எத்தனைநேரம் இப்படியே அமைதியில் கழிய! நழுவிய நொடிகள் எல்லாம் இருவரின் விழிகளை தழுவி நின்றது.
இன்னும் கார்மேகவண்ணன் முகத்தில் மெல்லிய வியப்பு மேலோங்கித்தான் காணப்பட்டது ஆழினியை பார்க்கையில்.
“ஹ்ம்ம்…” என்று தலையசைத்து மௌனமாய் புன்னகைத்துக்கொண்டான் அவன்.
என்னவென்று கூட ஆழினி கேட்க தன் இதழவிழ்க்கவில்லை. இதுவரை கண்ணனுக்கு தெரிந்தால் என்ன என்னும் பதட்டம் தணிந்து இப்போது வீட்டிற்கு என்னும் பதட்டம் தலைதூக்கியது.
தன் பெற்றோர் பற்றி கூட யோசிக்கவில்லை. கோவேந்தன், மகிழா என்ன நினைப்பார்கள் என்னும் ஒருவித அலைப்புறுதல்.
மனதில் ஆர்ப்பரித்த சந்தோஷம் கொஞ்சம் கொஞ்சமாய் அடங்கி ஆர்ப்பாட்டமின்றி நதியென சலசலப்பின்றி சென்றாலும், இடையில் தடையேந்தி நிற்கும் இந்த அன்பு கூடாரம் அவளை நிம்மதியாக இருக்கவிடவில்லை.
அடுத்து என்னும் கேள்வியே அவளை சுழற்ற ஆரம்பித்தது. இது ஒன்னும் தொழில் அல்லவே.
குடும்பம். அவளுக்கு இரு குடும்பங்கள் இரு கண்களை போன்றது. யாருக்கேனும் விருப்பமில்லாமல் போனால் என்ற எண்ணம் அவளை குடைய ஆரம்பிக்க,
“எப்ப யார் என்ன நினைப்பாங்கன்னு யோசிச்சிட்டே இருப்பியோ?…” என்றான் கார்மேகவண்ணன் கண்டனத்துடன்.
அவளின் முகபாவனைகள் ஒவ்வொன்றையும் அவதானித்தபடி அமர்ந்திருந்தவனுக்கு இந்த எண்ணவோட்டமும் பிடிபட கண்டுகொண்டான்.
“யாரோ எவரோ ஒன்னும் இல்லை? என் குடும்பம். என்னோட சம்பந்தப்பட்டவங்க. எனக்கு யார் மனசும் கஷ்டப்படறது வேண்டாம்….”
“ஓஹ், அப்போ எல்லாத்துக்கும் சேர்த்து நீ ஒருத்தியே கஷ்டப்பட்டுட்டு இருந்திருக்கலாம்ன்னு முடிவுக்கு வந்திருக்க? ரைட்?…” என்றதும் மௌனமாய் அவனை பார்த்தாள் ஆழினி.
“இந்த பார்வைக்கொன்னும் குறைச்சல் இல்லை. என்னை ஒழுங்கா நான் கவனிக்கிற மாதிரி பார்த்திருந்தா என்னவாம்?…” என்று வேறு கடிய,
“உங்களுக்கு கவனிக்க தெரியலைன்னு சொல்லிக்கலாம்….” என சொல்லியவள் தலையில் வேகமாய் தட்ட போனான் கார்மேகவண்ணன்.
“ஸ்டாப்…” என பின்னே சாய்ந்தவள் கால்களும் தரையில் ஊன்ற, ஊன்றிய வேகத்தில் சக்கர நாற்காலி பின்னால் நகர்ந்தது.
அவள் தன்னை விட்டு விலகி சென்ற வேகத்தை இரு கைகளை கூப்பி தாடையை அதில் பதித்தபடி புருவமுயர்த்தி பார்த்தான் கார்மேகவண்ணன்.
உண்மைக்கும் அந்த பார்வையும், அடக்கப்பட்ட புன்னகையும், கண்ணோரம் கவிழ்ந்துகிடந்த கேலியும் ஆழினியை சுருட்டிக்கொண்டது.
‘இப்படி சின்ன சின்ன மேனரிசம் கூட இவனால எப்படி ரசிக்கும்படி இயல்பா பண்ண முடியுது?’ மனதிற்குள் நினைத்தவள் அவனின் பார்வை வீச்சில் தன் இமைகளை கீழ் நோக்கி சரித்தாள்.
“ஆமா, கிளம்பனும்…” என்று சொல்லியவள் வீட்டில் எப்படி சொல்ல போகிறோமோ என்று அவனை பரிதவிப்புடன் பார்க்க,
“ப்ச், இம்சை…” என்று பல்லை கடித்தவன் தன் போனை எடுத்து வாழவந்தானுக்கு அழைப்பு விடுத்தான்.
“அப்பாவுக்கு இப்ப எதுக்கு?…” என ஆழினி எழுந்து வர பார்க்க சட்டென அழைப்பை துண்டித்தவன்,
“அங்கயே உட்கார். உடைஞ்ச கிளாஸ் எல்லாம் அப்படியே இருக்கு. கால்லயும் குத்தினா உன்னை தூக்கிட்டு தான் போகனும் நான். உனக்கு ஓகே வா?…” என்று கேட்க அப்பட்டமான முறைப்பு அவளிடத்தில்.
“பன்றது லவ். ஆனா தலையை தட்ட வந்தா கூட இவ்வளோ தூரம் போற நீ?…” என்று கேட்டு,
“அன்னைக்கு ட்ரைவ் பண்ணும் போது மட்டும் எப்படி என் கைக்குள்ள இருந்த அந்த சிலநிமிஷம்…” என்றான் வலது கரத்தில் கைபேசியை வைத்தபடி தாடையில் கைவைத்து அவளை பார்த்து.
“ப்ச்…” என்று முகத்தை திருப்பிக்கொண்டவளால் இப்போது வெளிப்படையாக அவனை ரசிக்க கூட முடியவில்லை.
முன்பானால் அவனின் கவனம் நிச்சயம் அவளிடம் இருப்பதில்லை என்பதில் எவ்வித கவலையும் இன்றி ஆழ்ந்து, அனுபவித்து அவன் நுணுக்கமான அசைவுகளை கூட ரசித்துக்கொண்டிருப்பாள்.
தங்குதடையற்ற ரசனை. அவனின் கவனம் தன்னில் இல்லை என்றாலுமே அதையும் பற்றி கவலை கொள்ளாதவிதமாய் இருக்கும்.
இப்போது ஒட்டுமொத்தமாய் சிக்கிக்கொண்ட பின், தன் சின்ன பார்வையை கூட அவன் வாங்கிக்கொள்கிறானே என்று தடுமாறினாள் ஆழினி.
“ஓகே, இதை பத்தி நாம அப்பறமா டிஸ்கஸ் பண்ணுவோம்…” என்று மீண்டும் வாழவந்தானுக்கு அழைத்து ஸ்பீக்கரில் போட்டான்.
“கண்ணா…” என்று அந்த பக்கம் அவர் அழைத்ததுமே,
“மாமா ஒ பொண்ண குடு…” என இவன் துள்ளலாய் ராகம் போட்டுவிட ஆழினிக்கு இதயத்துடிப்பே நின்றுவிட்டது.
கண்ணாடியாவது ஒன்றாவது என்று எழுந்தவள் அவனின் நமுட்டு சிரிப்பில் மீண்டும் தரையில் பாதத்தை அழுத்தி நாற்காலியோடு அவனருகில் வந்து போனை பிடுங்கி துண்டித்த வேகத்தில் அவன் அதரங்களை கைகொண்டு மூடினாள்.
“ப்ளீஸ், நானே ஒரு நாள் பார்த்து பொறுமையா வீட்டுல பேசறேன். ப்ளீஸ்…” என்று சொல்ல அவளின் பேச்சுக்கள் ஒவ்வொன்றையும் உள்வாங்கியவன் மனநிலையோ இங்கில்லை.
மீசையில் ஒளிந்திருந்த அதரங்கள் உணர்ந்துகொண்ட அந்த மென்மையில் சிக்குண்டிருந்தவனின் விழிகள் தாமாய் இப்போது மூடியிருக்க அதன்பின்னரே தன் கையை கவனித்தாள் ஆழினி.
“ஷிட்…” என்று எடுத்துக்கொள்ள பார்க்க, சட்டென அவளின் மணிக்கட்டை பற்றிக்கொண்டவன்,
“இந்த கையில காயம் இருக்கான்னு பார்ப்போம்….” என்று உள்ளங்கையை விரிக்க அதில் சின்ன சின்ன கீறல்கள் தான் இருந்ததே தவிர வலதுகையை போல பெரிதாய் காயங்கள் இல்லை.
“காயமெல்லாம் இல்லை. விடுங்க…” என்றவளுக்கு இன்னும் அந்த படபடப்பு அடங்கவில்லை.
அவளால் பின்னாலும் செல்லமுடியாமல் நாற்காலியின் இடையே காலை கொடுத்து பிடித்திருந்தான் கார்மேகவண்ணன்.
“என்னைக்கானாலும் தெரிய போகுது தானே?…” என்றவன் கேட்டும் அவளிடம் பதிலில்லை.
அதற்குள் வாழவந்தானே அவனுக்கு அழைத்துவிட ஆழினியின் முகத்தில் எதையும் சொல்லிவிடாதே என்னும் பதட்டம்.
“ப்ச், நான் பார்த்துப்பேன்…” என்று சொல்லி அழைப்பை ஏற்றவன் முன்பை போல ஸ்பீக்கரில் போட்டான்.
“என்னடா கண்ணா ஒரே குஷியா இருக்க போல?…” என்று அவர் கேட்க,
“அதான் கால் பண்ணி பாட்டெல்லாம் பாடினியே. சந்தோஷமா இருக்க போல?…” என்றதும் தலையில் கைவைத்துவிட்டான் கார்மேகவண்ணன்.
‘இந்த மனுஷனுக்கு நான் பாடினது புரிஞ்சதா இல்லையா? இப்படி இருந்தா நான் என்னன்னு பொண்ணு கேட்டு?’ என்று தான் தோன்றியது.
“ஆமா, ரொம்ப சந்தோஷம் பொங்குது. சரி, போன விஷயம் என்னாச்சு?…” என்றான் இவன் பல்லை கடித்துக்கொண்டு.
ஆழினியும் பரபரப்புடன் என்ன சொல்ல போகிறாரோ என்று கவனமாய் கேட்க அவளின் முகத்தில் தெரிந்த கலவரத்தில் அவளின் கன்னத்தை லேசாய் தட்டி கண்ணமர்த்தினான் அவளிடம்.
“ப்ச், இல்லப்பா. இது சரிவராது….” என்று சொல்ல,
“அப்படியா?…” என்றவன் கேள்வியில் தன் சந்தோஷத்தை காண்பித்துவிடாத சாதாரணம்.
‘சரிவராதா?’ என்ற பார்வையுடன் ஆழினி திகைத்து போனாள். அவளின் தாய்மாமா கிட்டத்தட்ட நிச்சயம் முடிந்துவிடும் என்பதை போலவே பேசி சென்றிருந்தார்.
‘இப்போது எப்படி சரிவராது என்று சொல்ல முடியும்? என்ன நடந்திருக்கும்?’ என குழப்பமாய் பார்த்தாள்.
“ஆமா கண்ணா, எல்லாம் விசாரிச்சதா தான் மச்சினர் சொன்னார். விசாரிச்சதுல எந்த தப்பும் இல்லை. அவரும் ஒரு விஷயத்தை சொன்னார். பையனுக்கு அவங்க ரிலேட்டிவ் பொண்ண தான் பிடிச்சிருக்கறதாவும், வீட்டு பிரச்சனையால வெளில வரன் பார்க்கிறதாவும் மேலோட்டமா சொல்லிருந்தார்….”
“ஓஹ்…” என்றான் கார்மேகவண்ணன்.
“இருந்தாலும் பொம்பளைப்புள்ளை வாழ்க்கை. நாளைக்கு அவசரப்பட்டுட்டோமேன்னு நினைக்கக்கூடாதுல நாம. அதான் இன்னும் கொஞ்சம் நாமலே தீர விசாரிப்போம்ன்னு தான் கிளம்பி வந்தோம்…”என்று வாழவந்தான் கூற,
“இப்ப என்ன முடிவுக்கு வந்திருக்கீங்க?…” என்றான் இவன் அவசரமாய்.
“விசாரிச்ச வரைக்கும் அந்த பையன் இன்னும் பிடிவாதமா தான் இருக்கான் போல. நல்லஇடமா மட்டும் இருந்தா போதுமா? கட்டிக்கபோறவனுக்கு பிடிக்கனுமே?…” என்று அவர் சொல்ல குரலில் லேசாய் தளர்வு.
“ப்ச், முதல்ல பார்த்த வரனே நல்ல வரன். அமைஞ்சுரும்ன்னு நினைச்சேன். அதுல ஒரு வருத்தம் தான். மத்தபடி இந்த விஷயம் ஒருவகையில நிம்மதியும் கூட. இன்னாருக்கு இன்னார்ன்னு எழுதிருப்பாங்க. நம்ம ஆழிக்கு அந்த பையன் பேர் எழுதலை…” என்று சொல்ல, விடுதலை பெற்ற உணர்வில் ஆழினி பெருமூச்சுடன் தலையை உயர்த்த,
“அப்பறம் அடுத்த மாப்பிள்ளை எப்போ தேட போறீங்கலாம்?…” என்றான் சிரிப்புடன் இவன்.
“என்ன அவசரம்? இப்ப கிளம்பறோம்….” என்று சொல்லி வாழவந்தான் வைக்க ஆழினிக்கு சுர்ரென்று பொங்கியது.