை பொருட்படுத்தாமல் நீங்கள் மட்டும் இந்த விஷயத்தில் அக்கறை கொள்ளாமல் இருந்திருந்தால் எங்களால் எங்கள் பெண்ணை இவ்வளவு விரைவாக மீட்டிருக்கவே முடியாது. அதைவிடவும் இந்த விஷயம் பேப்பர் டிவி சமூகவலைதளம் என எங்கேயும் வெளியே தெரியாமல் இருப்பதற்கும் நீங்கள் தான் காரணம். மாணவர்களின் நலனில் இவ்வளவு உயர்ந்த எண்ணமும் அக்கறையும் கொண்ட நீங்கள் தயவு செய்து அவள் செய்த தவறை மன்னித்துத் தொடர்ந்து இங்கே படிக்க அனுமதிக்க வேண்டும்” என்றார்.
“இதற்குப் பள்ளி நிர்வாகம் சம்மதித்தால் மட்டும் போதாது உங்கள் பெண்ணின் வகுப்பு ஆசிரியையும் சம்மதிக்க வேண்டும். ஏனெனில் உங்கள் பெண் செய்த தவறும், அதற்குத் தேவையில்லாமல் நீங்கள் டீச்சர் மேல் பழி சுமத்தி பேசிய விதமும் சரியானது அல்ல. எங்களுக்கு மாணவர்கள் எவ்வளவு முக்கியமோ அதே அளவுவுக்கு ஆசிரியர்களும் முக்கியமானவர்கள்தான்” என்று முடிவை கங்காவிடம் ஒப்படைத்தான்.
அதாவது, அவர்கள் கங்காவை பற்றித் தவறாகப் பேசியதற்காக அவர்களை அவளிடம் வருத்தம் தெரிவிக்க வைப்பதற்கான சாமர்த்தியமான செயல்பாடு இது என்பது வசுந்தராவுக்கும் கங்காவுக்கும் நன்றாகவே புரிந்தது. கங்கா விடம் திரும்பிய அவர்கள், “மேடம் நான் பேசிய விதம் மிகவும் தவறானது தான் அதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். அதற்காக எங்கள் பெண்ணுக்கு டிசி கொடுத்து விடாதீர்கள். இப்படி ஒரு கெட்ட பெயருடன் டிசி வாங்கிக் கொண்டு போனால் வேறு எந்த இடத்திலும் அவளுக்குப் படிக்க இடம் கிடைக்காது மேடம். அவளுடைய எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நீங்கள் சாரிடம் எடுத்துச் சொல்லுங்கள்” என்று பணிவுடன் கேட்டுக் கொண்டார் அரசியல்வாதி.
அந்தப் பெற்றோர்களின் நிலையைப் பார்க்க கங்காவுக்குப் பரிதாபமாக இருந்தது.
“டிசி கொடுக்க வேண்டாம் அவள் இங்கேயே படிக்கட்டும் மேடம்” என்று வசுந்தராவிடம் கூறினாள் அவள்.
“எனக்கும் அதுதான் சரி என்று தோன்றுகிறது நீ என்னப்பா சொல்கிறாய்?” என்று அவர் மகனிடம் கேட்க,
“ஓகே ஆனால் ஒரு நிபந்தனை. பள்ளி சார்பாக உங்கள் பெண்ணுக்கு மனநல ஆலோசகரிடம் கவுன்சிலிங் வழங்கப்படும், அது அவளுடைய நன்மைக்காகத் தான். சில சமயங்களில் அதற்குப் பெற்றோர்களான உங்களையும் கூட அழைக்கலாம் அதற்கு நீங்களும் உங்கள் பெண்ணும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இதற்கு ஒப்புக் கொண்டால் அவள் இங்கேயே படிக்கலாம்” என்று முடித்தான்.
“தாராளமாகச் செய்யுங்கள் சார், நாங்கள் முழு ஒத்துழைப்புக் கொடுக்கிறோம்” என்று பெற்றவர்களும் ஒப்புக்கொள்ள அத்துடன் அந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்தது.
சிவசந்திரன் இவ்வளவு செய்தது பள்ளிக்காக மட்டுமல்ல தனக்காகவும் தான் எனத் தெரிந்திருந்தும் அதற்காக அவனுக்கு நன்றியுரைக்க வேண்டும் என்று அவளுக்குத் தோன்றவில்லை. அவன் என்ன அவளுடைய சொந்த பிரச்சனைக்காகப் போராடி களைத்து விட்டானா அவள் நன்றி சொல்ல! அல்லது தனிப்பட்ட முறையில் அவளுக்காக ஏதேனும் சலுகை காட்டி விட்டானா எதுவும் இல்லையே. அவனுடைய பள்ளியின் நற்பெயரை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டியது அவனுடைய கடமை. அதைத்தான் அவன் செய்தான் அதற்காக அவனுக்குக் கரிசனம் காட்டி முடிந்து போன பழைய உறவுக்கு, பாலம் அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அலட்சியமாக எண்ணினாள் கங்கா.