சிந்தாமணியின் பேச்சு சிவசந்திரனின் நினைவு எல்லாம் சேர்ந்து மனதை அலைகழித்து இரவெல்லாம் பாடாய்ப் படுத்த, காலையில் பள்ளி செல்லும் முன்பாக, இறைவனிடம் ‘இந்த நிலை வேண்டாம் கொஞ்சம்மேனும் அமைதியை கொடு’ என வெகு நேரம் கண் மூடி வேண்டினாள்.
அப்போது, “உள்ளே வரலாமா?”என்று வெளியிலிருந்து குரல் கேட்டுக் கண் திறந்தாள். சிவசந்திரனின் சிற்றன்னைகள் வந்திருப்பதைக் கண்டு, உள்ளே வரவேற்றாள்.
அவர்கள் மாலையில் தங்கள் வீட்டில் நடக்கவிருக்கும் சுமங்கலி பூஜைக்குக் கங்காவை அழைப்பதற்காக வந்திருந்தனர்.
“நேற்று டியூஷன் எடுக்க வந்த போதே சொல்லி இருக்கலாமே, இதற்காக இவ்வளவு தூரம் வந்திருக்கிறீர்களே இங்கே வேறு யாரையாவது அழைக்க வேண்டுமா?” என்று கேட்டாள் கங்கா.
“இல்லைம்மா, உன்னை அழைக்கத் தான் வந்தோம், வீட்டிற்கு வந்த இடத்தில் அழைப்பது அவ்வளவு நன்றாக இருக்காது இல்லையா” என்று இன்முகத்துடன் கூறினாள் வசந்தி.
“ஆமாம்மா, இன்று டியூஷன் வேண்டாம், ஆனால் நீ கண்டிப்பாகப் பூஜைக்கு வர வேண்டும். நீ கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று பெரிய அக்கா சொல்ல சொன்னார்கள்” என்று அழைத்தாள் சுசிலா.
“சரிம்மா” என்று தலையாட்டினாள் கங்கா.
வசுந்தராவை தவிர அந்த வீட்டின் மற்ற நான்கு மருமகள்களை அம்மா என்று தான் அழைப்பாள். அப்படி அழைக்கச் சொன்னதும் அவர்கள் தான்.
மாலையில் அவள் பூஜைக்குச் சென்ற போது இன்னும் பூஜை ஆரம்பிக்கப்படவில்லை. பூஜைக்கான வேலைகள் தான் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. அந்த வீட்டின் இளைய மருமக்களான செல்வமதியும் தேவகியும் பூக்களைத் தொடுத்துக் கொண்டிருக்க அவர்களுக்கு உதவியாகப் பூ தொடுத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் கங்கா.
திருமணமாகாதவர்கள் சுமங்கலி பூஜை செய்து, அவர்களிடம் ஆசி பெறுவதால் விரைவில் திருமணம் கைகூடும் என்று அவர்களுடைய குடும்ப ஜோசியர் சொல்லி இருக்கிறாராம் அதனால்தான் இந்தச் சுமங்கலி பூஜை ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகக் கூறினர்.
பூஜை நேரம் நெருங்கிய போது அவர்கள் அழைத்திருந்த எல்லாச் சுமங்கலி பெண்களும் வந்துவிட அதில் ஒருவர் மட்டும் வரவில்லை. அந்தப் பெண்ணின் வீட்டில் வர முடியாதபடி ஏதோ அசந்தர்ப்பமான சூழ்நிலையாம் அதனால் கடைசி நேரத்தில் வர முடியவில்லை என்று சொல்லி விட்டார். அவ்வளவுதான் விஷயம் அறிந்தவுடன் எல்லோர் முகத்திலும் அப்படி ஒரு பரிதவிப்பு. சுமங்கலி பூஜையைக் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் செய்ய வேண்டுமாம் இப்போது கடைசி நேரத்தில் ஒருவர் இல்லாவிட்டால் திடீரென்று இன்னொரு பெண்ணை எப்படித் தேடுவது இந்த நேரத்தில் யாரை அழைப்பது? என்று எல்லோரும் பதறினர்.
அந்த வீட்டில் திருமணத்திற்குத் தான் தடை என்றால் அதற்குப் பரிகாரமாகச் செய்யவிருந்த சுமங்கலி பூஜைக்கும் இப்படி ஒரு தடை ஏற்படுகிறது என்றால் யாராக இருந்தாலும் வருத்தப்படத்தானே செய்வார்கள்.
அப்போது யாரும் எதிர்பாராத வகையில், “யாரும் கவலைப்பட வேண்டாம் அந்த இன்னொரு பெண்ணுக்கு பதிலாகக் கங்காவை சேர்த்துக் கொள்ளுங்கள்” என்று வசுந்தரா கூறவும் எல்லோருக்கும் மகிழ்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. ஏனெனில் கங்கா திருமணமான பெண் என்பது வசுந்தராவை தவிர மற்ற யாருக்குமே தெரியாது.
“உனக்குத் திருமணமாகிவிட்டதா இதுவரை சொல்லவே இல்லையே” என்று அவர்கள் கங்காவை சூழ்ந்து கொண்டு விசாரிக்க, “மேடமுக்கு தெரியும் அவர்கள் சொல்லி இருப்பார்கள் என்று நினைத்தேன்” என்று அவர்களிடம் சமாளித்தபடி தயக்கத்துடன் வசுந்தராவை பார்த்தாள் கங்கா.
“ஆமாம் நான் தான் சொல்ல மறந்து விட்டேன், சரி சரி நேரம் ஆகிறது நீங்கள் போய்ப் பூஜை வேலைகளைப் பாருங்கள்” என்று கூறி அவர்களை அனுப்பிவிட்டு, கங்காவிடம் வந்தார் வசுந்தரா.
“மேடம் நான் எப்படி?” என்று அவள் தயங்கவும், “நீ சுமங்கலி தானே” என்றவர், “கடைசி நேரத்தில் வேறு யாரையும் தேட முடியாது பூஜையும் தடைப்படக்கூடாது அதனால் இந்த விஷயத்தில் சந்துருவைப் பற்றி நினைக்காமல் இந்தப் பெண்களைப் பற்றி நினைத்துப் பார், அவர்களுக்காக இந்தப் பூஜையில் கலந்து கொள்ளம்மா” என்று சொல்லவும் அவளும் ஒப்புக் கொண்டாள்.
அந்த வீட்டின் இளம் பெண்கள் அவள் பக்கமாக வந்து, “உங்கள் கணவர் வெளி நாட்டில் இருக்கிறாரா, அக்கா? அதனால் தான் நீங்கள் தனியாக இருக்கிறீர்களா?” என்று கேட்க,
“இல்லை இங்கே தான் இருக்கிறார்” என்று தன்னை அறியாமல் உளறி விட்டு அதற்காக மானசீகமாகத் தன் தலையில் குட்டிக் கொண்டாள்.
“அப்படியா? அவர் எப்போது இங்கே வருவார்?” என்று இன்னொருத்தி கேட்கவும் சிவசந்திரன் உள்ளே வரவும் சரியாக இருந்தது.
“இதோ அண்ணா வந்துவிட்டார்” என்று பெண்கள் கூற பூஜையும் உடனே தொடங்கியது.
திருமணம் ஆகாத பெண்கள் வயதில் மூத்த திருமணமான சுமங்கலி பெண்களுக்குப் பாத பூஜை செய்து அவர்கள் பாதம் பணிந்து, அவர்களுக்குப் பட்டுப் புடவை மஞ்சள் குங்குமம் உள்ளிட்ட மங்கல பொருட்களைக் கொடுத்து பூஜை செய்து ஆசி பெற்றுக் கொண்டனர்.
பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் அவரவர் திருமாங்கல்யத்தில் குங்குமம் வைத்துக்கொள்ளக் கங்காவும் அதே போல் அவளுடைய மாங்கல்யத்தில் குங்குமம் வைத்துக் கொண்டாள். அதைச் சிவசந்திரன் உட்பட அந்தக் குடும்பத்தின் அனைவரும் கவனித்தனர்.
இனி ஒருபோதும் கணவனுடன் சேர்ந்து வாழப்போவதில்லை என்று முடிவான பிறகும் அவள் எதற்காக அவன் கட்டிய தாலியை அணிந்திருக்க வேண்டும் இது அவள் தன்னைத்தானே பலமுறை கேட்டுக் கொண்டிருக்கிறாள். ஆனால் அவனுடன் வாழ்ந்த வாழ்க்கையில் ஒரு நாளாவது விருப்பமின்றியோ அல்லது வெறுப்புடன் வாழ்ந்து இருந்தால் அதைச் சுலபமாக அவளால் தூக்கி எறிந்து விட முடியும். ஆனால் அள்ள அள்ள குறையாத அன்பையும் காதலையும் அனுபவித்து வாழ்ந்த அவளால் தாலியை கழற்ற முடியவில்லை.
மற்றவர்கள் கிளம்பி சென்ற பின்னரும் அந்த வீட்டுப் பெண்கள் கங்காவை சுற்றி வளைத்துக் கொண்டு வளவளத்தனர். கடைசி நேரத்தில் கங்கா வந்து கலந்து கொண்டு பூஜை தடை இல்லாமல் நடந்ததை எண்ணி அவர்களுக்கெல்லாம் ஏக மகிழ்ச்சி அதை வெளிப்படையாக அவளிடமே தெரிவித்தனர்.
“இருந்திருந்து இப்போதுதான் மூத்தவளுக்கு ஒரு வரன் வந்திருக்கிறது, இதாவது நல்லபடியாகக் கைகூட வேண்டுமே என்றுதான் இவ்வளவு அவசரமாக இந்தப் பரிகார பூஜையைச் செய்தது. ஆனால் இதிலும் கடைசி நேரத்தில் ஒரு ஆள் குறைந்தவுடன் மனதுக்கு மிகவும் சங்கடமாகப் போய்விட்டது நல்ல வேளையாக, உன்னால் அந்தச் சங்கடம் தீர்ந்தது ரொம்ப நன்றி மா” என்று வாஞ்சையுடன் கூறினாள் வசந்தி.
மரியாதை நிமித்தமாக, “கவலைப்படாதீர்கள் எல்லாம் நல்லபடியாகத் தான் நடக்கும்” என்று பதிலுக்குக் கூறினாள் கங்கா.
“எப்படியாவது ஒரு நல்லது நடந்து விடாதா என்று தான் நாங்களும் நினைக்கிறோம் ஆனால் அதிலும் இவ்வளவு பெரிய சிக்கல் வந்திருக்கிறது” என்று பெருமூச்சுடன் கூறினாள் சுசிலா.
கேட்பது நாகரீகமாக இருக்காது தான் ஆனால் அவர்கள் வருத்தத்துடன் பேசிக் கொண்டிருக்கும் போது எப்படி மௌனமாக அமர்ந்திருப்பது எனவே, “என்ன சிக்கல்” என்று தயக்கத்துடன் அவள் கேட்கவும்,
“இப்போது வந்திருக்கும் வரன், ரொம்பவே நல்ல குடும்பம் ஆனால் அவர்கள் பெண் கொடுத்துப் பெண் எடுக்கவே விரும்புகின்றனர். அவர்கள் வீட்டுப் பெண்ணைச் சந்துரு தம்பி திருமணம் செய்து கொண்டால் இந்த வீட்டுப் பெண்ணை மருமகளாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள். ஆனால் சந்துரு திருமணத்தைப் பற்றிய பேச்சையே எடுக்கக் கூடாது என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டான். இப்போது கூட அதைப்பற்றிப் பேசுவதற்காகத் தான் பெரிய மாமா அவனை வரச் சொல்லி இருக்கிறார்கள். அவன் மனது வைத்தால் தான் இந்த வீட்டில் திருமணம்” என்று பெருமூச்சு விட்டாள் வசந்தி.
அப்போது அங்கே வந்த தேவகி, “அப்போதே கேட்க நினைத்தேன், உன்னுடைய தாலியைப் பார்த்தால் எங்கள் பக்கத்து தாலி போலவே இருக்கிறதே. அப்படியானால் உன் கணவர் இந்தப் பக்கத்தைச் சேர்ந்தவரா?” என்று கேட்டாள்.
கூடவே, “ஆமாமாம், நான் கூடக் கவனித்தேன். நமக்கே தெரியாமல் நாம் ஏதோ ஒரு வகையில் உறவினர்களாக இருப்போம் என்று கூட நினைத்தேன். ஏனென்றால் அந்த மாதிரி தாலி வேறு எங்கேயும் இருக்காது” என்றாள் சுசிலா. சிவசந்திரனின் தந்தை அவனுடைய தாய் கஸ்தூரிக்கு அணிவித்து இருந்த தாலியை போலவே மகனுக்கு வரவிருக்கும் வருங்கால மருமகளுக்கும் தாலியை செய்து வைத்திருந்தாள் கஸ்தூரி. அந்தத் தாலியைத்தான் சிவசந்திரன் கங்காவுக்குக் கட்டியிருந்தான். அது அவர்களுடைய குடும்பத்தாலி அதனால் தான் அந்தப் பெண்கள் அதை எளிதில் அடையாளம் கண்டு கொண்டனர் என்பது அவளுக்குப் புரிந்தது.
அவளுக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் இருந்தது. அவளைப் பற்றிய உண்மைகளை நெருங்கி விட்டார்கள். அவள் சிவசந்திரனின் மனைவி என்று கண்டு கொள்ள ரொம்ப நாள் ஆகாது! அவள் இன்னும் கொஞ்சம் கவனமாக நடந்து கொண்டிருக்க வேண்டுமோ! ஆனால் இவர்கள் அவளுடைய மாங்கல்யத்தை இவ்வளவு துல்லியமாகக் கவனிப்பார்கள் என்று அவளுக்கு எப்படித் தெரியும்?
கங்கா அவர்களுக்குப் பதில் சொல்லும் முன்பாக அவளைக் காக்கும் அரணாக முன்னே வந்து நின்றார் வசுந்தரா.
“டிரைவர் உனக்காக வெகு நேரமாகக் காத்திருக்கிறார் கங்கா” என்று அவள் தப்பித்துக் கொள்ள வழி வகுத்துக் கொடுத்தார்.
அதைப் பற்றிக் கொண்டு, “நேரமாகிறது நான் கிளம்புகிறேன்” என்று விடை பெற்றுக் கொண்டாள் கங்கா.
அடுத்து வந்த நாட்களில் கங்காவுக்கு அந்தத் திருமண விஷயமே மனதில் ஓடிக் கொண்டிருந்தது. இவ்வளவு தடைகளுக்குப் பிறகு இப்போது திருமணம் கைகூடி வந்திருக்கும் வேளையில் அவன் எதற்காக இப்படி முரண்டு பிடிக்கிறான்? அவன் எல்லாவற்றையும் வாழ்ந்து அனுபவித்து விட்டான், அவன் தங்கைகள் என்ன அப்படியா? அவர்களும் இளம் பெண்கள் தானே? அவர்களுக்கும் ஆசை ஏக்கம் கனவு போன்ற உணர்ச்சிகள் இருக்காதா? அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் இவன் இப்படிப் பிடிவாதமாகத் திருமணத்தை மறுப்பது அவளுக்குத் தவறாகப்பட்டது. ஒருவேளை அவன் அவள் மனம் மாறி அவனை ஏற்றுக் கொள்ளக்கூடும் என்று அவளுக்காகக் காத்திருக்கிறானோ? அது இந்த ஜென்மத்தில் நடக்கப்போவதில்லை என்பதை யார் அவனுக்குச் சொல்லி புரிய வைப்பது? வேறு யார் சொன்னாலும் அவன் புரிந்து கொள்ள மாட்டான் அவள் தான் நேரடியாகச் சொல்லியாக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவளாக அவனுடன் பேச காத்திருந்தாள்.
அவனுடன் எப்படி எங்கே தனியே பேசுவது பள்ளியில் பேச முடியாது, இந்தக் கிராமத்தில் பொது இடத்தில் அவனிடம் பேசினாலும் அதை யாராவது தவறாக நினைக்கக்கூடும்? அப்படியெனில் அவனுடைய வீட்டிற்குச் சென்று தான் பேச வேண்டும். அவளா? அவனுடைய வீட்டிற்கா? இதெல்லாம் சரியாக இருக்குமா? யோசிக்க யோசிக்க அதைத் தவிர வேறு வழி இருப்பது போலத் தோன்றவில்லை.
கடைசியாக அது தான் சரி என்றும் முடிவெடுத்தாள். அவள் மனதில் உள்ளதை அவனுக்குத் தெளிவாக உரைத்துவிட வேண்டும். அவளைப் புரிந்து கொண்டால் மட்டுமே அவன் இன்னொரு திருமணத்தைப் பற்றிச் சிந்திப்பான், அதன் மூலம் அவன் தங்கைகளுக்கும் நல்வழி பிறக்கும். அவள் மனதிலும் சஞ்சலங்களும் சலனங்களும் ஏற்பட்டு அவளைக் குழப்பி விடாது என்று நம்பினாள் கங்கா.