பிரமோத் பேசியதை கேட்டு தன் கட்டுப்பாட்டை இழந்து அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அவளுடைய தந்தை பேசியது எத்தனை அபத்தம்! எவ்வளவு அநியாயம்! அவள் கணவனை அப்படி அவமானப் படுத்த அவருக்கு என்ன உரிமை இருக்கிறது? பிரமோதன் சொன்னதைக் போல் பல பேர் சேர்ந்து செய்த தவறுக்கு அவள் கண்மூடித்தனமாக அவனை மட்டும் தண்டிப்பது எந்த விதத்தில் நியாயம்? அவன் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் அவனை எவ்வளவு வேதனைப்படுத்தி விட்டாள், அதற்கெல்லாம் அவளுக்கு மன்னிப்பே கிடையாது!
“நீங்கள் இல்லாமல் அவனால் வாழ முடியாது சிஸ்டர், புரிந்து கொள்ளுங்கள்” என்ற பிரமோத்திடம்
“அவர் எங்கே இருக்கிறார்?” எனக் கேட்டாள் கங்கா.
“அவன் இன்னும் வரவில்லை” என்றவன் அவனுக்கு ஃபோன் செய்தான்.
“மனம் சரியில்லை, கொஞ்ச நேரம் கீழே பீச்சில் நடந்துவிட்டு வருகிறேன்” என்று பதிலிறுத்துவிட்டு அழைப்பை துண்டித்தான் சிவசந்திரன்.
அதைக் கங்காவிடம் தெரிவித்த பிரமோத், “அவன் ரூமுக்கு வந்தவுடன் சொல்கிறேன் சிஸ்டர்” என்று சொல்லி முடிக்கும் முன் அவள் அவனைத் தேடிச் சென்று விட்டாள். போகும் அவளை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டு நின்றான் பிரமோத்.
அந்த ஹோட்டலில் இருந்து கடற்கரைக்குச் செல்வதற்கு நடைபாதை அமைத்திருந்தனர். அதன் வழியே சென்ற போது நீண்ட தூரத்தில் சிவசந்திரன் நடந்து கொண்டிருப்பது அவள் பார்வைக்குத் தெரிந்தது. மணலில் கால்கள் புதைய மூச்சிரைக்க வேகமாக நடந்து வந்தவளை ஆச்சரியத்துடன் பார்த்து, “என்ன?” என்று கேட்டான் சிவசந்திரன்.
நீர் மல்கிய கண்களால் நிமிர்ந்து அவனைப் பார்த்தவளின் உதடுகள் பேச்சிழந்து குற்ற உணர்ச்சியில் துடிக்க, “என்னடா?” என்று இதமான குரலில் அவன் கேட்ட போது அவள் முழுமையாக உடைந்து விட்டாள். அவளது முக வாட்டத்தைக் கண்டு அவன் முகத்தில் குழப்பம் பரவியது.
“என்னை மன்னித்து விடுங்கள்!” என்று கலங்கியவள், “என் தந்தை விவாகரத்து நோட்டிஸ் கொண்டு வந்தது உங்களைத் தவறாகப் பேசி அவமானப்படுத்தியது எதுவுமே எனக்குத் தெரியாது. எதையுமே சரியாக யோசித்துப் பார்க்காமல் சரியாகப் புரிந்து கொள்ளாமல் மிகவும் தவறாக நடந்து கொண்டது நான் தான். அதனால் உங்களை ரொம்பவே கஷ்டப்படுத்தி விட்டேன். கட்டிய மனைவியைப் பற்றி அப்படி ஒரு கடிதம் வந்தால் யாராக இருந்தாலும் சந்தேகப்படுவது இயல்பு தானே என்று கூட நான் புரிந்து கொள்ளவில்லை…” என்று அவள் பேசிக் கொண்டே இருக்க
“இன்னமும் நீ தவறாகத் தான் புரிந்து கொண்டிருக்கிறாய் கங்கா” என்றான் அவன் வருத்தத்துடன்.
அவள் குழப்பத்துடன் பார்க்க, “நான் ஜெயிலுக்குப் போனதற்குக் காரணம் என்னுடைய எதிரிகள் யாரும் இல்லை என்று எனக்குத் தெளிவாகத் தெரிந்து விட்டது. அதன் பிறகு அப்படி ஒரு கடிதம் வருகிறது, நான் ஜெயிலுக்குப் போனதற்குக் காரணம் நீதான் என்றும் நீ நடத்தை கெட்டவள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றால், எல்லாவற்றுக்கும் காரணம் உனக்குச் சம்பந்தப்பட்ட யாரோ தான் என்று எனக்குப் புரிந்து விட்டது. நீ செய்த ஏதோ ஒரு செயல், அல்லது உன் மேல் வஞ்சம் வைத்திருக்கும் யாரோ ஒருவர் தான் இத்தனைக்கும் காரணம் என்று நினைத்து தான் எனக்கு அவ்வளவு கோபம் வந்தது, கூடவே உன் அப்பா நடந்து கொண்ட விதமும் அப்படி.
மேலும் அன்று நான் செய்த தவறு நீ சொல்ல வந்த விஷயத்தை நான் முழுமையாகக் கேட்டுக் கொள்ளாதது. அதைக் கேட்டுக் கொள்ளும் பொறுமையும் மனநிலையும் எனக்கு அப்போது இருக்கவில்லை. உன்னை மீண்டும் பார்த்த போது என்னால் எனது உள்ள கிளர்ச்சிகளை அடக்க முடியவில்லை. இத்தனை ஆண்டுகளாக எனக்குள் இருந்த பிரிவும் ஏக்கமும் தான் கோபமாக வெளிப்பட்டன. அதனால்தான் உன்னைக் காணும் போதெல்லாம் அவ்வளவு கடுமையாக நடந்து கொண்டு என்னை நானே கட்டுப்படுத்திக் கொண்டேன்.
ஆனால் அன்று ஸ்டாப்ரூமில் மயங்கிய நிலையில் உன்னைப் பார்த்தபோது தான் என்னை நானே சரியாக உணர்ந்து கொண்டேன். ஹாஸ்பிடலில் நீ கண்விழிக்கும் வரையில் எனக்கு வேறு நினைவே வரவில்லை. நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது என்பதை நான் பூரணமாக உணர்ந்து கொண்டதும் அன்று தான். அதன் பிறகு தான் நான் முழுமையாகக் கேட்டு தெரிந்து கொள்ளத் தவறிய வினுஷாவை பற்றிய விபரங்களை ராஜுவை கேட்டு தெரிந்து கொண்டேன்.
மற்றபடி என்றைக்கும் நான் உன்னைச் சந்தேகப்பட்டதே இல்லை, அது என்னை நானே சந்தேகப்படுவது போலத்தான். நான் சொல்வதை உன்னால் நம்ப முடிகிறதா?” என்று சந்தேகத்துடன் அவன் கேட்டபோது உலகத்தையே வென்ற மகிழ்ச்சி அவளுக்கு!
“நிச்சயமாய்” என்றாள் அவள் உறுதியுடன்.
“அதை இவ்வளவு தள்ளி நின்று தான் சொல்ல வேண்டுமா?” என்று அவன் கைகளை விரிக்க மான் போல் தாவிச் சென்று அவன் மார்பில் முகம் புதைத்தாள் கங்கா. விரிந்திருந்த அவனது கைகள் அவளை இதமாய் அணைத்துக் கொள்ள ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள் படை கொண்டு வந்து அவர்களை வாழ்த்தி சென்றன.
சற்று பொறுத்து அவள் கையோடு கை கோர்த்து, தோளோடு அணைத்த படி இருவரும் நடந்து வருவதைப் பால்கனியில் இருந்த பார்த்துக் கொண்டிருந்த பிரமோத் அளவற்ற ஆனந்தம் கொண்டான்.
அறைக்குத் திரும்பிய இருவரும், அவரவர் அறைக்குச் செல்ல மனமின்றித் தயக்கத்துடன் நிற்க, தாகம் நிறைந்த குரலில், “எனக்கு அங்கே அனுமதி கிடைக்குமா?” என்ற அவனது கேள்விக்கு அவள் வெட்கப் புன்னகை புரிய, குதூகலமாகக் கணவன் என்ற உரிமையுடன் அவள் அறைக்குச் சென்றான் சிவசந்திரன்.
மீண்டும் மறுநாள் மாலையில் தான் அறையிலிருந்து வெளிப்பட்டு நண்பனை தேடி வந்தான்.
“வாழ்த்துக்கள் மச்சான் சாதித்து விட்டாய்” என்று ஆரவாரத்துடன் வரவேற்றான் பிரமோத்.
“தேங்க்ஸ் டா! எல்லாம், உன் ஏற்பாடு தான் போல, ஆனால் நீ பேசிய பிறகு தான் அவள் மனம் மாறினாள்”
கங்கா அவளுடைய தந்தையைப் பற்றிப் பேசியபோதே பிரமோத் அவளிடம் பேசி இருக்கிறான் என்று அவனுக்குப் புரிந்தது. கங்காவின் தந்தை பேசிய விஷயம் எல்லாம் அவன் ஒருவனுக்கு மட்டும் தானே தெரியும்!
தொடர்ந்து, “சாரிடா காலையில் ப்ளைட் மிஸ் ஆகிவிட்டது, அடுத்தப் பிளைட் எப்போதுக் என்று பார், ஊருக்கு போக வேண்டும் என்றான் சிவசந்திரன்.
“உன்னுடைய வீட்டிலும் சிஸ்டர் வீட்டிலும் இந்த விஷயத்தை எப்படி எடுத்துக் கொள்வார்கள்?” என்று கவலையுடன் கேட்டான் பிரமோத். அவர்கள் யாரும் புதிதாக ஒரு பிரச்சனை ஏற்படுத்தி அவர்களை மீண்டும் பிரித்து விடக்கூடாதே!
“யார் எப்படி எடுத்துக் கொண்டாலும் எனக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை இனி எங்களை யாரும் பிரிக்க முடியாது” என்றான் சிவசந்திரன் தெள்ளத் தெளிவாக.
அவன் அவ்வளவு திடமாக இருக்கும் போது மற்றவர்களைப் பற்றிய கவலை பிரமோத்துக்கும் தீர்ந்தது!
மூவரும் சிவசந்திரன் வீட்டிற்குச் செல்ல, அங்கே எல்லோர் முன்னிலையிலும், கங்கா தன்னுடைய மனைவி என்றும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே தங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது என்றும் தெரிவித்தான் சிவசந்திரன். அதைக் கேட்டு எல்லோருக்குமே அதிர்ச்சி தான் ஆனால் யாரும் அவர்களை எதிர்க்கவில்லை.
முதலில் யார் அவர்களை வரவேற்பது என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டும் தயங்கிக் கொண்டும் இருக்க, அப்போது தேவராஜ் மூலமாகக் கங்கா மீண்டும் சிவசந்திரனுடன் இருப்பதை அறிந்த விஸ்வநாதன் மனைவி மற்றும் மகனை அழைத்துக் கொண்டு மகளைத் தேடி அங்கே வந்து விட்டார்.
என்றைக்கு இருந்தாலும் சிவசந்திரனை அருகில் வைத்திருப்பது அவருக்கு ஆபத்து தான். அவருடைய ஊழல் மற்றும் லஞ்சக் கணக்குகள் அவனிடம் அல்லவா இருக்கிறது. அதனால் மீண்டும் கங்காவும் அவனும் சேர்ந்து விடக்கூடாது, மகளைப் பிரித்துத் தன்னுடன் அழைத்துச் செல்லும் நோக்கத்தில் தான் அங்கே வந்திருக்கிறார்.
அதேபோல் வந்தவுடன் கங்கா சிவசந்திரனுடன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து, “கங்கா உனக்கு இங்கே என்ன வேலை, எல்லாம் தான் அன்றே முடிந்துவிட்டதே வா போகலாம்!” என்று அழைத்தார்.
“நான் ஏன் வரவேண்டும்? அவர் என்னுடைய கணவர்” என்று தைரியமாகப் பேசினாள் கங்கா. அவருடன் பேசுவதற்காகத் தானே அவள் காத்திருக்கிறாள்.
“சொல்லுங்கள் அப்பா நான் ஏன் உங்களுடன் வர வேண்டும்? அன்று அவருக்குத் தந்தை இல்லை, அனாதை ஊர் பெயர் தெரியாது என்றெல்லாம் சொன்னீர்களாமே, இன்னும் என்னென்ன தகுதி எல்லாம் அவருக்கு இல்லை என்று சொன்னீர்களோ அதெல்லாம் உங்களை விடப் பன்மடங்கு அவருக்கு அதிகமாகவே இருக்கிறது. இதுதான் அவருடைய சொந்த ஊர் இதோ அவருடைய தந்தை, இங்கிருக்கும் அத்தனை பேரும் அவருடைய சொந்தம் தான். இன்னும் வேறென்ன வேண்டும் உங்களுக்கு? சாதி மதம் அந்தஸ்து பணம், அதெல்லாம் தானே. அவை எல்லாமே அவரிடம் இருக்கிறது, ஆனால் இது எதுவுமே இல்லாவிட்டாலும் எனக்கு அவர்தான் வேண்டும் அவர் இருக்கும் இடத்தில் தான் இனி நானும் இருக்கப் போகிறேன்” என்று தெளிவாகவும் தீர்மானமாகவும் அவள் பேசுவதைக் கேட்டு எல்லோருமே வியந்தனர்.
“எனக்கு அவர் வேண்டும் அம்மா” என்று தாயின் தோளில் முகம் புதைத்து அழுதாள் கங்கா.
மாதவிக்கும் இதுதானே வேண்டும். கங்கா இப்படி வாழ வேண்டும் என்று தானே அவளும் ஆசைப்பட்டாள்! இனியும் அதற்கு விஸ்வநாதன் தடையாக இருப்பதா?
“இங்கேயே இரும்மா, நன்றாக இரு” என்ற மாதவி, “வசந்த் காரை எடு” என்று மகனுக்குக் கட்டளையிட, அவனும் விரைந்து சென்று காரை எடுத்தான்.
“மாதவி” என்று கணவர் அதிகாரம் செய்வதைக் கண்டு கொள்ளவே இல்லை அவருடைய மனைவி.
மனைவியும் மகனும் காரில் சென்ற பிறகு விஸ்வநாதன் மட்டும் அங்கே தனியே நின்று கொண்டு என்ன செய்யப் போகிறார்! அவரும் அவர்கள் பின்னே செல்ல வேண்டியதாகி விட்டது.
சிவசந்திரனின் குடும்பப் பின்னணியைப் பற்றி ஏற்கனவே விசாரித்துவிட்டார் விஸ்வநாதன். ஆள்பலமும் பணப் பலமும் அதிகம் கொண்ட அவர்களை அவரால் தன்னந்தனியே எதிர்க்க முடியுமா அதுவும் அவருடைய குடும்பமே அவருக்கு எதிராக மாறி இருக்கும் பொழுது!
சிவசந்திரன் குடும்பத்தில் அனைவரும் கங்காவை மனதார ஏற்றுக்கொண்டதை அடுத்துக் குலதெய்வம் கோவிலில் பொங்கலிட்டு அங்கே அவர்கள் மாலை மாற்றிக் கொள்ளவும் ஏற்பாடு செய்தனர்! உற்றார் சுற்றார் ஊர்மக்கள் என அனைவரையும் அழைத்து அவர்களுடைய திருமண விருந்தளித்து, எல்லோரிடமும் கங்காவை தங்கள் வீட்டு மருமகளாக அறிமுகப்படுத்தினர்.
பள்ளியின் ‘எம்டி’ பதவியில் இருந்து விலகிய வசுந்தரா அடுத்த ‘எம்டி’ யாகக் கங்காவை நியமித்தார்.
அவள் வியந்து நோக்கவும், “இது நீ சந்துருவை ஏற்றுக் கொண்டதற்காக அல்ல கங்கா. சிவரூபன் உன்னைப் பற்றிய உண்மைகளைச் சொன்னபோதே நான் எடுத்த முடிவு இது. பள்ளியின் நன்மைக்காகவும் உன்னுடைய நன்மைக்காகவும் தான் இப்படி ஒரு முடிவை எடுத்தேன். ஒருவேளை நீ சந்துருவை ஏற்றுக் கொள்ளாமல் வேறு மாதிரி முடிவு செய்து இருந்தாலும் என் முடிவை நான் மாற்றிக் கொண்டிருக்க மாட்டேன்” என்று கூறி பள்ளியின் பொறுப்பை முழுமையாக அவளிடம் ஒப்படைத்தார். குடும்பத்தினர் யாரும் அதைத் தடுக்கவில்லை.
இப்பொழுது குடும்பத் தொழில்கள் உட்பட எல்லாவற்றையும் சிவசந்திரன் தான் கவனித்துக் கொள்கிறான். பள்ளி மற்றும் குடும்பப் பொறுப்புகள் கங்காவிடம் வந்தன.
சிவசந்திரனின் முதல் தங்கைக்கும் ராஜுவுக்கும் திருமணம் செய்து வைக்கலாமா என்று அவள் கணவனிடம் கேட்டபோது அவனுக்கும் அதில் சம்மதமே.
“இப்படி ஒரு நல்ல மாப்பிள்ளையை யார் தான் வேண்டாம் என்பார்கள்” என்று மற்றவர்களும் சம்மதித்தனர்.
அதேபோல் அடுத்தத் தங்கைக்கும் கங்காவின் தம்பி வசந்துக்கும் திருமணம் ஏற்பாடானது. விஸ்வநாதன் மீது அவனுக்கு மாறுபட்ட அபிப்பிராயம் இருந்தாலும் தன் தங்கைக்கு வசந்த் பொருத்தமானவன் தான் என்று எண்ணினான் சிவசந்திரன். மூத்த தங்கைகளுக்கு முறையே ராஜூ மற்றும் வசந்துடன் திருமணம் இனிதே நடைபெற்றது.
அலுவலகம் பள்ளி மற்றும் குடும்பப் பொறுப்பு என எத்தனை வேலைகள் வந்தாலும் கங்காவும் சிவசந்திரனும் ஒருவருக்காக ஒருவர் நேரம் செலவழிக்கத் தவறவில்லை! கணவன் மனைவிக்குப் புரிதல் அதிகமாக அன்பும் காதலும் அதிகமாகும் என்பதை உணர்ந்து வாழ்ந்தனர்!
இனி ஆண் வாரிசே கிடையாது என்று சாபம் பெற்ற அந்தக் குடும்பத்தில் ஓராண்டில் அடுத்தத் தலைமுறை தழைக்க அவதாரமெடுத்தான் கங்கா சிவசந்திரனின் மகன். மனைவியின் நெற்றியில் முத்தமிட்டு விட்டு மகனை கைகளில் ஏந்திக் கொண்டான் சிவசந்திரன்.