ராக்கிக் கயிற்றை வாங்கி அவன் கையில் கட்டுவதா வேண்டாமா? கட்டினால் சும்மா இருப்பானா? மாட்டான், நிச்சயமாக மாட்டான்! என்று அவளுக்கே ஊர்ஜிதம். இவன் கையைப் பிடித்து ராக்கி கயிறு கட்டுவதை விட மதம் கொண்ட யானையைப் பிடித்து அடக்கி கயிற்றில் கட்டி விடலாம். தேவையில்லாத விஷயங்களில் ஈடுபட்டு வீணே சிறுவர்கள் முன்னிலையில் மூக்கறுப்படாமல் இங்கிருந்து நகர்வதே சிறப்பு. அதற்கு என்ன செய்யலாம் என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போது அவ்விடத்தை நோக்கி ஆபத் பாண்டவனாக வந்து கொண்டிருந்தான் ராஜு.
சட்டென அவள் மனதில் ஓர் எண்ணம் உதயமாயிற்று. ரம்யாவிடம் இருந்து ராக்கி கயிற்றைப் பெற்றுக் கொண்டவள், “இந்த ஊரிலும் எனக்கு ஒரு பிரதர் இருக்கிறார். உங்கள் பிரதரை விட ரொம்ப நல்லவர். அவருக்கு ராக்கி கட்டுகிறேன்” என்று கூறிவிட்டு ராஜுவை நோக்கி நடந்த கங்காதேவி, அவனை வழியிலேயே நிறுத்தி, “கையை நீட்டு ராஜு” என்று அவன் கையில் அந்த ராக்கியை கட்டினாள்.
“இதற்குப் பரிசு எதுவும் வேண்டாமா?” என்று ராஜு கேட்டதற்கு, “நீ இங்கே வந்ததே பெரிய பரிசு தான்” என்று மெல்லிய குரலில் கூறினாள்.
பிள்ளைகளிடம் திரும்பி, “ஓகே பை!” என்று கூறியவள் தவறியும் சந்துருவை பார்த்தாள் இல்லை.
சந்துருவோ, தனது கையைத் தொட்டு ராக்கி கட்டும் தைரியம் இருக்கிறதா அவளுக்கு? அவள் மட்டும் அப்படிச் செய்தால் எனில் இன்றைக்கு அவனுடைய இன்னொரு முகத்தை அவள் பார்க்க வேண்டி இருக்கும் என்று கருவியபடி நின்று கொண்டிருக்க அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நிச்சயமாக அவன் இதை எதிர்பார்க்கவே இல்லை. அதிலும் அவள் ராஜுக்கு ராக்கி கட்டியது அவனைப் பெரும் குழப்பத்திற்கு ஆளாக்கியது.
இது எப்படிச் சாத்தியம், முதலில் கங்கா ராஜுவிற்கு ராக்கி கயிறு கட்டியதை அவனால் நம்ப முடியவில்லை நம்பினாலும் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை ஆனால் இவையெல்லாம் அவன் கண் முன்னால் நடந்த நிஜம். கண்ணால் காணும் எதையும் அப்படியே நம்புகிறவன் இதையும் நம்பி தானே ஆக வேண்டும் என்று அவனுடைய உள் மனமே அவனைக் கேள்வி கேட்டது.
தான் மட்டுமே சரி என்று நினைத்து அவன் கட்டி வைத்திருந்த கர்வக் கோட்டை முதல் முறையாகச் சரியத் தொடங்கியது. இல்லை இருக்காது, அவனுடைய கணிப்பு ஒருபோதும் தவறாகாது இதெல்லாம் கங்காவின் கண்கட்டு வித்தையாகக் கூட இருக்கலாம் என்று தனக்குத்தானே சமாதானம் கூறிக் கொண்ட போதிலும் அவன் மனதில் இருந்த சஞ்சலம் தெளிவடையாமலே இருந்தது.
அந்தப் பள்ளியில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே ஸ்டாஃப் ரூம் இருந்தது. அதிலும் வயதானவர்களுக்கு ஓரிடம் இளம் வயதினருக்கு மற்றோரிடம் என்று இருந்தது. இது அவர்களுக்கிடையே ஏற்படும் போட்டி உணர்வையும் காழ்ப்புணர்ச்சியையும் சற்றே மட்டுப்படுத்த உதவியது.
அதனால் இளம் பெண் உபாத்தியாயினிகள் ஒன்று கூடும்போது அரட்டைக் கச்சேரி பலமாகவே இருக்கும்.
அன்று மதிய இடைவேளையின் போது எல்லோரும் ஒன்றாகக் குழும, அன்று அவர்களின் அரட்டைக்குத் தோதாக அகப்பட்டுக் கொண்டவன் ‘ஜெ எம் டி’ சந்துரு.
“என்ன இப்போதெல்லாம் ‘ஜெ எம் டி’ அடிக்கடி இங்கே விஜயம் புரிகிறார்” என்று பேச்சை தொடங்கி வைத்தாள் ஆசிரியை ஸ்வேதா.
“அப்படியாவது அவருடைய கடைக்கண் பார்வை இந்தப் பள்ளியின் மேல் விழட்டுமே” என்று பெருமூச்சு விட்டாள் மற்றொரு ஆசிரியை காஞ்சனா.
“பள்ளியின் மேல் விழுந்து என்ன பிரயோஜனம்? நம் யார் மேலாவது விழுந்தால் கூடப் பரவாயில்லையே!” என்று ஏக்கத்தோடு கூறினாள் விமலா.
“அந்தக் கூலிங் கிளாஸை கழற்றினால் தானே நாமெல்லாம் அவர் மீது இவ்வளவு ஏக்கத்தோடு இருப்பது அவர் கண்ணுக்குத் தெரியும்” என்று அங்கலாய்த்துக் கொண்டாள் பானு.
“கன்னிமாடத்தில் இருப்பதைப் போல இத்தனை பெண்கள் தன்னை நோட்டமிடுவது அவருக்கு மட்டும் தெரியாமலா இருக்கும் ஒருவேளை அவர் நம்மைப் பார்ப்பதை நாமெல்லாம் அறிந்து விடாமல் இருப்பதற்காகத் தான் அந்தக் கூலிங் கிளாஸை அணிந்திருக்கிறாரோ என்னவோ” என்று ஸ்வேதா கூற கலகலவென்று அங்கே ஒரு சிரிப்பலை பரவி அடங்கியது.
சலிப்புடன் உச்சு கொட்டிய நிர்மலா, “அப்படி ஒன்றும் இல்லைப்பா இதுவரை நான் எத்தனையோ முறை அவருடன் பேச முயன்று இருக்கிறேன். ஆனால் அவர் திரும்பி கூடப் பார்த்ததில்லை. விதவிதமான ஒப்புனையுடன் கூட அவர் முன்னே சென்றிருக்கிறேன் அதையும் அவர் சட்டை செய்யவில்லை. ஆள் சரியான மூடி டைப் என்று நினைக்கிறேன்” என்று குறைபட்டாள்.
“மூடியாக இருந்தாலும் ஆள் சும்மா அசத்தலாகவே இருக்கிறார். அதிலும் எவ்வளவு உயரம், அவர் நடந்து வரும் அழகை நாளெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்கும்” என்று வியந்தாள் விமலா.
அதை ஆமோதித்த தமிழ் ஆசிரியயான பத்மா, “அது என்னவோ உண்மை தான்! வில்லொடிக்க ராமன் நடந்து வந்த போது, மேரு மலையும் காளையும் யானையும் நாணும் படி நடந்தான் என்பார் கம்பர். அதை அங்கே படித்த பின்னர் இங்கே தான் நேரில் காண்கிறேன். இந்த மாதிரி கம்பீரமும் தோற்ற பொலிவும் ஆண்களுக்கு வாய்ப்பது அரிதிலும் அரிது” என்று மெச்சி கொண்டாள்.
“பரவாயில்லையே நாளுக்கு நாள் நம் பள்ளிக்கூட ஆசிரியர்களின் ரசனை உயர்ந்து கொண்டே போகிறதே” என்று பெருமைப்பட்டுக் கொண்டாள் காஞ்சனா.
“இத்தனை பேர் அவரை இப்படி எல்லாம் ரசித்துக் கொண்டிருக்கிறோமே நம்மில் யாராவது ஒருவரை திரும்பிப் பார்த்தால் என்ன குறைந்த போவார்?” என்றாள் பத்மா.
“அவர் பார்த்தால் என்ன? பார்க்காவிட்டால் என்ன? அவரைப் பார்ப்பது ஒன்றுதான் என்னுடைய தலையாயக் கடமை. அதற்காக மட்டுமே தான் நான் தினமும் பள்ளிக்குத் தவறாமல் வருவதே” என்று பானு கூறியதை கேட்டு மீண்டும் சிரிப்பொலி மிகுந்தது.
அமைதியாக உணவருந்திக் கொண்டிருந்த கங்கனாவை, “என்ன கங்கா நீங்கள் அவரைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே” என்று அவர்கள் வம்புக்கு இழுக்க, “யாரைப் பற்றி?” என்று புரியாமல் வினவினாள் கங்கா
‘ஜெ எம் டி’ பற்றிய சம்பாஷனைகள் தொடங்கிய போதிலிருந்தே அவள் அங்கே தான் இருந்தாள். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு தான் இருந்தாள். சந்துருவை பற்றிய புகழுரையைக் கேட்பது அவளுக்கு நாராசமாக இருந்தது. அவர்கள் அவனைப் பற்றிப் பேச பேச அவளுக்கு அங்கே இருக்கப் பிடிக்கவில்லை எனினும் அடுத்து ஒரு மணி நேரத்திற்கு அவளுக்கு வகுப்புகள் இல்லாததால் அவளால் அவ்விடத்தை விட்டு வேறு எங்கேயும் போக முடியாது இல்லாவிட்டால் எப்போதோ அங்கிருந்து ஓடி இருப்பாள்.
“நம் ‘ஜெ எம் டி’ மிகவும் அழகாக இருக்கிறார் இல்லையா, அவரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டோம்”
அழகும் கவர்ச்சியும் இருந்து விட்டால் மட்டும் போதுமா, சற்றேனும் நன்னடத்தை வேண்டாமா? அவர்கள் சொன்னதைப் போலவே அவன் மகா மன்மதனாவே இருக்கட்டுமே அதனால் அவளுக்கு என்ன வந்தது! ஆனால் அவள் ஒருநாளும் அதை ஒப்புக் கொள்ளப் போவதில்லை.
வேண்டுமென்றே, “எனக்கு ஒன்றும் அவர் அவ்வளவு அழகாகத் தோன்றவில்லை” என்று அவள் ஒரு போடு போட்ட போது எல்லோரும் ‘ஆ’வென்று வாய் பிளந்தனர்.
அவள் மேலும் தொடர்ந்து, “இவர் என்ன பெரிய பிரமாதம்? சென்னை பக்கம் எல்லாம் இவரை விட அழகானவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள்” என்று அவனை மட்டம் தட்ட முயன்றாள்.
ஆனாலும் மற்ற உபாத்தியாயினிகள் தங்களுடைய ஆஸ்தான நாயகனை விட்டுக் கொடுக்காமல், “பட்டணத்துப் பகுமானம் எல்லாம் எங்களுக்கும் தெரியும். அங்கெல்லாம் பெண்கள் லேசாக ஒரு பார்வை பார்த்தால் போதும் எல்லோரும் ‘டண்’ கணக்கில் ஜொள் வடிப்பார்கள். ஆனால் சந்துரு சாரை நீங்கள் சாதாரணமாகக் கூடத் தொட்டு பேசவிட முடியாது தெரியுமா? இயல்பாக இருப்பது போலவே அவரை மோதிச் செல்ல முயன்றாலும் அவர் தானாகவே விலகி சென்று விடுவார்” என்றாள் விமலா.
“இவ்வளவு அந்தஸ்தும் அழகும் நிரம்பப் பெற்ற ஒருவர் தன் மேல் வந்து விழுந்து பழகுவதற்கு இத்தனை பெண்கள் தயாராக இருந்தும் கூட அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பது தான் அவருடைய தனிச்சிறப்பே! நாங்கள் எல்லாம் அவரை விடாமல் ரசிப்பதற்குக் காரணமும் கூட அது தான்” என்று காஞ்சனா கூறியதை எல்லோருமே ஒப்புக்கொண்டனர்.
அவன் பெருமையைக் கேட்டு கேட்டுக் காதில் ரத்தமே வந்துவிடும் போல் இருக்கிறதே என்று கடுப்பாக இருந்தது கங்காவுக்கு
உள்ளூர் புகைப்படக், “நீங்கள் அவரை எவ்வளவு ரசித்தாலும் எனக்கு அவர் ரசிக்கும் படியாக இல்லையே, என்ன செய்வது” என்று அரைப் புன்னகையுடன் கூறினாள் கங்கா.
“உங்கள் ரசனைக்குரியவர் எப்படி இருக்கப் போகிறார் என்று உங்கள் திருமணத்திற்கு வந்து நாங்கள் பார்க்க தானே போகிறோம்” என்று எள்ளல் தொனியில் கூறினாள் ஸ்வேதா.
“ஏதாவது வழக்கைத் தலை ஆசாமியாக இல்லாதிருந்தால் சரி” என்று கேலி போல் பரிகசித்தாள் பானு.
அதற்குள் இடைவேளை முடிந்து ‘பெல்’ அடித்து விட ஒருவழியாக ஆசிரியப் பட்டாளம் அவரவர் வகுப்பறையை நோக்கி சென்றது. போகும்போது எல்லோரும் அவரவர் இயல்புக்கு ஏற்றாற் போல் கங்காவை வசை பாடிய படியே சென்றனர்.
எல்லோரும் சென்ற பின்னர் ஒரு நிம்மதி பெருமூச்சுடன் அடுத்த நாள் தேர்வுக்கான வினாத்தாளை தயாரித்துக் கொண்டிருந்தாள் கங்கா.
அப்போது ‘டப் டப்’ என்று கதவு வேக வேகமாக அடித்துக் கொள்ளும் சத்தம் கேட்க, ‘போகும்போது கதவை ஒழுங்காகச் சாற்றிவிட்டு போவதில்லையா’ என்று எண்ணியபடி அவள் கதவை மூட முயன்ற போது கதவின் தாழ்ப்பால் சரியாகப் பொருந்தவில்லை.
அது ஏசி அறை என்பதால் அங்கே கதவுகளும் ஜன்னல்களும் எப்போதும் மூடப்பட்டுத் தான் இருக்கும். அதிலும் எல்லாமே கண்ணாடி கதவுகள். இவ்வளவு வேகமாக அடித்துக் கொண்டு உடைந்து விட்டால் அது வேறு தலைவலி என்று எரிச்சலாக இருந்தது அவளுக்கு.
எனவே கதவை உட்புறமாகத் தாளிட்டு விட்டு வந்து மீண்டும் தன் வேலையைத் தொடர்ந்தாள்.
சிறிது நேரத்தில் அடுத்த வகுப்புக்கான மணியோசை அடித்தது. அப்போது ஸ்டாஃப் ரூமுக்கு திரும்பிக் கொண்டிருந்த சக ஆசிரியை ஒருவர் கதவை திறக்க முற்பட்ட போது திறக்க முடியவில்லை. அது உட்புறமாகப் பூட்டிக் கொண்டிருப்பதை உணர்ந்தவர் கதவைத் தட்ட உள்ளே இருந்து பதிலே இல்லை. பதற்றத்துடன் அவர் வேகமாகக் கதவைத் தட்ட, நீண்ட நேரமாகவும் கதவு திறக்கப்படவில்லை. அடுத்தடுத்து ஒவ்வொரு ஆசிரியர்களாக அங்கு வந்து விட்டனர்.
அதற்குள் விஷயத்தைக் கேள்விப்பட்டுத் தலைமை ஆசிரியரும் அவருக்கு முன்னதாக வசுந்தராவும் சந்துருவும் அங்கே விரைந்தனர்.
“கடைசியாக யார் உள்ளே இருந்தது?” என்ற வசுந்தராவின் கேள்விக்கு, “லஞ்ச் பிரேக்கிற்குப் பிறகு கங்கா மிஸ் தான் உள்ளே இருந்தார்” என்று யாரோ பதில் கூறினர்.
“மாற்றுச் சாவி எங்கே?” என்று வசுந்தரா தலைமை ஆசிரியரிடம் கேட்க, கூட்டத்திலிருந்து ஒரு குரல், “உள்ளே என்ன நிலைமையோ? எதற்கும் போலீஸுக்கு சொல்லி விடலாம் அவர்களை வைத்துக்கொண்டு கதவை திறப்பது தான் ஸ்கூலுக்கும் மற்ற ஸ்டாஃப்புக்கும் நல்லது” என்றது.
“ஆமாம், அது தான் நல்லது! உள்ளே ஏதாவது தற்கொலை விஷயமாக இருந்தால் பிறகு எல்லோருக்குமே வம்பு” என்றது மற்றொரு குரல்.
சீற்றத்துடன் திரும்பி, “யாரது?” என்று கத்திய சந்துரு, “எல்லோரும் நகருங்கள்” என்றுவிட்டுத் துரிதமாக அருகில் இருந்த பெரிய பூத்தொட்டியை எடுத்து கண்ணாடி கதவை உடைத்து திறந்து கொண்டு உள்ளே செல்ல வசுந்தராவும் தலைமை ஆசிரியரும் அவனைப் பின் தொடர்ந்தனர்.
அங்கே கங்கா இருந்த நிலைமையைக் கண்டு எல்லோருமே அதிர்ந்து நின்றனர்.