கண் கூசும் மின்னொளியிலும் வாகனங்களின் இரைச்சல் ஒலியிலும் இரவுகளைத் தொலைத்துக் கொண்டிருக்கும் நகரத்து வாழ்க்கை போல் அல்லாமல் அந்தக் கிராமத்தில் இரவு பொழுது இன்னமும் நிசப்தமாகவும் ரம்மியமாகவும் இருந்தது ஆச்சர்யம் தான். கங்கா அந்த வீட்டில் தனியே வசிப்பதால் பாதுகாப்பு கருதி எப்போதும் இரவில் அனைத்துக் கதவு மற்றும் ஜன்னல்களையும் மூடி விடுவாள். அதே வழக்கத்தில் அன்றொரு நாள் இரவு வேளையில் கதவுகளை எல்லாம் அடைத்து விட்டு, காற்றோட்டத்திற்காகத் திறந்து வைத்திருந்த படுக்கையறை ஜன்னலை மூட வந்தவள், சற்று நேரம் நிலவை பார்த்துக் கொண்டு அப்படியே நின்றாள். அப்போது இலக்கற்ற அவளுடைய பார்வையில் ஏதோ ஓர் உருவம் நிழலாட, மீண்டும் கூர்ந்து கவனித்தாள். எதிர்வீட்டு உப்பரிகையில் நடந்து கொண்டிருந்தான் சிவசந்திரன்.
இந்நேரத்தில் தூங்காமல் என்ன செய்கிறான்? ஒருவேளை அங்கிருந்தபடி தன்னை வேவு பார்க்கிறானா? அப்படியே பார்த்தாலும் தான் என்ன தெரியப் போகிறது? இங்கிருந்து பார்த்தால் அவன் தான் அவளுக்கு நன்றாகத் தெரிவானே தவிர வீட்டுக்குள் எல்லா விளக்குகளையும் அணைத்து விட்டு இருளில் இருக்கும் அவள் அவனுக்குத் தெரிவதற்கு வாய்ப்பே இல்லை, மேலும் அவனும் நின்று நிதானமாக எதையும் கவனிப்பது போல் தெரியவில்லை. அவன் தன் போக்கில் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தான், அவனைப் பார்க்கப் பார்க்க அவள் மனதில் வெறுமையும் கசப்புணர்வும் சூழ பட்டென்று ஜன்னல் கதவுகளை மூடிவிட்டுப் படுக்கையில் விழுந்தவள் சற்று நேரத்தில் உறங்கிப் போனாள்.
ஏதோ ஓர் உள்ளுணர்வு உந்த திடுக்கிட்டு கண்விழித்தவள், தன்னை மீறி ஜன்னல் கதவை திறந்து பார்க்க, அப்போதும் அவன் நடந்து கொண்டே இருந்தான். மொபைலை எடுத்து நேரம் பார்த்தாள், இரவு ஒரு மணி ஆகி இருந்தது. ஏன் இவ்வளவு நேரமாக நடந்து கொண்டிருக்கிறான் என்று ஆராய்ச்சி செய்யத் தொடங்கிய மனதை அவன் செய்த பாவத்திற்கு இங்கிருந்து இமயமலை வரை பாத யாத்திரை போனாலும் தீராது என்று பதில் கொடுத்து அமைதி படுத்தினாள். எல்லோரிடமும் இளகிய மனதுடன் நடந்து கொள்ளும் அவள் அவன் விஷயத்தில் மட்டும் இரக்கமற்றவளாகவே இருந்தாள். அவன் எப்படியோ போகட்டும் என்று எண்ணியபடி மீண்டும் படுக்கையில் வந்து விழுந்தாள், ஆனால் இம்முறை ஜன்னல்களை மூடவில்லை. படுக்கையில் படுத்தவளின் பார்வை அவன் கால் போன திசையில் பயணிப்பதையும் அவளால் தடுக்க முடியவில்லை.
அன்று இரவு யாரோ தடதடவென்று கதவை தட்டும் ஒலி கேட்டுக் கண் விழித்த கங்கா, கதவைத் திறவாமல் “யார்?” எனக் கேட்டாள்.
“நான் தான் அம்மா” என்ற சிந்தாமணியின் குரலும் கூடவே விசும்பல் ஒலியும் கேட்க உடனே கதவைத் திறந்த கங்கா,
வெளியே கண்ணீரும் கம்பலையுமாக நின்றிருந்த சிந்தாமணியயை பார்த்து, “என்ன சிந்தா இந்த நேரத்தில்?” என்று விசாரித்தாள்.
“அம்மா….” என்று மேற்கொண்டு பேச முடியாமல் கேவியவளை, “முதலில் உள்ளே வா” என்று அழைத்து வந்து அவளை அமர வைத்தாள்.
உள்ளே வந்த பின்பும் சிந்தாமணி தொடர்ந்து அழுது கொண்டே இருந்தாள். அவள் முகம் மற்றும் கைகள் எங்கும் தடிப்பாக வீங்கி ரத்தம் கட்டிக் கொண்டிருந்தது.
“என்ன பிரச்சனை சிந்தா?” என்று கங்கா கேட்கவும் மளமளவென்று கொட்டித் தீர்த்தாள் சிந்தாமணி.
“என் வீட்டுக்காரர் குடிச்சிட்டு வந்தாரும்மா, ஏன் இப்படிச் செய்யுறீங்கன்னு கேட்டதுக்கு நான் ஆம்பளை இப்படித்தான் செய்வேன் நீ யாரு என்ன கேட்கன்னு சண்டை போட்டு என்னை அடிச்சு, வீட்டை விட்டு போன்னு விரட்டி அடிச்சிட்டார். நான் எங்கே போவேன், எனக்குன்னு யாரு இருக்கா” என்று கூறி மீண்டும் கண்ணீர் சிந்தினாள்.
எப்போதும் கலகலப்பாகப் பேசிக் கொண்டிருக்கும் சிந்தாமணியை இந்த நிலையில் பார்க்க அவளுக்குப் பாவமாக இருந்தது. சிந்தாமணியும் அவளுடைய கணவன் வேலப்பனும் எப்போதும் ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதைத் தான் அவள் பார்த்திருக்கிறாள். எதிர் வீட்டில் வேலைக்கு வரும்போது இருவரும் சேர்ந்து தான் வருவார்கள் சேர்ந்து தான் போவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இப்படி ஒரு முரண் ஏற்பட்டிருப்பது ஆச்சரியம்தான். ஆனாலும் ஆண் என்ற கர்வத்தில் வேலப்பன் செய்திருக்கும் கொடுமையை அவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. பெண் என்றால் இவர்களுக்கு அவ்வளவு மட்டமா அல்லது அவர்களை எதிர்க்க யாருமே இல்லை என்கிற எண்ணமா என்று அவள் மனம் கொதித்தது. சிந்தாமணிக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று புரியாமல் அவள் பார்த்துக் கொண்டிருக்கச் சிந்தாமணியோ,
“இன்னைக்கு ராவுக்கு நான் இங்கே தங்கிக்கட்டுமா அம்மா?” என்று கெஞ்சும் குரலில் கேட்டாள்.
அர்த்த ராத்திரியில் அடைக்கலம் கேட்டு வந்து நிற்கும் பெண்ணுக்கு யார் தான் உதவ மறுப்பார்கள். அவள் படுத்து உறங்குவதற்குப் பாய் மற்றும் தலையணை கொண்டு வந்து கொடுத்த கங்கா கூடவே ஒரு டம்ளரில் சூடான பாலும் கொண்டு வந்தாள்.
சிந்தாமணி, “வேண்டாம்மா” என்று துக்கத்துடன் மறுக்க,
“பரவாயில்லை கொஞ்சமாகக் குடி வெறும் வயிற்றில் படுக்கக் கூடாது” என்று வற்புறுத்தி குடிக்க வைத்தாள் கங்கா.
மறுநாள் காலை பொழுது விடிந்ததிலிருந்து சிந்தாமணி சோகமாகவே காணப்பட்டாள். அவள் என்ன முடிவில் இருக்கிறாள் அடுத்து என்ன செய்யப் போகிறாள் என்று கங்காவுக்கும் புரியவில்லை. அவளிடம் கேட்பதற்கும் தயக்கமாக இருந்தது. சற்று நேரத்தில் சிந்தாமணியே வந்து, “ராத்திரி எனக்குத் தங்க இடம் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றிங்கம்மா. நான் போயிட்டு வரேன்” என்று கூறவும் அவளுக்குத் திக்கென்றது.
பதற்றத்துடன், “எங்கே போகப் போகிறாய் சிந்தா?” என்று கேட்டாள்.
“என் வீட்டுக்கு தான்மா, வேறு எங்கே போக முடியும்?” என்று விரக்தியுடன் பேசினாள் அவள்.
“இதற்கெல்லாம் மனம் தளர்ந்து போகக்கூடாது சிந்தா, எல்லாம் சரியாகி விடும் நீ தைரியமாக இரு” என்று அவளைத் தேற்றும் விதமாக ஆறுதல் கூறினாள்.
“என்னம்மா, நான் தற்கொலை செய்துக்குவேன்னு நினைக்குறீங்களா? எனக்கு மனசு ரொம்பவே கஷ்டமா தான் இருக்கு. ஆனா இதுக்காகவெல்லாம் உயிரைவிடும் அளவுக்கு நான் கோழை இல்லை” என்றாள் நிதானமாக.
புன்னகையுடன், “சூப்பர் சிந்தா, பெண்கள் இப்படித்தான் தெளிவாக இருக்க வேண்டும்” என்று அவளைப் பாராட்டினாள் கங்கா.
அங்கிருந்து சோர்ந்த முகத்துடன் கிளம்பிச் சென்ற சிந்தாமணி மாலையில் மலர்ந்த முகத்துடன் திரும்பி வந்தது கங்காவுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
அந்த மலர்ச்சிக்கான காரணத்தைச் சிந்தாமணியே கூறினாள்.
“இனிமேல் என் வீட்டுக்காரர் குடிக்கவே மாட்டேன்னு சத்தியம் செய்துட்டாருங்கம்மா”
“வெரி குட்! சிந்தா, ஆனால் இதை நம்பலாமா?” என்று சந்தேகத்துடன் கேட்க, “கண்டிப்பா நம்பலாம்மா, ஏன்னா சத்தியம் செய்து கொடுத்தது சந்துரு ஐயாகிட்டே”
“என்ன?”
“நேத்து ராத்திரி நான் இங்கே வந்ததைச் சந்துரு ஐயா பார்த்திருக்கார் போல. காலையில் அவர் என் வீட்டுக்காரரை அழைத்து என்ன விஷயம் என்று விசாரித்து இருக்கிறார். அவரும் அரைகுறையா விஷயத்தைச் சொல்ல அதைக் கேட்ட சந்துரு ஐயா, இனிமேல் குடித்தாலோ, பெண்டாட்டியை கொடுமை படுத்தினாலோ இங்கே வேலை கிடையாதுன்னு சொன்னாராம். அவ்வளவு தான், இனி குடிக்கவே மாட்டேன்னு என் வீட்டுக்காரர் சத்தியமே செய்துட்டாராம்”
யோசனையுடன், “வேலை கிடையாது என்று சொன்னதற்குச் சத்தியம் செய்து விட்டாரா?” எனக் கேட்டாள் கங்கா.
“பின்னே, பெரிய வீட்டில வேலையை விட்டு நிறுத்திட்டாங்கன்னா, அதுக்கு அப்புறம் அவங்களுக்குச் சுற்று வட்டாரத்தில் எங்கேயும் வேலை கிடைக்காதும்மா. அப்படியே கிடைத்தாலும் அங்கே கூலியும் பாதுகாப்பும் இதுபோல இருக்காது. வேலை செய்பவர்களைக் கொத்தடிமையாகத் தான் நடத்துவார்கள், பெரிய வீட்டில் வேலை என்பது எங்களுக்கெல்லாம் அரசாங்க உத்தியோகம் மாதிரி” என்று பெருமையுடன் கூறியவள், “அப்புறம் ஐயா முன்னாடியே என்கிட்டயும் மன்னிப்பு கேட்டாருங்கம்மா” என்றாள் வெட்கத்துடன்.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த கங்காவுக்கு ஏதோ ஒன்று மனதை உறுத்தவும், “எல்லாம் சரிதான் சிந்தா ஆனால்” என்று மௌனமானாள்.
“என்னங்கம்மா?”
“இல்லை, என்ன இருந்தாலும் நேற்று உன் கணவர் உன்னை அடித்ததும் வீட்டை விட்டு வெளியே அனுப்பி அவமானப்படுத்தியதும் தப்பில்லையா, இதை உன்னால் எப்படி மன்னிக்க முடிந்தது?” என்று வெளிப்படையாகவே கேட்டாள்.
பொறுமை என்னும் பெயரில் இன்னும் எத்தனை கொடுமைகளைத் தான் பொறுத்துக் கொள்வது. குடும்ப வன்முறை என்பது காலங்காலமாய்ப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி அதை எதிர்த்துப் போராட தெரியாத அந்தப் பாமர பெண்ணின் பேச்சில் அவளுக்கு உடன்பாடில்லை.
“இப்படி எல்லாக் கொடுமைகளையும் சகித்துக் கொண்டு சேர்ந்து வாழ்ந்து என்ன சாதிக்கப் போகிறோம் என்றாள் கங்கா.
“பிரிந்து போய் என்ன சாதிக்கப் போகிறோம், ஆணவக்காரி வாழாவெட்டி என்று பெயரெடுப்பதைத் தவிர? குறை இல்லாத மனுஷங்களோ தப்பு செய்யாத மனுஷங்களோ யார் இருக்காங்கம்மா, இதோ இந்தத் தெருவில் கடைசி வீட்டுக் கல்யாணியோட புருஷனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கு, இங்கிருந்து ரெண்டு வீடு தள்ளி இருக்கிற கனகா புருஷன் கல்யாணம் ஆகி பத்து வருஷம் ஆகியும் இன்னும் வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்துறான், நாலு வீடு தள்ளி இருக்கிற கோகிலா புருஷனுக்கு இல்லாத பழக்கமே இல்லை ஆனா அந்தப் பொம்பளைங்க யாரும் வீட்டை விட்டுப் போயிடலை.
புருஷன் செய்யுற தப்புக்கு எல்லாம் கோவிச்சுக்கிட்டு வீட்டை விட்டு போகணும்னா இந்த ஊருல ஒரு வீட்டில கூடப் பொம்பளை இருக்க மாட்டா. எல்லாருமே குடும்பத்துக்காகவும் குழந்தைகளுக்காகவும் கட்டுப்பட்டு எல்லாவற்றையும் சகிச்சுக்கிட்டு தான் வாழறாங்கம்மா. அக்கிரமக்காரர்களையும் அயோக்கியர்களையும் அவங்க செய்யும் கொடுமைகளையும் தான் சகித்துக் கொள்ளக் கூடாது, ஆனா அறியாமையில் செய்யும் தப்பை சகிச்சுக்கலாம். நான் சொன்ன ஆம்பளைங்க எல்லாம் ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையால் புத்தி கேட்டுத் தப்பு செய்யுறவங்க. அதே நேரம் குடும்பத்தையும் யாரும் கைவிட்டு விடலையே, எல்லாரும் அவங்கவங்க குடும்பத்தை நல்லாவே பாத்துக்கிறாங்க.
அவங்க சம்பாதிக்கிற சொத்தில் நமக்கு உரிமை இருக்கும்போது அவங்க கோபத்தில் மட்டும் இல்லையா, விட்டுட்டு போறதிலே என்னம்மா பெருமை இருக்கு விட்டுக் கொடுத்து வாழ்வதில் தான் இருக்கு. அடிக்கவும் அணைக்கவும் அவங்களுக்கும் தான் நம்மளை விட்டா யார் இருக்கா?” என்று சிந்தாமணி பேசப் பேச கங்காவுக்குப் பேச்சே வரவில்லை.
இதையெல்லாம் அவள் பொதுவாகச் சொல்கிறாளா அல்லது தனக்காகச் சொல்கிறாளா எனப் புரியாமல் அசந்து போய் விட்டாள். படிக்காத பாமர பெண் என்று அவள் சுலபமாக நினைத்த சிந்தாமணிக்குள் எவ்வளவு தீர்க்கமான சிந்தனைகள், எவ்வளவு பொறுமை. அவள் சொன்ன விஷயங்கள் எல்லாம் எவ்வளவு கருத்தாழம் மிக்கது. மெத்த படித்த மேதைகள் கூட இவ்வளவு பெரிய விஷயத்தை இவ்வளவு எளிமையாக விளக்க முடியாது. அயோக்கியனை மன்னிக்க முடியாது ஆனால் அறியாமையினால் தப்புச் செய்கிறவர்களை மன்னிப்பதில் தவறில்லையே!
“சரிங்கம்மா, நான் கிளம்புறேன், அவரு எனக்காகக் காத்துக் கிடப்பாரு” என்று கண்கள் பளபளக்க கன்னங்கள் செம்மையுற வெட்கத்துடன் கூறிவிட்டு நடந்தாள் சிந்தாமணி.
சிந்தாமணி பேசிவிட்டு சென்றதன் பிரதிபலிப்பாகக் கங்கா நீண்ட நேரமாக உறங்காமல் விழித்திருந்தாள். அவள் சொன்னதைப் போல மன்னித்து விடுவது அவ்வளவு எளிதான ஒன்றா? அப்படி என்றால் தன்னால் மட்டும் அது ஏன் முடியவில்லை? எதையும் மன்னிக்கும் மனதில் தான் கோபமும் பகைமையும் இருக்காது. அப்படிப்பட்ட மனம் கொண்டவர்களால் தான் எதையும் இயல்பாகக் கடந்து போக முடியும், அவர்களிடம் தான் எல்லையற்ற நிம்மதி நிறைந்திருக்கும். சிவசந்திரன் மன்னிப்பு கேட்ட பின்னாலும் அவனை மன்னிக்க மனம் இல்லாததால்தான் தன் மனம் நிம்மதியின்றி அலைப்புறுகிறதோ, என்று தோன்றவும் அப்படியானால் அவனை மன்னிக்க முடியுமானால் அவனை ஏற்றுக் கொள்ளவும் முடியுமோ என்ற கேள்வி எழவும் திகைப்புற்றாள்.
தன்னிச்சையாக அவள் பார்வை ஜன்னல் புறமாகப் பார்க்க அங்கே எதிர்வீட்டுக்காரன் மாடியில் நடைபோட்டுக் கொண்டிருந்தான். சில நாட்களாக இது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது, அவள் அதைக் கண்டும் காணாதது போல் இருந்தாள். ஆனால் என்றைக்கும் இல்லாமல் இன்று அவள் மனதில் பழைய நினைவுகள் வந்து அலைமோதின.
இதே போல் நிலவொளியில் அவனுடன் கை கோர்த்தபடி, அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு அவன் மூச்சுக் காற்றைச் சுவாசித்து, ஒருவரை ஒருவர் ரசித்தபடி மௌனத்தில் ஆழ்ந்திருந்த காலங்கள் நினைவு வந்து விடியும் வரை அவள் கண்களை நனைத்துக் கொண்டிருந்தது.