இரு தினங்களுக்குப் பிறகு சிந்தாமணியும் அவளுடைய கணவன் வேலப்பனும் வேலை முடிந்து வீட்டிற்குக் கிளம்பும் நேரம் வரை வாசலையே பார்த்தபடி காத்திருந்தாள் கங்கா. அவர்கள் வீட்டில் இருக்கும்போது அவள் அவனிடம் தனியாகப் பேச முடியாதே. அதேபோல் அவர்கள் இருவரும் எதிர் வீட்டில் இருந்து வெளியே வருவதைப் பார்த்துவிட்டுக் கையில் நான்கைந்து நோட்டுப் புத்தகங்களை எடுத்துக்கொண்டு எதிர் வீட்டை நோக்கி நடந்தாள். வெறும் கையோடு அவன் வீட்டிற்குச் சென்றால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் யாரேனும் பார்த்து தவறாக எண்ண கூடும் என்பதனால் முன் யோசனையாக நோட்டுப் புத்தகங்களை எடுத்து வைத்திருந்தாள். எவரேனும் பார்த்தாலோ அல்லது கேட்டாலோ பள்ளி விஷயமாகப் போவதாக நினைத்து கொள்ளட்டுமே! முதலாளியின் வீட்டுக்குள் கங்கா வருவதை அதிசயமாகப் பார்த்த சிந்தாமணி “என்னம்மா இங்கே?” என்று கேட்க,
“சார் இருக்கிறாரா சிந்தா பள்ளி விஷயமாகப் பேச வேண்டும்” என்று ஏற்கனவே சிந்தித்து வைத்திருந்ததைக் கூறினாள்.
“நான் வேண்டுமானால் கூட வரட்டுமா?” என்று அவள் எதிர்பாராததையும் கேட்டாள் சிந்தாமணி. முதல் சந்திப்பிலேயே மோதிக் கொண்டவர்கள் ஆயிற்றே என்கிற அச்சம் அவளுக்கு!
ஆனால் கங்காவோ, “இல்லை சிந்தா சின்ன வேலை தான் நானே பார்த்துக்கொள்கிறேன், நீ கிளம்பு” என்று கூறிவிட்டு மேலே நடந்தாள்.
வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்ததை அடுத்து அவள் காலிங் பெல் அடிக்கக் கதவு திறக்கப்படவில்லை. சில நொடி காத்திருந்தவள் கதவுக் குமிழில் கை வைக்க அதுவே திறந்து கொண்டது. வீட்டினுள் ஆளரவமே இல்லை, முன்னறை அதற்கு அடுத்த அறை என்று கீழ்ப்பகுதி முழுவதும் காலியாக இருக்க, சிறிது நேரம் வரவேற்பு அறையில் அமர்ந்திருந்தவள், ‘இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே அமர்ந்திருப்பது’ என்று அதற்கு மேல் காத்திருக்க மாட்டாமல், மாடி ஏறி சென்றாள். அவன் எங்கே இருக்கிறான் எது அவனுடைய அறை என்று மெதுவாகப் பார்த்தபடி ஒரு அறையின் கதவை தட்டிப் பார்த்தாள். அங்கேயும் ஓசை இல்லாது போக அடுத்த அறையின் கதவை தட்டினாள், அந்தக் கதவு திறந்து கொண்டது. அந்த அறையினுள் அப்போதுதான் குளித்துவிட்டு வந்த சிவசந்திரன், ஈர தலையுடன் இடையில் வெறும் டவலை மட்டும் கட்டிக்கொண்டு நின்றிருக்க, அவனைக் கண்ட கங்கா ரொம்பவே அதிர்ந்து விட்டாள். சட்டென்று சிவந்த முகத்துடன், “சாரி, நான் கீழே இருக்கிறேன்” என்று கூறிவிட்டு ஓட்டமெடுத்தாள்.
ச்சே, சே என்ன அசட்டுத்தனம் இது, அவன் அவளுடைய கணவனும் இல்லை இது அவளுடைய வீடும் இல்லை. அப்படி இருக்கும்போது எந்தத் தைரியத்தில் அவள், அனுமதியின்றி அவனுடைய அறை வரை சென்றாள். அவள் என்ன இதையெல்லாம் திட்டமிட்டா செய்தாள், இது எதிர்பாராமல் நடந்த ஒரு விஷயம் அவ்வளவுதான் என்று தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டாள். இதையே அவன் செய்து இருந்தால் அவள் சும்மா விட்டிருப்பாளா? என்னவெல்லாம் பேசி இருப்பாள்? எப்படி எல்லாம் சாடி இருப்பாள்? என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டு குற்ற உணர்ச்சியிலும் குறுகுறுப்பிலும் தவித்தாள்.
பணியாட்கள் யாரும் அவனுடைய அனுமதியின்றி மேல்மாடிக்கு வருவதும் கிடையாது அவனுடைய அறை கதவை தட்டுவதும் கிடையாது. அப்படி இருக்க அவனுடைய அறையில் அவனுடைய அன்றாட வேலைகளை வழக்கம்போல் அவன் செய்ததில் ஆச்சரியம் இல்லை. ஆனால் கங்கா அங்கே வந்தது தான் அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. மற்றபடி அவள் முன்னால் அப்படி ஒரு கோலத்தில் நின்றிருந்ததில் அவளைப் போல அவனுக்கு அதிர்ச்சி ஒன்றும் ஏற்படவில்லை. அதனால் உடை மாற்றிக் கொண்டு கீழே வந்தவன் எவ்வித தடுமாற்றமுமின்றி வெகு இயல்பாகவே இருந்தான்.
அவளும் சற்று சிரமப்பட்டு அவனைப் போலவே வெகு இயல்பாக இருப்பதாகக் காட்டிக் கொள்ள முயன்றாள்.
“என்ன விஷயம்?” என்று கேட்டான் அவன் மிகவும் சாதாரணமாக.
“உங்களிடம் ஒரு விஷயம் பேச வேண்டும்” என்றாள் அவள் சற்றே தயக்கத்துடன்.
“அதைத்தான் என்னவென்று கேட்கிறேன்!” என்றான் அவன் தோரணையாக.
“உங்கள் தங்கையின் திருமண விஷயம் பற்றிப் பேச வேண்டும்?”
“அதைப் பற்றி நீ பேச என்ன இருக்கிறது?”
முழுதாகப் பேச விட்டால் தானே பதில் சொல்ல முடியும். இப்படி வார்த்தைக்கு வார்த்தை கேள்வியாகக் கேட்டுக் கொண்டிருந்தால் எப்படிப் பதில் சொல்வது? அதுவும் என்ன அது பள்ளிக்கூடச் சிறுமியிடம் கேட்பது போல் அப்படி ஒரு தோரணை, என்று கோபம் துளிர்க்க அவளும் அவனைப் போல் மிடுக்காகவே பேசலானாள்.
“பல நாள் காத்திருப்புக்குப் பிறகு உங்கள் வீட்டு பெரிய பெண்ணுக்கு ஒரு நல்ல இடத்தில் சம்பந்தம் கிடைத்திருக்கிறது. அது நல்லபடியாக நடக்க வேண்டுமானால், அவர்கள் விரும்புவது போல் நீங்கள் அந்தத் திருமணத்துக்குச் சம்மதிக்க வேண்டும். அதைச் சொல்லத்தான் இங்கே வந்தேன்”
“நான் கட்டிய தாலி இன்னும் உன் கழுத்தில் இருப்பதாக நினைவு” என்றான் அவன் அமர்த்தலாக.
அவனுக்குச் சற்றும் சளைக்காத குரலில், “அதுதான் உங்கள் கண்களை உறுத்துகிறது என்றால், நீங்கள் அதைத் தாராளமாகக் கழற்றி எடுத்துக் கொள்ளுங்கள்” என்றாள்.
அவன் திணறுவான் தடுமாறுவான் என்று அவள் எதிர்பார்த்ததற்கு மாறாக, “உனக்கு அது வேண்டாம் என்றால் இப்போதே இங்கேயே நீயாகவே அதைக் கழற்றி வைத்து விடலாம்” என்றான்.
இன்றைக்குத் தன் மனதில் இருப்பதை அவனுக்குத் தெளிவாக உணர்த்தி விட வேண்டும் என்ற முடிவுடன் அவள் தொடர்ந்து பேசினாள்.
“வனவாசம் சென்ற ராமனும் சீதையும் கூட மீண்டும் இணையவே இல்லை, அதுதான் நம்முடைய நிலைமையும்”
“இருவரும் இரண்டாவது திருமணம் கூடத் தான் செய்து கொள்ளவில்லை. அந்த வகையில் என்றைக்கும் நான் ராமன் தான். மணவறை, தாலி, திருமணம் என்பதெல்லாம் என்னைப் பொறுத்தவரை வாழ்வில் ஒரு முறை தான். என் வாழ்வில் அது நடந்து முடிந்து விட்டது, இனி என்னுடைய நிழல் கூட இன்னொரு பெண்ணைத் தீண்டாது” என்றான் அவன் உறுதிமிக்கக் குரலில்.
“உண்மைதான் நம் திருமணம் என்றைக்கோ நடந்து முடிந்த ஒன்றுதான் இனி அது தொடர முடியாது. என் மனம் மாறப்போவதே இல்லை, நாம் பிரிந்தது பிரிந்தது தான். எனக்காக நீங்கள் காத்திருப்பது பாறையில் பயிர் வளர்க்க நினைப்பதைப் போல முட்டாள்தனமானது. இரவெல்லாம் உறங்காமல் மொட்டை மாடியில் நடந்து கொண்டிருப்பதற்குப் பதிலாக இன்னொரு திருமணம் செய்து கொள்வது தான் உங்கள் வாழ்க்கைக்கும் நல்லது” என்றாள் அவள் எரிச்சலான குரலில்.
“ஆச்சரியமாக இருக்கிறதே”
“எது?”
“நான் இரவெல்லாம் நடப்பதற்காக நீ இவ்வளவு வருத்தப்படுவது” என்று முறுவலித்தவன் உடனே முகம் மாறி, “ஆனால், என் வாழ்க்கைக்கு எது நல்லது எது கெட்டது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அதைப் பற்றிக் கவலைப்பட நீ யார்? உனக்கு அதற்கு என்ன உரிமை இருக்கிறது?” என்றான் இரும்பு குரலில்.
அவன் பேச்சு மனதை வருத்த அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மறைக்க அவள் அரும்பாடுபடுவது அவனுக்கும் புரிந்தது. ஆனாலும் அவள் பேச்சு ரொம்பவும் அதிகப்படி அவளே அவனை இன்னொரு திருமணம் செய்து கொள்ளும்படி சொல்வதா? எப்படி மனம் வந்தது அவளுக்கு? அதற்கு இந்த மண்டகப்படி அவளுக்குத் தேவை தான் என்று எண்ணினான் அவன்.
“ஆமாம் உங்களைப் பற்றி எனக்கு என்ன கவலை வந்தது. நான் பேச வந்தது வீட்டுப் பெண்களுக்காக, உங்களுடைய மடத்தனமான பிடிவாதத்திற்கு அவர்களுடைய வாழ்க்கை எதற்காகப் பலியாக வேண்டும். பாவம் அந்தப் பெண்களுக்காவது நல்ல மண வாழ்க்கை அமையட்டுமே என்கிற இரக்கத்தில் தான் பேச வந்தேன்” என்று படபடத்தாள்.
“அவர்களுக்காக ஏதாவது தியாகம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதை நீ செய்ய வேண்டியது தானே. எதற்காக என்னைச் செய்யச் சொல்கிறாய்?” என்று எரிச்சலுடன் கேட்டவன், சில கணங்கள் அவள் முகத்தை ஊடுருவி விட்டு , “இதே போல் நான் வந்து உன்னை இரண்டாவது திருமணம் செய்து கொள் என்று பேசியிருந்தால் நீ என்ன செய்திருப்பாய்?” என்று கேட்டான்.
கோபமும் சீற்றமுமாக அவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் தனக்கான பதிலை கண்டு கொண்டவன், ” பளார் என்று என் கன்னத்தில் அறைந்திருப்பாய், இல்லையா? ஆனால் நான் அப்படி எதுவும் செய்ய மாட்டேன் ஏனென்றால் நான் ஒரு ஜெண்டில் மேன். அதனால் தயவு செய்து இந்தப் பேச்சை இத்துடன் மறந்துவிடு. நீ என்னுடன் சேர்ந்து வாழ விட்டாலும் பரவாயில்லை, என் மனதை கொஞ்சமாவது புரிந்து கொள்” என்றான் அவன் வறண்ட குரலில்.
அவன் குரலில் அவள் உடல் தெம்பிழந்து மனம் சோர்வதைப் போல் உணர்ந்தவள் சில நிமிட மௌனத்துக்குப் பின், “இதே போல் இதுவரை நீங்கள் எத்தனை பேரை சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டாள்.
அவன் மேலே பேசாமல் இருக்கவும் அவளே தொடர்ந்தாள். ” பழைய விஷயங்களை விடுங்கள் ஆனால் இப்போது, உங்களைத் தன் சொந்த மகனாகவே நினைக்கும் வசுந்தரா மேடத்தை நீங்கள் எப்போதாவது புரிந்து கொண்டீர்களா? உங்கள் விஷயத்தில் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்ததைத் தவிர அவர் வேறு என்ன தவறு செய்தார்? கடனுக்காக ஒரு கட்டாயத் திருமணம் அதன்பின் அடிமை போல் ஒரு வாழ்க்கை இப்போது பிரகலாதன் போல் அவருக்கு எதிராக வந்து நிற்கும் நீங்கள் இதைத் தவிர அவர் வாழ்வில் வேறு என்ன இருக்கிறது! நீங்கள் மிகவும் தீவிரமாக அவரை வெறுத்தாலும் அவர் உங்களுக்கு நல்லதை தவிர வேறு எதையும் நினைப்பதில்லை. அப்படிப்பட்டவரையே புரிந்து கொள்ளாமல் புறக்கணிக்கும் உங்களை மற்றவர்கள் மட்டும் எப்படிச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?” என்று கேட்டுவிட்டு வேகமாக அங்கிருந்து வெளியேறினாள்.
அவள் பேச வந்தது என்னவோ அவனுடைய தங்கைகளின் திருமணத்தைப் பற்றி. அதற்கு அவளால் சரியான தீர்வு காண முடியவிட்டாலும், வசந்தராவை பற்றி அவளுக்குத் தெரிந்த உண்மைகளையாவது அவனிடம் நேரடியாகச் சொல்லும் சந்தர்ப்பம் அமைந்ததை எண்ணி திருப்தி அடைந்தாள்.
தன்னுடைய இனிஷியலுக்கு ஓர் அடையாளம் வேண்டும் என்பதற்காகவும் தன் தாயின் கௌரவத்திற்காகவும் சிவசந்திரன் அவனுடைய தந்தை இருப்பிடத்திற்கு வந்தானே தவிர அந்தக் குடும்பத்திற்கு ஆண் வாரிசாகவோ அல்லது சாப விமோசனம் அளிப்பதற்காகவோ அவன் அங்கே வரவில்லை. அதனாலயே அந்தக் குடும்பத்தைப் பற்றியோ குடும்பத்தினரை பற்றியோ அவன் இதுவரை சிந்தித்ததே இல்லை. குறிப்பாக வசுந்தராவை பற்றி. தன் தாயின் இடத்தை அபகரித்துக் கொண்டவர் என்றுதான் அவரைப் பற்றி நினைத்தான். ஆனால் கங்கா அவரைப் பற்றி எடுத்துரைத்த பிறகு அவன் மனம் சற்றே மாறத் தொடங்கியது.
உண்மையில் கங்கா அங்கே எப்படி வந்தாள்? நடந்த தவறுகளுக்கான காரணத்தைக் கண்டுபிடித்து அறிந்தது அவனாக இருந்தாலும் அதற்கான வாய்ப்பு அவனுக்கு எப்படி அமைந்தது? மீண்டும் அவளுடன் சேர வேண்டும் என்கிற அபிலாஷை அவனுக்கு எப்படி அதிகரித்தது? இதெல்லாம் வசுந்தரா கங்காவை அங்கே வரவழைத்து இருக்காவிட்டால் தானாக நடந்திருக்குமா என்பது புரிந்த பிறகு தான் அவனுக்கு அவர் மேல் இருந்த தவறான அபிப்பிராயம் சற்றே மாறத் தொடங்கியது. தன் தாய் ஸ்தானத்தில் இருந்து வசுந்தரா அவனுக்காகச் செய்திருக்கும் நன்மைகளையும், அவனுக்கு எதிராக அவர் எந்தத் தீங்கினையும் செய்யவில்லை என்பதையும் அவன் மெல்ல மெல்ல உணர தொடங்கினான்.