தேவராஜ் திருமணத்திற்காகத் தொடர்ந்து ரோஹித்தை வற்புறுத்திக் கொண்டே இருக்க, அவருடைய குடைச்சல் தாங்க முடியாமல் கங்காவை நேரடியாகப் பார்த்துப் பேசுவதற்காக அவளைத் தேடி வந்தான் அவன். பல ஆண்டுகளாக வெளிநாட்டிலேயே வாழ்ந்தவனுக்குத் தாய் நாட்டில் உள்ள ஒரு கிராமத்துக்குச் சரியாக வழி கண்டுபிடித்து வந்து சேர்வதற்குள் விழி பிதுங்கியது. எப்படியோ ஒரு வழியாகத் தேடி அலைந்து விசாரித்துக் கங்கா பணி புரியும் பள்ளிக்குப் பிற்பகலில் வந்து சேர்ந்தான். தலைமை ஆசிரியரிடம், “கங்காவை பார்க்க வேண்டும்” என்று விபரம் சொல்லிவிட்டு அவளுக்காகக் காத்திருந்தான்.
தன்னைப் பார்க்க யார் வந்திருக்கப் போகிறார்கள் என்று நினைத்தபடியே வந்தவள் அதற்கு முன்பாக ரோஹித்தை பார்த்ததில்லை. எனவே, “யார் நீங்கள்?” என்று அவனிடம் கேட்டாள்.
தேவராஜின் மகன் ரோஹித் என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டவன், “உன்னுடன் தனியே பேச வேண்டும்” என்றான் ஆங்கிலத்தில்.
பேய் அறைந்தவள் போல் திகைத்த கங்கா, திருமணத்தைப் பற்றித் தான் பேச வந்திருப்பான் என்பதை உணர்ந்து அவனை எப்படிச் சமாளிப்பது என்று குழம்பினாள்.
அவளுக்கு அப்போது வகுப்புகள் எதுவும் இல்லை என்பதால் தலைமை ஆசிரியரிடம் அனுமதி பெற்றுக்கொண்டு அவனைக் கேண்டினுக்கு அழைத்துச் சென்றாள்.
முதலில் இந்தத் திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்பதை நாகரீகமாகத் தெரிவிப்பது, அதைப் புரிந்து கொள்ளாமல் கிறுக்குத்தனமாக ஏதாவது ஹீரோயிசம் காட்ட முயன்றால் போலீசில் புகார் அளிக்க வேண்டியது தான் என்ற முடிவுடன், “காஃபி சாப்பிடுகிறீர்களா?” என்று ஒப்புக்காகக் கேட்டாள் கங்கா.
அவனோ, அந்தக் கேண்டீனை பார்வையால் அளந்துவிட்டு, “இது போன்ற சீப்பான இடத்தில் எல்லாம் நான் தண்ணீர் கூடக் குடிக்க மாட்டேன்” என்றான் அலட்சியமாக.
உண்மையில் அந்தக் கேண்டின் மிகவும் சுத்தமாக உயர் தர ஹோட்டலைப் போல் இருந்தது. அங்கே பணிபுரிந்த ஊழியர்களும் கூட, பளிச்சென்ற சீருடையில் முகம் தலை கைகளுக்கு முறையான கவசங்கள் அணிந்துகொண்டு கௌரவத் தோற்றத்துடன் தான் இருந்தனர். இதுவே இவனுக்குச் சீப்பான இடமா, ரொம்பவும் திமிர் பிடித்தவன் தான் என்று உள்ளூர புகைந்தது அவளுக்கு. இவனிடம் சுற்றி வளைத்துப் பேசி நேரத்தை வீணடிக்காமல் பட்டென்று விஷயத்தைப் போட்டு உடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்,
“பாருங்கள் ரோஹித், எனக்குத் திருமணத்தில் கொஞ்சமும் விருப்பமில்லை. நீங்கள் படித்தவர் தானே ப்ளீஸ் புரிந்து கொள்ளுங்கள்” என்றாள் அமைதியாக.
“ஹேய்! வெயிட் வெயிட், இப்போது யார் உன்னிடம் வந்து திருமணம் செய்யும்படி கேட்டது. அதிலும் நான் அப்படி எதுவும் கேட்கவே இல்லை அதற்குள் ஓவராகக் கற்பனை செய்கிறாயே என்று அவளை மட்டம் தட்டினான் ரோஹித்.
அவள் முகம் சுளித்தபடி, “வேறு எதற்காக இங்கே வந்தீர்கள்?” என்று எரிச்சலுடன் கேட்டாள்.
“குட் க்வெஸ்டின், இதை முதலிலேயே கேட்பது தான் மேனர்ஸ்” என்று அவளுக்கு அறிவுறுத்திவிட்டு, “எனக்குத் திருமணம் செய்து கொள்ளக் கொஞ்சமும் விருப்பமில்லை. அதைவிட உன்னைத் திருமணம் செய்து கொள்ள நான் நினைக்கவே இல்லை. எனக்கு இந்தியன் வெதர் இந்தியன் கல்ச்சர் இதெல்லாம் சரிப்பட்டு வராது. இப்போது என்னுடன் இரண்டு பார்ட்னர்கள் டேட்டிங்கில் இருக்கிறார்கள் பிடிக்கவில்லை என்றால் அவர்களையும் கூட மாற்றி விடுவேன். அப்படியெல்லாம், என் இஷ்டப்படி வாழ்ந்து விட்டு இங்கிருந்து ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு என்னால் குடும்பம் நடத்த முடியாது. ஆனால் இதெல்லாம் என் அப்பாவுக்குப் புரியவில்லை. உன்னைத் மேரேஜ் செய்து கொண்டால் தான் எனக்குப் பிராப்பர்ட்டி கிடைக்கும் என்று சொன்னதையே சொல்லி அறுக்கிறார். அதனால் இதற்கு நானே ஒரு வழி கண்டுபிடித்து இருக்கிறேன்” என்றான்.
வேண்டா வெறுப்பாக, “என்ன அது?” என்றாள் கங்கா.
“எனக்குத் திருமணத்தில் விருப்பமில்லை உனக்கும் அப்படித்தான் என்கிறாய், உன்னைப் பார்த்தால் உருப்படியாக எதுவும் ஐடியா கொடுப்பவள் போல் தெரியவில்லை” என்று மீண்டும் ஒருமுறை அவளை மட்டம் தட்டி விட்டு மேலும் பேசினான். “நீயே உனக்குப் பிடித்த மாதிரி யாரையாவது திருமணம் செய்து கொண்டால், அதன்பின் யாரும் நம்மை வற்புறுத்தவே முடியாது. அது ஒன்று தான் இப்போது இருக்கும் வழி” என்று மிகவும் பிரமாதமாக ஒரு வழியைக் கண்டுபிடித்ததைப் போல அவளைப் பார்த்தான்.
அவன் அவளைத் தொடர்ந்து மட்டம் தட்டிக் கொண்டே இருந்தது அவளுக்கு ஆத்திரமாக இருந்தாலும் அவன் திருமணம் வேண்டாம் என்று கூறியதில் ‘ஒரு பிரச்சனை தீர்ந்தது’ என்று ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். ஆனாலும் அவனை அப்படியே விட மனமின்றி, “நீங்கள் சொன்னபடி செய்தால் என் பிரச்சனை தான் தீரும். உங்களுடைய பிரச்சனை எப்படித் தீரும் ஐ மீன் உங்கள் அப்பா வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளச் சொன்னால் என்ன செய்வீர்கள். அப்போதும் இதே வழி தானா?” என்றாள்.
“இப்போதைக்கு உன் பிரச்சனை முடிந்தால் போதும் என் அப்பா இன்னொரு பிரச்சனையை, அதாவது இன்னொரு பெண்ணை, கண்டுபிடிப்பதற்குள் நான் ப்ராப்பர்டி மேல் கேஸ் போடுவேன் என்று அவரை மிரட்டி விடுவேன், அப்போதும் வழிக்கு வராவிட்டால் உண்மையிலேயே கேஸ் போட்டு விடுவேன். இப்போதே கூட அப்படிச் செய்யலாம் ஆனால் அடுத்தடுத்த ஹியரிங்குக்காக அலைவதற்கு எனக்கு நேரமில்லை, தட்ஸ் ஆல்” என்று முடித்தான்.
அதற்குள் பள்ளி நேரம் முடிந்து விட இருவரும் கேண்டீனை விட்டு வெளியே வந்தனர். வரும் வழியில், “ஓகே நீ என்ன சொல்கிறாய் ஆனால் நீ என்ன சொல்ல முடியும் உனக்கும் அதைத் தவிர வேறு வழி இல்லையே. ஆனால் ஒரு கால் டாக்ஸி கூடக் கிடைக்காத இந்தப் பட்டிக்காட்டில் உனக்கு எப்படி ஒரு ஹஸ்பண்ட் கிடைக்கப் போகிறானோ! இங்கே இல்லாவிட்டால் என்ன, இண்டர்நெட், சோஷியல் மீடியா எதிலாவது லிவி இன் பார்ட்னரையாவது தேடிக் கொள். இந்தக் காலத்திற்கு அது தான் நல்லது” என்று இலவசமாக அறிவுரை வழங்கிக் கொண்டே வந்தவன், பார்க்கிங் ஏரியாவில் இருந்த சிவசந்திரனின் காரைப் பார்த்து, “இந்த ஊரில் கூட லேட்டஸ்ட் மாடல் கார் எல்லாம் இருக்கிறாதா” என்று கேட்டபடியே அதனருகே சென்றான்.
தொலைவில் ரோஹித்தும் கங்காவும் நடந்து வருவதைப் பார்த்தபடியே சிவசந்திரன் காரை நோக்கி வந்து கொண்டிருந்தான். அவன் அருகில் விரைந்த ரோஹித், “ஹலோ ஜெண்டில் மேன், நைஸ் கார்” என்று கூறிவிட்டு, “இங்கே கால் டாக்ஸி எதுவும் கிடைக்கவில்லை, எனக்குப் பக்கத்தில் இருக்கும் ரயில்வே ஸ்டேஷன் வரை லிப்ட் கிடைக்குமா” என்று வினவினான்.
“யெஸ் ஷுயர்” என்று அவன் சொல்லவும், “ஓகே பை” என்று கங்காவிடம் கூறிவிட்டுக் காரில் ஏறிக் கொண்டான்.
இந்த அதிகப் பிரசங்கி யாருடன் எங்கே சென்றால் என்ன, அவள் விஷயத்திலிருந்து அவன் விலகிக் கொண்டதே அவளுக்குப் போதுமானதாக இருந்தது.
காரில் ஏறியவுடன், “பார்த்தால் நன்கு படித்தவர் மாதிரி டீசன்டாக இருக்கிறீர்கள், இந்த மாதிரி லக்சரி கார் வேறு வைத்திருக்கிறீர்கள். ஆனாலும் ஏன் இந்தப் பட்டிக்காட்டில் இருக்கிறீர்கள்?” என்று சிவசந்திரனிடம் கேட்டான் ரோஹித்.
“இதை நான் அல்லவா கேட்க வேண்டும்” என்ற சிவசந்திரன் “ஊருக்குப் புதிதாக வந்திருக்கிறீர்களே, இங்கே உங்களுக்கு யாராவது உறவினர்கள் இருக்கிறார்களா?” என்று சாதுரியமாகப் போட்டு வாங்கினான்.
அவன் யார்? எதற்காகக் கங்காவை பார்க்க வந்தான்? என்பதை அவனுக்குத் தெரிந்து கொள்ள வேண்டும்!
“நோ நோ நான் அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவன்” என்று பெருமையுடன் கூறிய ரோஹித்துக்கு, யாரோ ஒருவனிடம் எதற்காகத் தன்னுடைய சொந்த விஷயத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்கிற எண்ணமே இல்லாமல் முழு விபரத்தையும் சொல்லத் தொடங்கினான்.
“நீங்களே சொல்லுங்கள் சார் என்னைப் போல வெஸ்டர்ன் கல்ச்சரில் வாழ்பவன் இந்த மாதிரி பட்டிக்காட்டில் வந்து வேலை பார்க்கும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வானா? ஆனால் இதெல்லாம் என் தந்தைக்குப் புரியவே இல்லை சொத்துக்காக அவருடைய பார்ட்னர் மகளான அந்தக் கங்காவை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்துகிறார். இதெல்லாம் எனக்குக் கொஞ்சமும் ஒத்து வராது, அந்தப் பெண்ணுக்கும் கூட இதில் விருப்பமில்லை. அதனால் நீயே இங்கே யாரையாவது பார்த்துத் திருமணம் செய்து கொள் அப்போதுதான் இதிலிருந்து தப்பிக்க முடியும் என்று சொல்லிவிட்டு போவதற்காகத் தான் இந்தக் கிராமத்திற்கு வர வேண்டியதாகிவிட்டது. இல்லாவிட்டால் நான் எதற்காக இங்கே வரப் போகிறேன்?” என்று அலுத்துக் கொண்டான்.
“ஓ!”
“ஆனால் இந்த மாதிரி இடத்தில் அவளுக்கு எந்த மாதிரி பார்ட்னர் கிடைக்கப் போகிறான்? எவனாவது பட்டிக்காட்டான் தான் வருவான்” என்று அவன் கூறிய போது தன்னையும் மீறி பல்லை கடித்தான் சிவசந்திரன்.
“உங்களுக்கு இப்போது என்ன பிரச்சனை இந்தத் திருமணத்தை நிறுத்த வேண்டும் அவ்வளவுதானே”
“யெஸ் அஃப்கோர்ஸ்”
“அதற்கு ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும், நான் சொல்வதை அங்கே போய்ச் சொல்லுங்கள், இந்த ஜென்மத்தில் உங்கள் திருமணப் பேச்சையை யாரும் எடுக்க மாட்டார்கள்” என்று அவன் கூறவும்,
கண்கள் விரிய, “ரியலி! என்ன சொல்ல வேண்டும் சொல்லுங்கள் சொல்லுங்கள்” என்று பரபரத்தான் ரோஹித்
“உங்கள் தந்தை தேவராஜன் அவருடைய பார்ட்னர் விஸ்வநாதனுடன் சேர்ந்து செய்த ஊழல் மற்றும் கொள்ளை அதை மறைப்பதற்காகக் கொடுத்த லஞ்சம் அந்தக் கணக்கு வழக்குகள் நிறைந்த ஃபைல் இன்னும் என்னிடம் பத்திரமாக இருக்கிறது. இன்னொரு முறை கங்காவின் விஷயத்தில் அவர்கள் தலையிட்டால் அந்த ஃபைல் போக வேண்டிய இடத்திற்குப் போகும், இதே விஷயத்தை நீங்கள் உங்களுக்குச் சாதகமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றான் சிவசந்திரன்.
தன்னை மிரட்டிக் கொண்டிருக்கும் தந்தையை மிரட்டுவதற்குச் சரியான ஆள் கிடைத்து விட்டான் என்று ரோஹித்துக்கு மகிழ்ச்சியாகத் தான் இருந்தது. கூடவே எதிரிகளின் கண்ணில் விரல் விட்டு ஆட்டும் தன் தந்தை மற்றும் விஸ்வநாதனுக்கே சவால் விடும் இவன் யார்? ஒருவேளை இவனும் அவர்களுடைய க்ரைம் பார்ட்னரோ? என்று சந்தேகமாகவும் இருந்தது.
“நீங்கள் யார்?” என்று அவனிடம் கேட்டான் ரோஹித்.
“ஆடிட்டர் சிவசந்திரன்” என்றான் அவன்.
இவன் கிரிமினல் இல்லை ஆனால் கிரிமினல் மூளை படைத்த வில்லன் என்று நினைத்த ரோஹித், “நீங்கள் கொடுத்த ஐடியா நன்றாகவே வேலை செய்யும் என்று தான் எனக்கும் தோன்றுகிறது ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம்” என்றான் ரோஹித்.
“என்ன?”
“இந்த உதவியை நீங்கள் எனக்காக மட்டும் செய்வது போல் தெரியவில்லையே, ஐ திங்க் யூ லவ் கங்கா. ஆம் ஐ ரைட்”
அதற்குச் சிவசந்திரன் பதில் பேசாமல் சிரித்தான்.
“சோ, ஐ ஆம் ரைட். நீங்கள் அவளுக்கு நல்ல மேட்ச் தான், இது கங்காவுக்குத் தெரியுமா, அல்லது ஒன் சைட் லவ்வா?”
இதற்கும் அவனிடமிருந்து சிரிப்புதான் பதிலாக வெளிவந்தது.
“ஓஹோ ஒன் சைடு லவ்வா, ஏன் டைம் வேஸ்ட் செய்கிறீர்கள்? நான் வேண்டுமானால் அவளிடம் இதைப் பற்றிச் சொல்லட்டுமா. அதுவும் நீங்கள் கொடுத்த ஐடியாவை பற்றிச் சொன்னாலே அவள் ஓகே சொல்லிவிடுவாள்”
“வேண்டாம்?”
“ஏன்?”
“இந்த விஷயம் அவளுக்கும் தெரியும்”
ஓ இவனுக்காகத் தான் போயும் போயும் இந்தப் பட்டிக்காட்டில் இருக்கிறாளா? என்று நினைத்துக் கொண்டு, “அவளுக்கும் ஓகே தானே” என்று கேட்டான்.
“அவளுக்கு ஓகே இல்லை ஆனால் ஒரேயடியாக எனக்கு நோ சொல்லவும் மாட்டாள்” என்று புதிராகப் பேசினான்.
ரோஹித்தின் சாப்ட்வேர் மூளைக்கு இதெல்லாம் சுத்தமாகப் புரிபடவில்லை. அவன் தன்னைக் குழப்புகிறான் என்று அமைதியாக இருந்தான்.
“ஏன் என்று கேட்கவில்லையே” என்று சிவசசந்திரனே கேட்க, அவன் சுவாரசியமின்றி, “ஏன்?” என்று கேட்டான்.
“அவள் மிஸஸ். சிவசந்திரன்”
“வாட்!” என்றான் அதிர்ச்சியுடன்.
அதற்குள் தேவகோட்டை பேருந்து நிலையம் வந்துவிட, அங்கே கால் டாக்ஸி நிற்கும் இடத்தில் காரை நிறுத்தியவன், “அதனால் நீ இனிமேல் உன் பிரச்சனைகளை உன் வீட்டிலேயே பேசி சரி செய்து கொள் இனிமேல் கங்காவை தேடி வந்து அவளைத் தொந்தரவு செய்யாதே, பத்திரமாக ஊர் போய்ச் சேர்” என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டான்.
தேவகோட்டையில் இருந்து கால் டாக்ஸி எடுத்துக் கொண்டு மதுரை விமான நிலையம் சென்றவன் அங்கிருந்து விமானத்தில் சென்னை நோக்கி பறந்தான். சிவசந்திரன் கூறிய கிரைம் பைல் விஷயத்தைத் தந்தையிடம் கூறிவிட்டு அன்று இரவே அமெரிக்காவிற்கும் புறப்பட்டு விட்டான். அதற்கு மேல் அங்கே இருந்தால் அந்த க்ரைம் பைலில் தன்னுடைய பெயரையும் சேர்த்து விடுவான் அந்த வில்லன் என்ற அச்சம் அவனுக்கு.