அன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கங்கா வீட்டை துடைப்பது சுத்தம் செய்வது எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்துவது என்று எல்லா வேலைகளையும் முடித்துவிட்டுப் பிற்பகலில் சற்று நேரம் ஓய்வாகப் படுத்திருந்தாள். அப்போது யாரோ கதவைத் தட்டவும், ‘அப்பப்பா இன்று கூட ஓய்வில்லையா, யாரது இந்த நேரத்தில்’ என்று அலுப்புடன் கதவை திறந்த போது வெளியே வினுஷா நின்று கொண்டிருந்தாள்.
ஆனால் அது வினுஷா தானா? மீண்டும் ஒருமுறை இமைகளை மூடி திறந்து பார்த்தாள். சந்தேகமே இல்லை அது வினுஷா தான். மறக்க முடியுமா அவள் முகத்தை? துரோகத்தின் உருவம் அல்லவா அவள்! அவளைப் பார்த்ததும் கங்காவுக்கு அதிர்ச்சி, ஆத்திரம் எனப் பல உணர்வுகள் பொங்கி வர, “யார் நீ?” என்று முகத்தில் அடித்தாற் போல் கேட்டாள்.
அவள் அப்படிக் கேட்டதில் வினுஷாவுக்கு வியப்பேதும் இல்லை. இது அவள் எதிர்பார்த்து வந்தது தான்.
“கங்கா, நான் வினுஷா” என்றாள் மெல்லிய குரலில்.
“அப்படி யாரையும் எனக்குத் தெரியாது” என்று கூறிவிட்டு வேகமாக உள்ளே வந்தாள் கங்கா.
வினுஷாவை பார்க்கவும் அவள் குரலைக் கேட்கவும் கூட அவளுக்கு விருப்பமில்லை. அவ்வளவு வெறுப்பு அவள் மேல்!
கங்கா தன்னுடன் முகம் கொடுத்து பேச மாட்டாள், தன்னை வீட்டினுள் அழைக்க மாட்டாள், அதற்கெல்லாம் தனக்கு அருகதையும் இல்லை என்பதை நன்கு அறிந்திருந்த வினுஷா தானாகவே வீட்டினுள் சென்றாள்.
உடலும் மனமும் ஒருசேர பற்றி எரிவது போல் நின்றிருந்த கங்காவிடம் வந்தவள், “கங்கா” என்று அழைக்க,
“நீ ஏன் இங்கே வந்தாய்? எதற்காக வந்தாய்? போ, என் கண் முன்னால் நிற்காதே வெளியே போ, போய்விடு” என்று இரைந்தாள் கங்கா.
கண்ணீருடன், “கங்கா” என்று ஓடி சென்று அவள் காலில் விழுந்த வினுஷா, “நீ இப்படி எல்லாம் பேசுவதற்கு நான் தானே காரணம், என்னை அடி அடித்தே கொன்றுவிடு. ஆனால் இப்படி என்னை யாரோ போல் பார்க்காதே, என்னிடம் பேசு ஒருமுறையாவது பேசுடி” என்று அவளுடைய கைகளைப் பற்றிக் கொண்டு கெஞ்சினாள்.
அவளுடைய கெஞ்சலும் கண்ணீரும் கங்காவின் மனதை இளகச் செய்யவில்லை. இப்படித்தானே அன்று அவளும் கூடக் கண்ணீருடன் கெஞ்சினாள். அப்போது அவள் இரக்கப்படவில்லையே, கருணை காட்டவில்லையே. அன்று அவள் மட்டும் உண்மையைச் சொல்லி இருந்தால் இன்று தனக்கு இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டிருக்குமா என்ற நினைவில் தன் கைகளை விடுவித்துக் கொண்டவளுக்கு இன்னமும் கோபம் குறையவில்லை.
“கங்கா தயவுசெய்து என்னை மன்னித்துவிடு, ஆனால் கடவுளே மன்னிக்க முடியாதபடி நான் மிகப்பெரிய பாவம் செய்து விட்டேன். இந்த மறுபிறவியும் வாழ்க்கையும் எனக்கு உன்னால் கிடைத்தவை தான். அதையெல்லாம் கொஞ்சமும் நினைத்துப் பார்க்காமல் அன்றைக்கு நீ போன் செய்த போது நான் கல்லாக இருந்து விட்டேன். அதற்குக் காரணம் என்னுடைய சுயநலம் தான் கங்கா, என் கணவர் என் மீது மிகவும் பொசசிவ்வாக இருப்பவர், திருமணத்திற்கு முன்பாக நான் இவ்வளவு பெரிய தவறு செய்தது அவருக்குத் தெரிந்தால் உடனே என்னைக் கொலையே செய்து விடுவார். அதனால்தான் என்னுடைய திருமணத்திற்குப் பிறகு பழைய நட்புகள் எதையும் நான் தொடரவில்லை யாருடனும் தொடர்பில் இல்லாமல் இருந்து விட்டேன். அன்றைக்கு நீ போன் செய்து சிவரூபன் பற்றி உண்மையைச் சொல்லும்படி கேட்டபோது முதலில் எனக்கு அதிர்ச்சியாகவும் பயமாகவும் தான் இருந்தது இந்த விஷயம் மட்டும் தப்பித்தவறி என் கணவரின் காதுக்குச் சென்றால் என்னாகும் என்று நினைத்துப் பார்க்கவே எனக்குப் பயமாக இருந்தது. ஏனென்றால் விவாகரத்தோ கொலையோ என்பது என்னுடன் மட்டும் முடிந்தால் கூடப் பரவாயில்லை அது என் பிறந்த வீட்டையும் தொடருமே அவர்களையும் சும்மா விடமாட்டார், என் பெற்றோர் திருமணமாகாத தங்கைகள் என்று அவர்களுக்காகவும் எல்லாம் யோசித்தேன். அப்படி ஒரு சூழ்நிலையில் என்னால் வேறு யாரைப் பற்றியும் யோசிக்க முடியவில்லை என் குடும்பத்தைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என்று சுயநலமாக இருந்து விட்டேன் கங்கா” என்று கண்ணீருடன் தன்னிலை விளக்கினாள்.
“எனக்காக நீ எவ்வளவு பெரிய தியாகம் செய்தாய், என்னால் நீ என்னென்ன இழந்திருக்கிறாய் என்பதை அறிந்த போது என்னையும் என் சுயநலத்தையும் நினைத்தால் எனக்கே அருவருப்பாக இருக்கிறது கங்கா. மீண்டும் உன் நட்பை பெற எனக்கு அருகதை இல்லை ஆனால் எனக்கு மன்னிப்பு மட்டுமாவது கொடு கங்கா ப்ளீஸ்” என்று கதறினாள்.
நீண்ட நேரமாக வினுஷா தரையில் மண்டியிட்டபடி அழுதுகொண்டே இருப்பதைப் பார்க்க கங்காவுக்குப் பரிதாபமாக இருந்தது. அவள் செய்த துரோகத்தை அவள் இன்னும் மறக்கவில்லை தான் ஆனால் அதற்காக வினுஷாவை காயப்படுத்தவும் அவளால் முடியவில்லை.
எங்கேயோ பார்த்தபடி, “நடந்ததைப் பற்றிப் பேசி இனி என்னவாகப் போகிறது விடு” என்றாள் கங்கா.
“எவ்வளவு சிறப்பாக வாழ்ந்திருக்க வேண்டியவள் இப்படி எல்லா இன்பத்தையும் விட்டுவிட்டு வாழ்வது என்னால் தானே. அண்ணா வந்து உன்னைப் பற்றிச் சொன்னபோது….” என்று அவள் முடிக்கும் முன்னர்,
“அண்ணனா?” என்று குறுக்கிட்ட கங்காவின் முகம் சுணங்கியது.
“சிவாண்ணா…..”என்று வினுஷா கூறிய பின்பு மற்றவை தானாக விளங்கியது அவளுக்கு.
வினுஷாவின் வருகை சிவசந்திரனின் ஏற்பாடு என்று புரிந்த போது, அவன் ஏன் இதையெல்லாம் செய்கிறான் அவனை யார் தூது போகச் சொன்னது? என்று கோபம் கொண்டாள்.
ஒரு காலத்தில் அவள் அவனை உயிராய் நேசித்தாள். அவன் அவசரப்பட்டு அவளைத் தீஞ்சொற்களால் சுட்டு விட்டான். பூர்வ ஜென்மத்தில் செய்த பாவங்களுக்குக் கூட இந்த ஜென்மத்தில் பரிகாரம் தேடிக்கொள்வது இல்லையா? அதுபோலவே அவனும் அன்று ஏற்படுத்திய காயத்திற்கு இன்று மயிலிறகால் வருட நினைக்கிறான். அவள் அவனுடன் இணைந்து வாழ்ந்தால்தான் அவள் மனதுக்கு உகந்தவைகளை அவன் செய்ய வேண்டுமா என்ன? பிரிந்தே வாழ்ந்தாலும் அவளுக்குத் தேவையானவற்றைச் செய்யத் தவறக் கூடாது என்பதில் முனைப்பாக இருந்தான்.
இதையெல்லாம் அவன் கங்காவின் மனமாற்றத்திற்காகச் செய்யவில்லை அவளுடைய மன அமைதிக்காகவும் நிம்மதிக்காகவும் தான் செய்கிறான் அவள் மனதில் இருக்கும் துரோகத்தின் சுவடுகள் நீங்கினால் அதுவே அவனுக்குப் போதும். நல்ல வேளை சிவரூபன் இன்று உயிருடன் இல்லை அவன் மட்டும் இருந்திருந்தால் அவன் கங்காவுக்குச் செய்த தீமைகளுக்காகத் தம்பி என்றும் பாராமல் தன் கைகளாலேயே அவனைக் கொன்றிருப்பான், அவன் விஷயத்தில் இயற்கை முந்தி கொண்டது
சகல சௌபாக்கியங்களும் நிரம்பப் பெற்ற ஒரு பெண் பிறந்து வளர்ந்த ஊரை விட்டு தாய் தந்தையை விட்டு வேறொரு இடத்திற்குப் புலம்பெயர்ந்து வேலைக்கு வந்திருப்பது ஊதியத்துக்காக அல்ல, வாழ்க்கையின் மீது ஏற்பட்ட வெறுப்பினால் என்பது அதே நிலையை அனுபவித்துக் கொண்டிருக்கும் அவனுக்குப் புரியாதா என்ன?
அவள் வாழ்வில் நடந்த அத்தனை பிரச்னைகளுக்கும் காரணம் மற்றவர்கள் தான், அதனாலேயே அவள் எல்லோரையும் துறந்து தனக்கென ஒரு வாழ்வை அமைத்துக் கொண்டிருக்கலாமே. மறுமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருந்திருக்கலாமே. ஆனால் அவள் அதைச் செய்யாமல் துறவி போல் அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறாள்! புன்னகையைத் துணி கொண்டு துடைத்தாற் போன்று இருக்கும் அவளுடைய முகமும் வெறுமையினால் சூழப்பட்டிருக்கும் அவளுடைய மனமும் அவனை அதிகம் பாதித்ததனால் தான் அவன் இரவில் உறக்கமின்றித் தவிக்கிறான் அத்தனைக்கும் காரணம் அவன் அல்லவா.
இரவில் அவன் நடைப்பயிற்சி செய்வதை மட்டுமே கங்கா அறிவாள். ஆனால் அவன் அவளுக்குச் செய்த அநியாயத்தையும் அவள் அடைந்த வேதனையையும் எண்ணி கனத்துப் போய் இருக்கும் அவனுடைய இதயத்தின் வலியையும், கண்களில் கரைபுரண்டு ஓடும் கண்ணீரையும் அந்த இரவும் நிலவும் மட்டுமே அறியும்.
கங்காவுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்றவுடன் அவன் நினைவுக்கு வந்தவள் வினுஷா. ராஜுவை விசாரித்து அவனுடைய கல்லூரி நண்பர்கள் மற்றும் அவர்களுக்குத் தெரிந்தவர்கள் என்று பலரைப் பிடித்துக் கடைசியாக வினுஷாவின் இருப்பிடத்தைத் தேடி கண்டுபிடித்து அவளிடம் சென்றான்.
“நீ வினுஷா தானே?” என்று அவளிடம் உறுதிப்படுத்திக் கொள்ள அவன் கேட்டபோது “ஆம்” என்றவள்,
“உனக்குக் கங்காவை நினைவு இருக்கிறதா?” என்று கேட்டவுடன் அவள் சுதாரித்துக் கொண்டாள்.
“யார் நீங்கள்? எனக்கு அப்படி யாரையும் தெரியாது” என்று மழுப்பினாள்.
அவள் அப்படித்தான் பேசுவாள் என நன்கு அறிந்திருந்த சிவசந்திரன், “ஓ, அப்படியானால் உனக்குக் கங்காவை தெரியாது” என்று மீண்டும் கேட்டான்.
வாய்க் கூசாமல், “தெரியாது” என்று பொய் உரைத்தாள் அவள்.
“இந்தப் போட்டோவில் இருப்பது யார் என்று தெரிகிறதா?” என்று கேட்டுக் கொண்டே அவளிடம் சில போட்டோக்களைக் கொடுத்தான்.
அது அவர்களுடைய கல்லூரி காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். அதில் கங்கா வினுஷா ராஜு சிவரூபன் உட்பட எல்லோருமே இருந்தனர். அவற்றைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வினுஷா இப்படிச் சாட்சியுடன் வந்து நிற்பவனிடம் என்னவென்று சொல்வது என்று புரியாமல் திகைத்து விழித்தாள்.
“இப்போதும் தெரியவில்லையா?” என்று அவன் ஏளனமாகக் கேட்க அவளிடம் பதில் இல்லை.
“சரி பரவாயில்லை, ஆனால் நீ யார் கங்கா யார் சிவரூபன் யார், என்று எனக்குத் தெரிந்தவற்றை உன் குடும்பத்தினரிடம் பேசிக்கொள்கிறேன்” என்று அவன் பேச்சை முடிக்கவும் அவள் நடுங்கி விட்டாள்.
“சார் சார் ப்ளீஸ் அப்படி எதுவும் செய்து விடாதீர்கள் நீங்கள் யார் உங்களுக்கு என்ன பேச வேண்டும்? இங்கே எதுவும் பேச வேண்டாம் மாலையில் பக்கத்தில் இருக்கும் காபி ஷாப்பிற்கு நான் வருகிறேன் அங்கே பேசிக் கொள்ளலாம், ப்ளீஸ்” என்று கெஞ்சினாள்.
அவளைக் கண்டவுடன் சிவசந்திரன் முன்னுரை பொருளுரை ஏதுமின்றி நேராக விஷயத்திற்கு வந்தான்.
“ஆபத்து என்று அறிந்திருந்தும் உனக்காகச் சிவரூபன் விஷயத்தில் தலையிட்டு உன் வாழ்வை காப்பாற்றிய கங்காவுக்குப் பதிலுக்கு நீ நல்ல கைமாறு செய்து விட்டாய். அவளுக்கு ஓர் ஆபத்து என்று உன்னிடம் உதவி கேட்ட போது, அதுவும் உன்னிடம் அவள் கேட்டது ‘ஆம் என்று ஒரு வார்த்தை சொல்’ என்று கெஞ்சிய போது எப்படி உன்னால் நன்றி கெட்டத்தனமாக நடந்து கொள்ள முடிந்தது?” என்று கடுமையாகக் கேட்டான் சிவசந்திரன்.
வார்த்தைகள் தடுமாற “அது….அன்று என்னுடைய சூழ்நிலை அப்படி” என்றாள் வினுஷா.
“அன்றைக்குச் சொல்ல முடியாவிட்டால் என்ன அடுத்து வந்த இத்தனை நாட்களில் ஒரு முறை கூடவா உனக்கு மனசாட்சி உறுத்தவில்லை. குற்றம் செய்தவள் நீ ஆனால் அதற்காகத் தண்டனை பெற்றவள் கங்கா. அவள் எப்படி இருக்கிறாள் என்று ஒரு முறை கூட உனக்கு நினைத்துப் பார்க்க தோன்றவில்லை இல்லையா?
நீ செய்த துரோகத்திற்கு வேறொரு பெண்ணாக இருந்திருந்தால், உன்னைப் பற்றி எல்லா விஷயங்களையும் சாட்சியுடன் வந்து உன் கணவனிடம் சொல்லி உன் வாழ்வையே அழித்திருப்பாள். ஆனால் கங்கா அப்படி எதுவும் செய்யாமல் பெருந்தன்மையாக விலகியே இருக்கிறாள். துரோகம் செய்த நீ குற்ற உணர்ச்சியே இல்லாமல் இப்படி மகிழ்ச்சியாக இருக்கிறாய், ஆனால் உனக்காகத் தியாகம் செய்தவள் எல்லாவற்றையும் இழந்து எப்படி இருக்கிறாள் தெரியுமா? உன்னால் அவள் எவ்வளவு துன்பப்பட்டாள் என்று உனக்குத் தெரியுமா?” என்று அவன் சிவரூபன் செய்த சூழ்ச்சி, அதனால் தானும் அவளும் பிரிந்தது அதன்பிறகு அவள் இப்போது இருக்கும் நிலையைப் பற்றி அவன் விவரித்த போது வினுஷா மனமுடைந்து விம்மினாள்.
“அன்று அவள் வாழ்வை காப்பாற்ற தான் நீ முன் வரவில்லை ஆனால் அதற்குப் பிறகு அவளிடம் மன்னிப்பு கேட்க கூடவா உனக்குத் தோன்றவில்லை. உன்னைப் போன்ற பெண்ணுக்காகத் தன் வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்ட அவள் முட்டாள். ஆனால் அவள் வாழ்க்கையை எரித்து அதில் குளிர் காய்ந்து கொண்டிருக்கும் நீ புத்திசாலி. எனக்கு வரும் ஆத்திரத்திற்கு இப்போதே உன்னைப் பற்றிய எல்லா உண்மைகளையும் உன் கணவனிடம் சொல்லி விடத் தான் தோன்றுகிறது. ஆனால் இவ்வளவு நடந்த பிறகும் கங்காவே உன் வாழ்வை கெடுக்க நினைக்கவில்லை, அதனால் அவளுடைய எண்ணத்திற்கு மதிப்பளித்து நான் அமைதியாக இருக்கிறேன்” என்றான் அவன் கடுஞ்சினத்தில்.
தான் செய்த தவறுகளை உணர்ந்து மனம் மாறினாள் வினுஷா, “நான் கங்காவை பார்க்க வேண்டும் அண்ணா அவளிடம் பாவ மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கேட்டாள்.
அதன் விளைவாகத் தான் அவள் இப்போது கங்காவை தேடி வந்திருக்கிறாள்.
“ப்ளீஸ் என்னை மன்னித்து விடு கங்கா’ என்று அவள் மீண்டும் பழைய பல்லவியைத் தொடங்கவும்,
“ஷ், போதும் வினுஷா அதையெல்லாம் நான் மறக்க முயற்சிக்கிறேன் தயவுசெய்து நீ திரும்பத் திரும்ப அதைப் பற்றிப் பேசி எனக்கு ஞாபகப்படுத்தாதே” என்றாள் கங்கா.
“ஓ, ஆமாம், நீ சொல்வது தான் சரி கங்கா. இத்துடன் எல்லாவற்றையும் மறந்து விடலாம், நாம் மீண்டும் பழைய மாதிரி இருக்க வேண்டும் நான் இனி உனக்கு ஒரு நல்ல ஃபிரண்டாக இருப்பேன் கங்கா” என்று அவள் கூறியதை கேட்க கங்காவுக்குச் சிரிப்பு தான் வந்தது.
நட்பு என்ற பெயரில் முதுகில் குத்திய அந்தத் துரோகியுடன் மீண்டும் நட்பு பாராட்ட அவள் இனியும் தயாராக இல்லை. அதைவிட எதிரி என்ற பெயரில் நேரடியாக அவளுடன் மோதிய சிவரூபன் எவ்வளவோ மேல் என்றுதான் அவளுக்கு நினைக்கத் தோன்றியது.
தனக்குத் துளியும் சம்பந்தமில்லாத விஷயத்தில் கங்கா அவளுக்கு உதவினாள். ஆனால் வினுஷா மட்டுமே முழுக்க முழுக்கச் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கங்காவை தள்ளிவிட்டு விட்டு அவள் தப்பித்துக் கொண்டாள். உண்மையிலேயே அவள் நல்லவளாக இருந்திருந்தால் எல்லா உண்மைகளையும் சொல்லிவிட்டு அதனால் ஏற்படும் பின் விளைவுகளைத் தைரியமாக எதிர் கொண்டிருக்க வேண்டும். தனக்கு ஏற்பட்ட பாதிப்புகளை எல்லாம் கங்கா தாங்கிக் கொண்டாளே அதைப்போல! ஆனால் அவள் அப்படிச் செய்யவில்லையே.
எப்படி, எப்படி? கங்காவுக்காக அன்று அவள் உண்மையைக் கூறியிருந்தால் அவளுக்கு மட்டுமின்றி அவள் குடும்பத்துக்கே ஆபத்து என்று அவள் உண்மையைக் கூறாமல் மறைத்து விட்டாளாம். தன் குடும்பத்தின் மேல் அவளுக்கு எவ்வளவு அக்கறை. ஆனால் அன்றைக்குச் சிவரூபனால் அவளுக்கு ஆபத்து வந்த போது அந்தக் குடும்பத்தினரிடம் தானே அவள் உதவி கேட்டிருக்க வேண்டும். அவர்கள் தானே அவளுக்கு உதவி இருக்க வேண்டும். அப்போது மட்டும் ஏன் அவள் கங்காவின் உதவியை நாடினாள்? அதாவது தனக்கு ஒரு ஆபத்து ஏற்பட்ட போதும் அவள் கங்காவைத் தான் பலி கொடுத்தாள். கங்காவுக்கே ஆபத்து ஏற்பட்ட போதும் அவள் கங்காவை தான் பலி கொடுத்தாள். தனக்கோ தன் குடும்பத்தினருக்கோ ஆபத்து ஏற்படுமானால் தயக்கமின்றி அடுத்தவரை பலி கொடுக்கும் சுயநலமான பெண் அவள் என்பதைக் காலம் கடந்த பின்பு புரிந்து கொண்டாள் கங்கா.
இப்போது கூட எங்கே சிவசந்திரன் அவளுடைய கணவனிடம் அவளைப் பற்றிய உண்மைகளைச் சொல்லிவிடுவானோ என்கிற அச்சத்தில் தான் அவள் இங்கே வந்து மன்னிப்பு கேட்டது. இல்லாவிட்டால் இப்போதும் கூட அவள் ‘யார் எப்படிப் போனால் தனக்கென்ன? என்று சுயநலமாகத் தான் இருந்திருப்பாள். சிறிதளவேனும் நட்போ நன்றி உணர்வோ இருந்திருந்தால் அவள் எப்போதோ கங்காவைத் தேடி வந்திருப்பாள். சிவசந்திரன் வந்து எல்லாவற்றையும் விளக்கமாக விளக்கிய பின்னர்த் தான் அவளுக்கு ஞானோதயம் பிறந்ததாமா. இதையெல்லாம் நம்புவதற்கு அவள் இன்னும் பழைய முட்டாள் கங்கா அல்லவே!