இந்திய பள்ளிக்கல்வி துறை சார்பாக மும்பையில் நடத்தப்படும் மாநாட்டிற்குச் சிவசந்திரன் கங்கா மற்றும் அவர்களுடன் பிரமோத்தும் கிளம்பி சென்றான். கடற்கரை ஓரத்தில் இருக்கும் ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில் அவர்களுக்கான அறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கங்காவுக்குத் தனி அறையும் ஆண்கள் இருவரும் ஒரே அறையிலும் தங்கிக் கொண்டனர்.
பயணத்தின் போதும் சரி அதற்குப் பின்பும் சரி சிவசந்திரன் கங்காவுடன் பேசவே இல்லை. மிகவும் அவசியமானவற்றைப் பிரமோத் மூலமாகப் பேசினான். முதல் நாள் இரவு ஓய்வுக்குப் பிறகு மறுநாள் மூவரும் மாநாட்டிற்குக் கிளம்பிச் சென்றனர்.
ப்ராஜக்ட்டை பற்றி விளக்கி பேசியது கங்கா தான். அங்கேயும் அவளுடைய படைப்புச் சிறப்புக் கவனம் பெற்றது. அப்படி ஒரு திட்டத்தை இன்னும் பெரிய அளவில் உருவாக்கவும் அதனைச் செயல்படுத்தவும் மாநாட்டின் மூலமாக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதன் மகத்துவத்தில் சிவசந்திரனும் அவனுடைய பள்ளியும் உரிமை கொண்டாடாமல் அதன் முழுப் பெருமையையும் கங்காவுக்கே கொடுத்தான் அவன். அதற்காக அவளுக்குப் பல உயர் அதிகாரிகளின் பாராட்டும் கிடைத்தது. மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்காக அன்று மாலை கேளிக்கை நிகழ்ச்சிகளும் சிறப்பு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிலையில் மூவரும் அதில் கலந்து கொள்ளச் சென்றனர்.
மாலை விருந்தின் போது கல்வித்துறையின் உயர் அதிகாரி ஒருவர் கங்காவிடம் வந்து, “எக்ஸ்கியூஸ் மீ மேடம் உங்களிடம் கொஞ்சம் தனியே பேச முடியுமா?” எனக் கேட்க, அவள் தயங்கியபடி அவருடன் சென்றாள்.
“அவனைப் பார்த்தால், ஆளே சரி இல்லையே” என்றான் பிரமோத் யோசனையுடன்.
“மேடம் போய் வரட்டும் பார்க்கலாம்” என்றான் சிவசந்திரன் சாதாரணமாக. ஆனால் அவன் கவனம் முழுவதும் கங்கா சென்ற திசையிலேயே இருந்தது.
பார்ட்டி ஹாலில் சற்று ஒதுக்குப்புறமாக இருந்த மேஜையில், அவளுடன் அமர்ந்தான் அந்த அதிகாரி. முதலில் அவள் எந்த ஊர், என்ன படித்திருக்கிறாள் போன்ற கேள்விகளைக் கேட்டவன் அடுத்தபடியாகக் கொஞ்சம் தயங்கினான்.
கங்கா எல்லாக் கேள்விகளுக்கும் பள்ளி மற்றும் பள்ளி சார்ந்த முகவரியையே பதிலாகக் கொடுக்க, “அந்த மாதிரி ஒரு கிராமத்தில் இருந்து கொண்டு இவ்வளவு திறமைகளையும் வீணடித்துக் கொண்டிருக்கிறீர்களே” என்று அவளுக்காக அதிகமாகவே வருத்தப்படுவது போல் பேசினான்.
அவனுடைய பேச்சும் வருத்தமும் போலியாக இருப்பதாக அவளுக்குத் தோன்றியது!
“இந்த மாதிரி சிட்டியில் உங்களுக்கு நிறைய ஆஃபர்கள் காத்திருக்கின்றன” என்றான்.
“நோ தேங்க்ஸ், எனக்கு அதில் எல்லாம் ஆர்வம் இல்லை” என்று நாசுக்காக மறுத்தாள் கங்கா.
“நோ நோ உங்களைப் போன்ற திறமையான பெண்கள் இந்த மாதிரி ஆஃபர்களை ஏற்றுக்கொண்டால் தான், சீக்கிரமாகவே வாழ்க்கையில் அடுத்தக் கட்டத்திற்கு முன்னேற முடியும், உங்களுடைய முன்னேற்றம் தான் நாட்டின் முன்னேற்றம்” என்று நல்லவன் போல் அறிவுறுத்தியவன்,
“உங்களுக்கு இருக்கும் திறமைக்கு நீங்கள் அரசின் ஆராய்ச்சி கூடத்தில் வேலை செய்ய வேண்டியவர், அங்கே வேலை செய்தால் இதுபோல இன்னும் பல படைப்புகளை உருவாக்க முடியும், உங்களுக்குச் சரி என்றால் உடனடியாக அந்த வேலையை நான் வாங்கித் தருகிறேன், ஆனால் அதற்கு நீங்கள் மனது வைக்க வேண்டும்….” என்று ஒரு மாதிரி சிரித்தான்.
அரசு வேலை என்ற ஆசையைத் தூண்டி அதற்காகப் பல லட்சங்களில் லஞ்சம் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கிறான் போலும்! ஆனால் அவளுக்குத்தான் அதில் விருப்பமே இல்லையே. பாவம், அதற்காகத்தான் இப்படிச் சுற்றி வளைத்துப் பூடகமாகப் பேசிக் கொண்டிருக்கிறான்!
சற்றே தாழ்ந்த குரலில், “அதற்காக நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். ஒரு சின்ன அட்ஜஸ்ட்மென்ட், இன்று இரவு எனக்குக் கம்பெனி கொடுத்தால் போதும் நாளை காலையிலேயே அப்பாயின்மென்ட் ஆர்டர் வாங்கிக் கொடுத்து விடுகிறேன், என்ன சொல்கிறீர்கள்?”
‘அட்ஜஸ்ட்மென்ட்’ என்ற வார்த்தையைக் கேட்டவுடன் அவள் உடல் எங்கும் விஷம் பரவியது போல் இருந்தது! என்ன தைரியம் இவனுக்குப் பொது இடத்தில் ஒரு பெண்ணிடம் இவ்வளவு அநாகரிகமாகப் பேசுவதா?
அவன் வயது நாற்பதுகளில் இருக்கும். அவன் வகிக்கும் பதவிக்கும் அவனுடைய பேச்சுக்கும் சம்பந்தமில்லாமல் இருப்பதை எண்ணி அருவருப்பாக இருந்தது அவளுக்கு.
இங்கேயே அவன் கன்னத்தில் பளார் என்று அறைய வேண்டும் போல் இருந்தது. ஆனால் அவன் ஒன்றும் வரம்பு மீறி விடவில்லை, அவனுக்குத் தோன்றிய அசிங்கமான எண்ணத்தை நாகரீகமாகக் கேட்கிறான். அவளும் அவளுடைய பதிலை வாய் வார்த்தையில் சொன்னால் போதும். வீணாக இங்கே ரசாபாசம் வைத்துக் கொள்ள வேண்டியதில்லை.
“நான் நீங்கள் நினைப்பது போன்ற பெண் இல்லை” என்று கூறிவிட்டு எழுந்து கொண்டவளை,
“ஏன் இவ்வளவு அவசரப்படுகிறீர்கள் நன்றாக யோசித்துப் பார்த்து உங்கள் பதிலை சொல்லுங்கள்? இந்த மாதிரி ஆஃபர் எல்லோருக்கும் அவ்வளவு எளிதாகக் கிடைத்து விடாது”
“உங்கள் ஆஃபர் எனக்குத் தேவையில்லை தொடர்ந்து இதே போல் பேசினால், நான் போலீசில் புகார் அளிக்க வேண்டி இருக்கும், ஜாக்கிரதை” என்று எச்சரித்துவிட்டு அங்கிருந்து வேகமாகக் கிளம்பினாள் அவள்.
பிரமோத் சிவசந்திரனை விடுத்து அவள் வேகவேகமாக வாசலை நோக்கி செல்வதைக் கவனித்த இருவரும் மீண்டும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, சட்டென எழுந்த சிவசந்திரன், “நான் போய்ப் பார்த்துவிட்டு வருகிறேன்” என்று கூறிவிட்டு அவளிடம் விரைந்தான்.
அங்கே டாக்ஸிக்காகக் காத்திருந்தவளிடம், “என்ன பிரச்சனை?” என்று அவன் கேட்கவும், அந்த அரசு அதிகாரியின் மேல் இருந்த ஆத்திரம் அத்தனையும் அவனிடம் காட்டினாள் கங்கா.
“பிரச்சனையே நீங்கள்தான் அதனால்தான் நான் எங்கேயும் வர மாட்டேன் என்றேன். எதற்காக என்னை வற்புறுத்தி இங்கே அழைத்து வந்தீர்கள், கண்டவன் வந்து என்னிடம் அட்ஜெஸ்ட்மென்ட் என்று கேட்பதற்காகவா? இல்லை நான் இன்னும் அவமானப் படுவதற்காகவா? இந்த உலகத்தில் இருக்கும் எல்லோரையும் விட நீங்கள் தான் தான் உத்தமர் என்று நான் நம்புவதற்காகவா? போதும் எல்லாம், நான் இப்போதே ஊருக்குப் போகிறேன்” என்று சீறிவிட்டு டாக்ஸியில் ஏறி சென்று விட்டாள்.
கைமுஷ்டிகளை இறுக்கமாக மடக்கிய சிவசந்திரன் யாரிடமோ, ஃபோன் பேசியபடி பிரமோத்திடம் வந்தான்.
“கங்கா ஊருக்கு போகிறாள், ரொம்பக் கோபமாக வேறு இருக்கிறாள். நீ ஹோட்டலுக்குப் போய் அவளைப் பார்த்துக்கொள், அவள் பிடிவாதமாக ஊருக்கு போக வேண்டும் என்றால் நீயும் அவளுடன் போ” என்றான்.
“அப்படியானால் நீ” என்று அவன் கேட்டதற்கு, “எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கிறது” என்று கூறி அவனை அனுப்பி வைத்த பிறகு, சற்றுமுன் கங்காவிடம் பேசிக் கொண்டிருந்தவனைத் தேடிச் சென்றான். அவன் இன்னும் அங்கே தான் சுற்றிக் கொண்டிருந்தான், இன்னொரு பெண்ணுக்கு வலை வீசியபடி.
அவன் அமர்ந்திருந்த மேஜையின் அருகே அமர்ந்து அவனிடம், “ஹலோ” என்றான் சிவசந்திரன்.
ஆண்களிடம் பேசுவதில் அவனுக்குப் பிரியம் இல்லை போல. அதனால் அசுவாரஸ்யத்துடன் அவன் பதிலுக்கு, “ஹலோ” எனவும், “என்ன கம்பெனிக்கு ஆள் இல்லையா?” என்று கேட்டான்.
அவன் சோர்வுடன், “யெஸ்” என்ற போது அவன் ஃபோனுக்கு ஏதோ குறுஞ்செய்தி வந்திருந்தது.
அவன் ஆத்திரத்துடன், “யார் நீ” என்று கத்தவும், “உனக்குச் சஸ்பென்ஷன் ஆர்டர் வாங்கிக் கொடுத்தவன், அதனால் இப்போது நீ என்னைப் பற்றி யோசிப்பதை நிறுத்திவிட்டு இந்த ஆர்டரை எப்படிக் கேன்சல் செய்வது என்பதைப் பற்றிப் பேசு” என்று கூறினான்.
“உனக்கு என்ன வேண்டும்? நான் என்ன செய்ய வேண்டும்” என்று வேகமாகக் கேட்டான் அவன்.
“வெரி சிம்பிள், உன் வீட்டுப் பெண் யாராவது எனக்குக் கம்பெனி கொடுக்க வேண்டும், சின்ன அட்ஜஸ்ட்மென்ட் தான் அதைப் பற்றி உனக்குத் தெரியாதா என்ன! அப்படிக் கம்பெனி கொடுத்தால் இப்போதே உன் சஸ்பென்ஷனை தடுத்து நிறுத்துகிறேன் யோசித்துச் சொல்” என்று ஆஃபர் வழங்கினான்.
“ஏய், யாரிடம் என்ன பேசுகிறாய்?” என்றான் அவன் ஆவேசமாக.
“உன்னிடம் நீ சொன்னதையே தான் திரும்பச் சொல்கிறேன். எத்தனை பேரின் மனைவியைச் சகோதரியை நீ இப்படி அழைத்து இருப்பாய்? யார் வீட்டுப் பெண்ணோ உனக்குக் கம்பெனி கொடுக்க வேண்டும், உன் வீட்டுப் பெண்கள் எனக்குக் கம்பெனி கொடுக்கக் கூடாதா, இப்போது அவர்களை நீ அட்ஜஸ்ட் செய்யச் சொல்லாவிட்டால் அடுத்ததாக உனக்கு டிஸ்மிஸ் ஆர்டர் வரும், வர வைப்பேன்” என்று மிரட்டினான்.
“என்னடா இப்போது வந்து போனாளே அவளுக்கு நீ என்ன பாடிகார்டா. நானும் பார்த்தேன் அவளுடைய லட்சணத்தை, இரண்டு ஆண்களுடன் தனியே வெளியூருக்கு வந்திருக்கிறாள் அவள் என்னவோ உத்தமி போல் அவளுக்காக வக்காலத்து வாங்குகிறாயே” என்று அவன் கங்காவைப் பற்றித் தவறாகப் பேசினான்.
“உனக்கெல்லாம் யார் வேலை கொடுத்துச் சம்பளம் கொடுப்பது? ஒரு பெண் வீட்டை விட்டு வெளியே வந்தால் அவள் குடும்பப் பெண் இல்லையா, முன் பின் தெரியாத பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள நினைக்கும் நீ என்ன யோக்கியனா? ஒரு பெண்ணை அடைய நினைப்பது அவள் மறுத்து விட்டால் அவளுடைய ஒழுக்கத்தை அசிங்கப்படுத்துவது, இதெல்லாம் ரொம்பவும் பழைய காலத்து ஃபார்முலா. இனியாவது பெண்களிடம் மரியாதையாக நடந்து கொள், இப்போது சஸ்பென்ஷனுடன் விடுகிறேன், இன்னொரு முறை இப்படி நடந்தால் கொலையே செய்து விடுவேன்”
இழந்த வேலைக்காக மீண்டும் சிவசந்திரன் காலை பிடிக்க வேண்டிய நிர்பந்தம் அவனுக்கு.
“சாரி சார் அந்தப் பெண் உங்களுக்கு உறவு என்று தெரியாமல் தவறாகப் பேசி விட்டேன். தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள் இந்தச் சஸ்பென்ஷன் ஆர்டரை நிறுத்தச் சொல்லுங்கள்” என்று கெஞ்சினான்.
தீர்மானமாக, “அது முடியாது” என்று பகர்ந்துவிட்டு அங்கிருந்து அகன்றான் சிவசந்திரன்.
ஹோட்டல் அறைக்குத் திரும்பிய கங்கா தனது உடைமைகளை எடுத்துப் பெட்டியில் அடைத்து விட்டு ஊருக்குக் கிளம்பத் தயாரானாள். அப்போது கதவை தட்டும் ஓசை கேட்டு, அவள் திறக்க அங்கே பிரமோத் நின்றிருந்தான்.
அவளிடம் அனுமதி கேட்டுக் கொண்டு உள்ளே வந்தவன் “உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் சிஸ்டர்” என்றான்.
“உங்கள் நண்பரை பற்றித் தானே அவரைப் பற்றிப் பேசுவோ கேட்கவோ எனக்கு எதுவும் இல்லை” என்றாள் அவள் அழுத்தமாக.
“நீங்கள் இருவரும் எவ்வளவு அன்னியோன்யமாக வாழ்ந்தவர்கள், ஆனால் இப்போது எப்படி உங்களால் அவனை யாரோ போல் நினைக்க முடிகிறது?”
“அவர் விவாகரத்துப் பத்திரத்தில் கையெழுத்து போட்டு, என் முகத்துக்கு நேராக வீசிய போது நீங்களும் அங்கே தானே இருந்தீர்கள், எல்லாம் முடிந்த பிறகு அவர் எனக்கு யாரோவாக இல்லாமல் வேறு என்னவாக இருப்பார்?”
“அது உங்கள் சார்பாக உங்கள் தந்தை கொண்டு வந்து கொடுத்தது தானே?”
“என்னது?” என்றாள் அவள் அதிர்ச்சியுடன்.
“ஆமாம், ஏன் புதிதாகக் கேட்பதைப் போல் கேட்கிறீர்கள் உங்களுக்குத் தெரியாதா?”
“தெரியாது” என்று தலையசைத்தாள் கங்கா.
“உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் நீங்களே அதை நன்றாகப் படித்துப் பாருங்கள் சிஸ்டர் அது உங்கள் தந்தை கொடுத்தது தான். ஜெயிலுக்குப் போய் வந்தவுடன் தன் மகள் வாழ மாட்டாள் என்று அவர் தான் விவாகரத்து கேட்டார். மேலும் அன்று அவர் அதை மட்டும் சொல்லவில்லை, சிவசந்திரனை மிகவும் தரம் தாழ்த்தி தகாத முறையில் பேசினார். தந்தை பெயர் தெரியாதவன் அனாதை என்று என்னென்ன பேசினார் தெரியுமா?” என்று அன்று நடந்தவற்றை முழுமையாக எடுத்துரைத்தான்.
“ஏற்கனவே செய்யாத குற்றத்திற்காகச் சிறைக்குச் சென்ற ஆத்திரத்தில் இருப்பவனிடம் இப்படி எல்லாம் பேசினால் யார் தான் அமைதியாக இருப்பார்கள்? அந்தக் கோபத்தில் தான் அவன் அன்று அவ்வளவு உணர்ச்சிவசப்பட்டான். மற்றபடி உங்களிடம் அப்படி நடந்து கொள்ளும் அளவுக்கு அவன் கெட்டவன் இல்லை இது உங்களுக்கே நன்றாகத் தெரியும்.
உங்கள் தந்தை தான் அவன் இதற்கு முன்பாக அவருக்குச் செய்த அத்தனை உதவிகளையும் மறந்துவிட்டு அவனையே தூக்கி எறிந்து பேசினார் என்றால், நீங்களும் ஏன் அவரைப் போலவே நடந்து கொள்கிறீர்கள். அவன் இதற்கு முன்னால் உங்களிடம் எவ்வளவு அன்பாக இருந்தான் உங்களை எப்படிக் கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்டான் என்பதை எல்லாம் மறந்துவிட்டு, அவனை இவ்வளவு உதாசீனப்படுத்துகிறீர்கள். சிவரூபன், உங்கள் பிரண்ட் வினுஷா, உங்கள் தந்தை என இத்தனை பேர் செய்த தவறில் சிறு பங்காகத் தான் அவன் அன்று கோபப்பட்டானே தவிர, இந்த விஷயத்தில் அவன் மட்டுமாகச் செய்த தவறு என்ன இருக்கிறது என்று நீங்களே ஒரு முறை யோசித்துப் பாருங்கள்? செய்த தவறுக்கு அவன் மன்னிப்பும் கேட்டு விட்டான். அப்போதும் ஏன் உங்களுக்கு இந்த அலட்சியம்? அவன் என்ன குடிகாரனா சூதாடியா அல்லது பெண் பித்தனா, நீங்கள் வன்மத்துடன் பழிவாங்க? அன்றைக்கே இதையெல்லாம் நான் சொல்ல முற்பட்ட போது அவன் என்னைத் தடுத்தான், அதன் பிறகு நிலவிய சூழ்நிலையில் இனி நீங்கள் இருவரும் சேரவே மாட்டீர்கள் என்று நினைத்து தான் இத்தனை நாள் நான் பேசாமல் இருந்தேன். ஆனால் இப்போது நீங்கள் அவனை வேதனை படுத்தி உங்களையும் வருத்திக் கொள்வதைப் பார்த்துக் கொண்டு என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை சிஸ்டர்” என்று சற்று கடுமையாகவே பேசினான் பிரமோத்.
இன்னமும் அவள் சிவசந்திரனை புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் அவனுக்கு.