அன்று பள்ளியில் மாணவர்களுக்கான அறிவியல் மற்றும் சமூகக் கண்காட்சிக்கான தேதி அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் அனைவரும் சிறிய முதல் பெரிய அளவிலான படைப்புகளை உருவாக்க வேண்டும் அதற்கு ஆசிரியர்களும் உதவி புரிய வேண்டும். சிறந்த கண்டுபிடிப்புகளுக்கும் படைப்புகளுக்கும் பரிசும் பாராட்டும் நிச்சயம் உண்டு என்றும் அறிவித்தனர். மாணவர்கள் எல்லோரும் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் கலந்து கொள்ள ஆசிரியர்களும் அவர்களைச் சிறந்த முறையில் ஊக்குவித்தனர்.
மாணவர்களும் தானியங்கி சாலை விளக்குகள் தானியங்கி காபி மெஷின், அட்டை பலகையில் கார் கேம்கள், செயற்கைக்கோள், விண்கலம், எரிமலை, உள்ளிட்ட பல்வேறு வகையான படைப்புகளைப் படைத்து அசத்தினர்.
கங்காவின் வகுப்பிலும் மாணவர்கள் தனித்தனியே அவரவர் திறமையை வெளிப்படுத்தும் விதமாகப் பல படைப்புகளைப் படைத்திருந்தனர். அவர்களில் கங்கா சில மாணவர்களை வைத்துத் தனியாக ஒரு படைப்பை உருவாக்கியிருந்தாள். அது பள்ளியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துப் பாராட்டினை பெற்றது மட்டுமின்றி மாவட்ட அளவில் கண்காட்சியைப் பார்வையிட வந்த கல்வித்துறையைச் சார்ந்த உயர் அதிகாரிகளின் கவனத்தையும் கவர்ந்தது.
கனமழையின் போது பயிர்கள் மூழ்கும் அளவிற்குத் தேங்கி நிற்கும் நீரை வெளியேற்றும் முறை பற்றிய விவசாய ப்ராஜெக்ட் அது. அதாவது பயிர்களில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் நீர் தேங்கும் சமயத்தில் அங்கிருக்கும் சென்சார் அதனைக் கண்டறிந்து பூமிக்கு அடியில் மோட்டார் பம்புடன் புதைக்கப்பட்டிருக்கும் ராட்சத பைப்புகளில் பொருத்தப்பட்டிருக்கும் சென்சார் கருவிக்குச் சிக்னல் கொடுக்கும். அதனையடுத்து அந்த நீர் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டு அருகில் இருக்கும் நீர்நிலைகளில் சென்று கலக்கும். இதுதான் அந்த ப்ராஜெக்ட்டின் செயல்முறை.
இது போன்ற கண்டுபிடிப்புகள் வரவேற்கப்பட வேண்டும் இது இன்னும் கொஞ்சம் மெருகேற்றி முறையே செயல்படுத்தினால் விவசாயத்தில் பெரும் புரட்சியே ஏற்படும். அதனால் மும்பையில் தேசிய அளவில் நடைபெறும் நவீன கண்டுபிடிப்புகள் மாநாட்டில் மாநிலத்தின் சார்பாகக் கலந்து கொள்ளக் கங்காவின் ப்ராஜெக்ட்டும் தேர்வு செய்யப்பட்டது. அதற்காக அவளுக்கும் அவளுடைய வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளி சார்பாகப் பரிசளித்துப் பாராட்டு விழாவும் நடைபெற்றது. பள்ளியின் ஜெஎம்டியும், ப்ராஜெக்ட் லீட் என்கிற முறையில் கங்காவும் மாநாட்டில் கலந்து கொள்வதாக முடிவானது.
ப்ராஜெக்ட் பற்றிய குறிப்புகளையும் தகவல்களையும் விளக்குவதற்காகக் கங்கா அன்று மாலை ‘ஜெஎம்டி’ யை சந்திக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியரிடம் இருந்து அவளுக்கு இ மெயில் வந்திருந்தது. ஆனால் அவனைச் சந்திப்பதற்கு அவள் விருப்பப்படவில்லை, அது தேவையற்ற விவாதங்களில் தொடங்கி வீண் வம்பில் முடிகிறது என நினைத்து ப்ராஜெக்ட் பற்றிய முழு விபரங்களையும் சிவசந்திரனுக்கு இ மெயில் வழியாக அனுப்பினாள் கங்கா.
அவள் அனுப்பிய மின்னஞ்சலில் சில குறிப்புகள் தெளிவாக இல்லை என்றும் அதை அவள் சரியாக விளக்க வேண்டும் என்றும் பதிலுக்கு இன்னொரு மின்னஞ்சல் வந்திருந்தது அதுவும் தலைமை ஆசிரியரிடம் இருந்து. ‘வேண்டுமென்றே அவளை நேரடியாக வந்து சந்திக்கச் சொல்கிறான்’ என்று புரிந்து ஏதேனும் காரணம் சொல்லி அதனைத் தவிர்த்துக் கொண்டே வந்தாள் அவள்.
அதன்பின் ஒரு வாரமாகச் சிவசந்திரன் பள்ளிக்கு வரவில்லை. எப்படியோ அவன் புரிந்து கொண்டு விட்டான் இனி அவனைச் சந்திக்க வேண்டியிராது என்று அவள் நிம்மதியுற்றபோது மீண்டும் தலைமை ஆசிரியர் அவளை மொபைலில் அழைத்தார்.
தொடர் வேலை காரணமாக ப்ராஜெக்ட் விஷயம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறதாம். இன்று ஓய்வு நேரம் கிடைத்திருப்பதால் ப்ராஜெக்ட் விபரங்களை விளக்குவதற்காகவும், மாநாட்டிற்குப் பயணம் செய்வதற்கான குறிப்புகளைப் பெற்றுக் கொள்வதற்காகவும் கங்கா ஜெம்டியை அவருடைய இல்லத்திலேயே போய்ச் சந்திக்க வேண்டுமாம். அவளுக்காக அவர் நேரம் ஒதுக்கி அப்பாயின்மென்ட் கொடுத்திருக்கிறாராம். இது சம்பந்தமாக அவளுக்கு மின்னஞ்சலும் அனுப்பி இருக்கிறார்களாம்.
எதிர்த்து பேச முடியாமல் “சரி” என்றாள் கங்கா. எவ்வளவு தூரம் ஒதுங்கிப் போனாலும் அவன் விடமாட்டான் என்று எரிச்சலாக இருந்தது அவளுக்கு.
அவன் அப்பாயின்மென்ட் கொடுத்த நேரத்தில் தனது லேப்டாப்பை எடுத்துக் கொண்டு அவனுடைய வீட்டிற்குச் சென்றாள் அவள். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலை வேலை முடிந்தவுடன் சிந்தாமணிக்கும் அவளுடைய கணவனுக்கும் விடுமுறை. அந்த நேரத்தில் தான் அவன் அவளை அழைத்திருந்தான்.
முன்பு போல் இல்லாமல் இம்முறை அவனுடைய வீட்டிற்குச் சென்று வரவேற்பு அறையிலேயே அமர்ந்திருந்தாள் கங்கா. அவன் எந்தக் கோலத்தில் இருப்பானோ யார் கண்டது! என்கிற அச்சம் தான் காரணம்.
சற்று நேரத்தில் மாடியில் இருந்து மகாராஜா கீழே இறங்கி வந்தார். வந்தவுடன், அங்கிருந்த ஓர் அறை கதவை திறந்து “உள்ளே வா” என்று அவளுக்கு உத்தரவிட்டு விட்டு அவன் முன்னே சென்றான். அவள் அவனைப் பின் தொடர்ந்தாள். அது அவனுடைய அலுவலக அறைப்போலும். அவன் அவனுடைய இருக்கையில் அமர்ந்து கொண்டு, எதிர் பக்கத்து இருக்கையில் அவளை அமரச் சொன்னான்.
வந்த வேலையை முடித்துக் கொண்டு சீக்கிரமே திரும்பி விட வேண்டும் என்று அவள் விரைவாகவே செயல்பட்டாள்.
லேப்டாப்பை மேஜை மேல் இருவருக்கும் நடுவே வைத்து உயிர்ப்பித்தவள், மடமட வென்று ப்ராஜக்ட்டைப் பற்றி விளக்கத் தொடங்கினாள். அவள் கவனமாகத் தனது பார்வையை லேப்டாப்பில் பதித்து வைத்திருந்தாள். அவன் அவளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான். தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்தவன் மேஜையைச் சுற்றிக் கொண்டு அவளருகே வந்து, “இது என்ன, அது எப்படி?” என்று சந்தேகம் கேட்பவன் போல் பாவனைச் செய்தான்.
அவளும் கர்ம சிரத்தையாக அவனுக்கு விளக்கிக் கொண்டிருக்க, மெது மெதுவாக அவனுடைய போக்கு மாறியது. அவன் தனது முகத்தை அவள் முகத்தருகே கொண்டு வந்து, அவனுடைய கைகளை அவள் லேப்டாப்பை இயக்கிக் கொண்டிருக்கும் கையின் அருகே கொண்டு சென்று அவள் விரல்களை வருடினான். அவள் சட்டென்று தனது கைகளை எடுத்துக் கொள்ள, அவன், “வாட் ஹேப்பெண்ட்” என்று சாதாரணமாகக் கேட்டான்.
உள்ளூர எழுந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு, “நீங்கள் உங்கள் இடத்திற்குப் போங்கள்” என்றாள் அவள்.
“அங்கிருந்து பார்த்தால் எனக்குச் சரியாகத் தெரியவில்லை, யு ப்ளீஸ் கண்டினியூ” என்றான் அவன்.
அவள் சற்றே வேகமாக விவரிக்கத் தொடங்கினாள்.
அவனுடைய மீசை அவள் கன்னத்தில் உரச, அவன் மூச்சின் வெப்பம் அவள் முகத்தில் படவும், எரித்து விடுபவள் போல் அவனை முறைத்து பார்த்தாள் கங்கா.
“என்ன?” என்றவனின் குரல் பேதத்தை உணர்ந்து அவள் சட்டென எழுந்து கொண்டு, “உங்கள் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்றாள் கோபமாக.
உடனடியாக, “உன்னைத்தான்” என்றான் அவன்.
அவள் அங்கிருந்து கிளம்ப முற்படவும் அவன் வழிமறித்து நின்றான், “ப்ளீஸ் டா, இப்போதாவது என்னைப் புரிந்து கொள். இனியும் என்னால் பொறுமையாகக் காத்திருக்க முடியாது” என்றான் தவிப்புடன்.
“அதற்காகத்தான் உங்களை இன்னொரு திருமணம் செய்து கொள்ளச் சொன்னேன்” என்றாள் கங்கா விட்டேற்றியாக.
அவன் விடாப்பிடியாக, “எனக்கு இன்னொரு பெண் வேண்டாம், நீ தான் வேண்டும்” என்றான்.
கொதிப்புடன் அவனை நிமிர்ந்து பார்த்தவள், “எனக்கு நீங்கள் வேண்டாம், வேண்டவே வேண்டாம்” என்று இரைந்தாள்.
“ஏய்…” என்று கத்தியவன், “என்ன வேண்டாம்? எதற்காக வேண்டாம்? யார் தான் தவறு செய்யவில்லை? எந்தக் கணவன் மனைவிக்குத் தான் சண்டை இல்லை? நான் செய்த தவறுக்கு ஏற்கனவே உன்னிடம் மன்னிப்பு கேட்டு விட்டேன், இனியும் கேட்கிறேன். அதுவும் போதாது என்றால் நீ என்ன சொன்னாலும் செய்கிறேன், வேறு என்ன வேண்டும் உனக்கு, ஏன் இப்படி என்னை மேலும் மேலும் வேதனைப்படுத்துகிறாய்” என்றான்.
அவன் பேசியதை கவனியாதவள் போல் அவள் அவனைக் கடந்து போக முயற்சிக்க, அவள் கையைப் பிடித்துக் கொண்டு, “ப்ளீஸ் டா, உன்னைப் பார்க்கும் போதெல்லாம் நான் ஆத்திரப்படுவதும் எரிந்து விழுவதும் என் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தான்! இன்னும் நாம் எதற்காகப் பிரிந்திருக்க வேண்டும்?” என்று பேசிக் கொண்டே அவளை அணைத்தான்.
அவள் அவனை உதறி விடுவித்துக் கொள்ள முயற்சிக்க அவன் பிடி மிகவும் வலுவாக இருந்தது, அவன் அவ்வளவு எளிதில் விடுவதாக இல்லை.
“எனக்குத் தெரியும் உன்னால் என்னை வெறுக்க முடியாது, இல்லாவிட்டால் நான் இரவில் நடப்பதைப் பார்த்து நீ எதற்காக வருந்துகிறாய்? வீணாக வெளி வேஷம் போட்டு உன் மனதை மறைக்காதே”
அவள் திமிறிக் கொண்டே பின்னால் நகர, அவன் முன்னோக்கி நடக்கக் கடைசியாக இருவரையும் சுவர் தடுத்து நிறுத்தி அவனுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுத்தது.
அடடா, இப்படி ஒரு பொன்னான வாய்ப்பை நழுவ விட அவன் தயாரில்லை. “நான் பாவமில்லையா? ம்ம்” என்று சரசமாகக் கேட்டபடியே அவள் இதழை சிறைப்பிடித்தான்.
சினத்தின் எல்லைக்கே சென்றாள் கங்கா! தன் பலம் கொண்ட மட்டும் அவனைப் பிடித்துத் தள்ள முயன்று தோற்றாள்.
அப்போது “மச்சான்….” என்ற குரலுடன் யாரோ கதவை திறந்து கொண்டு உள்ளே வந்து நிற்க, மோகத்தில் மூழ்கிப் போயிருந்த சிவசந்திரன் பிடி லேசாகத் தளரவும், அவனை வேகமாகத் தள்ளி விட்டு, அங்கிருந்து ஓடினாள் கங்கா.
மூடி இருந்த அறைக்குள் இருந்து ஒரு பெண் வேகமாக ஓடுவதையும், கதவின் பின்னே சிவசந்திரன் முகம் வியர்த்து நிற்பதையும் கண்ட பிரமோத், அதிர்ச்சியின் விளிம்புக்கே சென்றான். இப்படியொரு காட்சியைக் காணும் எவருக்கும் எளிதில் புரிந்துவிடும் உள்ளே என்ன நடந்திருக்கும் என்று. தான் கண்ட காட்சியை இன்னும் அவனால் நம்ப முடியவில்லை.
அவனா? சிவசந்திரனா ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்தது? அவனைப் பற்றி முழுமையாக அறிந்திருந்த பிரமோத்துக்கு இதை நம்புவது கடினமாகத் தான் இருந்தது. ஆனால் அவன் நேரில் கண்ட காட்சியும் பொய் இல்லையே! தன்னுடைய முதுகுக்குப் பின்னால் ஓடிய அந்தப் பெண்ணைப் பிரமோத் சரியாகப் பார்க்கவில்லை, அவள் யாராக இருந்தால் என்ன? அவளுக்குச் சிவசந்திரனின் அறையில் என்ன வேலை?
“டேய், என்னடா இது?” என்று அதிர்ச்சி மாறாமல் கேட்டான் பிரமோத்.
இவ்வளவு அருமையான சந்தர்ப்பம் கை நழுவி போய்விட்டதை எண்ணி கோபத்தில் இருந்த சிவசந்திரன் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கும் நண்பனை வரவேற்காமல் வசை பாடினான்.
“என்ன, என்னடா? கரடி மாதிரி குறுக்கே வந்து காரியத்தையே கெடுத்து விட்டாயே. உன்னால் ஒரு நல்ல சான்ஸ் மிஸ் ஆகிவிட்டது” என்று கடிந்து கொண்டான்.
இதையும் நம்ப மாட்டாமல், “டேய், மச்சான் நீ தானா இது? நீ நவயுக ராமன், ஏக பத்தினி விரதன், கங்கா சிஸ்ட்டரை தவிர இன்னொரு பெண்ணை நினைத்துக் கூடப் பார்க்க மாட்டாய் என்றெல்லாம் உன்னைப் பற்றிப் பெருமையாக நினைத்தேனே. ஆனால் நீ என்னையும் ஏமாற்றி, சிஸ்டருக்கும் துரோகம் செய்து விட்டாயே, நீ எப்படிடா இந்த மாதிரி மாறினாய்?” என்று அவன் குறைபட்டுக் கொள்ளவும் தான் சிவசந்திரனுக்கு விஷயமே புரிந்தது.
“டேய், இடியட், இப்போது இங்கிருந்து ஓடியதே உன் சிஸ்டர் தான்” என்று அவனுக்கு விளக்கினான்.
“என்னது?”
“நீ பார்த்தது கங்காவைத் தான்” என்று மீண்டும் கூறியவன், கங்கா அவனுடைய எதிர் வீட்டில் இருக்கும் கதையைச் சொல்லத் தொடங்கினான்.
தங்கள் விஷயத்தில் ஆரம்பம் முதல் கடைசி வரை எல்லா விஷயங்களையும் அறிந்தவன் ஆயிற்றே! அதனால் தன் மனதில் இருந்த பாரத்தை எல்லாம் அவனிடம் கொட்டி தீர்த்தான் சிவசந்திரன்.
சிவரூபன் வினுஷா மற்றும் வசுந்தராவை பற்றி எல்லா விஷயங்களையும் சொன்னான். கங்காவுக்கும் அவனுக்கும் தற்போது இருக்கும் உறவை பற்றியும் சொன்னான்.
“அவள் விஷயத்தில் நான் மிகவும் அவசரப்பட்டு விட்டேன் மிகப்பெரிய தப்புச் செய்து விட்டேன் அதையெல்லாம் உணர்ந்து அவளிடம் மன்னிப்பும் கேட்டு விட்டேன், அவள் காலில் விழ கூடத் தயாராக இருக்கிறேன். ஆனால் நான் பணிந்து போகப் போக அவளுக்கு ரொம்பவும் நெஞ்சழுத்தம் கூடிவிட்டது. என்னை ரொம்பவும் அலட்சியப்படுத்துகிறாள் வார்த்தைக்கு வார்த்தை உதாசீனப்படுத்துகிறாள். எல்லாவற்றுக்கும் மேலாக அவளே வந்து என்னை இன்னொரு திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறாள். இதெல்லாம் நியாயமாடா? நான் என்ன சொன்னாலும் எப்படிப் பேசினாலும் என்னைப் புரிந்து கொள்ள மறுக்கிறாள்? என்னால் அவளைப் பிரிந்திருக்க முடியவில்லை அவள் இல்லாத வாழ்வை நினைத்து கூடப் பார்க்க முடியவில்லை. இதை வெளிப்படையாகவே அவளிடம் சொல்லி விட்டேன் அப்போதும் பிடிவாதமாகத் திமிராகவே இருக்கிறாள். வேண்டும் என்றே என்னைத் துடிக்க வைத்து வேடிக்கை பார்க்கிறாள்” என்று கோபமும் நிராசையும் கொண்டு புலம்பினான்.
பிரமோத்துக்கு ஒருபுறம் சிவசந்திரன் கங்காவை புரிந்து கொண்டு அவளுடன் சேர துடிப்பதை எண்ணி மகிழ்ச்சியாகவும் மறுபுறம் கங்கா அவனைப் புரிந்து கொள்ளாமல் முரண்டு பிடிப்பது வருத்தமாகவும் இருந்தது.
“கவலைப்படாதே, எல்லாம் சீக்கிரம் சரியாகிவிடும்” என்று நண்பனை தேற்ற முயற்சித்தான் அவன்.
“எனக்கு என்னவோ அவள் என்னை முழுமையாக வெறுத்து விட்டது போலத்தான் தோன்றுகிறது” என்றான் சிவசந்திரன் விரக்தியுடன்.
ஆனால் பிரமோத் வேறு மாதிரி சொன்னான். “அப்படி நினைக்காதே, சிஸ்டர் உண்மையிலேயே உன்னை வெறுப்பதாக இருந்தால், உன் வீட்டுக்கு எதிர் வீட்டிலேயே குடி இருக்க முடியுமா அல்லது உனக்குச் சொந்தமான பள்ளியில் தான் வேலை செய்ய முடியுமா? சிஸ்டருக்கு உன் மேல் இருக்கும் அன்பை கோபம் மறைத்திருக்கிறது என்று நினைக்கிறேன், அது குறையச் சில நாட்கள் ஆகலாம். அதுவரை நீ கொஞ்சம் பொறுமையாக இரு, இது போல் அடிக்கடி சிஸ்டரிடம் பாயாதே, உன் வேகத்தைக் கொஞ்சம் கட்டுப்படுத்து” என்று புன்முறுவலுடன் கண்ணடித்தான் பிரமோத்.
“இதற்குமேல் தாங்காதப்பா, ஏற்கனவே பல வருடம் பிரிந்து வாழ்ந்து விட்டேன்” என்று அவன் கூறவும், உரத்து சிரித்த பிரமோத், “அதுவும் சரிதான்” என்று மேலும் நகைத்தான்.